Monday, December 31, 2007

2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-1)

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன? :-)

திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா?

இல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,
ஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்!

இந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று! - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை!
இதோ ஆண்டு முடியப் போகிறது! ஆலயங்கள் திருந்தி விட்டனவா?
ஹிஹி! அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன? அப்ப இதுக்கு என்ன தான் வழி? - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! எப்படி? மேலே படிங்க.

ஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்!
ஒன்னு நிர்வாகம்! இன்னொன்னு நாம்! - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.
நிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன்! இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா?

ஜனவரி முதல் நாள், முதல் வேலையாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்!
அதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள்! - நல்லது தான்! இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது! அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்!

ஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள்! இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே!


1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்! - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்!
பிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல!
இறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது! :-)

கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?

தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம்! முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்! உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்!
(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா? என்பதெல்லாம் விதண்டாவாதம் தான்! அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது! அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)


2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
நினைவில் நிறுத்துங்கள்!
* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!

நம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்!
இறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை!

அச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா? வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்! போதும்!
அப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்?-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

எல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்கன்னு சொல்ல மாட்டேன்! அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க! அது புரிகிறது!
ஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா?....இல்லை முதலை வாயில் போய் விழுதா? சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்! அதுக்கு என்ன பண்ணலாம்?

கோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள்! உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க!
ஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க! காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்!


3. முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்! கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள்! கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை! :-)

4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.
இதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான்! கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்கா-ன்னு விசாரியுங்கள்.


5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,
தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.


அவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.

வெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை! நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன?

பூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
சகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

என்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!

யாரு? தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா? சேச்சே! இல்லையில்லை! இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா? இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே!:-)

இதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்! ....
தமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்!.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா! அதைப் பயன்படுத்திக்குங்க!


6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

ஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல! அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.
எனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.

கட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;
Temple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!



7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
ஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!

இறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான்! எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான்! முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும்! மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்!

முன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க!
திருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.
தினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.

ஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!

இயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும்! நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க!

சும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.
அடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்!


8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்! ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்! :-)

9. ஆலயத்தில் இரைந்து பேசலாம்! ஓடி ஆடலாம்! ஒருவரை ஒருவர் விசாரிக்கலாம்! குடும்பங்கள் கலந்துரையாடலாம்! எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம்! யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம்! நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)
நம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள்! தியான மண்டபங்கள் அல்ல! அதனால் தாரளமாகப் பேசுங்கள்!

ஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும்! அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்!

கருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்!
பிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான்! கருவறை மட்டும் தான் நூலக அறை! அங்கு அமைதி பெறுங்கள்!


10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!

நம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம்! அது நல்லதும் கூட! அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்!

இப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா?
இதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்!

அதனால்
எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீர்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்! )

அனைவருக்கும்
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
Read more »

Monday, December 24, 2007

கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்! எத்தனை மகிழ்ச்சி!

சிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;
அன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்!

வீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண ஒளி சுற்றும்!
அட்டைப்பெட்டியால் ஆன அழகிய குடில். அதற்குள் மின் விளக்கு பொருத்தித் தருவார் எங்கள் சித்தப்பா. ஒன்று மின்னி இன்னொன்று மறையும்!




முனுசாமி அண்ணா கடையில் இருந்து வைக்கோல் கட்டு கொண்டு வருவோம்;
யோசோப்பு, மரியாள், ஆயர் எல்லாரும் இருப்பர்;
பின்னாளில் பக்கத்து வீட்டு மோகன் அண்ணா-ஷீலா ஆண்ட்டி, தேவதூதர், மூன்று ஞானிகள் போன்ற பொம்மைகளை வாங்கிக் கொடுத்தார்கள்.
குழந்தை இயேசு பொம்மை, தன் இரு கைகளை மேலுக்கு விரித்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும்.

வைக்கோல் குழந்தைக்குக் குத்துமே!
ஆண்ட்டி வெல்வெட் துணியில் குட்டி மெத்தை தைத்துக் கொடுத்தார்கள், குட்டிப் பாப்பாவிற்கு!

செந்தில் என்ற சிறுவன், பொம்மை இடத்தை விட்டு அந்தாண்ட இந்தாண்ட வரமாட்டான்! கேட்டால் கெட்டவர்கள் குழந்தையைக் கொல்ல வந்து விடுவார்கள் என்று சொல்லுவான்! எப்போதோ கேட்ட கண்ணன் கதையை இதோடு கலந்து விடுவான்! அப்படியே கெட்டவர்கள் வந்தாலும் குழந்தை அவர்களை எல்லாம் உதைத்து விடும்; வண்டிச் சக்கரத்தை நொறுக்கி விடும்! பேயிடம் பால் குடிப்பது போல் அவளை அழித்து விடும் என்றெல்லாம் சொல்லுவான்!
நாங்களும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்வோம்; ஏன் என்றால் அவன் தான் எங்களை விடப் பெரியவன்.

ஆடு, பசு மாடு பொம்மைகள் நிறைய! மயில் பொம்மைகளும் உண்டு!
இந்தப் பொம்மைகள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனுக்கு அருகில் சிரித்துக் கொண்டு இருக்கும்.
கிறிஸ்துமஸ் அன்றோ, குழ்ந்தை இயேசுவின் பக்கத்தில் சிரித்துக் கொண்டு இருக்கும்.

இப்படி பொம்மைகளாகவோ, ஆடு மாடுகளாகவோ இருந்து விட்டால், உலகில் பிரச்சனை என்பதே இருக்காதோ! :-)
அவற்றுக்கு ஆயர்ப்பாடியும் ஒன்றே! நல்ல மேய்ப்பனும் ஒன்றே!
மேய்ப்பனாகிய சிறுவன் கண்ணன்!
அன்பு ஒன்று தான் இந்தப் பசுக்களுக்கு எல்லாம் வேதம்.
அவன் வேணு கானமே கீதம்!

இரவில் தூங்கும் போதும், குடிலில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும்!
அப்பப்ப எழுந்து அந்தக் குழந்தை பத்திரமாக உள்ளதா என்று ஒரு எட்டு எட்டிப் பார்த்துக் கொள்வோம்!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!



கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியத்தில், குழந்தை இயேசுவின் பிறப்பு:

துல்லிய பட்டுப் போன்ற தூயவள் மரியாள் கையில்
மெல்லிய பாலன் இயேசு விளக்கெனப் புன்ன கைத்தான்!
நல்லவர் உள்ளம் போல நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லை என்னாத வாறு இருகரம் விரித்து நின்றான்!

மாளிகைச் செல்வம் தோற்கும் மாணிக்கத் தொட்டில் தோற்கும்
தூளி இல்லாத போதும் தூங்கினான் பாலன் இயேசு!
வாழிய என்றார் தூதர்! வணங்கியே நின்றார் ஆயர்!
நாழிகை செல்லச் செல்ல, நல்லொளி மேலும் பல்கும்!

மத்தேயு 1:23

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.


சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் போது இட்ட பதிவின் மீள்பதிவு இது!
பழைய பதிவும், பின்னூட்டங்களும் இங்கே!
Read more »

தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை?

அன்று தில்லை நடராசன் சன்னிதியில் ஒரே கூச்சல், குழப்பம்!
"அச்சச்சோ, நடராஜப் பெருமானுக்குத் தீட்டாயிடுத்தே! எந்தச் சண்டாளன் களியைத் தின்னுட்டு, இப்படி மீதியை, ஸ்வாமி மேல் வீசினானோ தெல்லியே! ஏங்காணும்...நோக்கு ஏதாச்சும் தெரியுமா?"

"ஓய், என்னைக் கேட்கறீரா? நேத்து ராக்கால பூஜை முடிச்சி, நடையைச் சாத்தினது நீர் தானேய்யா! இன்னிக்கு காலம்பற வந்து நடையைத் தொறக்கறேன்! அச்சோ! ஸ்வாமி மேல் என்னது இது திட்டு திட்டா விழுந்து கிடக்கே? அபசாரம், அபசாரம்!
நேற்று ராப்பூஜையில் என்னய்யா பண்ணீர் நீர்? திருவிழா நேரம்-னா நடை சாத்தக் கொஞ்சம் தாமதம் ஆகத் தான் செய்யும். அதுக்காகப் பசி தாளாம, அம்பலத்தில் களியை ஒளிச்சி வச்சித் தின்னறதா? நீரெல்லாம் என்னய்யா ஒரு தீட்சிதர்?"

"அய்யோ, இப்படி அபாண்டமாப் பேசாதீங்கோ! நம்மவா களி தின்னும் வழக்கம் எல்லாம் கிடையாதே! நான் எப்படிங் காணும் களியைப் போயித் தின்னிருப்பேன்? பழியைப் போட்டாலும் பொருந்தப் போடணும் ஓய்!
இது வேற எவனாச்சும் செஞ்ச வேலையாத் தான் இருக்கும்! ஹூம்...திருவாதிரை ஆருத்ரா அபிஷேகத்தின் போதா இப்படி எல்லாம் நடக்க வேண்டும்?"

"நாமத் தான் அம்பலத்தில் ஒருத்தனையும் விடமாட்டோமே! வேறு எவன் ஐயா வந்து வீசியிருக்க முடியும்?
ஏற்கனவே நாம போடுற சுத்தபத்த ஆட்டத்தை எல்லாம் பார்த்துட்டு, ஜனங்கள் ரொம்பவே நொந்து போயிருக்கா. இப்போ இது வேறயா?
கண்டராதித்த சோழர் வந்திருக்காராமே ஊருக்கு! இங்க வந்து, "நல்லா இருக்குய்யா உங்க சுத்தமும், ஆச்சாரமும்" ன்னு கேட்கப் போறாரு! என்ன சொல்லப் போறீரு?"

- சிதம்பரத்து தீட்சிதர்கள் இருவர், கோயிலில் இப்படிப் பேசிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும், மிகவும் பயந்து போய் இருந்தார்கள்! அதற்குள் கண்டராதித்த சோழன், பொன்னம்பல நாதனைத் தரிசிக்க ஓடோடி வந்து விட்டான்! என்ன இன்னிக்கி இவ்வளவு சீக்கிரம், இப்படி ஆவலுடன் ஓடி வருகிறான்?



அதற்கு முந்தைய நாள் இரவு!
"செம்பியன் மாதேவி, ஒவ்வொரு ராத்திரியும் பூசை முடித்த பின், என் காதுகளுக்கு நடராஜப் பெருமானின் சதங்கை ஒலி கேட்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் அது இன்று கேட்கவில்லை! என் வழிபாட்டில் தான் ஏதோ குறை உள்ளது போலும்! அப்படித் தானே?"

"கண்டராதித்தரே, உங்களைப் போல் சிவநெறிச் செல்வரைக் கணவராகப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! எதற்கு வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்! இன்று கேட்காத சதங்கை ஒலி நாளை கேட்கும் பாருங்கள்! வாருங்கள், சாப்பிட்டு உறங்கப் போகலாம்!"

"இல்லை மாதேவி, எனக்கு மனம் சரியில்லை! உணவு வேண்டாம்! நீ போய் வா! நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்!"

கவலையில் சோழனுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை! புரண்டு புரண்டு படுத்தான். சிற்றஞ் சிறுகாலே தோன்றிய உறக்கத்தில், ஒரு கனவு! ஆகா...இது என்ன!.....ஈசனே அல்லவா கனவில் பேசுகிறார்!
"ஆதித்தா...இன்று இரவு சேந்தன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்! அதான் இங்கு உன்னிடம் வரவில்லை! உனக்கு என் சதங்கை ஒலியும் கேட்கவில்லை!
சேந்தன் தெரியுமல்லவா உனக்கு?"

"தெரியாதே சுவாமி!"

"பட்டினத்துப் பிள்ளையின் கணக்குப் பிள்ளை அவன்! பட்டினத்தான் துறவு பெற்ற பின், அவன் சொத்துக்களை எல்லாம் ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டான். அரசனுக்கு கொடுக்கவில்லையாம். செய்யாத குற்றத்துக்குச் சிறைவாசம் அனுபவித்து விட்டு, இப்போது தில்லைக்கு வெளியில் பரம ஏழையாக உள்ளான். அவன் வீட்டுக்குத் தான் ஒரு முதியவனாய் இன்று போய் எட்டிப் பார்த்தேன்...."


"சேந்தனாரு இருக்காருங்களா சாமீ...தினமும் சிவன் அடியாரு ஒருத்தருக்காச்சும் சாப்பாடு போட்டுட்டுத் தான் சாப்பிடுவாராமே! யப்பா...இன்னிக்கி இந்தப் பேய் மழையில இங்கனாச்சும் ஒதுங்கினேனே!"

"வாங்க பெரியவரே! அடியேன் தான் சேந்தன்! இப்படி உட்காருங்க"

"ஓ...நீ தான் சேந்தனா! பார்க்கவே பரம ஏழையா இருக்கேயே! உனக்கு ஏன்பா இந்த அன்னதானம் எல்லாம்? உனக்கே இன்னொருத்தரு அன்னதானம் பண்ணனும் போல இருக்கே!"

"எங்கள் ஈசனும் பரம ஏழை தானே, ஐயா!
ஏழைப் பங்காளன், அவன் உலகத்துக்கே படி அளக்கவில்லையா? அது போலத் தான், நானும்!"

"உக்கும்...இந்தப் பேச்செல்லாம் நல்லா வெவரணையாத் தான் பேசுறாங்க இந்தச் சிவனடியாருங்க! ஆனா பேசறத்துக்கு மட்டும் தான் வாயின்னு நெனச்சிக்காதீங்க சேந்தனாரே! சோறு திங்கறத்துக்கும் சேத்து தான் வாயி! உமக்கே சோத்துக்கு இருக்கான்னு தெரியலை! இதோ, வெறகுக்கட்டை வேற மழையில விக்காம இங்கேயே போட்டிருக்க போல!
அட நடராசா! இது தெரியாம இன்னி ராவுக்கு இவன் வூட்டாண்ட வந்துட்டோமே! பஞ்ச வீட்டில் பெருசா என்ன கொடுத்துவிடப் போறாங்க? பசி வேற வயித்தக் கிள்ளுது! ச்சே..."

சேந்தன், மனைவியைப் பார்க்க...அம்மையார், சமையலறை பக்கம் போனார். எஞ்சியிருந்த கொஞ்சம் அரிசி நொய்யில், களி தயாரித்தார்.
சேந்தன் கொல்லையில் இருந்த காஞ்ச கீரையைப் பறித்துத் தர, கீரைக்குழம்பு தயாரானது.
வயசாளிக்குக் களியும் குழம்பும் ஊத்த, கெடைச்ச மட்டும் லாபம்-னு சாப்புட்டு போட்டுக் கெளம்பினாரு! அப்போ தான் அது நடந்திச்சி...

"அட இன்னும் கொஞ்சம் களி மீதி இருக்கே பாத்திரத்தில்! எனக்கு நாளைக்கு ஆகுமே"-ன்னு வெக்கமில்லாம கேட்டாரு வயசாளி அண்ணாச்சி! சேந்தனும் அவர் மனைவியும் ஏதாச்சும் சாப்பிட்டாங்களா-ன்னு ஒப்புக்குக் கூடக் கேக்கலை!
இந்தக் காலத்துல சில ஆம்ஸடர்டாம்-நியுயார்க் பசங்க, சாப்படக் கூப்புடற வீட்டுல இருந்தே, பார்சல் கட்டிக்கிட்டு வரலையா?:) கட்டிக்கிட்டு வந்து, ரெண்டு நாளுக்கு மைக்ரோவேவ்-ல வச்சி சாப்புடறதில்லையா? அது போலவே சிவபெருமானும் பண்ணியிருக்காரு டோய்!
மிச்ச மீதிக் களியைத் தன் இடுப்புத் துண்டில் கொட்டிக்கொண்டு ஆளு எஸ்கேப்பு!



சிற்றம்பலம்-சிதம்பர ரகசியம்-அம்பலவாணர்-சிவகாமி

"கண்டராதித்தா, சேந்தன் வீட்டுக் களி தான் என் ஆடையில் இருக்குன்னு தெரியாம "ஆச்சார சீலர்கள்" சிலர் ஆலயத்தில் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! நீ சென்று அவர்களைக் கவனி! சேந்தனை நாளை தேர்த் திருவிழாவில் உனக்கு அடையாளம் காட்டுகிறேன்...."

அச்சோ...கனவு கலைந்தது...சோழன் அலறி அடித்துக் கொண்டு ஆலயம் வருகிறான்!
களியின் மகிமை கோயிலில் சொல்லப்பட்டது! தீட்சிதர்கள் ஓரளவு அமைதி ஆனார்கள்! ஆனாலும் இந்தக் கதையை அவர்கள் மனம் முழுமையாக நம்பவில்லை போலும்! ஆனாச் சொல்வது அரசன் ஆயிற்றே!

தாஙகள் சொல்லும் கதையை ஊர் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஊர் சொல்லும் கதையை, தான் நம்ப வேண்டாமோ? நம்பாதவரையும் வேறு ஒன்று செய்து நம்ப வைப்பவன் அந்த நடராசன் அல்லவா?

மக்கள் எல்லாரும் யார் அந்தச் சேந்தன்? யார் அந்தச் சேந்தன் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருக்க...தேர் திருவிழா தொடங்கியது.

ஆடல் வல்லான் சிற்றம்பலத்தை விட்டு, பொன்னம்பலத்தின் வழியாக, ஆனந்த நடனம் செய்து கொண்டே வெளியே வருகிறான். தில்லையில் மூலவரே உற்சவரும் ஆகிறார்! தேர் புறப்பட்டு வீதிகளில் சுற்றிய வண்ணம் உலா வருகிறது!
அதைத் தொடாதே, இப்படி நில்லு என்ற அதட்டல் எல்லாம் கோயிலுக்குள் தான் போலும்! வீதியில் அந்த வில்லங்கங்கள் ஏதும் இல்லாது, மிகவும் நிம்மதியாய், மக்களோடு மக்களாய் உலா வருகிறான் இறைவன்.

இதோ நிலைக்கு வரப் போகிறது தேர்! அச்சோ, சக்கரம் பூமியில் இறங்கியது. தேர் நகரவில்லை! என்ன இது காலையில் இருந்து ஒரே அபசகுனமாய் நடந்து கொண்டே இருக்கே-ன்னு தீட்சிதர்கள் முணுமுணுக்க...
அபசகுணம் இல்லை இது! அடியவர் சகுணம்...அன்பின் சகுணம்; அதைக் காட்ட எண்ணிவிட்டான் அம்பலத்தான்.

யானைப் படைகளின் உதவியுடன் தேரை மேலே தள்ளினர் வீரர்கள். ஹூஹூம்...ஒன்றும் முடியவில்லை.
"சேந்தனே, தேர் நகரப் பல்லாண்டு பாடு" என்று ஒரு குரல்.
கூட்டத்தோடு கூட்டமாக இருந்த சேந்தனார், இதைக் கேட்டுத் திடுக்கிட்டார்...
கூட்டம், குரல் கேட்டு வழிவிட்டது! இவனா சேந்தன்? இவனா சேந்தன் என்று எல்லாரும் திரும்பிப் பார்க்க...
இவன் வீட்டுக் கம்பங் களியா, இன்று காலை பெருமானின் மேல் விழுந்து கிடந்தது என்று தீட்சிதர்கள் ஒரு பார்வை பார்க்க...
சேந்தனுக்கு நா எழவில்லை! பா எழுந்தது!!

மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்! வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்செய் மண்டபத்து உள்ளே புகுந்து, புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாளுமை கோன், அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே!
- (9ஆம் திருமுறை)

மக்கள் எல்லாரும் இப்போது தேரை இழுக்க, தேர் மீண்டும் வலம் வந்தது.
மந்திரங்களுக்கு கட்டுப்படாத இறைவன், மனத்துக்குக் கட்டுப்பட்டான்!
அபிஷேகத்தால் குளிராத இறைவன், அன்புக்குக் குளிர்ந்து போனான்!
கண்டராதித்தர் ஓடியே வந்து சேந்தனாரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

தீட்சிதர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை! கண்ணுக்கு முன் எல்லாம் நடந்து முடிந்து விட்டது! சேந்தனின் சிவபக்தி ஊர் அறிந்த ஒன்றாகி விட்டது!
ஆனால் சேந்தன் என்றுமே அதே சேந்தன் தான்! நடந்த அற்புதத்தை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் மிட்டா மிராசு செய்யவில்லை! தனி வழியில் தரிசிக்கவில்லை! சிதம்பர ரகசியத்தைப் பணங்கொடுத்து பார்க்கவில்லை! சித்சபையில் சிறப்பு கேட்டு சீண்டிப் பார்க்கவில்லை! கூட்டத்தோடு கூட்டமாக நின்று சேவிக்கும் அதே சேந்தன் தான் அவன்!

அவன் வீட்டுக் களியை நடராசன் உண்டான். நாமும் உண்கிறோம்!
கீழ்த்தட்டு மக்களின் அன்றாட உணவை இன்று தீட்சிதர்கள் உண்கின்றனர். தனவந்தர்கள் உண்கின்றனர். அடியவர்கள் எல்லாம் திருவாதிரைக் களி என்று அன்புடன் உண்கின்றனர்!

ஏழையின் சொல் அம்பலம் ஏறியது!
ஏழையின் சோறு அம்பலம் ஏறியது!


சாதாரண அம்பலம் அல்ல! பொன்னம்பலம் ஏறியது! சிற்றம்பலம் ஏறியது!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!



Dec 24, 2007
இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! திருவாதிரைக் களி நாள்!

Read more »

Wednesday, December 19, 2007

பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!!

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?
திருவரங்கம். திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.


ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.
அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து,
அப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள்.
பின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்!
அதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்!

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!
(- தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

அரங்கன் அரங்கத்துக்கே அரசன்! எந்த அரங்கம்?
திருவரங்கமா? இல்லை இல்லை!
உலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்;
அந்த அரங்கத்துக்கு அரசன்! அவன் குடிகள் நாம் எல்லோரும்!

ரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;

அழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி உரே கொண்டாடி மகிழும் விழா! மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்!

அதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா!
என்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்!


சரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,
குட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,
வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி

பள்ளி கொண்டுள்ளான் அரங்கநாதன்.

அவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய பக்தர். அவ்வளவு தான்.

அவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.
தன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.
ஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.

ரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்!
* என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது?
எனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா! எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா? எனக்கு நீ கொடுக்க மாட்டாயா?
* சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா?
இல்லை, சுவாமி!

* சரி, ஞான யோகம்?
அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்!
* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா?
அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே!

* ஹூம்; சரணாகதி செய்திருக்கிறீரா?
அச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி.
* சரி போகிறது! ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா?
பசித்த பலருக்குச் சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் தெரியாது சுவாமி.

* என்ன இது இப்படிச் சொல்கிறீர்? சரி, என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா?
இல்லை சுவாமி! நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்!



வந்ததே கோபம் ரங்கநாதருக்கு! எழுந்து உட்கார்ந்தார்!
நாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம்! அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே!
* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள்?
என்ன அக்ரமம்! மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே!
மோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா?
ஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்?

இதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
பெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது!
அடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள்! இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்!

பிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.
ரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்?
உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?...
அன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ!... என்று கேட்டாரே ஒரு கேள்வி!

அதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்!
இன்று வரை எழுந்திருக்கவே இல்லை!
அப்படி என்ன தான் கேள்வி கேட்டார்?....சற்றுப் பொறுங்கள்! அடுத்த பதிவில்!!
வைகுந்த ஏகாதசி Dec 20 (மார்கழி 4) அன்று வருகிறது!
இந்தக் கதையை ஒட்டி அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,
இறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.
இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் காணலாம், வாங்க!



சென்ற ஆண்டு ஏகாதசிக்கு இட்ட தொடர் பதிவின் மீள்பதிவு இது! - திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக் காட்சிகளின் படங்களும் பதிவில் உள்ளன. இதோ மற்ற தொடர்கள்.....
பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!! - 1
ரங்கா - அடியேன் உனக்கு அடியேன்! - 2
தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்! - 3
2006-இல் பகல்பத்து, 2007-இல் ராப்பத்து! - 4
முனியே! நான்முகனே!! முக்கண்ணப்பா!!! - 5
Read more »

Monday, December 17, 2007

குறுக்குப் புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன்!

குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, வெற்றி பெற்றவர்கள் இதோ!
அறிவன்
அரைபிளேடு
மோகன்தாஸ்
தங்கம்
லஷ்மி
பொன்ஸ்
ஜெயஸ்ரீ

அனைவருக்கும் வாழ்த்துக்கள் மக்களே!
புதிரா புனிதமாவில், முதல் முறை நிறைய பேர் 100/100 அடித்துள்ளார்கள்! மகிழ்ச்சியாய் இருக்கு!

ஆர்வமுடன் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும், வாழ்த்துக்கள்!
பரிசு எப்படியும் உங்களுக்கும் சேர்த்து தானே! :-)
இதோ பரிசேலோ ரெம்பாவாய்.... ஆசிரியர் கல்கியுடன், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் Group Photo. ஏற்கனவே நீங்கள் பார்த்தும் இருக்கலாம்! யார் யார் எந்தெந்த பாத்திரம் தெரிகிறதா? (நன்றி பொ.செ யாகூ குழுமம்)

புதிரா புனிதமாவில், குறுக்கெழுத்து ஸ்டைல் நல்லா இருக்கா, இல்லை பழையபடி மல்டிபிள் சாய்ஸ் தான் பிடிச்சிருக்கா?
மேலாக்க ஒரு வாக்குப் பெட்டி இருக்கு பாருங்க! அங்கன சொல்லுங்க மக்கா! அடுத்த முறை அப்படியே பின்னிடலாம்!

சரியான விடைகள் இதோ: (பெருசாப் பாக்கணும்னா, கிளிக்குக)




மக்களே
நண்பர்கள் ஜிடாக்கில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நியூயார்க் நேரப்படி, நாளை மாலை (Dec 19) வரை வாய்தா போட்டாச்சே!


அலோ மக்களே, ஏதோ மார்கழி மாசம் பொறந்துடுச்சாமே! குளிருல நடுங்கிக்கிட்டே என்ன பண்றீங்க? - தெருவுல கலர் கலரா, கலர்கள் போடும் கலர் கோலங்களைப் பார்க்க கலரலையா நீங்க?...ச்சே கிளம்பலையா நீங்க? :-)

என்னாது, ஓவராக் குளிருதா?
அதுக்காக அப்படியே போத்திக்கிட்டு தூங்கிட முடியுமா என்ன? குளிர் பாத்தா கலர் பாக்க முடியுங்களா? கெளம்புங்க மக்கா!
முட்டைய ஒடைச்சாத் தான் ஆம்லெட்டு! ஆட்டையைப் போட்டாத் தான் ஆள் செட்டு! :-)

சரி...மேட்டர் இன்னான்னா, மார்கழி மாசம் பெண்கள் எல்லாம் பாவை நோன்பு நோற்பாங்களாம்! விளையாட்டு போல விளையாடிக்கிட்டே செய்வாங்களாம், பாட்டுக்குப் பாட்டு ஸ்டைல்-ல!

அப்ப, ஆண்கள் மட்டும் சும்மாவா? - நாங்க சிங்கம்-ல!
அவங்க பாட்டுக்குப் பாட்டுன்னா,
நாங்க வார்த்தைக்கு வார்த்தை! - தெரியும்-ல!
அதான் நாமளும் மார்கழி வார்த்தை விளையாட்டைத் தொடங்கிடலாம்-னு...

இதோ அடுத்த புதிரா? புனிதமா??
இந்த முறை ஆட்டம் கொஞ்சம் வித்தியாசம்.....குறுக்கெழுத்துப் புதிர்!
மார்கழி மாசம் கோலம் போடுறா மாதிரி, கட்டம் கட்டமா போட்டு ஒரு மார்கழி ஸ்பெசல்!!

டாபிக் - எல்லாருக்கும் புடிச்ச எவர் க்ரீன்...பொன்னியின் செல்வன்!
மார்கழி ஆட்டம் ஆடுங்க மக்கா...விடைகள் நாளை மாலை நியூயார்க் நேரப்படி!
என்னாது....பேப்பர், பென்சில் எல்லாம் வேணுமா?...
அந்தா...அந்தப் பொட்டிக் கடையில வாங்கிக்குங்க, பழுவேட்டரையர் அக்கவுண்ட்-ல! :-)


விடைகளைப் பொட்டிக்குள்ளாரயே போட்டுப் பாக்கலாம்!
பின்னூட்டம் இடும் போது மட்டும், கீழே உள்ள காப்பி பேஸ்ட்-ஐ யூஸ் பண்ணிக்கங்க மக்கா!



இடமிருந்து வலம்:

1. அப்பர் சுவாமிகள் கண்ட காட்சி, திருவிழாவாக நடக்கும் ஊர். இங்கு தான் ரெண்டு சீனத்து வர்த்தகர்கள் வாராங்க! (5)
2. புயல் அடித்த பின் இங்கு பழுவேட்டரையர் வருகிறார், இளவரசரைப் பிடித்துக் கொண்டு போக!
ஊரின் முதல் பாகம் பத்து மில்லியன். இரண்டாம் பாகம் தான் புதிரின் விடை (2)
3. தேவாரம் மீட்ட திருநாரையூர் இளைஞரின் கடைசிப் பெயர் - last name (3)

4. //இவன் என்னைச் சிநேகத்துரோகி என்று சொன்னான். ஆனால் இவன் சிநேகத்துரோகி மட்டுமல்ல; எஜமானத் துரோகி// -
இவ்வாறு கந்தமாறனைக் கரிகாலனிடம் போட்டுக் கொடுப்பது யார்? (8)
5. பூங்குழலியின் அண்ணி. முதல் நான்கு எழுத்து மட்டும் (4)
6. கல்கியில் நாவல் வந்த போது, பத்திரிகையில் முதலில் படம் வரைந்தவர் (4)

7. (வலமிருந்து இடம்) ஒற்றனுக்கே ஒற்றன் வைக்கும் இவரின் பெயர், பட்டப் பெயர் நீங்கியுள்ளது (5)
8. இளவரசர் அருண்மொழியைப் படகோட்டி, நாகை சூடாமணி விகாரத்தில் இருந்து காத்தவன் (6)
9. இலங்கையில் இருந்து இளவரசர், நேரே இந்தச் சோழ நாட்டு ஊருக்குத் தான் வரவேண்டும் என்று வந்தி அடம் பிடிக்கிறான் (4)
10. மழபாடித் தென்னவன். மாதேவியின் அப்பா (6)

கீழிருந்து மேல்:

1. ஜோதிடர் வீட்டுக் கூரையைப் பிடித்துக் கொண்டு தப்பிய வானதி, வெள்ளத்தில் இந்த ஊருக்கு வந்து கரை சேர்ந்தாள் (6)
2. சிறையிருந்த பைத்தியக்காரனின் உண்மைப் பெயர் (7)
4. (கீழிருந்து மேல்) இந்த ஆற்றில் தான் வேல் எறிந்து வந்தியத்தேவனை மூழ்கடித்ததாக கந்த மாறன் நினைத்துக் கொண்டான் (4)

11. பிரம்மராயர், ஊமை ராணி்யைத் தஞ்சைக்குப் பிடித்துக் கொண்டு வர அனுப்பும் ஆள் யார்? (5)
12. இடும்பன்காரியைச் சந்திக்கும் இன்னொரு சதிகாரன், மீன் முத்திரையைச் செய்து காட்டுவான். இவன் பெயர் என்ன? (8)
13. சுரங்கப்பாதைகளும், பொக்கிஷமும், புலிகளும் இருக்கும்....பழுவேட்டரையரின் இதற்குள் தள்ளப்பட்டால், அதோ கதி தான்! (4)

14. (கீழிருந்து மேல்) செம்பியன் மாதேவியின் கணவர் (8)
15. சோழனுடன் வணிகம் செய்த கிரேக்க நாட்டவர் (4)
16. இந்தப் புதர்களின் பின்னால் இருந்து தான் பூங்குழலி, பழுவூர் இளையராணியும் மந்திரவாதியும் பேசுவதை ஒட்டுக் கேட்டாள் (2)


விடைகளைக் காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளுக்கு ஈசியா....
Across
1
2
3
4
5
6
7
8
9
10

Down
1
2
4
11
12
13
14
15
16


Results of the Poll:

Read more »

Tuesday, December 11, 2007

கணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி!

Dec 11, பாரதி பிறந்த நாள்;
முன்னொரு முறை, திருமதி செல்லம்மாள் பாரதி, தில்லி வானொலியில் ஆற்றிய உரையின் பகுதிகள் கீழே.


எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!
என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.
மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.


சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள்.
ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம்.
அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார்.

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை.
என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை.
அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது.
மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களி்லிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன்.


கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.
"கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்.
மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக,
ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார்.
அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது!
நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும்.
அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு!

------------------------------------------------

நன்றி: பாரதியார் சரித்திரம் - அமுதசுரபி, தமிழ் Sify
பட உதவி: சென்னை அருங்காட்சியகப் படங்க
ள்


ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!


மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!


‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.

பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணார்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,

பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!


இது சென்ற ஆண்டு பாரதியார் பிறந்த நாளின் போது இட்ட பதிவின், மீள்பதிவு
முந்தைய பதிவும், பின்னூட்டங்களும் இங்கே!
Read more »

Friday, November 30, 2007

திருக்கோவிலூர்: பொன்னார் மேனியனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?

பொன்மேனி கண்டேன்-னு பாடிய ஆழ்வார், பொய் சொன்னாரா என்ன? "பொன்னார் மேனியனே" - சிவபெருமான் ஆயிற்றே!
வந்திருப்பதோ நீலமேனி வண்ணன், நாராணன் தானே! நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு? முந்தைய பதிவு இங்கே!

நீலமேகக் கல்-னு ஒரு ரத்தினக் கல் இருக்கு! அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது? அதை எடுத்துப் பாலில் போடணும்! போட்டா, முழுப் பாலும் அப்படியே, உஜாலா சொட்டு நீலம் கணக்கா நீலமா மாறிடும்!
அது போல், அன்னை மகாலக்ஷ்மி விலை மதிப்பில்லா பொன் "மணி"! மணிகளுள் அவள் பெண் "மணி"!
ஹிரண்யவர்ணீம் என்று அவளைப் பொன்மயமாகத் தான் சொல்கிறார்கள்.

அன்பர்கள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள். அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களையெல்லாம் இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்!

கைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைத்து இன்னும் எட்டிப் பார்க்க.......அவள் தீண்டிய அடுத்த நிமிடம், அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்!
நீலமேனியாய் இருந்தவன், அவள் பொன்னான ஸ்பரிசம் பட்டு, தகதக என்று ஜொலிக்க ஆரம்பித்து விட்டான்! நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், இவனும் பொன் மயமாகி விட்டான்!

அதான் திருக்கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், உடனே அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்.
பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்!
பொருட் செல்வம் தரும் திருமகள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்!
இப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலர் போய், நல்லா செவ செவன்னு, என்னமா கலரு ஆயிட்டான் ! :-)
அதான் அருக்கண் "அணி" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு!
அவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்!
புரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்!
என் ஆழிவண்ணன் பால் இன்று! - என்று பாடி முடிக்கிறார்!

இப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!
அவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்!
இடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!

பொதுவா கோயில்களில், பெருமாள் நின்னுக்கிட்டு இருப்பார்! இல்லை உட்கார்ந்துகிட்டு இருப்பார்! இல்லை படுத்த வண்ணம் இருப்பார்!
நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைச் சொல்லுவாங்க!

ஆனா இது இல்லாம, நடந்தான்-னு இன்னொரு கோலமும் இருக்கு! அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு போஸ்! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!
அதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று!




பொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,
அதே போல் பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.
- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்!
- அது துவங்கிய இடம்-னு புண்ணியம் கட்டிக் கொண்ட ஊர் திருக்கோவிலூர்!

இன்றும் திருக்கோவிலூர் முதலான எல்லா வைணவ ஆலயங்களிலும் தமிழ் வேதத்தை ஓதுகிறார்கள். அதற்கு இயற் சாற்று என்று பெயர்! வெண்பாவை நீட்டி முழக்கிச் சொல்லும் போது, எழும் செப்பல் ஓசை அனைவரையும் மயங்க வைக்கும்! செப்பல் ஓசை, அகவல் ஓசைன்னா என்னான்னு வெண்பா வாத்தி கிட்ட கேளுங்க! :-)

தமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை! - மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை! இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று! சிவனையும் சேர்த்தே போற்றிற்று!

வடமொழி வேதங்களை இன்ன இன்ன ஆட்கள், இன்ன இன்ன காலங்களில், இப்படி இப்படித் தான் ஓத வேண்டும் என்று நெறிமுறைகள் இருக்கு!
ஆனால் தமிழ் வேதம் அப்படி இல்லை!
ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் ஓதலாம்! - எந்தச் சாதியினரும், எந்த வேளையிலும் ஓதலாம்!


அந்தத் தமிழ் வேதங்களைச் செய்த ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேரில், ஒன்பது பேர் மற்ற குலங்களில் இருந்து வந்தவர்கள்!
இவர்கள் செய்து வைத்த வேதத்தைப், பெருமாள் கோவில்களில், உயர் குலம் என்று சொல்லிக் கொண்டவர்கள் இன்றும் ஓதிக் கொண்டு தான் உள்ளனர்!
வேள்விகள், பூசைகள், சடங்குகள் - இது எல்லாம் கடந்தது தான் தமிழ் வேதம்! இதற்கு ஒப்பும் இல்லை! மிக்கும் இல்லை!


சரி...வந்தது வந்தோம்...திருக்கோவிலூரை ஒரு ரவுண்டு சுத்திப் பாக்கலாமா? நண்பர் செந்தழல் ரவி, பல படங்களை அனுப்பி இருக்காரு! - நன்றி தல!
ஆனா ரவிக்கு முன்னாடியே திருமங்கை-ன்னு இன்னொரு நண்பர் வீடியோ அனுப்பி இருக்காரு! அவர் கிட்ட காமிரா இல்லையாம்! அதுனால பாட்டுலயே படம் புடிச்சி அனுப்பி வைச்சிருக்காரு! :-)

திருக்கோவல் ஊருல தென்பெண்ணை ஆறு ஓடுது! வயல்-ல கரும்பு போட்டு இருக்காங்க! புன்னை மரம் வேற எங்க பாத்தாலும்!
வண்டு உய்ங்க் உய்ங்க்-னு பறந்து பாட்டு பாட, கரும்பும் அதைக் கேட்டு, தலைய ஆட்டி ஆட்டித் தூங்குதாம் திருக்கோவலூரில்!
ஆங்குஅரும்பிக் கண்ணீர் சோர்ந்துஅன்பு கூரும்
அடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
குழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே

-திருமங்கை ஆழ்வார் பாசுரம்.

திருக்கோவிலூர் பெருமாள் ஓவியத்தையும், திருவிக்ரம சுவாமி கோவிலைப் பற்றியும் கொஞ்சமாப் போன பதிவிலேயே பாத்தாச்சு!
பார்ப்பனர் அல்லாதாரும் ஜீயராக/மடத் தலைவராகவும் வரமுடியும் என்பதற்கு இந்த ஊரே சான்று-ன்னும் சொல்லி இருந்தேன்!

திருக்கோவிலூர்ல புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கு! வீரட்டானத் தலங்களுள் ஒன்று! சிவானந்த வல்லி என்பது இறைவியின் பெயர்! மெய்ப்பொருள் நாயனாரின் சமாதி உள்ள இடமும் கூட! சிவ வேடம் போட்டுக் கொண்டு, கொல்ல வந்தவன் கிட்டேயும் அன்பு காட்டிய நாயனார் அவர்!
இன்னும் கிட்டக்க அறையணி நல்லூர்-னு இன்னொரு சிவாலயம்! இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் நிரம்பி உள்ள ஊர்!

பக்கத்தில் ஞானாந்த சுவாமிகளின் தபோவனம்! அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...சென்ற பதிவில் செந்தழலார் பின்னூட்டங்களைப் படிங்க! நிறைய குறிப்பு கொடுத்திருக்காரு!

உத்தராதி மடத்தின் குருவான ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனமும் அருகே தான் - மணம்பூண்டியில்!



இன்னும் சற்றுத் தொலைவில், ஆதித் திருவரங்கம் என்னும் தலம்! மிகப் பெரிய அரங்கனின் உருவம் இங்கு தான்!

அனைத்துக்கும் மேலாய், பாரியின் நட்புக்காக தன் உயிரையே கொடுத்த தமிழ்ச் செம்மல் கபிலர் - அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறையும், கபிலர் குன்றாய், பெண்ணையாற்றில்!
இன்னும் அருகே பரனூர் என்னும் ஊரு - பரனூர் அண்ணா, கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் தமிழில் ஆற்றொழுக்காய், அருளுரைகள் ஆற்றும் ஊர்! சீர்காழி, சிதம்பரம்-னு....திருக்கோவிலூரைப் புடிச்சாப் போதும், ஒரு ஃபுல் ரவுண்டு வந்துடலாம்!

எல்லாத்த விட முக்கியமான ஒரு இடம் இருக்கு.....திருக்கோவிலூர் பக்கத்துல தான்! - அங்க, பெருமாளுக்கு விபூதி பூசுறாங்க!
வைணவ பக்தர்களும், பெருமாள் விபூதி பூசிக்கறத பார்த்து, தாங்களும் திருநீறு பூசிக்கறாங்கோவ்! - ஆனா அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம்!
அது வரை வர்ட்டா ஸ்டைலில் வரட்டா? :-)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, இத்துடன் திருக்கோவிலூர் பதிவுகள் நிறைந்தன....

Read more »

Tuesday, November 20, 2007

கைசிகப் புரட்சி! "கீழ்க்குலத்தான்" அந்தணனுக்குக் காட்டிய வழி! (மீள்பதிவு)

கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)
இன்று கைசிக ஏகாதசி (Nov-21, 2007). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!

சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!
ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!
அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான்! - இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று!

தொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு? அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....
நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்!!
அவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்!

வைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் "நம்" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் இறைவனை "நம்பெருமாள்" என்றே அழைக்கின்றனர்! அதே போல் நம்பாடுவான்! அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்!

இப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று! பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு!
இங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.

குறுங்குடி நம்பி


அரையர் சேவை

அன்று ஒரு நாள், ஏகாதசி. இரவுப் பூசைக்கு பெருமானைப் பாடி வணங்கக் கோவிலுக்குச் சென்றான். வழியிலும் பாடிக் கொண்டே சென்றதால் அவன் எதிரில் வந்து நிற்கும் பயங்கரத்தை முதலில் கவனிக்க வில்லை!
ஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;
என்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்!!

அந்தணனாகவோ இல்லை உயர் பொறுப்பிலோ இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள்! நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;
ராட்சசன்: அடே, பாடிக் கொண்டா போகிறாய்? சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...!
நம்பாடுவான்: இன்று ஏகாதசி அல்லவா?....
ராட்சசன்: அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது?"

உயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;
வந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;
நம்பாடுவான்: அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே! நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா?
ராட்சசன்: "டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது!"

என்ன செய்வான் நம்பாடுவான்? பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ? அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.
ஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே!
அடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.

தீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்!
வேறு யார்? நம் குறுங்குடிப் பெருமாள் தான்!
"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை! நீ தப்பிச் சென்று விடு", என்று ஆசை காட்டினார் கிழவர்!
நம்பாடுவான்: "என்ன சொன்னீர்கள் தாத்தா? பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, என்னை நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா? அடியான் சொன்ன சொல் தவறலாமா?"

விடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். "பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று? இதோ வாக்கு மாறவில்லை! புசித்துக் கொள்", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
மனம் மாறியது பேய்! இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை முதலில் விட்டது!

ராட்சசன்: "உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக்குக் கொடுத்து விடு! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.
நான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்!

"சரி நீயே விரும்பிக் கேட்பதால், கடைத்தேற இதோ", என்று தன்னுடைய புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான். பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;
"கீழ்க்குல" நம்பாடுவானை அந்த "அந்தணன்" விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.




(Re-enactment)

ஆண்டுதோறும் திருக்குறுங்குடி கோவிலில் இது நாடகமாக நடிக்கப்படுகிறது! (Re-enactment) . இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ். அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். இந்தக் கிராமியக் கலை பற்றி, இந்தச் சுட்டியில் காணலாம்!

இன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது! இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்!
இந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை!
விளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, "புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்" என்றெல்லாம் ஆடாமல்,
இறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்!

இறைவனைத் துதிக்கச் சாதியில்லை!
அடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும்! இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் ராமானுஜர்!
என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்!
யார் தெரியுமா? அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்! இதுவல்லவோ செயலில் புரட்சி!

அமர ஓர் அங்கம் ஆறும், வேதம் ஓர் நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,
நுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே


இந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள்!
வாருங்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்!
(சென்ற ஆண்டு, கைசிக ஏகாதசிக்கு இட்ட பதிவை, மீள்பதிவாக இடுகிறேன்...இந்த ஆண்டும்! - பழைய பதிவுக்கும், பின்னூட்டக் கருத்துகளுக்கும் க்ளிக்கவும்)

Read more »

திருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா? - 2

ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க....இப்போ நால்வர் நெருக்க,
என்னவென்றே புரியவில்லை மூவருக்கும்! நெருக்குதல் அதிகரிக்க அதிகரிக்க, மூவருக்கும் மூச்சு முட்டுகிறது! அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது! திருட்டுப் பயமோ திருக்கோவிலூரில்? முந்தைய பதிவு இங்கே!

யாருப்பா அந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான்? வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல் வருவது? ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே! கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே!
ஓசையும் இல்லை! ஒளியும் இல்லை!

பேய்: இது ஏதோ மனித வாசனை மாதிரியே தெரியல்லையே! மிருகமும் இல்லை! விளக்கு கிடைச்சாலாச்சும் யாருன்னு கண்டுபிடிக்கலாம்! இந்த அர்த்த ஜாமத்தில் யாரிடம் போய் விளக்கு கேட்பது?
(ஹூம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க! ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே! என்ன செய்ய :-)

பூதம்: ஹூம்! இது தான் சரி! நம் யோகத்தில் நாமே ஒரு விளக்கேற்றலாம்!
விளங்க முடியாததைக் கூடி விளக்கிக் காட்டுவது தானே விளக்கு! - அதுக்குத் தானே விளக்கு-ன்னே பெயர்!
நாமே ஏற்றலாம்! பார்ப்போம் ஏதாச்சும் தெரிகிறதா என்று! சரி, எதை வச்சி ஏற்றுவது?
அகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை!

பொய்கை: இல்லை இல்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
இல்லை-யை வைத்துக் கொண்டு ஏதாச்சும் ஏற்ற முடியுமா? முடியும்!!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - இந்த "இல்லை இல்லை"-யை வைத்துக் கொண்டு ஏற்ற முடியுமே!

எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ, கர்மாவிற்கோ, ஏதோ ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்டது!

யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா?
பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க! - இப்படி எல்லாமே, கிடைச்சதும் அடைஞ்சதும் தானே!

இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்!
ஓம் நமோ நாராயணாய!
நமோ என்று சொல்லும் போது, நம என்றே அவருக்குத் தெரிகிறது!
ந ம
= ந (இல்லை) !
= ம (எனது)!!
= எனதில்லை! எனதில்லை!

ஓம் நமோ நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
அனைத்தும் பரம்பொருள் தந்தது! அனைத்தும் பரம்பொருள் தந்தது!

ஆகா! தோன்றி விட்டது திவ்யப் பிரபந்தம்! தமிழ் வேதம்!
பொய்கையார் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகிறார்!
அவருக்கு உலகம் என்னும் நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார். - அரும்பெரும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உலகம் என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல், வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, திவ்யப் பிரபந்தம் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!


உலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,
உயிர் காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...
சக்கரம் ஏந்தியவன் திருவடிக்குச், சொல் மாலை சூட்டினேனே! மனித குலத்தின் இடர் என்னும் இருள் நீங்காதா?

முதல் விளக்கு ஏற்றியாகி விட்டது. அதன் ஒளி, இருளைக் கிழித்து விட்டது!
ஒரே ஒரு சுடர் போதாதா கும்மிருட்டை நீக்க! இனி ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே!
விளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தாழ்வார்!
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்


அன்பை வாழ்வைத் தாங்கும் அகல் ஆக்கினேன், இறைவனிடத்தில் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,
இன்பமாய் உருகி மகிழும் சிந்தனையையே திரியாக்கினேன்...
ஞான விளக்கு ஏற்றினேன்! நாராணனுக்கு ஞானத் தமிழில்(வேதம்) சொன்னேனே!
என்று அன்புக் கண்ணீர் பெருக, பூதத்தாழ்வார் ஏற்றி வைத்த இரண்டாம் விளக்கும் ஜொலிக்கின்றது!

(உலகத்தை ஒரு விளக்காகவும், அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்க வேண்டும்?
ஒன்றில் கதிரவனையும், இன்னொன்றில் நம் சிந்தனையையும் ஏன் திரியாகப் போட வேண்டும்?
முதல் விளக்கு புற அழுக்கு அகற்ற! - அதான் உலகமும், சூரியனும்!
இரண்டாம் விளக்கு அக அழுக்கு அகற்ற! - அதான் அன்பும், சிந்தனையும்!!

இறை தரிசனம் வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்!!!
இதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு வழி காட்டினார்கள்!)



முதல் இருவர் ஏற்றிய விளக்குகள்...மொத்தமாய் இருள் போக்கி விட்டன!
இப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று!
ஆகா...பெருந்திருடன் தான் அவன்! அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது?

பொய்கையும், பூதமும் ஏற்றிய விளக்கின் ஒளியில், கடைசியா அங்கு வந்த பேயாழ்வார் அந்தக் கள்வனை அப்படியே வர்ணிக்கிறார்!
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று


விளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார்? கடவுளா? இல்லை! - ஒரு பெண்! - ஆமாம்! கள்வனின் காதலி, அவன் மார்பில் இருக்கிறாள்! மின்தடை ஏற்பட்டு, பின்னர் வெளிச்சம் வந்ததும், குழந்தைக்கு ஆசையா விளையாடின விளையாட்டுச் சாமானா முதலில் தெரியும்?
இருள் நீங்கி, ஒளி கண்டதும், அம்மாஆஆஆ என்று தாயைத் தானே ஓடிப் போய்க் கட்டிக் கொள்ளும்!

ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்குக் கிடைப்பார்கள்!ஆனால் எல்லாப் பிறவியிலும், வரும் ஒரே ஒரு அன்னை யார்?
அவளே இவள்! - திருக் கண்டேன் - உலகம் அனைத்துக்கும் அன்னை!
திரு! மகாலக்ஷ்மி! அவளைக் கண்டேன்!

திருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்!

பொன்மேனி கண்டேன்! - அடுத்து அப்பனைக் காண்கிறார்! தன் ஒப்பார் இல் அப்பன் - அவன் பொன் மேனியைப் கண்டேன்!

அட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன?
பொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே! பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு இசைத்து என்பதல்லவா பாட்டு!
பெருமாள் நீல மேனியன் ஆயிற்றே! நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும்! - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே! ஒரு வேளை, விளக்கின் ஒளி போதவில்லையா என்ன?
பொய் விளக்கல்லவே இது!
மெய் விளக்க வந்த மெய் விளக்கு ஆயிற்றே! அப்பறம் எப்படி இப்படி?
(அடுத்த பகுதியில் நிறையும்)



இன்று கைசிக ஏகாதசி! (Nov 21, 2007)
தறி கெட்டுப் போன பார்ப்பனன் ஒருவனுக்கு, கீழ்க் குலத்தவன் ஒருவன், உபதேசம் செய்து, மோட்சத்துக்கு வழிகாட்டிய நாள்!
சென்ற ஆண்டு இது பற்றி விளக்கமாக, மாதவிப் பந்தலில் ஒரு பதிவு இட்டிருந்தேன்!
//இந்த ஆண்டு வேறு ஒரு திடீர் பதிவுக்குக் காத்திருங்கள்! :-)// - குமரனின் பரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும்! அடியேன் சென்ற ஆண்டு இட்ட பதிவை மீள் பதிவாக, சில நிமிடங்களில் இடுகிறேன்!

இந்நாளில், இறைவன் திருக்கதைகளைச் செவி குளிரக் கேட்பது, சிந்தைக்கு அமைதி தரும்!
முதலாழ்வார்கள் கதையை இன்று நன்னாளில் சொன்னதும் ஒரு சிறப்பு தான்!

Read more »

Wednesday, November 07, 2007

திருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூதமும்!

திருக்கோவிலூர்-ன்னு ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருக்குன்னாச்சும் நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க! அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம்! - ஹிஹி...புரியலீங்களா?
சரி, அதுக்கு முன்னாடி திருக்கோவிலூர் மண்ணின் மகிமையைக் கொஞ்சம் பார்ப்போம், வாங்க! பார்த்தால், நீங்களும் கொஞ்சம் ஆடித் தான் போயிடுவீங்க!

ஒரு வைணவ மடத்தில், பார்ப்பனர் அல்லாதார் தான் தலைவர் (ஜீயர்).
அவரின் பல சீடர்களும் பார்ப்பனர் அல்லதார் தாம்!
தமிழில் ஆழ்வார் அருளிச் செயல்களையும், வடமொழி வேதங்களையும் பார்ப்பனர்களைக் காட்டிலும் சிறப்பாக ஓதுகிறார்கள்! சாதி வேறுபாடுகள் இன்றிக் கோவிலில் அர்ச்சகர் பணி செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது!

ஜோசப் பாகவதர், புருசோத்தம நாயுடு என்று சில அன்பர்கள் காலட்சேபம் (அருட் பேருரை) செய்கிறார்கள்! அந்தக் கோஷ்டியில் (குழுவில்), பார்ப்பனர்களும் அமர்ந்து கொண்டு, இறைவனின் வைபவத்தைக் கேட்கிறார்கள்!
இந்த மடத்தை, மற்ற மடங்கள் மதித்து நடத்துகின்றன. மற்ற ஜீயர்களும், இந்த ஜீயரும் ஒன்றாகக் கைகோர்த்து சமூகப் பணிகள் செய்கிறார்கள்!

பல்லக்கில் சுவாமி உலாவின் போது, ஊர் மக்களே சாதி வித்தியாசம் இன்றி, நெருங்கிக் கொண்டாடுவதையும் படத்தில் காணலாம்!

இப்படி எல்லாம் செய்து விட்டு, புரட்சி புரட்சி என்று கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கிறார்களா? ஆண்டுக்கு ஒரு முறை கொடி பிடித்து, வெற்றி விழாவில் வீரவாள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களா?
வாய்ச்சொல் புரட்சியா? வாழ்வில் புரட்சியா? - எது வேண்டும்?

இறைப்பணி அமைதியாக நடைந்து கொண்டு தான் இருக்கிறது! இராமானுசர் வகுத்துக் கொடுத்த வழியில், வந்த ஆலய நிர்வாக ஜீயர்கள் இவர்கள்!
அரசின் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டங்கள் எல்லாம் இப்போது வந்தவை! ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி ஒரு மெளனப் புரட்சி, நடந்து கொண்டு தான் இருக்கு!
இது எல்லாம் எந்த ஊர்-லன்னு கேட்கறீங்களா? பதிவின் தலைப்பைப் பாருங்க! :-)

1. தமிழ் வேதங்களான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தோன்றக் காரணமாக இருந்த ஊர் எது?

2. பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே-ன்னு கொல்ல வந்தவனிடத்தும் கருணை காட்டிய மெய்ப்பொருள் நாயனாரின் ஊர் எது?

3. மூவேந்தர்களின் சதியால், வள்ளல் பாரி கொலையுண்டான்! அவன் ஆருயிர் நண்பர் சங்கப் புலவர் கபிலர். பாரியின் மகள்கள் அங்கவை-சங்கவையைக் காப்பாற்றி, பல எதிர்ப்புகளையும் மீறி, "திருக்கோவிலூர்" மலையமானுக்கு மணம் முடித்தார்.
பின்னர் நட்பின் ஆழம் உந்த, தென்பெண்ணை ஆற்றுக் குன்றில், வடக்கிருந்து உயிர் துறந்தார்! இப்படி நட்புக்கு இலக்கணமான ஊர் எது?

4. சம்பந்தர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர் போற்றிப் பாடிய வீரட்டானத் தலம் எது?

5. தபோவனம், ஞானாந்த சுவாமிகள் பக்தி-ஞான யோகங்களை ஒன்றாக்கிக் காட்டிய ஊர் எது?

6. பஞ்ச கிருஷ்ண தலங்களில் (ஐந்து கண்ணன் தலங்கள்) ஒன்றான ஊர் எது?

7. பெருமாள் சங்கை வலக்கையிலும், சக்கரத்தை இடக்கையிலும் மாற்றி வைத்து நிற்கும் வாமன அவதாரத் தலம் எது?




அத்தனைக்கும் ஒரே பதில் தான்!
திருக்கோவிலூர்! - திருக்கோவலூர் என்பது பழைய பெயர்!
(பூங் "கோவல்" நாச்சியார் என்ற அழகிய தமிழ்ப்பெயர் தாயாருக்கு! அந்தக் கோவல் என்ற பெயரில் தான், திருக்கோவலூர் என்று ஊர் பெயரும் முன்பு இருந்தது!

தமிழில் இருந்து கடன் வாங்கி, புஷ்பவல்லித் தாயார் என்று வடமொழிப் பெயர் ஆக்கினாலும், இன்றும் பூங்கோவல் நாச்சியார் என்று அழகிய தமிழில் தான் சொல்கிறார்கள்! பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன்!)

புறநானூற்றிலும் திருக்கோவலூர் சொல்லப்படுகிறது! (முரண்மிகு கோவலூர் நூறி, நின்னிரண்டு திகிரி ஏந்திய தோளே) - 108 திவ்ய தேசங்களில் ஒன்று!!
எங்க கிராமத்துக்கு உண்டான ஜில்லா ஆபிஸ் (மாவட்ட அலுவலகம்) திருவண்ணாமலை. அதுக்கு அருகில் உள்ளது தான் இந்தத் தலம்!
கடலூர், விழுப்புரம் போன்ற ஊர்கள் இன்னும் கிட்டக்க! காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று காவிரிக்கு அடுத்ததாக, இந்த ஊர் தென்பெண்ணை ஆற்றைத் தான் அடுக்குகிறான் பாரதி!

எதுக்கு திருக்கோவிலூருக்கு, இன்னிக்கி இவ்ளோ பில்டப்பு-ன்னு பாக்கறீங்களா? - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது! (ஐப்பசியில் திருவோணம், அவிட்டம், சதயம்)
அவங்க மூன்று பேரு = பொய்கை, பூதம், பேய்!
அவங்க தான் முதன் முதலில் வந்த ஆழ்வார்கள்! முதலாழ்வார்கள் என்றே பெயர்! அவங்க மூவரும் ஒன்னா அருளிய பாட்டு தான், இன்னிக்கி Me the First! ஆக நிக்குது :-)
இப்படி தமிழ் வேதங்களுக்குக் காரணமான ஊர்-னு, திருக்கோவிலூர் பெயர் தட்டிக் கொண்டது!

திவ்யப் பிரபந்தம் எப்படி உருவாச்சு? அப்பறம் அது எப்படி மறைஞ்சி போச்சி?
திரும்பி எப்படிக் கிடைச்சது?
திருவரங்கத்தில் தமிழ் ஆட்சி மொழியானது எப்படி? - இப்படி ஒவ்வொரு கதையா இனிமேல் வரும் பதிவுகளில் பார்க்கலாம், வாங்க!




திருக்கோவிலூரில் அன்னிக்கி ஒரே அடை மழை! கும்மிருட்டு வேறு!
பெருமாளிடத்தில் மிகவும் ஆழ்ந்து போன பக்தர் ஒருவர் காஞ்சிபுரம்-திருவெக்கா என்னும் ஊரில் இருந்து புறப்பட்டு, திருக்கோவலூரை வந்து அடைகிறார்! அவர் பெயர் பொய்கையார்.

பொய்கை: உஷ்...அப்பாடா...உணவில்லாமல் ரொம்ப தூரம் நடந்து விட்டோமே! இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம்! இதுக்கு மேல் மழையில் பயணம் செய்ய முடியாது!
உலகளந்த பெருமாள்-ன்னு இந்த ஊருக் கடவுளைச் சொல்றாங்க! உலகத்த அளந்தவரு, என்னைக்கி நம்ம மனத்தை அளக்கப் போறோரோ, தெரியலையே!

அது ஒரு பக்தரின் வீடு போலும்! எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள்! அந்த வீட்டின் கதவைத் தட்டுகிறார்!
அந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்ஷ்டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை போலும்! திவ்யப் பிரபந்தம் தன் வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன?

பொய்கை: ஐயா, மழை அதிகமா இருக்கு! குளிரத் தொடங்கி விட்டது! இன்று இரவு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா? உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை! திண்ணை இருந்துச்சுன்னா அங்கேயே தங்கிப்பேன்.
அதுவும் இல்லை! அதனால் இப்படி தேகளியில் தங்கிக் கொள்கிறேனே!
(தேகளி=இடைக்கழி; ரேழி, நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசப்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்!)
நாளை காலை தரிசனம் முடித்துக் கிளம்பி விடுவேன்! நான் நம்பிக்கையான ஆள் தான்! பெருமாளுக்கு அடியவன், பெயர் பொய்கை, ஊர் காஞ்சி!

சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம் நான் கதவைச் சாத்திக் கொள்கிறேன்!
வீட்டில் உணவு தீர்ந்து விட்டது! பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி!

பொய்கை: வேண்டாம்-ப்பா, மிக்க நன்றி! நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன்! வீட்டில் அனைவருக்கும் என் ஆசியைச் சொல்லுங்க!

ஹூம்...என்னமோ தெரியலை இன்னிக்கி!
பசியும் எடுக்குறா மாதிரி இருக்குது! ஆனா ரொம்ப பசிக்கவும் இல்லை!
ஐப்பசியில், அவன் பசி தான், என் பசியையும் மிஞ்சுகிறது! இறைவா!
கையை அவர் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டது தான் தாமதம்!
டக் டக் டக்!
- இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! அவரும் பார்க்க அடியவர் போல் தான் உள்ளார்!

பூதம்: சுவாமி அடியேன் பெயர் பூதம்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்கு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா?

பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க!
இங்கு இடங் கொடுத்தவர் உறங்கப் போய் விட்டார்!
இவ்வுலகில் இடங் கொடுத்தவனும் அரங்கத்தில் உறங்கப் போய் விட்டான்!
நாம் தான் இடைக்கழியில் கிடந்து அல்லாடுகிறோம்!
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! (உட்காரலாம்)

இருவரும் அமர்ந்து, பேசத் தொடங்கலாம் என்று எண்ணுகிறார்கள்!
மீண்டும் டக் டக் டக்!
இன்னொருவர் தட்டுகிறார்! அவரும் அடியவர் போல் தான் உள்ளார்!
பேய்: சுவாமி அடியேன் பெயர் பேய்; நான் திருமயிலையில் இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக் கொள்கிறேனே!

பொய்கை: வாங்க, சாரலில் நனையாதீங்க! இன்று என்ன விசேடமோ தெரியவில்லையே!
இது அடியேனுக்கு உரிமை இல்லாத இடம்; இங்கு போய் அடியவருக்கு இடவசதி செய்து தரக் கட்டளையா?
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! மூவர் நிற்கலாம்!!!

மூவரும் நின்று கொண்டே, இறைவனின் குணானுபவங்களைப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்!
குறுகலான இடம்! ஆனால் மூவரின் மனத்தில் எந்தக் குறுகலும் இல்லை!
நீங்க என்ன சாதி, அவங்க என்ன கோத்திரம் என்றெல்லாம் ஒருவரை ஒருவர் எதுவும் கேட்கவுமில்லை!
கூடும் அன்பினால் கும்பிடல் அன்றி, வேறெந்த எண்ணமும் அங்கு இல்லை!

திடீரென்று...கும்மிருட்டில்...
மூவருக்கும் மூச்சு திணறுகிறது!
மூவர் நிற்கும் இடத்தில், இப்போது ஒருவருக்குக் கூட இடமே இல்லாதது போல் ஒரு உணர்வு!
யாரோ பிடித்து நெருக்கறாங்க! அச்சோ வலிக்கிறதே!!! - கள்வனோ?
(நாளை தொடரும்...)

Read more »

Wednesday, October 31, 2007

அமெரிக்கா ஆடும் பேயாட்டம்! (மீள்பதிவு)

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.
சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.
"முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு" விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.

பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும் பூசணிக்காயா?
ஆமாம். எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள்.
ஏன்? எதற்கு?
என்ன ஆச்சு இந்த அமெரிக்காவுக்கு-ன்னு கேட்கறீங்களா?
Oct 31 இரவு - பேய்களின் திருவிழா - பேரு ஹாலோவீன் (Halloween).

இன்னாது? பேய்க்கு எல்லாம் திருவிழாவா?...
வாங்க என்னன்னு பாக்கலாம்.
ஸ்காட்லாண்டு மற்றும் ஐரிஷ் மக்கள் கொண்டாடிய இந்த விழா, அவர்களுடன் அப்படியே புலம் பெயர்ந்து, அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டது!
ஆன்மாக்களுக்கும் (All Souls), புனிதர்களுக்கும் (All Saints) கொண்டாடப்பட்ட விழா, இன்று பேய்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
All Hallows Eve என்பது Halloween என்றாகி விட்டது.

ஐரிஷ் நாட்டு கெல்ட் இன மக்கள், குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் ஆவிகள் எல்லாம், பூமிக்கு விஜயம் செய்வதாக நம்பினர்.
உணவுக்கும், இறைச்சிக்கும், உற்சாக பானத்துக்கும் மட்டும் இன்றி, தங்களுக்கு ஆள் எடுக்கவும் அவை பூமிக்கு வருமாம்.
ஆனால் பெரிய பெரிய தீ மூட்டிக் கொண்டாடினால், அவை பயந்து ஓடி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
மேலும் மக்கள் எல்லாரும் பேய்களின் உடை அணிந்து கொண்டு, பேய் வேடம் போட்டு, ஊருக்குள் உலாவினர்.





அவர்களைப் பாத்து, 'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல; சரி மனிதர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லலாம்', என்று பேய்கள் போய்விடும் என்று நம்பினர்.
அறுவடைக் காலம் நெருங்குவதால், சல்லீசாக கொட்டிக் கிடக்கும் பூசணிப் பழங்கள்; அவற்றைத் தோண்டி, ஓட்டை போட்டு, அதன் மேல் கண்டபடி வரைவார்கள்.
பின்னர் அதை ஒரு கூடை போல் ஆக்கி, அதற்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, ஊர் சுற்ற வேண்டியது தான்!
இப்படித் தீயவைகளை ஏமாற்ற, தீயவர் போல் நடிக்கும் ஒரு விழா உருவாகி விட்டது! :-))

அட்சய திருதியை அன்று அலைமகளை வணங்கி, நமக்கு இருக்கும் செல்வத்தில் சிறிது தானம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அதை அப்படியே உல்டாவாக்கி, இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று நம்ம ஊர் வியாபார காந்தங்களும், மக்கள்ஸும் சேர்ந்து, (ஏ)மாற்றி விட்டார்கள் அல்லவா?
இது நம்மூருக்கு மட்டும் இல்லைங்க, எல்லா ஊருக்கும் பொது தான் போல இருக்கு!
அமெரிக்காவிலும் இதை அப்படியே மாற்றி, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் விழாவாக மாற்றி விட்டன நிறுவனங்கள்.

இன்றைய ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஒரே ரகம் தான்.
பேய், ஆவி, கிழவிகள், பூனை மீசை, தேவதை எனப் பலவாறாக குழந்தைகள் வேடமிட்டுக் கொள்வர்; இதற்கான உடைகளைப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்.
வீடுகளையும் பேய் வீடு போல அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். (கெட்டுது போ...ன்னு யாரோ அங்க முணுமுணுக்கறாப் போல இருக்கே?:-)
ஒட்டடை, சிலந்தி வலை, பூசணி, பூனை முகம், ஆந்தை, ஒளி விளக்கு இப்படி பல வழி இருக்கு!

அப்புறம் என்ன, வேடமிட்ட குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் 'கோவிந்தா' போட வேண்டியது தான். பூசணி உண்டியல் குலுக்க வேண்டியது தான்!
ட்ரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat?? ) -
என்னை ட்ரீட் செய்கிறாயா இல்லை உன் மேல் ட்ரிக் பண்ணட்டுமா என்று சிறார்கள் கேட்க,
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகளின் பூசணிப் பையில் நிறைய மிட்டாய்களைப் போட்டு ட்ரீட் செய்கிறார்கள்!






உணவு இல்லாத பண்டிகையா?
சோள மிட்டாய் (candy corn), பூசணிப் பிரட் (pumpkin bread), பூசணி அல்வாத் துண்டு (pumpkin pie)...இன்னும் நிறைய!
தண்ணித் தொட்டியில், காசுகளை ஆப்பிளுக்குள் புதைத்து, ஆப்பிள்களை மிதக்க விடும் விளையாட்டும் உண்டு. (Bobbling for Apples)
சிறார்கள் வாயாலேயே ஒடும் (மிதக்கும்) ஆப்பிளைப் பிடிக்கும் விளையாட்டு!
மின்னசோட்டாவில் உள்ள அனோகா நகரம் தான் ஹாலோவீன் கொண்டாட்டங்களின் தலைநகரம். (என்ன குமரன்... கொண்டாடப் போனீங்களா?)
சேலம் (அட நம்மூரு...?) , (அட, இது வெட்டிப்பையல் பாலாஜிக்கு பக்கத்து ஊராச்சே), கீன் (நியு ஹாம்ப்ஷையர்), மற்றும் நியுயார்க் நகரங்களிலும் பெரும் கொண்டாட்டங்கள் உண்டு!
அட... டிவியைப் போட்டாக் கூட ஒரே பேய்ப் படமால்ல இருக்கு!
மொத்த ஊரையே இப்பிடி பேய் பிடிச்சு ஆட்டினா, என்ன பண்றது?
யாராச்சும் பேய் ஒட்டறவங்க இருக்கீங்களாப்பா? :-))

ஊரே பூசணி மஞ்சளில் மூழ்கியிருக்க, என்ன நாமளும் கோவிந்தா போடலாம் வாரீகளா?
"பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தனை", கண்களே காணுங்கள்-ன்னு அப்பர் சுவாமிகள் சொல்வார்; அது மாதிரி நம்ம சிவபெருமானுடைய பூத கணங்களின் விழா-ன்னு வேணும்னா நினைச்சிக்குனு ஒரு ரவுண்டு கொண்டாடிட்டாப் போச்சு! என்ன சொல்றீங்க?

சென்னைக்கு அடுத்த முறை போகும் போது அம்மாவிடம் சொல்லி பூசணிக்கா கூட்டும், பூசணிப் பழ அல்வாவும் செய்யச் சொல்லணும்! :-)
மறக்காம அமெரிக்கப் பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லி
....ய்ப்பா யாருப்பா அது பூசணிக்காய நடுரோட்டுல போட்டு உடைக்கிறது...அதெல்லாம் இங்க allowed இல்ல சொல்லிட்டேன்...
Trick or Treat??.........
அன்பே வா......அருகிலே....!!!


பழைய பதிவின், பின்னூட்டங்களின் சுட்டி இதோ
Read more »

Sunday, October 28, 2007

இராவணன் கோவில் மூடப்பட்டது!

தினமலர் செய்தி: (Oct 28, 2007)
ராம பக்தர்கள் வெகுண்டெழுந்ததால், ராவணன் கோவில் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது.
கடந்த வியாழன் கிழமை, இந்த கோவிலில் ராவணன் சிலைக்கு விசேஷ அபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்காக, பிரமாண்ட பந்தல் போட்டு, யாக குண்டங்களும் அமைத்திருந்தனர்.
ஆனால், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். `நம் கடவுள் ராமன் தான். தவறு செய்த ராவணனை அழித்தவர் அவர். அந்த அசுரனை நாம் வழிபடக் கூடாது. நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கத்தினர்.உடனடியாக போலீசார் தலையிட்டு ராம பக்தர்களை சமாதானப்படுத்தி, கோவிலில் இருந்து வெளியேற்றினர்
.

அதன் பின்னும், `கோவிலில் ராவணனுக்கு விசேஷ பூஜை செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று இந்து அமைப்புகள் எச்சரித்ததால், விழாவை நிறுத்தி விடும் படி கோவில் நிர்வாகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதன் படி கோவிலில் விழா நிறுத்தப்பட்டது. விழாவை ரத்து செய்துவிட்ட நிலையில், மீண்டும் பிரச்னை வரலாம் என்று போலீஸ் எண்ணுவதால், கோவிலை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ராவணன் கோவில் மட்டும் மூடப்பட்டது.

கோவிலை நிர்வகிக்கும் கமிட்டி செயலர் அஜய் தவே கூறுகையில், `இந்த கோவிலில் ராவணன் சிலை, சமீபத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்கனவே, ராவணன் சிலைகள் இருந்தன. அவற்றை தான் மீண்டும் வைத்தோம். ஆனால், அதற்கு பிரச்னை கிளம்பியதால், அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்' என்று கூறினார்.

ராவணன் கோவிலில், சிவன் உட்பட மற்ற கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன. அந்த சன்னிதிகளுடன் சமீபத்தில் ராவணனுக்கு தனி சன்னிதி அமைத்து, தனி வழி அமைக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து தான் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ராவணன் கோவில் நிரந்தரமாக மூடப்படலாம் என்று தெரிகிறது.



மேற்கண்ட செய்தியைப் படித்ததும் முதலில் சிரிப்பு தான் வந்தது!
இராவணனுக்குப் பெரிதாக வழிபாடுகள் எல்லாம் எங்கும் கிடையாது! அப்படி இருக்க, இப்படி ஒரு சர்ச்சை தேவையா?
முதலில் பதிவிட எண்ணவில்லை!
எப்படியும் சற்றுமுன் தளத்தில் சிவபாலன் செய்தியாகப் பதிவார் என்று எண்ணினேன்.

அப்புறம் தான் தோன்றியது, அட இராவணனுக்கென்றே நம்ம சிவன் கோவில்களில் ஒரு வாகனம் இருக்குமே! அதை யாரும் பார்க்கவில்லையா? பார்க்காமலேயே சண்டை போடுகிறார்களா?
சரி, அப்படிப் பாக்கலைன்னா, இதோ பார்த்துக் கொள்ளுங்கள்! :-)


பல வைணவத் தலங்களில், இராவணன் சிலை, சில கோபுரங்களிலாவது பார்த்துள்ளேன்....படம் கிடைத்தால் பின்னர் இடுகிறேன்.

மேட்டர் ரொம்ப சிம்பிள்!

1. இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்!
மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்!
ஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்?...
அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)

2. இராவணின் மனைவி மண்டோதரியை கற்புக்கரசிகளுள் ஒருவராக வைத்து வழிபடுகின்றனர்! தேவர்களில் அருந்ததி இருக்கும் லிஸ்ட்டில், அரக்கி மண்டோதரியா என்றெல்லாம் எவரும் கேட்டதில்லை! அவளுக்கும் அதே மதிப்பு தான் தருகின்றனர்! தேவர்-அசுரர் பிரச்னை எல்லாம் இங்கு ஒன்றும் இல்லை!

3. இராவணின் மீது சிவபெருமான் உலா வருவது, இன்றும் தென்னாட்டில் பல கோவில்களில் வழக்கம்! திருவண்ணாமலையில் இதைக் கண் கூடாகக் காணலாம்!

அதுக்கு இராவண கர்வ பங்க வாகனம் என்றே பெயர்! அதாவாது இராவணன் செருக்கழி ஊர்தி!
சிவபெருமான் உருவம் சின்னதாகத் தான் இருக்கும்!
இராவணனின் வாகனம் தான் கம்பீரமாப் பெருசா இருக்கும்!
அதுக்காக சிவனை இப்படி இன்சல்ட் பண்ணுறீங்களே-ன்னு இது வரை யாரும் கேட்டது கூட கிடையாது! :-)

காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

குறளில் தத்துவமாக இருந்தால், காவியத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கிறது! அவ்வளவு தான்!

ஆனால் நாம் தான்,
ஹீரோ-வில்லன் என்று இறுதி வரை, பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டு போய் விட்டோமே! கருத்துக்களை விட்டு விடுவோம்; ஆட்களை மட்டும் பிடித்துக் கொள்வோம்!
இராமன் காட்டிய வழியில் அன்பும், பொறுமையும், சாத்வீகமும், சான்றாண்மையும் தேவையா?
இல்லை எப்பவுமே ஹீரோ-வில்லன் தான் தேவையா?
எது வேண்டுமோ, அதை அவரவர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஆனால் ஒரே ஒரு விஷயம்: இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்! இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP