Saturday, September 30, 2006

திருமலை விழா 6 - அனுமன் / யானை வாகனம்

ஆறாம் நாள்

காலை - அனுமன் வாகனம் (ஹனுமந்த வாகனம்)

குறுகுறு குழந்தைகள் முதல் குடுகுடு முதியோர் வரை அனுமனை விரும்பாதார் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட காகித மாலை, என்று மாலை மரியாதைகள் தான் என்ன? ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கிடைக்குமா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று சும்மாவா சொன்னாள் ஒளவைப்பாட்டி.

சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன் என்ற பல பட்டப் பெயர்கள் இவனுக்கு!
ராமாயணத்தில் ராமனுக்கு சீதை மேல் எப்போதாவது ஒரு முறை மன வருத்தம் ஏற்பட்டு இருக்கலாம். சீதைக்கும் அவ்வாறே;
அவளுக்கும், இளையாழ்வார் இலக்குவனுக்கும் வாக்கு வாதம் வந்தது.
இப்படி பல பேர் பலரின் மீது காய்ந்து உள்ளனர்.
ஆனால் ஒருவன் மட்டும் தான் அனைவரின் அன்பும் ஒருங்கே பெற்றான்.
அவனே நம் அழகன் அனுமன்!


சமய சஞ்சீவி என்ற சொல்லே அவனால் தானே வந்தது!
கன்னடர்கள் 'முக்கியப் பிராணன்' என்று தான் அவனை அழைக்கின்றனர்!
சீ்தையின் உயிரைக் காத்து, இலக்குவன் உயிரைக் காத்து, பரதன் உயிரைக் காத்து, அதன் மூலமாக ராமன் உயிரையே காத்தான்!
உயிர் காப்பான் தோழன் அல்லவா?
'நாரணா, உன் வேலை எல்லாம் அனுமனே செய்து விட்டான், பேசாமல் காத்தல் தொழிலை அவனிடம் கொடுத்து விட்டு, நீ ஓய்வெடுக்கப் போ', என்று சத்குரு தியாகராஜர் சுவையாகக் கூறுகிறார்!

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல!
மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான் என்பது பலர் அறிந்திராத ஒன்று.
'மல்யுத்தம் செய்யும் வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்', என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார் என்றால் பாருங்களேன்.
அதனால் தான் இராமாநுஜர் போன்ற ஆசாரியர்கள், 'தோற்றத்தை வைத்து அடியவரை எடை போடக் கூடாது' என்பதை மிக உறுதியாக விதித்தனர்.

இப்பேர்பட்ட அனுமன் பிறந்தது திருமலை, அஞ்சனாத்ரியில்! எவ்ளோ பெரிய ஆளாய் இருந்தாலும் தான் பிறந்த ஊரில், அவருக்குத் தனி மரியாதை தானே!
அதனால் தான் இன்று, கருட சேவைக்கு மறு நாள், ஆஞ்சனேய சேவை!
பெரிய திருவடி உலா முடிந்ததும் சிறிய திருவடி உலா!
இறைவன் திருமலை வாசன், ராம ரூபனாய், அனுமன் மேல் அமர்ந்து வீதியுலா வருகிறான்!


இரு பெரும் பட்டுக் குடைகள் சூழ, பச்சைப் பட்டு உடுத்தி, மஞ்சள் மாலைகள் சூடிக் கொண்டு, அனுமன் தோளிலே, "தோளுக்கு இனியனாய்" பறந்து வருகிறான்.


மாலை - யானை வாகனம் (கஜ வாகனம்)

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, சிறுவர் கும்பல் ஆடும் கண்ணே!!
தமிழ்மணப் பதிவுகளில் வரும் யானைப் பாசத்தைப் பார்த்தால், யானை கூடிய விரைவில் வீட்டுச் செல்லப் பிராணியானாலும் ஆகி விடும் போல் இருக்கிறது! என்ன ஒரே ப்ராப்ளம், வால் மார்ட்டில் உள்ள எல்லா frozen vegetables -உம் எடுத்து உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்! அவ்வளவு தான்! :-)))


நேற்று கருட சேவையில், கஜேந்திரனுக்கு அபயம் அளித்த பெருமாள், இன்று அவன் மேல் வீதியுலா வருகிறான். 'இனி இவன் நம்ம ஆளு, அதனால் மக்களே யானையிடம் பாசம் காட்டுங்கள்', என்று சொல்லாமல் சொல்லி விடுகிறான்!
யானையின் மேல் பெரிய தொங்கு மாலை; சுவாமி உலாவின் போது 'தொம் தொம்' என்று வீசி வீசி ஆடுகிறது! ராஜ நடையில் மலையப்பன், கையில் அங்குசம் கொண்டு, காண்பவர் கண்களுக்கு விருந்தாய் வலம் வருகிறான்.
குடை அழகு, சக்கரப் படை அழகு, யானை நடை அழகு, அழகோ அழகு!!



இன்று,
குலசேகர ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.

இந்த ஆழ்வார் கொல்லி நாட்டு அரசராய், யானை மேல் உலா வந்தவர். அவர் மனதிலோ அவர் மிகவும் உகந்த ராமன் உலா வர, 'என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ' என்று அவனையே தூங்க வைத்த ராஜரிஷி! அதனால் இன்று இவன் ராம ரூபத்தில் வரும் நாளில், அவர் தம் கவிதையைக் காண்போம்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

"காட்டுச்செடி, கள்ளிச்செடி போல் வெட்ட வெட்ட வளரும் ஊழ் வினைகளை எல்லாம் ஒழித்து, ஆவி காக்கும் திருமாலே,
உயரங்களின் உயரமே, வேங்கடவா, உன் கோவிலின் வாசற்படியில்,
அடியவர்களும், விண்ணோரும் அவர் பெண்ணோரும், 'தவமாய் தவமிருந்து' காத்துக் கிடக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் உன்னை நான் எப்படிப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்?
"நகர்ந்து செல்; மற்றவருக்கும் வழி விடு" என்று தள்ளி விடுவார்களே! அவர்கள் சொல்வதும் நியாயம் தானே?
இதற்கு ஒரே வழி! பேசாமல் உன் கருவறைப் படிக்கட்டாய் என்னை மாற்றி விடு!
உன் பவள வாய், கமலச் செங்கண்ணை, குளிர் முகத்தை, சதா சர்வ காலமும், ஊழி தோறும், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன்" என்று காதலால் உருகுகிறார்!

இன்றைக்கும் திருவேங்கடமுடையான் கருவறைப் படிக்கு, "குலசேகரன் படி" என்று தான் பெயர். அதற்கு ஆரத்தியும் உண்டு.

இந்த சிந்தனை, இதனுடன் கூடிய மற்ற பாடல்களும் (மரமாவேனே, மலையாவேனே, குருகாவேனே, ஸ்தம்பமாவேனே) தான், கவியரசர் கண்ணதாசனை, "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்று எழுதத் தூண்டியதாக ஒர் இலக்கிய விழாவில் சொல்லக் கேட்டேன்.
சில படங்கள் உதவி: TirupatiTimes, AP Weekly
Read more »

Friday, September 29, 2006

திருமலை விழா 5 - கருட சேவை

மாலை - கருட சேவை

"கருடா செளக்கியமா" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று!
கருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது? அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் "வைநதேயன்" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. "பெரிய திருவடி" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்!

இவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு ஏக சிம்மாசனம் அளித்தாள். இன்றும் வில்லிபுத்தூரில், அரங்கன், ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் இருந்து தான் காட்சி தருகிறார்கள்.

பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் முக்கியமான வாகனம்.
கருடன் பறக்கும் வேகம் என்ன தெரியுமா?
'பரம பக்தன், துன்பத்தில் ஆழும் போது, "பெருமாளே" என்று கூவி அழைக்க, இறைவன் ஏறி அமர்ந்து விட்டாரா என்று கூடப் பாராமல், பறக்கத் தயாரானான்', என்று சத்குரு தியாகராஜர் பாடுகிறார். சங்கீதத்தில், கருடனுக்கு ஒரு தனி ராகமே உண்டு! பேர் கருடத்வனி!

அன்று முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன், மரிக்கும் தருவாயில் கூட, குளத்தில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்து, "ஆகா, பெருமாளுக்கு இதைச் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்" என்று தான் எண்ணம் போனது. கருட சேவையாக, இறைவன் தோன்றி, கஜேந்திரனைக் காத்ததை எண்ணினாலும் மனம் தான் இனித்திடாதோ?




முன்பே சொன்னது போல, திருமலையில் மிக முக்கிய வாகனம் இந்த கருட சேவை!
இன்று மட்டும் தான், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், அணிகள், வெளியே கொண்டு வரப்பட்டு, கருட வாகனத்தில் இருக்கும் உற்சவருக்கு அணிவிக்கப்படுகின்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லக்ஷ்மி ஆரம் ஆகிய இந்த இரு அணிகலன்கள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை. இன்று மட்டும் கருட வாகனத்தின் மேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன.

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பேரிகைகள் முழங்க, இதோ கிளம்பி விட்டான் திருமலை வாசன், கருடாழ்வாரின் மீது!


எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற பக்தி முழக்கம்.
இரு கரம், சிரம் மேல் கூப்பி, எம்பெருமானே, திருவடி சரணே! என்று அடியார்கள் வணங்குகிறார்கள்!
'ராஜ கம்பீர நாடாளும் நாயகன்', கருட கம்பீரமாக, ராஜ நடையில்,
'தொம் தொம்' என்று உலா வரும் அழகைச் சேவிப்பார்க்கு உண்டோ பிறவிப்பிணி!
சரணம் சரணம் கோவிந்தா சரணம்!!



இன்று மாலை,
பெரியாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய். உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே?

"உயர்ந்த சிகரங்களைக் கொண்டு, குளிரும் வேங்கட மலையை உடையானே,
உலகம் வாழ வேண்டி, 'குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய்' கண்ணா, தாமோதரா, காளிங்க நர்த்தனா!
என்னையும், இப்பிறவியில் எனக்கு வாய்த்த என் உடைமைகள் அத்தனையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டேன். (அதாவது)
உனக்கு வழுவிலா அடிமை செய்வதாக உறுதி பூண்டு, உன் சக்கரச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டேன்.
பொறித்தால் மட்டும் போதுமா?
உன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்!
இனி என்னை என்ன செய்யப் போகிறாய்? உன் திருக்குறிப்பு என்னவோ?
எதுவாக இருப்பினும் சரி, உன்னை அன்றிப் பிறிதொருவர் எனக்கில்லை, வேங்கடவா! "
என்று பெரியாழ்வார் பரிபூரண சரணாகதி அடைகின்றார் அவனிடத்தில்.



யாருப்பா அது, அங்க பிரசாதம் கேட்டது? வாங்க வாங்க! நம்ம நண்பர் ஜிரா என்று விளிக்கப்பெறும் ராகவன் தான் பிரசாத ஸ்டால் இன்சார்ஜ். அவரிடம் நயந்து பேசி பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும்!
இன்றைய பிரசாதங்கள்: கல்யாண லட்டு (பெரிய லட்டு)
அன்னப் பிரசாதங்கள்: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, ததியோதனம்(தயிர்ச்சோறு), சகாரா பாத், வெண் பொங்கல்
பிற பிரசாதங்கள்: பாயசம், சுகி, அப்பம், தோசை

மு.கு (முக்கியமான குறிப்பு
):
பிரசாதங்கள் விற்பனைக்கு அல்ல! :-)
பக்தியுடன் வருவார்க்கு சிறிது வழங்கப்படும்! :-))

அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!



Read more »

திருமலை விழா 5 - மோகினி அவதாரம்

ஐந்தாம் நாள்

காலை - மோகினி அவதாரம்

சிறு வயதில் ஜகன் மோகினி என்ற படம் வந்தது. யாருக்காச்சும் நினைவு இருக்குதுங்களா? நான் அந்தப் படத்தைப் பாத்து ரொம்பவே பயந்து போயிட்டேன்னு வீட்டுல இப்பவும் சொல்லுவாங்க! இது ஏதோ அந்த மாதிரி மோகினின்னு நினைச்சுக்காதீங்க!

இந்த மோகினி அவதாரம், காணக் கண் கோடி வேண்டும்! அழகுக்கு அழகு, அறிவுக்கு அறிவு. யோகீஸ்வரனான சிவனாரையே சிறிது கணத்துக்குச் சிந்தை கலங்க வைத்த தெய்வீக அழகு!

நல்லார்க்கு நிழலும், பொல்லார்க்கு பாடமும் புகட்ட எண்ணிய இறைவன், பாற்கடல் கடைதல் என்ற ஒன்றை ஏற்படுத்தினான் (project vision). மந்தார மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு தேவர், அசுரர் இருவரும் கடைந்தனர் (project allocation and design). பல சோதனைகள் (project inhibitors). சில சாதனைகள் (project milestones).

தானே ஆமையாகி தாங்கி நின்றான் (project support). தானே தன்வந்திரியாய் தோன்றி அமிர்தம் வழங்க (project beta), அசுரர் பறித்தனர். (project regression). மோகினியாய் உருக்கொண்டான். அசுரர் மயங்க, அமுதினை மீட்டான் (project testing & assurance). எங்கு சேர்ந்தால் தீமை குறைந்து, நலம் பெருகுமோ, அங்கு அமுதினைச் சேர்ப்பித்தான் (project release).

"நன்று ஆற்றல் உள்ளலும் தீது உண்டே அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை". என்பதை உலகம் உணர்ந்தது. தீயோர் கைகளில் பெரும் பலம் குவியாமல் காக்கப் பட்டது!

திருமலையில், அதே பழைய மோகினி வேடம் பூண்டு, வீதியுலா வருகிறான் இறைவன்.
"இவனுக்குப் பெண் வேடம் சரியாகப் போட வருமா?" என்ற ஐயமோ என்னவோ ஆண்டாளுக்கு! போன முறையே ராகு கேது, இவன் வேடத்தை லேசாக யூகித்து விட்டார்களே!
அதனால் தன் மேக்கப் கிட்-டை திருவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கிறாள்! ஆம், பெருமாளின் இன்றைய அலங்காரம் என்ன தெரியுமா?
அவள் சூடிக் கொடுத்த பூமாலை, பேசிக் களித்த பச்சைக்கிளி.
இரண்டும் வில்லிபுத்தூரில் இருந்து எடுத்து வரப்பட்டு,
எம்பெருமானுக்குச் சார்த்தப்படுகின்றன!







இப்படி அலங்கரித்துக் கொண்டு, பல்லக்கில், பெருமாள் ஒய்யாரமாக வீதி உலா வருகிறான்!
அவன் எதிரே நிலைக்கண்ணாடி, கன்னத்திலே திருஷ்டிப் பொட்டு!
குலுங்கிக் குலுங்கி பல்லக்கு நெளிப்பு! அழகோ அழகு!!
உள்ளம் கொள்ளை போய் விடுமோ என்று அஞ்சுபவர்கள்,
அவன் வரும் போது கண்களை மூடிக் கொள்ளுங்கள்!

அப்போதும் விழித்திரையில் அவனே தெரிவான் :-)) !!!




இன்று,
ஆண்டாளும், திருவேங்கடத்தானும்.

ஒளி வண்ணம் வளை சிந்தை
உறக்கத்தோடு இவையெல்லாம்,
எளிமையால் இட்டு என்னை
ஈடு அழியப் போயினவால்,
குளிர் அருவி வேங்கடத்து என்
கோவிந்தன் குணம் பாடி,
அளி அத்த மேகங்காள்!
ஆவி காத்து இருப்பேனே.

(அளி=இரக்கம்; அத்த=நிறைந்த)
இந்தக் காதல் கவிதைக்கு விளக்கம் சொல்லணுமோ என்று என் மனத்துக்குள் ஒரு எண்ணம். அப்படிச் சொன்னால் கூட, அந்தக் காதல் எங்கே, என் சொற்கள் எங்கே?
இருப்பினும் நயம் கருதி லேசா லேசா சொல்லுகிறேன்.
ஆனால், நீங்கள் நேராகவே பாடலை, ஒருமுறைக்கு இருமுறை, இருமுறைக்குப் பலமுறை, அனுபவித்து விடுங்களேன்!

என்னுடைய ஒளிரும் அழகு மேனி, வளை மற்றும் ஆபரணங்கள், சதா சர்வ காலமும் உன்னை எண்ணும் சிந்தை, தூக்கம் எல்லாம் போய் விட்டதே! அதுவும் உன் எளிமையான ஒரு பார்வையால், சின்னூண்டு சிரிப்பால், என் ஈடும் நிலையும் மொத்தமாக மாறி விட்டதே!
அய்யோ!!
என் மனம் காதல் வெப்பத்தால் வாட, அவனோ குளிரக் குளிர அருவி பாயும் வேங்கடத்தில் நின்று கொண்டு இருக்கிறான்.
ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ! போய் அவனிடம் சொல்லுங்கள்,
கோவிந்தன் குணம் பாடி, என் ஆவியை, உயிரை அவனுக்காக இன்னும் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்!

அப்பப்பா, இதற்கு மேல் நம்மால் சொல்ல முடியாது.
ஓ வேங்கடவா, எங்கள் ஆண்டாள், இங்கே உனக்காக உருகுகிறாள்! அவளைத் தவிக்க விடாதே! சொல்லிட்டேன், தவிக்க விடாதே!! அப்பறம் எனக்குக் கோபம் வந்துரும், ஆமாம்!


கருட சேவை! இன்னும் கொஞ்ச நேரத்தில்!
கருடாழ்வார் க்ரீன் ரூமில் இன்னும் என்ன பண்றாரு?
அப்பா கருடா, பெருமாளே ரெடி ஆயிட்டாரு! நீ இன்னுமா ரெடியாவல?
வாப்பா போதும், நல்லா அழகாத் தான் இருக்கே! எல்லாரும் காத்துக்கினு இருக்காங்கப்பா!
Read more »

Thursday, September 28, 2006

திருமலை விழா 4 - கற்பகம் / மண்ணாள் அரசர் வாகனம்

நான்காம் நாள்

காலை - கற்பகத் தரு வாகனம் (கல்ப விருக்ஷ வாகனம்)

கேட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சம் பற்றி யாருக்குத் தான் தெரியாது?
அது என்னான்னா, அது எங்க இருக்கு-ன்னு தான் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா நம்ம ஆளுங்க என்னவெல்லாம் பண்ணுவாங்க, சும்மா கற்பனைக் குதிரையைத் தட்டி வுடுங்களேன். அதுவும் தமிழகத்தில் யாருக்காச்சும் தெரிஞ்சா, ஆகா, அவ்வளவு தான். சூடும் சுவையும் குறையாத காட்சிகள் பல அரங்கேறாதா? தமிழ்மணத்திலும் பல விவாதப் பதிவுகள் பெருகி, வலைப் பதிவர்கள் எண்ணிக்கை பத்து மடங்கு விரிந்து, ஆகா நினைத்தாலே இனிக்கும்!

கேட்டதைக் கொடுக்கும் கற்பக மரத்தில், அந்தக் கற்பக மரத்தையே கொடுத்த பெருமாள். தனியாக வரவில்லை. இன்று தேவியருடன் உலா! அவன் காலடியில் காமதேனுவான கோமாதா. வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள். இப்படி எல்லா வள்ளல்களும் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். எதற்கு? விழாப் படோபடங்களை எல்லாம் பாத்து பயந்துடாதீங்க! நான் என்றைக்கும் உங்க ஆள் தான். என் கிட்ட எப்ப வேணும்னாலும் நீங்க வரலாம். வாருங்கள்; கேளுங்கள்; கொடுக்கப்படும்!


(இந்த வாகனத்தில் சிறப்பான ஒரு நிகழ்வை அர்ச்சகர்கள் செய்து வைப்பார்கள். சுவாமியின் நெற்றிக்கு நேராக, நீண்ட நேரம் தீபம் காட்டுவார்கள். கண்கள் ஜொலிக்க (ஒளிர) காட்டப்படும் இதற்கு நேத்ரானந்த தீப சேவை என்று பெயர். கிராமங்கள் செழித்து, வேளாண்மை பெருகிப், பசிப்பிணி அகல வேண்டுவது இது! பொதுப் பிரார்த்தனையாக விவசாயிகளுக்கு (வேளாளர்களுக்கு) மட்டும் செய்யப்படுவது).

மாலை - மண்ணாள் அரசர் வாகனம் (சர்வ பூபால வாகனம்)

பூமியில் மக்களைக் காத்து, சமுதாயம் சிதையாமல் முன்னேற்றப் பாதையில் செலுத்தும் பொறுப்பு அந்தக் காலத்தில் அரசர்களையும், இந்தக் காலத்தில் நாட்டை ஆள்பவர்களையும் சாரும். மிகவும் பொறுப்புள்ள பதவி. உண்மையா உழைச்சா, மிகவும் வேலைப் பளுவுள்ள பதவியும் கூட (நம்ம கலாம் இந்த வயதிலும் ஓடியாடி ஓயாது உழைப்பதைக் கண்கூடாப் பாக்கலாமே). நாம ஏதோ செய்யப் போய், அது மக்கள பாதிச்சுடக் கூடாதே. அப்புறம், தான் பண்ண தப்புக்கு, பத்தினி சாபத்தால், ஊரே எரிந்த கதையாப் போயிடுமே!

இந்த விழிப்பும் அக்கறையும் உள்ள அரசர்கள், இறைவனை வணங்கி, தெளிந்த அறிவு எப்போதும் தமக்கு வாய்க்க வேண்டினர். காக்கும் தொழில் கண்ணன் அல்லவா? இந்த அரசர்கள் எல்லாம் ஒன்று கூடி, அவனுக்கே வாகனமாகி விட்டனர்!
தங்களை ஒரு விதானமாக்கி, அதில் அவனைச் சுமந்தனர். அவனைச் சுமந்து அரசபாரம் சுமக்கும் வல்லமையைத் தர வேண்டினர்!

(சர்வ+பூ+பால=சகல+பூமி+காக்கும்) எல்லா நாடுகளையும் காக்கும் அந்தஅந்த ஊர் அரசர்கள். அதுவே, சர்வ-பூ-பால வாகனம்! "மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாக, உன்னைத் துதிக்க" என்ற மருகனின் பாடல், இங்கே இந்த வாகனத்தில் மாமனுக்கும் அருமையாகப் பொருந்துகிறது, பாருங்களேன்!
ஊர் காக்கும் கடமையைச் சுட்டிக் காட்ட, முன்னொரு நாள், ஊர் காத்த காளிங்க மர்த்தன கோலத்தில் விழா நாயகன்! (மக்களின் குடி தண்ணீர் பிரச்சனையை அன்றே தீர்த்து வைத்தவன்-ப்பா நம்ம பெருமாள், பேசாம உங்கள் ஓட்டை அவனுக்கே போட்டுடுங்க :-)



(சில படங்களுக்கு நன்றி: APweekly, tirumala.org)



இன்று,
திருமழிசை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.

இந்த ஆழ்வார் அவனுக்கே ஆணையிட்டவர். உரிமையுடன் அவனையே வேலை வாங்குபவர். அவனும் சொன்ன வண்ணம் செய்தான். அப்பேர்ப்பட்ட ஆழ்வார், "வேங்கடமே,வேங்கடமே,வேங்கடமே" என்று ஒரே பாடலில் மூன்று முறை கூவுகிறார்.

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்
, - வேங்கடமே
தானவரை வீழத் தன் ஆழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை


விண்ணும் மண்ணும் தொழுவது வேங்கடம் ஒன்றே!
பிறவிப்பிணி அகற்றுவதும் வேங்கடம் ஒன்றே!
(எப்படி அகற்றும்? மெய்ம்மையால், உண்மையால், உண்மை அறியஅறிய, அகலும் அந்த நோய். அந்த உண்மையைத் தர வல்லது வேங்கடம்).
தீயோரைத் தன் சக்கரப் படையால் தீர்த்து, வானவரைக் காக்கும் மலை எது? அதுவும் வேங்கடம் ஒன்றே! அதை வணங்குவோம்!

(இது மிகவும் ஆழ்பொருள் கொண்ட பாடல்; உண்மைப் பொருளை உணர்த்த இறைவன் ஒரு சத்தியக் கோலத்தில் நிற்கிறான் வேங்கடத்தில். பிறவிப் பெருங்கடல் நீந்துவர். நீந்தார் இறைவன் அடி சேராதார் என்பதை நின்ற கோலத்தில், குறிப்பால் உணர்த்துவான். அதைப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்).

நாளை கருட சேவை! கண்டிப்பா வந்துடுங்க! அதுக்காக லட்டு, வடை எல்லாம் கேட்டு பேஜார் பண்ணக்கூடாது. சொல்லிட்டேன் :-)
Read more »

Wednesday, September 27, 2006

திருமலை விழா 3 - சிம்மம் / முத்துப்பந்தல் வாகனம்

மூன்றாம் நாள்

காலை - சிம்ம வாகனம்

"சி்ங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்று, திருமலைச் சிகரத்தில் சிங்க நடையாக சுவாமியைத் தூக்கித் தூக்கி, சுமந்து வரும் அழகே அழகு!

அவதாரங்களிலேயே மிகவும் குறைந்த நேரமே நீடித்தது ஒன்றே ஒன்று தான். என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
கரெக்ட், ஆளரி அவதாரம்.
அட அப்பிடின்னா என்னாங்க? நாங்க கேள்விப்பட்டதே இல்லியே!
ஆள்+அரி (ஆள்=நரன், அரி=சிம்மம்)
அதே தாங்க, நரசிம்ம அவதாரம். அழகுத் தமிழில் ஆளரி என்று ஆழ்வார்களும் புழங்குகிறார்கள்.

வேதங்கள், பிரபந்தங்கள், வழிபாட்டு முறைகள் என்று ஒண்ணுமே அறியாத பச்சிளங் குழந்தை. அது பிடித்துக் கொண்டதெல்லாம் "நாராயணா என்னும் நாமம்". ஆனால் நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டது. கொஞ்சம் கூடச் சந்தேகமே இல்லாத நம்பிக்கை. ஆய்ச்சி மகனை ஆராய்ச்சி செய்ததா? இல்லை! அரட்டை அரங்கம் நடத்தியதா? இல்லவே இல்லை!

பெருமாளுக்கே பயம் வந்து விட்டது. குழந்தை எந்த இடத்தைக் காட்டுமோ? இரணியன் எதைப் பிளக்கப் போகிறானோ? முனிவர்கள் மூவாயிரம் ஆண்டு தவம் செய்தாலும் பூமிக்கு வராதவன். இப்போதோ ஒரு குழந்தை சொன்ன சொல்லுக்காக, பூமியில் ஒரு இண்டு இடுக்கு விடாமல், நல்லன, தீயன என்று எதுவும் பாராது எல்லாவற்றிலும் நிறைந்து விட்டான்.

நல்லன, தீயன எதுவும் பாராது நிறைந்தவனே! இன்று எங்கள் கபட உள்ளங்களிலும் நிறைவாயோ?
"அதற்கு என்ன, ஆசைப்படுங்கள்; நிறைந்து விடுகிறேன்!
ஏற்கனவே அங்கே தானே இருக்கிறேன். என்ன, இனிமேல் நிறைவாக நிறைந்து விடுகிறேன்", என்று ஆளரிக் கோலத்தில், யோக நரசிம்மராக உலா வருகிறான்.
ஒரு சிம்மம் இன்னொரு சிம்மம் மேல் ஏறி உலா வருகிறது!
"நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வானுதலே!"





மாலை - முத்துப் பந்தல் வாகனம் (முத்யபு பந்த்ரி வாகனம்-தெலுங்கில்)

தூய்மை அற்றது எச்சில்; ஆனால் அதில் இருந்து உருவான நத்தையின் முத்து தான் எவ்வளவு வெண்மை, எவ்வளவு தூய்மை! முத்து கண்டு மயங்காத பெண்களும் உண்டா? என்ன தான் தங்கத்துக்கு மவுசு என்றாலும், "ஏங்க, என் இரட்டைப் பட்டை தங்கச் செயின் ரொம்ப நாளா சும்மாவே இருக்குது. கொஞ்சம் முத்து வைச்சு கோத்துக்கிறேனே" என்று எங்கேயோ யாரோ(?) நம்ம கிட்ட கேட்டா மாதிரி இருக்குதுங்களா? நல்லா ஞாபகப் படுத்தி சொல்லுங்க பாப்போம் :-)

முத்தங்கி சேவை என்பது வேறொரு தலத்தில் மிகவும் பிரசித்தம் என நினைக்கிறேன்! எந்தத் தலம்?

முத்து குளிர்ச்சியானது; நவ கோள்களில் (கிரகங்களில்) முத்து சந்திரனுக்கு உரியது. சந்திரனின் பரிகாரத் தலம் திருப்பதி என்று சோதிட நூல்கள் கூறும். அந்த முத்துக்களால் முழுதும் அலங்கரித்த விதானத்தில், முத்து நகைகளேயே பெரிதும் பூண்டு, முத்துக்கொண்டை சூடிய தேவியருடன் உலா வருகிறான் எம்பெருமான்.






இன்று,
பேயாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
நூற்பால் மனம்வைக்க நொய்வு இதாம், நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து.

(மாற்பால்=மால்+பால்=மயக்கத்தின் பாற்பட்டு; மனம்சுழிப்ப=மனம் சுழி(whirlpool) போல் சுழல; மங்கையர்தோள் கைவிட்டு; நூற்பால்=நூலின்(வேதம், மறை, இறை நூல்) பால் மனம்வைக்க; நொய்விதாம்=நொய்வு, மன உளைச்சல் இல்லையே!)

மங்கையர் தோள்களைச் சேர்ந்து, அது ஒன்று தான் சுகம், வேறில்லை என்று மயக்கத்தால் மதி மயங்குகிறது மனது! பின்னர் கையைச் சுட்டுக் கொண்டவுடன், அது இல்லை என்று ஆனவுடன், மனம் சுழி போல் சுற்றுகிறது! ஐயோ ஏமாந்து விட்டோமே என்று வருந்தி அதை விட்டு வெளியே வந்து, இறைவன் நூல்களின் பால் மனம் லயிக்க, இனி நொய்வு இல்லை!!

இந்த வேங்கடத்தான் இருக்கிறானே, இவன் நான்கு வேதங்களுக்கும் பொதுவானவன். (நீ சாம வேதம்; நான் யஜூர் வேதம் என்ற பிரிவு எல்லாம் இவனுக்கு இல்லை). அவன் திருவடிகளை விண்ணுலக மக்கள் அனைவரும், தங்கள் முடியும், மகுடமும் நிலத்தில் பட வீழ்ந்து வணங்குகிறார்கள். விழிக்குத் துணை அந்தத் திரு மென் மலர்ப் பாதங்களை நாமும் பணிவோம். நம் நொய்வு நீங்கும்!!
Read more »

Tuesday, September 26, 2006

திருமலை விழா 2 - சின்ன சேஷன் / அன்ன வாகனம்

இரண்டாம் நாள்

காலை - சின்ன சேஷ வாகனம் (சிறிய நாக வாகனம்)

வீட்டுல இரண்டு குழந்தை இருப்பவர்களுக்கு இது நல்லாவே தெரியும். அப்பா சின்னக்குட்டிய உப்பு மூட்டை தூக்கினால், பெரியக்குட்டி முரண்டு பண்ணும், இன்னமும் தன்னைத் தான் தூக்கணும் என்று. அது போல் தாங்க இந்த சேஷன்! நேத்து இரவும் அவரே வாகனமா (வக்கனமா :-)) வருவாராம். இன்னிக்கு காலையிலும் அவரே தான் வரணுமாம். சரி சரி, பெருமாளுக்கும் வேற வழியில்லை. துயில் கொள்ள இடம் வேணுமே. ஒத்துக்கிட்டாரு! :-)

பெரிய சேஷன்; தங்கத்தில் வாகனம். தேவியருடன் அப்பன் உலா வந்தார்.
சின்ன சேஷன்; வெள்ளியில் வாகனம். இன்று அப்பன் தனியாக உலா!
குடை அழகு, நடை அழகு என்பார்கள்! இன்று கண் கூடாய் காணலாம்! இரு பெரும் குடைகள் கவிக்கப்படும்; தோளுக்கு இனிமையான இறைவனை, ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று அழைக்கப்படும் அடியவர்கள், தோள்களில் தூக்கி, இசைக்கு ஏற்றவாறு ஒய்யாரமாக ஆடி ஆடி அழைத்து வருவார்கள். அதுவும் பாம்புப் பாட்டுக்கு ஆடும் ஆட்டம் கட்டாயம் பார்க்க வேண்டும். கொள்ளை நடை அழகு!!

இப்போதெல்லாம் நாதஸ்வரம் மட்டும் அன்றி, பல இசைக் கருவிகள் வாசிக்கப்படுகின்றன ஊர்வலத்தில். இந்தியாவின் பல பகுதி மக்கள், சேவை மன்றங்களில் சேர்ந்து, அதன் மூலமாக இறைவனின் முன்னும் பின்னும் பல கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு வருகிறார்கள். வழ்க்கம் போல தமிழ்க் குழு முன்னே செல்ல, எம்பிரான் தமிழைத் தொடர்ந்து ஓட, இறைவனை விட்டுவிடக் கூடாதே என்று பின்னால் வரும் வேதங்கள், வேகங்களைக் கூட்ட....ஒரே ஆட்டம் தான் போங்கள்!

மாலை - அன்ன வாகனம் (ஹம்ச வாகனம்)

சின்ன வயசுல நம்ம வலைப்பதிவு ஆண்மக்களில் யாருக்கேனும், பெண் வேஷம் போட்டு நிழற்படம் எடுத்திருக்காங்களா? போட்டோவை எனக்குத் தனியாக அனுப்பி வைங்க. யாருக்கும் காட்ட மாட்டேன் :-) என் மேலே நம்பிக்கை இல்லீனா, துளசி டீச்சருக்கு அனுப்பி வைச்சாலும் ஓகே தான்! யார் முன்ன வராங்க-ன்னு பார்ப்போம்!!

அதேபோலத் தான் நம்ம மலையப்பன், இன்று இரவு பெண் வடிவில் வருகிறார். இந்தக் குறும்பு எல்லாம் இவர விட்டா செய்யறத்துக்கு வேறே ஆள் இல்லை! கல்விக்கு அரசி, கணக்கறி தேவி, வீணையின் வாணியாக, சரஸ்வதி ரூபத்தில் வருகிறான் எம்பெருமான்! கையில் வீணை, ஜெபமாலை, வெண் பட்டு உடுத்திக் கொண்டை அலங்காரம்.

எதன் மேல் வருகிறான்? அன்னத்தின் மேல். 'அன்ன நடை, சின்ன இடை' என்பார்களே. அதே அதே!! "நீர் ஒழியப் பால் உண் குருகின் தெரிந்து". நீரை விலக்கி பால் மட்டும் உண்ணும் புராதனப் பறவை அன்னம். வித்தைக்கு இது மிகவும் வேண்டிய ஒன்று! படிப்பில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று கட்டாயம் தெரிய வேண்டும் (தேர்வில் மல்டிபில் சாய்ஸ் பத்தி நான் சொல்ல வரலீங்க :-)
அதனால் தான் வித்தைக்கு நாயகன் அன்ன நடை போட்டு வருகிறான். அழகோ அழகு!





(ஒரு சிறு குறிப்பு: கலைகளின் அரசியான சரஸ்வதி ரூபமாக இருக்கும் பெருமாள், கலை தழைக்க வந்த நாட்டியப் பேரொளி - பத்மினி, ஆன்மா அமைதி அடைய அருளட்டும்)



இன்று,
பூதத்தாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

இந்த ஆழ்வார் இயற்கைப் பிரியர். Naturist! சமயம் கிடைக்கும் போது எல்லாம் வர்ணனைகளில் புகுந்து விளையாடுவார். நீங்களே பாருங்களேன்.

பெருகு மதவேழம் மாப் பிடிக்கி முன்னின்று,
இருகண் இளமூங்கில் வாங்கி, - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான்கலந்த வண்ணன் வரை.
(வேழம்=ஆண் யானை; பிடி=பெண் யானை; வரை=மலை)

மத நீர் கண்ணில் பெருகும் ஆண் யானை ஒன்று, தன் காதல் மடப்பிடியான பெண் யானைக்கு, தானே முன் நின்று,
இரு இரு கண்களாய் உள்ள நல்ல இளசான மூங்கிலாப் பார்த்து தேர்ந்தெடுத்து, பக்கத்தில் இருந்த
தேன் கூட்டில் முக்கி (dip செய்து) , "இதோ இனிப்பான மூங்கில் (honey dip)! சாப்பிடு" என்று நீட்டும் மலைகளை உடைய திருவேங்கடத்தைப் பாருங்கள்..
அந்த மலை தான், நம் வானத்து வண்ணனின் (நீல மேக சியாமளன்) மலை. அம்மலையைத் தொழுவோம்!

(சில படங்கள் உதவி: tirumala.org)
Read more »

Monday, September 25, 2006

திருமலை விழா 1 - பெரிய சேஷ வாகனம்.

வாங்க வாங்க திருமலையான் பிரம்மோற்சவத்துக்கு! கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா? அது மாதிரி நினைச்சிப்போமே? ஏதோ பேப்பர், டிவில்ல எல்லாம் விழா அது இதுன்னு போட்டாலும், சுருக்கமா இந்த விழா ஏன், என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிலாம் வாங்க!

வேங்கடத்தான் பூவுலகில் அவதரித்த நாள் புரட்டாசித் திருவோணம். இந்த ஆண்டு Oct 3 அன்று வருகிறது! ஷ்ரவண நட்சத்திரம்ன்னு வடமொழியில் சொல்லுவாங்க. "திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே" என்பது பெரியாழ்வார் பாட்டு!
நாம அமெரிக்கால இல்ல சிங்கப்பூர்ல முதலில் காலடி எடுத்து வச்ச நாள் ஞாபகம் வச்சுக்கிறோம் இல்லையா? அது போலத் தான் இறைவன் நம் பொருட்டு பூமியில் கால் பதித்த நாள். அவதாரக் குழந்தையாக எல்லாம் பிறக்காது, நேரே குன்றின் மேல் கல்லாகி நின்ற நாள்.

இந்த நாளை படைப்புக்குத் தலைவர் பிரம்மா முதலில் விழாவாகக் கொண்டாட, பின்னர் தொண்டைமான் அரசன் அதைத் தொடர, பின்னர் பல ஆண்டுகள் தொடர்ந்தோ, விட்டு விட்டோ கொண்டாடி வருகிறார்கள். இன்றைக்கும் ஊர்வலங்களை பிரம்ம ரதம் என்னும் குட்டித்தேர் (பிரம்மன் சிலை வழிபாடு அற்றவர் ஆதலால்) வழி நடத்திச் செல்லும்.

முதல் நாள்
மாலை:
நல்ல மண் எடுத்து, நவதானிய முளை விடுவர். முளைப்பாரிகை என்பது இதற்குப் பெயர். விழா இனிதே நடக்க, செய்வது இது.

பின்னர் பெருமாளின் படைத்தளபதி சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), அவருடன் பரிவாரங்கள் அங்கதன், அனுமன், அனந்தன், கருடன் எல்லாரும் வீதியுலா வந்து, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்று கண்டு வருவர்.

அப்புறம், கருடனைத் துணியில் வரைந்து, கொடி மரம் அருகில் பூசித்து, கொடி ஏற்றுவர்! கருடன் விண்ணுக்குச் சென்று அங்குள்ளவர்கள் அனைவரையும், மற்றும் மண்ணுக்கு வந்து நம்மையும், விழாவுக்கு அழைப்பு வைப்பதாக மரபு. (கருடா செளக்கியமா? கண்டிப்பா வந்துடறோம்பா. நீ போய் ஆக வேண்டிய வேலைகளைக் கவனி!).

துவஜம்=கொடி, ஆரோகணம்=ஏற்றம்
துவஜாரோகணம்=கொடியேற்றம்...அவ்ளோ தாங்க, மத்தபடி வடமொழிப் பேரைப் பாத்து பயந்துடாதீங்க! :-)
இரவு
பெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்)

நம்ம பெருமாளுக்கு ரொம்ப பிடிச்ச ஒருவர்-ன்னா அது ஆதிசேஷன்.
பாற்கடல், திருவரங்கம் எல்லாத்துலேயும் இந்த சேஷன் மேலே தான் பள்ளி கொள்வார். இந்த சேஷனும் சும்மா இல்லீங்க!
இறைவனை விட்டு ஒரு நொடியும் பிரிய மாட்டார்-ன்னா பாத்துக்குங்க!
ராமனாய் பிறந்த போது இலக்குவன்
கண்ணனாய் பிறந்த போது பலராமன்
கலியுகத்தில் இராமானுசன், மணவாள மாமுனிகள்!
"சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்; நின்றால் மரவடியாம்" என்பார்கள்!
அவ்வளவு ஏன்? திருமலையின் 7 மலைகளும் சேஷனின் திருமுடிகள்.
அந்த சேஷாசலத்தின் மேல் தான் இறைவன் நிற்கிறான்! அதனால் விழாவின் முதல் நாள் சேஷனின் மீது ஒய்யாரமாக பவனி!


முன்னே அருளிச்செயல் குழாம், தமிழ்ப் பாசுரங்கள் பாடிச் செல்ல,
தமிழைக் கேட்டுக் கொண்டே, நம் பெருமாள் பின் தொடர,
வைகுண்ட நாதன் திருக்கோலத்தில், அலைமகள் (ஸ்ரீ தேவி) மற்றும் மண்மகள் (பூமிதேவி) உடன் வர,
அவன் பின்னே வேத கோஷ்டி வர,
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவோம் அவனை!




சரி, போன பதிவில் சொன்னபடி ஆழ்வார் பாடலுக்கு வருவோமா? சொன்ன சொல்லைக் காப்பாத்துணம்-ல!
12 ஆழ்வார்களில், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய பத்து ஆழ்வார்களும் வேங்கடத்தானைப் பரவிப் பாடியுள்ளனர். (மங்களாசாசனம் என்று வடமொழியில் வழங்குவர்)

(தொண்டரடிப்பொடி அரங்கத்தானைத் தவிர எவரையும், மதுரகவி அவருடைய ஆசான் நம்மாழ்வாரைத் தவிர எவரையும் பாட்டாகப் பாடவில்லை)
ஆழ்வார்கள் என்றால் யார்? அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவ்வளவாக அறியத் தெரியாதவர்கள், கீழ்க்கண்ட சுட்டிகளில் அறிந்து கொள்ளலாம்!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - நன்றி, திரு தேசிகன் அவர்கள் வலைப்பதிவு
ஆழ்வார் குறிப்பு - நண்பர் பாலாவின் வலைப்பதிவு. பாலா இப்போது தான் துவக்கியுள்ளார். Archives-இல் தேடப் பொக்கிஷம் கிடைக்கும்.



இன்று,

பொய்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்

உளன் கண்டாய் நன்-நெஞ்சே, உத்தமன் என்றும்
உளன் கண்டாய்,உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தின் உள்ளனன் என்று ஓர்!

(உள்ளுவார்=உள்ளத்தில் ஆழ்ந்து நினைப்பார்; ஒர்=அறி; உணர்) மிக எளிய பாடல் தான்!
நல்ல நெஞ்சமே, உத்தமன் என்றும் உள்ளான். எங்கே உள்ளான்?
உள்ளுவார் (நினைப்பவர்) உள்ளதில் எல்லாம் உள்ளான்.
பாற்கடல் வெள்ளத்தில் இருப்பவனும், வேங்கடத்தில் இருப்பவனும் ஒருவனே!
அவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.
இதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக!

Read more »

Sunday, September 24, 2006

பாகம்2 - கண்டேன் ஸ்ரீதேவியை!

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்)

இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான். முழங்கால் முறிச்சு என்று சொல்லப்படும் படிக்கட்டுகள் எல்லாம் தாண்டி வந்து விட்டோம்.
பெரிய பெரிய மின்-காற்றாடிகள் தெரிகின்றன மலை மேல். அடைந்தாயிற்று வேங்கடத்தை! இருள் சூழத் தொடங்கி விட்டது. வனத்தில் தான்; மனத்தில் இல்லை! பூந்தோட்டங்கள் தென்படுகின்றன.


குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே

என்ற நம்மாழ்வார் பாடல் நிழல் ஆடுகிறது. எதற்கு இவர் இறைவனைத் தொழச் சொல்லாது, மலையைப் போய் தொழச் சொல்கிறாரே!

சரி, உடைமைகளை எடுத்துக் கொண்டு, பதிவு செய்த அறையில் போய் நண்பர்கள் எல்லாரும் தங்கினோம். உடல் தூய்மை மட்டும் செய்து கொண்டோம்.
நண்பர் ராஜ் iodex தைலம் தானும் தடவி, எங்களுக்கும் தடவி விட்டார். பின்ன ஸ்ரீதேவிய எங்களுக்கு முந்திப்போய் படம் எடுத்தாரே, எப்படி பிராயச்சித்தம் செய்வதாம்? :-)

சரி பசி எல்லோருக்கும். ஒரு வெட்டு வெட்டி விட்டு, கொங்குரா ஊறுகாய ஒரு கடி கடிச்சிக்கினோம். நேராக ஸ்வாமி புஷ்கரிணி என்று சொல்லப்படும் குளத்துக்கு சென்று, நீர் தெளித்துக் கொண்டோம்.
கோனேரி என்ற அழகிய தமிழ்ப் பெயர் இதற்கு உண்டு. முதலில் கோனேரியின் வடமேற்கு மூலையில் உள்ள வராகப் பெருமாள் ஆலயம் சென்று வழிபட்டோம்.
திருமலை "ஆதி வராகத் தலம்". எனவே திருவேங்கடமுடையானைத் தரிசிக்கும் முன்னர், வராகப் பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்பது நியமம். கோவிலில் முதல் பூஜையும், நிவேதனமும் இவருக்கே!
சிறிய உருவம். பூமகளை மடியில் சுமந்து, அவளுக்கு ஞான உபதேசம் செய்யும் ஞான வராகராக திகழ்கிறார்! வராகத்தை கேழல் என்று ஆழ்வார் தூயதமிழில் அழைத்தது நினைவுக்கு வந்தது! சொன்னேன் ஆனந்திடம். அவன் என்னை ஒரு முறை முறைத்தான், செல்லமாக!

அனந்த நிலையம் எனப்படும் அவன் கருவறைக் கோபுரம் தங்கப் பூச்சில் தகதக என மின்னியது! மின்னுவதெல்லாம் பொன்னல்ல! ஆணிப்பொன் மேனி உள்ளே இருக்கிறது! வாருங்கள் என்பது போல மின்னியது!!

கையில பார் கோட் போட்ட டோக்கனைக் கீழ்த் திருப்பதியிலேயே கட்டிக்கிட்டோமே! நேரே வரிசையில் போய் நின்னுட்டோம்.
இந்த பார் கோட் ஐடியா IIM மாணவர்கள் பிராஜெக்டாம்! சூப்பர் அப்பு! இதனால் முன்பு போல் பல மணி நேரம் கொட்டகையில் அடைந்து கிடைக்காமல் திருமலையின் மற்ற ஆன்மீகப் பகுதிகளைப் பார்த்து வரலாமே.அம்மணிகளுக்கு ஷாப்பிங் டைம் வேறு எக்ஸ்ட்ரா கிடைக்கும்:)

வரிசையில் நின்று விட்டோம். பலவிதமான மனிதர்கள். ஆனால் ஒரே நோக்கம்! இறை முகம் காணல்!
பணம் படைத்தவர்கள், அவ்வளவாகச் செல்வச் செழுமை இல்லாதவர்கள்,
குணம் படைத்தவர்கள், அவ்வளவாகக் குணச் செழுமை இல்லாதவர்கள்,
பல மொழிகள், பல உடைகள், பல கதைகள், பல சுவைகள்!
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

"நின்றனரே" என்று நம்மாழ்வார் வரிசையில் நிற்பதையும் சேர்த்தே தான் குறிப்பிட்டாரோ?


சுற்றுலா சென்றால் கூட, ஒரே குடும்பத்தார் கூட அவர் அவர் விரும்பும் ஸ்பாட்டுகளுக்குச் சென்று திரும்பலாம். ஆனால் இங்கே எல்லோரும் ஒரே பொருளைக் காணத் தான் ஓயாது நிற்கிறார்கள்!
அவர்கள் மேம்போக்காக தரிசனம் செய்கிறார்களோ, இல்லை.... "வினையேன் அழுது" அவனைப் பெறுகிறார்களோ, ஆக மொத்தம் அந்தப் "புன்னகை மன்னன்" குளிர் முகம் காணத் தான் இவ்வளவு விழைவு. அதுவன்றிப் பிறிதொன்று இல்லை!
ஆகவே, அந்தக் கணத்தில் எல்லாருமே அவன் அடியார் தான்! அடியார்க்கு அவனே ஆரமுதன்!

பிரபலங்கள், பிரபலங்களின் சபலங்கள் என சிறப்பு அனுமதியோ, பணம் கொடுத்தவரோ, பண்பாளரோ, தொண்டரோ, துறவியோ எவராயினும் எனக்கென்ன? எவராயினும் சரி, சற்றுக் கூட கைபடாது கால்படாது உள்ளே செல்லத் தான் முடியுமா? அப்படிச் சொல்லத் தான் முடியுமா?

வரிசையில் ஊர்ந்து கோபுர வாசல் கிட்டே வந்து விட்டோம். இரவு சுமார் 10:30 மணி. கோவில் மணியோசை, பேரிக் கொம்பு முழக்கம். ஓகோ அவனுக்குப் பசி போலும்! நிவேதனம் ஊட்டுகிறார்கள்! சரி சாப்பிடட்டும். பசியால் வாடும் முகத்தைப் பார்க்க மனம் வருமா? நாம் காத்திருந்து பொறுமையாகவே பார்ப்போம்! ஹேய்....என்ன ஏதோ சலசல சத்தம் கேட்கிறதே? எதற்கு கூச்சல்??

ஆனந்த் தான் கூவினான். "டேய் ஸ்ரீதேவி தான்பா; அங்கே பாரேன்!".

மச்சி, குச்சி என்ற விளிப்புகள் ஏனோ அப்போது அவன் வாயில் வரவில்லை!
ஆமாம் ஸ்ரீதேவி தான், குடும்பத்தாருடன்!

வழியில் பார்த்தற்கும் இப்போதைக்கும் வித்தியாசங்கள்! பொறுப்பான உடுப்புகள் உடுத்தி இருந்தனர். நாங்கள் கூப்பிடும் தொலைவே இருந்தனர்!கோவில் அதிகாரியும், அவர் கூட திருமண்காப்பு நெற்றியில் துலங்கும் ஒரு அர்ச்சகரும் அவர்களை வரவேற்றனர்!
உள்ளே அவர்கள் அனைவரும் நுழையும் போது, வரிசையில் உள்ள கூட்ட மிகுதியாலும், அந்தக் கோபுர வாசலில் தடுப்புகள் வெறும் கயிறாகவே இருந்த காரணத்தாலும் சற்றே தள்ளு முள்ளு!

உடனே அந்த அர்ச்சகர், பணியாளர்களை விட்டு வரிசையை நிறுத்தச் சொன்னார்! நல்லது தான்!!ஆனால் ஒருபடி மேலே போய் "இந்தக் காட்டுமிராண்டிக் குரங்கு கூட்டம் எப்பவுமே இப்படித் தான்; ஏமி புத்தி லேது ஈ கோட்டி (குரங்கு) ஜனாலுக்கி.....xxxxxxxxxxxxxxxxxx.....நு ராம்மா", என்று படபடவென பொரிந்து விட்டார்... பல வார்த்தைகள் பதிவின் தன்மை கருதி சென்சார்!!

எங்கிருந்து தான் எனக்குக் கோபம் வந்ததோ தெரியவில்லை. குரலை நன்றாக ஓங்கி, "யாரைக் காட்டுமிராண்டிக் குரங்குகள்-ன்னு சொல்றீங்க? ஆஞ்சனேயர் அவதரித்த மலையில் அடியார்களை இழிவாகப் பேச உங்களுக்கு நாக்கு எப்படி வந்தது?

'அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ' என்று அடியவரைத் தான் தினம் தினம் முதலில் துதிக்கிறீங்க. மறந்துடாதீங்க!
' சர்வ அந்தர் ஆத்மனே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்' என்பதை மறந்து விட்டீர்களா?
சமூகத்தில் பிரமுகர்கள்-னா அவர்களுக்கு மரியாதை செய்து அழைத்து போங்க, வேண்டாம்-ன்னு சொல்லலை. அதற்காக வாய்த்துடுக்கு வேண்டாம்" என்று கண்கள் பனிக்கக் கத்தி விட்டேன்.

ஒரே நிசப்தம். நண்பர்கள் என்னைப் பிடித்துக் கொண்டனர். அர்ச்சகர் சற்று விக்கித்து தான் போய் விட்டார். அந்த அதிகாரி என்னை ஒரு முறைமுறைத்தார். யாரும் மேற்கொண்டு பேசவில்லை!
நடிகையும் கணவரும் மட்டும் அருகில் வந்து "Sorry; we didn't mean it; really sorry" என்றனர். அனைவரும் உள்ளே சென்று விட்டனர்.கூட்டம் என்னையே பார்த்தது! எனக்கே ஒருமாதிரி ஆகி விட்டது!

நண்பர்கள், "டேய், உனக்கு இவ்ளோ கோபம் கூட வருமா? முன்ன பின்ன நீ இப்படிக் கத்தி பாத்ததே இல்லடா. போலீஸ்-ல்லாம் பக்கத்துல இருக்காங்க. பாத்து டா." என்றனர்.

ஆனந்த் மட்டும் "அந்த நாமக்கார ஐயிருக்கு இருக்குடா. வச்சி வாங்கணும். இவ்ளோ பேசிட்டு ராம்மா ராம்மா -ன்னு கொஞ்சி கொஞ்சி கூட்டினு போறாரு.இதே நாங்க சத்தம் போட்டிருந்தா எகிறி இருப்பாங்க; ஆனா நீ ஏதோ மந்திரம் எல்லாம் சொன்னியா. வுட்ட சவுண்டுல ஆளூ கப்சிப்", என்றான்.
"சரிடா விடு, வயசுல பெரியவர்" என்றேன். மனம் மட்டும் கனம்!! நாம ஏதும் தப்பா பேசிடலையே என்ற பயம்!

நகர்ந்தோம்....நகர்ந்தோம். கொடி மரம் கடந்து, சன்னிதியில் நுழைந்து...கருடன் இரு கரம் கூப்பிச் சேவித்துக் கொண்டிருந்தான்.
சரி நாமும் முகத்தை இப்படி இடப்பக்கம் திருப்பினால்...அய்யோ!

நெடிது உயர்ந்த நீல மேனி நெட்டழகன், முகம் கொள்ளாச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
என்ன சொல்வேன்? எப்படிச் சொல்வேன்??

கண் அழகா? சிவந்த வாய் அழகா?
சிரிக்கும் முகம் அழகா? திரண்ட தோள் அழகா?
கை அழகா? கருத்த இடுப்பழகா?
கால் அழகா? இல்லை மால் அழகா?
அய்யோ!
தீப விளக்கொளியில், பூலங்கி சேவை (பூக்களால் ஆன அங்கி).

இளங்கோவடிகள் வியந்தது போல்,
பகை அணங்கு ஆழியும்(சக்கரம்) பால் வெண் சங்கமும்(சங்கு)
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய


திருவேங்கடமுடையான் திருமுகம், திருமார்பு, திருக்கரங்கள்...சேவித்து....அதற்கு மேல் முடியவில்லை. ஜரிகண்டி, ஜரிகண்டி, தய சேசண்டி....திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே, கண்கள் பனிக்க வெளியே வந்தோம்.
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான் என்று ஆண்டாளே தரிசன மகா பாக்கியம் கிடைக்க வில்லையே என்று புலம்பும் போது, நாமெல்லாம் எங்கே?

தீர்த்தம், திருப்பாதம்(சடாரி) பெற்று, உடையவர், நரசிம்மர் சேவித்து, உண்டியல் செலுத்தி, வலம் வந்து, வெளி வந்தோம். முன்பெல்லாம், கோவில் மற்றும் அதன் பகுதிகள், கிணறு, அன்னக்கூடம், யமுனைத்துறை, மற்றும் பல சரித்திர நிகழ்வுகள் அதன் இடங்களைப் பார்ப்பேன். உடனிருப்பார்க்கு விரும்பினால் சொல்லுவேன். இம்முறை ஏனோ லயிக்கவில்லை!

அருண் மீண்டும் பழைய நிகழ்ச்சியைப் பற்றி எழுப்பினான். லட்டு சாப்பிட்டுக் கொண்டே, "ஒண்ணுமே இல்லீங்க. எல்லாம் பணம் தான் பேசுது! எப்படியோ நல்லா ஏத்தி வுட்டுட்டாங்க இந்தக் கோயிலை!
நம்ம தஞ்சாவூர் பக்கம் எல்லாம், எவ்ளோ பெருமாள் கோயில் ஆள் அரவம் இல்லா இருக்குது! யாரோ பெரிய பெரிய முனிவங்க, அப்பறம் ஆழ்வார்-ன்னு சொல்றாங்களே, அவுங்க எல்லாம் பாட்டு படிச்சு இருக்காங்களாம் தஞ்சாவூர்ல! ரொம்ப பக்தி கதையெல்லாம் இருக்குதாம். இந்த திருப்பதி-ல அதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னாலும் பணம் மட்டும் கொழிக்குது! அதை வச்சிக்குனு இவங்க ரொம்பவே ஆட்டம் போடறாங்க", என்றான்.

நான் அப்போது அவனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஒன்றும் சொல்லவில்லை. பூமாலைக்கே வழியின்றி இருந்த திருவேங்கடமுடையான் பற்றியும் அவன் அருளுக்கு உருகி உருகிக் காதலித்த ஆழ்வார்கள், இராமானுசர், அனந்தாழ்வான், திருமலை நம்பிகள், தியாகராஜர், அன்னமாச்சார்யர், வட இந்திய ஹதிராம்ஜி மற்றும் பலப்பல கதைகளைப் பதிவாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அப்போது தான் உதித்தது. அதற்கு இப்போது தான் வேளை வந்தது!

//இன்று நாம் காணும் பணக்காரத் திருமலைக்கும் உள்ளே, பலப் பல அன்புத் திருக்கதைகள் எல்லாம் ஒளிந்து உள்ளன. அவற்றை எல்லாம் எழுதலாம் என்று என் சிந்தனை// என்று குமரன் பதிவு ஒன்றில் பின்னூட்டம் இட்டேன். வெறும் கதையாக இல்லாமல், இலக்கிய நயமாகச் சொன்னால், வடையுடன் கூடிய பொங்கலாக இருக்கும் அல்லவா:-) ? இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம மீட் பண்ணலாம். பயந்துறாதீங்க, இனி குறும்-பதிவாகவே இடுகிறேன்!!!

பி.கு:திருமலையான் பிரம்மோற்சவம் Sep 25 துவங்கி Oct 3 வரை, ஒன்பது நாட்கள்!
ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிப் பதிவு! ஒரு/இரு வாகனம் (படத்துடன்);
ஒரு ஆழ்வார் பாடல் (12-இல், 10 பேர் நம்ம பாலாஜி மேல ஒரே லவ்-ஸ் பா)
அனைவரும் அவசியம் வந்து கலந்துக்குங்க!
Read more »

Saturday, September 23, 2006

பணமா? பக்தியா? ஸ்ரீதேவியே செப்புமா! - பாகம்1

இந்தப் பதிவில் ஸ்ரீதேவி என்பது நம்ம "மீண்டும் கோகிலா" ஸ்ரீதேவியைத் தான் குறிப்பிடுகிறேன். ஆனால் அவர்களைப் பதிவின் இறுதியில் சந்திக்கும் வரை, கொஞ்சம் அவரை மறந்து விடுவோமே? :-)

ஒரு புரட்டாசி மாதம். நண்பர்கள் ஐவர் புடை சூழ திருப்பதி சென்றோம். ரொம்ப நாள் கழித்துக் கூட்டாகச் செல்கிறோம். அவரவர் வீட்டில் சில நல்ல விஷயங்கள் நடந்து அனைவரும் நல்ல உற்சாக மனநிலையில் இருந்தனர்.
மலை ஏறிச் செல்வதாகப் பேச்சு. ரயிலில் ஒரே கும்மாளம்.

நவீனத் தமிழ் பண்பாட்டின் படி, "நமக்குத் தொழில் கலாய்த்தல்" என்று நாங்கள் எல்லாரும் கருமமே கண்ணாக இருந்தோம்.
ரேணிகுண்டாவில் வடை, சாயா (அட நம்ம SK, மற்றும் மன்னாரு கொடுத்து வுட்டாங்களா-ன்னுல்லாம் கேட்கக் கூடாது, சரியா?)
மலை ஏறப் போவதால் நிறைய சாப்டாதீங்கடா-ன்னு அட்வைஸ் பண்ணாரு ஒரு சின்சியர் சிகாமணி (அட நான் தானுங்க!)

வண்டி நகரத் தொடங்கியதும் சிறிது நேரத்தில் ஆனந்த் என்ற நண்பர், கதவு அருகே போய் நின்று கொண்டார்(ன்). (டேய், வலைப்பூக்காக உன்னை எல்லாம் அவர்,இவர் ன்னு சொல்ல வேண்டியதாப் போச்சே! கொடுமைடா சாமி :-))

என்ன என்று நான் அருகில் போய் கேட்க, அவன் திருப்பதி மலையைத் தூரத்தில் இருந்து பார்ப்பது தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினான்.
பச்சை பார்டர் போட்ட புடைவையில், மலை உச்சிகள் மட்டும் வெறும் செம்பாறைகளாகத் தெரிய, குட்டி குட்டி வெள்ளைக் கோபுரங்கள் கண்ணுக்குப் புலப்பட, இரவு விளக்குகள் மாலையிலேயே ஒளிர்விட, நீல மேகங்கள் சூழ்ந்த மாலை வானத்தை பார்க்கும் போது, ஏதோ rmkv பட்டுப் புடைவை டிசைன் போல பளிச் என்று இருந்தது.



வண்டியை விட்டு இறங்கி நேரே திருச்சானூர் சென்றோம். கலாய்த்தல் எல்லாம் நின்று போய் இருந்தது. பசங்க எல்லாம் பக்திமான்களாக மாறி இருந்தாங்க. கோவிலில் கண்ணனை முதலில் கண்டு, பின்னர் தாயாரை மனங்குளிர சேவித்தோம் (கும்பிட்டோம்). கூட்டம் அதிகம் இல்லை. பொறுமையாக பட்டர் (அர்ச்சகர்) தீபாராதனை காட்ட, அலங்காரத்தில் ஜொலித்தாள் மகாலக்ஷ்மி.



"அம்மா, அடுத்தது உன் புருஷனைத் தான் பாக்க போயிக்குனு இருக்கோம். எதுனா மெசேஜ் இருந்தா சொல்லும்மா, சொல்லிடறோம்" என்று நான் அவளிடம் சொல்ல, இதழ்க் கோட்டோரம் மென்முறுவலாக அவள் சிரிப்பது போல் தோன்றியது. பின்னர் வெளியே வந்து இலவச பிரசாதமான தயிர் சாதத்தைச் சுடச்சுட தொன்னையில் வாங்கிச் சாப்பிட்டோம். நண்பன் அருண், "இதுக்குப் பேர் தாண்டா ததியோதன்னம்" என்று சொன்னான். தயிர்சாதத்தைத் தப்பு தப்பா சொன்ன அவனை ஒரு மொத்து மொத்தி விட்டு, வண்டி பிடித்து மலை அடிவாரம் வந்து சேர்ந்தோம்.

அலிப்பிரி (அடிப்புளி) என்னும் அடிவாரத்தில் சூடம் எல்லாம் கொளுத்தினான் நவீன் என்ற இன்னொரு நண்பன். காலணி, பெட்டி எல்லாம் க்ளோக் ரூமில் கொடுத்து விட்டோம். அவர்கள் இலவசமாக மேல் திருப்பதிக்கு அனுப்பி விடுவார்கள். மேலே சென்றவுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். "உடன் பிறவா சகோதரன்" காமிராவை மட்டும் எடுத்துக் கொண்டோம். முதல் முதலில் பெருமாள் வாகனமான பெரிய கருடன் சிலையைக் கிளிக்கினோம்.

ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதனால் தான் அதற்கு அடிப்புளி என்று பெயர். ராமானுஜர் இங்கு தான் ராமாயாண பாடத்தை தன் குருவிடம் கேட்டாராம்.
இங்கு பன்னிரு ஆழ்வார்களுக்கும் கோவில் உள்ளது. ஆழ்வார்கள் ஆதிசேடன் ரூபமாக உள்ள திருமலையின் மேல் கால் வைக்கவும் அஞ்சி, மலை ஏறாது கீழே இருந்தே இறைவனை வழிபட்டார்களாம். பெருமாள் பாதம் கோவில் ஒன்றும் உள்ளது. காலணிகளைக் காணிக்கை செலுத்துவார்களாம்.

வணங்கி விட்டு, ஏற ஆரம்பித்தோம். போட்டி வேறு! யார் சளைக்காமல் ஏறுகிறார்கள் என்று. எல்லாம் காளி கோபுரம் வரை தான். அப்புறம் பாக்கணுமே பசங்கள! இஞ்சி மிட்டாய் சாப்பிட்ட ஏதோ ஒன்று மாதிரி இருந்தோம். ஆனந்த், "டேய் மச்சான் ஒரு லெமன் சோடா அடிச்சுட்டு போலாம்டா" என்றான். உப்பு கரிக்க ஆகா, "உழைச்சு சாப்பிட்டா தாண்டா அருமை தெரியும்" என்பது இப்போது தான் தெரிந்தது.

மொத்தம் 4000 படிக்கட்டாமே. 11 கிமீ...இதுக்கே நமக்கு தாவு தீருது! இத்தனைக்கும் gym body! அங்க பாருடா அந்த குண்டு அம்மா, ஒவ்வொரு படியா குனிஞ்சி, குங்குமம் வச்சிகிட்டே வருது! எப்படித் தான் இதெல்லாம் பண்றாங்களோ. நமக்கு சும்மா நடக்குறதுக்கே மூச்சு முட்டுது!
சரி சரி ஒரு ஜென்டில்மேன் அக்ரீமெண்ட். போட்டி எல்லாம் வேண்டாம். அவரவருக்குத் தெரிந்த பாட்டு, கதை எல்லாம் சொல்லிக் கொண்டு, காலாற மெல்ல நடந்து செல்வோம் என்பதே அது!



படியேறும் போது, அவ்வளவாகத் திருப்பதியின் பகட்டும், தற்போதைய நாகரீக மயமாக்கலும் தெரிவதில்லை. எளிய மனிதர்கள், எளிய பக்தி தான் பரவலாக தெரிந்தது. இதற்காகவே ஒவ்வொரு முறையும் காலாற மலை ஏறிப்போக வேண்டும் போல் இருந்தது.

மலை ஏறஏற மனதில் ஒரு குளிர்ச்சி, "சில்லுனு ஒரு காற்றில்" செடிகொடிகளின் வாசனை. பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. "மலையில் ரிஷிகளும், இன்ன பிற பக்தி உள்ளங்களும் அரூபமாக வாசம் செய்கிறார்கள். அதனால் கண்டதையும் கூச்சல் போட்டுக் கொண்டு எல்லாம் ஏறக் கூடாது" என்று சொல்லுவாள். லேசான மழைத் தூறல்... தவளைகள் படிகளில் சத்தம் போட்டன. படிக்கட்டுகளும் செங்குத்து குறைந்து, நடக்க எளிதாக இருந்தது.
வழியில் அஞ்சனாத்ரி என்ற தகவல் பலகை. ஆகா திருமலை அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயர் அவதாரத் தலம் அல்லவா? மொத்தம் 7 மலைகள் ஆயிற்றே...மற்ற மலைகளின் பெயர்கள் என்ன? அடடா வழியில் போட்டிருப்பார்கள். நாங்கள் தான் பார்க்காமல் வந்து விட்டோம். வருத்தம் தான். ஆஞ்சனேயர் சிலை மற்றும் நடு வழி நரசிம்மர் கோவிலும் தாண்டி வந்து விட்டோம்.

மான், மயில் கூட்டங்கள் ஒரு இடத்தில். புள்ளி மான்கள் நிறைய இருந்தன. அந்தி மாலை இள வெயில் நேரம். கூட்டம் அவ்வளவாக இல்லை. மழைச் சாரல் வேறு. மேகக் கூட்டங்கள் ஒரு மலை மேல் அப்படியே படர ஆகா! ஏதோ குலு மனாலி மாதிரி ஒரு ஃபீலிங். ஏழைகளின் குலு மனாலி என்று நினைத்துக் கொண்டோம்!

இந்த மேகங்களைத் தான் ஆண்டாள் வேங்கடவனிடம் தூது விட்டாளோ? ஓர் பெண்கொடியை வதைசெய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே. "ஓ மேகங்களே போய் சொல்லுங்கள் உங்கள் வேங்கடத்தானிடம்; இப்படி எல்லாம் அவன் என்னைச் சோதித்தால், உலகில் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள்!" நண்பர்களிடம் சொன்னேன். ஆச்சரியப் பட்டார்கள். ஒருவன் கேட்டே விட்டான். "என்னடா இது சாமிய இப்படி எல்லாம் திட்டிப் பாட்டு எழுதி இருக்காங்களா...இல்லாக்காட்டி ஏதோ எங்களுக்கு தெரியாதுன்னுட்டு நீயே தமிழ்ல அள்ளி வுடறீயா?"



படிகளும் சாலையும் சேரும் இடத்தில், சர்சர் என்று இரண்டு கார்கள்....க்றீச் சப்தம்...காரிலிருந்து ஒரு பெரிய குடும்பம் இறங்கியது. அதற்குள் ஆனந்த் "மச்சான் டேய் 'நம்ம' ஸ்ரீதேவி டா" என்றான். அட ஆஆமாம் 'நம்ம' ஸ்ரீதேவி தான். சேசே...இல்லையில்லை...'நம்ம' வைக் கட் பண்ணுங்கடா!
கணவருடன் வந்துள்ளார் போல. நாங்கள் மற்றும் ஒரு கேரளக் குடும்பம். வேறு யாரும் இல்லை. எங்களைப் பாத்து மெலிதாகச் சிரித்தார். நாங்களும் ஹிஹி என்று சிரித்து வைத்தோம். (வேறு என்ன செய்ய).......?

மேகக் கூட்டங்களைப் பாத்து அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். "Excuse me, could you take a picture of the whole family behind the clouds?" என்று கேட்டார் அவர் கணவர்.
நான் ஒ யெஸ் என்று சொல்லிக் காலை முன்வைக்கும் முன் ராஜ் என்ற இன்னொரு நண்பர்(?) காமிராவை வாங்கி கிளிக்கி விட்டார். வாடா வா இவ்ளோ நேரம் கால்வலி அது இது....நடக்க முடியலன்னு வந்தவன், இப்ப மட்டும் இன்னா ஸ்பீடு! தாங்க்யூ படலம் முடிந்தவுடன் அவர்கள் கிளம்ப, மற்ற நண்பர்கள் எல்லாம் நம்ம ராஜை அன்பாக விசாரித்தார்கள் :-)

ஆனால் யாருக்கும் அப்போது தெரியாது, இதே ஸ்ரீதேவி்-யிடம் கோவில் வாசலில் சண்டை போடப் போகிறோம் என்று!

Read more »

Thursday, September 21, 2006

ஒளவையின் அகவல்

இனி, விநாயகர் அகவலைச் சிறிதே சுவைப்போமா!
(அகவல் பிறந்த கதையை இந்தச் சுட்டியில் படித்த பின் தொடர்வது பொருத்தமாய் இருக்கும்)

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)


ஒளவை இறைவனின் அடி முடி சேவையைத் தரிசிக்கிறார். திருவடியில் இருந்து தொடங்குகிறார். குளிர்ச்சியான, மணம் மிக்க தாமரைப்பூ திருவடி. அதில் கொஞ்சும் சலங்கை. சற்று மேலே தங்கத்தாலான அரைஞாண் கயிறு, மெல்லிய வெண் பட்டு ஆடை. அழகிய இடுப்பு. உலகமே உள் அடங்கிய பெரிய வயிறு, இன்னும் சற்று மேலே கனமான ஒற்றைத் தந்தம்.
(சீதம்=குளிர்ச்சி; களபம்=மணக்கும் தைலம்; மருங்கில்- இடுப்பில்)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)


யானை முகம், நெற்றியில் திலகம், ஐந்து கரங்கள், அதில் ஒன்றில் அங்குசம். மற்றொன்றில் பாசக் கயிறு. (ஒரு கரத்தில் மோதகம், ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் – இவையே மற்ற கரங்கள்)
(வேழம்=யானை)

யானையை அடக்கத் தானே அங்குசம். அதைப் போய் யானையின் கையிலேயே கொடுக்கலாமா? ஏன் கொடுத்தார்கள்? அடக்குபவனும் அவனே, அன்பால் அடங்குபவனும் அவனே.
Mixture of opposites என்று சொல்லப்படும் எதிர் எதிர் பொருள்கள் எல்லாம் இறைவன் முன் ஒன்றுக்குள் ஒன்று அடங்கி விடுகின்றன.

இந்த தத்துவம் மிகவும் சிறப்பானது. இன்றைய வேதியியலும் எதிர் எதிர் விசைகளால் அணுப்பொருள் இயக்கம் என்று இதைத்தான் சொல்கிறது.
கருடனும், ஆதிசேஷன் என்னும் நாகமும் ஒரு சேரத் திருமால் அன்புக்குப் பாத்திரமாவதும் இப்படித் தானோ!

சற்றே நீலமான மேனி, தொங்கும் துதிக்கையாகிய வாய், நான்கு புஜங்கள்(தோள்கள்), மூன்று கண்கள் (அப்பனைப் போலவே!), யானைக்கே உரிய மதநீர் ஒழுகும் கன்னம்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)


இரு செவிகளும், பொன் மகுடமும், முறுக்கேற்றிய பூணூல் மார்பில் திகழ...
இதற்கு மேல் தமிழ்ப் பாட்டிக்கே வார்த்தை போதவில்லை வர்ணிக்க; சொல் பதங்களை எல்லாம் கடந்தவன் தானே கடவுள்! அந்த ஞான கணபதி அற்புதமாய் நிற்கும் கற்பக மரம்!

(களிறு=ஆண் யானை; மூஷிகம்=எலி)

அவ்வளவு பெரிய உருவம் என்று பயந்து விட வேண்டாம். நிலையில்லாது சதா துள்ளும் சின்ன எலியும், சுமந்து ஓடவல்ல பஞ்சுப் பொதி போலவன். மூஷிக வாகனன்!
விநாயகன் உருவமே மொத்தமும் pair of opposites தானே?
அவனை பாதம் தொட்டு, முழுவதும் தரிசித்த பின், முப்பழங்களையும் (மா, பலா, வாழை) நிவேதனமாகத் தருகிறார் ஒளவை.

“சங்கத் தமிழ் மூன்றும் தா” என்று பழம் மூன்று கொடுத்து, தமிழ் மூன்றும் வாங்கி விடுகிறாள் ஒளவை! கெட்டிக்காரி தான்!!
.......
.......



சற்றே கவனித்தால் ஒளவையின் பாட்டில் எளிமை தெரியும். ஏதோ பாரதியாரைப் படிப்பது போலவே இருக்கும். அருவி போல் கிடுகிடு நடை, அந்தக் காலத்திலேயே கடினமான சொற்களை விடுத்து, எளிமையாக புழங்கும் சொற்கள்.

இன்னும் நிறைய சொல்கிறாள் ஒளவை.

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து,
உவட்டா உபதேசம் புகட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் புகட்டி,
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்,
குண்டலி யோகம் காலால் எழுப்பும் கருத்தினை அறிவித்து

என்று பலவாறாக யோக ரகசியங்களை எல்லாம் அடுக்கி வைக்கிறாள்.

பூஜை முடித்து கயிலாயம் செல்ல தயாராக உள்ள ஞானி, தனக்குக் கிடைத்த சிறிய காலத்துக்குள், தான் பெற்ற பேற்றினை, உலகத்தோர்க்கு பகிர்ந்துவிட்டுச் செல்வதில் அவ்வளவு ஆர்வம்!

அவை அனைத்தையும் இங்கே சொல்ல முனைந்தால் பதிவு மிகவும் விரிந்து விடும்.

இறுதியாக இப்படி முடிக்கிறாள் ஒளவைபாட்டி.
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

ஓம் என்னும் ஓசையில் உருவம் அற்றவனாய் இறைவனைக் காட்டினாய்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
மனத்துள் ஆத்ம லிங்கமாய், உருவம் உள்ளவனாகவும் இறைவனைக் காட்டினாய்
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
அணுவிற்குள் அணுவாகியும் அண்டமெல்லாம் கடந்து பெரிதாகியும்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
கணுக்கள் முதிர்ந்து உள்ள கரும்புக்குள் உள்ள இனிப்பு போல் நீ இருப்பதைக் காட்டினாய்
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
சிவச்சின்னங்களும், திருநீறும், உலகில் விளங்கி நிலைபெறச் செய்து
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
மெய்யடியார் கூட்டத்தில் என்னையும் ஒருத்தியாகக் கூட்டுவித்து
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
அஞ்சு+அக்கரம்(அக்ஷரம்) – நமசிவாய என்ற ஐந்தெழுத்தின் சூட்சுமமான பொருளை உரைத்து
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
மனதில் ஆழமாக உணர்வித்து
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

பூக்களால் அர்ச்சனை பெற்று, நறுமணம் நிறைந்த உனது திருவடிகளுக்கே சரணாகதி அடைகின்றேன்

“சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதம்” என்று திருவடியில் ஆரம்பித்து, முடிக்கும் போதும், 'விரைகழல் சரணே' என்று திருவடியில் முடிக்கிறாள் ஒளவைப்பிராட்டி.

அவள் முடிக்கவும், விநாயகப் பெருமான் அவள் முன் தோன்றவும் சரியாக இருந்தது.
அலேக்!!!
தன் தும்பிக்கையால் ஒளவையைத் தூக்கினார். மண்ணில் இருந்து வி்ண்ணுக்கு மாற்றினார். கயிலையின் முடியில், ஈசனின் அடியில், கொண்டு நேரே நிறுத்தினார்.

நாமும் சொல்வோம் “வித்தக விநாயக விரைகழல் சரணே!”


Read more »

Wednesday, September 20, 2006

ஒளவையார்–யானையார்

காலை 7:00 மணி; வீட்டில் ஒரே பரபரப்பு. வீட்டுத் தலைவிக்கோ கையும் ஓடலை, காலும் ஓடலை.
பள்ளிக்குச் செல்ல மக்கர் பண்ணும் மகன்.
அடுக்களையில் அவளைப் பார்த்து மாறி மாறி விசில் அடிக்கும் குக்கர்.
வீட்டுத் தலைவருக்குக் கூட இல்ல அந்த உரிமை!
அய்யாவோ பூஜை அறையில்.

காக்க காக்க கனகவேல் காக்க.
"ஏம்மா, இன்னுமா பேப்பர் வரல? ஜோதிகா கல்யாணம் நல்லபடியா நடந்துச்சான்னு பாக்கலாம்னா...நேத்து நியூஸும் பாக்கல!”
நோக்க நோக்க நொடியில் நோக்க
“டேய் ஷ்ரவண், ஒழுங்கா ரெடியாயிடு. வீணா காலங்காத்தால அடி வாங்காத சொல்லிட்டேன்.”
தாக்க தாக்க தடையறத் தாக்க
.....

இது சில பல வீடுகளில் நடக்கும் வாடிக்கையான ஒன்று தான்.
இறை வழிபாட்டின் போது கூட மனம் ஒருமிக்காது அலை பாயும்.
நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே. (என்ன…. நடுவில் வேறு பேச்சுகள் பேசாது/ஏசாது இருக்கலாம்).
ஒளவைப்பாட்டி கூட இதற்கு விதிவிலக்கு இல்லை போலும்!
முன்பு ஒரு முறை, தம்பியால் சுட்ட பழத்தை அறிந்த ஒளவை, இன்று அண்ணனால் ஆட்கொள்ளப்பட வேணும் என்று இருந்தது போலும்!

அன்றும் ஒரு நாள், ஒளவையார் அப்படித் தான் சிவ பூஜையில் இருந்தார்.
சில நாளாகவே அவர் மனதில் யோக ரகசியங்களும், சிவப்பேற்றினை சீக்கிரமே அடைய விழைவும் நிழலாடின. முழு முதற் கடவுளான விநாயகனைத் தொழுது பூஜைகளை ஆரம்பித்தார்.
உடல் சற்றுக் குலுங்கியது. கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.
அகக் கண்ணில் அப்போது தான் “அந்தக் காட்சி” தெரிந்தது.

63 நாயன்மார்களில் இருவர், நம் ஒளவையாருக்கு உற்ற நண்பர்கள்.
தம்பிரான் தோழர் எனப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், மற்றும் அவர்தம் ஆப்த நண்பரான சேரமான் பெருமாள் நாயனார் – ஆகிய இருவருமே அந்த நண்பர்கள்.
“கைலாயம் செல்ல நேரம் வந்துவிட்டது, கிளம்பி வா”, என்று இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பணிக்க, இறைவன் அனுப்பிய குதிரையில், அவரும் கிளம்பி விட்டார்.
கிளம்பிய பின் தான், “அய்யோ, நண்பர் சேரமானையும் உடன் அழையாது கிளம்பி விட்டோமே” என்று மிகுந்த ஆதங்கப்பட்டார்.

ஆகா இது அல்லவோ நட்பு! வாழும் வரை கருத்து, எண்ணம், உணவு, பொருள் மற்றும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களைப் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் இறைவன் அருளிய பின், அந்த அருளையும் சேர்த்து நண்பனிடம் பகிர்ந்து கொள்ள முதலில் தோன்ற வேண்டுமே, அதைச் சொல்லுங்கள்!
பேருவகையில் தன்னையே மறக்கும் போதும், நட்பை மறக்க வில்லை பாருங்கள்!!

இந்த எண்ணம் ஒன்றே சேரமானை எட்டியது. (Telepathy??).
அவரும் உடனே அவருடைய வெள்ளைக் குதிரையில் ஏறி அமர்ந்து, அதன் காதுகளில் சிவ மந்திரம் ஜபிக்க, உடனே பரி பறந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகளை அடைந்தது. இனி இருவரும் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தனர்.

அப்போது தான் சேரமான், “அய்யோ, நண்பர் ஒளவையாரை உடன் அழையாது வந்து விட்டோமே” என்று தன் பங்குக்குக் கவலையுற்றார்.
அடடா, என்ன ஒரு நல்ல நண்பர்கள் செட்!! யாருக்கு வாய்க்கும் இப்படி!! ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நட்பு பாராட்டுகிறார்கள்.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.”
என்பது தானே இது!

இந்தக் காட்சி தான் ஒளவையார் மனத்திரையில் தெரிந்தது.
சற்றே துணுக்குற்றார். இரு நண்பர்களும் சென்று விட்ட பின், தான் மட்டும் தனிமையில் ஆழ்ந்து விடுவோமோ என்ற கலக்கம்.
குடுகுடு கிழவி கிடுகிடு என்று மந்திரங்களைச் சொல்லலானாள்.
நேரம் செல்லச் செல்ல, “பக்தியில் நாம் மட்டும் என்ன குறைந்து விட்டோம்” என்ற குழப்பம்! எப்போது பக்தியில் ஒப்பீடு வந்ததோ, அவ்வளவு தான்!! சும்மாவா சொன்னார்கள் “ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்”?

உடனே பூஜையை வேகம் வேகமாக முடிக்கப் பார்த்தார்.
மனமெல்லாம் எப்படியாவது அவர்களுடன் சேர்ந்து விட வேண்டும் என்று!
அப்போது மிகவும் கழிவிரக்கத்தில், “அய்யனே, கணபதியே, ஆண்டுகள் பல கடந்தும் பெற்ற ஞானம் கைகொடுக்க வில்லையே. பேதை போல் துடிக்கிறேனே! அறிவால் மட்டும் உன்னை அறிய இயலுமோ? இனி ஒன்றும் இல்லை! நின் தாள் சரண்! வித்தக விநாயக விரை கழல் சரணே!!” என்று சிரம் மேல் கரம் கூப்பினார்.

 


நம் கள்ளச் சிரிப்பு அழகன், கணேசனால், இதற்கு மேல் தாங்க முடியவில்லை. கண்ணாமூச்சி விளையாட்டில் பயந்து போன குழந்தைக்கு, தாய் உடனே வெளிவந்து விடுவது போல், தும்பிக்கையான் தோன்றினார் ஒளவையின் முன்!
“தமிழ்ப் பாட்டியே! சஞ்சலம் விடு. தொடங்கிய பூஜையை முறையாக முடித்திடு. அவர்கள் செல்லுமுன் உன்னை நான் கொண்டு சேர்க்கிறேன் கயிலையில்” என்று அபயம் அருளினார்.

ஒளவையும், மனச் சஞ்சலங்களை எல்லாம் விட்டு, “விநாயகர் அகவல்” என்ற அழகிய தமிழ் நூலால் பாடி, பூஜையை முடித்தாள்.
அவள் முடிக்கவும், விநாயகப் பெருமான் அவள் முன் தோன்றவும் சரியாக இருந்தது.
அலேக்!!!
தன் தும்பிக்கையால் ஒளவையைத் தூக்கினார். மண்ணில் இருந்து வி்ண்ணுக்கு மாற்றினார்.
கயிலை மலையில், பனிக்கொடு முடியில், ஈசனின் அடியில், கொண்டு நேரே நிறுத்தினார்.

ஈசனைப் பணிந்து ஒளவை, அவன் திருவடி நீழலில் நிற்கவும், நம் இரட்டை நண்பர்கள் கையிலையில் நுழையவும் சரியாக இருந்தது. சேரமான் திருக்கயிலாய ஞான உலா பாட, நண்பர்கள் மூவர் முகத்திலும் புன்னகை. மீண்டும் சேர்ந்ததில் மென்னகை. “ஈசன் எந்தை இணையடி நீழலில்” அனைவரும் இன்புற்று இருந்தனர்!

“ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முந் நாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையில் ஏகி”
என்று அருணகிரி இந்த அழகிய நிகழ்வைத் திருப்புகழில் குறித்து வைத்துள்ளார். (நாத விந்து கலாதீ என்ற பாடலில்)

அடுத்த பதிவில், விநாயகர் அகவலைச் சிறிதே சுவைப்போமா?
Read more »

Tuesday, September 19, 2006

அண்ணனுக்கு வணக்கம்!

உலகம் முழுமைக்கும் முதற் பொருளாய், முழுமைப் பொருளாய் விளங்கும் வேழ முகத்தான் பாதங்களைப் பற்றிக் கொண்டேன்.
இந்த புரட்டாசி மாதத்தில் என் தமிழ் பதிவுகளுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறேன்.
மங்கள நாயகனே, பக்கத் துணை இருந்து கூட்டிச் செல்வாய், எமைக் காப்புச் செய்வாய்!










நீ ரொம்ப சமத்து.
உலகத்தின் முழு முதல் கடவுளா இருந்தாலும் மஞ்சளைப் பிடிச்சு வெச்சா, வந்து இறங்கி விடுவாய்.
குழந்தைகளுக்குக் குதூகலமான நண்பனே! சிறுவருடன் சிறுவராய் விளையாடவும் செய்வாய்; பெரிய ஞானிகளைக் கைதூக்கி விடவும் செய்வாய்!

அப்படித் தான் ஒளவையாரை அலேக்காகத் தூக்கி, கயிலாய மலையின் மேல் நிறுத்திய உன் கருணையைச் சொல்வதே எனது அடுத்த பதிவு.

கதை மட்டும் போதுமா? தமிழும் வேண்டுமே! விநாயகர் அகவல் பற்றியும் பார்ப்போம்!

உயர்ந்த ஞான யோகத்தை, எளிய தமிழில், "கிடுகிடு" எனச் சொல்கிறாள் இந்த "குடுகுடு" ஒளவை.
ஏன் அவளுக்கு இந்த “கிடுகிடு” அவசரம்?
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP