Wednesday, January 30, 2008

தியாகராஜ ஆராதனை: திருமலையில் தீ வைத்த பாட்டு! - 2

இறைவன்-திரை-தியாகராஜர்!
அந்தத் திரை கல்லால் ஆன மதில் போல் அப்படியே கெட்டியாக நிற்கிறதே! "ஏமிரா இது! ஈ பெத்த மொகோடு-கி எந்த அகங்காரம்? எந்த அகங்காரம்?" - அர்ச்சகர்கள் இப்போது கைப்பிடித்துத் தள்ளி விடாத குறையாக விரட்டுகின்றனர்! முந்தைய பாகம் இங்கே!

"சுவாமிகளே, திரை மட்டும் தானே போட்டு இருக்கீங்க! இன்னும் நடை சார்த்தி விடவில்லையே! தயவு பண்ணித் தரிசனம் செய்து வையுங்கள்!
அடியேன் பெயர் தியாகராஜன். காவிரிக் கரையான திருவையாற்றில் இருந்து வருகிறேன்! வழியெல்லாம் அவனைப் பார்க்கும் ஏக்கத்தோடயே வந்து விட்டோம்!
ஒரே ஒரு கணம் பெருமானைக் கண்ணாரக் கண்டுவிட்டு போய் விடுகிறோம்! மீண்டும் நாளை காலை வந்து ஆர அமரச் சேவிக்கிறோம். இப்போது நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணனும்!"

"ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"


தியாகராஜரும், அவரது மூன்று சீடர்களும் சற்றே தயங்கி நிற்கிறார்கள்!
"அர்ச்சகர்களே! இவர் பெருமை அறியாமல் பேசுகிறீர்கள்!
இவர் சங்கீத மேதை, நாதப் பிரம்மம், திருவையாறு தியாகராஜ சுவாமிகள்! தஞ்சாவூர் மகாராஜாவின்...." அவர்கள் சொல்லி முடிப்பதற்குள், சன்னிதியில் சுய பிரதாபங்கள் தேவையில்லை என்று தியாகராஜர் தடுத்து விடுகிறார்.

"நீங்க யாரா இருந்தா எங்களுக்கென்ன? உங்களைப் பார்த்தா அப்படி ஒன்னும் செல்வாக்கு இருக்குற மாதிரி எல்லாம் தெரியலையே! பஞ்சத்தில் அடிபட்டவங்க மாதிரி இருந்துகிட்டு, பேச்சு மட்டும் நீளுகிறதே?
இப்படி இங்கேயே நின்னுன்டு இருந்தீங்கன்னு வச்சிக்கோங்க, வாசக் கதவைப் புடிங்கிண்டு வந்து உங்க எல்லாரையும் பெருமாள் பாத்துருவாரு! ஹாஹா ஹாஹா!" - கேலியாகச் சிரிக்கிறார் பட்டை நாமம் போட்ட ஒரு அர்ச்சகர்.

"ஐயா பக்த சிகாமணிகளே! உங்களை எல்லாம் பார்க்காம பெருமாள் ஒன்னும் கரைஞ்சிப் போயிட மாட்டாரு! மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" - இன்னொரு அர்ச்சகரும் கேலியில் சேர்ந்து கொள்கிறார்.

வாலாஜாப்பேட்டை வேங்கடரமணன் என்னும் சீடனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது! "இன்னும் அர்த்த ஜாம பூஜை கூட முடியவில்லை! அதற்குள் நீங்கள் எப்படி நடையை மூடலாம்?"
"இத்தனை பக்தர்களையும் முதலில் எதுக்கு உள்ளே வர விட்டீங்க? கோயிலை மூடுவதாய் இருந்தால் வாசலிலேயே தடுத்து இருக்கலாமே! உங்கள் சவுகரியத்துக்கு, எல்லாம் செய்து விட்டு, இப்போது ஏளனம் வேறு செய்யறீங்களா? ஜாக்கிரதை!"

தியாகராஜர் வேங்கடரமணின் கையைப் பற்றிக் கொள்கிறார். "வேண்டாம் ரமணா வேண்டாம்! விட்டுவிடு!
ஆலயத்தில் ஜாக்கிரதை அது இதுன்னு அந்நிய வார்த்தைகளை எல்லாம் பேசாதே! நம் அப்பனின் வீட்டில், நாமே அப்படி நடந்து கொண்டால் நல்லாவா இருக்கு?
இப்போ என்ன? நாம் தான் அவனைப் பார்க்கவில்லையே தவிர, அவன் நம்மை எல்லாம் பார்த்திருப்பான் அல்லவா! அது போதும்! வா போய் விடலாம்! நாளை காலையில் திரும்பி வருவோம்!"

"ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!
போன்னு சொன்னா உடனே போகாம, எங்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டியதே நீங்க தான்! இப்போ அடிபட்ட குழந்தை போல் வேஷம் போடுறீங்களா? நகருங்கள் இங்கிருந்து! இதுவே இறுதி எச்சரிக்கை!!"



தியாகராஜரும் சீடர்களும் வந்த வழியே திரும்பி வந்து, திருமாமணி மண்டபத்தில் நின்று கொள்கிறார்கள்.
தியாகராஜர், துவார பாலகர்களான ஜய விஜயர் இருவரையும் பார்க்கிறார். எதிரில் கை கூப்பி நிற்கும் கருடனைப் பார்க்கிறார்! சதா சர்வ காலமும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்! நீங்கள் செய்த புண்ணியமே புண்ணியம் என்பது போல அவர் கண்கள் பனிக்கின்றன.

"குருவே, நீங்களே இப்படி நாலு பேர் பார்க்கிறா மாதிரி அழலாமா? உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க! வருவது வரட்டும்!
வேகமாக ஓடிப் போய், படீர்னு திரையை விலக்கி விடுகிறேன்! அந்தக் கண நேரத்தில் நீங்க பெருமாளைப் பார்த்து விடுங்கள்!"

"வேண்டாம் ரமணா! வேண்டாம்!
இது அவங்க போட்ட திரை-ன்னு தானே நினைச்சுகிட்டு இருக்கே! இல்லை!!
இது எனக்கு நானே போட்டுக் கொண்ட திரை!!

எந்தப் பிறவியில்...எந்தப் பக்தனை ஆணவத்தால், மனம் நோகப் பேசினேனோ? அது எல்லாம் ஒன்னாச் சேர்ந்து, இப்படித் திரையாக வந்து முன்னால் தொங்குது!
எப்பவும் மற்றவர்கள் மனம் வலிக்கப் பேசுகிறோமே! ஆனா நமக்குன்னு வலிக்கும் போது தானே வலி-ன்னா என்னன்னு தெரியுது!"
பெருமாளே! தயா சிந்து! உன்னை ஆசை ஆசையாய்த் தேடி வந்தவனைத் தள்ளி நிற்க வைத்து ஒரு புதிய கீதை சொல்கிறாயா நீ?"

திருவையாறு காவிரி ஆறு, தியாகராஜர் கூடவே புறப்பட்டு வந்துவிட்டதா என்ன? அவர் கண்களில் அப்படி ஒரு ஆடிப் பெருக்கு! எந்தப் பொறியாளனால் இதுக்கு அணை கட்ட முடியும், சொல்லுங்கள்? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்!
நாதப் பிரம்மத்துக்கு நா எழவில்லை! பா எழுந்தது!! - தெர தீயக ராதா!!


115858699_771cce968c

தெர தீயக ராதா...நா லோனி
திருப்பதி வேங்கட ரமணா...மத்சரமுனு

(தெர தீயக ராதா)
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதி - நா லோனி

(தெர தீயக ராதா)

(பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்கலாம்....)
* மதுரை மணி குரலில்
** எம்.எஸ்.அம்மா குரலில்
*** ரஞ்சனி-காயத்ரி யூ-ட்யூப் வீடியோ

திரை விலக்க மாட்டாயா - என்னுடைய
திருப்பதி வேங்கட ரமணா...தீய எண்ணத்
(திரை விலக்க மாட்டாயா)

பரம புருஷா, தர்மாதி மோட்சம் தன்னை
பற்ற விடாது, அடாது செய்யும் - என்றன்

(திரை விலக்க மாட்டாயா)

வலை தனை அறியாமல் - விலங்கினங்கள்
வகை யாய்ச் சிக்கினவே - நானும் உன்றன்
தயவால் குறிப்பறிந்தேன் - அனுசரித்தே
தியாகராஜன் வேண்டுகிறேன் - தீய எண்ணத்

(திரை விலக்க மாட்டாயா)




கெளளிபந்து ராகத்தில், தியாகராஜர் உள்ளம் எரிந்து பாடுகிறார்.....
பற்றி எரிகிறது திரை!
சுற்றி எரிகிறது திரை!

கண்மூடிக் கண் திறப்பதற்குள்.....

குபுகுபு என்று தீ பற்றிக் கொண்டது திரையில்!
கருவறைக்கு முன்னுள்ள பட்டுத் திரை சில நிமிடத்தில் அறுந்து, விழுந்து.....பஸ்பமாகிப் போனது!
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்! - என்று கோதை சொன்னது உண்மை தானோ?
எம்பெருமான் கருவறை விளக்குகள் எல்லாம் இன்னும் ஒரு படிச்சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன!

பெருமானின் ஏகாந்த சேவை! - அர்ச்சகர்கள் செய்து வைக்காத சேவையை, அன்பு செய்து வைத்தது!
தியாகராஜர் மூச்சடைத்து நிற்கிறார்!
சீடர்கள் பேச்சடைத்து நிற்கிறார்கள்!
அர்ச்சகர்கள் அரண்டு போய் கதிகலங்கி நிற்கிறார்கள்!!
அங்கிருந்த இதர பக்தர்கள் ஆகாகாரம் செய்கிறார்கள்!!
கோவிந்தா என்னும் கோஷம் போடக்கூட யாருக்கும் நாக்கு வரவில்லை! ஆனால் அனைவருக்கும் கைகள் மட்டும் தன்னை அறியாமல் தலைக்கு மேல் போகின்றன!

தியாகராஜரின் கண்களுக்குத் தன்னையே தான் நம்ப முடியவில்லை! எல்லாரும் ஆகா ஓகோ என்று சொல்லும் இவனா....அந்தத் திருவேங்கடமுடையான்?......
முதல் முறை பார்க்கிறார் அல்லவா? உடம்பு கிடுகிடு என்று நடுங்குகிறது!
கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே!
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே!
பெரிய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!
நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!


இவன் சக்ரவர்த்தி திருமகன் இராமன் போலவே தெரிகிறானே! கெளசல்யா சுப்ரஜா "ராமா" என்றல்லவா இவனை எழுப்புகிறார்கள்! ஆம்! இவன் இராமனே தான்! வேங்கட ராமன்! வேங்கட ரமணன்!
நான் அன்றாடம் போற்றிய இராமனே தான் இவன்! - அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுகிறார்! சீடர்கள் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்!

அர்ச்சகர்கள் கருவறைக்குள் செல்லவே பயப்படுகிறார்கள்!
சற்று முன்னர் தானே, எரியும் திரையைக் கண்டார்கள்? அதான் உள்ளே செல்ல அப்படி ஒரு நடுக்கம்! ஒருவர் மட்டும் ஓடி வந்து சீடன் வேங்கடரமணனிடம் மன்னிப்பு கேட்கிறார்!
மயக்கம் போக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது! எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்த மனிதர் கருவறைக்குள் ஓடிச் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருகிறார்!

நீர் தெளிக்கப்பட, தியாகராஜரின் மயக்கம் தெளிகிறது! அர்ச்சகர்கள் எல்லாரும் ஓடோடி வந்து மன்னிப்பு கேட்கிறார்கள்! அதன் பின்னரே, ஏகாந்த சேவையை முறையாகச் செய்து வைத்து நடை சாத்துகிறார்கள்!
பக்தர்கள் அனைவருக்கும் இரவு நேரப் பிரசாதம் - திராட்சை முந்திரிகள் தூவிய கெட்டிப் பாலும்-பழமும், தொன்னையில் வைத்துத் தரப்படுகிறது!
தியாகராஜரையும் சீடர்களையும் அன்றிரவு தங்க வைக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள், அலுவலர்கள்.

மறுநாள் காலையில் பல முறை அப்பனைத் தரிசனம் செய்து மகிழ்ந்த தியாகராஜர், "வேங்கடேச நின்னு சேவிம்பனு" என்று இன்னொரு கீர்த்தனையை மத்யமாவதி ராகத்தில் பாடுகிறார். திருமலையிலேயே வாழ்ந்து மறைந்த அன்னமாச்சார்யருக்கு மறக்காமல் தன்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறார்!
பின்பு எம்பெருமானிடம் பி்ரியாவிடை பெற்றுக் கொண்டு திருமலையை விட்டுக் கீழே இறங்கி, தம் ஆருயிர் நண்பரான கோவூர் சுந்தரேச முதலியாரைக் காணச் சென்னை நோக்கிப் பயணமாகிறார்!

வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் நின்றிருக்க,
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!!



மக்களே,
சென்ற ஞாயிற்றுக்கிழமை (Jan 27, 2008) நடந்த தியாகராஜர் நினைவு நாள் - ஆராதனையை ஒட்டி எழுதியதே இந்த இரண்டு பதிவுகள்!
தியாகராஜ ஆராதனையின் ஹைலட்டே (முக்கிய கட்டமே) "எந்தரோ மகானுபாவுலு" என்னும் கடைசிக் கீர்த்தனை தான்! கீழே யூ-ட்யூப் வீடியோவில் கண்டு மகிழுங்கள்!
பாட்டின் இறுதிக் கட்டத்தில், வெறும் கைத்தட்டல் ஓசை மட்டுமே தாளமாகக் கொண்டு முடியும் சூப்பர் காட்சி! தவறாது காணுங்கள் (Track position 05:00)!

எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை மகான்கள், பக்தி உள்ளங்கள், இந்த ஞான பூமியில்! அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்!

Read more »

Saturday, January 26, 2008

தியாகராஜ ஆராதனை: குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா! - 1

நீங்க ரொம்பத் தொலைவில் இருந்து ஒரு பெரிய ஊருக்கு வந்திருக்கீ்ங்க. மிகவும் களைப்பான பயணம். திரும்பிச் சென்று பயணக் கட்டுரை எல்லாம் வேற போடணும்! அந்த ஊரில் இருப்பதோ மிகவும் பிரபலமான கோயில். உங்களுக்கு மிகவும் புடிச்ச சாமி வேற! மதியம் கோயிலை மூடி நடை சாத்தப் போறாங்க. இன்னும் அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு! சரின்னு, ஓய்வு கூட எடுத்துக்காம நேராக் கோயிலுக்கு ஓடறீங்க!

அங்க போயி அப்படி சன்னிதானத்துக்குள் நுழைஞ்சீங்களோ.....இல்லையோ, அர்ச்சகர் கதவைப் படார்னு சாத்திடறாரு! - எப்படி இருக்கும் உங்களுக்கு?

கைக்கடிகாரத்தைப் பார்க்கறீங்க...மணி 11:10 தான் ஆவுது! பொதுவா 11:30 மணிக்குத் சாத்தறது தான் அங்கிட்டு வழக்கம்! அன்னிக்கி மட்டும் என்ன பிரச்சனையோ! ஐயா சாத்திப்புட்டாரு! உடனே நீங்க என்னவெல்லாம் பேச ஆரம்பிப்பீங்க? அதுவும் நீங்க ஒரு பெரும்புள்ளியாகவோ இல்லை பெரிய பெரிய ஆளுங்களைத் தெரிஞ்சவராகவோ இருந்தீங்கன்னா? அப்படியே கற்பனையில் ஓட்டிக் கொள்ளுங்கள்! :-)

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி நாள் இன்று! அவர் பாட்டுடன் ராகம் போல், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.
இன்னிக்கி தியாகராஜ ஆராதனை! (Jan 27, 2008). மேலே சொன்னது போல் அவர் வாழ்விலும் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி நடந்திருக்கு! பார்ப்போம், வாங்க!


சங்கீத மும்மூர்த்திகளில் இன்று முதலாவதாக வைத்துப் போற்றப்படும் தியாகராஜர், அன்றோ பரம ஏழை! அவருக்கோ "நிதியை" விட "சந்-நிதியே" சுகமாய் இருந்தது!

அவருடைய பாடல்கள் கொஞ்ச கொஞ்சமாய் வெளியில் பரவ ஆரம்பித்த போது தான், அவருக்கென்று சில சீடர்கள் வந்து சேர்ந்தனர். ஆனா குருதட்சிணை வாங்கிச் சம்பாதிக்கத் தெரிய மாட்டாமல், நாளொரு இராமன் பொழுதொரு இராமனாகவே இருந்தாரு தியாகராஜர்.

அன்னிக்கு என்னமோ திடீரென்று அவருக்குத் திருப்பதி யாத்திரைக்குப் போகணும் போல ஒரு உணர்வு! இதுவரை போனதே இல்லை!

அவர் இருப்பதோ தென் தமிழ்நாட்டில்! அதுவோ வட வேங்கடம்! தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கும் திருவையாறு கிராமத்தில் இருந்து, வண்டி கட்டிக்கிட்டுப் போகணும்னாக் கூட குறைஞ்சது ஏழு நாளாச்சும் ஆகும்! கைச்செலவுக்கு காசு வேறு வேணும்! என்ன செய்யலாம்?...தள்ளிப் போடலாம்!
அன்றிரவு புரண்டு புரண்டு படுக்கிறார்! தூக்கமே வரலை! ஏன் திடீர்னு இப்படி ஒரு உந்துதல்? இராமனிடம் மட்டுமே லயித்த தன் மனம், இன்று வேங்கடவனைக் காணத் துடிப்பது ஏனோ? ச்சே...எல்லாம் அந்தச் சிறுவனால் வந்தது!


போன வாரம் திருவையாற்றுக்கு வந்திருந்த அந்தப் பொடிப் பையன் என்னமாப் பேசி விட்டான்! திருவரங்கம் இராமானுச மடத்தில் இருந்து ஊர் ஊராய் போய்த் தொண்டு செய்யறவன் போல! பேச்சு வாக்கில் வேங்கடவன் கோலமும் இராமனின் கோலமும் எப்படி எல்லாம் ஒத்துப் போகுது என்று அவன் சொல்லச் சொல்ல...இப்படி ஒரு ஆவல் தம்மைப் பற்றிக் கொண்டு விட்டதே!



வேங்கடவனுக்கும் இராமனைப் போல் அதே சடைமுடி! இன்றும் சடைமுடியைச் சற்றே தூக்கி விட்டுத் தானே நீராட்டுகிறார்கள்! மூர்த்தியின் தோளிலே காணப்படும் வில் ஏந்திய தழும்பு!

அதே கஸ்தூரி திலகம்! மார்பில் அதே திருமறு மச்சம்!
முழங்கால் வரை அதே போல் நீண்டு தொங்கும் கைகள்! அதே போல் மெல்லிய புன்சிரிப்பு!
இராமனுக்கு ஒரு சபரித் தாய் என்றால் இவனுக்கோ ஒரு வகுளைத் தாய்!
சபரி எச்சில் பழத்தை இராமனுக்குக் கொடுத்தாள்; அவனும் உண்டான்!
இந்த வகுள மாலிகையும் ருசியைச் சோதிக்க பழத்தைக் கடித்துப் பார்த்துக் கொடுக்கிறாள்! அதை இவனும் உண்கிறானே!

அனுமன் அவதரித்த மலை தானே திருமலை! இராமன் இல்லாமல் அங்கு அனுமன் தோன்றுவானா என்ன?
மேலும், மதுரையில் இருந்து வந்த ஒரு இராமனின் உற்சவ மூர்த்தியைத் திருமலைக் கருவறையில் இராமானுசர் நிறுவி இருக்காராமே!....


இப்படி எல்லாம் யோசித்து யோசித்து, உறங்காமலே உறங்கிக் கொண்டிருக்கும் தியாகராஜருக்கு, சிற்றஞ்சிறு காலை ஒரு வழியாய்ப் புலர்ந்தது!
சிற்றஞ்சிறு காலை, "வந்துன்னைச் சேவிக்க ஒரு வழியும்" சேர்த்தே புலர்ந்தது!...

சென்னையில் இருந்து தன் பரம ரசிகர், கோவூர் சுந்தரம் முதலியார், கொஞ்சம் பொருள் கொடுத்து ஒரு ஓலையும் உடன் அனுப்பி இருக்கிறார்!

திருமலை யாத்திரைக்குத் தியாகராஜர் சென்று வரவேண்டும்; அப்படியே வரும் வழியில் சென்னைக் கோவூரில் உள்ள தன் இல்லத்துக்கு வந்து அளவளாவ வேண்டும் என்றும் எழுதியுள்ளார். அந்தக் கோவூரில் உள்ள சிவபெருமான் மேல் தியாகராஜர் வாயால் சில பாடல்கள் பாட வேண்டும் என்று ஓலையில் தனியாக விண்ணப்பம் வேறு வைத்துள்ளார்.

அட, ரெண்டு நாளுக்கு முன்னால் தானே நமக்கே திருப்பதி போகணும்-னு தோனிச்சி? அதுக்குள்ள முதலியாருக்கு யாரு சொல்லி இருப்பா?
சரி, அப்படியே யாராச்சும் சொல்லி இருந்தால் கூட, சென்னையில் இருந்து திருவையாறு வருவதற்கே அஞ்சு நாள் ஆயிடுமே! - ஒன்றுமே புரியவில்லை தியாகராஜருக்கு! சரி.....இறைவன் திருவுள்ளம் வைத்ததால் தான், தரிசன பாக்கியம் அமைகிறது போலும் என்று நினைத்துக் கொண்டார்.

தம் சீடர்கள் சிலருடன் உடனே கிளம்பி விட்டார். திருமலை யாத்திரை கிளம்பும் முன் மறக்காமல் தன் குலதெய்வத்தையும் வழிபட்டுவிட்டு, பின்னரே கிளம்பினார்.
திருவையாறு, கும்பகோணம், கடலூர்,
விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி,
காஞ்சிபுரம், திருத்தணிகை, புத்தூர்,
ரேனிகுண்டா, சந்திரகிரி, நாகலாபுரம் என்று எல்லா ஊர்களையும் தாண்டி இதோ வந்து விட்டார்கள் திருமலையின் அடிவாரம்!



திருச்சுகனூர் குளக்கரையில் அன்னையை - அலர்மேல் மங்கையைக் கண்ணாரக் கண்டாகி விட்டது! இனி அப்பனைக் காண்பதொன்றே கருத்து! அடிவாரத்தில் ஆழ்வார்களை வணங்கி விட்டு, கிடுகிடுவென்று மலை ஏறுகின்றார்கள் குருவும் சீடர்களும்! அச்சோ, எங்கும் இருள் சூழ்ந்து விட்டதே!

தியாகராஜருக்கும் சற்றே வயதாகி விட்டதல்லவா? முன்போல் அவ்வளவாக நடக்க முடியவில்லை! ஆனாலும் ஆசை விடவில்லை! ஆசை உந்த உந்த, உலகத்தில் "முடவனுக்கும்" வாழ்க்கை "நடக்கிறது" தானே?
தியாகராஜரையும் ஆசை தான் உந்தி உந்தித் தள்ளியது! எந்த ஆசை? பொன்னாசையா? பணத்தாசையா? புகழாசையா? சரி....இசை ஆசையா? - உம் அது கூட இல்லை! பின் எது?
நோயே பட்டு ஒழிந்தேன், "உன்னைக் காண்பதோர் ஆசையினால்"!
நாயேன் வந்து அடைந்தேன், நல்கி என்னை ஆட்கொண்டு அருளே!!
- மெல்லப் பாசுரம் முணுமுணுக்கப்படுகிறது!

இதோ ஏழு மலையும் ஒருவழியாக ஏறி விட்டனர்! இரவும் நன்கு கவிந்து விட்டது! ராத்திரி ஆகி விட்ட படியால், சுவாமி புஷ்கரிணி எனப்படும் கோனேரியில் யாரும் நீராடவில்லை! கை கால்களை மட்டும் சுத்தம் செய்து கொள்கின்றனர்! அது மட்டும் தானா? யாருமே மனதைச் சுத்தம் செய்து கொள்ளவில்லையா என்ன?....அன்று தியாகராஜருக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை! அவர் மனத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டு இருக்கு!

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்து மிட்டேன்!
பெரியேன் ஆயின பின் பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!!

கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!
அரியே வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருளே!!


குளத்தின் நன்னீரால் சுத்தமாவதற்கு முன்பே, அந்தப் பாசுரத்தைக் கேட்டு வந்த கண்ணீரால், மனது எப்போதோ சுத்தமாகி விட்டது!
குளத்தின் கரையில் உள்ள வராகப் பெருமாளை முதலில் தரிசனம் செய்து விட்டு, அனைவரும் ஓடோடிச் செல்கின்றனர் கோபுர வாசலுக்கு!

தங்க வாசல் தாண்டி இதோ ஆனந்த நிலையத்துக்குள் வந்தாகி விட்டது! சற்றுக் கண் திரும்பினால் போதும், வைத்த மா நிதி கிடைத்து விடும்! எம்பெருமான் அகப்பட்டு விடுவான்! அதோ தீப ஒளி தெரியுது! பச்சைக் கர்ப்பூர வாசனை துளைக்குது!
இதோ கரியவன், நெடியவன் தெரிகி..... ஐயகோ! இது என்ன கொடுமை?
அர்ச்சகர்கள் வேகம் வேகமாகத் திரையை இழுத்துச் சரேல் சரேல்-ன்னு மூடுறாங்களே?.....முழுக்க மூடியாகி விட்டது! ஒன்னுமே தெரியலை!

அன்று ஏனோ, அர்ச்சகர்கள் கடுகடு என்று உள்ளனர்! கொஞ்சம் கூடச் சிரிப்பு இல்லை!! - உம்...எல்லாரும் வெளியே போங்க! போங்க!! இத்தோட நாளைக்குக் காலையில் தான்!
அடப் போங்கைய்யா! எத்தன வாட்டிய்யாச் உங்களுக்கெல்லாம் சொல்லுறது? கேக்கவே மாட்டீங்களா? ஜருகும்மா ஜருகு! பதண்டி பதண்டி!! எவரய்யா அக்கட? வெள்ளு, வெள்ளு!
ஏம்பா...பெரியவரே...காது என்ன செவிடா? உனக்கு மட்டும் தனியாச் சொல்லனுமா? போ...போ!!

தியாகராஜர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் ஒழுகுது! யாராவது திட்டினால் இந்த மனுசன் திருப்பித் திட்ட வேண்டியது தானே? அதை விட்டுட்டு, ஏன் இப்படிக் கண் கலங்குறார்?

ஆசையாய்ச் சாப்பிட உட்கார்ந்த குழந்தையின் தட்டைத் தட்டி விட்டால் எப்படி இருக்கும்?
காதலனைக் அன்புடன் காண வந்த காதலியை, இழித்துப் பேசினால் எப்படி இருக்கும்?
ஆருயிர் நண்பனைக் காணச் சென்ற நண்பனை, முகத்தில் கதவடைத்தால் எப்படி இருக்கும்?
அப்பாவின் மடியில் ஓடோடி உட்காரப் போன பிள்ளையைக் கால் இடறி விட்டால் எப்படி இருக்கும்??

எம்பெருமானுக்கும் தியாகராஜருக்கும்.....இடையே.....அந்தக் கரிய பெரிய திரை!!!

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...
குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா!

(திரை விலகுமா?...அடுத்த பாகத்தில்!)



Read more »

Monday, January 21, 2008

ஆன்மீகப் பதிவுகள் மட்டும் தான் நீங்க எழுதிக் கிழிப்பீங்களா?

மக்கள்ஸ் எல்லாரும் ஆட்டம் ஆடி முடிச்சிட்டாங்க போல! மொக்கைச் சரம், புத்தாண்டு சபதம், எழுதியதில் பிடித்தது-ன்னு சனவரி மாசம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே பட்டாசு தான் போங்க! நான் தான் லேட்டஸ்டோ லேட்டு!

ஆபிசில் ஆணியும் மொக்கையுமாய் இப்பவே அரை மாசம் போயிடுச்சி! அன்னிக்கி அப்படித் தான், டென் பீன் சூப் குடிச்சிட்டு, மதியம் மீட்டீங்கில் லேசாக் கண் அசந்தேன்! இது எப்பவும் பண்றது தான்! ஆனா அன்னிக்கின்னு பார்த்தா பயங்கரமான கனவுகளா எனக்கு வரணும்? பகற் கனவு பலிக்காதுன்னு சொல்லுவாய்ங்க! ஆனா இது மாலைக் கனவாப் போச்சுதே!

பதிவர் ஷைலஜா கையில் மைசூர்பாக் கரண்டியோட என்னைப் பதிவு பதிவா வெரட்டுறாங்க!
எங்கே என் சபதம்? எங்கே என் சபதம்?-ன்னு.....சரஸ்வதி சபதம், மங்கம்மா சபதம், சிவகாமியின் சபதம், பாஞ்சாலி சபதம், ஒரு தாயின் சபதம்-னு எல்லாச் சபதங்களும் ஒன்னாச் சேர்ந்து வெரட்டினா நான் எங்கன ஓடுவேன்? சபதத்தைச் சபதத்தால தானே முறியடிக்கணும்! அதான், புத்தாண்டு சபதம் போட்டுறலாமா?

ஆன்மீகம்/இசை/தமிழ் இலக்கியம் தொடர்பான பதிவுகள் மட்டுமின்றி, இனி வகை வகையா கூறு கட்டலாம்-னு முடிவு பண்ணியாச்சு !
கொஞ்சூண்டு நகைச்சுவை, கொஞ்"சு"ம் கதை, கெஞ்சும் கவிதைன்னு எறங்கிடலாமா? என்னா சொல்றீங்க யக்கோவ்? :-)

அடப்பாவி! உன்னை எவன்டா இந்த மாதிரி டேஞ்சரான சபதம் எல்லாம் எடுக்கச் சொன்னது?

ஹிஹி! நமக்குக் கதை சொல்லுறதும் கேக்கறதும் ரொம்ப பிடிக்குமுங்கோ! அதுவும் பக்தி...ச்சே...காதல் ரசம் சொட்டும் கதைகள்-னா எனக்கு ரொம்பவே உசிரு! அதான் தனிப்பதிவா தொடங்கி, ஒரு காத்தாடி படமும் போட்டாச்சுது! வெகு விரைவில் எதிர்பாருங்கள் ஒரு முழு நீளத் தொடர்-கதை!

ஐயகோ! 2008-இல் வலைப்பதிவுலகத்துக்கு இப்படி ஒரு சோதனையான்னு கேக்குறீங்களா? அதுக்கு என்னக்கா பண்ணறது? வேணும்னா கோயிலுக்குப் போயி வேண்டிக்குங்க! ஆனா உண்டியில்ல காசு மட்டும் போட்டுறாதீங்க! :-))



அப்பாலிக்கா...ஷைலஜா கிட்ட இருந்து தப்பிச்சி, வாயில் மைசூர்பாக்கைத் தள்ளவும் முடியாம, மெள்ளவும் முடியாம ஓடினேன்! ஓடினேன்! அபிஅப்பா பதிவின் பின்னூட்ட எல்லைக்கே ஓடினேன்!
அங்கேயும் வந்து, கொத்தாக் காலரைப் புடிச்சித் தூக்கினாரு நம்ம சீனா சார்!

பதிவனும் நீயோ, பந்தலும் உன்னுதோ?

என்னுது தானுங்கோ! என்னுது தானுங்கோ!

அடி சக்கை! எங்கேயடா நான் கேட்ட மொக்கை? நீ இருப்பதோ மெல்லீசா தக்கை! மொக்கை போடாவிட்டால் அரைத்துக் கொடுப்பேன் சுக்கை!

ஐயோ! சபதம், மொக்கை-ன்னு எல்லாத்தையும் சேர்த்து...ஒரே பதிவாப் போட்டுடறேன் சார்! இப்போ கண்ட கனவு உட்பட எல்லாத்தையும் போட்டுடறேன் சார்! இப்போதைக்கு ஜூட் விட்டுடுங்க சார்!

கண்ட கனவைப் போடுறேன்னு, நீ ஆண்டாள் கண்ட கனவைப் போடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? வாரணமாயிரம்-னு பதிவு போட்டுட்டு, இதெயெல்லாம் மொக்கை லிஸ்ட்டுல எடுத்துக்க மாட்டீங்களா-ன்னு வேறு கேப்பீயில்ல?

ஐயோ! அப்படி எல்லாம் கேக்க மாட்டேன் சார்!
வேணும்னா வாரணாமாயிரம் படம் ரிலீஸ் ஆவுறத்துக்கு முன்னாடியே நம்ம சோதிகா அக்காவைக் கேட்டு ஒரு விமர்சனப் பதிவு போட்டுடறேன்!
2008-இல் இருந்து நான் திருந்தப் போறேன்னு இப்பத் தான் ஷைலஜா கிட்ட சொல்லிட்டு ஓடியாந்தேன்! வேணும்னா அதோ வராங்க! அவங்களையே கேட்டுக்கோங்க!
சீனா சார், ஷைலஜா துரத்தும் திசையைத் திரும்பிப் பார்க்க, கேயாரெஸ்ஸூ எஸ்ஸூ ஆனான்!


டேய்! நீ அவங்க கண்ணுல வேணும்னா மண்ணைத் தூவலாம்! என் கண்ணுல மொளகாப் பொடி கூடத் தூவ முடியாது! ஏன்னா அதை நேத்தே என் தங்கமணி தூவிட்டாங்க! எங்கேடா நான் கேட்ட "2007 - எழுதியதில் பிடித்தது" பதிவு?

அம்பியண்ணோவ்! வணக்கம்! யூ சீ, நமக்கு இந்த வெளம்பரமே புடிக்காதுங்க!

டேய், பள்ளி கொண்ட ஃபோட்டாவை போட்டு விதம்விதமா வெளம்பரம் பண்ணுவீங்களாம்! இவருக்கு வெளம்பரம் புடிக்காதாமா? இந்த வெளம்பரம் பம்பரம் கதையெல்லாம் என் கிட்ட வேணாம்! ஐ வான்ட் பதிவு!

அது இல்லீங்கண்ணா! நீங்க சொன்னீங்களேன்னு நானும் தேடித் தேடிப் பாத்தேனுங்குண்ணா! ஆனா ஒரு பதிவும் சொல்லிக்கிறா மாதிரி தேறல அண்ணாச்சி! 2007-இல் டோட்டலா என் பதிவுலகப் பயணத்தையே வேஸ்ட் பண்ணிட்டனோ-ன்னு ஒரே ஃபீலிங் ஆகிப் போச்சி அண்ணாச்சி!

டேய், வேணாம்! அடங்கு....அடங்கு!
நீ எழுதிக் கிழிச்ச பதிவு, அதுவும் ஆன்மீகப் பதிவுக்கெல்லாம் அவனவன் வந்து எக்கச்சக்கமா பின்னூட்டம் போட்டாங்களே! அப்ப மட்டும் அதை எல்லாம் வாங்கிக்கிட்டல்ல? இப்ப அதுல இருந்து ஒரு நல்ல பதிவை எடுத்துக் கொடுக்க உனக்கு நோகுதா?

மன்னிச்சிக்குங்க அண்ணாச்சி... எனக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ! அடியார்களுக்கு...சாரி பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எந்தப் பதிவு புடிச்சிருக்கோ அதையே போட்டுடறேன் அண்ணாச்சி!

உம்...அது! அதுக்காக, "இனிமே கோவிலில் யாரும் புளியோதரை வாங்கித் தின்னாதீங்கோ" பதிவை எல்லாம் இந்த லிஸ்ட்டுல சேர்த்துடாத! இன்னா, புரியுதா? :-)


பெரும்பாலான ஆன்மீக வாசகர் வட்டத்தின் முன், அடியேனின் சில பதிவுகளை வைத்தேன்! (பதிவர் அல்லாதார்). அவர்கள் மின்னஞ்சலில் தொகுத்துத் தந்த பட்டியல் இதோ! அனைவரும் ஒருமனதாகச் சொல்லியதை "**" செய்துள்ளேன்!

இப்போது அடுத்த கட்டமாகப், பதிவர்கள் உங்கள் முன்னர் வைக்கின்றேன்! உங்கள் மனம் கவர்ந்ததை நீங்களே எடுத்துச் சொல்லுங்க!

மாதவிப் பந்தலில் பிடித்த பதிவுகள்:
** துலுக்கா நாச்சியார் கதை - சமய நல்லிணக்கத்தை எப்படி அன்புடன் வளர்த்தார்கள் என்பது பற்றிய கதை - (எனக்கு மிகுந்த நிறைவு தந்ததும் கூட!)

** அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம் - திருமலைக்கு அப்துல் கலாம் சென்ற போது நடந்தது! - (இது தான் எனக்கு மிகவும் பிடித்தது!)

தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை - ஆடிப் பூரத் தொடர்! இதைத் தனிமடலில் பாராட்டி, வில்லிபுத்தூர் ஆலயத்தில் இருந்து அழகான புகைப்படங்களும் அனுப்பி இருந்தார்கள்!

பொய் சொல்க - அரங்கன் அருள்வான்! - ஆலயங்களில் ஆரியமும், வடமொழியும் தான் மேலோங்கி நிக்குது என்று பேசப்பட்ட சூழலில் வந்த ஒரு தொடர்! திருவரங்கத்தில் அமிழ்தினும் இனிய தமிழுக்கென்றே ஒரு திருவிழா! அப்போது வடமொழிக்கு அரங்கனே தடை போடுகிறான்! அதைப் பற்றிய தொடர்!

Aug-15: தேசிய கீதமா? விதேசிய கீதமா? - நம் தேசிய கீதம் பற்றிய சர்ச்சையில், விடை தேடும் பார்வை!

** ராமர் பாலமும் ராமானுசரும் - ராமானுசர் பொது நலனுக்காக, சமய நலனை விட்டுக் கொடுத்த கதை! - இதை இட்டதற்காக என்னைப் பல பேர் திட்டிய பதிவும் கூட! :-)

டேய், நிப்பாட்டு நிப்பாட்டு! நீ பாட்டுக்கு அடுக்கிக்கிட்டே போற? ஏதாச்சும் ஒன்னு தான் சொல்லனும்! இப்படி எல்லாம் அழுகுணி ஆட்டம் ஆடின, சர்வேசன் நெத்திக் கண்ணைத் தொறந்திடுவாரு!

ஐயா சாமீ...பதிவர்களைக் கேக்கறேனுங்க! அவங்களுக்குப் புடிச்சதில் இருந்து ஒன்னே ஒன்னை மட்டும் ஃபைனலாச் சொல்லிடறேன்! போதுமா? ஆளைப் பேச விடுங்கப்பா!


வ.வா.சங்கத்தில்
** நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள் - சிரிப்புத் தொடர் - பலரும், அட நகைச்சுவை கூட எழுதுவீங்களான்னு திரும்பிப் பார்த்த நேரம் (எனக்கு மிகவும் பிடித்த தொடரும் கூட!)

சுப்ரபாதப் பதிவுகளில் பலர் விரும்பி வாசித்தது
**
கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க?

இசை இன்பத்தில் பிடித்தது
**
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய தியாகராஜ கீர்த்தனை - தமிழில் தியாகராஜ கீர்த்தனைகளை அதே மெட்டில் கொண்டு வரும் சிறு முயற்சி - இதை அடியொற்றி பின்னால் நானும், நண்பர் சீவீஆரும் ஓரிரு கீர்த்தனைகளைத் தொகுத்தோம்! ஜிராவும் அந்த மொழியாக்கத்துக்கு மெருகேற்றினார்! இதை இன்னும் நிறைய செய்ய வேண்டும்! - (எனக்கு மிகவும் பிடித்த தொடரும் கூட!)

நறுமுகையே நறுமுகையே, நளினா நீ கொஞ்சம் நில்லாய்! - நறுமுகையே பாடல் விமர்சனம்!

புதிரா புனிதமா போட்டிகளும் பலருக்குப் பிடித்திருந்தன - ஆன்மிகம் மட்டும் இல்லாது, சிலப்பதிகாரம், பொன்னியின் செல்வன் என்று புதிர்கள் வைத்த போதும் பலர் விரும்பிக் கலந்து கொண்டனர்!
கண்ணன் பாட்டு, முருகனருள், அம்மன் பாட்டு - இவை குழு வலைப்பூக்கள் என்பதால் அதில் இடும் பதிவுகளைத் தனியாக முன் வைக்கவில்லை!
பிள்ளைத் தமிழ் வலைப்பூ - இந்த ஆண்டு வேறு பாணியில் எழுதத் துவங்க வேண்டும்!


பொதுவா ஆன்மீகப் பதிவுகள்-னா அவ்வளவா கூட்டம் சேராது! ஆனால் மிகவும் ரசனையுடன் அனுபவித்து, வாசித்து மகிழ்ந்த நண்பர்கள் இங்கு எத்தனை எத்தனை பேர்!
குறைகளை எடுத்துச் சொல்லி, தக்க விமர்சனங்கள் செய்து, நெடும் பின்னூட்டங்கள் இட்டு, மேலும் மேலும் மெருகேற்றிய ரசனையாளர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்! குழு வலைப்பூக்களில் இருக்கும் சக தோழர்கள் செய்த உதவிகளும் பெரிது!

அவர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்ல இந்தச் சுய விளம்பர விளையாட்டு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது!
எந்தரோ ரசிகானு பாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை ரசிகமணிகள்! அத்தனை பேருக்கும் வணக்கங்கள்!!

முக்கியமா இரண்டு கேள்விகள்!
1. நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகக் கலந்து எழுதுவதால், ஆன்மீகப் பதிவுகளை Dilute செய்கிறேனோ என்று சில நண்பர்கள் தனியாக என்னிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு! நீங்க என்ன நினைக்கிறீங்க? ஆன்மீகத்தைத் தேவையில்லாமல் dilute செய்கிறேனா?

2. அப்படியே மேற்சொன்ன பதிவுகளில் உங்களுக்குப் பிடிச்ச பதிவு என்னன்னும் சொல்லிடுங்க!

மொக்கைச்சரம்-புத்தாண்டு சபதம்-எழுதியதில் பிடிச்சது = ஒரே கல்லுல மூனு மாங்கா! ஆட்டம் க்ளோஸ்! :-)


(updated...)
பல வாசகர்கள் + பதிவர்கள் ஒருமுனைப்பாகச் சொன்னது; எனக்கும் மிகப் பிடித்தமான பதிவாக...இதோ சர்வேசனுக்கு சமர்ப்பணம்! :-)
அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்
Read more »

Wednesday, January 16, 2008

குமரனைப் போட்டுத் தாக்குவோம்! - புல்லாகிப் பூண்டாகி கதை விமர்சனம்!

கண்ணபிரான் காலடி பெற்ற "அந்தக்" கல்லு பேசறேன் மக்களே! எல்லாரும் நலமா? பொங்"கல்" எப்படிப் போச்சுது? நம்ம குமரன் தன்னோட புல்லாகிப் பூண்டாகி தொடர் கதைக்கு விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டிருந்தாரு! நான் தானே கதையின் ஹீரோ! என்னையே இப்படிக் கேட்டாருன்னா, நான் எங்க போவேன்?

என் போன்ற கல்லுக்கு என்ன தெரியும் பெருசா? எண்ணும் எழுத்தும் அறியாத மண்ணு தானே கெட்டிப்பட்டு கல்லாக் கெடந்தது கெளரவர் சபையில்? ஏதோ கண்ணபிரான் கால் பட்டதால், அவர் அங்கே இடறி விழுந்தாரோ இல்லையோ, நான் இடறி விழுந்தேன்! எதுல-ன்னு கேக்கறீங்களா? அதாங்க பிறவிச் சுழலில்!

போச்சுடா, கண்ணன் கால்பட்டா, பிறவிச் சுழலில் மாட்டிக்கனும் போல இருக்கே! :-)
வள்ளுவர் முதற்கொண்டு வள்ளலார் வரை - எல்லாரும் என்னா சொல்றாங்க? இறைவன் திருவடிகளைப் பற்றினாத் தான் வீடுபேறு-ன்னு சொல்றாங்க!
இங்க என்னடான்னா, இறைவன் திருவடி பட்டதால் பிறவிச் சுழற்சி வந்துடிச்சி-ன்னு நம்ம குமரன் சொல்றாரு!
அப்ப வள்ளுவர் சொல்றது உண்மையா? இல்லை குமரன் சொல்றது உண்மையா? - என்னமோ போங்க! அவரையே கேளுங்க! :-)

சும்மா ஒரு மூலையில் சிவனே-ன்னு கிடந்த என்னை, இந்தக் குமரனும், கண்ணனும் இப்படிப் பிறவிச் சுழலுக்குள் மாட்டி வுட்டுட்டாங்களே! இது அடுக்குமா? இதைச் சும்மா விடப் போறதில்ல! அதான் மரபுப் படி விமர்சனமா இல்லாம, உங்க கிட்ட நேரடியாவே பேசிடலாம்-னு நினைச்சிட்டேன்!
கல்லு பேசுமான்னு கேக்கறீங்களா? நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமே! பழிக்குப் பழி! வாங்க விமர்சனத்துல குமரனைப் போட்டுத் தாக்கிருவோம்! :-)


நினைத்தாலே முக்தி தரும்-னு சொல்லுவாய்ங்க! அந்தத் திருவண்ணாமலையில் தொடங்குது கதை!
இரண்டு நண்பர்கள், கல்லூரி கலாட்டா, பக்தி வேடங்கள், பிரிவு, மீண்டும் சந்திப்பு என்று இயல்பான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து தான் கதையை ஆரம்பிக்கிறார். நண்பர்களான கந்தன் (எ) மோகன், கேசவன் இருவரின் குணச் சித்திரங்களையும் இயல்பாகப் படைத்துள்ளார்.

//தாத்தாவிடம் 'தாத்தா. இந்த நூறு ரூபாயை உங்க மருந்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்றான். 'ஆகா பழி வாங்கிவிட்டானே. சொல்லியிருந்தால் நானும் ஏதாவது வாங்கி வந்திருப்பேனே' என்று நினைத்தான் கந்தன்//
- இது போல பலவற்றைச் சொல்லலாம்! அன்றாட வாழ்விலும் நண்பர்களுக்கிடையே இது மாதிரி சீன் போடறது என்பது சுவையான ஒன்று! ஆனால் கதை ஏதோ நண்பர்களைச் சுற்றித் தான் போகப் போகுது-ன்னு நினைக்கும் போது, வச்சாருங்க பாருங்க ஆப்பு!

கதை திடீரென்று களம் மாறுது!
திருவண்ணாமலை ஆலயம், லிங்கோத்பவர், கிரிவலம், கம்பத்து இளையனார்-னு வரிசையா ஒரு நாலு தொடர் முழுவதும் ஆலய தரிசனம், தல புராணம்-னு கொண்டு போயிட்டாரு! கதையுடன் அந்தப் பகுதிகள் எல்லாம் இயல்பா ஒட்டுச்சா?
அதை வாசகர்கள் தான் சொல்லனும்! என்னைக் கேட்டா ஒட்டலை-ன்னு தான் சொல்வேன்!

அப்போது கதைக்கு வந்த பின்னூட்டங்கள் பலவற்றில், மக்கள் எல்லாரும், "என்ன சொல்ல வரீங்க, என்ன சொல்ல வரீங்க"-ன்னு குமரனைக் கேள்விகளால் துளைச்சி எடுத்துட்டாங்க!

கதையின் பெயர் "புல்லாகிப் பூண்டாகி".
பொதுவாகக் கதையின் பெயர், ஓரளவுக்குக் கதை ஓட்டத்தைக் கோடிட்டுக் காட்டி விடும்! ஆனால் இந்தக் கதையில், இடைப்பட்ட சில அத்தியாயங்கள் மக்கள் பலருக்குக் குழப்பம் விளைவித்தது என்னவோ உண்மை தான்!
இது வேண்டுமென்றே குமரன் செய்த உத்தியா, இல்லை தானா அமைந்து விட்டதா-ன்னு தெரியலை!
ஏன் சொல்றேன்னா, நல்லாக் குழப்பிய பின் வரும் விசாரனையும் தெளிவும் தான், ரொம்ப நாள் நிக்கும்! :-)

இது மாதிரி பல தேடல்கள் திருவண்ணாமலையில் நடந்தேறியுள்ளன. ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார், சேஷாத்ரி சுவாமிகள், மறைந்த காஞ்சிப் பெரியவர்ன்னு பல மகான்களின் ஆன்ம வாழ்வு திருவண்ணாமலையைச் சுற்றித் தான் அமைந்தது! அதைக் கதாசிரியர் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்! பாராட்டுக்கள்!!


சரி...ஒன்னுமே புரியாம, ஆலய தரிசனம் பண்ணிட்டு மலைக்கு மேல வந்தா... தாத்தாவின் அடுக்கடுக்கு கேள்விகள்! அதில் விறுவிறுப்பு கூடிப் போனது என்னவோ நிஜம்!
இங்கு தான் கதையின் ஓட்டம் எப்படி-ன்னு கொஞ்சம் பிடிபட ஆரம்பிச்சுது! அப்போது கூட சில பேர் "ஒன்னுமே புரியல உலகத்திலே"-ன்னு பாட்டு பாடிக்கிட்டுத் தான் இருந்தாங்க! :-)

ஆன்மீகத்தில் இக்காலத் தலைமுறையின் கேள்விகளை குமரன் நன்கு முன் வைத்துள்ளார், தாத்தாவின் கேள்விகள் மூலமாக! சாம்பிளுக்கு இதோ:
1. "அடியார்ன்னா யாரு?"
2. "பொண்பிள்ளைங்களுக்கு அடியார்கள் கணவராகணும். சரி. ஆண்பிள்ளைகளுக்கு எப்படி?"
3. "இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?" - மடக்கிவிட்டோம் என்று நினைத்தான்.
4. ஜாதகம் இன்டிகேட்டர் தான் கன்ட்ரோலர் இல்லை. It indicates what can happen due to past actions. It does not control what will happen.
The control is with you. You are the one who will decide the choice you want to make."

குமரன் கிட்ட ரொம்ப புடிச்ச விஷயமே, திடீர் திடீர்-னு பாட்டு பாட ஆரம்பிச்சிடுவாரு! :-)
இந்தக் கதையில் பல இடங்களில் திருவெம்பாவை, சிலப்பதிகாரம், அன்னமாச்சார்யர், ஜயதேவர் பாட்டை எல்லாம் இடையிடையே கொடுத்துள்ளாரு! தெலுங்குப் பாட்டுக்குப் பொருள் தெரியலைன்னாலும் பாட்டை அனுபவிச்சிக் கேட்டுக்கிட்டு இருந்தேனா?.....
திடீர்-னு பார்த்தா கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிட்டாரு! அதாங்க, ப்ளாஷ்பேக்!

அஸ்தினாபுரம் சபையில், கண்ணன் உள்ளே வரும் காட்சியை எழுதும் போது, கர்ணன் படம் பாத்துக்கிட்டே எழுதினாரான்னா தெரியாது! ஆனா ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் புட்டு புட்டு வச்சிருக்காரு! இருக்காதா பின்னே...என் கதையை இங்கிருந்து தானே ஆரம்பிக்கிறாரு!


அடுத்த பதிவுல கடம்ப மரம்! பழனி மலை! போகர் சித்தர்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல பருந்து! கருடன்! தஞ்சைக் கோவில்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல நரசிம்ம தாசன்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல ஜகன்மோகன் - அப்ப நான் எங்கே போனேன்?
என்னய்யா கல்லு தானே ஹீரோ? சம்பந்தா சம்பந்தமே இல்லாம கதையில கண்ட பேரும் வராங்களே! -ன்னு மக்கள் புலம்புகிறார்கள்! "புல்லாகிப் பூண்டாகி" -ன்னு கதையின் தலைப்பை மறந்து போனார்கள்!

ஆனா அடுத்த பதிவுல தாத்தா வந்து அத்தனையும் கோர்த்து விட்டுட்டாரு! பல பேருக்கு அப்பத் தான் வெளங்குது! ஆகா அத்தனையும் முற்பிறவிகளா?
கதையில் கூட நம்மால ஒரு சாதாரண விஷயத்தைக் கோர்க்க முடியலையே!
நாம எப்படி நம்ம முற்பிறவிகளை எல்லாம் ஒன்னா கோர்க்கப் போகிறோம்? -
ஹிஹி! இந்தச் சிந்தனையைத் தான் கதை எனக்குத் தூண்டி விட்டது!

கதையை முடித்த விதமும் அருமை! முடிக்காமல் முடிப்பது-ன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி!
இறந்து போன தாத்தாவை முதலில் அவன் பார்க்க, பின்னர் இவனும் பார்க்கிறான்! இது என்ன மாயையா? இல்லை வாசகர்களைப் பயமுறுத்த குமரன் கையாண்ட டெக்னிக்கா?
இதுக்கு விளக்கம் எல்லாம் ஒன்னுமே கொடுக்காம...கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கணக்கா கதை படீரென்று முடிந்ததே சிறப்பு!


பூக்கள்:
1. கதையில் படங்களும் பாடல்களும் தேர்வு செய்த விதம் நன்று!
2. அதே போல் மாணிக்கவாசகரின் சிவபுராணப் பாடலில் - கல், மரம், பறவை, மனிதர் - இந்த நான்கு பிறவிகளை மட்டுமே தொட்டுச் சென்றதும் நல்லது தான்! பரிமாணத்துக்குப் பரிமாணமும் ஆச்சு! சுவை குன்றாமலும் ஆச்சு!

3. ஆங்காங்கே ஆன்மீகக் குறிப்புகள் - நிர்விகல்ப சமாதி, பஞ்சகோசம்-ன்னு சொல்லுவது, கொஞ்சம் அடிமட்ட வாசகனைப் பயமுறுத்துவது போல் தெரியும்! ஆனால் அதைத் தைரியமாகத் தான் தொட்டுச் சென்றுள்ளார் குமரன்!
4. புராணம் = புரா+நவம் = பழசு+புதுசு என்று சொல் ஆராய்ச்சிகளும் கதையில் நடுநடுவே சொல்லியது இன்னொரு சிறப்பு. அவர் வாசிப்பு அனுபவத்தை நமக்கும் கொட்டிக் கொடுத்துள்ளார்! நன்றி குமரன்!

கற்கள்: (அட, கல்லு விமர்சனம் செய்யுதுன்னா, கல்லும் வீசத் தானே செய்வாங்க! :-)
1. கதையில் இன்னும் உரையாடல்கள் வேண்டும் குமரன்! இல்லையென்றால் ஆன்மீகச் செய்திக்கோர்வை ஆகி விடும் அபாயம் உண்டு! தாத்தா-கந்தன் உரையாடல் தான் கதையின் முக்கிய கட்டம்! அங்கு உரையாடல்கள் இருந்தன! ஆனால் துவக்கத்தில் ஆலய தரிசனமாகப் போய்விட்ட படியால், உரையாடல்கள் குறைந்த துவக்கமாகத் தான் இருந்தது.

2. அதே போல் ஆங்காங்கு மகான்களைக் (சைதன்யர், இராமகிருஷ்ணர், கருவூரார்) காட்டிய நீங்கள், இவர்கள் நம்மிடம் பேசக் கூடிய வாய்ப்பை விட்டுட்டீங்க.

3. கதையின் இணைப்பைக் கொஞ்சம் முன்னரே பூடகமாகவாச்சும் சொல்லி இருக்கலாம்! இதனால் கதையின் ஓட்டம் பல பேருக்கு முதலிலேயே புரிந்திருக்கும்! தனித்தனிக் கதையா இருக்கேன்னு ஒன்னும் புரியாமல், (குமரனை அறியாத) சில வாசகர்கள், மீண்டும் வராமல் போகும் அபாயம் உண்டல்லவா? - ஒட்டு மொத்தத்தையும் பிளாஷ்பேக்காக கொடுத்ததால் தான் இப்படி ஆனது!

4. ஆலய வர்ணனைகள், பிரகார விளக்கங்கள் என்று கதையின் ஆழத்தை நீர்த்துப் போகச் செய்திருக்க வேண்டாம்! நாவல், புதினம் என்றால் ஓக்கே! ஆனால் இது சிறிய தொடர் அல்லவா?

5. காலடிபட்டதால் பிறவிச் சுழற்சி என்பது மிகவும் சிக்கலான உதாரணமாகப் போய்விட்டது! இறைவன் காலடி பட்டுச் சாபம் நீங்கியவர்கள் பல பேர் உள்ளார்கள். அதற்கு எதிர் தோற்றம் போல் உருவாகி விட்டது! - இதை வேறு மாதிரி கையாண்டு (காலாண்டு) இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து!

பொதுவா ஆன்மீகத் தேடல்கள் பற்றிய விஷயங்களில் ஆத்திகர், நாத்திகர் ரெண்டு பேருக்குமே ஆர்வம் மிகுதியா இருக்கும்!
முன்னவருக்குத் தேடல் எப்படி அமையுமோன்னு ஒரு ஏக்கம்!
பின்னவருக்குச் சாடல் எப்படி அமைக்கலாம்னு ஒரு ஆர்வம்! :-)

இதைக் கதாசிரியர் (அட, நீங்க தான் குமரன்!) நன்கு புரிந்து கொண்டு தான் கதையை நகர்த்தி உள்ளார்! இரு சாராருக்கும் இந்தக் கதை தீனி போடுகிறது!

ஆழ்மனம் இல்லறத்தை விரும்பியதால், இன்னொரு பிறவி என்று சொல்லி இருந்தீர்கள்! It is your choice என்பது தான் சாரம் என்றால்...
கற்கள் தங்கள் Choiceகளைத் தாமே செய்து கொள்ள முடியுமா?
மனிதப் பிறவி தவிர மற்ற எல்லாப் பிறவிக்கும் இறைவன் தான் Choice செய்கிறானா? - என்பது மிகப் பெரும் கேள்வி! ஆனால் அதற்கு விடையைக் கதையில் தேட முடியாது! தேடவும் கூடாது!

ஆன்மீகப் பாதையைத் தேடுதல் பற்றிச் சொல்ல வந்த ஒரு கதை, அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்ய முடியாது தான்! அவரவர் நிலைகளில் இருந்து பார்வை மாறுபடும்!
ஆனாலும் இயன்ற வரை அனைத்து தரப்பினரையும், குமரன் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாகவே நான் கருதுகிறேன்!

பரந்து விரிந்த தத்துவங்களுக்குக் கதை மூலமாக நகாசு பூசுவது என்பது கொஞ்சம் கடினமான செயல் தான்!
அதைக் குமரன் முயன்று பார்த்துள்ளார்!
முயற்சி திருவினை ஆக்கும்! வாழ்த்துக்கள் குமரன்!
அடுத்த கதையில் புதிய நகாசு, புதுப் பொலிவுடன் மீண்டும் சந்திப்போம்!

இதோ "கல்"லாதான் சொல்லும் கவி!
புல்லாகிப் பூண்டாகிப் புரைதீர்க்கப் போராடிக்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழ்வாரே!


கல்லே, விமர்சனம் பண்ணிட்டு எங்க ஓடுற நீயி? அடுத்து நீ மரமாக வேண்டாமா?

வேண்டாம்! வேண்டாம்!!
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்!
கல்லானாலும் - வாசல் படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே! வர்ட்டா? :-)
Read more »

Monday, January 14, 2008

பொங்கலோ பொங்கல்! - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் என்றாலே தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனி மகிழ்ச்சி தானே! தீபாவளிக்குக் கூட இவ்வளவு சிறப்பு தமிழகத்தில் இருக்குமா?
சாதி-மதம், இனம்-பேதம் எதுவும் இல்லாமல்,
இறை நம்பிக்கை இருப்பவரும் சரி, இல்லாதாரும் சரி,
எல்லாரும் கொண்டாடி மகிழும் விழா என்றால் அது பொங்கல் தானே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

இப்படி வேளாண் மக்களைச் சிறப்பிக்கும் திருநாள் அல்லவா?
மக்களை மட்டுமா? மாக்களையும் அல்லவா சிறப்பிக்கும் நாள்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களுக்குக் கூட கொண்டாட்டம் தானே!

பட்டணத்துப் பொங்கல் என்றால் நடிகை ஷ்ரேயா வைக்கும் பொங்கலைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் கொண்டாடி மகிழலாம் :-)
ஆனாலும் கிராமமோ, நகரமோ, வீட்டுப் பொங்கல் என்பது சுவையான ஒன்று!
எங்க ஊர் வாழைப்பந்தலில், ஊரே கூடி, "பெருமா கோயில் வாசலில்" வைக்கும் பொங்கல், இந்தக் காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கு!

கரும்புகளை வைத்து நட்டே, பந்தல் போட்டு விடுவார்கள்!
முற்றத்தில் கோலமும், பூசணிப் பூக்களும் சிரிக்கும் சிரிப்பே தனி!
யப்பா, எவ்வளவு பெரிய பானை! அதில் வைக்கும் பொங்கல், ஊரே சேர்ந்து வைக்கும் கூட்டுப் பொங்கல்!
அதிலும் கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் வந்து பொங்கலைக் கிண்ட வேண்டும்! அப்ப பறக்கும் பாருங்க விசிலு! :-)
கூடவே "பொங்கலோ பொங்கல்" கோஷம்!
சிலர் நைசாக "பெண்களோ பெண்கள்" என்றும் சத்தம் போடுவார்கள்! :-)

6AA7612AA62

பால் கொண்டு வடிச்ச பொங்கலை, காராமணி குழம்பு ஊத்தி, வள்ளிக்கிழங்கு கூட்டு தொட்டு, பூசணி இலையில் வைத்துக் கொடுப்பார்கள்!
ச்ச்ச்ச்ச்....! ஊரில் எந்தச் சாதி வித்தியாசமும் பார்க்காது எல்லாரும் சாப்பிடுவார்கள்! நாயக்கராவட்டும், பள்ளராவட்டும், அய்யராவட்டும்! எல்லாரும் சப்புக் கொட்டிச் சாப்பிடும் காட்சியே காட்சி!

அதக்கப்புறம் தான் அவரவர் வீட்டுக்குப் போய் அவங்கவங்க பொங்கல் வைக்கணும்! சின்னப் பசங்க நாங்க எல்லாம் எப்படா சாயந்திரம் வரும்னு காத்திருப்போம்! ஏன்? மூன்று காரணங்கள்:

1. பொங்கல் இனாம்! ஆனா அதை வாங்கும் முன் பெரியவங்க காலில் வி்ழுகோணும்! அட, இதெல்லாம் பாத்தா முடியுமா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு உண்டான பாக்கெட் காசை தேத்த இத விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
2. மாட்டுப் பூசை; மாட்டுடன் ஊர் முழுக்க ஜல் ஜல் ஒட்டம்.
3. பெண்கள் எல்லாம் காலையில் பொங்க வைச்ச இடத்தில் ஆடும் குரவைக் கூத்து! கும்மி, மற்றும் பள்ளுப் பாட்டு!


ஹூம்....இதை எல்லாம் அப்படியே நியூயார்க் நகரில் Manhattan நடுரோட்டுல கரும்பு நட்டு, பொங்கல் வச்சா எப்படி இருக்கும்? :-))
ஒவ்வொரு தீபாவாளி, பொங்கலின் போதும் ஊர் ஞாபகம் வருகிறது!
அப்போதெல்லாம், செய்ய நினைக்கும் ஒரே வேலை, அடுத்தவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்கலாமே என்பது தான்!

வெளிநாட்டுத் தனிமை தான் நமக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்திருக்கே! மனித உறவுகளும் நேயங்களும் இது போன்ற நல்ல நாட்களில் கண் முன்னே இன்னும் நன்றாக விரிந்து போகும்! சென்ற தீபாவளிக்கு முதியோர் இல்லம் சென்றது போல், பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த வலைத்தளம்!

giveindia.org (இந்தியாவுக்குத் தாருங்கள்)

நாம் பொதுவாக உதவ நினைக்கும் போதெல்லாம் நம் முன் வரும் கேள்விகள்:

1. நம் உதவி சரியான கரங்களுக்குப் போய்ச் சேருமா?
2. நாம் ஏன் எங்கோ ஒரு முகம் தெரியாத இடத்தில் உதவி செய்ய வேண்டும்? நம்மூருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தரலாமே?
3. நாம் நினைக்கும் நிறுவனம் உண்மையிலேயே நம்பத் தகுந்த ஒன்றா? - வலைப் பதிவு என்றால் செந்தழல் ரவி, பொன்ஸ், ஞான வெட்டியான் ஐயா, என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி என்று யாராவது சரிபார்த்துச் சொல்வார்கள்! இந்த நிறுவனங்களை யார் சரி பார்ப்பது?

இந்த giveindia தளம், மேற்கண்ட கேள்விக்கு எல்லாம் நல்ல முறையில் விடையளிக்கிறது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால்:

1. நாம் எந்தத் துறைகளுக்குத் தரலாம் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். Category வைத்துள்ளார்கள்.
குழந்தைகள் நலம், ஊனமுற்றோர், கல்வி, சுற்றுச்சூழல், உடல்நலம், பெண்கள் நலம், இளைஞர் நலம், முதியோர் - இப்படிப் பல!

2. நாம் விரும்பும் இடத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்; சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை - இப்படி! நம்ம ஊர் பட்டியலில் இல்லை என்றால் விருப்பத்தைப் பதிவு செய்யலாம். (advanced search optionஐ பயன்படுத்த வேண்டும்)

3. நாம் அளிக்கும் நிறுவனம் பற்றிய குறிப்புக்கள், பயன்பெறுவோர் விவரங்கள், தணிக்கை அறிக்கைகள், ஆண்டு வரவு செலவு, அங்கு பணிபுரிவோர் விவரங்கள், அவர்களின் சம்பளம், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தும் தருகிறார்கள்! நாம் தனிப்பட்ட முறையிலும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

4. நாம் உதவி அளித்த பின், மூன்று நான்கு மாதங்கள் கழித்து, பயனாளி யார், அவர்கள் புகைப்படம், அவருக்கு எப்படி உதவியாய் அமைந்தது என்றும் ஒரு அறிக்கை அனுப்புகிறார்கள்! பயனாளியுடன் சில நேரங்களில் பேசவும் வழி செய்து கொடுக்கிறார்கள்!

diagram

சிறு வயதில் அம்மாவும் அப்பாவும், சாமியை வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் பணம் முடிந்து கொள்வார்கள்! பின்னர் அதை ஆலயத்திலோ இல்லை தர்ம காரியங்களுக்கோ தந்து விடுவார்கள்!
இன்று தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு, இது போல் முடிந்து கொள்ள, இத்தளமும் பயன்படலாம்!

உதவுவது அப்புறம்! ஆனால் வலைத்தளத்தைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டாவது வரலாமே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!
இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்!



சென்ற ஆண்டு தைப்பொங்கல் போது இட்ட இடுகையின் மீள்பதிவு இது!
இந்த ஆண்டுப் பொங்கலுக்கும் ஊருக்குப் போயி வந்தேங்க! இந்த விளம்பரத்தின் வாயிலாக! :-)
கடைசியில் அந்த அம்மா, அவங்க பையனுக்குத் திருஷ்டி கழிக்க நெட்டி உடைப்பது.....எனக்கு வீட்டு ஞாபகம் ரொம்பவே வந்திரிச்சி! கண்ணோரம் ஆனந்த ஈரம்!
Read more »

Saturday, January 12, 2008

விவேகானந்தரின் சிகாகோ பொழிவு - Youtube Video

விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று (Jan 12, 2008) ஒரு சிறப்புப் பார்வை!
நாம் ஏன் ஒத்துப் போவதில்லை என்பதை அழகான ஒரு கதையைச் சொல்லி, தனக்கே உரிய நடையில் அற்புதமாக விளக்குகிறார் விவேகானந்தர்.
பதிவின் இறுதியில் படியுங்கள்!
இல்லை youtube வீடீயோவில் கேளுங்கள்!

வீடியோ பிற்தயாரிப்பு செய்யப்பட்டது. அதில் கேட்பது சுவாமிகளின் குரல் அன்று!



1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893


அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள்.

அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.



2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?
செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'கடலிலிருந்து'

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்!


விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்
1. வரவேற்புக்கு மறுமொழி
2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?
3. இந்து மதம்
4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று
5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு
6. நிறைவு நாள் உரை
அனைத்தும் வாசிக்க, கீழுள்ள சுட்டிக்குச் செல்லவும்!
நன்றி: http://www.geocities.com/vivekananda_tamil/index.html
Read more »

Friday, January 11, 2008

பூம்பாவாய்! ஆம்பல் ஆம்பல்!! - 10

ஹலோ, லதாப் பொண்ணு இருக்கா அத்தை?

டேய் சுரேசு, என்னாது...அத்தையா???...நீ சரியான சொத்தைடா! போன்ல உன் கிட்ட பேசறது யாருன்னு கூடவா தெரியல்ல?

ஏய்ய்ய்ய்...கயலு! நீயாடி? எப்படி இருக்குற புள்ள?

என்னாது? டீ..யா? மொறை வைச்ச மாமனாட்டும் ரொம்பத் தான் மொறைப்பாப் பேசுதியளே! இதெல்லாம் கயலு கிட்ட செல்லாது! சாக்கிரதை!

அடிங்க! இவ "டேய் சுரேசு"-ன்னு கூவிக் கூவிக் கூப்பிடுவாளாம்! நாங்க மட்டும் என்ன பூப்பறிப்போம்-னு நெனச்சீயா? நீ டேய்ன்னே! நான் டீன்னேன்! போதுமா புள்ள?

உக்கும்...கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அதிகாரம் எல்லாம் தூள் பறத்தரீயளே! இன்னும் என்னிய என்னவெல்லாம் பறத்தப் போறீயளோ?

அடிப் பாவி, மெட்றாஸ் தமிழ்-ல கண்டபடி வையப் போறீன்னு இல்ல இருந்தேன்? ஆனா நம்மூரு சிட்டு மாதிரில்ல சிலுசிலுத்தக்கறே நீயி? இதுக்கோசரமே உன்னிய பாக்கணும் போல இருக்கே, கயலு!

ஐய்ய! ஐயன் மருமானுக்கு ஆசையைப் பாரு! அதான் காலேஜ்-லயே பாத்துக்கிட்டே தானே இருந்த?
டேய் சுரேஷ் ராகவா, உனக்கும் எனக்கும் கண்ணாலமாமே! அப்பாரு சொன்னாரு! ஒங்க வீட்ல ஏதாச்சும் சொன்னாகளா?

சொன்னாக! சொன்னாக! நீ மெட்ராஸ்ல வேலை பாக்குற பொண்ணு! நானு பட்டிக்காட்டுப் போலீசு! இதெல்லாம் சரிப்படுமா புள்ள?

படாது டா! சரிப்படாது! நீ சரிப்பட மாட்டே! நான் வந்து-தேன் உன்னைய சரிபடுத்தணும்! இதுக்கு மேல நம்மூரு பாஷை வராம மெட்றாஸ் தண்ணி தடுக்குதுப்பா! ஹிஹி...
ஹேய்...அம்மா பக்கத்துல வந்து நிக்குது!
நான் வச்சிடறேன்டா! கேட்ச் யூ லேட்டர்!

ஏய்,ஏய்,ஏய்...போனை வைக்க முன்னாடி, எனக்கு என்ன கொடுக்கனுமோ அதைக் கொடுத்துட்டுப் போடி!
ஹிஹிஹி.......இச்..இச்....பட்....!


கண்ணாலத்துக்குப் பின்னாலும் கூட இந்த முத்த விஷயத்தில் மட்டும், ஏனோ சுரேஷூக்கு ஒரு குறை! அவளுக்கும் ஒரு குறை!
இன்னுமொரு முத்தம் இன்னுமொரு முத்தம்
என்றுஅவள் கெஞ்சியதை எண்ணிஎண்ணிப் பார்த்தே
சுரும்பாகக் களைத்துவிட்ட சுரேசுக்குப் பாவம்
நெருப்பாகக் காயும் நிலா!

சென்னைக்கு வந்த பின்னாலும் இன்னும் சுரேஷ் வீட்டுக்கே போகலை! அஞ்சலியை விமான நிலையத்தில் பாத்ததோட சரி! அவ கூட இருந்தாளே ஆம்பல்! ச்சே...அதை நினைக்கும் போதெல்லாம் சுரேஷ் வேர்த்து விறுவிறுத்துப் போகிறான்! நாக்குழறுது! கைகள் தானாத் தந்தி அடிக்குது!
அஞ்சலியிடம் போனிலும் சண்டை! யாராச்சும் வெளிநாட்டில் இருந்து வந்துட்டு வீட்டுக்குப் போவாம, ஓட்டலில் ரூம் போட்டுத் தங்குவாங்களா என்ன? என்னமோ போ சுரேஷ்! இப்பல்லாம் நீ செய்யறது எதுவும் நல்லதாவே படலை!

சார்...கொஞ்சம் லைட்டை ஆப் பண்றீங்களா? மணி ஒன்னாகப் போவுது!

சக பயணியின் குரல் கேட்டு புத்தகத்தை மூடி வைத்தான் சுரேஷ்! லைட்டை அணைத்தான்! திருநெல்வேலி பஸ்ஸில் பழைய நண்பனைப் பார்க்கப் போயிக்கிட்டு இருக்கும் அவன் கண்களில் மட்டும் அப்படி ஒரு வெறி! ஏன் இந்தக் கொலை வெறி?


டேய் ராகவா! உன்னைப் பாக்க வெளிநாட்டில் இருந்து ஒருத்தன் வந்திருக்கேன். நீ என்னடான்னா காலங்காத்தால காபியப் போட்டுக் கொடுத்துட்டு, லுங்கிய மடிச்சிக் கட்டிக்கினு, ஏதோ போலீஸ் ஃபைலைப் புரட்டிக்கிட்டு இருக்கே! இதான் உன் பழைய நண்பனை நீ பாத்துக்கற லட்சணமா?
இத்தனைக்கும் நம்ம ரெண்டு பேரும் அத்தினி க்ளோசு! ரெண்டு பேர் பேரும் வேற ஒரே பேரு! காலேஜ்-ல இதை வச்சே பொண்ணுங்க எப்படி எல்லாம் நமக்கு டிமிக்கி கொடுத்தாங்க?

ஆமாண்டா சுரேஷ்! அதை எல்லாம் மறக்க முடியுமா?
லேடீஸ் ஹாஸ்டல் வேப்ப மரத்துக்குக் கீழே வெயிட் பண்ணவும்-னு பிட்டு நோட்டீசு வருமே! எந்த சுரேஷுக்கு வந்ததுன்னு தெரியாம எப்படிக் குழம்பிப் போயிருக்கோம்? எத்தன சண்டை போட்டிருக்கோம்?

சரி அத வுடுறா மச்சான்! நீ ஏன்டா அஞ்சலி கிட்ட பேச மாட்டேங்கிற? சென்னைல ரெண்டு பேரும் மீட் பண்ணீங்களா இல்லையா?

டேய் ராகவா...இதப் பத்திப் பேசாதேன்னு எத்தனை வாட்டிச் சொல்லி இருக்கேன்? நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலைன்னு நான் உன்னைக் கேட்கறனா? விட்டுறுடா...ப்ளீஸ்!

(அப்போது அங்கு வருகிறார் ஒரு கானஸ்டபிள்...)
ராகவன் சார்...
கொலை நடந்த ஸ்பாட்டுக்குப் பக்கத்தில் இருக்குற ஒரு புதர்-ல இந்த சின்ன செயின் கிடைச்சுதாம்! ஏசி உங்க கிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னாரு! அப்படியே லேப் டெஸ்டுக்கு அனுப்பிடச் சொன்னாரு! நான் வரேன் சார்...

கண்ணாடிப் பேழையில் இருந்த அந்தச் சங்கிலியைத் தொடாமல், திறக்காமல், அப்படியே உற்றுப் பார்க்கிறான் ராகவன். மிகவும் பொடியான சின்னச் சங்கிலி! ஆனா அதைப் பார்த்த சுரேஷூக்குத் தலையில் பெரிய இடியே இறங்கியது!

டேய் ராகவா...இது அஞ்சலிது டா! இது எப்படிடா இங்க?

டேய் சுரேஷ்...உளராத! ஆர் யூ ஷ்யூர்?

டேய் எனக்கு நல்லாத் தெரியும்டா! இது அவளோடது தான்!

ஓ மை காட்! சரி சரி...கத்திப் பேசாத! இரு...இந்தப் போட்டோவைப் பாரு! இது அஞ்சலியா?

சீ சீ! இல்லடா! என்னடா இது? டெட் பாடி படத்தை எல்லாம் என் கிட்ட காட்டுற?

அய்யோ!! ஒரு நிமிஷத்துல வயித்தக் கலக்கிட்டியேடா பாவி!
இந்த டிசைன் இப்ப ரொம்பக் காமன்-டா! ரெண்டு அன்னப் பறவை காதல் பண்ணுறாப் போல! போன வேலன்டைன்ஸ் டேக்கு வந்த மாடல்-டா!

மண்ணாங்கட்டி! வயித்தெரிச்சலைக் கெளப்பாதே! நல்லாப் பாரு! அது அன்னப் பறவையா? இங்கிலீஷ் S டா அது! டபுள் S!!

அட, ஆமாம்! அப்படிக் கூட வச்சிக்கலாம்!

என்ன வச்சிக்கலாம் குச்சிக்கலாம்? அந்த S யாரு தெரியுமா?
- SURESH!
ஒரு சுரேஷ் இல்ல! டபுள் சுரேஷ்! இதத் தான் அவ எப்ப பார்த்தாலும் மாட்டிக்கிட்டுத் திரிவா!

டேய் சுரேஷ்...என்னடா சொல்லுற நீயி? காலங்காத்தால தண்ணி கிண்ணி போட்டுருக்கியா?

டேய் ராகவா, அந்த சுரேஷ் நீ இல்லை! உன்னைச் சொல்ல வரல! போதுமா? வேணாம், என் ஆத்திரத்தைக் கெளப்பாதே! அப்பறமா சொல்றேன்!
வா மொதல்ல, யாரோ ஒரு ப்ரொபசரைச் சொன்னியே, அவரைப் பாத்துட்டு வருவோம்! அவரு கிட்ட நான் சில விஷயம் கேக்கணும்டா!

என்னடா இப்பிடிக் குண்டைத் தூக்கிப் போடுற? சரி ஜீப்புல ஏறு! நானும் இந்தச் செயின் விஷயமா அவரு கிட்ட சில விஷயம் கேக்கணும்!


ப்ரொபசர் பிரபுவைக் கண்டதும் சுரேஷூக்கு இன்னும் அதிர்ச்சி!
சாஆஆஆஆர் நீங்களா?

தம்பி நீங்களா? எப்படி இருக்கீங்க? என்ன திடீர்னு இந்தியாவுக்குப் பயணம்? அதுவும் ராகவனோடு வந்திருக்கீங்க? தெரிஞ்சவரா?

சார்...சுரேஷை முன்னமே உங்களுக்குத் தெரியுமா?

தெரியும் ராகவன்! என் மகன் கார்த்திக்கின் நண்பன் தான் இந்த சுரேஷ்! அவன் அமெரிக்காவில் இருந்த போது, அவன் ரூம் மேட்டாவும் இருந்தாரு இந்தத் தம்பி! ஒரு செமினாருக்குப் போன போது பார்த்து இருக்கேன்!

ஆமாண்டா ராகவா!
டேய்...சாரு யாரு தெரியுமில்ல? நம்ம கெமிக்கல் கார்த்தியோட அப்பா டா!

வாட்? நம்ம கெமிக்கல் கார்த்தியா? காலேஜ்-ல மீனா கூட....
ஓ ஐ ஆம் சாரி சார்! கார்த்திக் எனக்கும் நண்பன் தான்! நான், சுரேஷ், கார்த்தி எல்லாம் ஒரே செட்!

ஆகா! என்னாப்பா சொல்றீங்க?...இன்னிக்கு என்ன திருநாளா? பழைய தொடர்புகள் எல்லாம் ஒன்னா சந்திக்கணும்-னு ஏதாச்சும் இருக்கா என்ன?

சார்...கார்த்தி இப்ப எங்க இருக்கான் சார்?
அமெரிக்காவை விட்டுட்டு இந்தியா வந்துட்டான் பையன்! அப்பறம் அப்படியே தொடர்பு விட்டுப் போச்சு!

அதோ அங்க தான் இருக்கான், நீங்களே போயி பாருங்க!

அங்கே...ஒதுக்குப்புறமாய் இருக்கும் ஒரு மாடத்தைக் காட்டுகிறார் ப்ரொபசர் பிரபு! அருகில் சென்று பார்க்கிறார்கள்!
மாலையிட்ட படத்தில் கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும் கார்த்தியின் அதே அரும்பு மீசை! குறும்பு முகம்!
படத்தின் கீழ்:
கார்த்திக் சுரேஷ்
மலர்ந்தது: 24/02/1975
உதிர்ந்தது: 03/01/2006


சுரேஷுக்கும்,
சுரேஷ் ராகவனுக்கும்,
கார்த்திக் சுரேஷின் படத்தைப் பார்த்தவுடன், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

இத்தனை சுரேஷும் ஒரே நாளில் சந்தித்தால் உலகம் தாங்குமா? அடுத்த பாகத்தையும் ஒரு சுரேஷே தொடர்வார்!
பினாத்தியது போதும்! வாங்க சுரேஷ்!

ஆம்பலில் இதுவரை...
சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்
வெட்டி எழுதிய ஒன்பதாம் ஆம்பல்
...
Indie Blogger, வலையுலக வந்தியத்தேவன், பதிவுலகக் கணவன்மார்களிலேயே wifeology பட்டம் பெற்ற ஒரே பதிவர், Dr. பெனாத்தல் சுரேஷ்...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

Read more »

Sunday, January 06, 2008

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

முந்தைய பகுதி இங்கே!
சும்மா ஒரு எடுத்துக்காட்டு! பழனி கோவில் வருமானம் எவ்வளவு இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் நாற்பது கோடி!
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருத்தருக்கு தொகுதி மேம்பாட்டுக்குன்னு செலவழிக்க மத்திய அரசு ஒதுக்கும் தொகை = ஆளுக்கு ஒரு கோடி!
அப்படின்னா பழனி ஆலயம் நாப்பது தொகுதிக்குச் சமானம்! இம்புட்டு மதிப்பு இருக்கும் முருகப் பெருமானின் கதி என்ன? சொல்லவே அடியேன் நாக்கூசுகிறது!

போலியோ அட்டாக் வந்து, கால்கள் குச்சி போல சூம்பிப் போன நிலையில், பெருமான் இருக்கிறானாம். நான் சொல்லலை! அரசாங்கத்தின் பழனிக் கமிட்டியில் உள்ள ஒரு கெமிக்கல் எஞ்சினீயர் சொல்றாரு!
முருகனின் கோலத்தைக் கிட்டக்க போயிப் பார்த்துவிட்டு வாய்விட்டு அழுதாராம்! அப்புறம் இங்கிட்டுப் போய் படிங்க. டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு...முந்து முந்து முருகவேள் முந்து! எங்கே முந்தறது?

அதான் நாப்பது கோடிக்குச் சொந்தக்காரனாச்சே-ப்பா? நல்லாக் கவனிப்பாங்களே!
உம்..உம்...கவனிக்கிறாங்க தான்! முருகனைத் தவிர மற்ற எல்லாத்தையும்!
இதே நாப்பது கோடி மதிப்புள்ள ஒரு தனியார் கம்பெனியில், அசெம்ப்ளி லைனில் - ப்ரேக் பொருத்தும் கருவி வீக்கா இருக்கு!
மணிக்கு அறுபது யூனிட் போட்டாகணும், இருபது தான் போட முடியுதுன்னா - இந்தப் பிரச்சனை குறைஞ்ச பட்சம் எவ்வளவு நாள் தீர்க்கப்படாம இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் இருபது வருடம்??? :-(

எல்லாருக்கும் பழனியில் பிரச்சனை இருக்கு-ன்னு தெரியும்! ஆனா தீர்வு மட்டும் ஏன் தேட மாட்டறாங்க?
காரணம்: அவங்க அவங்க முன்னுரிமை வேற வேற!
* நிர்வாகத்தின் முன்னுரிமை: பொருள் ஈட்டுதல், ஈட்டிய பொருளை அரசு(?) கஜானாவில் சேர்த்தல்.
* பக்தர்களின் முன்னுரிமை: தங்களுடைய வேண்டுதல் மட்டுமே! குடம் குடமாய் பாலாபிஷேகம்.

அதான் சென்ற பதிவில் சொன்னேன். பக்தர்கள் பங்கு=40%, நிர்வாகத்தின் பங்கு=60%; சென்ற பதிவில் நம்மால் ஆன சிறு சிறு சீர்திருத்தங்கள், மாற்றங்களைப் பார்த்தோம்.
இன்னிக்கி துறை சார்ந்த மாற்றங்கள் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.



ஆகமங்கள்: கோயில்ல இருக்கும் சிலையின் நீள-அகலங்கள், மற்றும் அதன் தன்மைக்கு ஏற்ப, இத்தனை குடம் நீராட்டு, இவ்வளவு முறை நீராட்டு என்பது நியமம்! தைலக் காப்பு செய்தல், விக்ரக சேதாரங்களைக் குறைக்கும்! (wear & tear)

பக்தர்கள்: அவன் ஒரு குடம் கொடுத்தான். நாமும் ஒரு குடமாச்சும் குடுத்து வேண்டிக்குவோம். சரி போட்டிக்காக எல்லாம் வேணாம்! நம்ம கஷ்டமெல்லாம் தீர அவனைக் குளிரக் குளிரக் குளிப்பாட்டி மகிழ்வோம்! - இப்படி ஓவராக் குளிப்பாட்டினா அவன் மகிழ்வானா? ஐயோ! அதை யோசிக்கலையே!

நிர்வாகம்: கோயிலுக்கு வருவாய் சேர்க்கணும்-னா புதுப்புது வழியில் திட்டங்கள் உருவாக்கணுமாம்! பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வதில் குறியா இருக்காய்ங்க! இந்த வீக்னஸ் தான் நமக்கு டிமாண்டு! புதுசா புதுசா திட்டம் போடுவோமா?
1. AFA = Abishekam For All = Rs 500/- only!
2. அ.ஆ. = அபிடேகம்-ஆறுமுகம் = Rs. 100/- only

அச்சோ...இதனால் மூலவர் சிலை சேதாரப்பட்டாலும் படலாம்! ஆகமத்தில் சொல்லி இருக்கே! ஆறு கால வழிபாட்டு - வெறும் ஆறாறு (6x6) குடம் முழுக்காட்டுன்னு...

யோவ், அதெல்லாம் ஒருத்தனுக்கும் புரியாது! ஒரு G.O. போட்டாப் போச்சு! தெரிஞ்ச அர்ச்சகர்கள் கூட எதிர்க்க மாட்டாங்க! அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துருவோம்!
நாம என்ன கொலையா பண்ணுறோம்? சாமிக்கு அபிசேகம் தானயா பண்ணுறோம்? அப்படியே வருவாயைப் பெருக்கிப் "பல நல்ல" விசயங்களுக்குப் பயன்படுத்தப் போறோம்! வந்துட்டாங்க பெருசா!....போயி ஆவுற வேலயப் பாருங்கப்பா!
குருவாய் "வருவாய்" அருள்வாய் குகனே-ன்னு, வருவாயைத் தான் அருளச் சொல்லி இருக்காரு! தெரியுமில்ல? :-)

இப்படித் தான் பொதுவா எல்லா வருவாய் பெருக்கும் திட்டங்களும் ஆரம்பிக்குது! வருவாயைப் பெருக்க வேண்டாம்-னு சொல்லலை!
ஆனா at the cost of what? எதுக்கு முன்னுரிமை? அதை யோசிக்க மறுப்பது ஏன்?
* ஆலயங்கள் இறைவனுக்கும் பக்தனுக்கும் பாலமாக இருக்க ஏற்பட்டவையா?
** இல்லை சராசரி பக்தனுக்கு ரெண்டு லட்டு ஃப்ரீயாக் கிடைக்கட்டுமே-ன்னு "ஒரு நல்ல எண்ணத்துல", தனவான்களைக் தனியாக் கவனிக்க ஏற்பட்டவையா?
- "கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்?" என்று பாரதி கேட்டது தான் நினைவுக்கு வருது!

இதுக்கெல்லாம் பக்தர்களைப் பெருசாக் குறை சொல்ல முடியாது!
பலரும் ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தான்! அவர்களுக்குப் படிப்படியாக ஆன்மீகச் சிந்தனைகள், மன அமைதி, பண்பாடு இவற்றை எல்லாம் ஊட்டத் தானே ஆலயங்கள் தோன்றின!
ஆ+லயம் = ஆன்மா லயிக்கும் இடம்!
ஹிஹி! லயிப்பதா? சிரிக்கிறீங்களா? ஆனா அது தான் உண்மை! அதான் நிர்வாகத்தின் பங்கு 60%! வாங்க, பார்க்கலாம்!



1. முதலில் ஆலய நிர்வாகம், கொள்கை என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளட்டும். ஆலயங்களின் முழுமுதல் நோக்கம் (Primary Objective): இறைவனுக்கும்-பக்தனுக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே!

இதெல்லாம் பேசத் தான் நல்லா இருக்கும், நடைமுறைக்குச் சாத்தியமில்லை-ன்னு சொல்லலாம்!
வாடிக்கையாளர் திருப்தியே ஒரு நிறுவனத்தின் முதல் நோக்கம்-ன்னு ஒரு இயக்கம் வந்த போது, நிறைய பேர் இதையே தான் சொன்னாங்க! ஆனா இன்னிக்கி நிலைமை என்ன? வாடிக்கையாளர்களை வெளிப்படையாக யாரும் பகைச்சிக்க முடியாது!

அதே மாற்றம் தான், ஆலயங்களுக்கும் வர வேண்டும்!
ஆலயத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த முழுமுதல் நோக்கத்துடன் ஒத்துப் போகிறதா என்பதைச் சரி பார்த்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்! (All actions should be aligned with this objective)


2. அரசின் இந்து அறநிலையத் துறை (HRCE), முதலில் ஒரு தன்னாட்சி நிறுவனமாக மாற வேண்டும்! IIT, IIM, ISRO என்று இருப்பது போல் HRCE.
இதில் அரசின் பங்கு கொள்கை முடிவுகள் மட்டுமே!

எப்படி ஒரு கம்பெனிக்கு Charter, Vision Statement, Mission, Quality Policy என்று இருக்கிறதோ, அதே போல் HRCE-க்கும் தேவை.
முக்கியமான ஒன்று: கூடுமான வரை HRCE-இன் நிர்வாக மட்டத்தில் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தவர்கள், அரசியல்வாதிகள் இல்லாமல் இருத்தல் நலம்.
அதே போல் ஆகம வல்லுநர், பொருளாதார வல்லுநர் - இருவரும் அதிகாரக் குழுவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்!

ஆங்காங்கு உள்ள கோயில்களில் தன்னார்வக் கண்காணிப்பு குழுக்கள் அமையுங்கள்.
இல்லத் தலைவிகள், வணிகர், மருத்துவர் என்று சமுதாயத்தின் ஒவ்வொரு தட்டிலும் இருந்தும் ஒருவர் இருப்பது நல்லது. குறிப்பாக கல்லூரி மாணவ/மாணவியர் இருக்க வேண்டும்! இளங்கன்று பயமறியாமல் பட்டதைச் சொல்லும்!


3. அனைத்து ஆலயங்களின் பணித் தகவல்கள், அசையாச் சொத்துக்கள், நிலங்கள் ஆவணப்படுத்தி, நடைமுறையும் படுத்த வேண்டும்! தரவுத் தளத்தில் (database) சேமிக்கப்பட வேண்டும்!
ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு அறிக்கையை வெளிப்படையாகச் சமர்பிக்க வேண்டும்! அனைவர் பார்வையிலும் படும்படி இருக்க வேண்டும்!

ஆலயச் சொத்தை அபகரிப்போர், குத்தகை/வாடகை தராதவர்களின் பெயர்கள்-புகைப்படத்தைக் கட்டம் கட்டி, ஆலய வாசலில் பெரிதாக வைக்க வேண்டும்! அட, நன்கொடை கொடுத்தவங்க பேரை வைக்கறீங்க! புன்கொடை கொடுத்தவங்க பேரையும் பெருசா வைங்கடே! மானம் போகட்டும் :-)


4. சாதி, மதம், பணம் - இந்த வேறுபாடுகள் ஆலயங்களில் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்!
* சாதி=கிட்டத்தட்ட ஒழித்தாகி விட்டது! இதுக்கு ஒரு பெரியார் வர வேண்டி இருந்தது!
* பணம்=இந்தப் பேதத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வருவாரா?
தன்னலமில்லாத ஆன்ம பலத்தால், கோவிலில் சாதிக் கொடுமையை ஒழித்துத் தள்ளினார் பெரியார்! பயமே பாதி வேலையைச் செய்தது! மீதியைத் தான் சட்டங்கள் செய்தன!

ஆலயத்தில் சாதி வேறுபாடு பாக்குறாங்க-ன்னா பாய்ந்தோடி வராங்க-ல்ல அரசியல் தலைவர்கள்? பண வேறுபாடு பாக்குறாங்க-ன்னா மட்டும் ஏன் வருவதில்லை?
சாதி-சாதி வேறுபாடு எவ்வளவு கொடுமையோ, அதே போல் தான் ஆலயத்தில் பணம்-பண வேறுபாடு!
For whoever it is, Sorry! No Compromise! Zero Tolerance!!


5. கூட்டக் கட்டுப்பாடு மேலாண்மை (Crowd Management) மிகவும் முக்கியமான ஒன்று! அட அதுக்குத் தானேப்பா ஸ்பெஷல் டிக்கெட் போடறோம்-னு எல்லாம் சொல்லாதீங்க! Manage the crowd, Dont exploit the crowd!

பெரிய ஆலயங்களில் தான் இந்தப் பிரச்சனை? அதான் வருவாய் வருதே! Management Consultant-களை அழைத்துப் பேசித் தீர்வு காணுங்களேன். கருவறைக்குள் ஒரே நேரத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்று முதலில் நிர்ணயம் செய்யுங்கள்! (Maximum Occupancy). நெரிசல்/விபத்து-ன்னா முதலில் HRCE தலைவர் ராஜினாமா செய்யட்டும்!

Crowd Managementக்கு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்! முன்பெல்லாம் திருமலை-திருப்பதியில் காத்திருப்பு நேரம் எவ்வளவு? தர்ம தரிசனம்னா 24-36 மணி நேரம்! இன்னிக்கி அப்படி இல்லை! இது எப்படிச் சாத்தியம் ஆகியது?
தேவஸ்தானம் முதலில் பக்தர்களுக்கு வசதியா சேர் எல்லாம் போட்டு, கொட்டாய்/ஷெட் கட்டியது. ஆனா IIM-A மாணவர்கள் தங்கள் பிராஜெக்டில், "ஷெட் கட்டுவதால் நெரிசல் வேணும்னா குறையும்! காத்திருப்பு நேரம் குறையாது! பிரச்சனையின் மூலத்தைப் பிடிங்க-ன்னு" சொன்னாங்க!

நோய் நாடி-நோய் முதல் நாடி-ன்னு பின்பு வந்தது தான் இந்த சுதர்சனம்-பார் கோட்(Bar Code)-கைப் பட்டைத் திட்டம்! இன்னிக்கி வெறுமனே கூண்டுக்குள் அடைஞ்சி கிடக்காம, திருமலையில் மற்ற இடங்களான பாபவிநாசம் நீர்வீழ்ச்சி, ஆகாச கங்கை, அனந்தாழ்வான் நந்தவனம், அதிசயக் கல்வளைவு-ன்னு பல இடங்களுக்குப் போய் வரமுடியுதே! பக்கத்து மாநிலத்தை பஸ் டிக்கெட் விலையேற்றத்துக்கு மட்டும் உதாரணம் காட்டாதீங்க! கூட்ட மேலாண்மைக்கும் அங்கிருந்து கொஞ்சம் பாடம் படிக்கலாம்!


6. சிறப்புத் தரிசனத் திட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள்!
ஞாபகம் வச்சிக்குங்க பக்தர்களே! -
* ஒன்னு "தர்ம" தரிசனம்!
* இன்னொன்னு "அதர்ம" தரிசனம்!
நீங்க எந்த தரிசனம் பார்க்க விரும்புறீங்க?


பணம் திரட்ட வேறு பல நல்ல வழிகள் உள்ளன! நல்ல மேலாண்மை, முதலீட்டு நிபுணர்களை அணுகுங்கள்! உங்களை கையெடுத்துக் கேட்டுக் கொள்கிறேன்! பக்தர்களை விட்டு விடுங்கள்!
இறைவன் பிரம்மாதி தேவர்க்கு அரியவன்! பத்துடை அடியவர்க்கு எளியவன்! - இது தான் அடிப்படை! - சிறப்புத் தரிசனம்-னு சொல்லி அதைத் தூக்கிப் போட்டு உடைக்கறீங்க! அடிப்படையை ஆட்டிப்புட்டு, பணம் திரட்டி வைரக் கீரீடம் செய்யப் போறீங்களா? சொல்லுங்கப்பா!

அட, வேளாங்கண்ணியில கூட்டம் இல்லியா? அங்க சிறப்புத் தரிசனம் இருக்கா என்ன? ஒப்பிட்டுப் பேசறேன்-னு தப்பா நினைக்காதீங்க! நல்லதை எங்கிருந்து வேணும்னாலும் கத்துக்கலாம்!
எனக்குத் தெரிஞ்சி, ஷிர்டி சாயிபாபா, பிர்லா மந்திர், சபரிமலை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கிடையாது! இங்க போனா மட்டும் பிசியோ பிசியான நீங்க, எப்படி லைன்ல நிக்கறீங்க? கேரளக் கோவில்கள் பலவற்றில் சிறப்புத் தரிசனமே கிடையாது! கட்டுப் பெட்டித்தனங்கள் நிறைய இருந்தாலும், இந்த ஒன்றுக்காகவே அவிங்கள பாராட்டலாம்!

முதியோர், ஊனமுற்றோர், நோயாளிகள், கைக்குழந்தைகள் - இவர்கள் மட்டும் தான் விதிவிலக்கு! ஒரு நாளைக்கு நான்கு வேளை - இவர்களுக்கு மட்டும் தரிசன நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். போதும்!
ஐஸ்வர்யா ராய், அம்பானி எல்லாம் நிப்பாங்களா? அப்படியே நின்னாலும் கூட்டம் சும்மா விடுமா-ன்னு எல்லாம் கேட்கறீங்களா? வெளிநாட்டுக்குப் போனாங்கன்னா அவங்க ரோமாபுரியில் நிக்கலை? இங்கேயும் நிப்பாங்க!

இல்லீன்னா இருக்கவே இருக்கு சில அதிகாலைச் சேவைகள்! முன்பதிவு செய்துட்டு அந்த நாளுக்குக் காத்திருந்து வழிபடட்டுமே! அவங்க நன்கொடை கொடுத்தாங்கன்னா, நன்றி சொல்லி வாங்கிக்குங்க! மாலை போட்டு மரியாதை செய்யுங்க போதும்! மேல்விழுந்து கொண்டு பக்தர்கள் வரிசையை நிறுத்தறது எல்லாம் டூ மச்! எறிபத்த நாயனார் மட்டும் இப்ப இருந்தாரு...வாய் பேசாது! கை மழு தான் பேசும்! :-)


7. அனைத்து மதத்தினரையும் சேவிக்க உள்ளே விடுங்கள்! ஒரு காலத்தில் இருந்த பகைமை உணர்ச்சி இப்ப இல்லை! நீங்க சேவிக்க விட்டுட்டீங்க-ன்னு உடனே யாரும் அப்படியே திரண்டு வரப் போவதில்லை! விருப்பப்பட்டவங்க தான் வரப் போறாங்க! வரட்டுமே! துலுக்கா நாச்சியார் வரலையா?

இப்ப மட்டும் சாதாரண உடையில் வந்தா உங்களுக்குத் தெரியப் போவுதா என்ன? வெளிநாட்டவர்கள்/பிரபலங்கள் என்றால் தானே இந்தப் பிரச்சனை! எதுக்கு வீண் பழியைச் சுமந்து கொள்கிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை எந்த ஆகமத்திலும் இந்தத் தடை இல்லை! அப்படி இருந்தாச் சொல்லுங்க! தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கு! கோவிலுக்குப் பாதுகாப்பு அவசியம்! அதை பலப்படுத்துங்கள்! அதுவே போதும்!


8. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! பயிற்சியும் கல்வித் தகுதியுமே போதும்!
வாரிசுமுறை எல்லாம் தேவையே இல்லை! பெரும்பாலான வாரிசுகளே ஏழ்மை நிலை கருதி, வேண்டாம் என்று ஒடி விடுகின்றன! ஆக விருப்பமும், பயிற்சியும் தான் இன்றைய தேவை! இது பெரும் கோயில்களுக்கு மட்டும் இல்லை! கருப்பண்ணசாமி, பாடிகாட் முனீஸ்வரன், பேச்சியம்மன் போன்ற நாட்டார் ஆலயங்களில் கூடச் சாதிவழி அர்ச்சகர் முறை தேவையற்றது!

வைணவ ஆகமத்தில் முக்கியமான ஆகமம் ஒன்னு இருக்கு! பாஞ்சராத்ர ஆகமம்-ன்னு பேரு! அதுல அர்ச்சகர்கள் சாதி வழி வரத் தேவையில்லை-ன்னு சொல்லியிருக்கு! அதை ஒட்டித் தான் திருவரங்கம் முதலான பல கோவில்களை, அன்னிக்கே ஸ்டிரிக்ட்டான வேறு ஆகமத்தில் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்துக்கு மாற்றினார் இராமானுசர்! பல எதிர்ப்புகளையும் மீறிச் செய்து காட்டினார்!

இன்னிக்கும் திருவரங்கம், திருக்கோவிலூர், வானமாமலை, திருக்குறுங்குடி-ன்னு பல ஆலயங்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் இருக்காங்க! சுமார் முந்நூறு வருசமா வழி வழியா வராங்க! இதற்காகப் பல நிலைகளில் பயிற்சி தராங்க! ஆகமப் ப்ரவீனர்-னு பட்டமும் தராங்க!
ஏதோ அரசாங்கம் தான் இப்ப 2007ல சாதிச்சிட்டாங்க-ன்னு பேசிக்கறது எல்லாம் சும்மா! இன்னிக்கி அரசு அமைத்த குழுவில் சிறப்பு வழிகாட்டியே, திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர் தான்!


9. அர்ச்சகர்களையும், இதர அரசுப் பணியாளர்கள் போலவே நடத்துங்கள்! அவர்களுக்கும் மாத வருமானம், பதவி உயர்வு, அகவிலைப்படி, பயிற்சி என்று ஒரு ஒழுங்கு முறைக்குள் (system) கொண்டு வாருங்கள்!

ஆலயங்களை வருமான அளவில் வகைப் பிரித்து, அதற்கு ஏற்றாற் போல் ஊதியம் நிர்ணயிக்காதீர்கள்! எப்படிக் கோவில்பட்டி கிளாஸ்-சி ஊழியருக்கும், கோயம்புத்தூர் கிளாஸ்-சி ஊழியருக்கும் அதே சம்பளமோ, அதே போல் தான் பரமக்குடி கோயில் அர்ச்சகருக்கும், பழனி கோயில் அர்ச்சகருக்கும்!

ஆலயச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை, அனைத்து ஆலயப் பொது நிதி (common pool) ஆக்கி முதலீடு செய்யுங்கள்! TTD இப்படித் தான் செய்கிறது! ஆலோசனை கேளுங்கள்!

அர்ச்சகர்கள் மட்டும் இல்லை! அவர்களோடு, ஓதுவார்கள், அரையர்கள், நாதசுரம் மற்றும் இசைக் கலைஞர்கள், சிற்பிகள் - இவர்கள் எல்லாம் சிறப்புப் பணியாளர்கள் (Speciality Occupation); சமுதாயம் ஒதுங்கிக் கொள்ளும் வேலைகளை இவர்கள் துணிந்து செய்கிறார்கள்! மதித்து, கருணை காட்டுங்கள்!


10. தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!
வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு! அது காலத்தின் கொடுமை!!

ஒரு அரசாங்கம் சாதிக்க முடியாததை, ஆசாரியர்கள் சாதித்துக் காட்டினார்கள்! நாதமுனியும், இராமானுசரும், தேசிகரும், மணவாள மாமுனிகளும் - இவர்களுக்கு எல்லாம் தமிழக அரசு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது!


11. தமிழ் அர்ச்சனை பற்றிச் சென்ற பதிவிலேயே சொல்லி விட்டேன்!
இறைவன் மொழியைக் கடந்தவன் தான்! எனக்கும் தெரியும்! ஆனால் பக்தன் மொழியைக் கடந்தவனா? Again the objective is: பக்தனுக்கும் இறைவனுக்கும் பாலமாய் இருப்பது! தான் என்ன சொல்லி சங்கல்பம் செய்கிறோம் என்று பக்தனும் தெரிந்து கொள்வது தான் நல்லது!

அவரவர்க்கு விருப்பமான மொழியில் வழிபட்டுக் கொள்ளட்டுமே-ன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரி தான்! அவரவருக்கு விருப்பமான மொழி-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கறது?

இப்படிப் பொத்தாம் பொதுவாச் சொன்னீங்கனா நான் வேற மாதிரி வருவேன்! வேணும்னா இப்படிப் பண்ணலாமா?
அர்ச்சனையின் போது பேரு, நட்சத்திரம் கேக்கறாங்க-ல்ல? அப்படியே என்ன மொழியில் அர்ச்சனை செய்ய விரும்புறீங்க-ன்னு கேக்கலாம்!

* தமிழ்-னு சொன்னா தமிழ் அர்ச்சனை!
* உங்க இஷ்டம்-னு சொன்னாலும் தமிழ் அர்ச்சனை!
* வேறு ஏதாச்சும் மொழி குறிப்பிட்டுச் சொன்னா, தமிழ்நாட்டுல எங்க போறது? வடமொழி அர்ச்சனை செய்துடலாம்! என்ன சொல்றீங்க? :-)

அர்ச்சனை என்பது குணப்பெயர்களால் ஆன சொல்மாலை! அவ்வளவு தான்!
தொன்று தொட்டு எல்லாம் இது வருவதில்லை! புதிய ஆலயங்களுக்கு புதிய அர்ச்சனைகள் இன்றும் வடமொழியில் எழுதப்படுகின்றன! அமெரிக்காவில் சங்கல்பம் செய்யும் போது அமெரிக்கா வர்ஷே, Missisippi-Missouri ஜீவ நதி சமீப ஸ்திதா-ன்னு சொல்லுறாங்களே! Missisippi எந்த மந்திர நூலில் உள்ளது? :-))

எனவே புனிதம் போயிடுமோ, மந்திர அதிர்வு கொறைஞ்சிடுமோ-ன்னு எல்லாம் ஓவராக் கற்பனை பண்ணிக்காதீங்க, ப்ளீஸ்!

வடமொழியை மட்டம் தட்டவோ, இல்லை கைத்தட்டல் பெற்றுக் கொள்ளவோ இதை சொல்லவில்லை! அடியேன் சுப்ரபாதப் பதிவுகள் போடுவதும் உங்களுக்குத் தெரியும்!
புருஷ சூக்தம், ஸ்ரீருத்ரம், செளந்தர்ய லஹரி - இதையெல்லாம் மாத்திப் பாடச் சொல்லும் ஏட்டிக்குப் போட்டி ஆசாமி நானில்லை! ஆனால் அர்ச்சனையின் நோக்கத்தை (தாத்பர்யத்தை) உணர்ந்து கொள்ளுங்கள்! அவ்வளவே!


12. ஆலயத்தில் இறைவன் பூசனையோடு மட்டும் நின்று விடாது...
சமூக நல்லிணக்கம், மொழி வளர்ச்சி, இசை-பண்பாடு வளர்ச்சி, அருட் பேருரைகள், Counselling போன்ற நற்பணிகளைத் தன்னார்வக் குழுக்கள் உதவியுடன் செய்யத் திட்டம் தீட்டுங்கள்!
அன்னமாச்சார்யரின் தெலுங்குக் கீர்த்தனைகளை (கிட்டத்தட்ட 2003 பாடல்கள்), TTD digitize செய்து முடித்து விட்டது - ஒலி வடிவம் உட்பட! அடுத்து ஆழ்வார்களின் தமிழ்க் கீர்த்தனைகளைச் செய்யலாமா-ன்னு யோசிக்கறாங்களாம்! வாழ்க! வாழ்க!! திருப்பதி அவங்க கிட்டயே இருக்கட்டும்! தமிழ்நாட்டுக்குத் திருப்பிக் கொடுத்துறாதீங்கப்பா! :-)

அப்படியே வேகமாகச் சில கூடாதவைகள் (Dont's):

1. கருவறை நுழைவு கூடாது!
Control Room - விஞ்ஞானிகள், Operation Theater - மருத்துவர்கள், கருவறை - சாதி வேறுபாடற்ற, பயின்ற, அந்த ஆலய அர்ச்சகர்கள் மட்டுமே! - வேறு எப்பேர்பட்ட பிஸ்தும் உள்ளே நுழைதல் ஒவ்வாது!
சில ஆலயங்கள் மட்டுமே (காசி விஸ்வநாதர் உட்பட) விதி விலக்கு! அங்கே கருவறை என்ற ஆகம அமைப்போ, மூர்த்தி-சேதன பிராணப் பிரதிஷ்டை என்ற முறையோ கிடையாது! இருந்திருந்தால் அங்கேயும் உள்ளே விட்டிருக்க மாட்டார்கள்!

அதன் பெயரே கருவறை - கர்ப்பக் கிருகம் - தாயின் கருவறையில் வசதிகள் கம்மியாத் தான் இருக்கும்! குறுகலாத் தான் இருக்கும்! ஒளி, காற்று இதெல்லாம் இருக்காது! குழந்தை பாவம், இடுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்கே-ன்னு விரிவாக்கம் செய்கிறோமா என்ன? அதே கான்செப்ட் தான் கருவறை! தனிப் பதிவில் சொல்கிறேன்! இங்கு விரிந்து விடும்!

உங்கள் நோக்கம் தரிசனமா? நுழைவா??
நுழைந்தே தீருவேன் என்று அடம் பிடித்தால், விரைவில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேருங்கள்! Qualify and then Enter! :-)

2. மூலவரைப் படம் பிடித்தல், வீடியோ பிடித்தல்...கூடாது! சொன்னாக் கேட்டுக்குங்க!
படம் பிடித்தால் சக்தி கொறைஞ்சிடும் என்பதெல்லாம் டுபாக்கூர்! அப்படின்னா மறுப்பாளர்கள் தான் கோயிலுக்கு முதலில் வரணும்! வந்து சக்தியை எல்லாம் கொறைச்சிட்டுப் போயிடணும்! :-)

ஆகம ரீதியான கருவறைக்கு மட்டும் தான் இந்தக் கட்டுப்பாடு! காமிரா எல்லாம் இப்போ வந்தவை! ஆயிரம் ஆண்டுகளாக, ஓவியத்துக்குக் கூட இந்தக் கட்டுப்பாடு உண்டு என்பது தெரியுமா? அச்சு அசலாக அப்படியே வரைய மாட்டார்கள்! - ஏன்?

உருவம் கடந்த இறைவனை, கண நேரத்துக்கு உருவமுடன் காண்கிறோம்!
அருவமும், உருவமும் சேர்ந்து அருவுருவம் - கருவறை உருவை, உருவமாக "மட்டுமே" வீட்டிலும் கொண்டாந்து நம்ம ஏக போக இஷ்டத்துக்கும் நிலைநிறுத்தி விடக் கூடாது! அதான்! தனிப் பதிவில் சொல்கிறேன்!

திருமுகத்தை க்ளோசப் ஷாட் எடுத்துக்குங்க! DOF, Night Vision எல்லாம் கரெக்ட் செட்டிங் வச்சி எடுத்தீங்கனா, அதுவும் கருவறையின் இருட்டில் - பிச்சிக்கிட்டுப் போகாது? :-)
* கருவறையில் அமைதி பெற முயலுங்கள்!
* ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளலாம்!
ஏற்கனவே எடுத்திருந்தால் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்! இனிச் செய்யாதீர்கள்! உற்சவரைப் படம் எடுக்க எவரும் தடை சொல்ல மாட்டார்கள்!

கருவறை உங்கள் பிறந்தநாள் பார்ட்டி நடக்கும் இடம் அல்ல!
இதையே நாசாவிலோ, இல்லை Imax Theater-இலோ செய்வீர்களா?
தஞ்சைப் பெரிய கோவில் உள்ளே இருக்கும் ஓவியக் கூடத்தில் கூட தொல்பொருள் துறை அனுமதிப்பதில்லை! இவன் யாரு கலையைப் படம் பிடிக்கத் தடை சொல்லுறது-ன்னு பேசறீங்களா?
அவ்ளோ பேசறவங்க, உங்க நினைவுத் திரையில் படம் பிடிச்சிக்கிட்டு வாங்களேன்!

3. கருவறையில் தள்ளுமுள்ளு தேவையில்லை! அதட்டல் பேச்சுக்கள் வேண்டாம்! பக்தர்களை வரிசைப்படுத்த பல நல்ல வழிகள் இருக்கு! பணியாளருக்கு பயிற்சியில் சொல்லிக் கொடுங்கள்! பணியாளருக்கு (அர்ச்சகர் உட்பட) நடத்தை விதிகள் (code of conduct) உருவாகட்டும்! வீண் வழக்குகள், விவாதங்கள் நடத்தும் இடம், கருவறை கிடையாது! இதை இரு தரப்பும் உணர வேண்டும்!


இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு!
நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே? இத்தனைக்கும் பணம்?
1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites

2. பத்து லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் = 153;
2-10 lakhs = 438; 1-2 lakhs = 3390 (நன்றி: http://www.hrce.tn.nic.in/)

ஒரு பொது நிதியே (Common fund) அத்தனைக்கும் போதுமானது! நல்ல முதலீட்டு நிபுணர்கள் ஒன்னை ரெண்டாக்கித் தருவாங்க! வேணும்னா அம்பானியை HRCE நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொண்டு, மரியாதையை எல்லாம் அங்கே செய்யுங்கள்! :-)

அரசே,
உன் செயல்பாட்டுக்கு கோயில் வருமானத்தில் கைவைக்க வேண்டாம்! முடிந்தால் இரயில்வே பட்ஜெட் தனியாகப் போடுவது போல், ஆலய பட்ஜெட் ஒன்றைத் தனியாகப் போடவும்!

பக்தர்களே!
மேலே சொன்ன நல்லது பல நடந்துச்சுன்னா, அப்போ உண்டியலில் பணம் போடுங்க! அது வரை போடாதீங்க! நீங்க போடும் பணம் முதலை வாய்க்குத் தான் போகும்!
நீங்க பொருளாக் கொடுங்க! சென்ற பதிவில் சொன்ன காசோலைத் திட்டத்தைக் கடைப்பிடியுங்க! போதும்!!

Coming back to the roots...
பெருமானின் திருவுள்ள உகப்பிற்குப் பக்தனைத் தயார் செய்வது தான் ஆலயத்தின் பணி!
பக்தனின் உகப்புக்காக, ஆகா-ஓகோ வசதிகள் செய்து தருகிறேன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, முதலுக்கே மோசம் செய்தால்...

அடுத்த தலைமுறையில் நாத்திகத்தை நன்கு தழைக்கச் செய்த "பெரும் புண்ணியம்" தான் நமக்குக் கிட்டும்! :-)
மற்றை நம் காமங்கள் மாற்று, ஏல்-ஓர்-எம்பாவாய்!


Results of the Poll:
Read more »

Thursday, January 03, 2008

மாதவிப் பந்தலில் துளசியைப் பார்த்தார்! மயக்கம் போட்டார்!!

குட்டிப் பெண் துளசி...அவளுக்கு அம்மாவும் அப்பாவும் ஆசை ஆசையாய் "அத்துழாய்" என்று தூய தமிழில் பேர் வைத்தனர். அப்படித் தான் அன்புடன் வீட்டிலும் கூப்பிட்டனர்.
ஆனால் கூடப் பழகும் பெண்டுகள் எல்லாம் அத்துழாய் என்று முழுப் பேரையும் நீட்டி முழக்க முடியாமல் "அத்து" என்று கூப்பிட...
அட, இது என்ன அத்து, தத்து, பித்துன்னு....துளசி-ன்னே கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க! துளசி என்ற சொல் தானே, தூய தமிழ்ப் பாசுரத்தில் துழாய் என்று வருகிறது!
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்,
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்...


அத்துழாய்- பேருக்கு ஏற்றாற் போல் அழகான துழாய் அந்தப் பெண்!
மற்ற செடிகள் போல், துளசிச் செடிக்குப் பூக்கள் பூத்துக் குலுங்காது. அப்புறம் எப்படித் துளசியைப் போயி அழகு-ன்னு சொல்லலாம்?
சிறுசிறு சிரிப்பாய் கரும்பச்சை இலைகள். அந்தச் சிரிப்புக்கு மேலே ஒய்யாரக் கொண்டை போல், துளசி மலர்க்காம்பு காற்றில் ஆடும்.
அதில் பொடிப்பொடிக் கருநீல விதைகள், அந்தக் கருநீலனையே தாங்கிக் கொண்டு இருப்பது போல் அப்படி ஒரு பெருமிதம்!
மற்ற பூக்களை எல்லாம் கொய்யாமல் செடியில் விட்டால் கூட, ஒரு சில நாளில் வாடி விடும்! ஆனா வாடாத மலர் என்றால் அது துளசி மட்டும் தானே? ஒட்டு மொத்த செடியே ஒரு வாசனைக் கொடின்னா அது துழாய்ச் செடி மட்டும் தான்! - நம்ம அத்துழாய்ப் பொண்ணும் அப்படித் தான்!
அழகும் உடையவள். அருங்குணம் என்னும் வாசமும் உடையவள்! சும்மாவா? பெரிய நம்பியின் பெண்ணல்லவா?

மகா பூர்ணர் என்ற பெயரை அழகுத் தமிழில் பெரிய நம்பி என்று ஆக்கிக் கொண்டாரே? அவரா?
ஆமாம்! அவரே தான்! இராமானுசரின் குருவாயிற்றே அவர்! அப்பாவைப் போலவே தான் பொண்ணும்!..... எளிமை ஆனால் உறுதி! அறிவு ஆனால் அடக்கம்! தமிழ்ப்பற்று ஆனால் மொழிவெறுப்பின்மை!


அன்று மார்கழி மாதம் 18 ஆம் நாள்....
அத்துழாய் காலையில் எழுந்து நீராடி, வீதியில் கோலமும் போட்டு, வீட்டுக்குள் வேலையும் முடித்து விட்டாள்.
தன்னை மிகவும் அழகாக அலங்காரம் செய்து கொண்டாள். கூந்தலில் வாசனைத் தைலம் பூசி, நெற்றிச் சுட்டி பளபளக்க, கைவளைகள் கலகலக்க, இதோ...தோழியரோடு பந்தாட்டம் ஆடப் புறப்பட்டு விட்டாள்! காலங்காத்தால அப்படி என்ன ஒரு பொண்ணுக்குப் பந்தாட்டம் வேண்டிக் கிடக்கு? - இப்படிக் கேட்க அவளுக்கு அம்மா இல்லை!

அட, இது என்ன வீதியில் ஒரே சத்தம்!
யாரோ கும்பலாகப் பாட்டு பாடிக் கொண்டு அல்லவா வருகிறார்கள்? அதுவும் தாள ஓசைகளோடு தமிழ்ப் பாட்டு அல்லவா ஒலிக்கிறது!
ஓ...சீடர்களோடு, உடையவர் வருகிறார் போலும்! அது என்ன உடையவர்?

யாருக்கு உடையவர்? எதற்கு உடையவர்?? - அரங்கனின் செல்வம் அத்தனைக்கும் உடையவர்!
அரங்கனின் செல்வம் நாம் தானே! - அப்படின்னா நமக்கு உடையவர்! நம்மை உடையவர்!
நம் நன்றிக்கு உடையவர்! வேதங்களைப் பேதங்கள் பார்க்காது அனைவருக்கும் பொதுவாக ஆக்கி வைத்த இராமானுசர், சீடர்களோடு வீதியில் வந்து கொண்டிருக்கிறார். துறவிக்கு உரிய நோன்பான இரத்தல் நோன்பின் படி, பிட்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்.

அச்சோ பாவம்...அவருக்கு விஷயம் தெரியாது போலும்!
ஆலயத்துக்கும் தமிழுக்கும் தான் செய்யும் சீர்திருத்தங்கள் சிலருக்குப் பொறுக்கவில்லை! குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்! பின்னொரு நாள் பிட்சை உணவில் விஷம் கலக்கப் போகிறார்கள் என்பதை அப்போது அவர் அறிந்திருக்க மாட்டார் தான்! அது தனிக்கதை! இப்போது நாம் இந்தக் கதைக்கு வருவோம்.

எவ்வளவோ வேதங்களும் பாசுரங்களும் அறிந்திருந்தாலும், இவருக்குக் கோதையின் தமிழில் மட்டும் ஏன் அப்படி ஒரு காதலோ தெரியலையே! என்னமோ இவர் பெத்த பொண்ணு பாட்டெழுதினா மாதிரி, அப்படி என்ன பெருமிதம் வேண்டிக் கிடக்கு? ஓய்வு நேரங்களில் கூட, வாய் மட்டும் திருப்பாவைப் பாடல்களை முணுமுணுத்தபடியே இருக்கே!
இது சீடர்களுக்கே சந்தேகம் தான், இருந்தாலும் யாரும் ஒன்னும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை! அன்றும் இதே நிலைமை தான்....திருப்பாவை பாடிக் கொண்டே ஒவ்வொரு வீடாக வருகிறார்கள்.



முதல் வீட்டில், ஒரு புது கல்யாணப் பெண்! புகுந்த வீட்டின் அரிசிப் பானையில் இருந்து ஒரு கைப்பிடி கொட்டி வணங்குகிறாள்.
உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன்
மத யானையின் பலம் கொண்டவன், நீங்காத தோள் வலிமை கொண்டவன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
அந்த நந்தனின் மருமகளே! புகுந்த வீட்டில் ஒரு அப்பா! அவரின் திருமகளே! நப்பின்னையே!

அப்படியே பாடிக் கொண்டே செல்கிறார்கள்; அடுத்த வீடு பூட்டி இருக்கு! யாத்திரைக்குப் போய் இருப்பாங்க போல! அதுக்காக உடனே அடுத்த வீதிக்கு எல்லாம் போய் விடக் கூடாது! - நோன்பை மாற்றிக் கொள்ள முடியுமா? இந்த நாள், இத்தனை வீடுகளில், இந்த அளவுக்குத் தான் பெற வேண்டும் (ஒரு கைப்பிடி) என்பது நியமம் ஆயிற்றே!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வாசனை வீசும் கூந்தல் உள்ள பெண்ணே! நடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்
காலையில் சேவல்கள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன!

சீடர்கள் நகர்கிறார்கள்...
அடுத்த வீடு, மிகவும் எளிமையாய் அழகாய் இருக்கு! பச்சை வர்ணம் பூசி இருக்காங்க! பார்த்தாலே பரவசம்! முகப்பில் மாதவிப் பந்தல்!

வில்லிபுத்தூர் ஆலயம் - மாதவிப் பந்தல்

மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!
மாதவி மலரின் கொடிகள் (செண்பகப்பூ) அந்தப் பந்தலில் அடர்த்தியாகப் படர்ந்துள்ளன. அதில் குயில்கள் எல்லாம் கூவுகின்றனவே!

அந்த வீட்டில் திருச்சின்னங்கள் துலங்குகின்றன! இனிமையான செண்பகப் பூக்களின் வாசம்! வாசற்படியில் மஞ்சள் குங்குமம் எல்லாம் பூசி வைத்துள்ளனர். கிராமத்து ரேழி தெரிகிறது!
பந்தார் விரலி நின் மைத்துனன் பேர் பாட
பூப்பந்தை விரல்களில் உருட்டிக்கொண்டு வரும் பெண்ணே...உன் கணவன் பேரை நாங்கள் பாடிக் கொண்டே வந்திருக்கிறோம்.

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
உன் தாமரைப் பிஞ்சுக் கைகளால், வளையல்கள் எல்லாம் ஜல்ஜல், கல்கல் என்று ஒலிக்க....
வந்து திறவாய் மகிழ்ந்தே! ஏல்-ஓர் எம்பாவாய்!
பாட்டு முடியவும், அட இது என்ன விந்தை... கதவு மெய்யாலுமே கல்கல் ஜல்ஜல் ஓசையுடன் திறக்கிறதே!

அதே மாதவிப் பந்தல் இங்கும் இருக்கே!
அதே கந்தம் கமழும் குழலி கதவைத் திறக்கிறாளே!
அதே பந்து ஆர் விரலி, கைகளில் பூப்பந்து வைத்திருக்கிறாளே!
அதே செந்தாமரைக் கையால், சீரார் வளை ஒலிகள், கலகல சலசல என்று ஒலிக்கிறதே! அதோ, அந்தப் பெண் அத்துழாய் நிற்கிறாள்!
ஆகா...இது அத்துழாயா? இல்லை நப்பின்னைப் பிராட்டியா? அதே வளையோசை...கலகல கலவென!
வளையோசை கலகல கலவெனக் கவிதைகள் படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது!
சிலநேரம் சிலுசிலு சிலுவெனச் சிறகுகள் படபட துடிக்குது எங்கும் தேகம் கூசுது!!
சின்னப் பெண் பெண்ணல்ல, கண்ணன் காதல் பூந்தோட்டம்!
இந்தப் பெண் நப்பின்னை, இவள் தமிழ்த் தேரோட்டம்...!!

தாயாரை அடிக்கீழ் வீழ்ந்து சேவிப்பது போல், நடுத்தெருவில் கீழே விழுந்தார் உடையவர்! அப்படியே மயக்கம் போட்டுக், கீழே சரிந்து விட்டார் இராமானுசர்! மூர்ச்சையானார்!



சீடர்கள் எல்லாம் பதறிப் போய் விட்டனர்! விசிறுகின்றனர். கமண்டல நீர் தெளிக்கிறார்கள்! அத்துழாய் அலறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடுகிறாள்! அப்பா...அப்பா...ஜீயர் என்னைச் சேவித்தார், ஜீயர் என்னைச் சேவித்தார்! கீழே விழுந்து விட்டார்...பயமா இருக்கு! வாங்கப்பா வாங்க!
பெரிய நம்பிகள் உள்ளே பூசையில் இருந்தவர், போட்டது போட்டபடி, வெளியில் ஓடி வர...
கீழே கிடப்பது சீடன்! சீடன் என்றாலும், இன்று சீரங்கத்துக்கே அவன் தான் தலைவன்! சீடனின் மனதை நன்கு அறிந்த குருவாயிற்றே நம்பிகள்! உடனே புரிந்து கொண்டார்!

பயப்படாதீங்க! இதோ மூர்ச்சை தெளியுது பாருங்க! இன்னும் நல்லா விசிறுங்க!.....ராமானுஜா! ராமானுஜா!
ராமா....என் கண்ணா, எழுந்திரு என்று தோளைத் தட்டி அழுத்திப் பிடிக்கிறார்.

"உந்து மத களிற்றன்" என்ற பாசுரம் சேவித்துக் கொண்டு வந்தாயா நீ?
உனக்குச் சீரார் வளை ஒலிக்கக் கதவைத் திறந்தவள் நப்பின்னைப் பிராட்டி என்று சேவித்து வீழ்ந்தாயோ? அவள் என் செல்லப் பெண் அத்துழாய், ராமானுஜா! பார்... கண் விழித்துப் பார்! கோதையின் தமிழ்க் கவியில் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு அப்படி ஒரு ஈடுபாடா?

ஆண்டாள், தன் காதலில் வெற்றி பெற, மதுரை அழகருக்கு நூறு தடா பொங்கலும் வெண்ணையும் வேண்டிக் கொண்டாளே? அதை நிறைவேற்றாமல் அரங்கனுடன் கலந்து விட்டாளே என்றெல்லாம் முன்பு என்னிடம் புலம்புவாயே! நீ என்ன கோதையின் ஆசை அண்ணனா என்ன? அவள் விரும்பியதெல்லாம் வாங்கிக் கொடுக்க? அவள் ஆசைப்பட்டதெல்லாம் நடத்திக் கொடுக்க? போதும், போதும், எழுந்திரு!

கவிதையை வாசிப்பவனுக்கு இப்படி எல்லாம் ஏற்படுமா?
கவிதையைச் சுவாசிப்பவனுக்கு மட்டுமே இப்படி ஏற்படும்!

தமிழைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து வாழும் நீ, இனி வெறும் ஜீயர் அல்ல! திருப்பாவை ஜீயர்!! திருவரங்கச் செல்வத்தைத் திருத்தி வைத்தோன், தரையில் வீழ்ந்து கிடக்கலாமா? எழுந்திரு ராமா!
எழுந்திருங்கள் திருப்பாவை ஜீயரே, எழுந்திருங்கள்! என்று தோளில் தன் சீடனை அன்புடன் தட்டினார் பெரிய நம்பிகள்!

பெரிய நம்பிகள், இராமானுசர் - குரு சீடன் கோலத்தில்!

உடையவர் சித்தம் தெளிந்தார்.
சற்றே நாணத்துடன் எழுந்து உட்கார்ந்தார். சூடான பால் சிறு குவளையில் தரப்பட்டது! மயக்கம் கலைந்து, முக்கோலை (துறவிகள் கையில் உள்ள திரிதண்டம் என்னும் குச்சி) மீண்டும் கையில் பிடித்தார்!
பெரிய நம்பிகளை வாஞ்சையுடன் வணங்கினார். இருவரும் அச்சோ என்று சிரித்துக் கொண்டனர்!
இராமானுசர், அத்துழாயை ஒரு கனிவான பார்வை பார்த்தார். நாளை அவள் மணமாகிப் போகும் போது அவளுக்கு ஒரு பெரும் சீதனம் தரப் போகிறாரே!

பின்னாளில் ஆண்களுக்கு இணையாக, பெண்களும் ஆன்மீகப் பணிகள் செய்யலாம் என்று ஒரு நிலையை உருவாக்கப் போகிறார் அல்லவா உடையவர்!
அப்போது அரங்கனின் அணியில் திரண்ட பல பெண்களில் ஒரு வைரமாக மின்னப் போகிறாள் இந்தத் துளசி என்னும் அத்துழாய்!
மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் இன்னும் கூவும்! :-)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP