Wednesday, July 18, 2007

நீங்க குளிக்கணும்னா உக்கமும் தட்டொளியும் தேவையா?

உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி! நீங்கள் குளிப்பதற்கு இவை இரண்டும் தேவையா? ஆம் என்றால் ஏன்? - இது தான் இன்றைய கேள்வி!
கேள்வியை வேணும்னா கொஞ்சமா மாற்றி யோசிச்சுப் பாருங்க! நம்மைக் காலங் கார்த்தால அம்மா எழுப்பி விடறாங்க...என்ன செய்வீங்க?

அடப் போம்மா-ன்னு முரண்டு புடிச்சித் திரும்பிப் படுப்பீங்க! விடாப்பிடியா எழுப்பறாங்க!...........சரி...எழுந்தாச்சு!
எத்தனை பேர், நேராக் கண்ணாடி முன்னாடி போய் நின்னு, தலைமுடியை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவீங்க?
டேய் சங்கரா, சந்து முனையில் போய் ஒரு குடம் தண்ணீர் புடிச்சிக்கிட்டு வாடா-ன்னு சொல்லுறாங்க! இப்ப என்ன செய்வீங்க? கண்ணாடி முன்னாடி போவீங்களா, மாட்டீங்களா? மறைக்காம உண்மையச் சொல்லுங்க! :-)


இன்னும் காய்ச்சல் தீரலையா? இன்னுமா உளறிக் கொண்டு இருக்கே? என்று கேட்கத் தோணுகிறதா? பொறுமை! பொறுமை!!
நம்ம நாமக்கல் சிபி, திருப்பாவைப் பாசுரங்கள் பொங்கப் பொங்க, ஒரு தொடர் கதை போட்டிருக்காரு! அவசியம் பாருங்க! அதைப் பார்த்தவுடன், என் உள்ளம் ஏனோ கிறங்கத் தொடங்கி விட்டது! இனிய தமிழ் என் உள்ளத்தில் பொழிந்து வழிகிறது!

அது ஏனோ தெரியவில்லை, ஆண்டாள் என்றாலோ, திருப்பாவை என்றாலோ, அப்படி ஒரு ஈர்ப்பு, காந்த சக்தி!
காதலா? பக்தியா?
இன்பத் தமிழா? இறை அன்பா? இசையா?
ஒரு பெண்ணின் கனவா? கதையா? அழகா? அலங்காரமா? - எது? எது?
இன்று பூர நட்சத்திரம் (ஆடிப் பூரம், அவள் பிறந்த நாள், அடுத்த மாதம்...) ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காணலாம் வாங்க!


எல்லாப் பெண்களும், சிற்றஞ் சிறுகாலே, மார்கழி நீராடப் போறாங்க!
ஒருவர் இன்னொருவரை அழைக்க, இன்னொருவர் இன்-இன்னொருவரை அழைக்க....
இப்படியே எல்லாரும் பாடிக்கிட்டே போறாங்க...போயி கண்ணன் வீட்டு வாசலில் நிக்கறாங்க!
பலமாக் குரல் கொடுத்து, எல்லாரையும் எழுப்பறாங்க!

கேள்வி நம்பர் 1:
பெண் அடியவர்கள், அன்பர்கள் எல்லாம் இன்னும் நீராட வில்லை!
நீராடாமலேயே, தமிழ் வேதமான, பிரபந்தத்தை ஓதுகிறார்கள்! கண்ணன் ஆலய வாசலிலும் குளிக்காமலேயே நிற்கிறார்கள்! - ஆண்டாளே இப்படிச் செய்யலாமா? இது சரியா? சொல்லுங்கள்!:-)))
நீங்க உங்க வீட்டில் இப்படிப் பண்ணா, குளிக்காம கோவிலுக்கு வந்தா, அம்மா அப்பா மனைவி உங்களை சும்மா விடுவார்களா?:-)))


எல்லாரும் கண்ணனின் காதலி, நப்பின்னையை எழுப்பறாங்க! எழுப்பி.....
நப்பின்னை நங்கையே, கண்ணன் எங்கள் தலைவன்! உமக்கும் எமக்கும் அவனே நாயகன்!
அவன் தன்னுடைய அன்பினால் எங்களை எல்லாம் நீராட்ட வேண்டும்!
எங்கள் பிறவி என்னும் பிணியை அவன் அருள் என்னும் நன்னீர் கொண்டு கழுவி, எங்களைக் கடைத்தேற்ற வேண்டும்.
அவனை எழுப்பி, எங்களுடன் அனுப்பி வையம்மா...
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

(திருப்பாவை - 20ஆம் பாசுரம் - முப்பத்து மூவர் என்று தொடங்கும் கவிதை - பாடலைக் கேட்க, சொடுக்கவும்)


உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி!
விசிறியும் கண்ணாடியும் கையில் கொடுத்து, எங்களை நீராட்ட அவனை அனுப்பி வை, தாயே!
கேள்வி நம்பர் 2:
நீராடுவதற்கு எதற்கு விசிறியும் கண்ணாடியும்?
கேள்வி நம்பர் 3:
அப்படியே தேவை என்றாலும், இந்தக் கண்ணாடியும் விசிறியும் யாருக்குத் தேவை?
அவனுக்கு நீ கொடுத்து அவனை அனுப்பி வை என்கிறார்களே!
அப்படிக் கொடுத்து அனுப்பி வைப்பது, அவனுக்கா? எங்களுக்கா??

இது பற்றிப் பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே! நீங்கள் அறிந்தவரை உங்கள் கருத்து என்ன என்று சொல்லி தெளிவு படுத்துங்களேன், ப்ளீஸ்!
அன்புக்கு நன்றி!
Kannabiran Ravi Shankar


இது பற்றி அன்பு நண்பர் ஜி.ராகவன், ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட திருப்பாவை தொடரில், பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறுத்த குறுக்குடைய நப்பின்னை நாயகியே துயில் எழுவாய்! அப்படியே உனது மணவாளன் கண்ணனுக்கு விசிறிடுவாய். அந்தக் குளிர் காற்று தீண்டவும் அவன் எழுவான். அப்படி எழுகையில் அவன் முகம் காட்டக் கண்ணாடியைத் தருவாய். அவன் இப்பொழுதே எழுந்தால் தான் பாவை நீராடி அருள் பெறுவாய் எம்பாவாய்!

ராகவனின் இந்தச் சிந்தனை வித்தியாசமான ஒன்று! - அது மிக நன்று!
இருப்பினும் சீர் தூக்கிப் பார்த்தேன்! ஏனோ சரியாகப் பிடிபடவில்லை!

1. நீங்க தூங்கும் போது உங்களுக்கு விசிறினா, நீங்க மேலும் தூங்குவீங்களா? இல்லை எழுந்து கொள்வீர்களா? - ஹிஹி...குளிர் காற்றில் இன்னும் இழுத்துப் போர்த்தித் தான் தூங்குவீங்க இல்லையா? அப்படியிருக்க, ஒருவரை விசிறி எழுப்ப முடியுமா?

2. எழுப்பி விட்டவுடன், கண்ணாடி பார்த்து தலை திருத்திக் கொள்வீர்களா?

3. எழுந்தவுடன் தருவதற்குப் பல பொருட்கள் உள்ளன! பெட் காபி (:-), பல் விளக்கம், குளிக்க எண்ணெய் இல்லை முகப் பூச்சு, நெற்றித் திலகம்....இதை எல்லாம் சொல்லாமல், உக்கமும் தட்டொளியையும் மட்டும் ஏன் ஆண்டாள் சொல்ல வேண்டும்?

4. நோன்புக்கு வேண்டிய நெய்யுண்ணோம், பாலுண்ணோம் எல்லாம் பட்டியல் இட்டுச் சொல்கிறாள். கோல விளக்கு, கொடி, விதானம், ஆலின் இலை எல்லாம் அருளேலோ என்று வாய் விட்டுக் கேட்கிறாள்! அப்படி இருக்க உக்கமும் தட்டொளியும் கேட்பது கூட நோன்புக்குத் தானா?

இதுக்கு மேல நண்பர்கள் நீங்க தான் வந்து சொல்லணும்! அம்மா கோதை! எதுக்கும்மா இதையெல்லாம் நீ கேட்ட?
உக்கம் = விசிறி = Hair Dryer
தட்டொளி = கண்ணாடி = Hand Mirror, அதான் சின்னப் பெண் Makeup kit போலக் கேட்டிருப்பாள் என்று வீட்டில் சொல்லறாங்க! இத நான் எங்க போய் சொல்ல! நீங்களே சொல்லுங்க! :-)))
Read more »

Monday, July 16, 2007

ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?

ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன? - இந்த டயலாக் எங்கு வருகிறது என்று நினைவுக்கு வருகிறதா? திருவிளையாடல் திரைப்படத்தில்!
என்ன அப்பிடிப் பாக்கறீங்க?...."நாரதரே, அம்மை அப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?" என்று கேள்வி கேட்பார் பிள்ளையார்! - அதுக்குப் பதில் என்ன சொல்லப்படும்?.....ஞாபகம் வருகிறதா?

அம்மை அப்பன் தான் உலகம், உலகம் தான் அம்மை அப்பன்!
அதே போல,
புதினாத் தொகையல் தான் புதினாச் சட்னி!
புதினாச் சட்னி தான் புதினாத் தொகையல்!
என்று சொல்லலாமா....கூடாதா?

- இது தான் இப்போது பேண்டேஜ் பாண்டியனுக்கு எழுந்துள்ள பெருத்த சந்தேகம்!

ஐயோ இவனக்கு என்ன ஆச்சு, திடீர்-னு என்று பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க....
ஒரு வாரமா பாக்டீரியாக் காய்ச்சல் காய்ச்சி எடுக்க, படுத்த பாம்புப் படுக்கையா நானும் கெடக்க,
வெறும் பிரட்டும், சூப்பும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது!
எண்ணெய் வாசமே கூடாது என்று மருத்துவர் உத்தரவு வேறு! (அவர் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டது தனிக் கதை...அதை பாஸ்டன் பதிவர்கள் வந்து எழுதுவார்கள் :-)

அப்போது தான் காரமா, உறைப்பாச் சாப்பிட ஆசை வந்தது! அம்மா செய்யும் புதினாச் சட்னி, புதினாத் தொகையல் நினைவுக்கு வந்தது!
புதினா மருத்துவக் குணங்கள் கொண்டது எனறு அமெரிக்க நாசா விண்வெளிக் கழகமே சொல்லி இருக்காமே! அதான் அதையே சாப்பிடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்! - ஆனா, அங்கு தான் வந்தது வினை!

தாளிக்கலாமா? கூடாதா?? - எண்ணெய்ப் பிரச்சனை! - ச்சே இந்த அமெரிக்காவில் எப்பமே இப்பிடித் தான்....அடுத்தவன் வீட்டு/நாட்டு எண்ணெய்ப் பிரச்சனைக்கும் அமெரிக்கவுக்கும் அப்படி ஒரு ராசி போல! :-)

சரி...என்ன செய்வது என்று தெரியாமல் நம் ஆருயிர் நண்பர் CVR இடம் விஷயத்தைச் சொன்னேன்! சர்வ வல்லமை படைத்த பாலாஜி இருந்திருந்தால் அவரைக் கேட்டிருக்கலாம்! ஆனால் அவரோ ஊரில் இல்லை! சரியென்று CVR-இடம் சொன்னால், அவர் பதறிப் போய் விட்டார்! நான் உங்களுக்கு ஆவியில் சுட்ட இட்லி கொண்டு வருகிறேன் என்று ஆறுதலாகச் சொன்னார். ஆகா என்ன பாசம்! என்ன பாசம்!

சற்று நேரத்துக்கு எல்லாம் ஒடோடி வந்தார் மனுசன்!.......Frozen Idli பாக்கெட்டோடு!
"நல்லாப் பாத்துக்குங்க" என்று மேலும் கீழும் இட்லிப் பாக்கெட்டைக் காட்டி விட்டு, மீண்டும் அவர் பைக்குள்ளேயே போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்!

எனக்கு ஒரே அழுகையா வந்து விட்டது! உடம்பு சரியில்லீன்னா, ஆப்பிள் பழங்களோடு வந்து பார்ப்பார்கள்! ஆனா இவரு ஒரு கூடை ஆப்பிளைக் கூட வாங்கி வராம,
'ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்' ன்னு பாட்டு பாடிட்டு கிளம்பிட்டாரு!
எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது! சரி நாமே புதினாவைச் செய்து விட வேண்டியது தான் என்று களத்தில் இறங்கி விட்டேன்! இதோ செய்முறை! சாரி, நான் செஞ்ச முறை!



தேவையானவை:
புதினா 2 கொத்ஸ் (கொத்துவின் pluralஐச் சொன்னங்க! கொத்ஸ் நீங்க கோச்சிக்க மாட்டீங்கன்னு, தெரியும்)
கொத்தமல்லி 1 கொத்து (இலைகளைக் லேசாத் தண்ணீரில் கழுவிக் கொள்ள மறக்காதீங்க)
தக்காளி1
சின்ன வெங்காயம்3
புளி காய்ச்சல்1/4 கப்
உ.பருப்பு/க.பருப்பு2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்3 தேக்கரண்டி
காய்ஞ்ச மிளகாய்3
உப்பு அவங்க அவங்க சூடு சொரணையைப் பொறுத்த அளவு :-)

கொஞ்சம் வித்தியாசமாப் பண்ணனும்-னா......

மாங்காய்

அரை மாங்காய், "வெட்டி" வைத்துக் கொள்ளவும்! வெட்டியையும் சமைக்கும் போது கூட வைத்துக் கொள்ளலாம்! :-)

மேலே CTRL+A- எல்லாம் பண்ணிப் பார்த்து, எதுவும் தேடி ஏமாந்து போகாதீங்க! இது கொத்தனார் கிண்டிய உப்புமா பதிவு போல இல்ல! :-)

சரி, மேட்டருக்கு வாங்க!
1. Frying Pan-இல் எண்ணெய் விட்டு, உ/க பருப்புகளைப் பொன்னிறமாக வறுத்துக்கோங்க.
2. கூடவே வெங்காயம், மிளகாயும் வறுத்து வைச்சுக்கோங்க.
3. புதினா,கொத்தமல்லி இலைகளைக் கொட்டி, நீர் எல்லாம் போகுமாறு, கொஞ்சமா இலைகள் சுருங்குமாறு வறுத்துக்கோங்க. தண்ணி எல்லாம் சேர்க்கத் தேவையே இல்லை! (தாகத்துக்கு குடிக்கிற தண்ணியைச் சொன்னேன்-பா)

அய்யோ....வாசனை இப்பவே தூக்குதே! நாலு இலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன்! :-)

4. இப்ப தனியாக, இன்னொரு Panஇல் தக்காளி வதக்கிங்கப்பு!
5. மாங்கா பத்தைகளை சும்மா அரை நிமிடம் அப்படி லைட்டா வதக்கிங்க!
6. எல்லாம் கூல் ஆவட்டும்! சிவாஜி ஸ்டைலில் கூல் பேபி கூல்!

7. எல்லாத்தையும் மிக்சியில் கொட்டி, புளிக் காய்ச்ச்ல், உப்பு சேர்த்து அரைச்சிக்கங்க!
8. வேணும்னா, இன்னொரு வாட்டி, உ/க பருப்பு வறுத்து, தாளிச்சி கொட்டிக்கங்க!
9. ஐட்டம் ரெடி...பத்தே நிமிஷம் தான்!
வாழ்க்கையில சந்தோசமான விஷயம் எல்லாம் சீக்கிரமாவே நடந்து முடிஞ்சிடுது பாத்தீங்களா?! (ஆன்மீகப் பதிவு எஃபெக்டு நடு நடுல வந்துடுது, நான் என்ன செய்ய!:-)

10. சரி...இனிமே தான் மேட்டரே! இப்ப நாம செஞ்சதுக்குப் பேரு என்னா? தொகையலா? சட்னியா??.....அதைக் கரீட்டாச் சொல்லிட்டு அப்புறம் வாங்க...
தட்டுல துண்டு இலை பரப்பி, அதுல நெய் தடவி....
அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைச்சு,
இந்தப் புதினா மேட்டரையும் சேர்த்து வச்சித் தாரேன்!

ஒளவையே! - புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?


பின் குறிப்பு:
மொக்கை நன்றே மொக்கை நன்றே
பிச்சை புகினும் மொக்கை நன்றே
என்று தமிழ் மூதாட்டி சொன்ன வழியில் என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்! மறந்து விடாதீர்கள் - தொகையலுக்கும், சட்னிக்கும், மொத்தம் ஆறு வித்தியாசங்கள் சொல்லணும்!

பின் பின் குறிப்பு:
மாதவிப் பந்தலில் மொக்கைப் பதிவு ஒன்று கூட போடாத உன்னை எல்லாம் Blogger என்று ஒப்புக் கொள்ளவே முடியாது என்று நண்பர் சபித்து விட, அ
தனால் மிகவும் பயந்து போய், தொகையலும் சட்னியும் அரைத்துச் சாப்பிட்டு எழுதியதே இந்தப் பதிவு!:-)
படங்களுக்கு நன்றி:
SeeC

Read more »

Wednesday, July 04, 2007

புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!

இதோ...விடைகளும், வின்னர்களும்

மோனா, பொன்ஸ், ஜெயஸ்ரீ - 10/10
ஆதித்தன், பினாத்தல் சுரேஷ், ஜி.ராகவன், சத்தியா - 9/10
மனதின் ஓசை, ஸ்ரீதர் வெங்கட் - 8/10
------------------------------------------------------------------------
விடைகள் கீழே...bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள், பின்னூட்டத்தில்! நின்றவர்க்கும், வென்றவர்க்கும் வாழ்த்துக்கள்!!!

பரிசேலோர் எம்பாவாய்!

பொன்னியின் செல்வனுக்கு, ஓவியர் மணியம் வரைந்த இரண்டு படங்கள்:
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
1. காதல் ஜோடிகள்: குந்தவை-வந்தியத்தேவன், நந்தினி-பழுவேட்டரையர்
2. வீரநாராயணபுரம் ஓவியம் - இது விண்ணகரக் கோவில் என்று நூலின் முதலிலேயே வந்து விடும். அதன் வசனம், சாம்பிளுக்கு இதோ!

//ஸ்ரீமத் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.
அத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-
"பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்//


படங்களுக்கு நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை-tamilheritage.org


பொன்னியின் செல்வன் பற்றி நாள் கணக்கில் பேசலாம், பதிவுக் கணக்கில் பேசலாம்! சரி..........மீள் பதிவு மாதிரி, பொன்னியின் செல்வனை மீள் படிப்பு படிச்சா என்னவென்று தோன்றியது!
சரியான சோம்பேறியாச்சே நானு, எங்கிருந்து படிக்கப் போகிறேன்?
அதான் ஒரு பத்து கேள்வி கேட்டுப்புட்டு, பதில் ஒன்றும் பிடிபடலைன்னா, உடனே புத்தகமும் கையுமா உட்காருவதா ஒரு முடிவெடுத்து விட்டேன்!

இதைப் படமாக எடுப்பது பற்றியெல்லாம் பலர் பேசினார்கள்! வந்தியத் தேவனா யாரு நடிக்கலாம்?
என்னைக் கேட்டா, எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பதிவரின் பெயரைத் தான் ரெக்கமண்டேஷன் செய்வேன்!

நீங்க யாரையாச்சும், இல்லாக்காட்டி உங்களையே ரெக்கமண்டேஷன் செய்து கொள்வீர்களா? The Lord of The Rings படமாகுது.....பொன்னியின் செல்வன் ஆக முடியாதா?
நம்ம குருநாதர் Dubukku எப்பயோ ஒரு முறை சொன்னது ஞாபகம் வருது!
"பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழம் புடவையை எடுத்துக் கழுத்தில் "டை" யாக கட்டிக் கொள்வது போல"

பார்ப்போம், எத்தனை தூரம் நந்தினியும் குந்தவையும் நினைவில் இருக்கிறார்கள் என்று!
சேந்தன் அமுதனுக்கும் பழுவேட்டரையருக்கும் என்ன தொடர்பு என்று!
இலங்கையின் பட்டினங்கள் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று!

இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு பொன்னியின் செல்வன்!

1

"திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரசோழ பராந்தகரின் மகாமான்ய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மாதி ராஜர் வருகிறார்! பராக்! பராக்!....."


இந்த அநிருத்தப் பிரம்மராயரின் இயற்பெயர் என்ன?

1


அ) அருண்மொழிப் பட்டன்
ஆ) ராமன் கிருஷ்ணன்
இ) வைணவதாசர்
ஈ) கிருஷ்ணன் ராமன்

2

ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பர்கள் இருவர். அதில் ஒருவன் இவன். இவன் பெயர் என்ன? இவன் தங்கை தான் வந்தியத் தேவனை விரும்பினாள். ஆனால் இறுதியில் மாண்டாள். அவள் பெயர் என்ன?

2


அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி
ஆ) கந்தமாறன் - மணிமேகலை
இ) பினாகபாணி - வானதி
ஈ) முருகையன் - பூங்குழலி

3

இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன்.


பின்னர் இளவரசர் அருண்மொழி இருக்கும் நகரத்தை நோக்கிக் கிளம்பினான். எந்த நகரம்?

3


அ) யாழ்ப்பாணம்
ஆ) அனுராதபுரம்
இ) மாதோட்டம்
ஈ) திருக்கேதீசுவரம்

4

சுந்தர சோழர் அடிக்கடி கனவில் கண்டு பயப்படும் ஊமை ராணியின் பெயர் என்ன?

4


அ) மந்தாகினி தேவி
ஆ) செம்பியன் மாதேவி
இ) வானவன் மாதேவி
ஈ) இலாட மாதேவி

5இன்று தமிழ்மணத்தில் போலிகளின் பிரச்சனை இருப்பது போல பொன்னியின் செல்வன் -இலும் ஒரு போலி பாத்திரம் இருந்தது? - ஒரு போலி இளவரசனாய் வலம் வரும் அவர் யார்?

5

அ) குடந்தை வைத்தியர் மகன்
ஆ) மதுராந்தகத் தேவர்
இ) மதுராந்தக உத்தம சோழர்
ஈ) சேந்தன் அமுதன்

6

தீப்பொறி கண்களும் தொங்கும் மீசையுமாக மணியம் வரைந்த பெரிய பழுவேட்டரையர் பற்றிப் படித்திருக்கிறோம்.


அவரைக் கொன்றது யார்?

6

அ) சின்னப் பழுவேட்டரையர்
ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர்
ஈ) நந்தினி

7

மாய மோகினி, எவரையும் கவரும் வல்லமை கொண்டவள், பேரழகி, சாகசக்காரி....நம்ம நந்தினி, கதையின் கடைசியில் என்ன ஆனாள்?...... தப்பி ஓடினாள்.

ஆம்; பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியும் மறைந்து விட்டாள். இனி அவளை இக்கதையிலே நாம் காண மாட்டோம் என்கிறார் கல்கி.


அவள் மலைக்குகையில் யாரிடம் இருந்து தப்பி ஒடினாள்?

7


அ) ரவிதாசன்
ஆ) குந்தவை
இ) பழுவேட்டரையர்
ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்

8

கல்கி, தம் புதினத்தின் நடுநடுவே சைவ, வைணவ, பெளத்த ஆலயங்கள் பற்றிக் குறிப்புகள் பலவற்றைக் கொடுப்பார். கிழவன் சிவனார், கிழவி உமையவளை நான் பாட மாட்டேன் என்று சுந்தரர் கோபித்துக் கொண்டு போன தலம் பற்றி ஒரு குறிப்பு வரும்! பின்னர் உமையவளை மட்டும் இளையவளாக பிரதிட்டை செய்வார்கள். சுந்தரர் வந்து பாடுவார்!


இதே போல் யாரோ பாடமாட்டேன் என்று சொன்னதால் தான் கிழவன் பழுவேட்டரையன் இளையவள் நந்தினியைப் பிடித்தானோ என்று, ஆதித்த கரிகாலன் கிண்டல் செய்வான்! அது எந்தத் தலம்?

8


அ) திருவையாறு
ஆ) நாகைப் பட்டினம்
இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம்

9

ஆழ்வார்க்கடியான் செய்யும் அடிதடி வம்பு தும்புகள் எல்லாம் படிக்கும் போது ஒரே சிரிப்பாய் இருக்கும். ஆனால் அவன் தமையனார் (அண்ணா) ஒரு சிவ நெறிச் செல்வர்! சோழ தேசத்து ராஜகுருவாகவும் இருந்தவர். யார் தெரிகிறதா?

9


அ) திருநாரையூர் நம்பி
ஆ) ஈசான சிவபட்டர்
இ) குடந்தை சோதிடர்
ஈ) திருக்கோவிலூர் மலையமான்

10

கதையின் கடைசியில் சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்! அருண்மொழி தானே பட்டமேறப் போவதாகப் பிரகடனம் செய்து விட்டு, திடீர் என்று விழாவில், மகுடத்தை சேந்தன் அமுதன் தலையில் அருண்மொழியே சூட்டி விடுகிறார். அப்போது சேந்தன் அமுதன் மறுப்பேதும் சொல்லாமல் இருக்க, அவர் தோள்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது யார்?

10


அ) சின்னப் பழுவேட்டரையர்
ஆ) பூங்குழலி
இ) பிரம்மராயர்
ஈ) வந்தியத் தேவன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!


1 அ) அருண்மொழிப் பட்டன் ஆ) ராமன் கிருஷ்ணன் இ) வைணவதாசர் ஈ) கிருஷ்ணன் ராமன்

2 அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி ஆ) கந்தமாறன் - மணிமேகலை இ) பினாகபாணி - வானதி ஈ) முருகையன் - பூங்குழலி

3 அ) யாழ்ப்பாணம் ஆ) அனுராதபுரம் இ) மாதோட்டம் ஈ) திருக்கேதீசுவரம்

4 அ) மந்தாகினி தேவி ஆ) செம்பியன் மாதேவி இ) வானவன் மாதேவி ஈ) இலாட மாதேவி

5 அ) குடந்தை வைத்தியர் மகன் ஆ) மதுராந்தகத் தேவர் இ) மதுராந்தக உத்தம சோழர் ஈ) சேந்தன் அமுதன்

6 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர் ஈ) நந்தினி

7 அ) ரவிதாசன் ஆ) குந்தவை இ) பழுவேட்டரையர் ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்

8 அ) திருவையாறு ஆ) நாகைப் பட்டினம் இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம்

9 அ) திருநாரையூர் நம்பி ஆ) ஈசான சிவபட்டர் இ) குடந்தை சோதிடர் ஈ) திருக்கோவிலூர் மலையமான்

10 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) பூங்குழலி இ) பிரம்மராயர் ஈ) வந்தியத் தேவன்

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP