Wednesday, October 31, 2007

அமெரிக்கா ஆடும் பேயாட்டம்! (மீள்பதிவு)

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.
சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.
"முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு" விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.

பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும் பூசணிக்காயா?
ஆமாம். எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள்.
ஏன்? எதற்கு?
என்ன ஆச்சு இந்த அமெரிக்காவுக்கு-ன்னு கேட்கறீங்களா?
Oct 31 இரவு - பேய்களின் திருவிழா - பேரு ஹாலோவீன் (Halloween).

இன்னாது? பேய்க்கு எல்லாம் திருவிழாவா?...
வாங்க என்னன்னு பாக்கலாம்.
ஸ்காட்லாண்டு மற்றும் ஐரிஷ் மக்கள் கொண்டாடிய இந்த விழா, அவர்களுடன் அப்படியே புலம் பெயர்ந்து, அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டது!
ஆன்மாக்களுக்கும் (All Souls), புனிதர்களுக்கும் (All Saints) கொண்டாடப்பட்ட விழா, இன்று பேய்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
All Hallows Eve என்பது Halloween என்றாகி விட்டது.

ஐரிஷ் நாட்டு கெல்ட் இன மக்கள், குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் ஆவிகள் எல்லாம், பூமிக்கு விஜயம் செய்வதாக நம்பினர்.
உணவுக்கும், இறைச்சிக்கும், உற்சாக பானத்துக்கும் மட்டும் இன்றி, தங்களுக்கு ஆள் எடுக்கவும் அவை பூமிக்கு வருமாம்.
ஆனால் பெரிய பெரிய தீ மூட்டிக் கொண்டாடினால், அவை பயந்து ஓடி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
மேலும் மக்கள் எல்லாரும் பேய்களின் உடை அணிந்து கொண்டு, பேய் வேடம் போட்டு, ஊருக்குள் உலாவினர்.





அவர்களைப் பாத்து, 'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல; சரி மனிதர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லலாம்', என்று பேய்கள் போய்விடும் என்று நம்பினர்.
அறுவடைக் காலம் நெருங்குவதால், சல்லீசாக கொட்டிக் கிடக்கும் பூசணிப் பழங்கள்; அவற்றைத் தோண்டி, ஓட்டை போட்டு, அதன் மேல் கண்டபடி வரைவார்கள்.
பின்னர் அதை ஒரு கூடை போல் ஆக்கி, அதற்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, ஊர் சுற்ற வேண்டியது தான்!
இப்படித் தீயவைகளை ஏமாற்ற, தீயவர் போல் நடிக்கும் ஒரு விழா உருவாகி விட்டது! :-))

அட்சய திருதியை அன்று அலைமகளை வணங்கி, நமக்கு இருக்கும் செல்வத்தில் சிறிது தானம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அதை அப்படியே உல்டாவாக்கி, இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று நம்ம ஊர் வியாபார காந்தங்களும், மக்கள்ஸும் சேர்ந்து, (ஏ)மாற்றி விட்டார்கள் அல்லவா?
இது நம்மூருக்கு மட்டும் இல்லைங்க, எல்லா ஊருக்கும் பொது தான் போல இருக்கு!
அமெரிக்காவிலும் இதை அப்படியே மாற்றி, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் விழாவாக மாற்றி விட்டன நிறுவனங்கள்.

இன்றைய ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஒரே ரகம் தான்.
பேய், ஆவி, கிழவிகள், பூனை மீசை, தேவதை எனப் பலவாறாக குழந்தைகள் வேடமிட்டுக் கொள்வர்; இதற்கான உடைகளைப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்.
வீடுகளையும் பேய் வீடு போல அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். (கெட்டுது போ...ன்னு யாரோ அங்க முணுமுணுக்கறாப் போல இருக்கே?:-)
ஒட்டடை, சிலந்தி வலை, பூசணி, பூனை முகம், ஆந்தை, ஒளி விளக்கு இப்படி பல வழி இருக்கு!

அப்புறம் என்ன, வேடமிட்ட குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் 'கோவிந்தா' போட வேண்டியது தான். பூசணி உண்டியல் குலுக்க வேண்டியது தான்!
ட்ரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat?? ) -
என்னை ட்ரீட் செய்கிறாயா இல்லை உன் மேல் ட்ரிக் பண்ணட்டுமா என்று சிறார்கள் கேட்க,
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகளின் பூசணிப் பையில் நிறைய மிட்டாய்களைப் போட்டு ட்ரீட் செய்கிறார்கள்!






உணவு இல்லாத பண்டிகையா?
சோள மிட்டாய் (candy corn), பூசணிப் பிரட் (pumpkin bread), பூசணி அல்வாத் துண்டு (pumpkin pie)...இன்னும் நிறைய!
தண்ணித் தொட்டியில், காசுகளை ஆப்பிளுக்குள் புதைத்து, ஆப்பிள்களை மிதக்க விடும் விளையாட்டும் உண்டு. (Bobbling for Apples)
சிறார்கள் வாயாலேயே ஒடும் (மிதக்கும்) ஆப்பிளைப் பிடிக்கும் விளையாட்டு!
மின்னசோட்டாவில் உள்ள அனோகா நகரம் தான் ஹாலோவீன் கொண்டாட்டங்களின் தலைநகரம். (என்ன குமரன்... கொண்டாடப் போனீங்களா?)
சேலம் (அட நம்மூரு...?) , (அட, இது வெட்டிப்பையல் பாலாஜிக்கு பக்கத்து ஊராச்சே), கீன் (நியு ஹாம்ப்ஷையர்), மற்றும் நியுயார்க் நகரங்களிலும் பெரும் கொண்டாட்டங்கள் உண்டு!
அட... டிவியைப் போட்டாக் கூட ஒரே பேய்ப் படமால்ல இருக்கு!
மொத்த ஊரையே இப்பிடி பேய் பிடிச்சு ஆட்டினா, என்ன பண்றது?
யாராச்சும் பேய் ஒட்டறவங்க இருக்கீங்களாப்பா? :-))

ஊரே பூசணி மஞ்சளில் மூழ்கியிருக்க, என்ன நாமளும் கோவிந்தா போடலாம் வாரீகளா?
"பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தனை", கண்களே காணுங்கள்-ன்னு அப்பர் சுவாமிகள் சொல்வார்; அது மாதிரி நம்ம சிவபெருமானுடைய பூத கணங்களின் விழா-ன்னு வேணும்னா நினைச்சிக்குனு ஒரு ரவுண்டு கொண்டாடிட்டாப் போச்சு! என்ன சொல்றீங்க?

சென்னைக்கு அடுத்த முறை போகும் போது அம்மாவிடம் சொல்லி பூசணிக்கா கூட்டும், பூசணிப் பழ அல்வாவும் செய்யச் சொல்லணும்! :-)
மறக்காம அமெரிக்கப் பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லி
....ய்ப்பா யாருப்பா அது பூசணிக்காய நடுரோட்டுல போட்டு உடைக்கிறது...அதெல்லாம் இங்க allowed இல்ல சொல்லிட்டேன்...
Trick or Treat??.........
அன்பே வா......அருகிலே....!!!


பழைய பதிவின், பின்னூட்டங்களின் சுட்டி இதோ
Read more »

Sunday, October 28, 2007

இராவணன் கோவில் மூடப்பட்டது!

தினமலர் செய்தி: (Oct 28, 2007)
ராம பக்தர்கள் வெகுண்டெழுந்ததால், ராவணன் கோவில் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது.
கடந்த வியாழன் கிழமை, இந்த கோவிலில் ராவணன் சிலைக்கு விசேஷ அபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்காக, பிரமாண்ட பந்தல் போட்டு, யாக குண்டங்களும் அமைத்திருந்தனர்.
ஆனால், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். `நம் கடவுள் ராமன் தான். தவறு செய்த ராவணனை அழித்தவர் அவர். அந்த அசுரனை நாம் வழிபடக் கூடாது. நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கத்தினர்.உடனடியாக போலீசார் தலையிட்டு ராம பக்தர்களை சமாதானப்படுத்தி, கோவிலில் இருந்து வெளியேற்றினர்
.

அதன் பின்னும், `கோவிலில் ராவணனுக்கு விசேஷ பூஜை செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று இந்து அமைப்புகள் எச்சரித்ததால், விழாவை நிறுத்தி விடும் படி கோவில் நிர்வாகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதன் படி கோவிலில் விழா நிறுத்தப்பட்டது. விழாவை ரத்து செய்துவிட்ட நிலையில், மீண்டும் பிரச்னை வரலாம் என்று போலீஸ் எண்ணுவதால், கோவிலை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ராவணன் கோவில் மட்டும் மூடப்பட்டது.

கோவிலை நிர்வகிக்கும் கமிட்டி செயலர் அஜய் தவே கூறுகையில், `இந்த கோவிலில் ராவணன் சிலை, சமீபத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்கனவே, ராவணன் சிலைகள் இருந்தன. அவற்றை தான் மீண்டும் வைத்தோம். ஆனால், அதற்கு பிரச்னை கிளம்பியதால், அதை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்' என்று கூறினார்.

ராவணன் கோவிலில், சிவன் உட்பட மற்ற கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன. அந்த சன்னிதிகளுடன் சமீபத்தில் ராவணனுக்கு தனி சன்னிதி அமைத்து, தனி வழி அமைக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து தான் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ராவணன் கோவில் நிரந்தரமாக மூடப்படலாம் என்று தெரிகிறது.



மேற்கண்ட செய்தியைப் படித்ததும் முதலில் சிரிப்பு தான் வந்தது!
இராவணனுக்குப் பெரிதாக வழிபாடுகள் எல்லாம் எங்கும் கிடையாது! அப்படி இருக்க, இப்படி ஒரு சர்ச்சை தேவையா?
முதலில் பதிவிட எண்ணவில்லை!
எப்படியும் சற்றுமுன் தளத்தில் சிவபாலன் செய்தியாகப் பதிவார் என்று எண்ணினேன்.

அப்புறம் தான் தோன்றியது, அட இராவணனுக்கென்றே நம்ம சிவன் கோவில்களில் ஒரு வாகனம் இருக்குமே! அதை யாரும் பார்க்கவில்லையா? பார்க்காமலேயே சண்டை போடுகிறார்களா?
சரி, அப்படிப் பாக்கலைன்னா, இதோ பார்த்துக் கொள்ளுங்கள்! :-)


பல வைணவத் தலங்களில், இராவணன் சிலை, சில கோபுரங்களிலாவது பார்த்துள்ளேன்....படம் கிடைத்தால் பின்னர் இடுகிறேன்.

மேட்டர் ரொம்ப சிம்பிள்!

1. இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான்! அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்!
மற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்!
ஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்?...
அடே ராமா, அவன் அசுரன்! அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்? :-)

2. இராவணின் மனைவி மண்டோதரியை கற்புக்கரசிகளுள் ஒருவராக வைத்து வழிபடுகின்றனர்! தேவர்களில் அருந்ததி இருக்கும் லிஸ்ட்டில், அரக்கி மண்டோதரியா என்றெல்லாம் எவரும் கேட்டதில்லை! அவளுக்கும் அதே மதிப்பு தான் தருகின்றனர்! தேவர்-அசுரர் பிரச்னை எல்லாம் இங்கு ஒன்றும் இல்லை!

3. இராவணின் மீது சிவபெருமான் உலா வருவது, இன்றும் தென்னாட்டில் பல கோவில்களில் வழக்கம்! திருவண்ணாமலையில் இதைக் கண் கூடாகக் காணலாம்!

அதுக்கு இராவண கர்வ பங்க வாகனம் என்றே பெயர்! அதாவாது இராவணன் செருக்கழி ஊர்தி!
சிவபெருமான் உருவம் சின்னதாகத் தான் இருக்கும்!
இராவணனின் வாகனம் தான் கம்பீரமாப் பெருசா இருக்கும்!
அதுக்காக சிவனை இப்படி இன்சல்ட் பண்ணுறீங்களே-ன்னு இது வரை யாரும் கேட்டது கூட கிடையாது! :-)

காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

குறளில் தத்துவமாக இருந்தால், காவியத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கிறது! அவ்வளவு தான்!

ஆனால் நாம் தான்,
ஹீரோ-வில்லன் என்று இறுதி வரை, பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டு போய் விட்டோமே! கருத்துக்களை விட்டு விடுவோம்; ஆட்களை மட்டும் பிடித்துக் கொள்வோம்!
இராமன் காட்டிய வழியில் அன்பும், பொறுமையும், சாத்வீகமும், சான்றாண்மையும் தேவையா?
இல்லை எப்பவுமே ஹீரோ-வில்லன் தான் தேவையா?
எது வேண்டுமோ, அதை அவரவர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

ஆனால் ஒரே ஒரு விஷயம்: இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்! இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று! :-)

Read more »

Sunday, October 21, 2007

புதிரா? புனிதமா?? - சிலப்பதிகாரம்!

வடைகளைச் சுட்டுடலாமா? :-) கீழே விடைகள் Bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள் பின்னூட்டங்களில்!
ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

நமக்கே உரிய நம் தமிழக இலக்கியங்களில் நாம் ஆர்வம் காட்டினால் தான், அடுத்த தலைமுறைக்கு தமிழ் நயம் பாராட்டல் கொஞ்சமாவது மிஞ்சும்!
நாக இளங்கோவன், அவருடைய சிலம்பு மடல்கள் பற்றிப் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்! நன்றாக இருக்கு! உரை நடையில் இருப்பதால், படிக்க எளிதாகவும் இருக்கு! ஆங்காங்கே முக்கியமான பாடல்களை கொடுத்து, உரைநடையும் செய்யுளுமாய் வளைய வருகிறது! தவறாமல் படிங்க!! இதோ சுட்டி!

வெற்றியாளர்கள் யாவர்? (முதலிலேயே சரியாகச் சொன்னவர்கள் வரிசையில்.....)
வரலாறு.காம் - கமல், கெக்கேபிக்குணி, குமரன், ஜி.ராகவன், அனந்த லோகநாதன்


பரிசு? - சிலம்பு?
கழட்டிக் கொடுத்து கட்டுப்படியாவாது!
சுழட்டிச் சுழட்டிச் சிலம்பாட்டம் ஆட வேணும்னா சொல்லிக் கொடுக்கலாம் :-) வூட்டாண்ட வாங்க! சொல்லித் தாரேன்!

இதோ...முழு சிலப்பதிகாரக் கதையும்...ஈசியா புரியற மாதிரி...சிற்பங்களில் வடித்து வைத்துள்ளார்கள்! சிற்பத்தின் புகைப்படம் - பக்கத்திலேயே அதன் கதை! இது எங்கு இருக்கு? பூம்புகார் கூடத்தில் தான்!
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆர்வம் மற்றும் முயற்சியால் உருவான கலைக் கூடம்! நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தளத்தில் உள்ள சுட்டி இது! இதோ பரிசு! க்ளிக்கோங்க!!

அடுத்த புதிரா புனிதமாவில் - வழக்கம் போல் கேள்விகளா இல்லாமல், ஒரு மாற்றம் இருக்கப் போவுது!




ஆதி காவியம்-னு இராமாயணத்தை வடமொழியில் குறிப்பிடுவாங்க! ஆனா நம் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை முதற் காப்பியம் என்று அறியப் பெறுவது சிலப்பதிகாரம் தான்!

மற்ற கதைகளை எல்லாம் அறிந்துள்ள நாம், நம் பண்பாட்டுக் காப்பியமான
சிலப்பதிகாரத்தை அதே அளவுக்கு அறிந்துள்ளோமா? நம் வீட்டுக் குழந்தைகளுக்கு அதில் ஏதாச்சும் கதைகள் இருக்கா? அப்படியே இருந்தாலும், நமக்குத் தெரிஞ்சா தானே குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதற்கு!

மூச்சுக்கு முந்நூறு முறை, தமிழ் தழைக்க வேண்டும் என்று குரல் கொடுக்குறோம். ஆனா நம்முடைய தமிழ்க் காப்பியங்களை நாமே முழுதும் அறிந்து வைத்துள்ளோமா? இல்லை அறியத் தான் முயற்சிகள் செய்துள்ளோமா?......
இல்லை, அறிந்த பின், அதன் கதையைத் தமிழுலகுக்கு மேலும் எடுத்துச் சொல்ல எண்ணியுள்ளோமா?

எனக்கு சிலப்பதிகாரத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியதே கல்லூரியில் தான். சக மாணவர் ஒருவர் அதைச் சிலப்பதி"ஹாரம்" என்று சொல்லி கொஞ்சம் டகால்டி பண்ண, அப்போது கோபம் வந்து படிக்கத் துவங்கினேன் :-)

வள்ளுவர் அறம்-அரசியல் பற்றியும், பெண்ணின் மாண்பு பற்றியும், ஊழ்வினை பற்றியும் தத்துவமாகச் சொல்லி விட்டுப் போனார்!
ஆனால் எளிய மக்களும் அதைத் தொடர்புபடுத்தி பார்க்கும் வண்ணம், கதை நடையில் கொண்டு சென்றவர் இளங்கோ!

கண்ணகியைப் பொழைக்கத் தெரியாதவள், "புனித பிம்பம்" என்று இக்காலத்தில் ஒரு சொல்லில் அடக்கி, கேலி பேசலாம் சிலர்! ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த அறத்தின் மேன்மையை அறிந்தவர் யார்?


இளங்கோவின் காப்பியத்தில் தான் எத்தனை எத்தனை புரட்சிகள்?
1. கதையில் முதலில் தலைவனை அறிமுகப்படுத்தாமல், தலைவியை அறிமுகப்படுத்துகிறார்.

2. அதுவும் ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் சாதாரண குடிமக்கள்.
அரசனைப் பாடாது, அன்புடையாரையும் அடியவரையும் பாடும் பாணி இளங்கோவின் எண்ணத்திலேயே இருந்துள்ளது.

3. பெண்ணின் மென்மைத் தன்மையையும், வீரத்தையும் ஒருங்கே காட்டும் கவிஞர் அவர்! குடும்ப நலனே பெரிதென்று இருக்கும் ஒரு வன்சொல் அறியாத பெண்,
நாலு பேர் முன்னிலையில் "தேரா மன்னா" என்று அரசனைச் சொல்ல எவ்வளவு "தில்" வேண்டும்! அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து! எந்த ஒரு பின்புலமும் அரசியல் சப்போர்ட்டும் இல்லாது!

4. அப்படியே சொன்னாலும், "யாரடி நீ...வாய் நீளுதோ...கொஞ்சம் கூட அவையடக்கம் இல்லாமல்?" என்று அதட்டி இருக்கலாம். ஆனா அமைதியாக வழக்கு கேட்க, ஒரு ஆட்சி முறைக்குத் தான் எவ்வளவு பொறுப்பு இருந்திருக்க வேண்டும்.

கேள்வி கேட்டாலே போதும், வூட்டுக்கு ஆட்டோ அனுப்பும் "மன்னர்கள் ஆளும் மக்களாட்சி" ஆகி விட்டது இன்றைய கால கட்டம்! :-)
அது ராமாயணம் ஆகட்டும் சரி, சிலப்பதிகாரம் ஆகட்டும் சரி... நெறிகளைத் தாங்கிப் பிடிக்காது, ஆட்களை மட்டுமே தாங்கிப் பிடிப்பது என்பதில் ஆத்திகம்-நாத்திகம் கூட கை கோர்த்துக் கொள்வது தான் வேடிக்கை!

5. ஓ, அவளா! அவள் ஒரு நடனப் பெண் தானே என்று இளங்கோ, மாதவியை வெகு ஈசியாக வில்லி ஆக்கியிருக்க முடியும்! படையப்பா ஸ்டைலில், ஒரு வில்லி அப்போதே உருவாகி இருப்பார்! ஆனால் இளங்கோ செய்தது என்ன?
குலத்தால் அவளை ஒதுக்காமல், குணத்தால் அவளை ஏற்றுக் கொண்டு, காப்பிய நாயகிக்கு இணையாக வைக்கிறார்!

காப்பியத்தில், தவறுகளை ஆணும் பெண்ணும் சரி சமமாகவே புரிகின்றனர். ஆனால் மாதவி மனம் மாறி, துறவு மனப்பான்மை மிகுந்து விடுகிறாள்;
கண்ணகியின் நலம் குறித்து தான் விடும் தூதில் கேட்டனுப்பும் போது, நம் மனக்கண் முன் வெகுவாக உயர்ந்து விடுகிறாள்.(அட மாதவியும் புனித பிம்பம் ஆயிட்டாப்பா என்று சொல்லிடாதீங்க :-)

6. இளங்கோ, தான் சமணர் ஆக மாறிய போதிலும், காப்பியத்தில் பொது நோக்கம் தான் காட்டுகிறார்; பிற சமயங்களையும், தெய்வங்களையும், மக்கள் பழக்க வழக்கங்களையும், தனக்கு எதிரி நாடான சோழ/பாண்டிய வளம் பற்றியும் மறைக்காது எழுதிய நல்ல உள்ளம், இளங்கோவின் "நெஞ்சம்". அதனால் தான் போலும், பாரதி "நெஞ்சை" அள்ளும் சிலம்பு என்றான்.

நெஞ்சை அள்ளும் சிலம்பில் எத்தனை முத்துக்கள், மாணிக்கங்கள் நமக்குத் தெரியும்-னு பாக்கலாம், வாரீங்களா?
இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-) சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு இளங்கோவடிகள்!

1

பாண்டியனிடம், தன் தந்தையார் பெயரைக் குறிப்பிடாமல், கணவனின் தந்தையார் பெயரைத் தான் குறிப்பிட்டுச் சொல்கிறாள் கண்ணகி. ஆனால் அவள் தந்தையாரின் பெயர் என்ன?

1


அ) மாசாத்துவான்
ஆ) அப்பூதியடிகள்
இ) மாநாய்க்கன்
ஈ) மாடலன்

2

மாதவியும் கோவலனும் பிரியக் காரணமாக இருந்த பாடல் எது?

2


அ) கானல் வரி
ஆ) குன்றக் குரவை
இ) ஆய்ச்சியர் குரவை
ஈ) இந்திர விழா எடுத்த காதை

3

இளங்கோ அடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் கண்ணகி உயிர் துறந்த கதையை முதலில் சொல்லியவர் யார்?

3


அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள்
ஆ) கூல வாணிகன் சாத்தனார்
இ) கவுந்தி அடிகள்
ஈ) சமண குரு

4கோவலனை ஏமாற்றிய பொற்கொல்லனின் பெயர் என்ன?

4


அ) மதுரைப் பொன்னான்

ஆ) மாநகர் வழுதி
இ) குறிப்பிடவில்லை
ஈ) சித்திரக் கொல்லன்

5மாதவி, கோவலனிடம் தூது அனுப்பும் ஆட்களின் பெயர் என்ன?

5


அ) மாதரி/கோசிகன்
ஆ) மாடலன்/மாதரி
இ) வசந்தமாலை/கோசிகன்
ஈ) சித்ராபதி/வசந்தமாலை

6மாதவிக்கு அரசன் கொடுத்த மாலையைப் பொருள் கொடுத்து வாங்க வல்லவரே, மாதவியின் கணவர் என்று மாதவியின் தாயார் அறிவிக்கின்றாள். கோவலன் எவ்வளவு பொன் கொடுத்து மாலையைப் பெறுகிறான்?

6


அ) 1,008 பொன்
ஆ) 1,000 கழஞ்சு
இ) 1,008 கழஞ்சு
ஈ) 11,000 பொன்

7கோவலனையும் கண்ணகியையும், மதுரைக்கு வெளியே உள்ள ஒர் இடைச்சேரியில், இரு பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் கவுந்தியடிகள்! அவர்கள் யார்?

7


அ) மாதரி/ஐயை
ஆ) குரல்/துத்தம்
இ) விளிரி/ஐயை
ஈ) கைக்கிளை/ஐயை
8

சிலப்பதிகாரத்தில் சுவாமிமலை எனப்படும் திருவேரகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இளங்கோவால் வர்ணிக்கப்படும் வைணவத் தலங்கள் எவை?

8


அ) திருவரங்கம்/காஞ்சி
ஆ) திருவரங்கம்/அழகர் கோவில்
இ) திருமலை/திருவரங்கம் ஈ) திருமலை/திருவனந்தபுரம்

9மணிமேகலை என்று குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள் மாதவியும் கோவலனும். யார் நினைவாக அந்தப் பெயரைச் சூட்டுகிறார்கள்?

9


அ) கோவலன் குலதெய்வம்

ஆ) மாதவியின் ஆபரணம்
இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம்
ஈ) மாதவியின் தாயார்

10கண்ணகிக்கு கோவில் எடுக்க, இமயத்தில் இருந்து கல்லெடுக்க விரும்பினான் செங்குட்டுவன். அப்போது ஏற்பட்ட வடதிசைப் போரில் எந்த வடநாட்டு மன்னர்களைப் போரிட்டு வென்றான்?

10


அ) கனகன்/சஞ்சயன்
ஆ) கனகன்/அழும்பில்வேள்
இ) கனகன்/விசயன்
ஈ) விசயன்/கங்கன்

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மாசாத்துவான் ஆ) அப்பூதியடிகள் இ) மாநாய்க்கன் ஈ) மாடலன்

2 அ) கானல் வரி ஆ) குன்றக் குரவை இ) ஆய்ச்சியர் குரவை ஈ) இந்திர விழா எடுத்த காதை

3 அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள் ஆ) கூல வாணிகன் சாத்தனார் இ) கவுந்தி அடிகள் ஈ) சமண குரு
4 அ) மதுரைப் பொன்னான் ஆ) மாநகர் வழுதி இ) குறிப்பிடவில்லை ஈ) சித்திரக் கொல்லன்
5 அ) மாதரி/கோசிகன் ஆ) மாடலன்/மாதரி இ) வசந்தமாலை/கோசிகன் ஈ) சித்ராபதி/வசந்தமாலை
6 அ) 1,008 பொன் ஆ) 1,000 கழஞ்சு இ) 1,008 கழஞ்சு ஈ) 11,000 பொன்
7 அ) மாதரி/ஐயை ஆ) குரல்/துத்தம் இ) விளிரி/ஐயை ஈ) கைக்கிளை/ஐயை
8 அ) திருவரங்கம்/காஞ்சி ஆ) திருவரங்கம்/அழகர் கோவில் இ) திருமலை/திருவரங்கம் ஈ) திருமலை/திருவனந்தபுரம்
9 அ) கோவலன் குலதெய்வம் ஆ) மாதவியின் ஆபரணம் இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம் ஈ) மாதவியின் தாயார்
10 அ) கனகன்/சஞ்சயன் ஆ) கனகன்/அழும்பில்வேள் இ) கனகன்/விசயன் ஈ) விசயன்/கங்கன்

Read more »

Sunday, October 14, 2007

தசாவதாரம் படமும், கமலஹாசப் பெருமாளும்!

கமலஹாசப் பெருமாளா? - இது என்ன மாதவிப் பந்தலில் கூத்துன்னு பாக்கறீங்களா? அய்யோடா! நீங்க தசாவதாரம் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் பாக்கலீங்களா? அட என்னங்க நீங்க?
உலக நாயகன் கமலுக்காக இல்லீன்னாலும், நம்ம உள்ளத்து நாயகி அசினுக்காக-வாச்சும் பாருங்கப்பு பாருங்க!

அசின் கையில் ஒரு பெருமாள் சிலை! அது எப்படி அவிங்க கைக்கு வந்துச்சு? சரி, கமலோட வருங்கால மாமனார் கொடுத்தாருன்னு வச்சுக்குங்களேன்!
(யாருப்பா அது, கமலுக்கே இன்னும் மாமனார் ஆகும் கடமை ஒண்ணு பாக்கியிருக்கு-ன்னு சவுண்ட் வுடறது?)
அந்தச் சிலையை எடுத்துக்கின்னு ஊர் ஊராச் சுத்தறாங்க இந்த ஜோடி!
ஏன்? எதுக்கு? அட போங்கப்பா...எல்லாம் சிலையைக் கொள்ளைக்காரப் பொண்ணுங்க கிட்ட இருந்து காப்பாத்த தான்! (பொண்ணுங்க, சிலையைத் துரத்தறாங்களா இல்லை கமலைத் துரத்தறாங்களா என்பது தனிக் கதை)
சிலையைப் பாத்து பாத்து அசின் அழுவுறாங்க! அதப் பாத்து பாத்து நம்ம கமல் அழுவுறாரு!
அசின் கண்ணீரில் கமல் பிம்பமாய் ப்ரதிபலிக்க,
கமல் கண்ணீரில் அசின் ப்ரதிபலிக்கறாங்க!

அப்படியே ஒரு ஜூம் ஆங்கிள் ஷாட்! கேமிராவில் காதல் ஆராய்ச்சி செய்யும் கொலையாளிகள்...சாரி...கலையாளிகள் யாராச்சும் வாங்கப்பு!



அசின் செம்பவள வாய் திறந்து அழாதீங்கன்னு சொல்ல வாயெடுக்க,
கமல் அந்த வாயை, வண்ணமாக மூட...கமல் "கமாலு"க்குத் தயாராக...
பூசை வேளையில் கரடியாய் வில்லிகள் துரத்த...அருகில் இருந்த வண்டியில் ஏறிக் குதிக்குது ஜோடி!
ஆனா அது ஒரு காய்கறி வண்டி. அதில் பறந்து பறந்து skiing செய்யுது நம்ம ஜோடி!
அன்னிக்குப் பூரா நம்ம பெருமாளுக்கு Vegetable Skiing Vahanam தான்னு வச்சிக்குங்களேன்! :-)


எனக்கு என்னவோ அந்தச் சிலையைப் பார்த்தா "செல்லா" ஞாபகம் தான் வருது! அட நம்ம மேலக்கோட்டை செல்வப்பிள்ளையைச் சொன்னேங்க! திருநாராயணபுரத்து பெருமாளான செல்வப் பிள்ளையை மீட்டுக் கொண்டு வந்த காதல் கதையைத் தான் துலுக்கா நாச்சியார் இடுகையில் முன்னமேயே படிச்சிருப்பீங்களே!



தசாவதாரம் படம் தீபாளீ ரிலீஸ்-ன்னு சொன்னாய்ங்க!
இப்போ அது புஸ்வாணம் ஆயி, பொங்கல் ரீலீஜு-ன்னு சொல்லுறாய்ங்க!
அது சரி...
அது இன்னா பத்து வேஷம் கட்டுறாரு கமலு? உங்களுக்குத் தெரியுமா?

1 கோயில் அர்ச்சகர்
2 குள்ளன்
3 விஞ்ஞானி
4 சண்டை வீரர்
5 ஆப்பிரிக்கப் பையன்
6 சுற்றுலா கைடு
7 திருடன்
8 மன்னன்
9 வயசான பிகரு
10 இளமையான பிகரு

இது போதாதுன்னு வெள்ளை மாளிகை போல் ஒரு செட் போட்டாங்களாம் சென்னையில்! உடனே ஜார்ஜ் புஷ் போல வேஷம் கட்டப் போறாரு-ன்னு ஒரு வதந்தி பரவிப் போச்சு!
ஈழத் தமிழராகவும், ஜப்பானியராகவும், ஆப்கானிஸ்தான் ஆளைப் போலவும், தலேர் மெகந்தியைப் போலவும்-னு பல வதந்தி உலவுது!


இதுல, மூனு ரோல்-ல கமலை யாருன்னே கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு மேக்கப்பாம்! ஹாலிவுட்டின் மைக்கேல் வெஸ்ட்மூர் தான் இந்த மேக்கப் டகால்டி வேலை எல்லாம் பண்ணறாராம்! கமலே ஹீரோவாகவும், வில்லனாகவும் பின்னிப் பெடல் எடுக்க, அசினுக்கும் டபுள் ரோலாம்!

மல்லிகா ஷெராவத் அக்கா வேற படத்துல ஜோடி போடறாங்களாம். CIA ஏஜென்ட்டாம்!
ஹைய்யா! அப்படின்னா மல்லிக் நியுயார்க் வருவாங்கல்ல?
வெல்கம் டு நியுயார்க், மல்லிக்!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் மல்லிகா பந்தல்-னு ஒரு புது வலைப்பூ தொடங்கலாம்-னு பேசிக்கிட்டு இருந்தோம்! அதுக்குள்ள நீங்களே வரீங்க! வாவ்! :-)
ஜெயப்ரதா ஆண்ட்டி படத்துல ஒரு ரோல் பண்ணறாங்க-ன்னு பேச்சு!

முதல் ஷாட்டுக்கே மூன்று கோடியாச்சாம்!
பாவம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இன்னும் என்னன்னல்லாம் பண்ணப் போறாரோ தெரியலை!
சிதம்பரம் கோவிலை recreate பண்ணி ஒரு செட்டு!
சுனாமி காட்சி - உருவாக்கம்
நெப்போலியன் அரண்மனை-ன்னு மெகா பண முழுங்கிக் காட்சிகள் வேறு இருக்காம்!

சரி...படத்துக்கு மீஜிக் யாரு? ஹிமேஷ் ரசம்சாதம்-ன்னு யாரோ ஒருத்தர் பாலிவுட்ல இருந்து வராராமில்ல!
சும்மா அதிரப் போதாமில்ல! நமக்கும் சும்மா ஒதறப் போதாமில்ல!
அட அதாங்க பாப் மீசிக் ஸ்டார், மீசிக் டைரக்டர், Himesh Reshammiya தான் அவரு! கோலிவுட்-ல மொதல் என்ட்ரி கொடுக்கறாரு! அக்ஷர், தில் தியா ஹை படத்துக்கு மீசிக் போட்டு ஹிட்டாச்சுதே, அவரே தான் இவரு!

நடிகர் திலகம் கொடுத்த நவராத்திரி படத்துக்கு இணையாக கமலின் தசாவதாரம்-னு சொல்லிக்கறாங்க!
பார்க்கலாம்...
கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்!
பொங்கலின் போது தசாவதாரம் பொங்கி விளையாடப் போகுதா-ன்னு, ஹைப் கூடிக்கிட்டே இருக்கு!
மேலும் ஹைப்புக்கு, இந்தாங்க orkut-இல் தசாவதாரம்!
(படங்களுக்கு நன்றி: dasavatharam.info)

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP