Friday, December 29, 2006

தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்! - 3

முந்தைய பாகம் இங்கே!
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!
செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்!
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ! வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?

பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்தில், இன்று வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!
மோக்ஷ ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லுவார்கள்!
கீதை பிறந்ததும் இன்று தானே!
மூலவர் அரங்கநாதனுக்கு முத்தங்கி சேவை! உற்சவர் நம்பெருமாளுக்கோ ரத்னாங்கி சேவை!

நம்மைக் கடைத்தேற்றி, நம் விதி மாற்ற வந்தார் ஒருவர் - மாறன் சடகோபன்!
அவர் நம்முடைய ஆழ்வார், நம்மை உடைய-ஆழ்வார், நம்மாழ்வார்!
அவருக்காக இன்று மட்டும் திறக்கப்படும் வைகுந்த வாசல்.

குருநாதரின் தாளைப் பற்றிக் கொண்டு, தாயுடன் ஒட்டிக்கொண்ட குட்டியைப் போல், நாமும் நுழையலாம், வாங்க!
அவருடன் சேர்ந்து, நாம் எல்லாரும் நுழைவதே சொர்க்கவாசல் சேவை! உண்மையில், சொர்க்க வாசல் என்பதை விட வைகுந்த வாசல், பரமபத வாசல் என்று சொல்வது தான் பொருத்தமானது!

விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
நல்லோர் நெஞ்சமெல்லாம் நிறைய, நாதன் அரங்கன் அவன், சிம்ம கதி போட்டு வரும் அழகே அழகு!
அவன் நடை அழகு! திருக் குடை அழகு!
கீழே கண்குளிரக் கண்டு களியுங்கள் அரங்கனை!

TY03NAMPERUMAL
முன் அழகன், பரமபத வாசல் சேவை

பாயுநீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர்இதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியோர்க்கு அகல லாமே


63632967.Cg6l9Pbe
முன்னிலும் பின் அழகன், திருக்குடை அழகு!

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே!
அரங்கன் அடி முடி ஜொலிக்கக் காட்டப்படும் தசாவதாரக் கற்பூர தீப சேவை!


சரி, கதைக்கு வருவோம்!
சுவாமி புறப்பாடு மாலையில் நடந்து கொண்டு இருக்கிறது! வீதியுலா வருகிறான் இறைவன்! கூடவே நம்ம பிள்ளைப் பெருமாள் ஐயா அரங்கனுக்கு வியர்க்குமே என்று வெண்சாமரம் வீசிக் கொண்டு வருகிறார்;
கதிரவன் மறையும் நேரம்! பிள்ளையின் தோளில் யாரோ தட்டுகிறார்கள்! சடக்கென்று திரும்பிப் பார்க்கிறார்; வேற யாரு, நம்ம ரங்கன் தான்!

* பிள்ளைவாள், சந்தி செய்யும் நேரம் வந்து விட்டதே! நீங்க செய்யப் போகலியா?
அது எப்படி சுவாமி? நீங்க புறப்பாடு வந்து கொண்டு இருக்கிறீர்களே!
* அதனால் என்ன? என்னைத் நடுத்தெருவில் அப்படியே வைத்து விட்டுப் போங்கள்! சந்தியை முடித்து விட்டு வாருங்கள், மீண்டும் புறப்பாடு தொடரலாம்!
இது என்னடா இது? ரங்கனுக்குப் பைத்தியம் கியித்தியம் பிடித்து விட்டதா? என்ன உளறுகிறார் சுவாமி? யாராச்சும் சுவாமியை நடுத்தெருவில் விட்டுவிட்டு சந்தி செய்யப் போவார்களா?

* என்ன பிள்ளைவாள் யோசிக்கிறீர்? எனக்குச் சித்தம் கலங்கி விட்டது என்றா? ஹா ஹா! உம் கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்குமே!
விளங்கவில்லை சுவாமி! நான் தான் ஞான சூன்யம் என்று அப்போதே சொன்னேனே!

* சரி, நானே சொல்கிறேன். கேளுங்கள்!
சந்தி என்பது தினசரி தர்மம்; சுவாமிப் புறப்பாடு என்பது விசேட தர்மம்!
இன்று மாலை வேளையில் இந்தப் பெரிய தர்மத்துக்காக, அந்தச் சிறிய தினசரி தர்மத்தை ஒத்தி வைக்கிறீர் அல்லவா? - ஆமாம் சுவாமி!
* ஆனால் இப்படி தசரதரோ, பீஷ்மரோ, துரோணரோ செய்யவில்லை!

* தத்தம் தினசரி தர்மம் காப்பாற்ற வேண்டும் என்ற "நன்னலமான தன்னலத்தில்", பொதுநலனை எப்படியோ அவர்கள் மறந்து போனார்கள்! ஒருவருக்கோ கைகேயிக்குத் தந்த வாக்கு தர்மம் பெரிதாய்த் தோன்றியது! மற்றவருக்கோ உண்ட வீட்டுத் தர்மம்!

அதனால் என்னையே அம்போ என்று விட்டுவிட்டுப் போய் விட்டார்கள்!
அவர்கள் சிந்தித்துச் செயல்பட நானும் கொஞ்சம் நேரம் தந்தேன்! ஆனால் பாவம், அவர்களால் தர்ம சங்கடத்தில் இருந்து மீண்டுவர முடியவில்லை!
என்ன, புரிந்தாற் போல் இருக்கிறதா பிள்ளைவாள்? - லேசாகப் புரிகிறது ரங்கா!

renganatha

* ததிபாண்டன் பொய் தான் சொன்னான்; ஆனால் அவனுக்குப் பழி வந்தாலும் பரவாயில்லை என்று, எனக்காகத் துணிந்து சொன்னான்.
முன்பு கோபியர்கள் தங்கள் பாதம் பட்ட மண்ணை என் தலையில் பூசினார்கள் அல்லவா?
அவர்களுக்குப் பாவம் வந்தால் கூட பரவாயில்லை, என் நோய் தீர்ந்தால் போதும் என்ற ஒரு வாஞ்சை!
துரியோதனன் கூட அவன் காலடி மண்ணை என் தலையில் போடுவேன் என்று தான் கர்ஜித்தான்! இரண்டு வினைகளும் ஒன்று தானே! நோக்கம் தான் வேறு!
நீங்களே சொல்லுங்கள், அடியவன் என்னை மனத்தில் சுமந்தால், அவன் பாரத்தினை அடியேன் சுமக்க மாட்டேனா!

பிள்ளை வாய் அடைத்துப் போய்விட்டார்!
ஒன்றுமே பேச முடியவில்லை! கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்!
சுவாமி நீங்களே, உங்கள் திருவாயால், உங்களைப் போய் அடியேன் என்று சொல்கிறீரே. இது அழகா?
* பிள்ளாய், அடியவர்களுக்கு அன்பன் நான்;
அப்படி என்றால் அடியார்க்கு அடியான் தானே! உன் மனம் ஒப்பவில்லை என்றால், நீ மகாலக்ஷ்மியிடம் வேண்டுமானால் கேட்டுப் பார்!
அவள் காருண்ய லக்ஷ்மி, அவள் என்ன சொல்வாள் என்று பிள்ளைக்குத் தெரியாதா என்ன?

* ஜகத்குருவே நான் தான்! ஆனால் எனக்கே ராமானுஜர் குருவாக அமைய வில்லையா? அது போல் தான் அன்பருக்கு நான் அடியேன் ஆவதும்!
ராமானுஜர் முறைப்படுத்திக் கொடுத்தது தானே, நீங்கள் இப்போது என்னை அழைத்துச் செல்லும் இராப்பத்து உற்சவம்?
சரி யோசனையை விடுங்கள்! "அனுபவிக்குனும்; ஆராயக் கூடாது!" என்பது வலைப் பெரியோர் வாக்கு!

* வாருங்கள், தீந்தமிழ்ப் பாசுரங்கள் தொடங்கட்டும்!
ஆமாம், நம்மாழ்வாருக்கு ஓலை அனுப்பினேனே திருவரங்கம் வரச் சொல்லி! இன்னுமா அவர் வரவில்லை?
குருகூரில் இருந்து கிளம்பி விட்டாராம் சுவாமி! இதோ வந்து விடுவார்!

mohini_Srirangam

* சரி, எங்கே நான் அனுப்பிய இன்னொரு ராஜ ஓலையைப் படியுங்கள்!

"யாமே, உபய நாச்சியார்களோடு, ரத்ன சிம்மாசனத்தில் கொலுவிருந்து,
பகல்பத்து-ராப்பத்து நாட்களில், எல்லாத் தமிழ் வேதங்களையும்
செவிகுளிரக் கேட்கச் சித்தம்!
அது போழ்தினிலே எவ்வொருவரும் யாது மந்திரங்களையும், பாடல்களையும் தனியே சாற்ற வேண்டாம்!
கோதைத்தமிழ் மட்டுமே இதற்கு விலக்கு!

- (ராஜ முத்திரையுடன்) அரங்கத்தான் ஆணைப்படி!

* சரி, பல்லக்கைக் கொலு மண்டபத்துக்குத் தூக்கச் சொல்லுங்கள்!
நீங்களும் அங்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!
அப்படியே ஆகட்டும் ரங்கா, மன்னிக்கவும்; பேரரசே ரங்கராஜா!

யார் அங்கே?
அருள்பாடி ஸ்ரீபாதம் தூக்குவோஓஓஓஓஓஓஓஓஓர் - எங்கே?
அடியோம் இந்தோஓஓஓஓஓஓஓஓஓம்!
Read more »

Thursday, December 28, 2006

ரங்கா - அடியேன் உனக்கு அடியேன்! - 2

இதற்கு முந்தைய பதிவு இங்கே!

அகார உகார மகாரங்களின் சேர்க்கை "ஓம்"காரம். ஆங்காரம் அழிய ஒங்காரம் வேண்டும்! நண்பர் ஜிரா ஓங்காரம் பற்றி ஒரு நல்ல பதிவிட்டிருந்தார். அது அடியேனைப் போன்ற ஆன்மீக ஞானமில்லாத் தற்குறிகளுக்குப் புரியுமா?
அடியேனுக்குத் தெரிந்த ஓங்காரம் எல்லாம், பானைக்குள் இருந்து வரும் ஓங்கார சப்தம் தான்! என்னது, பானைக்குள் ஓங்காரமா? ஆம், ஆழ்வார் பாசுரக் காட்சி!


om-pots-krishna

குட்டிக் கண்ணன், வெண்ணெய் முழுதும் உண்டு விட்டு, காலி வெங்கலப் பானையை நடுக்கூடத்தில் வைத்துத் தட்டுகிறான்!
தோம் தோம் தோம் என்ற சப்தம் போய்,
ஓம் ஓம் ஓம் என்ற பிரணவ சப்தம் ஒலிக்கிறது!
பிரணவ மந்திரம் = அ+உ+ம்.
அதன் நடு நாயகமான உகாரம் = காத்தல் தொழில் அல்லவா?
காக்கும் கடவுள் பரந்தாமன், கண்ணன் தானே?
தெய்வக் குழந்தை ஓங்கார ஒலி கேட்டு, உகார சப்தத்தில் உவக்கின்றது!




நேற்று அரங்கத்தில் பிள்ளைப் பெருமாள் ஐயா, அரங்கனிடம் என்ன கேட்டார்? "பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தாயே" என்று கேட்டார்!
அதற்குப் பதில் ஆயர்ப்பாடியில் தான் உள்ளது. கண்ணனின் ஊரான ஆயர்ப்பாடிக்குப் போகலாம் வாருங்கள். ஆயர்ப்பாடிக்குப் போகணும்னா "விசா" வேண்டுமே! என்ன விசா? கோபியர்களைப் போல் குழந்தை மனம் வேண்டும். அது தான் அந்த விசா!

ஆயர்ப்பாடியில் அன்று சிறுவர்க்கு எல்லாம் ஒரே கும்மாளம்; கண்ணன் லாவகமாக வெண்ணெய் திருடி எல்லா நண்பர்களுக்கும் வாரி வாரிக் கொடுக்கிறான்.
ஒரு கோபிகையின் வீட்டில் நுழைகிறது மழலைப் பட்டாளம். கருப்புப் பானையில் மடக்கு போட்டு வெண்ணையை மூடி வைத்துள்ளார்கள்.
கையை விட்டான் கண்ணன்; வந்து விட்டாள் அந்தக் கோபிகை!
ஓடி விட்டனர் எல்லாரும். நம் கண்ணனும் ஓடியே போய் இரு பெரும் பானைகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டான்.

புறங்கையில் வெண்ணெய் ஒட்டிக் கொண்டுள்ளதே! அதை நக்கினான். உடனே, அங்கிருந்த மணி ஒன்று டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு என்று தானே அடிக்கிறது!
*அடேய் மணி! என்னைக் காட்டிக் கொடுக்கிறாயா என்று கேட்டது குழந்தை! - "இல்லை சுவாமி, அடியேன்!" என்கிறது அந்த மணி!

கண்ணன் மீண்டும் உண்ண, மணியோ மீண்டும் அடிக்கிறது!
*அடப்பாவி, "அடியேன்" என்று சொல்லிவிட்டு அடிக்கிறாயே!
சுவாமி நான் சொன்ன அடியேன் வேறு!
"மணியாகிய அடியேன்" என்று தான் சொன்னேனே தவிர "அடிக்க மாட்டேன்" என்று சொல்லவில்லையே! :-)
நீங்கள் உண்பது நிவேதனம் அல்லவா? அப்போது மணி ஒலிப்பது தானே என் கடமை! - ஹூஹூம், இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்து குழந்தை எழுந்து ஓடுகிறான்!




கோபிகை இதைப் பார்த்து விட்டாள்! அடே கண்ணா என்று துரத்திக் கொண்டே ஓடுகிறாள்! பின்னால் யசோதையும் வந்து விட்டாள்!
குழந்தை ஓடியே போய் ததிபாண்டன் என்றவன் வீட்டுக்குள் ஒளிகிறது!
ததிபாண்டன் இடையரில் கடையன்! தயிர்க் கடையன்.
படிப்பறிவு எல்லாம் கிடையாது! மிகவும் எளியன்! ஆனால் அன்பே உருவானவன்; அடிக்கக் கூட மாட்டான், மாட்டை!


dhathi-pandan

அவன் வீட்டிலோ எல்லாக் குடங்களிலும் தயிர் நிரம்பி வழிகிறது!
ஓரமாய் ஒரு காலிப் பானை தென்பட, குழந்தை அதற்குள் குதித்து ஒளிந்து கொள்கிறது! இதைத் ததிபாண்டன் பார்த்து விட்டான்!
பானை மேல் ஒரு மூங்கில் தட்டு போட்டு மூடி, அதன் மேல் சாய்ந்து கொண்டான்.

யசோதை: ததிபாண்டா, அந்தத் திருட்டுக் கண்ணன் இங்கே ஓடி வந்தானே! பாத்தியா? அவன் இன்று என்னிடம் அடி வாங்காமல் தப்பவே முடியாது, பார்க்கலாம்!
பாண்டன்: யசோதாம்மா, கண்ணனை நான் பாத்தே மாசக் கணக்குல ஆகுதே! இங்கு வர மாட்டேனே! என்னிடம் ஏற்கனவே ஒரு முறை பிடிபட்டான்; அதிலிருந்தே எனக்கும் அவனுக்கும் ஆகாது! - கூசாமல் பொய் சொன்னான்!

எல்லாரும் போய் விட்டார்கள்; ஆனால் பாண்டன் எழுந்திருக்கவே இல்லை!
* அடே பாண்டா, விலகு! எனக்கு மூச்சு முட்டுது என்று குழந்தை பானையில் இருந்து குத்துகிறது!
கண்ணா, உனக்குப் பானையில் இருந்து விடுதலை வேணும்னா, எனக்கும் நீ விடுதலை கொடுக்க வேணும்! மோட்சம் என்ற விடுதலை கொடுக்க வேணும்!

* என்னது மோட்சமா? மோட்சம் என்றால் உனக்கு என்னன்னு தெரியுமா?
எல்லாம் தெரியும்! கோவிலில் அந்த நாமக்காரப் பூசாரி சொல்வாரே! சாமி கூடவே இருக்கலாம் என்று! அது தானே எனக்கும் வேணும்!
சும்மா கேள்வி எல்லாம் கேட்காதே கண்ணா! பிறவி என்கிற பானையிலிருந்து எனக்கு மோட்சம் வேண்டும்; உன்னால் கொடுக்க முடியுமா? முடியாதா??


paanai-moksham

* ததி பாண்டா, சற்று முன்னர் கூசாது பொய் சொன்ன உனக்கா மோட்சம்?
உனக்கு மட்டும் என்ன? இந்தப் பானைக்கும் சேர்த்தே கொடுப்பேன் மோட்சம்!

கண்ணன் பானைக்குள் இருந்து எழுகிறான்!
அவன் வாக்கை மெய்யாக்க, வைகுந்த விமானம் வருகிறது; பாண்டனையும், பானையும் சேர்த்தே ஏற்றிக் கொள்கிறது! ஆச்சாரியர்கள் தங்கள் வியாக்யானத்தில், "வைகுந்தம் சென்றால், இப்போதும் அந்தப் பானையைக் காணலாம்", என்று சுவைபட உரைப்பார்கள்!




இந்த நிகழ்ச்சியைத் தான் பிள்ளைப் பெருமாள் ஐயா சொல்கிறார்.
"பொய் சொன்னவனுக்குத் தானே நீ அன்று மோட்சம் கொடுத்தாய்?" என்று உரிமையாக, கோபத்துடன் கேட்டார்!
பெருசா என்னைப் பாத்து, பக்தி செய்தாயா, சரணாகதி செய்தாயா என்று எல்லாம் கேள்வி கேட்டாயே ரங்கா! அந்தப் பாண்டனோ இல்லை பானையோ பக்தி பண்ணியதா? கர்ம யோகம் செய்ததா?

சரணாகதின்னா என்னன்னு அதுக்கு மட்டும் தெரியுமா? உன்னை வணங்க அதற்குக் கைகள் தான் உண்டா? அதற்குத் தரவில்லை நீ மோட்சம்? அடியேன் ஒரு பானை விலை கூடவா பெற மாட்டேன்?

அரங்கன் அசந்து போய் விட்டான்! பின்னே இப்படி கிடுக்கிப்பிடி போட்டால்!
* பிள்ளையே! மோட்சத்தை விட ருசியான ஒன்றை உமக்குத் தருகிறேன்.
அது தான் தமிழ்ச்சுவை!
அதை உண்ணத் தான் நானே, இங்கே துயில் கொண்டு இருக்கிறேன்!
நீவிர், பராசர பட்டரின் சீடராய் இருந்து, அட்டப் பிரபந்தம்-(கலம்பகம், மாலை, அந்தாதி, ஊசல்) என்னும் அரும் பெரும் தமிழ் நூல் செய்து, பின்னர் எம்மை வந்து அடைவீராக என்று அருளினான்.


624%20SRGM%20VIMANA

பிள்ளை மகிழ்ந்து விட்டார்; ஆனாலும் விடவில்லை!
ரங்கா என் கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்லையே!
மெத்தப் படித்த தசரதன், தர்ம நியாயங்கள் எல்லாம் பேசி, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிரையே விட்டானே! அவனுக்கு வெறும் சொர்க்கம் தானே கிட்டியது!
படிப்பு வாசமே இல்லாத பாண்டன்! கூசாது சொன்ன பொய்க்கு பேசாது அருளினாயே மோட்சம்! அது ஏன்?

* பிள்ளைப் பெருமாள் ஐயாவே! தசரதன் என்றில்லை; பீஷ்மர், துரோணருக்கும் இப்படித் தான் கிட்டியது! தெரியுமா?
இன்றோடு பகல் பத்து முடிகிறது!
நாளை மோட்ச ஏகாதசி என்று போற்றப்படும் வைகுந்த ஏகாதசி அல்லவா? மேலும் கீதை பிறந்த நாளாயிற்றே!
அன்று உன் சந்தேகம் தீர்க்கிறேன்! இராப்பத்தில் இயம்புகிறேன்! சரியா?
சரி, சரி நீர் பேசினது போதும்! எனக்கு அலங்காரம் ஆகட்டும்!
அடியவர் கண்ணுக்கு எல்லாம் நான் அழகாகத் தெரிய வேண்டும் அல்லவா?
Read more »

Wednesday, December 27, 2006

பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!! - 1

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?=திருவரங்கம்.

திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.

ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.
அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து, அப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள். பின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்!
அதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்!

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!
(- தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

அரங்கன் அரங்கத்துக்கே அரசன்! எந்த அரங்கம்? திருவரங்கமா? இல்லை இல்லை!
உலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்; அந்த அரங்கத்துக்கு அரசன்! அவன் குடிகள் நாம் எல்லோரும்!

ரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;

அழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி ஊரே கொண்டாடி மகிழும் விழா! மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்!

அதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா! = திருவாய்மொழித் திருநாள்

என்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்!


சரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,
குட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,
வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி

பள்ளி கொண்டுள்ளான் அரங்கன்.

அவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய அர்ச்சகர். அவ்வளவு தான்.

அவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.
தன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.
ஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்: "ரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்!"

அரங்கன்: "என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது?"

"எனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா! எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா? எனக்கு நீ கொடுக்க மாட்டாயா?"

"சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா?"

"இல்லை, சுவாமி!"

* சரி, ஞான யோகம்?"

"அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்!"

"* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா?"

"அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே!"

"* ஹூம்ம்ம்ம்ம்ம்; சரணாகதி செய்திருக்கிறீரா?"

"அச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி."

"* சரி போகிறது! ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா?"

"பசித்த பலருக்கு அப்பப்போ சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் பார்த்து சோறிட்டது இல்லை சுவாமி"

* என்ன இது இப்படிச் சொல்கிறீர்? சரி, போனால் போகட்டும்! என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா?"

"இல்லை சுவாமி! நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்!"



வந்ததே கோபம் ரங்கநாதருக்கு! எழுந்து உட்கார்ந்தார்!
நாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம்! அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே!

"* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள்? என்ன அக்ரமம்! மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே! மோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா? ஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்?"

இதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
பெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது! அடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள்! இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்!

பிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.
"ரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்?
உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?...
அன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ!..."
என்று கேட்டாரே ஒரு கேள்வி!

அதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்!
இன்று வரை எழுந்திருக்கவே இல்லை!
அப்படி என்ன தான் கேள்வி கேட்டார்?....
சற்றுப் பொறுங்கள்! அடுத்த பதிவில்!!

வைகுந்த ஏகாதசி Dec 30 (மார்கழி 15) அன்று வருகிறது!
அதையொட்டி தினம் ஒரு தொடராக ஐந்து பதிவுகள் இடலாம் என்று எண்ணம்.
இந்தக் கதையை ஒட்டி, தமிழ் விழா, அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,
இறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.
இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் காணலாம், வாங்க!
Read more »

Sunday, December 24, 2006

கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்! எத்தனை மகிழ்ச்சி!

சிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;
அன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்!

வீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண ஒளி சுற்றும்!
அட்டைப்பெட்டியால் ஆன அழகிய குடில். அதற்குள் மின் விளக்கு பொருத்தித் தருவார் எங்கள் சித்தப்பா. ஒன்று மின்னி இன்னொன்று மறையும்!



முனுசாமி அண்ணா கடையில் இருந்து வைக்கோல் கட்டு கொண்டு வருவோம்;
யோசோப்பு, மரியாள், ஆயர் எல்லாரும் இருப்பர்;
பின்னாளில் பக்கத்து வீட்டு மோகன் அண்ணா-ஷீலா ஆண்ட்டி, தேவதூதர், மூன்று ஞானிகள் போன்ற பொம்மைகளை வாங்கிக் கொடுத்தார்கள்.
குழந்தை இயேசு பொம்மை, தன் இரு கைகளை மேலுக்கு விரித்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும்.

வைக்கோல் குழந்தைக்குக் குத்துமே!
ஆண்ட்டி வெல்வெட் துணியில் குட்டி மெத்தை தைத்துக் கொடுத்தார்கள், குட்டிப் பாப்பாவிற்கு!

செந்தில் என்ற சிறுவன், பொம்மை இடத்தை விட்டு அந்தாண்ட இந்தாண்ட வரமாட்டான்! கேட்டால் கெட்டவர்கள் குழந்தையைக் கொல்ல வந்து விடுவார்கள் என்று சொல்லுவான்! எப்போதோ கேட்ட கண்ணன் கதையை இதோடு கலந்து விடுவான்! அப்படியே கெட்டவர்கள் வந்தாலும் குழந்தை அவர்களை எல்லாம் உதைத்து விடும்; வண்டிச் சக்கரத்தை நொறுக்கி விடும்! பேயிடம் பால் குடிப்பது போல் அவளை அழித்து விடும் என்றெல்லாம் சொல்லுவான்!
நாங்களும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்வோம்; ஏன் என்றால் அவன் தான் எங்களை விடப் பெரியவன்.

ஆடு, பசு மாடு பொம்மைகள் நிறைய! மயில் பொம்மைகளும் உண்டு!
இந்தப் பொம்மைகள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனுக்கு அருகில் சிரித்துக் கொண்டு இருக்கும்.
கிறிஸ்துமஸ் அன்றோ, குழ்ந்தை இயேசுவின் பக்கத்தில் சிரித்துக் கொண்டு இருக்கும்.

இப்படி பொம்மைகளாகவோ, ஆடு மாடுகளாகவோ இருந்து விட்டால், உலகில் பிரச்சனை என்பதே இருக்காதோ! :-)
அவற்றுக்கு ஆயர்ப்பாடியும் ஒன்றே! நல்ல மேய்ப்பனும் ஒன்றே!
மேய்ப்பனாகிய சிறுவன் கண்ணன்!
அன்பு ஒன்று தான் இந்தப் பசுக்களுக்கு எல்லாம் வேதம்.
அவன் வேணு கானமே கீதம்!

இரவில் தூங்கும் போதும், குடிலில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும்!
அப்பப்ப எழுந்து அந்தக் குழந்தை பத்திரமாக உள்ளதா என்று ஒரு எட்டு எட்டிப் பார்த்துக் கொள்வோம்!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!



கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியத்தில், குழந்தை இயேசுவின் பிறப்பு:

துல்லிய பட்டுப் போன்ற தூயவள் மரியாள் கையில்
மெல்லிய பாலன் இயேசு விளக்கெனப் புன்ன கைத்தான்!
நல்லவர் உள்ளம் போல நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லை என்னாத வாறு இருகரம் விரித்து நின்றான்!

மாளிகைச் செல்வம் தோற்கும் மாணிக்கத் தொட்டில் தோற்கும்
தூளி இல்லாத போதும் தூங்கினான் பாலன் இயேசு!
வாழிய என்றார் தூதர்! வணங்கியே நின்றார் ஆயர்!
நாழிகை செல்லச் செல்ல, நல்லொளி மேலும் பல்கும்!

மத்தேயு 1:23

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
Read more »

Tuesday, December 19, 2006

அனுமனுக்கு மூல நட்சத்திரம்!

இன்று ஹனுமத் ஜெயந்தி (Dec 20); மார்கழி மாதம், மூல நட்சத்திரம் அனுமனின் (மறு) பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது!
"ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்" என்று சிலர் உளறுவதைக் கேட்டிருப்பீர்கள் :-)
இங்கே அனுமன் ஆண் மூலம். அரசாண்டானா? இல்லையே!
அடக்கமான அன்புத் தொண்டனாகத் தானே இருந்தான்!


எகனை மொகனையா யாரோ சொல்லப் போய், இந்த மூல நட்சத்திரப் பெண்கள் (நடுத்தர வர்க்கப் பெண்கள்) பலர் படும் பாடு, பாவம் சொல்லி மாளாது!
சரியா எதுவும் புரிஞ்சுக்காம சில பெரியவங்களும் இதுக்கு உடந்தையா இருக்காங்க! இது மாறனும்...நல்ல விழிப்புணர்ச்சி ஏற்படுத்தனும்.
அட்சய திருதியை-ன்னா என்னான்னே தெரியாம இருந்த பலர், பணம் நகை என்றவுடனே இப்பத் தெரிஞ்சிக்கலையா?
அது தெரியும் போது இதையும் தெரிஞ்சுக்க வைக்கலாமே. :-)))


சரி, ஹனுமத் ஜெயந்திக்கு வருவோம்!
ஆண்டவன் பெருமையைச் சொல்வது எளிது! ஆனால் அடியவர் பெருமையைச் சொல்வது அரிதிலும் அரிது!!
"பெரியது எது என்று கேட்கும் வேலவா.....தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே", என்று திருவிளையாடல் படத்தில் ஒளவையார் பாட்டில் வருமே! கேட்டு இருக்கிறீர்களா?

இராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், இராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை!
ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு பாகம் உள்ளது!
சுந்தர காண்டம்!
இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!

அனுமனை விரும்பாதார் தான் யார்?
வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலை - இப்படி மாலை மரியாதைகள் தான் என்ன?
சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு?
ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கிடைக்குமா?

படங்களுக்கு நன்றி: BG Sharma

சீ்தையின் உயிரைக் காத்தான் - விரக்தி/தற்கொலையில் இருந்து!
இலக்குவன் உயிரைக் காத்தான் - கொடிய நாக பாசத்தில் இருந்து!
பரதன் உயிரைக் காத்தான் - தீ மூட்டி மாய்த்துக் கொள்வதில் இருந்து!
இப்படி எல்லோரையும் காத்து, ராமனையே காத்தான்! உயிர் காப்பான் தோழன் அல்லவா?

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல!
மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான் என்பது தெரியுமா? 'மல்யுத்த வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்', என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார்.
அதனால் தான் இராமாநுஜர், 'தோற்றத்தை வைத்து அடியவரை எடை போடக் கூடாது' என்பதை மிக உறுதியாக விதித்தார்.
இப்பேர்பட்ட அனுமன் பிறந்த இடம்: திருமலை திருப்பதி, அஞ்சனாத்ரியில்!



அனுமனைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசித்தால், யோசனை நீண்டு கொண்டே தான் போகிறது!
அதனால் கவிச் சக்ரவர்த்தி கம்பரின் அழகுத் தமிழ்ப் பாடல் ஒன்றினால் அனுமனைத் துதி செய்யலாம் இன்று! வாருங்கள்!!

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
, அவன் எம்மை அளித்துக் காப்பான்!


இது என்ன அஞ்சு அஞ்சாகப் பாடுகிறாரே கம்பர் என்று பார்க்கிறீர்களா?
(தலைவர் படத்தில் எட்டு எட்டாகப் பாடியதை நினைவில் வையுங்கள்...
தமிழ் மணத்தில் ஆறு விளையாட்டு விளையாடும் போது, கம்பர் அஞ்சு விளையாட்டு விளையாடக் கூடாதா என்ன?:-)

இது பஞ்ச பூதப் பாடல்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் = அஞ்சிலே ஒன்று காற்று; வாயு! அவன் புதல்வன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி = அஞ்சிலே ஒன்று நீர்; கடல்! அந்தக் கடலைத் தாண்டிச் சென்று அன்னையைச் சேவித்தவன் அனுமன்.

அஞ்சிலே ஒன்று ஆறாக = அஞ்சிலே ஒன்று ஆகாயம்; அந்த ஆகாயத்தின் வழியாகப் பறந்தான்! யாருக்காக?
ஆரியர்க்காக ஏகி = அருமையான இயல்பு கொண்டவன் இராமன்; அவனுக்காக ஏகினான்.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு = அஞ்சி்லே ஒன்று பூமி்; மண்! அந்த மண்ணிலே தோன்றிய அணங்கு (பெண்) சீதை!
கண்டு அயலார் ஊரில் = அவளைக் கண்டு, அயலார் ஊரான இலங்கை நகரத்தில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அஞ்சி்லே ஒன்று நெருப்பு; தீ! அந்தத் தீயை அவனுக்கு வைக்கப் பார்த்தனர்; அதை அவர்களுக்கே வைத்தான் அனுமன்.
அவன் எம்மை அளித்துக் காப்பான் = அந்த அனுமன், பஞ்ச பூதங்களால் ஆன என்னையே, எனக்கு அளித்துக் காப்பான்!

அது எப்படி என்னையே எனக்கு அளிப்பான்?
அந்தராத்மா என்கிற நான்; அங்கு இதய கமல வாசம் செய்பவன் இறைவன்;
அனுமனின் இதய கமலத்தில் இராமன்.
இப்படி ஆழ் மனதில் புதைந்துள்ள இறைவனையே நமக்குக் கொண்டு வந்து அளிப்பவன் தான் அனுமன்.
என்னை எனக்கு அளிப்பான்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஞ்சநேயா!
பிறந்த நாள் வணக்கங்கள் ஆஞ்சநேயா!


திருநெல்வேலி சஞ்சீவி ஆஞ்சநேயர்

Read more »

Monday, December 11, 2006

குறையொன்றுமுண்டோ? - எம்.எஸ்.நினைவு நாள்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்; Behind every successful man there is a Woman! என்பார்கள்.
ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால், ஆண் பக்க பலமாக இருந்தார். Behind a successful woman, there was a Man!
யார் என்று உங்களுக்கே தெரியாதா என்ன?
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - கல்கி சதாசிவம் தம்பதியரே அவர்கள்!
இன்று பாரத ரத்னா,எம்.எஸ் அம்மாவின் நினைவு நாள் (Dec 12).

தமிழிசைக்கு அவர்கள் இருவரும் புரிந்த தொண்டு மகத்தானது.
முன்னணியில் எம்.எஸ். தமிழிசைப் பாடல்கள் பாடினாலும்,
பின்னணியில் அதைச் சேகரித்து, அதுவும் பக்தி இசைப் பாடல்களாகப் பார்த்து பார்த்துச் சேகரித்து, பிரபலமாக்கியதில் சதாசிவம் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்.
தமிழிசை சற்றே தழைக்க ஆரம்பித்த காலத்தில், தயக்கமே இன்றி, துணிவுடன் அதற்கு இசைந்த ஒரு சில கலைஞர்களில் எம்.எஸ். ஒருவர்!

இசையையும் தாண்டி, ஆன்மீகத்திலும், மனித நேயத்திலும் இவர் செய்த பணிகள் தான், நம் தலைவர் அப்துல் கலாம் அவர்களை எம்.எஸ் பால் ஈர்த்தது!
பல கச்சேரியின் சன்மானங்களை எல்லாம் மேடையிலேயே மனித நேய நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும் வழக்கம்! அதுவும் பல பேருக்குத் தெரியாது!

நாம் எல்லாம் ஆபிசில் ஒரு பொன்னாடை போட்டாலோ, மலர்க் கொத்து தந்தாலோ, மறக்காமல் கிப்ட் வ்ராப்பிங்கோடு வீட்டுக்கு எடுத்து வரும் பார்ட்டிகள்!
அதுவும் பெண்கள் இது போன்ற சின்னச்சின்ன சந்தோஷங்களை எல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று வேடிக்கைக்குச் சிலர் சொல்வார்கள்! ஆனால் எம்.எஸ்-ஐப் பாருங்கள்!


சென்னைக் கோட்டூரில் இவர் இல்லத்தைப் பார்த்தால் வாய் அடைத்துப் போவீர்கள்; ஒரு பெரிய பாடகியின் வீடா இவ்வளவு எளிமையானது என்று! வீடு மட்டுமா எளிமை? இன்று சிலரைப் போல, ஆளை அடிக்கும் பட்டோ, நகையோ பிரதானமாகவே தெரியாது;
அலங்காரத்தை விட ஐச்வர்யம் அல்லவா மோலோங்கி இருக்கும்!


கீழே "குறையொன்றுமில்லை" வீடியோ!
பலர் ஏற்கனவே youtube-இல் பார்த்து இருக்கலாம்!
இருப்பினும், இன்று அவர் நினைவு நாளில் மீண்டும் ஒரு முறை லயித்துக் கேட்போம்!
திருமலைவாசன் மேல் எம்.எஸ் உருகி உருகிப் பாடியது!
அது சரி, யார் இந்தப் பாட்டை முதலில் பாடியது தெரியுமா?
சூடிக் கொடுத்த சுடர் கோதை, ஆண்டாள்!

ராஜாஜி எழுதிய எளிமையான தமிழ்ப்பாடல்; அதை எப்படி ஆண்டாள் பாடி இருக்க முடியும் என்கிறீர்களா?
"குறையொன்றுமில்லாத கோவிந்தா,
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!"
என்று அவள் தான், முதன் முதலாக இதற்கு அடி எடுத்துக் கொடுக்கிறாள்! நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள் இதை! :-)


வீடியோவின் கடைசிக் கட்டத்தில் தன் இரு கைகளையும் தோளுக்கு அருகே எடுத்துச் சென்று, சங்கு சக்கரம் போல் வைத்து,
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

"ஒன்றும் குறையில்லை, ஒன்றும் குறையில்லை" என்று எம்.எஸ் உருகுவதைக் காணத் தவறாதீர்கள்!



பாடல் வரிகள் வேண்டுமென்றால், இங்கே செல்லவும்!
எம்.எஸ் அவர்களுக்கு, அவர் எம்பெருமான் ஊரான திருப்பதியில், ஆந்திர அரசு சிலை எடுத்துப் போற்றியது!

வாழ்க நீ அம்மா! வாழியே தமிழிசை!
வாழி அவன் மலரடியில், நீங்காது வாழியே!



(கீழே அவர் வாழ்க்கைச் சுருக்கம் படமாக உள்ளது; 00:05:03)
Read more »

Sunday, December 10, 2006

கணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி

Dec 11, பாரதி பிறந்த நாள்;
முன்னொரு முறை, திருமதி செல்லம்மாள் பாரதி, தில்லி வானொலியில் ஆற்றிய உரையின் பகுதிகள் கீழே.



எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!
என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.
மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.


சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள்.
ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம்.
அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார்.

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை.
என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை.
அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது.
மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களி்லிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன்.


கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.
"கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்.
மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக,
ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார்.
அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது!
நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும்.
அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு!

------------------------------------------------

நன்றி: பாரதியார் சரித்திரம் - அமுதசுரபி, தமிழ் Sify
பட உதவி: சென்னை அருங்காட்சியகப் படங்க
ள்



ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!


மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!



‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.

பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணார்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,


பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
Read more »

Thursday, December 07, 2006

புதிரா? புனிதமா?? - பாகம் 3

----------------------------------------------------------------------------------------------
விடைகள் பதிப்பிக்கப்பட்டன! சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்! முடிவுகள் இதோ! (தாமதத்திற்கு மன்னிக்கவும்; பணி மிகுதியால், மாலையில் இப்பக்கம் வரவே முடியவில்லை.)

ஜெயஸ்ரீ, கொத்ஸ்
குமரன், SK, இராமநாதன்
ஜிரா
ஆகியோர் சிறப்பான விடைகளைச் சொல்லி இருக்காங்க!
இம்முறை 2&10 கேள்விகள் சற்று subjectiveஆக உள்ளதால், வரிசைப்படுத்தவில்லை. ஜிராவின் விளக்கங்களையும் பதிவின் இறுதியில் காணவும்!

பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வென்றவர்க்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!!

அடுத்தது?
கள்ளச் சிரிப்புக் குழந்தை கண்ணன்!!
தலங்கள் பற்றிய கேள்விகள் வேண்டுமா இல்லை பாத்திரப் படைப்புகள் மட்டும் வேண்டுமா? இல்லை எப்போதும் போல் இரண்டும் கலந்தா?
----------------------------------------------------------------------------------------------


இந்நேரம் இந்தத் தலைப்பு நம் எல்லாருக்கும் பழகி விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்! இன்றைய கேள்விகள் ஒரு உலக மகா அழகனைப் பற்றி!
வேறு யார்? எல்லாம் நம் குமரன் தான்! தமிழ்மணம் என்றுமே கமழாதா என்ன குமரனிடம்!
முருகப்பெருமானைச் சொன்னேன் ஐயா! :-)

வழக்கமான விளையாட்டு விதிகள் தான் இப்போதும்! கூகுளைக் கூடக் கலந்து பேசலாம்;
ஆனா நம்ம ஜிரா கிட்ட மட்டும் யாரும் பிட் அடிக்க அனுமதி இல்லை! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி)


1திருச்செந்தூர் முருகனை வேண்டிப், பன்னீர் இலை விபூதியால் தன் வயிற்று வலி தீர்ந்து, சுப்ரமண்ய புஜங்கம் என்ற நூலைப் பாடிய அடியவர் யார்?

1

அ) அருணகிரிநாதர்
ஆ) ஆதி சங்கரர்
இ) குமரகுருபரர்
ஈ) முத்துசுவாமி தீட்சிதர்

2

முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் கருதப்படுவது எது?

2

அ) கிருத்திகை
ஆ) பூசம்
இ) விசாகம்
ஈ) திருவோணம்

3

முருகனின் ஐந்தாம் படை வீடாக நக்கீரர் குறிப்பிடுவது எது?

3

அ) குன்றுதோறாடல்
ஆ) திருவேரகம் (சுவாமிமலை)
இ) திருத்தணிகை
ஈ) பழமுதிர்சோலை

4

இலங்கையில் முருக பக்தி அதிகம். அங்கு உள்ள ஒரு முருகன் திருத்தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், மற்றும் இஸ்லாமியர் ஆகியோர் தம் தம் கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். எந்தத் தலம்?

4

அ) நல்லூர்
ஆ) மண்டூர்
இ) கதிர்காமம்
ஈ) தந்தமலை

5

பொதுவாக அம்மன் கோவில்களில் புற்று இருக்கும். ஆனால் இங்கு முருகன் கோவிலில் புற்று, அதுவும் கருவறைக்கு உள்ளேயே உள்ளது. அந்த மண்ணையே நீறு போல் பிரசாதமாகவும் தருகின்றனர். எங்கு?

5

அ) வள்ளிமலை
ஆ) திருநாகேஸ்வரம்
இ) விராலிமலை
ஈ) சுப்ரமண்யா

6இன்று மிகப் பிரபலமாகப் பாடப்படும் கந்த சஷ்டிக் கவசத்தை எழுதியது யார்?6

அ) நக்கீரர்
ஆ) கச்சியப்ப சிவாச்சாரியார்
இ) தேவராயசுவாமிகள்
ஈ) அருணகிரிநாதர்

7

தாயிடம் வேல் வாங்கிச் சூரனை அழித்தான் முருகன். கந்த சஷ்டி விழாவில், இந்த வேல் வாங்கும் போது, சக்தி வேலின் வீரியத்தால், முருகனின் திருமேனி வியர்த்து தெப்பமாய் நனைந்து விடும்! அர்ச்சகர்களும் துணியால் துடைத்துப் பிழிவர்! எந்தத் தலம்?

7

அ) திருச்செந்தூர்
ஆ) திருப்பரங்குன்றம்
இ) சிக்கல்
ஈ) மருதமலை

8

இராமாயணத்தில் இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை

அதே போல் முருகனின் கதையில் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன், _____? (இந்தக் கேள்விக்கு நோ சாய்ஸ்)

8

9

முருகனே வந்து நூல் ஆதாரம் காட்டி, அரங்கேற்றத்துக்கு உதவி செய்த நூல் எது?

9

அ) திருமுருகாற்றுப்படை ஆ) கந்தபுராணம்
இ) காவடிச்சிந்து
ஈ) திருப்புகழ்

10ஈசனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறையும் தாங்கிய முதல் அன்பர் யார்?

10

அ) கார்த்திகைப் பெண்கள்
ஆ) அக்னி
இ) வாயு
ஈ) வீரபாகு




இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!



1 அ) அருணகிரிநாதர் ஆ) ஆதி சங்கரர் இ) குமரகுருபரர் ஈ) முத்துசுவாமி தீட்சிதர்

2 அ) கிருத்திகை ஆ) பூசம் இ) விசாகம் ஈ) திருவோணம்

3 அ) குன்றுதோறாடல் ஆ) திருவேரகம் (சுவாமிமலை) இ) திருத்தணிகை ஈ) பழமுதிர்சோலை

4 அ) நல்லூர் ஆ) மண்டூர் இ) கதிர்காமம் ஈ) தந்தமலை

5 அ) வள்ளிமலைஆ) திருநாகேஸ்வரம்இ) விராலிமலை ஈ) சுப்ரமண்யா

6 அ) நக்கீரர் ஆ) கச்சியப்ப சிவாச்சாரியார் இ) தேவராய சுவாமிகள் ஈ) அருணகிரிநாதர்

7 அ) திருச்செந்தூர் ஆ) திருப்பரங்குன்றம் இ) சிக்கல் ஈ) மருதமலை

8

9 அ) திருமுருகாற்றுப்படைஆ) கந்தபுராணம் இ) காவடிச்சிந்து ஈ) திருப்புகழ்

10 அ) கார்த்திகைப் பெண்கள் ஆ) அக்னி இ) வாயு ஈ) வீரபாகு



----------------------------------------------------------------------------------------------

விடைகள் இதோ:

1திருச்செந்தூர் முருகனை வேண்டிப், பன்னீர் இலை விபூதியால் தன் வயிற்று வலி தீர்ந்து, சுப்ரமண்ய புஜங்கம் என்ற நூலைப் பாடிய அடியவர் யார்?

ஆ) ஆதி சங்கரர்
இவர் தான் திருச்செந்தூர் வந்த போது, தன் வலி தீர புஜங்கம் பாடினார்!
"மயூராதிரூடம் மகா வாக்ய கூடம்" என்ற பாடல்.

திருச்செந்தூரில் பன்னீர் இலையில் வைத்து மடித்து, திருநீறு தருவது மரபு. வாசம் மிக்க விபூதியை நாள் எல்லாம் மேனியில் தரிக்கலாம்

2

முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் கருதப்படுவது எது?

இ) விசாகம்
வைகாசி விசாகம் தான் அவதார தினம் என்பது பரவலான கருத்து.

3

முருகனின் ஐந்தாம் படை வீடாக நக்கீரர் குறிப்பிடுவது எது?

அ) குன்றுதோறாடல்
"பதி எங்கிலும் இருந்து விளையாடி, பல குன்றில் அமர்ந்த பெருமாளே" என்று திருப்புகழ் சொல்வதும் இதையே.

இன்றைய கால கட்டத்தில் திருத்தணிகை ஐந்தாம் படை வீடாகக் கொள்ளப்பட்டாலும், நக்கீரர் குறிப்பது குன்றுதோறாடல் தான்.

4

இலங்கையில் முருக பக்தி அதிகம். அங்கு உள்ள ஒரு முருகன் திருத்தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், மற்றும் இஸ்லாமியர் ஆகியோர் தம் தம் கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். எந்தத் தலம்?

இ) கதிர்காமம்

இன்றும் இந்த மூன்று மதத்தினரும் வழிபடும் தலம் இது.

பெளத்தர்கள் மகாசேனா, போதிசத்துவர் ரூபமாகவும்,

இஸ்லாமியர்கள் அல் கதிர் என்ற இறைத்தூதர் நினைவாகவும் வழிபடும் தலம்;

முருக வழிபாடும் உருவமாய் இல்லாது, திரையுடன் கூடிய அறுகோண யந்திரமாக உள்ளது. கதிர்காமப் பாத யாத்திரையும், ஈசால விழாவும் அனைவரும் கொண்டாடுகிறார்கள்.

5

பொதுவாக அம்மன் கோவில்களில் புற்று இருக்கும். ஆனால் இங்கு முருகன் கோவிலில் புற்று, அதுவும் கருவறைக்கு உள்ளேயே உள்ளது. அந்த மண்ணையே நீறு போல் பிரசாதமாகவும் தருகின்றனர். எங்கு?

ஈ) சுப்ரமண்யா

முருகனை நாக உருவத்தில் வழிபடுவதும் இங்கே தான்; ஆதி தலத்தில் இப்படியும், குக்கே என்னும் ஊரில் மயில் மீது அமர்ந்த நிலையிலும் வழிபடுகிறார்கள்.

6இன்று மிகப் பிரபலமாகப் பாடப்படும் கந்த சஷ்டிக் கவசத்தை எழுதியது யார்?

இ) தேவராய சுவாமிகள்

"பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக், காலையில் மாலையில் கருத்துடன் நாளும், ஓதியே ஜெபித்து" என்று கவசத்திலேயே அவர் பெயர் வருமே!

7

தாயிடம் வேல் வாங்கிச் சூரனை அழித்தான் முருகன். கந்த சஷ்டி விழாவில், இந்த வேல் வாங்கும் போது, சக்தி வேலின் வீரியத்தால், முருகனின் திருமேனி வியர்த்து தெப்பமாய் நனைந்து விடும்! அர்ச்சகர்களும் துணியால் துடைத்துப் பிழிவர்! எந்தத் தலம்?

இ) சிக்கல்
ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி வேல் வாங்கும் விழாவில் தான் இந்த அற்புதம் நிகழ்கிறது! சிக்கல் சிங்காரவேலர் சந்நிதி நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது.

8

இராமாயணத்தில் இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை

அதே போல் முருகனின் கதையில் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன், _____? (இந்தக் கேள்விக்கு நோ சாய்ஸ்)

8 அசமுகி (அஜமுகி)

சூரனின் தங்கை; இந்திராணியைக் கவர்ந்து, அவள் அண்ணனுக்குக் கொடுக்க எண்ணுகிறாள். அப்போது இந்திராணியின் காவல் பூத கணங்களால் கை அறு படுகிறாள்; ஆட்டுத் தலை இவளுக்கு உண்டு.

9

முருகனே வந்து நூல் ஆதாரம் காட்டி, அரங்கேற்றத்துக்கு உதவி செய்த நூல் எது?

ஆ) கந்தபுராணம்
"திகட சக்கரம்" என்று நூல் தொடங்குவதால் இலக்கணப் பிழை என்று புலவர்கள் சுட்டிக்காட்ட,

முருகன் எடுத்துக் கொடுத்த அடியில் பிழையா என்று ஆசிரியர் கச்சியப்பர் கலங்குகிறார். முருகனே சான்றோர் உருவில் வந்து, வீர சோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி, மறைகிறார். அரங்கேற்றம் தடையின்றிச் செல்கிறது.

10ஈசனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறையும் தாங்கிய முதல் அன்பர் யார்?

இ) வாயு
வாயு, அக்னி இருவரையும் பொறிகளைக் கங்கையில் சேர்க்க ஈசன் பணிக்கிறான்; ஆனால் வாயு தான் முதலில் தாங்குகிறான்;

Read more »

Saturday, December 02, 2006

ராபின்ஹுட் ஆழ்வார்! Happy Birthday!!

ஆழ்வார்களிலேயே படு வேகமானவர்!
முதலில் நீலன்; பின்னர் திருமங்கையின் மன்னர்; அதற்குப் பின் கள்வர்; பெருமாளிடமே வழிப்பறி செய்த ராபின்ஹூட்! அவரின் Birthday இன்று! ஆமாம், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் அன்று தான் திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள்! (Dec 03, 2006)

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் ஆழ்வார் அவதாரம். (எட்டாம் நூற்றாண்டு); திருக்குறையலூர் என்னும் ஊரில் (சீர்காழிக்கு அருகில்) பிறந்தார்;
உலக வாழ்வில் மிகவும் ஈடுபட்டுப், பின்னர் எல்லாம் அற என்னை இழந்த நலமாய், நாரணன் பணி செய்து கிடந்தார். "வைணவ அருணகிரி" என்றும் நயத்துக்குச் சிலர் சொல்லுவார்கள்!

நிலையில்லாத இந்தப் பூவுலகில், எம்பெருமான் பாதங்களை ஒருவர் நேராகத் தொடத் தான் முடியுமா? காலம் எல்லாம் தவங் கிடக்கிறார்களே, இதற்காக!
வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! தொட்டது தான் தாமதம்!
இனி வேறு என்ன!!! கலியன் (வலிமை மிக்கவன்) என்று எம்பெருமானே இவரை வாய் விட்டு அழைத்தான்! இவர் காதில் "நாராயண" எட்டெழுத்து மந்திரம் உபதேசித்து அருளினான்.

இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!
வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!


அவர் பிறந்த நாளில், இதோ அவரின் நெஞ்சை அள்ளும் ஒரு பாசுரம்!
திருவேங்கடமுடையான் மீது தீராத காதல் கொண்டு, கடைத்தேற வழி தெரியாது, "அப்பா... உன்னை வந்து அடைந்தேன்! காப்பாற்று" என்று பாடுகிறார்!
செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே!

இவரை ஆட்கொண்டானா? அவரே சொல்கிறார்; கீழே மிக முக்கியமான பாசுரம்; பாக்கலாம் வாங்க!
இந்தப் பாசுரம் வைணவர் உலகம் கொண்டாடும் மிக முக்கியமான பாசுரம்!!
மந்திரப் பூர்வமானது! (திரு மந்திரம்-திரு எட்டு எழுத்து- அஷ்டாக்ஷரம்);
இதை சதா சர்வ காலமும், அதிலும் இறுதிக் காலத்தில் கேட்க எல்லாரும் விரும்புவர்! அவ்வளவு விசேடம்!
பெருமாள் தன் காதில் சொன்னதை, அவர் ஊருக்கெல்லாம் சொல்லும் பாசுரம்!


குலம்தரும் செல்வம் தந்திடும்
--அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
--அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
--பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
--நாராயணா என்னும் நாமம்!


நல்ல குலம்/சுற்றத்தைத் தரும் (உத்தமர் தம் உறவு); செல்வம் தரும் (திருமகள் கடாட்சம்).
அடியவர்கள் படும் துன்பங்களை எல்லாம் தரைமட்டமாக்கும்! (நிலந்தரம்)
நீளமான வைகுந்தப் பாதையை (நீள்விசும்பு), நொடியில் அருளும்;
இறைவன் அருளும், கைங்கரியம்/தொண்டு (பெருநிலம்) என்னும் மகா பாக்கியத்தையும் அளிக்கும்!

வலிமை தரும், மற்ற எல்லாம் தரும். (அவனை அடைய என்ன வலிமையும், மற்றவையும் உனக்குத் தேவைப்படுமோ, அவை எல்லாம் தரும்)
பெற்ற தாயை விட அதிகமான பரிவு காட்டும்!
நல்லதே தரும் சொல் ஒன்றே ஒன்று! அது தான் நாராயணா என்னும் நாமம்!
அதை நான் கண்டு கொண்டேன்! நீங்களும் கண்டு கொள்ளுங்கள்!!
Read more »

கூகுள் படத்தில் கார்த்திகை தீபம் மின்னுதே!

"மலைக் கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" என்பது தலைவர் படத்தில் வர்ற பாட்டு இல்லையா? என்ன படம் பேரு? மறந்து போச்சு! சரி அத விடுங்க!
இன்று கார்த்திகை தீபம்! (Dec 03)

திருவண்ணாமலை தீபம்! எல்லாரும் அறிந்த கதை தான்!
பேசாம நாம எல்லாரும் அண்ணாமலைக்கே போய், தீப தரிசனம் கண்டு வரலாம் வாங்க! கீழே தீபத்தின் கூகுள் ஒலி-ஒளிக் காட்சி; கண்டு மகிழுங்கள்!
(please allow time for video buffering; Runtime 7 mins)

தீப மங்கள ஜோதீ நமோ நம!
அருட்பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை!!

அண்ணாமலைக்கு அரோகரா!!!




தசாவதாரம் என்ற ஒரு தமிழ்த் திரைப்படம் நேற்று விசிடியில் பார்த்தேன். அதிலிருந்து ஒரு காட்சி! சைவ-வைணவ ஒற்றுமையில் ஒரு புதிய பார்வை!
பிரம்மனுக்கு ஒரு விபரீத ஆசை. ஒவ்வொரு முறையும் நாம் தானே கைலாயம், வைகுந்தம் சென்று வணங்குகிறோம்! ஒரு நாளாவது அவர்கள் தான் இருக்கும் இடம் வரட்டுமே!
கலைவாணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்! பெருமாள் உங்கள் தந்தைக்குச் சமம்! ஈசன் குருவுக்குச் சமம்! நீங்கள் தான் சென்று வணங்க வேண்டும்!

குழந்தை ஆசைப்பட்டால் பெற்றோர்கள் வீம்பு பார்ப்பார்களா?
பிரம்மன் நினைத்த மாத்திரத்தில், ஈசனும் எம்பெருமானும் பிரம்மலோகம் வந்து விட்டார்கள்! பிரம்மனின் மனக்குறை தீர வழியும் சொன்னார்கள்!
சிவனார் ஓங்கி உலகளந்து தீப ஸ்தம்பமாய் நிற்கிறார்!
பிரம்மனுக்கோ ஈசனின் திருவடிகளைப் பற்றுவதற்குத் தயக்கம்! காரணம் Ego! மரியாதைக் குறைவு என்று எண்ணினார். வாகன வசதியுடன், ஈசனின் முடியைத் தேடச் சென்றார்.
சென்றார்..சென்றார்...சென்று கொண்டே இருந்தார்.

ஆனால் பெருமாள் சிரிப்பழகன் ஆயிற்றே! சத்வ குண நாயகன்! சாந்த சொரூபி!
ஈசனின் திருவடிகளைக் காண அவருக்கு என்ன தயக்கம்! முனிவர் உதைத்தாலும் வாங்கிக் கொண்டவர் தானே! வராக (பன்றி) உருவம் எடுத்து பாதாளம் பாய்ந்தார்! ஈசன் சற்றே தலைசாய்த்து கீழே பார்க்க, கீழே விழுந்தது பூ!

வெற்றி எனும் போதை, எவரையும் வெறி கொள்ளச் செய்து விடும்! பிரம்மனும் அதையே செய்தார். ஈசன் முடியில் இருந்து விழுந்த தாழம் பூவுடன் பேசி வைத்துக் கொண்டதால், பொய் சாட்சி சொன்னது பூ!
பிரம்மன், ஈசனாரின் திருமுடியைக் கண்டதாக!
அதனால் பூவையே விலக்கி வைத்து விட்டார் பரமன்!

பெருமாளோ, அதள பாதாளத்தில் போய் விட்டார்; ஈசன் திருவடியைக் காணாததால், கால்களைத் தன் திருக்கைகளால் பற்ற, ஒரு கணம் ஈசனுக்கே தூக்கி வாரிப் போட்டது!
காக்கும் நாயகன் தன் கால்களைப் பற்றுவதா என்று!! உடனே பெருமாளைத் தூக்குவதற்கு அன்புடன் குனிய, ஈசனின் திருமுடி தெரிகிறது பெருமாளுக்கு!
போட்டியால் தெரியாத திருமுடி, இப்போது பணிவால் தெரிந்தது!
பிரம்மனுக்கும் பாடம் புரிந்தது!

பாடம் பிரம்மனுக்கா?
இல்லை நமக்கே! மும்மூர்த்திகளின் நாடகம் அன்றோ?

1. இறைவனின் பணியில் இருக்கும் பேறு பெற்றவர்கள், மிக கவனமாக இருக்க வேண்டும்!
தான் மற்ற அடியாரை விட ஒரு படி மேலே!
தான் சொல்வதெல்லாம் எப்படியாச்சும் சரியாகி விடும் என்பதெல்லாம்,
நம்மை அவனிடம் சேர விடாது செய்து விடும்
(தாழம் பூவின் நிலை)
தாழம் பூவுக்கு இல்லாத வாசமா? ஆனால் அவ்வளவு வாசம் இருந்தும், கடைசியில் பயன் இல்லாமல் போய் விட்டது!

2. அகந்தை, அதுவும் பொறுப்பானவர்களிடம் இருந்தால்?
பக்தியில் தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை என்பதெல்லாம் கூடவே கூடாது! தன்னை யாரும் ஸ்பெஷலாக கவனிக்க வில்லையே என்ற தாழ்வு எண்ணம் இருந்தால் பக்தி சித்திக்கவே சித்திக்காது!
என் கடன் பணி செய்து கிடப்பதே! - இதுவே சரி! (பிரம்மனின் நிலை)

பலர் சொல்லி விளக்க முயன்ற ஒன்றை, இந்தத் திரைப்படம் அழகாக விளக்கி விட்டது!
முதல் நாள் பரணி தீபம்; அடுத்த நாள் சிவ தீபம்; அதற்கு மறு நாள் விஷ்ணு தீபம் என்று பல ஊர்களில் இன்றும் வழக்கம்!
இப்போது நன்றாகவே புரிகிறது!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP