Friday, September 28, 2007

ரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

இந்தச் செய்தித் துணுக்கைப் படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது! ஏன்னு கேக்கறீங்களா?
சும்மா ஒரு கப்சாவுக்காக கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க!
திருமலை நாயக்கர், மதுரையில் உங்க தாத்தாவின் தாத்தாவுக்கு, நாலு மாசி வீதியை எழுதி வச்சாரு! அதுனால இப்ப அது எல்லாம் உங்களுக்குத் தான் சொந்தம். அதுனால நீங்க அங்கிட்டு போயி எல்லாரையும் காலி பண்ணச் சொன்னா, உங்களைக் காலி பண்ணுவாய்ங்களா? :-)

அதே சமயம், ஒரு சீரியஸ் டவுட்டு.
பாரதியாருக்கோ, பாரதிதாசனுக்கோ அரசு சார்பில் வழங்கப்பட்ட இடமோ பொருளோ, இன்னும் நாலைஞ்சு தலைமுறைக்குப் பிறகு, இதே கதி தான் ஆகுமா?


காலம் - அதற்குள் எந்த விதியையும் அடக்கும் நண்பர் கோவி கண்ணனைக் கேட்டாக்கா, ஏதாச்சும் விடை கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்! :-)


நன்றி: தினமணி.
நகரி, செப். 29:
திருப்பதி திருமலையில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான அன்னமாச்சார்யாவின் சொத்துக்கள் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


திருமலையில் உள்ள 28.58 ஏக்கர் நிலம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும், அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் இத்தீர்ப்பு கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் சார்பில் வழக்கை நடத்திய முன்னாள் தேவஸ்தான நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, அவற்றை அரசர்களின் உதவியுடன் ஓலைச் சுவடிகளில் பாதுகாத்து வந்தவர் ஏழுமலையான் பக்தர் தாளபாக்கம் அன்னமாச்சார்யா.
அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படம் மூலமும் அவரது வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்த மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை அன்னமாச்சார்யாவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அன்னமாச்சார்யா வம்சாவளியை சேர்ந்தவர்கள் அச்சொத்துக்கள் எங்களுக்கு சேர வேண்டும் என்று 1990-ல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கு சாதகமாக இருந்தது.

அதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து அன்னமாச்சார்யா வம்சாவளியைச் சேர்ந்த டி.கே. ராகவன் 2007 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
புதன்கிழமை அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது என்றார் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம்.
Read more »

Monday, September 24, 2007

ராமர் பாலமும், ராமானுசரும்!

ராமர் பாலத்தைப் பற்றிப் பலரும் பேசி விட்டார்கள்! ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா? இதோ! இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வு! இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும்! பிடிக்க வேண்டியவர் பிடிக்கட்டும்!!

முன் குறிப்பு:
பாலம்-ராமானுசர்-அதை அவர் இடிக்கச் சொன்னாரா?-ன்னு "அந்தக்" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது! :-)
பாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும்? - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் புரியும்! :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர். கிராமம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.
அழகிய இராமர் கோவில்! கோவில் மட்டுமா அழகு?
கோவிலுக்குள் குடியிருந்த இராமனும் கொள்ளை அழகு! வித்தியாசமான விக்ரகமும் கூட! தலையைச் சாய்த்தாற் போல், குறி பார்த்து பாணம் விடத் தயாராய் இருக்கும் இராமன்!
பொதுவா கூடவே சீதை, இலக்குவன், அனுமன்-மூவரும் இருப்பார்கள்.
இங்கு இன்னும் கூடச் சேர்ந்து சுக்ரீவன், அங்கதன் என்று காண்பதற்கு அரிய இராம விக்ரகம்!

அந்நியர் படையெடுப்பு! சூறையாடல்!
அகந்தையால் ஊரையும் கோவிலையும் அழித்தார்கள்! கிராம மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!
இராமன் திருமேனியையாவது காப்பாற்றினால், அடுத்த தலைமுறைக்குத் தரலாம் அல்லவா? தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள்! கடைசியில் வந்து சேர்ந்த இடம் திருமலை திருப்பதி அடிவாரம்!

அந்த சமயத்தில், அங்கு பாடம் பயின்று கொண்டிருந்தார் ஒரு பிரபல மதத்தலைவர்!
என்ன பாடம்? இராமாயணப் பாடம்!
பாடம் நடத்தியவர் பெயர் திருமலை நம்பி. பாடம் கேட்டவர் பெயர் இராமானுசர்!
அப்போது இராமானுசர் செம பாப்புலர் ஆகியிருந்த நேரம். அவர் பேச்சுக்கு மறுப்பேது? "உம்" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது! அவரை விட வயதில் பெரியவர்களுக்கு எல்லாம் அவர் தலைவர்!

அன்று இராமாயணப் பாடத்தில், வீடணன் அடைக்கலப் படலம்!
சுக்ரீவன் எதிரியைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்ல, அனுமனோ சேர்க்கலாம் என்று சொல்ல, அங்கதன் வானத்தில் வீடணனைக் கைகாட்ட....
அதே நேரம் பார்த்து நம்ம மதுரை மக்கள், சிலைகளை எல்லாம் தூக்கிகிட்டு ஓடீயாறாங்க!
இராமானுசரை அங்கு கண்டதும் பணிந்து வணக்கம் சொல்லினர். அவருக்கோ உற்சாகம் கொள்ளவில்லை!
சுக்ரீவன் மறுத்துரைக்கும் படலம் கேட்கும் தருணத்தில், இப்படி சுக்ரீவனோடு, அங்கதனோடு, அனுமனோடு, இராமன் திருவுருவம் வந்து சேர்கிறதே!


திருமலையில் இராமன்

அனுமன்


சாமீ...எப்படியாச்சும் எங்க ஊருக்கு வந்து, கோவிலை மீண்டும் கட்டித் தர வேணுமுங்கோ!
இந்த இராமன் சிலையை திருப்பி வைக்க வேணுமுங்கோ!
நீங்க பெரிய மகான்! நீங்க மனசு வச்சா முடியாதது இல்ல!
நீங்க சொன்னா ராசா, அப்பறம் அந்த நவாப் கூடக் கேப்பாருங்க சாமீ!

சரி ஜனங்களே, ஆவன செய்யலாம்! மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே! என்று கவலையுற்றார். உபவாசம் இருந்தார்.
(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)

நிலைமையைப் பார்த்து வரத் தன் சீடர்களை ஊருக்கு அனுப்பினார்!
அவர்கள் திரும்பி வந்து, "குருவே! கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது! அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள்! படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும்! இப்போது காலம் கடந்து விட்டது!
அங்கே ஊர்ச் சந்தை ஏற்பட்டு, மக்கள் வணிக மண்டலமாக மாறி விட்டது, ஆசார்யரே!" என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்!

யோசித்தார் இராமானுசர். சந்தையை இடிக்கச் சொல்லி, மறுபடியும் ஆலயம் கட்டலாமா?
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்! - இந்த "ராமா" என்னும் ரெண்டு எழுத்துக்குச் சந்தையைக் கொடுக்கட்டுமே!
- சந்தையைக் கொடுக்காவிட்டால் சண்டை போடுவோமா? இல்லை சாபம் கொடுப்போமா? இல்லை அடித்து நொறுக்குவோமா?

மதுரைக் கிராமத்து மக்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்!
உங்க ஊர் பேரே எனக்கு மறந்து போச்சு! அவ்வளவு சின்ன ஊர்! நம் இராமனை மீண்டும் அங்கே வைக்கலாம் தான்! ஊருக்குப் பொதுவான சந்தையை இடித்து விட்டுச் சிலை வைக்க வேண்டும் என்று அரசனிடம் சொல்ல என்னால் முடியும்!

ஆனால், அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை! மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல!
சமயம்-ன்னா என்ன? சமைத்தல் தான் சமயம்!
அரிசியைச் சமைத்தால், அது பக்குவப்பட்டு, குழைந்து சாதம் ஆகும்!
அது போல் வைணவ சமயம் நம்மை எல்லாம் சமைக்க வேண்டும்! பக்குவப்படுத்த வேண்டும்!


ராமானுசர்


அறிந்தோ அறியாமலோ இவ்வாறு ஆகி விட்டது! ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம்! அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம்!
இந்த விக்ரகங்களைக் கலியுக வைகுந்தம் என்று போற்றப்படும் திருமலையில் அடியேன் ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்கிறேன்! திருமலையில் திருவேங்கடமுடையான் கருவறையிலேயே இந்தச் சிலைகளை வைத்து விடலாம்!

எங்கோ ஊர் பேர் தெரியாது இருந்த இந்த அழகு விக்ரகம், இனி சகலரும் அறியுமாறு, புகழ் பெற்ற திருப்பதி மலையில் இருந்து அருள் பாலிக்கட்டும்! அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் இதற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என் பாடு!
ஆனால் அதற்கு முன் நீங்கள் நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீகளா?
மக்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
ஒரு புறம் தங்கள் ஊர் இராமனைப் பிரிய வேண்டுமே என்ற கலக்கம்! இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம்! - இராமானுசர் பேச்சைக் கேட்டனர்!
வில்லாளி இராமனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை! விளங்கக் கொடுத்தனர்!
இடையில் வந்த விக்ரகத்தை, இடையறாது வழிபட ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்தார் அண்ணல் இராமானுசர்!

இன்றும் திருமலையில் இராமன் திருக்கோலத்தைக் கருவறைக்குள் செல்லும் வழியில் காணலாம்!
இராமர் மேடை என்றே அதற்குப் பெயர்.
எங்கிருந்தோ வந்த இராமன், இன்று நீங்காது நிற்கிறான்!

இராமானுசர் நினைத்திருந்தால், அரசியல் செய்திருக்கலாம் = இப்போது பாலத்தில் செய்வது போல!
அரசனிடம் தன் செல்வாக்கைக் காட்டி, ஊர்ச்சொத்தை இடித்து விட்டு இன்னொரு ஆலயம் எழுப்பி இருக்கலாம்!
மக்கள் கேட்கா விட்டாலோ, தன் தொண்டர் படையை ஏவி விட்டிருக்கலாம்! = இப்போதைய கல்வீச்சு கலாட்டா போல!

ஊரே கூச்சலில் மூழ்கியிருக்க, கலங்கிய குட்டையில் மீன் பிடித்து இருக்கலாம்! அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம்! = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா! என்று இப்போது இரு தரப்பும் பேசிக் கொள்வது போல!
இப்படி எல்லாம் செய்திருந்தால், ஒரு அஞ்சு வருடத்துக்குள் மறுபடியும் அந்தக் கோவில் கட்டி, பத்தோடு பதினொன்னா போயிருக்கும்!
ஆனால் இராம நாமமும், வைணவமும் இந்தத் தலைமுறை வரை தழைத்திருக்குமோ?

துலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு! தலையை வெட்டிக் கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் என்று ஆன்மீகம் பேசவே பேசாது!
ஆக்கத் தான் எடைக்கு எடை! அழிக்க அல்ல!
இதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும்! மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
இராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்!

இராமனை உணர்ந்தவர் இராமானுசர்!
இராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ?



References:
1. திருமலைக் கோவில் ஒழுகு
2. அனந்தாழ்வான் அருளிய வேங்கடாசல இதிகாச மாலை
Read more »

Wednesday, September 19, 2007

திருமலை பிரம்மோற்சவம் 5 - கருட சேவை!

"கருடா செளக்கியமா" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று!
கருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது? அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் "வைநதேயன்" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. "பெரிய திருவடி" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்!

இவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு ஏக சிம்மாசனம் அளித்தாள். இன்றும் வில்லிபுத்தூரில், அரங்கன், ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் இருந்து தான் காட்சி தருகிறார்கள்.

பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் முக்கியமான வாகனம்.
கருடன் பறக்கும் வேகம் என்ன தெரியுமா?
'பரம பக்தன், துன்பத்தில் ஆழும் போது, "பெருமாளே" என்று கூவி அழைக்க, இறைவன் ஏறி அமர்ந்து விட்டாரா என்று கூடப் பாராமல், பறக்கத் தயாரானான்', என்று சத்குரு தியாகராஜர் பாடுகிறார். சங்கீதத்தில், கருடனுக்கு ஒரு தனி ராகமே உண்டு! பேர் கருடத்வனி!

அன்று முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன், மரிக்கும் தருவாயில் கூட, குளத்தில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்து, "ஆகா, பெருமாளுக்கு இதைச் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்" என்று தான் எண்ணம் போனது. கருட சேவையாக, இறைவன் தோன்றி, கஜேந்திரனைக் காத்ததை எண்ணினாலும் மனம் தான் இனித்திடாதோ?

முன்பே சொன்னது போல, திருமலையில் மிக முக்கிய வாகனம் இந்த கருட சேவை!
இன்று மட்டும் தான், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், அணிகள், வெளியே கொண்டு வரப்பட்டு, கருட வாகனத்தில் இருக்கும் உற்சவருக்கு அணிவிக்கப்படுகின்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லக்ஷ்மி ஆரம் ஆகிய இந்த இரு அணிகலன்கள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை. இன்று மட்டும் கருட வாகனத்தின் மேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன.

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பேரிகைகள் முழங்க, இதோ கிளம்பி விட்டான் திருமலை வாசன், கருடாழ்வாரின் மீது!


எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற பக்தி முழக்கம்.
இரு கரம், சிரம் மேல் கூப்பி, எம்பெருமானே, திருவடி சரணே! என்று அடியார்கள் வணங்குகிறார்கள்!
'ராஜ கம்பீர நாடாளும் நாயகன்', கருட கம்பீரமாக, ராஜ நடையில்,
'தொம் தொம்' என்று உலா வரும் அழகைச் சேவிப்பார்க்கு உண்டோ பிறவிப்பிணி!
சரணம் சரணம் கோவிந்தா சரணம்!!



இன்று மாலை,
பெரியாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய். உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே?

"உயர்ந்த சிகரங்களைக் கொண்டு, குளிரும் வேங்கட மலையை உடையானே,
உலகம் வாழ வேண்டி, 'குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய்' கண்ணா, தாமோதரா, காளிங்க நர்த்தனா!

என்னையும், இப்பிறவியில் எனக்கு வாய்த்த என் உடைமைகள் அத்தனையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டேன். (அதாவது)
உனக்கு வழுவிலா அடிமை செய்வதாக உறுதி பூண்டு, உன் சக்கரச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டேன். பொறித்தால் மட்டும் போதுமா?
உன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்!
இனி என்னை என்ன செய்யப் போகிறாய்?

உன் திருக்குறிப்பு என்னவோ?
எதுவாக இருப்பினும் சரி, உன்னை அன்றிப் பிறிதொருவர் எனக்கில்லை, வேங்கடவா! " என்று பெரியாழ்வார் பரிபூரண சரணாகதி அடைகின்றார் அவனிடத்தில்.


யாருப்பா அது, அங்க பிரசாதம் கேட்டது? வாங்க வாங்க! நம்ம நண்பர் ஜிரா என்று விளிக்கப்பெறும் ராகவன் தான் பிரசாத ஸ்டால் இன்சார்ஜ். அவரிடம் நயந்து பேசி பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும்!
இன்றைய பிரசாதங்கள்: கல்யாண லட்டு (பெரிய லட்டு)
அன்னப் பிரசாதங்கள்: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, ததியோதனம்(தயிர்ச்சோறு), சகாரா பாத், வெண் பொங்கல்
பிற பிரசாதங்கள்: பாயசம், சுகி, அப்பம், தோசை

மு.கு (முக்கியமான குறிப்பு
):
பிரசாதங்கள் விற்பனைக்கு அல்ல! :-)
பக்தியுடன் வருவார்க்கு சிறிது வழங்கப்படும்! :-))

அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!



இப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவையின் மீள்பதிவு. மற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்!

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாப் படங்கள் உடனுக்குடன் tirumala.orgஇலும் தினமலர் நாளிதழிலும் தரவேற்றப்படுகின்றன!
இதோ சுட்டிகள்:
தேவஸ்தானப் படங்கள் - tirumala.org
தினமலர் படங்கள்
Read more »

Saturday, September 15, 2007

திருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்!

வாங்க வாங்க திருமலையான் பிரம்மோற்சவத்துக்கு! கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா? அது மாதிரி நினைச்சிப்போமே? ஏதோ பேப்பர், டிவில்ல எல்லாம் விழா அது இதுன்னு போட்டாலும், சுருக்கமா இந்த விழா ஏன், என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிலாம் வாங்க!

வேங்கடத்தான் பூவுலகில் அவதரித்த நாள் புரட்டாசித் திருவோணம். இந்த ஆண்டு Sep 23 அன்று வருகிறது! ஷ்ரவண நட்சத்திரம்ன்னு வடமொழியில் சொல்லுவாங்க. "திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே" என்பது பெரியாழ்வார் பாட்டு!
நாம அமெரிக்கால இல்ல சிங்கப்பூர்ல முதலில் காலடி எடுத்து வச்ச நாள் ஞாபகம் வச்சுக்கிறோம் இல்லையா? அது போலத் தான் இறைவன் நம் பொருட்டு பூமியில் கால் பதித்த நாள். அவதாரக் குழந்தையாக எல்லாம் பிறக்காது, நேரே குன்றின் மேல் கல்லாகி நின்ற நாள்.

இந்த நாளை படைப்புக்குத் தலைவர் பிரம்மா முதலில் விழாவாகக் கொண்டாட, பின்னர் தொண்டைமான் அரசன் அதைத் தொடர, பின்னர் பல ஆண்டுகள் தொடர்ந்தோ, விட்டு விட்டோ கொண்டாடி வருகிறார்கள். இன்றைக்கும் ஊர்வலங்களை பிரம்ம ரதம் என்னும் குட்டித்தேர் (பிரம்மன் சிலை வழிபாடு அற்றவர் ஆதலால்) வழி நடத்திச் செல்லும்.

முதல் நாள்
மாலை:
நல்ல மண் எடுத்து, நவதானிய முளை விடுவர். முளைப்பாரிகை என்பது இதற்குப் பெயர். விழா இனிதே நடக்க, செய்வது இது.

பின்னர் பெருமாளின் படைத்தளபதி சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), அவருடன் பரிவாரங்கள் அங்கதன், அனுமன், அனந்தன், கருடன் எல்லாரும் வீதியுலா வந்து, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்று கண்டு வருவர்.

அப்புறம், கருடனைத் துணியில் வரைந்து, கொடி மரம் அருகில் பூசித்து, கொடி ஏற்றுவர்! கருடன் விண்ணுக்குச் சென்று அங்குள்ளவர்கள் அனைவரையும், மற்றும் மண்ணுக்கு வந்து நம்மையும், விழாவுக்கு அழைப்பு வைப்பதாக மரபு. (கருடா செளக்கியமா? கண்டிப்பா வந்துடறோம்பா. நீ போய் ஆக வேண்டிய வேலைகளைக் கவனி!).

துவஜம்=கொடி, ஆரோகணம்=ஏற்றம்
துவஜாரோகணம்=கொடியேற்றம்...அவ்ளோ தாங்க, மத்தபடி வடமொழிப் பேரைப் பாத்து பயந்துடாதீங்க! :-)
இரவு
பெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்)

நம்ம பெருமாளுக்கு ரொம்ப பிடிச்ச ஒருவர்-ன்னா அது ஆதிசேஷன்.
பாற்கடல், திருவரங்கம் எல்லாத்துலேயும் இந்த சேஷன் மேலே தான் பள்ளி கொள்வார். இந்த சேஷனும் சும்மா இல்லீங்க!
இறைவனை விட்டு ஒரு நொடியும் பிரிய மாட்டார்-ன்னா பாத்துக்குங்க!
ராமனாய் பிறந்த போது இலக்குவன்
கண்ணனாய் பிறந்த போது பலராமன்
கலியுகத்தில் இராமானுசன், மணவாள மாமுனிகள்!
"சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்; நின்றால் மரவடியாம்" என்பார்கள்! அவ்வளவு ஏன்? திருமலையின் 7 மலைகளும் சேஷனின் திருமுடிகள். அந்த சேஷாசலத்தின் மேல் தான் இறைவன் நிற்கிறான்! அதனால் விழாவின் முதல் நாள் சேஷனின் மீது ஒய்யாரமாக பவனி!

முன்னே அருளிச்செயல் குழாம், தமிழ்ப் பாசுரங்கள் பாடிச் செல்ல,
தமிழைக் கேட்டுக் கொண்டே, நம் பெருமாள் பின் தொடர,
வைகுண்ட நாதன் திருக்கோலத்தில், அலைமகள் (ஸ்ரீ தேவி) மற்றும் மண்மகள் (பூமிதேவி) உடன் வர,
அவன் பின்னே வேத கோஷ்டி வர,
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவோம் அவனை!

சரி, போன பதிவில் சொன்னபடி ஆழ்வார் பாடலுக்கு வருவோமா? சொன்ன சொல்லைக் காப்பாத்துணம்-ல!
12 ஆழ்வார்களில், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய பத்து ஆழ்வார்களும் வேங்கடத்தானைப் பரவிப் பாடியுள்ளனர். (மங்களாசாசனம் என்று வடமொழியில் வழங்குவர்)

(தொண்டரடிப்பொடி அரங்கத்தானைத் தவிர எவரையும், மதுரகவி அவருடைய ஆசான் நம்மாழ்வாரைத் தவிர எவரையும் பாட்டாகப் பாடவில்லை)
ஆழ்வார்கள் என்றால் யார்? அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவ்வளவாக அறியத் தெரியாதவர்கள், கீழ்க்கண்ட சுட்டிகளில் அறிந்து கொள்ளலாம்!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - நன்றி, திரு தேசிகன் அவர்கள் வலைப்பதிவு
ஆழ்வார் குறிப்பு - நண்பர் பாலாவின் வலைப்பதிவு. பாலா இப்போது தான் துவக்கியுள்ளார். Archives-இல் தேடப் பொக்கிஷம் கிடைக்கும்.



இன்று,
பொய்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்

உளன் கண்டாய் நன்-நெஞ்சே, உத்தமன் என்றும்
உளன் கண்டாய்,உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தின் உள்ளனன் என்று ஓர்!

(உள்ளுவார்=உள்ளத்தில் ஆழ்ந்து நினைப்பார்; ஒர்=அறி; உணர்) மிக எளிய பாடல் தான்!
நல்ல நெஞ்சமே, உத்தமன் என்றும் உள்ளான். எங்கே உள்ளான்?
உள்ளுவார் (நினைப்பவர்) உள்ளதில் எல்லாம் உள்ளான்.
பாற்கடல் வெள்ளத்தில் இருப்பவனும், வேங்கடத்தில் இருப்பவனும் ஒருவனே!
அவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.
இதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக!



இப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் மீள்பதிவு! (ஹிஹி...அடியேனின் முதல் மீள்பதிவும் கூட :-) சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் தான் பதிவெழுதத் துவங்கினேன்....ஓராண்டு ஓடி விட்டதா என்ன?)
இந்த ஆண்டு கருடசேவை, ரதோற்சவம், சக்ர ஸ்னானம் மட்டும் மீள்பதிய எண்ணம்!

மற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்!

Read more »

Friday, September 14, 2007

காங்கிரஸ்காரர் கனவை நனவாக்கிய திமுக-காரர் - தமிழ்நாடு தீர்மானம்!

அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று (Sep 15th). நூற்றாண்டு விழாவுக்கு ஓராண்டு முன்னோடி (99).
அவர் இன்னும் சற்று நாள் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதி எப்படி ஆகி இருக்குமோ இல்லையோ, நிச்சயம் இப்படி ஆகியிருக்காது என்று சொல்வாரும் உண்டு!

அவர் பிறந்த நாள் அஞ்சலியாக இந்தப் பதிவு! - அவர் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டசபை தீர்மானத்தைப் பார்க்கலாம் வாங்க!

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம் என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு
- இப்படி தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பாரதி கூவி விட்டுப் போனாலும், தமிழ்நாடு என்னவோ மதறாஸ் ராஜதானியாகவே இருந்தது!

இனி, அந்த நாள் ஞாபாகம் - பத்திரிகைக் குறிப்பை, History Channel போல அப்படியே பார்ப்போம்! நன்றி - மாலை மலர்!



"தமிழ்நாடு" பெயர் மாற்றக் கோரிக்கை. காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்; 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்
மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் அழைக்கப்பட்டது.

"சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும்" என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957ல் உண்ணா விரதம் இருந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர்.

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.
விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.

காமராஜர் பதில்
இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார். மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார்.
"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே" என்று அண்ணா கூறினார்.

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.
நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.
அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 76_வது நாளில் (1957 அக்டோபரில்) அவர் மரணம் அடைந்தார்.

தமிழில் "தமிழ்நாடு" ஆங்கிலத்தில் "மெட்ராஸ்"
இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின.
இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.
இதுபற்றிய அறிவிப்பை 24_2_1961_ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம்.

இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும்.

எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.
இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.

தி.மு.க. வலியுறுத்தல்
எனினும், "ஆங்கிலத்திலும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.


18_7_1967
"தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது

"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ்நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது.

சட்டசபையில் தீர்மானம்:
இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18_7_1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார்.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக்கூடாது" என்று கூறினார்.
ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார்.

தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:
"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக _ உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந் தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.
பாரதிக்கு தாய்நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா?

முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக்கொண்டேன்.
தமிழ்நாடு என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."
இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.

அண்ணா பதில்
விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:
"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.

இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ்நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் "டமில்நாட்" (தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி. தமிழ ரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.

மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.
சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

"தமிழ்நாடு வாழ்க"
பின் அண்ணா எழுந்து, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.
எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.
சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.
Read more »

Wednesday, September 12, 2007

புதிரா? புனிதமா?? - மகாபாரதம்!

விடைகள் கீழே Bold செய்யப்பட்டுள்ளன. விளக்கங்கள் எல்லாம் வெட்டிப்பயல் கொடுத்துள்ளார். இன்னும் விரிவான விளக்கம் வேணும்னா, பின்னூட்டத்தில்!

வின்னர்கள்:
வெட்டிப்பயல், கெக்கேபிக்குணி - 10/10
பராசரன், குமரன் - 8/10


வென்றவர்க்கும், போட்டியில் நின்றவர்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அடுத்த புதிரா புனிதமாவில் என்ன கேக்கலாம்-ணு போட்டியில் பங்கு பெற்று வரும் நீங்களே சொல்லுங்க! (இது வரை வந்த தலைப்புகள்: தமிழக ஆலயங்கள், சைவம், ராமாயணம், முருகன், பொன்னியின் செல்வன்) - இல்லை விளையாட்டு முறையை வேறு மாதிரி மாற்றலாமா? என்ன நினைக்கிறீங்க?

இந்தப் போட்டியின் பரிசு இதோ! அள்ளிக்கோங்க!
(Blowup Pictures என்பதால் சற்று தாமதம ஆகலாம்!)

1. பார்த்தசாரதி - திருமுக மண்டலம்
பார்த்தனுக்காக, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தானே ஏற்றுக் கொண்டான்;
முகமே புண்ணாகிப் போன, பொன்னன் கண்ணன் - ஒத்தை ரோஜா மாலையில் ஏகாந்த சேவை! திரு அல்லிக்கேணி கண்டேனே
2. திருவல்லிக்கேணியில், மீசையோடு் ஆசைக் கண்ணன் - ஆலய ஓவியம்



மகாபாரதத்துக்கு மட்டும் தான் "மகா" அடைமொழி உண்டு! மகா ராமாயணம், மகா கந்தபுராணம் என்றெல்லாம் சொல்வது கிடையாது! ஏனென்றால் உலகின் நீதிகள் அனைத்தும் பொதிந்த நூல் மகாபாரதம்.
காலத்தால் பிந்திய காப்பியம் ஆதலால், எல்லா நீதிகளும், கதைகளும் இதில் அடங்கி விட்டன! அதனால் "மகா" பாரதம் என்று பெருமை பெற்றது - வாரியார் சுவாமிகள்.

நல்லவர்கள் பேராசை பீடிக்க எப்படித் தீயவர்களாக மாறுகிறார்கள், தர்மத்தின் பாதையில் நடக்கும் போது வரும் தர்ம சங்கடங்கள், அதை எதிர் கொள்வது எப்படி, இறையருள் யாரிடம் அமையும் என்று பலப்பல தத்துவங்கள்!
திருக்குறளில் இருக்கும் ஒவ்வொரு குறட்பாவுக்கும் ஒரு கதையைக் காட்டலாம் இக்காவியத்தில்! அவ்வளவு பரந்த காவியம்!
குழந்தை, வளர்ப்பு, கல்வி, கல்யாணம், இல்லறம், தொழில், போட்டி, ஆன்மீகம், தர்மம், மறைவு என்று வாழ்வின் எல்லாக் கட்டங்களும் கொண்ட காவியம்!

ராமாயணம் போல் அல்லாது, அனைத்துமே நிறை குறை, இரண்டுமே உள்ள பாத்திரங்கள்!
சைவ, வைணவ பேதங்கள் இல்லாத நூல். விநாயகப் பெருமானின் எழுத்தாணி பட்ட காவியம்! கண்ணன் கதையும் ஒன்றாய்க் கலக்கும் நூல்!
கதைக்குள் கதை, அதற்குள் இன்னொரு கதை....
என்று இதில் ஆழம் மிகுதி! பார்க்கலாம் நமக்கு எவ்வளவு தெரிகிறது என்று! :-))

இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு வேத வியாசர்!



1

பாரதப் போரில், உணவுப் பொருட்கள் வழங்கி உதவி செய்ததாகக் கூறப்படும் தமிழ் மன்னன் யார்?

1

அ) பாண்டியன் சோற்றுணை வழுதி
ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்
இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன்
ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

2பீஷ்மர் தெரியும்! பீஷ்மகர் யார்?

2

அ) துரியோதனன் மாமனார்
ஆ) பீஷ்மரின் தந்தை
இ) கண்ணனின் மாமனார்
ஈ) அர்ச்சுனனின் மாமனார்

3

மகாபாரதப் போரில் முதலில் அம்பு எய்த வீரன் யார்?

3

அ) நகுலன்
ஆ) துச்சாதனன்
இ) சால்வன்
ஈ) புரோசனன்

4போரில், பாண்டவர் படையில் முதலில் உயிர் துறந்த வீரன் பெயர் என்ன?

4

அ) கடோத்கஜன்
ஆ) அரவான்
இ) அபிமன்யு
ஈ) உத்தர குமாரன்

5போரின் முடிவில் நூறு கெளரவர்களில் ஒரே ஒருவன் மட்டும் மிஞ்சினான். அவன் யார்?

5

அ) விகர்ணன்
ஆ) துச்சலா
இ) யுயுத்சு
ஈ) அஸ்வத்தாமன்

6

விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த போது, அந்நாட்டு அரசி சுதேசனையின் சகோதரனால் பாஞ்சாலி வம்பிழுக்கப்பட்டாள்? அவன் பெயர் என்ன?

6

அ) கங்கன்
ஆ) பிருகந்நளை
இ) கீசகன்

ஈ) ஜெயத்ரதன்

7கீதை உபதேசிக்க, அதை நேரிடையாகக் கேட்டவர்கள் (live) நான்கு பேர் தான். அர்ச்சுனன், சஞ்சயன், திருதிராஷ்டன்; அந்த நான்காம் நபரின் பெயர் என்ன?

7


அனுமன்

8

துரோணரின் நூற்றியோரு வில்லையும் அவர் ஒரு அம்பு விடுவதற்குக் கூட விடாமல், அதற்கு முன்பே ஒடித்த வீரன் யார்?

8

அ) அபிமன்யு
ஆ) சாத்யகி
இ) சிகண்டி
ஈ) திருஷ்டத் துய்மன்

9கர்ணனின் வளர்ப்புத் தாயார் பெயர் என்ன?

9

அ) அதிரதை
ஆ) ஷோன்
இ) ராதை
ஈ) பானுமதி

10பாண்டவர் வம்சத்துக் குழந்தைகளில் ஒன்றே ஒன்று மட்டும் உயிர் தப்பியது, அதுவும் கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே! அந்தக் குழந்தையின் குழந்தை பெயர் என்ன?

10

அ) பரீட்சித்து
ஆ) யுயுத்சு
இ) ஜனமேஜயன்
ஈ) சித்ராங்கதன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!

1 அ) பாண்டியன் சோற்றுணை வழுதி ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன் ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

2 அ) துரியோதனன் மாமனார் ஆ) பீஷ்மரின் தந்தை இ) கண்ணனின் மாமனார் ஈ) அர்ச்சுனனின் மாமனார்

3 அ) நகுலன் ஆ) துச்சாதனன் இ) சால்வன் ஈ) புரோசனன்

4 அ) கடோத்கஜன் ஆ) அரவான் இ) அபிமன்யு ஈ) உத்தர குமாரன்

5 அ) விகர்ணன் ஆ) துச்சலா இ) யுயுத்சு ஈ) அஸ்வத்தாமன்

6 அ) கங்கன் ஆ) பிருகந்நளை இ) கீசகன் ஈ) ஜெயத்ரதன்

7 ______________________

8 அ) அபிமன்யு ஆ) சாத்யகி இ) சிகண்டி ஈ) திருஷ்டத் துய்மன்

9 அ) அதிரதை ஆ) ஷோன் இ) ராதை ஈ) பானுமதி

10 அ) பரீட்சித்துஆ) யுயுத்சு இ) ஜனமேஜயன் ஈ) சித்ராங்கதன்

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP