Sunday, April 22, 2007

துலுக்கா நாச்சியாரும், லுங்கி அலங்காரமும்! - 2

சுல்தானி பீவியின் விளையாட்டுப் பொருள் ஆனான் அல்லவா நம்ம பெருமாள்? ஆனால் இப்போது கதை மாறி அவன் வழக்கமாய் ஆடும் விளையாட்டை ஆடுகிறான்; பார்க்கலாமா? இதற்கு முந்தைய பாகம் இங்கே!

இராமானுசர் எவ்வளவு கேட்டும், விக்ரகத்தைத் தர மாட்டேன் என்று அடம் பிடித்தாள் சுல்தானி. சின்ன வயசுப் பெண் தானே!
அரசனுக்கோ தர்ம சங்கடம். தருகிறோம் என்று ஜம்பமாய் சொல்லி விட்டோமே! ஆசை வார்த்தைகள், வேறு பொம்மைகள் என்று காட்டினான் - எதற்கும் மசியவில்லை சுல்தானி. பெண்ணை மிரட்டினான்! உறுமினான்!

வேண்டாம் என்றார் உடையவர். "குழந்தே! சரி, நீ தர வேண்டாம். உன் கையிலேயே வைத்துக் கொள்! ஆனால் அதுவாய் என்னிடம் ஓடி வந்தால் நான் எடுத்துக் கொள்ளட்டுமா?"

"இந்தத் தாத்தாவுக்கு கிறுக்கு பிடித்து விட்டது போலும். வாப்பாவைக் கேட்டாலே மிரட்டி வாங்கிக் கொடுத்து விடுவார். பாவம் தாத்தா, நல்லா ஏமாறப் போகுது"
- சிரி சிரி என்று சிரித்துக் கொண்டாள். சரி சரி என்று தலை சரித்துக் கொண்டாள்!

இராமானுசர், இறைவனை மனதில் துதித்து, "என்ன திருவிளையாட்டோ இது! இருப்பிடம் ஏகுவீர் பெருமானே", என்று பிரார்த்தித்தார்.
தன் கருணை பொழியும் கண்களால், பெருமாளையே அன்புடன் பார்த்துக் கடாட்சித்து,
எந்தை வருக, ரகுநாயகா வருக, என்கண் வருக, எனது ஆருயிர் வருக!
வாரும் செல்வப் பிள்ளாய், வாரும் செல்வப் பிள்ளாய்...என்று அழைக்க....

nuja4

இராமானுசரின் மடியில் செல்வப் பிள்ளை

ஆ...என்ன அதிசயம்!
செல்வப் பிள்ளை விக்ரகம், அவள் மடியை விட்டு நீங்கி, சாவி கொடுத்த பொம்மை போல்,
சிறு சிறு அடியாய், குடு குடு நகர்ந்து, இராமானுசரின் கரங்களுக்குள் வந்து விட்டதே!

நன்றி மன்னா! குழந்தாய், நாங்க வருகிறோம்! - இராமானுசர் சொல்ல, அவருடன் கோஷ்டியும் கிளம்பி விட்டது! இது என்ன, கண் முன்னே கண் கட்டு வித்தையா? சபையில் எல்லாரும் வாயடைத்துப் போய் நிற்க, சுல்தானிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!

நீங்களே பாருங்கள் செல்வப் பிள்ளையை, அவன் திருமுகத்தை, அவன் பொம்மையாக இருந்து தேய்ந்து போன தழும்புகளை!

49704388.P1010092



அன்று முதல் சுல்தானி, பித்துப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள்.
ஊண் இல்லை, உறக்கம் இல்லை! Teddy Bear-ஐக் கட்டியணைத்து உறங்க முடியவில்லை! பெற்றோர் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்!
அதை விட விசேடமான பொம்மைகள், ஆட்டம் போடும் பதுமைகள்! - ஹூம்...ஒன்றும் சரி வரவில்லை!
பார்த்தான் அரசன்; இராமானுசர் குழாத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான்!

ஆனால் காலம் கடந்து விட்டதே! அவர்கள் எல்லையை விட்டு எப்போதோ போய் விட்டார்களே! "மோசக்காரர்கள், கொள்ளையர்கள், கண்கட்டி வித்தைக்காரர்கள்" - அரசன் சீறினான்!
கொள்ளையடித்த பொருள் கொள்ளை போனால் கொள்ளையர்கள் மற்றவரைக் கொள்ளையர்கள் என்று கூவுவது வாடிக்கை தானே! :-)

"வேண்டாம் வாப்பா, நானே போய் அந்தத் தாத்தாவிடம் கேட்டு வாங்கி வருகிறேன்! என்னுடன் சில ஆட்களை மட்டும் அனுப்புங்கள்"
கிளம்பி விட்டாள் சுல்தானி; அவள் கிளம்பக் கேட்டு, பக்கத்து நாட்டு இந்து இளவரசன் ஒருவன், குபேர் என்று பெயர், அவள் பின்னாலேயே கிளம்பினான் பாதுகாப்பாக!
ஏன்? - ஏன்னா அவனுக்கு இவள் மேல் ஒரு-காதல்! ஒரு-தலைக் காதல்!!


அங்கு என்னடாவென்றால் மேலக்கோட்டை நெருங்கும் போது ஒரு சோதனை! வழியில் வழிப்பறிக் கள்வர்கள்!
நாமக்காரப் பசங்க, ஆண்டிகள் தானே என்று விட்டுவிட்டனர்; சற்று தொலைவு போனதும் தான் இராமானுசர் கையில், துணி மூடியுள்ள, ஜொலிக்கும் மூர்த்தியைப் பார்த்தார்கள்.
அடடா, பெருமாளைத் துரத்திக் கொண்டு பின்னே செல்ல இத்தனை கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?

ஒரு கிராமத்துக் குடியிருப்புக்குள் அந்தக் கோஷ்டி புகுந்தது. அதுவோ ஒரு புலையர் சேரி!
உடையவர் ஒரு குடிசையில் உதவி கேட்டு உள்ளே புகுந்தார்.
உடன் வந்த மற்றவர்க்கோ தயக்கம்! ஆனாலும் உடையவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது?
சேரி மக்கள் கொள்ளையரைத் திசை திருப்பி அனுப்பி விட்டனர்;
இராமானுசர் வெளியில் வர, துணிக்குள் என்ன சாமீ, என்று ஆர்வமாய்க் கேட்டனர் சேரி மக்கள்!

2006040603530201melkote


துணிக்குள் இருக்கும் செல்வப் பிள்ளையைப் பார்த்தவுடன், சேரி மக்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! குடிசைக்குள் ஓடிப் போய், கம்பங்கூழும், வாழைக்காயும் எடுத்து வந்து கண்ணனின் காலடியில் வைத்தனர். இவர்களின் தூய அன்பைக் கண்டு இராமானுசர் கண் கலங்கினார். "வாருங்கள் என்னுடன் கோவிலுக்கு; செல்வப் பிள்ளையை நிறுத்தி வைக்கலாம்" என்று அழைத்தார்.

நடுநடுங்கி விட்டனர் சேரி மக்கள்; இராமானுசர் கூட வந்தவர்கள் சில பேருக்குக் கூட இது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை! ஆனால் இந்தச் "சீரங்கத்துச் சாமியார்" விடுவதாக இல்லை! கணவன் நாரணனைக் காத்ததால், அவன் மனைவி, லட்சுமியின் வீட்டார் இவர்கள்; திருவின் வீட்டார்!

தீட்டுக் குலம் என்பதை மாற்றித், திருக்குலம் என்று ஆக்கினார். திருக்குலத்தார் என்று பெயரும் சூட்டினார்.
800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் ஹரி-ஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே, சொல்லிச் சென்றார் இராமானுசர்.
வைக்கம் கோவில் நுழைவு செய்த தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே,
செயலில் செய்து காட்டிய தீரர் ஆனார் இராமானுசர்.


மேலக்கோட்டை திருநாராயணன் ஆலயத்தில், உற்சவர் செல்வப் பிள்ளையின் விக்ரகம் குடி கொண்டாகி விட்டது! வழிபாடுகளும் தொடங்கி விட்டன!
பின்னால் துரத்திக் கொண்டு வந்த சுல்தானி...அரசனின் செல்வப் பெண், துரும்பாய் இளைத்துப் போய் விட்டாள்; கலைந்த கூந்தலும் ஒட்டிய தேகமுமாய் அவளைப் பார்த்தால் ராஜகுமாரி என்றே சொல்ல முடியாது!
வந்து சேர்ந்தாள், நொந்து நூலாய்!

49203441_Thirunarayana
கண்ணன் காலடியில்...


உற்சவர் ஆகி விட்ட தன் கண்ணனைப் பார்த்து விட்டுக் கண் கலங்கினாள், சுல்தானி. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! கத்திக் கலாட்டா செய்ய வில்லை. ஆனால் கண்ணீரும் நிற்கவில்லை!
இரு கை தலை மேல் குவித்தாள்!
மூர்ச்சை ஆனாள். மயங்கி ஒடுங்கி, கீழே விழுந்தாள்! உயிர் பிரிந்தாள்!

அனைவரும் பயந்து விட்டார்கள்! இராமானுசருக்குச் சேதி சொல்லப்பட்டது!
கண் கலங்கினார்; அவருக்குத் தெரியும் அவள் கதி என்னவாயிற்று என்று!
கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே

யான் உனைத் தொடர்ந்தாள்; சிக்கெனப் பிடித்தாள்; எங்கு எழுந்து அருளுவது இனியே?
புகல் ஒன்று இல்லா அடியாள், அவன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து விட்டாள்!

அவளுக்கு வேண்டிய மரியாதைகள் குறைவின்றிச் செய்யப்பட்டன.
அவளைப் பின் தொடர்ந்து வந்த காதலன் குபேர் கதறி அழ, அவனைத் தேற்றி, மனச்சாந்தி பெற, பூரி ஜெகன்னாதர் ஆலயம் அனுப்பி வைத்தனர்.

அவள் சிறிய உருவத்தினை, மூலவரின் திருவடிகளில் செய்து வைத்தார், இராமானுசர்!
இன்றளவும் ஆலயத்தில் ஸ்ரீ பாத தரிசனத்தின் போது, அவளுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள்!
துலக்கராய்ப் பிறந்து, துழாய் மாலை வாசனை அறியாத போதும்,
பரந்தாமனிடத்தல் தன்னையே பறி கொடுத்தவள் - அதனால்
சுல்தானி பீவி என்பவள் நாச்சியார் ஆனாள்! வெறும் நாச்சியார் இல்லை!
துலுக்கா நாச்சியார்!! பீவி நாச்சியார்!!!


மேற்கண்ட கதையை வரலாற்றுப் பூர்வமாக அறிய முடியவில்லை.
என்றாலும் குரு பரம்பரைக் கதைகள் இவளைப் பற்றியும் இராமானுசர் காலத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வுகள் பற்றியும் குறிப்புகள் செய்கின்றன.
இவளின் பெருமாள் ஈடுபாடு இராமானுசரை மிகவும் ஈர்த்து விட்டது. அதனால் இவளுக்கு என்று பல நியமங்களைக் கோவில் பூசைகளில் செய்து வைத்தார்.

திருவரங்கத்தில் உள்ள துலுக்கா நாச்சியாரும் இவள் தான். இராமானுசர் இவள் பக்தியை மெச்சி, வைணவத் தலைநகரமாம் திருவரங்கத்தில் இவளுக்கு என்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தினார் என்று சொல்கின்றனர்.
ஆனால் அங்கு உள்ளவள் தில்லி சுல்தான் மகள் என்று கருதுவோரும் உண்டு!
மதுரை, கீழ்த்திருப்பதி போன்ற ஆலயங்கள் திருச்சுற்றில், இவளுக்கு என்று தனிச் சன்னிதிகள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டன.
இன்னும் ஆந்திரக் கோவில்களில் இவளை பீவி நாஞ்சாரம்மா என்று தான் வழிபடுகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில், ஐந்தாம் பிரகாரத்துக்கு முன்பு, கிளி மண்டபம் அருகே, இவள் சன்னிதி உள்ளது! வரையப்பட்ட படமாகத் தான் அவள் சன்னிதியில் இருக்கிறாள்!
அந்த மண்டபத்தில் முகம்மதியக் கலாச்சாரங்கள் பற்றிய சில சிற்பங்களும் காணப்படுகின்றன. இராமானுசர் ஓவியமும் அங்கு உள்ளது!

பகல் பத்து உற்சவத்தின் போது,
பெருமாள் இவள் சன்னிதிக்கு, கைலி வஸ்திரம் (லுங்கி) அணிந்து வருகிறான்.
மூலவருக்கும் கூட லுங்கியால் அலங்காரம் செய்யப்படுகிறது;
வட இந்திய உணவான ரொட்டி, வெண்ணெய், பருப்புப் பொங்கல் நிவேதனம் செய்யப்படுகிறது!

இப்படி அனைவரையும் பெருமாளிடத்தில் அரவணைத்துச் சென்றவர் இராமானுசர்.
அவர் அவதாரத் திருநாள் இன்று! அவர் மறைந்த நாளும் இன்றே!
சித்திரைத் திருவாதிரை (Apr 22, 2007) - இராமானுச ஜெயந்தி அன்று அன்னாரின் தொண்டு உள்ளத்துக்கு, அனைவரும் தலை தாழ்த்தலாம் வாருங்கள்!

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!
சீர் பெரும்பூதூர் இராமானுசன் திருவடிகள் வாழியே!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!!
Read more »

Friday, April 20, 2007

புதுஜெர்சியில் பதிவர்கள் ஆடப்போகும் கிரிக்கெட்!

இன்று அட்சய திருதியையாமே? இந்த நாளில் எது செய்தாலும், இரு மடங்காகத் திரும்பி வருமாமே! ஒரு பவுன் தங்கம் வாங்கினா, இரண்டு பவுன் வருமா?

* வரும் டா, வரும்! இப்ப எனக்கு நல்லா வருது!
அட, இதெல்லாம் சுத்த டுபாக்கூர்-பா; நகைக்கடை முதலாளிகள் எல்லாம் ஒண்ணா உக்காந்து யோசிச்சு, அடிச்சு ஆடும் கும்மிப்பா, கும்மி!

அட, அப்ப எது தான்பா சரி?
அட்சய திருதியை அன்று என்ன தான் செய்யணும்? நீயே சொல்லேன்!

* ஆங், இது கேட்டியே, நியாயமான கேள்வி. இதைப் பதிவர்கள் கிட்ட போய்க் கேள்! அவங்க தான் கரெக்டா சொல்லுவாங்க!

அதாச்சும், இந்த விசேடமான நாளில்,
நாம எவ்வளக்களவு மத்த பதிவுகளில் பின்னூட்டம் போடுறமோ,
அதை விட இரண்டு மடங்காய்,
நமக்குப் பின்னூட்டங்கள் கொட்டிக்கிட்டு வரும்!

புரியுதா? இது தான் அட்சய திருதியையின் மகிமை! :-)
அதுனால, சும்மா காலங்காத்தால நகைக்கடை முன்னாடி போய் நிக்காம,
ஒழுங்கா எல்லாப் பதிவுக்கும் போயிட்டு வா! இன்னா...புரிஞ்சுதா?

* ஆ..மெய்யாலும் தான் சொல்லுறியாப்பா?
ஆமாம்பா, கருட புராணத்தில் சொல்லியிருக்கு; தெரியுமா?
வேணும்னா, அம்பி கிட்ட கேட்டுக்குறியா? பதிவர் அம்பி இல்லப்பா....நம்ம அந்நியன் அம்பி!

* அட, அப்படியே, இதெல்லாம் செய்தாக் கூட பெருசா என்ன பிரயோஜனம், பிரதர்?
அதான் நாப்பது பின்னூட்டம் மேல அலவுட் இல்லை என்று ஆண்டவன் விதி எழுதிட்டானே! :-) பாவம்...எத்தனை பதிவர்கள் இது பற்றி நொந்து போய், இன்னும் பதிவு போட்டுக்கினு இருக்காங்க தெரியுமா?
அட்சய திருதியை அன்று நான் இருவது பின்னூட்டம் தான் போடுவேன்;
அது டபுள் ஆகி நாப்பது வந்தாப் போதும்! :-)


என்னடா இது இம்மாம் பில்டப்பு என்று பாக்கறீங்களா?
அதான், நாள் நெருங்குதுல!

கொற்றவன் கொத்தனார் தலைமையில், புது ஜெர்சியில்,
பதிவர்கள் எல்லாம் ஒன்று கூடி, மட்டையடி அடிக்கப் போறாங்களாமே!
அதுக்குத் தான் இந்த வெள்ளோட்டப் பதிவு!
(நன்றி: mid-day.com ponnappa cartons)


ஏற்கனவே, எல்லாரும்,
தமிழ்மணத்தில் நீங்க எதிர்பார்ப்பது என்ன?
என்கிற பதிவு பார்த்திருப்பீங்க! பலப்பலக் கருத்துக்களை விவாதம் செஞ்சிருப்பீங்க! அது எல்லாத்தையும் எங்கே வந்து சொல்லி அசத்தணும்-னு தெரிய வாணாமா?

அதாகப்பட்டது,
2007, ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 28 ஆம் நாள்,
("சர்வே"-ஜித் வருடம், சித்திரை மாசம், 15ஆம் தேதி)
ஆஸ்திரேலியாவும், இலங்கையும்
சம்பந்தி மரியாதை செய்து கொள்ளப் போகும் நன்னாளில்,


பிற்பகல் 2:00 மணியில் இருந்து, எல்லார் தெம்பும் தீரும் வரை
ஆட்டம் நடைபெறப் போகுதுங்க!

ஃபோர், சிக்ஸர் என்று வீரர்கள் சக்கையடி அடிக்கப் போறாங்க என்று காத்துவாக்கில் ஒரு செய்தி பரவுகிறது!
பதிவர்கள் மட்டுமல்லாது, பதிவைப் படிப்பவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள் - இவர்களும் வரப் போறாங்க!

தமிழ் கூறும் நல்லுலகம் என்பதால்,
மாநாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக தெலுங்கில் நடைபெறாது என்று
வெட்டிப்பயல் அவர்களின் பரிபூரண சம்மதத்துடன் உத்தரவாதம் இச்சானு! :-)

மைதானம்:
510 Thornall Street
Edison NJ 08837
மைதானத்தின் படத்துக்கும், செவிக்கு உணவுக்கும்(:-0)
இங்கு க்ளிக்கவும்!


தொடர்புக்கு:
elavasam@gmail.com
shravan.ravi@gmail.com
மின்னஞ்சல் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். செல்பேசி எண்ணும் பகிர்ந்து கொள்ளலாம்.


//அதுசரி
ஆடியோ ரிகார்டிங் (open/secret),
போட்டா கிராப்பி (flash/secret),
விடியோகிராப்பி (handycam/spycam) எல்லாம் உண்டா... இல்லை,
வெறும் போண்டா டீயுடன் நடக்கும் கற்கால மீட்டிங்கா?//

முதல் மூன்று கிடையாது என்று "வழக்கம் போல" சொல்லிட வேண்டியது!
கடைசிக் கேள்விக்கு, வடை....
சாரி விடை,
பட்டாணி சுண்டலுடன் பொற்கால மீட்டிங்!

யார் எல்லாம் வருகிறார்கள்? (துளசி டீச்சர் - ஹெல்ப் ப்ளீஸ், அட்டண்டன்ஸ்)
பத்மா அர்விந்த்
தமிழ் சசி
பாஸ்டன் பாலா
சங்கர் குமார் (VSK)
ஷைலஜா
Vishytheking
வெட்டிப்பயல்
தென்றல்-இவர் வசந்தமும் கூட!
கோபிநாத்
CSRK
எடிசன் ரங்கா
இலவசக் கொத்தனார்
கண்ணபிரான் ரவி
.
.
.
என்று பட்டியல் வளர்கிறது!

Floralia 2007 - பூக்கள் உற்சவம் என்பதாலும்,
தலைவர் இலவசம் என்பதாலும்
எல்லாருக்கும் "இலவசமாகப்" "பூ" சுத்தப்படும்! :-)


வருக! வருக!!
வருக! வருக!!
Read more »

Sunday, April 15, 2007

அழகிகள் ஆறு பேர்!

ஆழகுகள் ஆறு பற்றித் தான் எழுத வேண்டுமா? அழகிகள் ஆறு பேர் பற்றி எழுதினால் என்ன?
ஆகா - இப்படின்னு தெரிஞ்சிருந்தா அழைத்திருக்கவே மாட்டேனே என்று நண்பர் குமரன் சொல்லி விடுவாரா என்ன? :-))
நன்றி குமரன்!

"அழகுன்னு இன்னாப்பா?", என்று யாரையாச்சும் கேட்டுப் பாருங்கள்! உடனே பதில் வருவது சற்றுக் கடினம் தான்.
ஆனா ஒரு ஃபோட்டோவைக் காட்டி, இவங்க அழகா இருக்காங்களான்னு கேளுங்க. - உடனே பதில் வரும்!
(ஃபோட்டோவில் உள்ளவர் அப்போது உடன் இருக்கக் கூடாது என்பதை நான் சொல்லவும் வேணுமா என்ன? :-)

ஃபோட்டோவில் உள்ளவர் பெரிய தலைவராகவோ, பிரபலமானவராகவோ இருக்கலாம். இல்லை சும்மானாச்சும் எங்கோ புடிச்ச ஃபோட்டாவாகவோ கூட இருக்கலாம்.
புற அழகோ, அக அழகோ, ஏதோ ஒன்று - இது அழகுன்னு கண்டிப்பா சொல்ல முடியும்!

கன்னடத்துப் பைங்கிளி ஐஸ்வர்யா ராய் கண்களை அழகு என்று ரசிப்பவரும் உண்டு!
கல்கத்தா அன்னை, தெரேசாவின் முகத்தைப் பேரழகு என்று ரசிப்பவரும் உண்டு!!

என்னைக் கவர்ந்த ஆறு அழகிகள் (அழகுகள்) இதோ!
இவர்கள் அறுவரும் தமிழ் அழகிகள்,
அல்லது தமிழ் சார்ந்த அழகிகள் என்பது கூடுதல் சிறப்பு!!

1.
சில பேருக்கு இளமையில் அழகு! சில பேருக்கு வயசானா அழகு! அதுவும் வயசு ஆக ஆக, இன்னும் அழகு ஜொலிக்கும்!
அழகுடன், முகத்தில் ஒரு ஐசுவரியம் மின்னும்!
அந்த அழகுடன் பணிவும் சேர்ந்து கொண்டால்?
தமிழிசையை வளர்க்க்கும் ஆவலும் முயற்சியும் சேர்ந்து கொண்டால்?
படோபடம் இல்லாமல், அலட்டல் இல்லாமல், நகைக் கடையே மேனியில் மின்னாமல்,
"விநயம்" என்ற ஒற்றைச் சொல் இவர்களுக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம் அல்லவா?
MS AMMA
பணிவே அழகு! - எம்.எஸ்.சுப்புலட்சுமி

2. நாட்டியம் அழகு தான், எப்போதும்!
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ?
ஆனால் அந்த நடனத்தை வளர்க்க, அதுவும் நடனக் கலைஞர்களை மரியாதையுடன் சமூகம் நடத்த ஒருவர் வழி வகுத்தார் என்றால்?
சென்னையில் கலா ஷேத்ரா என்ற அமைப்பு நிறுவி, மெய்யாலுமே கலைப்பணி செய்வது அழகு தானே!
போதாது என்று சுதந்திரப் போரில், அவர் கணவருக்கும் உதவியாய் இருப்பதும் அழகு தானே!
நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகுங்களேன் என்று பிரதமர் மொரார்ஜி கேட்க, அதை அவர் மறுத்து விட்டாரே! - அம்மா, இது உங்களுக்கே அழகா? :-)
ARUNDALE
நடனம் அழகு! - ருக்மிணி தேவி அருண்டேல்

3.
உலகில் ஒரு தமிழ்ப் பெண்மணி, ஹில்லாரி கிளண்டனை விடச் சக்தி வாய்ந்தவர் என்று பட்டியல் இடப்பட்டால்?
உலகிலேயே சக்தி வாய்ந்த பெண்மணிகளில் நாலாவது இடம் தரப்பட்டால்?
அமெரிக்க அரசைப் பற்றி இவர் பேசிய பேச்சு நடுவிரல் சர்ச்சை (Middle finger Controversy) என்று ஆனது. தேசத்தை வெள்ளையர்கள் ஆண்ட காலம் போய், பல வெள்ளையர்களை ஒரு தேசிப் பெண்மணி ஆளுகிறார் என்பது மிடுக்கு அல்லவா?
சென்னையில் பிறந்த 57 வயது அழகு என்று சொல்லலாமா?
NOOYI
மிடுக்கு அழகு! - இந்திரா நூயி

4.
ராமோன் மேக்சாசே விருது ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு - அதுவும் நற்பணிக்கு!
சென்னையில் பிறந்து, IAS-இல் கொடி கட்டிப் பறந்து, பின்னர் சமூகப் பணிக்காக அதை ராஜினாமா செய்தால், அது அழகாகுமா?
Social Work and Research Center என்ற நிறுவனத்தில் அவர் கணவருடன் சேர்ந்து,
இந்தியக் கிராமங்களில், குறிப்பாக பெண்ணடிமை அதிகம் காணப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குடி பெயர்ந்து, பணிகள் செய்வதற்கு என்ன பெயர்?

காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தது பெண்ணுரிமைக்கு அழகா?
அண்மையில் வந்த தகவல் அறியும் உரிமை (Right to information) சட்டம், இவர் மூலமாக ராஜஸ்தானத்தில் வெற்றி பெற்று, பின்னரே தேசிய அளவில் பரவியது அல்லவா?
Aruna Roy
நற்பணி அழகு! - அருணா ராய்

5.
பால் வடியும் பால முகம் என்பார்கள்; ஆனால் ஒரு பாலனுக்குச் சொன்னதை, தாய்க்கும் சொல்ல முடியுமா? சொல்ல முடியும்!
முகம் பொழி கருணை போற்றி என்று முருகனைப் பற்றி வரும்.
அது அன்னை வேளாங்கண்ணிக்கும் மிகவும் பொருந்தும்! புன்னகை சற்றே தான் இழையோடும்!
மோனாலிசா புன்னகை பற்றிச் சொல்பவர்கள், இந்தப் புன்னகையைப் பார்க்கவில்லையோ என்று கூட சில சமயம் எண்ணுவேன்!
நோய்கள் தீர்க்கும் தாயின் கருணையும் ஒரு அழகு தானே!
VELANKANNI
கருணையே அழகு! - அன்னை வேளாங்கண்ணி

6.
Last but not the least என்பார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்?
ஆங்...இறுதியாக,ஆனால் உறுதியாகச் சொல்வது, யாரை என்றால்....
செந்தமிழ்ச் செல்வி, நம்ம தீஞ்சுவைக் கோதை.
தமிழைத் தான் மட்டும் பாடியது அன்றி, ஊரையே பாட வைத்தது அழகு தானே!

இவள் சூடிக் களைந்ததைத் தான் இறைவனே விரும்புகிறான் என்றால், - இவள் அக அழகு தான் என்ன!!
எல்லோரையும் மயக்குபவன் மால் என்றால், அந்த மாலையே மயக்கும் கோதை - இவள் புற அழகு தான் என்ன!!

தொங்கல் மாலை, முத்து மகுடம், பச்சைக் கிளி, இச்சை மொழி எல்லாமே அழகு தானே!
படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!
ஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்!!

ANDAL AZHAGU
ஆண்டாள் - தமிழை ஆண்டாள்!
அழகே அழகு! - ஆண்டாள் அழகு!!





(பின் குறிப்பு:திருமலையில் ஸ்ரீதேவியைக் கண்டேன், பழனியில் தேவயானியைக் கண்டேன், என்றெல்லாம் பதிவைப் படித்து விட்டு, ஸ்ரீதேவி தான் அழகு என்று சொல்வேனோ என்று யாராச்சும் எண்ணியிருந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல :-)
ஆனா அவங்களும் ஒரு அழகு தானேப்பா! என்ன வெட்டிப்பையலாரே - சரி தானே :-)


நண்பர்கள்,
சிவமுருகன், யோகன் அண்ணா, கீதா சாம்பசிவம் (கீதாம்மா)
அவர்களை, அழகு விளையாட, அன்பாக அழைக்கிறேன்!

துளசி டீச்சர் அழைப்பு - அப்படியே இருக்கட்டும்! கொத்ஸ் ஏற்கனவே அழைத்து விட்டாராம்! ஆனாலும் அழைத்தவர்களை வாபஸ் வாங்குவதெல்லாம் நம்மளால முடியாதுப்பா!
பின்னே என்னவாம், டீச்சரின் வகுப்பில், வீட்டுப்பாடம் பண்ணாம வரலாம்னு ஒரு ஐடியா யோசிச்சா...விடமாட்டாங்க போல இருக்கே! :-)))
Read more »

Wednesday, April 11, 2007

சுல்தானி பீவி, நாச்சியார் ஆனாரே!

சுல்தானி பீவி, நாச்சியார் ஆனார்! - அட, இது என்ன மதமாற்றமா?
கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம் பாயவில்லையா? காட்டுக் கூச்சல்கள் எதுவும் ஓயவில்லையா? :-)

இருங்க, இருங்க...நீங்க பாட்டுக்குன்னு பேசிக்கினே போனா எப்படி?
யாருங்க இந்த சுல்தானி பீவி? அவங்க ஏன் நாச்சியார் ஆனாங்க?
நமக்குத் தெரிஞ்ச நாச்சியார், நம்ம வல்லியம்மா என்கிற பதிவர் தானே! அவங்க தான் வலைப்பூவுக்குத் நாச்சியார்-ன்னு பேரு வைச்சிருக்காங்க.

அது சரி. கேக்கணும்னு நினைச்சேன்.
இந்த நாச்சி நாச்சி-ங்கறாங்களே, நாச்சி-ன்னா என்னாங்க?
ஆச்சி, பேச்சி போல இந்த நாச்சியும் வட்டார வழக்கா? தமிழ் மாதிரி தான் தெரியுது்;
ஆனா இந்தக் காலத்துல சொன்னா, ஏதோ கிராமத்தான், காட்டான்-ங்கிற மாதிரி பாக்குறாங்களே!

வாங்கய்யா வாங்க! நியாயமா, சொல் ஒரு சொல் பதிவுல போய் நீங்க கேக்கோணும்.
உங்களுக்கு நாச்சி-ன்னா அவ்வளவு சீப்பா போயிடுச்சா?

ஆண்டாள் நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார், நிலமங்கை நாச்சியார், திருவிளக்கு நாச்சியார், திருவாதிரை நாச்சியார், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்...
இதுல ஒருத்தராச்சும் கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பொன்னியின் செல்வன் குந்தவை நாச்சியார் - இவங்க என்ன கிராமமா - பட்டணமா?

நாயன்=ஆண் பால்; நாச்சி=பெண் பால்
நாயன், நாச்சி
நாயனார், நாச்சியார்!
நாயன்மார், நாச்சிமார்!
தலைவன், தலைவி - அப்பிடின்னு பொருள்!
இன்னொரு வாட்டி பேசினீரு, வாட்டி எடுத்துடுவோம், ஞாபகம் வைச்சிக்குங்க!:-)

சரிப்பா..சரிப்பா...கோச்சிக்காதே! நீ சுல்தானி நாச்சியாருக்கு வா; அது என்ன கதை?


இந்தக் காலத்தில் ஒரே சாதியில் கல்யாணம் பண்ணிக்கறத்துக்கே ஆயிரம் நொள்ளை, சொள்ளை சொல்லறாங்க!
கொஞ்சம் நிறைய பாசம் வச்சி வளர்த்துட்டுங்கன்னா, வேற சாதி வேற மதம்-ன்னு வரும் போது, ஒரு இறுக்கமும் கூடவே வந்து விடுகிறது.
என்ன தான் வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் ஆரம்பத்தில் ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது!
ஆனா அதையெல்லாம் மீறி வருபவர்கள், இப்பல்லாம் கொஞ்சம் அதிகம்.

ஆனா ஒரு ஆயிரம் ஆண்டுக்கு முன்னே, முகம்மதியப் பெண் ஒருத்தி, இந்துப் பையன் ஒருவனைக் காதலித்தால்?
அதுவும் அவனைப் பற்றி ஒன்றுமே கேள்விப்படாமல், காதலித்தால்?
அதுவும் அவனிடம் எதுவுமே பேசாமல், காதலித்தால்?
சாட்டிங், ஆர்குட் இவை எல்லாம் எதுவும் கிடையாது அப்போது.

அவன் உருவத்தை மட்டுமே வைத்து நெஞ்சு நிறைய காதல்!
சரி அவன் இருக்கும் ஊருக்கே வந்து பேசலாம்-ன்னு அந்தப் பொண்ணு கிளம்பி வந்தா, பையன் தெய்வமாய் நிக்கறான்!
வந்தவளும் உயிரை விட்டுத் தெய்வமாக நின்று விட்டாள்!
பையன் பெயர் = சம்பத்குமாரன் என்கிற திருநாராயணப் பெருமாள்
பெண்ணின் பெயர் = சுல்தானி பீவி என்கிற துலுக்கா நாச்சியார்
(சூரத்தானி பீவி என்றும் அழைக்கிறார்கள்)


மைசூரில் இருந்து தும்கூர் செல்லும் வழியில் ஜக்கனஹள்ளி. அதற்கு அருகே உள்ள ஊர் தான் Melkote என்னும் மேலக்கோட்டை.

சோழ அரசன் சொந்த ஊரில் மத வெறி கொண்டு அலைகிறான்.
இறைப்பணி இடையறாது நடக்க வேண்டுமே என்று இராமானுஜர் திருவரங்கத்தில் இருந்து இந்த ஊர் பக்கம் வருகிறார்.
ஊர்க் கோவில் மண்மேடாய் கிடக்கிறது. மக்களைக் குறை சொல்ல முடியுமா? பாவம், அவர்களே தவிச்ச வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்!

பார்த்தார் இராமானுஜர்! அகண்ட காவிரியைப் பார்த்துப் பழகியவர் ஆயிற்றே!
முதலில் மக்கள் பணி! பின்பு மாயவன் பணி!!
தொண்டனூர் என்னும் பக்கத்து ஊரில் நீர் தேக்கி வைக்க பெரிய ஏரி ஒன்றை வெட்டுவிக்கலாம் என்று ஏற்பாடுகள் செய்கிறார். தொண்டனூர் நம்பி என்ற அவர் சீடர், இதற்குப் பெரிதும் உதவி!
பின்பு இந்த வறண்ட ஊரில், கல்யாணி குளம் என்ற குளம் ஏற்படுத்தி, அடிக் கால்வாய் மூலமாக அதில் நீர் நிறைத்தார்.
பின்பு நீர்வண்ணனையும் மனக் குளத்தில் நிறைத்தார்!

57971640.17KalyaniKolam

கோவில் பணிகள் கிடுகிடுவென்று தொடங்கின!
மண்ணில் புதையுண்ட மூலவர் விக்ரகம் - திருநாராயணப் பெருமாளைக் கண்டு எடுக்கிறார்.
ஒரு காலத்தில் சிறப்பாய் விளங்கிய ஆலயம் இப்படிக் கவனிப்பார் இன்றி ஆகி விட்டது! பேசாமல் விட்டு விட்டு வேறு செழிப்பான கோவிலுக்குப் போய் வசதியாகச் சாப்பிட்டுக் கொண்டே பணி செய்யலாமே! அவருக்கு வயது வேறு 80ஐ நெருங்குகிறது! ஆனால் உடையவர் இராமனுஜருக்கு மனசு வருமா?

புதிதாக ஆயிரம் ஆலயங்கள் எழுப்பவதற்கு முன், சிதிலமானவற்றைச் சீரமைக்கலாம் இல்லையா? பெற்ற தாய்க்கு வைர அட்டிகை வாங்கித் தருவதற்கு முன், அவள் கிழிந்த புடைவைக்கு வழி காணலாம் இல்லையா?
கோவில் சீரமைப்பு முழு வீச்சில் நடக்கிறது.

* மூலவரைப் போல் உற்சவர் ஒருவர் இருக்க வேண்டுமே! எங்கே அந்தத் திருவுருவம்?
# பிஜப்பூர் சுல்தான் முன்னொரு படையெடுப்பில் வந்து பல செல்வங்களையும் சிலைகளையும் கவர்ந்து கொண்டு போய் விட்டான் ஐயா. இனி கேட்டாலும் அந்த ராமப்ரியன் என்ற தங்க விக்ரகம் கிடைக்காது - மக்கள் எல்லாரும் சொல்கிறார்கள்.
(இது பிஜப்பூர் சுல்தான் இல்லை, தில்லி சுல்தான் என்று சொல்பவரும் உண்டு).

இராமானுஜர் ஒரு கணம் சிந்திக்கிறார். தாமே சுல்தானிடம் போய் உற்சவரைப் பெற்று வருவதாகச் சொல்கிறார். வயதான காலத்தில் கால் கடுக்க நடந்து சுல்தானின் மாளிகையை அடைகிறார்.
சுல்தான் முதலில் சற்று ஏளனமாகப் பேசினாலும், பின்பு இராமானுஜரின் அன்பையும் அறிவுக் கூர்மையும் கண்டு சற்றே மனம் மாறுகிறான்.
வேறு எந்தப் பொருளும் தரமாட்டேன். இந்தப் பொம்மையை மட்டும் தான் தருவேன்! சம்மதமா நாமக்காரப் பெரியவரே?

மன்னா, மற்ற செல்வம் எல்லாம் கேட்க மாட்டேன்.
செல்வத்துள் செல்வம் மட்டுமே எனக்கு வேண்டும்.
செல்வப் பிள்ளை அவன். சம்பத்குமாரன் என்பது தான் அவன் முழுப் பெயர். இருந்தாலும் செல்வப் பிள்ளை என்று தான் ஆசையாய் அழைக்கிறோம்! அவனை மட்டும் தருவாய் அப்பனே!

சரி பெரியவரே, கொள்ளைப் பொருட்கள் சேமிக்கும் கூடாரத்தில் தேடச் சொல்கிறேன்.....
ஆகா....என்ன? ஆட்கள் எவ்வளவு தேடியும் எங்கும் கிடைக்கவில்லையா! எங்கே போய் இருக்கும்? நான் களவாடிய பொருளையே களவாடிய களவாணிப் பயல்கள் யார்?
ஆங்....ஞாபகம் வந்து விட்டது. என் ஆசை மகள் லச்சமார் சுல்தானி, அதை அந்தப்புரத்துக்கு அல்லவா விளையாட எடுத்துப் போனாள்?

sultani


இராமானுசருக்கு கண் கலங்கி விட்டது.
"நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்பது போய்,
"நீ ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்று மாற்றிப் பாட வேண்டியது தானோ!
பருவ மங்கை சுல்தானி, தந்தையின் சபைக்கு வருகிறாள்;
இராமானுஜருக்கோ கண்கள் எல்லாம் கரியவன் மேலேயே உள்ளது. ஆனால்....

அப்பா, இது என் ஆசை பொம்மை மட்டும் இல்லை;
இதன் அழகைப் பாருங்களேன்! இதழில் எப்படி குறுஞ்சிரிப்பு சிரிக்கிறது!
நான் எங்கு சென்றாலும், இதை எடுத்துக் கொண்டு தானே செல்வேன்.
இதை எப்படி வாப்பா என்னால் தர முடியும்?
போங்க வாப்பா! தர முடியாது!
தூங்கும் போது கூட, இதை கட்டிக் கொண்டு தானே தூங்குவேன்!

அடப் பெருமாளே! கடைசியில் உன் கதி இந்தக் காலத்து Teddy Bear போலவா ஆக வேண்டும்! :-)
அவள் தான் கரடிப் பொம்மை போல் கட்டிக் கொண்டு தூங்கினால், ஏ ராமப்ரியனின் சிலையே, உனக்கு அவளை விட்டு எழுந்து, நடந்து வர கூடத் தெரியாதா?
நடந்த திருக்கோலம் என்பார்களே! இது தானா உலகளந்த உன் பராக்கிரமம்?

(விக்ரகம் மீண்டும் ஊர் வந்து சேர்ந்ததா? சுல்தானி பீவி எப்போது நாச்சியார் ஆனார்?
மேலக்கோட்டையில் இருந்த விக்ரகம் இது என்றால், திருவரங்கத்தில் எதற்கு பீவிக்குக் தனிச் சந்நிதி? - எல்லாம் அடுத்த பதிவில்!)
Read more »

Monday, April 02, 2007

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! - 2

"அரங்கன் கதி அதோகதி. முடிஞ்சாருடா மனுசன்!", என்று சிலர் கண்ட கனவெல்லாம் ஒரு நொடியில் என்ன ஆனது?
சென்ற பதிவில், மட்டையால் பெருமாள் அடி வாங்குவதைக் கண்டு, ஒரு சிலர் மட்டும் தான் பரிதாபப்பட்டார்கள். மற்றவர்கள் எல்லாரும் தாயார் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்! அவர்கள் எல்லாருக்கும் இன்று ஆப்பு! :-)

முகத்தை வெடுக் என்று திருப்பிக் கொண்ட பெண்டாட்டி, அரை நொடியில் "அத்தான், உங்கள் சிரித்த முகம் பார்த்துக் கொண்டு, உங்க பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளட்டுமா?" என்று கொஞ்சினா என்ன செய்வீங்க!

வாழை மட்டையால் பெருமாளைப் பெண் வீட்டார் தாக்க, பார்த்தார் பெருமாள்! Total Surrender! பரிபூர்ண சரணாகதி செய்தார்!
ஆகா...சரணாகதி வாங்குறவரே சரணாகதி செய்ய வேண்டிப் போச்சா? யாரிடம்? மாறன் சடகோபன் என்ற நம்மாழ்வாரிடம்!
நல்லா இருக்கு கதை! சாமி தான் பக்தனைக் காப்பாத்தணும்! இங்க என்னடான்னா பக்தன் சாமியக் காப்பாத்த ஓடோடி வருகிறான்.

நம்மாழ்வாரின் பல்லக்கு வீட்டு வாசலுக்கு வந்து சேர்கிறது! பெருமாள் பக்தனை ஓரக் கண்ணால் பாத்து, "பார்த்தாயா என் நிலையை?" என்று பாவமாய்க் கேட்கிறார்.
அடி வாங்கிய பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!
அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?
வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே இவருக்குத் தாளவில்லையே! இவரா புள்ளின் வாய் கீண்டான்? பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்? :-)

திருமேனி அலங்காரம் எல்லாம் கலைந்து போய், பரிதாபமாய் நிற்கும் பெருமாளைக் கண்டவுடன், ஆழ்வார் கண்கலங்கி விடுகிறார்.
நேரே ஓடிப்போய் தாயாரின் திருக்கதவைத் தட்டுகிறார்.

"என்னம்மா இது? ஆயிரம் இருந்தாலும் கணவனை இப்படி வெளியில் நிறுத்திக் கதவடைக்கலாமா? எதுவா இருந்தாலும் உள்ளே அழைத்து, அப்புறம் சிவக்கவோ, சினக்கவோ தெரியாதாம்மா உனக்கு?

உன்னைச் சொல்லி என்ன செய்வது?
இதே பாண்டி நாட்டுப் பெண்ணாய் இருந்தால் இப்படிச் செய்வாளோ?
"அன்பாக" அல்லவோ "ஆண்டிரு"ப்பாள்!
சோழ நாட்டுப் பெண் என்று காட்டி விட்டாயே", என்று ஒரே போடாகப் போட்டார் பாருங்க!
ஏன்னா அவரு பாண்டி நாடு! அவருக்குத் தெரியாதா அக்கரைக்கு இக்கரை சிகப்புன்னு! மதுரையில் ஆட்சி யாருன்னு! :-)



கதவின் பின்புறம் மெல்லிய சிணுங்கல், விசும்பல்; இரண்டாம் முறை!
"சரி, விடு...
நீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்?
உன்னிடம் மார்பில் கை வைத்துக் கேட்டாரே! அப்போ சரியென்று சொல்லிவிட்டு, இப்போ இப்படிச் செய்தால் எப்படி? இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா?"
- இதை அப்படியே கட்டியம் என்று அழகுத் தமிழில் கவிதை சொல்லி வாசிப்பார்கள் அரையர்கள்;
"அவமானப் படுத்தலாமா?" என்று சொல்லும் இடத்தில் வார்த்தை வராமல் நெஞ்சு அடைக்கும் அந்த அரையருக்கு!

மீண்டும் சிணுங்கல்; மூன்றாம் முறை!
"பார், கல்யாணம் முடித்த கையோடு, கல்யாண விருந்து கூட உண்ணாமல், உன் மனம் பதைக்குமே என்று ஓடி வந்தான் அரங்கன்.
உன் பிறந்த நாள் வேறு இன்று!
அதை மறக்காமல் ஒடி வந்தவன், பசி மயக்கத்தில் விழுந்து தடுமாறி விட்டான்; மேனியெல்லாம் ஒரே காயமாகி..."

கதவுகள் திறந்து விட்டன..."அச்சச்சோ...என்னங்க...என்னாச்சு...." என்ற குரல் குழைந்து விட்டது!
பெருமாள் ஓடியே வருகிறான். அரங்க நாயகியை ஒரு கண்ணாலும், ஆழ்வாரை மறு கண்ணாலும், கண்டு மென்னகை பூக்கிறான்.
கள்ளச் சிரிப்பில் கரையாதார் யார்?



இருந்தாலும் ஒரேயடியாக எந்தப் பெண்ணாச்சும் சமாதானம் ஆனதாகச் சரித்திரம் உண்டா? கொஞ்சம் முரண்டு பிடித்தால் தானே கட்டுக்குள் இருக்கும்! "ஆழ்வாரே வந்து சொன்னதால், சரி போனாப் போகட்டும்!"
"நம் பால் அன்பினர் ஆன நம்-ஆழ்வார் சொன்னதாலே உம்மை ஏற்றுக் கொண்டோம்", என்று தாயார் கட்டியக் கவி சொல்கின்றது!

பின்பு கணவனும் மனைவியும் பூப்பந்து விளையாடிக் கொண்டே, பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்.
அரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி!
கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்; உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, "ஏன் இவ்வளவு நாழி?" என்று தான் கேட்பாள்.
அதனால் தான் பங்குனி உத்திர விழா, அவள் வீட்டின் உள்ளேயே நடக்கிறது!

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!
அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க,
இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை!

Divyadampathi

2004043001390601

(சேர்த்தியைச் சேவிக்கும் இராமானுஜர்)

அதனால் அன்பர்கள் கூட்டம் அலை மோத, அதிலும் புதுமணத் தம்பதிகள் அலைமோத, அர்ச்சனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
இராமானுஜர் முன்பொரு நாள், இதே உத்திர நன்னாளில் பாடி அருளிய கத்ய த்ரயம் என்ற கவிதையை மாலை வேளையில் ஓதுகிறார்கள்.
சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் - இவை மூன்றுமே கத்ய த்ரயம்!
இது ஒரு வசன கவிதை. இதை நீட்டியும் சுருக்கியும் ஓதும் அழகே, கேட்பவரை மயக்கி விடும்.

1. தாயாரும் பெருமாளும், ஒரு சேர இருக்கும் இந்த நாளுக்காகக் காத்திருந்து, தாயாரின் தாள் பற்றிச் சரணாகதி செய்கிறார் இராமானுஜர் - இது சரணாகதி கத்யம்
2. பின்னர் அரங்கனிடம் மற்றை நம் காமங்கள் எல்லாம் மாற்றி என்றென்றும் நம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறார் - இது ஸ்ரீரங்க கத்யம்
3. உடனே பெருமாள் இருந்த இடத்தில் இருந்தே, அவருக்கு வைகுந்தம் காட்டியருள்கிறார். அதை இராமானுஜர் அப்படியே நமக்கெல்லாம் விளக்கிக் காட்ட - இது வைகுந்த கத்யம்.

76374780_XZzbuFHr_DSC00209

உனக்கும், உன் சம்பந்தா சம்பந்தங்களுக்கும் மோட்சம் அருளினோம் என்று பெருமாள் உறுதி சாதிக்க, இராமானுஜர் அரங்கன் சேவடியில் தலை தாழ்த்துகிறார். பின்பு,
18 முறை திருமஞ்சனம் (நன்னீராட்டு) நடைபெறுகிறது
18 * 6 கலசங்கள் = 108 கும்ப ஆராட்டு, விடிய விடிய!
மறுநாள் பங்குனித் தேர்.
உற்சவம் இனிதே நிறைகிறது!

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே,
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP