Tuesday, February 26, 2008

மஜ்ஜை தானம் மகத்தான தானம்! Bone Marrow Donation - Part 2

எலும்பு மஜ்ஜை தானம்-னு பதிவுல சொல்றதுக்கு எல்லாம் ஈசியாத் தான் இருக்கும்! ஆனா உதவணும் மனம் இருந்தாக் கூட, மனத்தில் கூடவே பயமும் இருக்கேப்பா!
எங்க வீட்டுல சொன்னா அவ்ளோ தான்! டின்னு கட்டிருவாங்க! இந்த வேலையெல்லாம் உனக்குத் தேவையா-ன்னு கேட்பாங்களே!

அட என்னாங்க அண்ணாச்சி, இப்பிடி வீட்டுக்குப் பயந்த புள்ளையாட்டும் Act கொடுக்கறீங்க? நீங்க "தம்" அடிக்கறது வீட்டுக்குத் தெரியுமா என்ன? :-)
இல்லீன்னா மவுண்ட் ரோடு Casino தியேட்டர் படத்துக்கு எப்பமே வீட்ல சொல்லிட்டுத் தான் வாரீங்களா? :-)
ஹிஹி! கோச்சீக்காதீங்க! சும்மா ஒங்களைச் சீண்டறத்துக்காகச் சொன்னேன்!

நமக்கே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் புரியுது! அப்படி இருக்க, வீட்டில் இருக்கும் அம்மா அப்பாவுக்கோ, இல்லை மனைவிக்கோ முழு விஷயம் தெரியும்-னு எதிர்பார்க்கலாமா? நீங்க பக்குவமா எடுத்துச் சொல்லலாம்!

அதை விட, நீங்க தானம் கொடுத்து விட்டு அப்புறம் வந்து சொன்னீங்கனா, உங்களைப் பார்த்த பின்னாடி அவிங்களுக்கே ஒரு தெம்பு வந்துரும்! சமையலைக் கூட உங்க மேலத் தானே முதலில் டெஸ்ட் பண்ணறது வழக்கம்? அதே போல இதுக்கும் நீங்க தான் முதல் டெஸ்ட்! :-)

பச்சைக் குழந்தைகள் விஷயத்தில் உங்களையும் என்னையும் விட, வீட்டில் இருப்பவங்களுக்குத் தான் கருணையும் அதிகம்! பொறுமையும் அதிகம்! எத்தனையோ விஷயம் செஞ்சிட்டீங்க! இதைச் செய்ய முடியாதா உங்களால?

வலியோ, பக்க விளைவுகளோ இன்றி இயல்பாக எடுக்கப்படும் முறை தான் எலும்பு மஜ்ஜை தானம்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்!
வாங்க, இன்னிக்கு, தானம் கொடுக்கும் போது என்னவெல்லாம் நடக்குது-ன்னு பாத்துருவோம்!

Fear of the Unknown-ன்னு சொல்லுவாங்க! கடவுளைப் பத்தி தெரியாத வரைக்கும் தான் "பய"பக்தி! கொஞ்சம் தெரியா ஆரம்பிச்சிருச்சுன்னா, "பய"பக்தியில், பயம் போயிடும்! பக்தி மட்டும் நின்னுக்கும்! அது போலத் தான் இதுவும்! விஷயம் தெரிஞ்சி போச்சின்னா பயம் போயிடும் :-)


*1. முதலில் பதிவு! அப்பறம் தான் எல்லாம்!சென்ற பதிவில் சொன்னா மாதிரி, முதலில் பெயரைப் பதிஞ்சிக்கிடணும்! இணையத்துலேயே பதிஞ்சிக்கிலாம்!
* இந்தியாவில் பங்களிக்க இங்கிட்டுப் போங்க!
* அமெரிக்கா நிரந்தர வாசமா? - இங்கிட்டுப் போங்க!
* அமெரிக்காவில் பதிந்தவுடன், Kit வீடு தேடி வரணுமா? இங்கே!
* அவிங்கவங்க நாட்டில் பங்களிக்க, இங்கிட்டுப் போகலாம்!

*2. பதிஞ்சாச்சு; அப்பாலிக்கா என்ன?நீங்க பதிஞ்சி முடிஞ்சதும், உங்களின் எச்சில் சாம்பிளோ அல்லது இரத்த சாம்பிளோ கொடுக்கச் சொல்லிக் கடிதம் வரும். உங்கள் ஊரிலேயே இருக்கும் ஆய்வுக் கூடத்துக்கு (Diagnostic Lab) அனுப்பி வைப்பார்கள். இதில் உங்கள் செலவு எதுவும் கிடையாது!

* முக்கியமா இங்கிட்டு ஒரு விஷயம் சொல்லிக்கறேன் மக்களே!
நீங்களும் இது தொடர்பா எதற்கும் காசு கொடுக்க வேண்டாம்! அதே போல தானத்துக்காக, உங்களுக்கும் எந்தக் காசும் தரப்பட மாட்டாது! :-)

*3. அடுத்தது தானம் தானா?
அதான் இல்லை! பல நேரங்களில் உங்களுக்கு அழைப்பே வராமல் கூட போகலாம்! பாவம், எந்தக் குழந்தையோ, இல்லை எந்த மனிதரோ? தேவையைப் பொறுத்து தான் அழைப்பு வரும்!

ஒரே குடும்பத்துக்குள் ஒப்புமை (Match) கிடைப்பதே 30% தான்!
அப்படி இருக்க வெளியில் கிடைப்பது அதை விடக் கம்மி!
இப்போ தெரியுதுங்களா, எதுக்கு பெயரையாச்சும் பதிஞ்சி வச்சிக்குங்க-ன்னு திருப்பித் திருப்பி பிளேடு போடறேன்-னு! இதுக்குத் தான்! :-)

*4. சரிப்பா, நான் ஒருத்தருக்கு மேட்ச் ஆயிட்டேன்னு வை! அப்புறமா?
கையைக் கொடுங்க சாமீ! நீங்க ஆசீர்வதிக்கப்பட்டவர்! லட்சத்துல ஒருத்தரய்யா நீர்! உங்களால் ஒரு பிஞ்சு ஜீவன் காப்பாத்தப்படணும்-னு இருக்கு!


நீங்கள் மேட்ச் ஆனீர்கள் என்றால், மருத்துவமனையில் இருந்து உங்களிடம் தொலைபேசுவார்கள்! இன்ன காரணத்துக்குத் தேவை என்பதைச் சொல்லி, உங்களிடம் மீண்டும் ஒரு முறை சம்மதம் கேட்பார்கள்!

தயவு பண்ணி "யோசிச்சி சொல்லறேன்" எல்லாம் சொல்லிடாதீங்க! உண்டு/இல்லை-ன்னு தெளீவா சொல்லிருங்க!
யாரும் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டாங்க! தப்பா நினைச்சிக்கவும் மாட்டாங்க! நேரத்தை வீணடிக்காமல், லட்சம் பேரில் வேறு யாரையாச்சும் தேடுவாங்க!

உங்கள் உடல் நிலையோ, அல்லது வேறு குடும்பக் காரணங்களோ உண்மையாகவே தானத்துக்குத் தடையா இருக்கும் பட்சத்தில் சொல்லிவிடலாம்! அவர்களும் பல கேள்விகள் கேட்டு, நீங்கள் அந்த நேரத்தில் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொண்டு தான் அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள்.

*5. அடுத்தது என்ன? தானம் தான்!
மருத்துவமனையில் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்! நீங்களும் அவர்கள் யாரும் போலி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, தானத்துக்கான அடையாள அட்டையைக் கொடுத்து விடுவார்கள்.

அப்பறம் என்ன? ஆப்பிள் ஜூசு குடிங்க! :-)
மயக்க மருந்து உங்களுக்குத் தரப்படும்! (லோக்கல் அனிஸ்தீஷியா)! ஆனா முழிச்சிக்கிட்டு தான் இருப்பீங்க!

மெல்லிய ஊசிகளால் 3-5% எலும்பு மஜ்ஜை எடுத்துக் கொள்ளப்படும்! அதுவும் நாலு வாரங்களில் மறுபடியும் உங்கள் உடலில் சுரந்து விடும்! மொத்தம் 2-4 மணி நேரம் தான்! அப்பறம் அன்னிக்கே வீட்டுக்கு வந்து விடலாம்!
*6. பக்க விளைவுகள்?ஒங்க தில்லுக்கு அதெல்லாம் ஒன்னுமே வராது! கவலைப் படாதீங்க!
சில மக்கள் மட்டும் சோர்வு/தலைவலி வந்ததாச் சொன்னாங்களாம்! அதான் இப்பல்லாம் சூடான பதிவுக்குச் சூடான பின்னூட்டம் போட்டா, பக்க விளைவுகள் எல்லாம் தானா வருதே! இதெல்லாம் உங்களை அசைச்சிடுமா என்ன? :-)

*7. என்னிடம் எடுக்கப்பட்ட மஜ்ஜை அடுத்து எங்கே போகும்?
அதே மருத்துவமனையிலோ, இல்லை பயனாளி எங்கு அட்மிட் ஆகி இருக்காரோ, அங்கு மருத்துவக் கூரியர் மூலமாக விரைந்து செல்லும்!
ஏற்கனவே அந்த நோயாளி/குழந்தை கீமோதெரப்பிக்கு உட்படுத்தப்பட்டு இருப்பாங்க! இது நோய் வாய்ப்பட்ட செல்களை (diseased cells) ஓரளவு அகற்றி இருக்கும்!

உங்கள் மஜ்ஜையில் கிடைத்த செல்கள் அவர்களுக்கு transfusion மூலமாகச் செலுத்தப்படும்.
இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாப் போச்சுனா, சில நாட்களில் ஆரோக்யமான செல்களை அவர்கள் உடம்பும் உற்பத்தி செய்யத் துவங்கி விடும்!

*8. தானம் பெற்றுக் கொள்பவரிடம் நான் பேசலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம்! 3-6 மாதம் கழித்து கடிதமோ, தொலைபேசியோ, இல்லை நேரிலோ சந்திக்க ஏற்பாடு செய்து தருவார்கள்.

*9. இன்னொருத்தருக்கும் தானம் செய்ய என்னைக் கூப்பிட்டால்?
ஹிஹி! பயப்படாதீங்க! அதெல்லாம் கூப்பிட மாட்டாங்க! நீங்க தானம் செய்து முடித்த அடுத்த ஒரு ஆண்டுக்கு, உங்கள் பெயர் தகவற் களஞ்சியத்தில் (Database) இருந்து மறைக்கப்படும்! உங்களை இரத்த தானம் கூட செய்ய வேண்டியதில்லை என்றும் சில இடங்களில் சொல்லி விடுவாங்க.

* 10. இன்னொரு ஈசியான விஷயம் வந்திருக்கு!
அண்மைக் காலத்தில், எலும்பு மஜ்ஜைக்குப் பதிலா, PBSC-ன்னு ஒன்னு வந்திருக்கு! Peripheral Blood Stem Cell-ன்னு பேரு! இதில் தானம் செய்வது இன்னும் எளிது! எலும்பு மஜ்ஜை எடுப்பதற்குப் பதிலா, நம்ம இரத்தத்தில் இருந்தே செல்களை எடுத்துக்கறாங்க!

தானம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன், ஊசி மூலம் மருந்து செலுத்தி, அதிக செல்கள் இரத்தத்தில் உற்பத்தி ஆகுமாறு செய்யறாங்க. பின்னர் ஒரு கையில் இருந்து இரத்தம் எடுத்து நம் கண் முன்னாலேயே கருவிக்கு அனுப்புறாங்க.

அது செல்களை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டு விடும்! மீதி இரத்தத்தை நம் அடுத்த கைக்கு அனுப்பி விடுவார்கள். இதில் மயக்க மருந்தோ, மஜ்ஜை எடுப்பதோ இல்லாமல் இன்னும் எளிதாகப் போய் விடுகிறது.
ஒரே ஒரு விஷயம்: இது இன்னும் பரவலாக்கப் படவில்லை!


மக்களே,
ரெண்டு பதிவுக்கும் வந்து படிச்சிப் பார்த்து, ஆதரவு தந்தமைக்கு நன்றி!
ரொம்ப டெக்னிக்கலா எல்லாம் சொல்லாது, இயல்பா பேசிக்கறாப் போலத் தான் சொல்லி இருக்கேன்! அதையும் மீறி கொஞ்சம் மொக்கை தலை தூக்கி இருந்தா மன்னிச்சிக்குங்க!

நீங்கள் செய்யும் ஒரே உதவி - எலும்பு மஜ்ஜை தானம், பேரில் இருப்பது போல் அப்படி ஒன்னும் பயங்கரமானது இல்லை என்பது தெரிந்து கொள்வது தான்!
உங்களுக்கு இந்நேரம் தானாகவே தெரிஞ்சிருக்கும்! உங்களுக்குத் தெரிஞ்சதைத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்க! அதுவே முதல் படிக்குப் போதும்!

இதையும் மீறி அடுத்த கட்டத்துக்குச் சென்று உதவணும் நினைச்சா...
please please please...உங்கள் பெயரை இங்கு பதிந்து கொள்ளுங்கள்!

உயிர் தேடும் வேட்டையில், லட்சத்தில் ஒரு பெயர் அகப்படும் போது ஏற்படும் விம்மிதம் இருக்கே! அது சொல்லில் அடங்காது!
இறைவனுக்குச் செய்யும் திருமஞ்சனம் (அபிஷேகம்) எப்படி குளிரப் பண்ணுகிறதோ, அதே போல், "உயிர் தரும் செல்களால்" ஒரு குழந்தைக்குச் செய்யும் திருமுழுக்கு, பெருமானுக்கு என்றுமே உகப்பானது! குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

குழந்தைகள் வலி இன்றி, வளம் பெற்று வாழட்டும்!
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங் கைகளாலே வந்து அச்சோ அச்சோவே!
ஆரத் தழுவ வந்து அச்சோ அச்சோவே!!
(- பெரியாழ்வார் திருமொழி; குழந்தையை நோய் அண்டாமல் இருக்கப் பாடும் பட்டினம் காப்பு)





References (உசாத்துணை):
தானம் கொடுத்த நாள் அன்று ஸ்டீவனின் அனுபவங்கள் =
http://bookreviewsandmore.ca/2007/07/bone-marrow-part-3-donation.html
தானம் கொடுக்கும் போது நடப்பவை என்ன? =
http://www.mayoclinic.com/health/bone-marrow/CA00047
வ.கே.க =
http://www.matchpia.org/htm/faq.htm
http://www.marrow.org/DONOR/When_You_re_Asked_to_Donate_fo/Donation_FAQs/index.html
NMDPஇல் இருந்து Eligibility Guidelines =
http://www.giveblood.org/nmdp/eligibility.htm

Read more »

Thursday, February 21, 2008

எச்சரிக்கை!! ரிவர்ஸ் கியரில் - பூம்பாவாய்! ஆம்பல் ஆம்பல்!! - 10

ஆர்க்குட் தள நிர்வாகத்திடம் இருந்து ஒரு எச்சரிக்கை!
சுரேஷ் என்னும் பெயர் உள்ளவர்கள், தங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை, மறு தேதி குறிப்படப்படும் வரை, ஆர்க்குட் தளத்தில் இருந்து நீக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சில தொடர் விபத்துகள் காரணமாகத் தமிழகக் காவல் துறை ஆர்க்குட் தளத்தை அணுகி இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளது.

இது முற்றிலும் சுய விருப்பத்துக்கு உட்பட்டதே! இருப்பினும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் ஆர்க்குட் கோருகிறது!
அதுக்காக உங்கள் அக்கவுண்ட்டை தயவு செய்து disable எல்லாம் செய்து விடாதீர்கள்! நீங்கள் போடும் கடலையைத் தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

*Find Your Kind, Dont Kill Your Kind - Orkut Team!


பிரபல காவல் துறை DCP, தடய அறிவியல் நிபுணர், Dr. கப்பி நிலவன் ராஜ் அவர்களைத் தேடிச் சென்னைக்கு வருகிறார்கள் சுரேஷூம், சுரேஷ் ராகவனும். உலகத் தரம் வாய்ந்த பல சிக்கலான கிரிமினல் கேஸ்களில் முடிச்சு அவிழ்க்கும் அனுபவம் வாய்ந்தவர் Dr. கப்பி நிலவன் ராஜ்.

இது குறித்துப் பல புத்தகங்களையும் பதிவாக்கங்களையும் பதிப்பித்துள்ளார்.
அண்மையில் நடந்த பாரீஸ் ஹில்டன் வழக்கில், மைக்ரோ சிப் குற்றத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து, ஜீட்டா ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

"வாங்க சுரேஷ் ராகவன்! சென்னைக்கு எப்போ வந்தீங்க? தடய அறிவியல் துறைல ஏதோ பரிசோதனை பண்ணனும்-னு சொன்னீங்களாமே? இன்னிக்கு மைலாப்பூர் கோயில்ல சி.எம் வராங்க! எனக்கு அங்க ட்யூட்டி இருக்கு! வாங்க அப்படியே பேசிக்கிட்டே போவோம்! சரி யாரு இவரு உங்க கூட? டிப்பார்ட்மென்டா? மஃப்டியில் வந்துருக்காரா?"

"இல்ல சார்! இவன் என் நண்பன், பேரு சுரேஷ்! அமெரிக்காவுல இருந்து வந்திருக்கான்! அந்த ஆம்பல்-ங்கிற பொண்ணை இவன் ஏர்போர்ட்டில் பார்த்து இருக்கான் சார்!"

"ஏன்யா! கேஸ் பேசும் போது, இப்படிக் கண்டவங்களையும் கூட்டிகிட்டு வரியே! உனக்கு ஏதாச்சும்...."

"சார், இவன் உதவியும் கேஸ்-ல தேவைப்படலாம் சார்! அந்த ஆம்பல் பொண்ணை இவன் ஆர்க்குட்லயும் பாத்திருக்கான்! நேர்லயும் பாத்திருக்கான் சார்! அதான்..."

"சரி...அப்படியே ஏதாச்சும் கேட்கணும்னா தனியாக் கூப்பிட்டு விசாரிச்சிக்குவோம்! இனிமேல் இப்படிச் செய்யாதீங்க ராகவன்!"

"சாரி சார்!"

"பரவாயில்லை விடுங்க!
சார்.....அமெரிக்கா சுரேஷ் சார், பொண்ணுங்களை ஆர்க்குட்ல, நேர்ல-ன்னு பாத்துக்குட்டே இருக்குறது தான் உங்க ஹாபியா? ஹிஹி, கோச்சிக்காதீங்க! சும்மாச் சீண்டினேன்!
If you dont mind, நீங்க கொஞ்சம் கோயிலைச் சுத்திப் பாத்துக்கிட்டு இருங்களேன்!
சி.எம் வர டைம்ல கெடுபிடி ஜாஸ்தியா இருக்கும்! இந்தாங்க விஐபி பாஸ்!
உங்களை அரை மணி நேரத்தில் இதே இடத்தில் சந்திக்கிறோம்! தப்பா எடுத்துக்காதீங்க!

நீங்க சொல்லுங்க ராகவன். அந்த ப்ரொபசர் பத்தி ஏதோ சொல்ல வந்தீங்க இல்ல?"


"கப்பி சார், எனக்கு என்னமோ எங்க நண்பன் கார்த்திக் சுரேஷ் சாகவில்லை-ன்னு தான் தோணுது! அவங்க அப்பா அந்தத் தற்கொலையைப் போலீசில் கூடச் சொல்லலை! அவன் எழுதி வச்ச லெட்டரைப் பென்சில் தூள் போட்டுப் பார்த்த பிறகு எல்லாமே ஒரே மர்மமா இருக்கு சார்"

"ஸோ, உங்களுக்கு அந்தப் பையனோட அப்பா, ப்ரொபசர் பிரபு மேல சந்தேகம்-னு சொல்லறீங்க, இல்லையா?"

"இருக்கலாம் சார். ஆனா அது கூடவே இந்த ஆம்பல் என்கிற சிறுமி, யாரோ ஒரு பெண்ணின் கொலை, ஆட்டாப்ஸி ரிப்போர்ட்டில் ஆறு விரல், போதாக்குறைக்கு இந்த சுரேஷ் என்கிற மேஜிக்கல் நேம், பென்சில் தூள் போட்டுக் கண்டுபுடிச்ச கார்த்திக் சுரேஷ் நோட் - இப்படி ஒரே குழப்பமா இருக்கு சார்! அதான் இத்தனையும் கனெக்ட் பண்ண உங்களைத் தேடி வந்திருக்கேன்"

"ம்ம்ம்ம்ம்! சரி, நீங்களா வந்து மாட்டிக்கறீங்க! விதி வலியது! நான் என்னத்த சொல்ல? உங்க பேர் கூட சுரேஷ் தான் இல்ல?"

"சாஆஆஆர்"

"அட, சும்மா சொன்னேங்க! கேஸ் டென்சன்-ல இருக்கீங்க போல! கவலைப்படாதீங்க ராகவன்! ஒரு கை பாத்துறலாம்! நான் முன்பே சொன்னபடி ஆர்க்குட்-ல மெசேஜ் கொடுத்தாச்சு தானே?"

"கொடுத்தாச்சு சார்! அவிங்களும் போட்டுட்டாங்க"

"குட் ஜாப்! சுரேஷ்-ன்னு பேர் உள்ள பசங்க, யார் யார் எல்லாம் இப்ப ஆர்க்குட்-ல ஃபோட்டோக்களை மாத்துறாங்க, ஃப்ரொபைலை மாத்துறாங்க-ன்னு ஒரு கண்ணு வச்சிகிட்டே இருங்க!
அப்படியே அந்தப் பசங்களுக்கு அதிகமா ஸ்கிராப் செஞ்ச பொண்ணுங்களை எல்லாம் தனியா கட்டம் கட்டுங்க! விசாரணைக்கு உதவியா இருக்கும்! இது பற்றி எனக்கு ஒரு டெய்லி ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லுங்க!"


"ஓக்கே சார்! அப்பறம் ஒரு விஷயம்! என்ன கோயிலுக்கு எல்லாம் திடீர்னு போக ஆரம்பிச்சிட்டீங்க? இன்னிக்கி என்ன விசேசம்? சி.எம் எல்லாம் வராங்க?"

"அட அதை ஏன் கேக்கறீங்க ராகவன்!
நம்ம ஜனங்க அறுநூறு வருசத்துக்கு முன்னமே எப்படி ஹாரி பாட்டர் ரேஞ்சுக்கு ரவுசு வுட்டுருக்காங்க பாருங்க! யாரோ ஒரு சின்ன பொண்ணாம், பூம்பாவை-ன்னு பேரு! உங்க ஆம்பல் மாதிரி-ன்னு வச்சுகுங்களேன்!

பூம்பாவை சின்ன வயசுலயே செத்துப் போச்சு போல! அது சாம்பலைக் குடத்தில் போட்டு வச்சாராம் அவிங்க அப்பா!
யாரோ சம்பந்தராமே! தமிழ்ப் பாட்டு எல்லாம் பாடறவரு!
அவரு இங்கன மைலாப்பூர் வந்த போது, ஏதோ ஒரு தமிழ் மந்திரம் பாடினாராம்! சாம்பல்-ல இருந்து, பூம்பாவை டக்குன்னு உயிரோடு எழுந்துக்குச்சாம்!

அதை வருசா வருசம் கொண்டாடுறாங்க போல! இந்த வருசம் சி.எம் வந்துட்டாங்க! அதான் நானும் வந்துட்டேன்"

"நாத்திகர் ஆனாலும் இந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் அல்வாத் துண்டு போல புட்டு புட்டு வைக்கறீங்களே சார்! செகுவேரா ரேஞ்சுக்கும் பேசறீங்க! செவ்வா தோஷம் ரேஞ்சுக்கும் பேசறீங்க! யூ ஆர் ரியலி கிரேட் கப்பி சார்!"

"ராகவன், என்னைக் காக்கா புடிக்கறதுக்குப் பதிலா, கேஸ்-ல துப்பைப் புடிங்க! சீக்கிரம் உருப்படுவீங்க"


கெடுபிடிகள் கோவிலுக்குள் அதிகமாக, சிகப்புச் சுழல் விளக்குகள் சுற்ற ஆரம்பிக்க, மக்கள் எல்லாரும் ஒரு ஓரமாக ஒதுக்கப்பட.....
அதோ சி.எம் வந்து விட்டார்.

அதிகாரிகள் எல்லாரும் அடுத்த கொஞ்ச நேரத்துக்குக் கட்சித் தலைகளாக மாறி விட்டனர். சி.எம் சகல மரியாதைகளுடன் சன்னிதிக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார். அவர் போகும் வழியில் சல்யூட் வைக்கும் DCPயைக் காணத் தவறவில்லை!

"ஹலோ மிஸ்டர் கப்பி நிலவன் ராஜ்! அது என்ன உங்க பேரே ஸ்டீபென் ராஜ் மாதிரி சினிமா ஸ்டைலில் இருக்குதே?
(கப்பி என்றுமில்லாத அதிசயமா அசடு வழிகிறார்...)

நானே உங்களை அழைத்து, வாழ்த்து சொல்லணும்-னு இருந்தேன் மிஸ்டர்! உங்கள் பாரீஸ் ஹில்டன் சாதனைக்கு வாழ்த்துக்கள்!
அடுத்த வாரம் என்னை கோட்டை அலுவலகத்தில் வந்து பாருங்க, ப்ரைவேட் அசென்மென்ட் ஒன்னு உங்களுக்கு வச்சிருக்கேன்!"

கப்பி, ஆமோதிப்பதற்கு அறிகுறியாக விறைப்பாக மீண்டும் ஒரு சல்யூட் வைக்க...அனைவரும் உள்ளே சென்று விட்டார்கள்.
வெளியில் ஹாரி பாட்டர் உற்சவம்!
கொஞ்சம் கொஞ்சமாக சாம்பல் குடத்தில் இருந்து, பூம்பாவை உயிர் பெற்றுக் கொண்டே இருந்தாள்! கதகத என்று மக்கள் கூட்டம்! ஒரே சத்தம்!

"மல்லாரி" என்னும் கம்பீரமான ஸ்டைலில் நாதசுர வாசிப்பு பிச்சிக்கிட்டுப் போகுது! நடனம் ஆடிக்கிட்டே தூக்கித் தூக்கி வருகிறார்கள்! தீப்பந்தங்கள் இரு பக்கமும் தகதகன்னு எரியுது! விசிறிகள் வீசி வீசி ஆடுகிறார்கள்!
இவ்வளவு களேபரத்திலும் DCPஇன் கண் அந்தச் சுரேஷை மட்டும், பருந்து போலப் பார்த்துக் கொண்டே இருந்தது!

திடீர் என்று சுரேஷ் அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான், DCP மற்றும் ராகவன் இருக்கும் இடத்தை நோக்கி!

"டேய் ராகவா! அவளே தான்! அவளே தான்!
அதோ நிக்குறா பாரு! பச்சைப் பட்டுப் பாவாடை! அவ தாண்டா ஆம்பல்!"

"வாட்? என்னடா சொல்லுற சுரேஷ்? ஆர் யூ ஷ்யூர்?"

"டேய், எனக்கு நல்லாத் தெரியும்-டா! சார் கிட்ட சொன்னியா ஆம்பல் பத்தி?
கப்பி சார், அந்தப் பொண்ணு தான் சார் ஆம்பல்!"

கப்பி: "கான்ஸ்டபிள், உடனே அங்க போங்க! அந்தப் பொண்ணு-கூட யாரோ இருக்காங்க பாருங்க! ரெண்டு பேரையும் இங்க கூட்டிக்கிட்டு வாங்க! சின்ன விசாரணை-ன்னு சொல்லுங்க!"

சுரேஷ்: "சார், என்ன இது? என்ன பண்றீங்க நீங்க?"

கப்பி: "இன்ஸ்பெக்டர், இவர் கையில் விலங்கு மாட்டுங்க!
மிஸ்டர் அமெரிக்கா சுரேஷ்! யூ ஆர் அண்டர் அரெஸ்ட்!"

ராகவன்: "சார்...அவன்......"

கப்பி (கள்ளச் சிரிப்புடன்):
"பூம்பாவை விழாவில் பூம்பாவை உயிர் பெற்றாள்!
பூம்பாவாய் - ஆம்பல்! ஆம்பல்!"

(தொடரும்...)


* சிங்கம் Single-ஆவும் வரும் , Married-ஆவும் வரும் என்ற நியூட்டன்ஸ் ஃபோர்த் லாவைக் கண்டுபிடித்த புரட்சிப் பதிவர்,
* காதல் கதைகளின் ஏகபோக சாகுபடியாளர்,
* "சாகு"படி செய்யும் போதே, ஹீரோயின்களை "சாகும்"படியும் செய்பவர்,
* சங்கத்தின் நிரந்தரச் சிங்கம்
- ஆசைத் தம்பி வெட்டிப்பயலை அடுத்த ரிவர்ஸ் கியர் போடுமாறு அன்புடன் அழைக்கிறேன்!

ஆம்பலில் இதுவரை...
சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்
வெட்டி எழுதிய ஒன்பதாம் ஆம்பல்
KRS எழுதிய பத்தாம் ஆம்பல்

பெனாத்தல் சுரேஷ் எழுதிய பதினோராம் ஆம்பல்

ரிவர்ஸ் கியரில்....
-10, KRS
Read more »

Monday, February 18, 2008

ஒரு பெண் மனசு, ஆண் மனசு, ஆழ்வார் மனசு!

"என்னாங்க குழந்தையைக் கொஞ்ச நேரம் பாத்துக்குங்களேன்! வீல் வீல்-ன்னு அழுவறான் பாருங்க!"

"பசியா இருக்கும். வந்து பால் குடும்மா. இதப் போயி என் கிட்டச் சொன்னா நான் என்ன பண்ண முடியும்?"

"அட, இப்ப தாங்க கொடுத்தேன்! அரை மணி கூட ஆவலை! தூக்கத்துக்கு அழுவறான்! தெரியலை உங்களுக்கு?"

"ஆமா, வீல் வீல்-னு அழுவாம, சக்கரம்-சக்கரம்-ன்னா அழுவும் குழந்தை? என்ன தான் நீ பெருமாள் பக்தையா இருக்கலாம்! ஆனா இதெல்லாம் டூ மச் டீ ராசாத்தி!"

"இந்தக் குசும்பை எல்லாம் உங்க Blogல மட்டும் வச்சிக்குங்க! அங்க தான் உங்க சேட்டைக்கு எல்லாம் ஹிஹின்னு சிரிக்கற கூட்டம் இருக்கு!
அடுக்களையில் உங்களுக்குத் தானே மசால் வடை சுட்டுகிட்டு இருக்கேன்! ச்சே போதாக் குறைக்கு இந்த Fire அலாரம் வேற!"

"உம்ம்ம்ம்ம்"

"என்னாங்க...அப்படி என்ன தான் இருக்கோ அந்தப் பதிவுல! கொஞ்ச நேரம் குழந்தையைப் பாட்டு பாடித் தான் தூங்க வையுங்களேன். அதுக்குக் கொஞ்சம் வாயசைச்சிப் பாடினாப் போதும். தூங்கிடும் அந்தப் பையன்! தாலாட்டு பாடினாக் கொறைஞ்சாப் போயிடுவீங்க?"

"ஆம்பிளைங்க தாலாட்டு பாடறதா? அடிப்பாவி! குழந்தை வீல் வீல்-ன்னு அழுவறதை நிறுத்திட்டு வேல் வேல்-னு என்னைப் பொளந்தாலும் பொளந்துடும், என் அதி அற்புதக் குரலைக் கேட்டு! :-)


ஒரு ஆண் தன் குழந்தையிடம் எந்த அளவுக்கு அன்பில் உருக முடியும்-னு நினைக்கறீங்க மக்களே? அதுவும் வெளிப்படையாக உருக முடியுமா?

ஒரு பெண்ணின் மனசு ஒரு பெண்ணுக்குத் தான் தெரியும்-னு சொல்லுவாய்ங்க!
விதி வசத்தால் வளர்ப்புத் தாயிடம் வளர்கிறது ஒரு குழந்தை. பெற்ற தாய் அதைக் காண மாட்டாமல் ஏங்கி ஏங்கிச் சாகிறாள். இதை ஒரு ஆண் சொல்லிச் சொல்லி உருகுகிறான்!
ஒரு பெண்ணின் மனசு ஒரு ஆணுக்குத் தான் தெரியும்-னு சொல்லலாமா?
யார் இந்த ஆண்மகன்-னு கேட்கறீங்களா? அவர் பல போர்களைக் கண்டு வென்ற ஒரு பேரரசர்! அஞ்சாத சிங்கம் என் காளை!

ஆகா...இருக்கவே முடியாது! போர்க்களத்தில் வேல் பிடித்து தழும்பேறிய கையா, வெண்மல்லிப் பூவைத் தொடுக்கும்?

ஹிஹி! தொடுத்ததே! மல்லிகைப் பூவை அல்லை! அதை விட மென்மையான மழலைப் பாட்டை! - அந்த மழலை பாடிய வீரன் பெயர் குலசேகரன்.
கொல்லி நாட்டு அரசன். சேர மன்னன். இன்றைய மலையாள தேசம்! வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவை இவன் ஆட்சிக்கு உட்பட்டவை!

அரசனாய் இருந்து பல வெற்றிகளைக் கண்டவன், திடீர் என்று ஆழ்வாராய் மாறி விட்டான்(ர்)! கொல்லி நகர் கோழியர் கோன், குலசேகராழ்வார் ஆகி விட்டார்!
இன்று அவர் தம் பிறந்த நாள் - Feb 18, 2008! (திருநட்சத்திரம் - மாசியில் புனர்பூசம்) ; வாங்க அவர் "அம்மாவாகிய நான்" கதையைக் கொஞ்சம் பார்க்கலாம்!



கண்ணனைப் பெற்ற தேவகி, அதற்கு மேல் ஒன்றுமே காணவில்லை!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்கிறான். பலரும் கண்ணன் வளர்ச்சியைப் பல விதமாய் வந்து சொல்கிறார்கள்.
கோல மயில் கொண்டை, குறும்புக் கண்கள், கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பு,
இட்டும் தொட்டும் கவ்வியும், நெய்யுடை உணவை மெய்ப்பட விதிர்த்தும்,
அவனோ சிறு கை நீட்டிக் குறு குறு நடந்து வரும் அழகு! இவளுக்கோ குறு குறு என்று வருவது அழுகை!

தன் பிள்ளையை ஊரார் எல்லாம் வர்ணிக்க, தன் கண்களால் தான் காண முடியாத கொடுமை எந்தவொரு தாய்க்கும் தகப்பனுக்கும் வரவே கூடாது!
விதி வசத்தால் கொடுத்து விட்டாள்! மோசமானவர்களிடம் சிக்கிக் கொண்டு வளரவில்லை அந்தக் குழந்தை! யசோதை அங்கு நன்றாகத் தான் வளர்க்கிறாள்! இருந்தாலும் யசோதை மேல் தேவகிக்குக் கோபம் கோபமாய் வருகிறது! பொறாமை பொத்துக் கொண்டு வருகிறது! :-)
எதற்காம்?
கண்ணன் வாயில் விரலை வைத்து, ஜொள்ளு விட்டுக் கொண்டு, "கெக்கே பிக்கே" என்று உளறும் உளறலை இவள் கேட்க முடியவில்லையாம்! ஆனால் யசோதை கேட்கிறாளே என்று பொறாமை! ஆனால் அப்போது கூட "பாவி மக அந்த யசோதை", "கடங்காரி எனக்குப் போட்டியா வந்தா" என்றெல்லாம் வையவில்லை! தெய்வ நங்க யசோதை-ன்னு திட்டுகிறாள் தேவகி! :-)

விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே

உண்மையிலேயே தேவகி யசோதையைத் திட்டினாளோ இல்லையோ, ஒரு ஆண்பிள்ளை இவ்வளவு நோட் பண்ணிப் பாட முடிகிறது என்றால், எப்படிப்பட்ட தாய் மனம் பாருங்கள் ஆழ்வாருக்கு!

ஆலைநீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயுத் தடங் கண்ணினன் தாலோ ...
ஏலவார் குழல் என்மகன் தாலோ

என்று தாலேலோ பாடி

எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோலமாம் குல சேகரன் சொன்ன
என்று முடிக்கிறார்.


இப்படிக் கண்ணனில் தொடங்கிய குலசேகரர், பின்னாளில் இராமன் மேல் பேரன்பு பூண்டு விட்டார். பாசுரத்தில் முழு இராம கதையும் சொன்ன ஒரே ஆழ்வார் இவர் தான்! கம்பருக்கு முன்னோடி என்று கூட இவரைச் சொல்லலாம்!

ஒரு கட்டத்தில், இராவணன் சீதையைக் கவர்ந்து சென்று விட்டான்; இராமன் தாளாது அழும் கட்டம்! அதைக் கேட்ட மாத்திரத்தில் துடித்து எழுந்து, சேர நாட்டுப் படைகளை எல்லாம் இலங்கைக்குக் கிளம்ப ஆணை இட்டாராம்! ஹிஹி...அமைச்சர்கள் எல்லாரும், "மன்னவா, இராமாயணம் எப்போதோ முடிந்து விட்டது, நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது உபன்னியாசம் தான்", என்று சொல்லி உணர்ச்சி நிலையில் இருந்து இயல்பு நிலைக்குக் கூட்டி வருகிறார்கள்!
இப்படி ஒன்றிப் போய், தாயினும் மேலாகப் பரிந்தெடுத்து தாலாட்டுகிறார் இராமன் என்னும் திருக் குழந்தையை!
மன்னு புகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னிநன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ


என்னைப் பெத்த ராசா-ன்னு ஊரில் சொல்லுவார்கள்! "என்னுடைய இன்னமுதே" என்று ஒரே சொல்லில் குழைந்து விட்டார் பாருங்கள்!
இராவண வதத்தை, இரத்தக் களறியைச் சொன்னால் இராமன் என்னும் குழந்தை பயப்படுவானோ என்னமோ, அதனால் வெட்டினாய், குத்தினாய் என்று எல்லாம் பாடாமல், "சிந்துவித்தாய்" என்று லைட்டாகச் சொல்லி நிறுத்தி விடுகிறார் தாலாட்டில்!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடிவணங்க அரங்க நகர்த் துயின்றவனே
காவிரி நல்நதி பாயும் கண்ணபுரத்தென் கருமணியே
ஏவரி வெஞ் சிலை வலவா இராகவனே தாலேலோ


இறைவனுக்குத் தேவர், அசுரர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது! யாவருக்கும் பொதுவானவன்! குணத்தை மட்டுமே கண்டு ஆராய்ந்து அருளுபவன்! அதனால் தான் "தேவரையும் அசுரரையும்" படைத்தவனே என்று சேர்த்தே பாடித் தாலாட்டுகிறார்!
முழுத் தாலாட்டுப் பாடலும் கேட்கணுமா? இங்கே!


குலசேகர ஆழ்வார் திருவரசு


பெருமாளிடம் மட்டும் அன்பு செலுத்தாது, அடியார் கூட்டத்துடன் கூட அன்பு செலுத்தி வாழ்ந்து வந்தார் குலசேகரர்!
அடியாருடன் அவர் அதிக நேரம் செலவழிப்பதைக் கண்ட சபையினர் சில பேர் எரிச்சல் கொண்டனர். அடியார் கூட்டத்தை விரட்டி விட்டால் மன்னர் மறுபடியும் கேளிக்கைகளில் இறங்கி விடுவார் என்பது அவர்கள் கணக்கு.

உடனே அரச சபையில் ரத்னமாலை திருட்டுப் போனது. பக்த கோஷ்டியினர் தான் திருடினர் என்று பழி சுமத்தப்பட்டது. குலசேகரர் மிகவும் வருந்தினார். பரமனின் தூய அடியவர்கள் ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்!
"நானும் தானே அடியாருடன் அடியாராய் இருந்தேன்! நானும் திருடி இருக்கலாம் அல்லவா? அப்படிச் செய்திருந்தால் என்னைப் பாம்பு பிடுங்கட்டும்" என்று ஒரு குடத்தில் பாம்பை வைத்து அதற்குள் கையிட்டார். பாம்பு அவரைக் கடிக்கவில்லை. அடியார் அவமதிப்பும் ஒழிந்தது!

இதற்குப் பின் குலசேகரர் அரச பதவியைத் துறந்து விட்டார். இதற்குச் சரித்திரச் சான்றுகளும், சேக்கிழார் புராணத்தில் குறிப்புகளும் உள்ளன. தன் மகனுக்குப் பட்டம் கட்டி விட்டு அடியவர் கூட்டத்தில் இணைந்து விட்டார்; ஊர் ஊராகச் சென்று இறைத் தொண்டும் தமிழ்த் தொண்டும் செய்து, இறுதியில் திருவரங்கம் சென்றார். அங்கே இறுதி நாட்களைக் கழித்து, பரமபதம் அடைந்தார்!

இவர் பாடியதைக் குலசேகரன் திருமொழி என்று சொல்லவில்லை! "பெருமாள்" திருமொழி என்றே சிறப்பித்துப் பாடுகிறார்கள்!



இவ்வளவு சொல்லிட்டு முக்கியமான ஒன்னை மட்டும் சொல்லலைன்னா எப்படி?
இன்றைக்கு பெருமாள் இருக்கும் இடம் எல்லாம், இவரும் சேர்ந்தே இருக்குமாறு நீங்காத இடம் ஒன்றை இவர் பிடித்து விட்டார்! - Permanent Resident! :-) எப்படித் தெரியுமா?

வேங்கடவா! உன் கோயிலில் அரை நிமிடத் தரிசனத்துக்குத் தானே இவ்வளவு கூட்டம், இவ்வளவு தள்ளு முள்ளு! இன்னொரு முறை பார்க்க மாட்டோமா, என்று எக்கி எக்கி பார்ப்பது! எதுக்கு இவ்ளோ கஷ்டம்?
உன் கருவறைக்கு முன்னால் வாசற்படியாய்க் கிடந்து விடுகிறேன்!
அப்போது யார் என்னைத் தள்ள முடியும்? யார் என்னை "ஜருகண்டி" சொல்ல முடியும்?
படியாய்க் கிடந்து, நாளெல்லாம் உன் பவள வாயைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்! திரை போட்டாலும் சரி, நடை சாத்தினாலும் சரி, என்றுமே என் கண்ணை உன் மீது இருந்து எடுக்கவே முடியாது!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே


எவ்வளவு காதல் பாருங்கள்! எவ்வளவு பரிவு பாருங்கள்!
இன்றும் பெருமாள் கருவறை வாசப்படிக்கு "குலசேகரன் படி" என்று தான் பெயர்! ஆரத்தி இந்த வாசற்படிக்கும் காட்டப்படுகிறது! திருமலை மட்டும் இல்லை! உலகில் எந்தவொரு பெருமாள் கோயில் ஆனாலும், கருவறை வாசப்படி குலசேகரன் படி தான்!

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்! ஒரு மரமானாலும் பழமுதிர் சோலையில் மரமாவேன் என்ற கண்ணதாசன் பாட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? குலசேகரன் பாட்டில் இருந்து தான்! (முழுப்பாடலும் இங்கே!)

வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே = வேங்கடக் குளத்தில் கொக்காய் பிறக்க மாட்டேனா!
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே = வேங்கடச் சுனையில் ஒரு மீனாய் தவழ மாட்டேனா!

வேங்கடத்துச் செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே = வேங்கட மலையில் செண்பக மரமாய் நிற்க மாட்டேனா!
மலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே = வேங்கட மலையிலே கொடிக் கம்பமாய் நிற்க மாட்டேனா!

கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே = வேங்கடத்தில் ஒரு ஆறாகப் பாய மாட்டேனா!
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே = அவன் வாசல் படியாய் கிடந்து, தித்தித்து இருக்கும் பவள வாய் சேவித்து இருக்க மாட்டேனா!

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே = எம்பெருமான் பொன் மலை மேல் ஏதாச்சும் ஒன்னாய் ஆக மாட்டேனா!
குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!
Read more »

Sunday, February 17, 2008

இரத்த தானம் செய்யலாம்! Bone Marrow Donation செய்யலாமா? - 1

அண்மையில் Help Gayathri - Leukemia-ன்னு ஒரு பதிவை நண்பர் கப்பி சுவரொட்டியில் போட்டிருந்தாரு!
அதுல காயத்ரி என்னும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய்-இருபத்து எட்டு வயதுப் பெண், எலும்பு மஜ்ஜை தானம் தேடி அலையும் செய்தி வந்துச்சி.

இரத்த தானம்-ங்கிறது இப்பெல்லாம் சர்வ சாதாரணமா ஆகிப் போச்சு!
ஆனா அது என்னாங்க எலும்பு மஜ்ஜை தானம்?
பேரைக் கேட்டாலே பயமா இருக்கே! = எலும்பு/ மஜ்ஜை
தானம் கொடுக்கறேன் பேர்வழி-ன்னு ஏதாச்சும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டா?...

Okay; அதாச்சும் என்னான்னா...
பச்சைக் குழந்தைங்க ஒன்னுமே பண்ணாம, கஷ்டப்படுறத பாத்தா மட்டும் தாங்க முடியறதில்லீங்க!
கோவம் கோவமா வருது! வீட்டுக்கு வந்து "போய்யா...நீயும் உன் கருணையும்"-ன்னு சண்டை எல்லாம் கூட போட்டிருக்கேன் முருகன் கிட்ட!

சினிமாவிலும் கதைகளிலும் Blood Cancerஐப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போச்சு நமக்கு! அங்க காட்டுறதெல்லாம் வாழ்வே மாயம் கமலஹாசன் ஸ்டைல்ல மட்டுமே வரும்!
ஆனால், சிறு குழந்தைகள் இந்த நோயால் படும் அவஸ்தை?
இதுக்கு, இந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றாய் வந்திருப்பது தான் Bone Marrow என்னும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை!

நாங்கள் பங்கு கொள்ளும் சமூக நிலையத்தின் (Community Center) சார்பாக, விழிப்புணர்வு முகாம் ஒன்னு அண்மையில் நடந்துச்சு!
புது ஜெர்சி, நியூ பிரன்ஸ்விக் நகரத்து St. Peters மருத்துவமனையில் நடந்த இந்த முகாமில், ஒரு volunteerஆ (தன்னார்வலர்...தமிழ்-ல சரி தானே?) கலந்துகிட்டேன்!

அப்போது தான் இரத்த தானம் போல் இந்தத் தானம் பற்றியும் பல விசயங்கள் தெரிய வந்துச்சி!
சரி உங்க கிட்டு வந்து புலம்பாம வேறு யாரு கிட்டப் போயி புலம்பப் போறேன்?

அதான் வழக்கம் போல, உங்க கிட்ட கொஞ்சம் சொன்னா,
நீங்க இன்னொருத்தர் கிட்ட பேச்சுவாக்குல சொல்லி, அப்படியே கொஞ்சமாச்சும் பரவாதா என்ன?

தானம் தராமல் வேறு வழிகளில் கூட உதவ முடியும்!
இப்போதே தரணும் என்பது கூட இல்லை! பெயரைப் பதிந்து கொண்டால் கூடப் போதும்!
இரண்டு தொடராப் போடுறேன். படிச்சித் தான் பாருங்களேன்!


இரத்த தானம் - அதன் அருமை பெருமை இப்போ எல்லாருக்கும் தெரியும்! தூய்மையான முறைகளில் இரத்தம் கொடுக்க இப்போதெல்லாம் யாருக்கும் எந்தப் பயமும் இருக்குறதில்ல! 

வலியப் போயி இரத்தம் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் நாட்டில் இருப்பதை நினைச்சாப் பெருமையாத் தான் இருக்கு! இரத்த தானத்துக்குன்னே விதம் விதமா நெட்வொர்க் இருக்கு!
ஆனா இது போல ஒரு விழிப்புணர்வு எலும்பு மஜ்ஜை தானத்துக்கு இருக்கான்னு கேட்டா...இல்லைன்னு தான் சொல்லணும்! 

இரத்த தானம் வந்த புதிதில், மக்களுக்கு என்னவெல்லாம் பயம், தயக்கம் இருந்துச்சோ, 
அதே மாதிரி புதுசா வந்த இந்த எலும்பு மஜ்ஜை தானத்துக்கும் இருக்கு!

இந்த எலும்பு மஜ்ஜைத் தானம் எப்படின்னா,
இரத்த தானத்தில் இரத்த வகை (Blood Group) மாதிரி அவ்ளோ ஈசியா எல்லாம் இங்க செட் ஆகாதுங்க! 
ஒரே குடும்ப முறை, நெருங்கிய சொந்தம், ஒரே நாடு/இனம்-னு இப்படிச் செட் ஆவுற விஷயங்கள் ஏகப்பட்டது இருக்கு இதுல!

அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுக்குன்னே ஒரு பெரிய தகவற் களஞ்சியம் (Database) வச்சி நடத்துறாங்க! இந்தியாவில் இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்ச்சி வரத் தொடங்கி இருக்கு!

இந்தத் தானத்தைத் தேடுற இந்தியர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லீங்க! அதுவும் இப்ப அண்மைக் காலங்களில் இந்தியக் குழந்தைகளும் இதனால் அதிகம் பாதிக்கப்படுதுங்க! 
இந்தச் சின்னக் குழந்தைகளுக்காகத் தேடித் தேடி அவங்க அம்மா-அப்பா நடக்கும் நடை இருக்கே! அப்பப்பா!!

இந்தக் காலத்துல ஒரே குழந்தையோட கூட நிறுத்திக்கறாங்க! 
அதுனால சகோதர சகோதரிகள் வழியாகவோ, இல்லை நெருங்கிய குடும்ப உறவு மூலமாகவோ தானம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டே வருது! 
அதுனால வெளியில் தேட வேண்டிய கட்டாயம்! சரி...எங்கே-ன்னு போய் தேடுவது?
டாக்டர்கள் பொதுவா சினிமாவில் வருவது போல், அமெரிக்கா-ன்னு கைகாட்டுவாங்க! 
ஆனா இங்கிட்டு அல்லாடித் திரிஞ்சி வந்து, நம்ம இனத்துக்கு ஒத்து வரா மாதிரி, மரபியல் (genetics) சார்ந்த ஒரு தானம் அளிப்பவரைத் தேடிக் கண்டு பிடிப்பதற்குள்...போதும் போதும் என்று ஆகி விடும்!

எத்தனை தான் பணம் வைத்திருக்கட்டுமே! 
சிகிச்சையும் முழுசாத் துவங்க முடியாமல், தானம் கிடைக்கும் இடம் எது-ன்னு கூட தெரியாமல், பிஞ்சு உயிர்கள் அல்லாடும் சிலவற்றைப் பார்த்த போது.....இறைவா!



* இவிங்களுக்கு என்ன தான் தேவை?
நம் முதுகின் பின்னால் இருக்கும் பெல்விக் எலும்புகளில் இருந்து கொஞ்சூண்டு திரவங்கள். 
இந்தத் திரவம் தான் Liquid Marrow - எலும்பு மஜ்ஜை!
மட்டன் சாப்பிடும் போது சில பேர் உறிஞ்சுவார்களே! இல்லீன்னா முருங்கைக் காய் உறிஞ்சுவோம் இல்லியா! அது போலன்னு வச்சிக்குங்களேன்!

* எதுக்கு இதெல்லாம் இவிங்களுக்குத் தேவைப்படுது?உயிர் அச்சுறுத்தும் சில நோய்கள் - Leukemia, Lymphoma, குழந்தைகள் கேன்சர் போன்றவற்றிற்கு இந்த எலும்பு மஜ்ஜையோ இல்லை கொடி இரத்தமோ (Cord Blood) சிகிச்சைக்குத் (Transplant) தேவைப்படுகிறது!

* இது தவிர வேற சிகிச்சையே இல்லையா?
கீமோதெரப்பி, ரேடியேஷன்-ன்னு சில சிகிச்சைகள் இருந்தாலும்...பல ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த எலும்பு மஜ்ஜை சிகிச்சையை நிரந்தரத் தீர்வாக் கண்டு பிடிச்சிருக்காங்க!
அதுவும் சிறு குழந்தைகளை, ரேடியேஷன் போன்ற பழைய வலி நிறைந்த சிகிச்சைக்கு உட்படுத்திக் காலத்தை வீணடிப்பதை விட, இது இன்னும் நல்ல தீர்வாக உள்ளது!

* இதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்?
1. நம் எலும்பு மஜ்ஜையைத் தேவைப்பட்டால் கொடுக்கலாம்-ன்னு எண்ணம் வந்தா போதும்!
2. உடனே கொடுக்கணும்-னு இல்லை! பெயரைப் பதிஞ்சி வச்சிக்கிட்டா போதும்! எப்போது தேவையோ அப்போது அவர்களே கூப்பிடுவார்கள்!
3. அதுவும் அபூர்வ இரத்த வகை உள்ளவர்கள் (Rare blood group) செய்தால் இன்னும் புண்ணியமாப் போகும்!
4. தெரியாதவங்களுக்கு எடுத்துச் சொல்லலாம். உங்கள் நிறுவன மனிதவளத் துறையிடம் (HR) அறிமுகப்படுத்தலாம்!
5. முற்றிலும் நம் விருப்பம் தான்! பெயரைப் பதிந்த பின், நமக்குப் பிடிக்கலைன்னா முடிவை மாத்திக்கலாம்! எதுவும் கட்டாயம் இல்லை!

* யார் வேண்டுமானாலும் கொடுக்கலாமா?
1. 18-60 வயதுக்குள் யார் வேண்டுமானுலும் தரலாம்!
2. எச்.ஐ.வி மற்றும் 18 வயதுக்கு மேல் மஞ்சள் காமாலை வந்தவர்கள் தானம் தர முடியாது.
3. போதைப் பொருள் பழகியோர், வரம்பற்ற உடலுறவு கொண்டவர்கள் - இவர்கள் மட்டும் தானம் தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

* எலும்பு, மஜ்ஜை...பேரே ரொம்ப பயமா இருக்கேப்பா!ஹிஹி...பயப்படாதீங்க! 
உங்க எலும்பை ஒடைச்சி இன்னொருத்தருக்குப் பொருத்த எல்லாம் மாட்டாங்க! 
முட்டிக்கி முட்டி தட்டறது எல்லாம் இங்கிட்டு கிடையாது! :-) பாருங்க எப்படிக் காபி குடிச்சிக் கிட்டே கொடுக்கறாரு மனுசன்!
1. இது பெரும்பாலும் outpatient முறை தான். 4-6 மணி நேரத்துக்கு மேல் ஆகாது!
2. இரத்த தானத்துக்கும் இதுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இதுக்கு லோக்கல் மயக்க மருந்து (Local Anaesthesia) கொடுப்பது தான்! மத்தபடி ஒன்னும் பெருசா வித்தியாசம் இல்லை!

3. வலியோ, அபாயமோ கிடையாது! உங்களிடம் இருந்து பெறப்படும் 5% மஜ்ஜையே போதும் ஒரு உயிரைக் காப்பாற்ற!
4. தானம் கொடுத்த 4-6 வாரங்களில், உங்கள் உடம்பு, நீங்கள் கொடுத்த தானத்தை ஈடு கட்டி விடும்!

5. வெகு சிலருக்கு மட்டுமே தலைவலி, அசதி ஓரிரு நாள் இருக்கலாம்! ஆனால் இது மிகவும் கம்மி!
பிட்ஸ்பர்க் வேங்கடேஸ்வரர் ஆலயத்தில் Bone Marrow Drive செய்யும் சிறார்கள்

* சரி யோசிக்கிறேன்! ஆனா இதுக்கு எங்கிருந்து ஆரம்பிக்கறது? ஏதோ பெயரைப் பதிஞ்சி வச்சிக்கலாம்-னு சொன்னீங்களே! எங்கே?

முதலில் யோசிக்கறேன்-னு சொன்னீங்க பாருங்க! அதுக்கே நன்றி!

உலகில் மிகப் பெரிய - கொடையாளர்கள் தகவற் களஞ்சியம் - National Marrow Donor Program (NMDP) - Marrow.org
அமெரிக்காவை மையமாக வைத்துச் செயல்பட்டாலும், உலகெங்கும் மருத்துவர்கள் இதில் யாராச்சும் உதவுவோர் கிடைக்க மாட்டார்களா என்று முதலில் பார்க்கிறார்கள்.

ஆனால் அண்மையில் நம் இந்திய நாட்டவர்/வம்சா வளியினருக்கு என்றே ஒரு தனி தகவற் களஞ்சியம் தொடங்கப்பட்டுள்ளது!
என்னைக் கேட்டால், அதில் பதிந்து கொள்வது இன்னும் சிறப்பு! 
மரபியல் ஒப்பாக உள்ளவருக்குத் தானே உதவ முடியும்! இங்கு பதிந்தால் பெறுபவருக்கும் நன்மை! கொடுப்பவருக்கும் எளிது!
அந்தத் தளத்தின் பெயர் MatchPIA.org

***இங்கே நம் பெயரைப் பதிந்து கொள்ளலாம்! ***லட்சத்தில் ஒருவர் தான் தானத்துக்குத் தேறுகிறார்!
நீங்கள் அந்த உயிர் தரும் அபூர்வ கொடையாளியாகவும் இருக்கலாம்!
YOU could be that special life-giving person!
இவர்களின் திட்டம் இந்திய மரபியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்!
//The goal of USADR, is to build a donor registry of educated and committed donors, who will represent a concentration of genetics by different regions of India, resulting in a greater number of matches for South Asian patients. Once completed, this project may be deemed the Largest Genetic Journey undertaken in India//

என்னைக் கேட்டால்,
அயல் நாட்டில் தற்காலிகமாக வாழும் நம் போன்ற இளைஞர்/இளைஞிகள், இதற்கு முதலில் காலடி எடுத்து வைக்க நினைக்க வேண்டும்! நாம் வளர்ந்த தாய்நாட்டில், இன்று வளரும் குழந்தைகளுக்குச் செய்யும் மிகப் பெரிய கைம்மாறாக இது இருக்கும்!

கணிணித் துறையில் எத்தனையோ பேர் databaseகளில் வேலை பார்க்கிறோம். சாதாரணமாய் ஒரு query போட்டு ஒன்னுமே வரலை என்றாலே எப்படி வெறுப்பாய் இருக்கு! 
ஒரு உயிர் காக்க இவர்கள் தேடும் bone marrow queryக்கு, ஒன்றுமே கிட்டவில்லை என்றால் இவர்களின் அப்போதைய மனநிலை எப்படி இருக்கும்-னு கற்பனை செய்து பாருங்கள்!

குறைந்தபட்சம் இந்த Database-ஐ ஆவது நாம் நிரப்பலாம்!
அடுத்த பதிவில்...
* பெயரைப் பதிந்து கொண்டால் எப்படிக் கூப்பிடுவாங்க?
* இன்னாருக்கு/இந்த நாட்டவருக்கு மட்டும் தானம் அளிக்கிறேன் என்று சொல்லலாமா?
* எப்படி எடுப்பாங்க? பக்க விளைவுகள் ஏதாச்சும் இருக்குமா?
* இப்படித் தானம் கொடுத்தால் வீட்டில் திட்டு விழுமா? :-)
என்பதை எல்லாம் பார்த்து விட்டு முடிப்போம்!

உங்களுக்கு இந்தத் தானம் சம்பந்தமான கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் கேளுங்க! அடியேன் அறிந்த வரை சொல்கிறேன். எங்கள் இயக்கத்தில் மருத்துவரைக் கேட்டும் சொல்கிறேன்.
நம் பதிவர்கள் இடையே இருக்கும் VSK ஐயா உட்பட மருத்துவர்கள் பலரையும் நாம் கலந்து ஆலோசிக்கலாம்!

(இன்று குலசேகராழ்வார் பிறந்த நாள். நேரம் இருந்தால் தனிப் பதிவு இடுகிறேன். இல்லீன்னா, இதையே அவர் பதிவாகக் கருதிக் கொள்ளவும்)

References (உசாத்துணை):தானம் கொடுத்த நாள் அன்று ஸ்டீவனின் அனுபவங்கள்= http://bookreviewsandmore.ca/2007/07/bone-marrow-part-3-donation.html
தானம் கொடுக்கும் போது நடப்பவை என்ன?
Read more »

Thursday, February 14, 2008

புதிரா? புனிதமா?? - காதல்! (காதலர் தின ஸ்பெஷல்)

சொல்லிடலாமா? வேணாமா?
அடச்சே....லவ்வையா சொல்லப்போற? போட்டி முடிவைத் தானே சொல்லப்போற! அதுக்கு எதுக்கு பில்டப்பு? :-)

கீழே விடைகளை Bold செய்துள்ளேன்! தனியான விளக்கம்ஸ் பின்னூட்டத்தில்! நெறைய விளக்கத்தைக் கெக்கேபிக்குணி அக்காவே கொடுத்துட்டாங்க! என் வேலை மிச்சம்! நன்றிக்கோவ்! :-)
இதோ காதல் வெற்றியாளர்கள்: அட, அது என்னாங்க அது? காதல்-ல தான் பெரும்பாலும் பெண்களே ஜெயிக்கறாங்க! காதல் போட்டில கூடவா, அவங்களே ஜெயிப்பாங்க? ஹூம்ம்ம்ம்ம்ம்!

கெக்கேபிக்குணி = 10/10 = காதல் போட்டிப் பேரரசி (இனி வரலாற்றில் நீங்கள் கா.போ.பே என்றே வழங்கப்படுவீர்களாக! - 23ஆம் புலிகேசி இஷ்டைலில் படிக்கவும்)

அரைபிளேடு, அறிவன், நித்யா பாலாஜி, திராச, குமரன் = 9/10

தமிழ்ப் ப்ரியன், கப்பி பய, கீதா சாம்பசிவம் = 8/10

(இதுல Eligible Bachelor-ன்னு பார்த்தாக்கா, கப்பி பய மட்டும் தான்-னு நினைக்கிறேன்!
போட்டியில் வென்றது போலவே, காதல் உள்ளத்தையும் கவர்ந்து வெற்றி வாகை சூட, அவருக்கு ஸ்பெசலா வாழ்த்துச் சொல்லிடுங்க மக்களே!:-)


வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும், எல்லாருக்குமே காதல் தின வாழ்த்துக்கள்!
என்னாது பரிசா?
காதலை விட உயர்ந்த பரிசு வேற என்ன இருக்க முடியும்? இப்படிக் காதலி கிட்ட சொல்லிப் பாருங்களேன்! என்ன நடக்குதுன்னு பார்ப்போம்! :-)
சரி இந்த முறை புத்தகமாக் கொடுத்திடலாமா? காதலர்களுக்குப் புத்தகம் படிக்கவா நேரம் இருக்கும்?-அப்பிடின்னு கேட்கறீங்களா? அதுவுஞ் சரி தான்! Lord of The Rings - 3 பாகங்களும், படத்துடன் உள்ளடக்கிய இ-புத்தகம், இந்தாங்க! (13mb மக்கா, பொறுமை! பொறுமை!!)


காதலர் தினத்துக்கு என்னென்னமோ பதிவு போடத் திட்டம் போட்டு வச்சிருந்தேன்! நான்சென்ஸ்! ஆபீஸ்-ல இந்த நேரம் பார்த்தா இப்படி ஆணி, கடப்பாரை எல்லாம் ஒன்னாச் சேர்ந்து வரும்?
ஆனா எங்க அலுவலகத்தில் இன்னிக்கி காலையில் நடந்த ஒரு நல்ல விசயத்தைத் தமிழ் கூறும் பதிவுலகத்துக்குச் சொல்லியே ஆகணும்!....

காலையில் வழமை போல் ஆபீசுகுள்ள நொழைஞ்சி என் அறைக்குள் போகிறேன்! ஒரு பெண்ணரசி ஓடியே வந்து என்னைக் கட்டி அணைச்சுக்குறா(ங்க)!
திடுக்கிடும் (தித்திப்பான) இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.....
Hey Honey, Watz the matter-ன்னு கேட்கறேன்!
Dude, It's Valentines! It's the Day of Hugs!!-ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னா(ங்க)!
அய்யோ...சிரிக்கறாடா-ன்னு ஒரு படத்துல கவுண்டர் சொல்லுவாரே! ஹிஹி...வெளியே வந்து என் டீம் இருக்கும் இடத்தை எட்டிப் பாக்குறேன்...

குட்டிக் குட்டி ஹார்ட்ஸ் போட்ட தோரணங்களைக் க்யூபிக்கள் புல்லா ஒட்டி வச்சிருக்குதுங்க! ஆங்காங்கே கொஞ்சம் பெரிய ஹார்ட்ஸ்! பலூன்! கருடப் பொம்மை...ச்சே பழக்கம் போகுதாப் பாருங்க! கரடிப் பொம்மை! :-)

கேக் வெட்டச் சொன்னாங்க டீம் மக்கள்! எப்பவுமே மேலாளர் தானே வெட்டிக்கிட்டே இருப்பான்! வெட்டியோட ஃபிரெண்டு வேற! அவன் வெட்டாம இருப்பானா?
So for a change, let the youngest girl in the team cut the cake-ன்னு சொன்னேன்!
யாரிந்த தேவதை? யாரிந்த தேவதை?? - வந்தாங்கப்பா ஒரு தேவதை!
(வவாச காதல் மாதச் சிங்கம், பதிவர் ட்ரீம்ஸ்...எனக்கு வழிவிட்டுக் கொஞ்சம் தள்ளி நில்லுங்க ப்ளீஸ் :-)

தேவதை வந்தாங்க! கேக்கைக் கட்-டினாங்க! ஒரே கைத்தட்டல்! இன்னொரு தேவதை திடீர்-னு பாட்டுப் பாட ஆரம்பிச்சிட்டாங்க!
ஏதோ Bryan Adams - Look into my eyes! காதலர் தினப் பாட்டாம்!
அப்போ ஆரம்பிச்சுதுங்க இந்தக் கட்டிப் புடி வைத்தியம்!
ஆல் டீம் மெம்பர்ஸ் ஹக் எவிரிபடி! அப்படியே ஒரு ரவுண்டு வந்து, என் அறைக்குள் வந்து சேர அரை மணி நேரம் ஆயிடுச்சி! :-)

அந்தப் பொண்ணு சுமாராவே பாடுச்சி! இன்னும் சில மக்களும் அது கூட சேர்ந்துக்க, கச்சேரி களை கட்டிருச்சி! எனக்கு அந்தப் பாட்டின் வரிகள் ரொம்பப் பிடிச்சிப் போயி அப்படியே நின்னுட்டேன்! நீங்களும் கேளுங்க! பாருங்க, கிறங்குங்க மக்கா! :-)


Look into my eyes - you will see
What you mean to me
Search your heart - search your soul
And when you find me there you'll search no more

Don't tell me it's not worth tryin' for
You can't tell me it's not worth dyin' for
You know it's true
Everything I do - I do it for you




சரி....திட்டம் போட்டபடி வேற சில முக்கியமான பதிவுகள் தான் போட முடியலை! அதான் இருக்கவே இருக்குதே, புதிரா புனிதமா!
ஒரு காதல் - புதிரா புனிதமா போட்டா என்ன-ன்னு தோனிச்சி! இதோ போட்டுட்டேன்!

மக்களே, ஆதலினால் காதல் செய்வீர்!
முடிவுகள் வழக்கம் போல் நாளை மாலை நியூயார்க் நேரப்படி! பார்க்கலாம் எத்தினி பேரு காதல்-ல ஜெயிக்கறாங்க-ன்னு! :-)))
காதல் வாழ்க! அனைவருக்கும் காதல் தின வாழ்த்துக்கள்!!


1

கிரேக்க பண்பாட்டின் காதல் கடவுள் யார்?

1

அ) ஆப்ரோடைட்

ஆ) ஈராஸ்

இ) ஜீயஸ்

ஈ) க்யூபிட்

2

அம்பிகாபதி அமராவதி கதை பல பேருக்குத் தெரியும்-னு நினைக்கிறேன்! பிரபலமான தமிழ்நாட்டுக் காதலர்கள்! இவர்களின் காதலுக்குப் பல பேரு வில்லன்கள்! அதுல ஒருவரின் தந்தை கூட வில்லனாய்க் கிளம்பினாரு!

அம்பிகாபதி-அமராவதி ஜோடியின் தந்தையர் பெயர் என்ன?

2

அ) கம்பர்-ஒட்டக்கூத்தர்

ஆ) ஒட்டக்கூத்தர்-கம்பர்

இ) கம்பர்-குலோத்துங்கன்

ஈ) புகழேந்திப் புலவர்-குலோத்துங்கன்

3

காதலுக்காகத் தூது சென்ற கடவுள் நம் தென்னாடுடைய சிவபெருமான்!

யார் காதலுக்காக இவ்வாறு தூது சென்றார்?

3

அ) சுந்தரர்-சங்கிலி நாச்சியார்

ஆ) முருகன்-வள்ளி

இ) கண்ணன்-ருக்மினி

ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்

4

லைலா மஜ்னு காதல் கதை ஒரு சோகமான காதல் கதை. இது பின்னாளில் பெர்சியா, லத்தீன் என்று பல மொழிகளில் விதம் விதமாகப் பரவியது!

ஆனால் முதல் முதல், எந்த நாட்டில் இந்தக் காதல் கதை தோன்றியது?

4

அ) இந்தியா

ஆ) அரேபியா

இ) துருக்கி

ஈ) பெர்சியா

5

காதல் காதல் காதல்! காதல் போயின் காதல் போயின்...சாதல், சாதல், சாதல்!

- இதைப் பாடிய கவிஞன் யார்? கவிதை எது?

5

அ) பாரதிதாசன்-அழகின் சிரிப்பு

ஆ) பாரதி-கண்ணன் பாட்டு

இ) கண்ணதாசன்-அனார்கலி

ஈ) பாரதி-குயில் பாட்டு

6

தன் காதலை தோல்வியுறச் செய்த ஒரு மாவீரரைப் பழிவாங்குவதற்கு என்றே இன்னொரு பிறவி எடுத்து வந்தாள் இவள்!

அடுத்த பிறவியிலும் பெண்ணாகப் பிறந்து, பின்னர் ஆணாக மாறிப், பழி வாங்கினாள்!

இவள் முற்பிறவி/இப்பிறவிப் பெயர்கள் என்ன?

6

அ) அம்பாலிகா-சிகண்டி

ஆ) அம்பா-சிகண்டி

இ) அம்பா-அஸ்வத்தாமா

ஈ) அம்பிகா-துருபதன்

7

லார்டு ஆப் தி ரிங்கஸ் நாவலில், ஒரு தீவிரமான காதல்!

ஆர்வென் (Arwen) என்ற பெண், தன் மரணமில்லா நாட்டுக்குத் திரும்பிப் போகக் கூட நினைக்க மாட்டாள்; அழியும் மனிதப் பிறவியாகவே இருந்து விட முடிவு செய்துவிடுவாள். இவன் மேல் கொண்ட தீவிரமான காதலினால்! - யார் இவன்?

7

அ) எல்ராண்டு

ஆ) போரோமிர்

இ) ஆரகார்ன்

ஈ) ஃப்ரோடோ

8

பொன்னியின் செல்வனில் தான் எத்தனை காதல் கொட்டிக் கிடக்கு? பொன்னியின் செல்வன் அருண்மொழியை முதன்முதலில் காதலிக்க "எண்ணும்" பெண் யார்?

8

அ) பூங்குழலி

ஆ) வானதி

இ) நந்தினி

ஈ) மணிமேகலை

9

ரோமியோ-ஜூலியட் கதை முழுக்கத் தெரியுமா? இல்லாக்காட்டி மாதவிப் பந்தலில் நான் சொல்லட்டுமா? :-)

ஜூலியட் போலி விஷம் குடிச்சிட்டு சவப்பெட்டியில் உயிரோடு இருப்பதை அறியாமல், ரோமியோ நிஜ விஷம் குடிச்சி இறந்து விடுவான்.

இவர்களைச் சேர்த்து வைக்க இந்த டூப்ளிக்கேட் விஷம் - ஐடியா கொடுத்த நண்பன் பெயர் என்ன?

9

அ) ஃப்ரையார்

ஆ) பாரீஸ்

இ) டைபால்ட்

ஈ) ஷேக்ஸ்ப்பியர்

10

அண்மையில் தமிழ் சினிமா நடிகர் ஒருவர், வெளியில் தெரியாம ஆறு ஆண்டுகளாத் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலித்து வந்ததாகவும்...இருவரும் பொறுத்திருந்து, இன்னும் சில மாதங்களில் பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி வந்தது!

யார் இந்த நடிகர்?

10

அ) பரத்

ஆ) சிம்பு

இ) ஜீவா

ஈ) விஷால்


காதலில் எல்லாரும் ஜெயிக்கணும்-னு நல்ல எண்ணத்துல, கேள்வி எல்லாம் சிம்பிளாத் தான் கேட்டிருக்கேன் மக்கா! ஓக்கேவா? காதலே ஜெயம்! :-)

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) ஆப்ரோடைட் ஆ) ஈராஸ் இ) ஜீயஸ் ஈ) க்யூபிட்

2. அ) கம்பர்-ஒட்டக்கூத்தர் ஆ) ஒட்டக்கூத்தர்-கம்பர் இ) கம்பர்-குலோத்துங்கன் ஈ) புகழேந்திப் புலவர்-குலோத்துங்கன்

3 அ) சுந்தரர்-சங்கிலி நாச்சியார் ஆ) முருகன்-வள்ளி இ) கண்ணன்-ருக்மினி ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்
4 அ) இந்தியா ஆ) அரேபியா இ) துருக்கி ஈ) பெர்சியா
5 அ) பாரதிதாசன்-அழகின் சிரிப்பு ஆ) பாரதி-கண்ணன் பாட்டு இ) கண்ணதாசன்-அனார்கலி ஈ) பாரதி-குயில் பாட்டு
6 அ) அம்பாலிகா-சிகண்டி ஆ) அம்பா-சிகண்டி இ) அம்பா-அஸ்வத்தாமா ஈ) அம்பிகா-துருபதன்
7 அ) எல்ராண்டு ஆ) போரோமிர் இ) ஆரகார்ன் ஈ) ஃப்ரோடோ
8 அ) பூங்குழலி ஆ) வானதி இ) நந்தினி ஈ) மணிமேகலை
9 அ) ஃப்ரையார் ஆ) பாரீஸ் இ) டைபால்ட் ஈ) ஷேக்ஸ்ப்பியர்
10 அ) பரத் ஆ) சிம்பு இ) ஜீவா ஈ) விஷால்
Read more »

Sunday, February 03, 2008

புதிரா? புனிதமா?? - திருக்குறள்!

அட, என்னாங்க! கேள்வி எல்லாம் ரொம்பக் கடினமா என்ன? தொலை பேசறவுங்க எல்லாம் திட்டறாங்களே! :-)
ஆனால் இங்கிட்டு இத்தனி பேரும் அடிச்சி ஆடியிருக்கீங்க! பாராட்டுக்கள்!!

முடிவுகள் அறிவிச்சிடலாமா?
கீழே விடைகளை Bold செய்துள்ளேன்! ஒவ்வொரு கேள்விக்கும் தனியான விளக்கத்தைப் பின்னூட்டத்தில் சொல்லி விடுகிறேன்! பல குறள்களைக் குமரனே கொடுத்துட்டாரு! அனந்த லோகநாதனும் குறள்களை எடுத்துக் காட்டியிருக்காரு! இதோ வெற்றியாளர்கள்:

ஜெயஸ்ரீ, குமரன், அனந்த லோகநாதன் = 10/10
SK, வெட்டிப்பயல், வவ்வால் = 9/10
பெனாத்தல் சுரேஷ், கப்பி பய = 8/10

வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும் வாழ்த்துக்கள்! ஆர்வத்தோட பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

என்னாது பரிசா?
சரி இந்த முறை காசாக் கொடுத்திடலாமா? இந்தாங்க! :-)
பரிசேலோர் எம்பாவாய்!
2005இல் வாஷிங்டனில் நடந்த பன்னாட்டு திருக்குறள் மாநாட்டுக்கு, அப்துல் கலாம் வழங்கிய செய்தியின் அசைபடம் இதோ! அதில் தன் பணி வாழ்வில் இடம் வகித்த ஒரு குறள் பற்றிச் சொல்கிறார்!



மக்கள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? புதிரா புனிதமா போட்டு நாளாச்சே-ன்னு சில நண்பர்கள் ஒரு வாரமா நோண்டி எடுத்துட்டாங்க!
"ஒரே சர்ச்சையும் சண்டையுமா இருக்கு! போர் அடிக்குது! சீக்கிரம் ஒரு புதிர் போடுங்க" - அப்படின்னு ஒரு நண்பர் பின்னூட்டமே போட்டு விட்டார்!

சரி...போன தபா குறுக்கெழுத்து போட்டேன்! நிறைய பேரு கலந்துகிட்டாலும், வழக்கமாக் கலந்துக்குறவங்க ஏனோ கல்தா கொடுத்துட்டாங்க!
நமக்கு எப்பவுமே "ஒரு கேள்வி-நாலு சாய்ஸ்" தான் சரிப்பட்டு வரும்-னு வேற சொல்லிட்டாய்ங்க! "ஒரு இட்லி-நாலு சட்னி"-ன்னு முருகன் இட்லிக் கடை கணக்காச் சொன்னா, நான் என்னப்பா பண்ணறது? :-)

சரி...ஒரு ஓட்டெடுப்பு வச்சிடலாம்-ன்னு வச்சாக்கா, பழைய "இஷ்டைல்" புதிரா புனிதமா தான் ஏகோபித்த வாக்குகள் பெற்று முன்னணியில் நிக்குது!

நான் தான் எப்பமே சனநாயகத்தை மதிக்கற சின்னப் புள்ளையாச்சே! குறுக்கெழுத்து போட்டு செருக்கெழுத்து புடிச்சவன்-னு எதுக்கு வீணாப் பேரு வாங்கிக்கனும்? :-)
இதோ, அதே பழைய பொலிவுடன், புதிரா புனிதமா! இன்றைய தலைப்பு - உலகப் பொது மறையாம், திருக்குறள்!


இறைவன் மனிதனுக்குத் தந்தது கீதை!
மனிதன் இறைவனுக்குத் தந்தது வாசகமும், பாசுரமும்!
ஆனால், மனிதன், மனிதனுக்குத் தந்தது திருக்குறள்!

திருக்குறள் பற்றி எவ்வளவுன்னு தான் சொல்ல முடியும்? அதான் சுருக்கமாச் சொல்லிட்டாங்க: "எல்லாப் பொருளும் இதன் பால் உள! இதன் பால் இலாத எப்பொருளும் இல்லை!"

வாத்சயாயனர் கூட, காம சாஸ்திரத்தில் உடல் இன்பத்தைப் பற்றி மட்டுமே பேச முடிந்தது! ஆனால் அதற்கு அடிப்படையாக அமைவது அன்பு! காதலுடன் கூடிய காமம் பற்றி அவரால் அதில் சொல்ல முடியவில்லை! ஐயன் வள்ளுவனே அதை முன்னிறுத்தினான்.
அறத்தால் பொருளும், பொருளால் இன்பமும் எய்தினாலே...வீடு என்னும் பேறுதல் அடையப் பெறலாம் என்பது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி!

அதனால் தானோ என்னவோ, ஆழ்வார்களும் திருக்குறள் சொற்களைப் பாசுரங்களில் அப்படியே எடுத்தாளுகிறார்கள்.
ஊரவர் கெளவை எரு விட்டு அன்னைசொல் நீர்மடுத்து - நம்மாழ்வார்
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.


* திருவடிகளின் சிறப்பா? - கடவுள் வாழ்த்தில் பாதியே அது தான்! - ஆலயங்களில் சடாரி (திருவடி) சார்த்தும் வழக்கத்தை முன்னொரு பதிவில் பொருத்திப் பார்த்தோம் - நினைவிருக்கா?

** இல்வாழ்க்கை, மழலை இன்பமா? அடுத்தவன் மனைவி மேல் மையல் கொள்ளாமையா? Vegetarianism-ஆ? - சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் முதற்கொண்டு ஒவ்வொரு இலக்கியமும், திருக்குறளுக்கு வேர் பிடிக்க முடியும்!

*** அரசியல் உத்திகளா? போருக்குத் தயாராதலா? Tax போடுவது பற்றியா? Organic Farmingஆ? - இன்றைய காலத்துக்கும் அதில் கருத்தெடுக்க முடியும்!




எத்தனை உரைகள்? எத்தனை மொழியாக்கங்கள்?
உலகில் அதிகம் மொழியாக்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது திருக்குறள்!

அகர முதல எழுத்தெல்லாம்...என்று தமிழ் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து,
ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின் - என்று தமிழின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடிக்கிறார் ஐயன்!

பதிவர்கள் (அடியேன் உட்பட), திருக்குறள் முயற்சிகளில் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டும்!
"அதான் இத்தனை உரைகள் இருக்கே, போதாதா?" - என்றால் "போதாது!"
உரைகள் எல்லாம் ஏட்டில் தான்! உள்ளத்தில் கிடையாது!
தனித்தமிழ் ஆர்வலர்கள் கூட, அரசியல் குறள் அதிகாரத்தில் ஐயன் சொன்ன வண்ணமா அரசியல் செய்கிறார்கள்? :-)

அதனால் தான் குறள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்!
அதற்குப் புதிது புதிதாய், காலத்துக்கு ஏற்றவாறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்! - ஓவியம், இசை, புகைப்படம், பாடல், ஆன்மீகம், புதிர் என்று பல முனைகளிலும் குறள் தொனிக்க வேண்டும்!

இந்தச் சமயத்தில் PIT குழுவினருக்கும், அண்ணன் ஓசை செல்லா மற்றும் ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கும் ஒரு வேண்டுகோள் முன்வைக்கிறேன்! முன்பே பின்னூட்டத்திலும் சொல்லி உள்ளேன்!
PIT போட்டிகளில் குறள் தலைப்புகளும் அவ்வப்போது கொடுங்கள்!
Thirukural Themes will definitely add value to your contests!

சரி வாங்க, குறள் விளையாட்டுக்குப் போவோம்! நமக்கு நம் பாட்டஞ் சொத்து எந்த அளவுக்குத் தெரிஞ்சிருக்கு-ன்னு பார்க்கலாமா? :-)
பின்னூட்டங்களில் விடையை மட்டும் சொல்லாது, அதற்குண்டான குறளையும் சேர்த்தே சொல்ல முயலுங்கள் - ஓக்கேவா? :-)
விடைகள், நாளை மாலையில் (நியூயார்க் நேரப்படி) ! ஓவர் டு வள்ளுவர்+வள்ளுவம்!


1

திருக்குறள், தமிழ் நூல்களில் எந்தப் பிரிவைச் சேர்ந்த நூல்?

1

அ) பத்துப்பாட்டு

ஆ) எட்டுத்தொகை

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) கலித்தொகை

2

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் - இது "உதடு ஒட்டாத குறள்"-ன்னு தெரியும்! ஏன்? ஒரு பொருளின் மேல் பற்று "ஒட்டிக் கொள்ளக் கூடாது" என்று சொல்ல வந்த குறள்!

அதே போல் ஒவ்வொரு சொல்லுக்கும் "உதடு ஒட்டும் குறள்" என்ன தெரியுமா? ஏன்?

2

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

இறைவன் திருவடிகளை ஒவ்வொரு நிலையிலும் விடாது பற்ற வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு சொல்லும் உதடு ஒட்டுமாறு செய்தார் தெய்வப் புலவர்!

3

திருக்குறளில் மொத்தம் 3 பால்கள் இருப்பது தெரியும்! - அறம், பொருள், இன்பம்.

அதே போல 133 அதிகாரங்கள்; 1330 குறட்பாக்கள் என்பதும் தெரியும்!

ஆனால் மொத்தம் எத்தனை "இயல்கள்" இருக்கின்றன? - தெரியுமா?

3

அ) 13 ஆ) 7 இ) 4 ஈ) 2

4விருந்தோம்பலுக்கு எந்தப் பூவை ஐயன் உவமை காட்டுகிறார்?

4

அ) தாமரை

ஆ) காந்தள்

இ) அனிச்சம்

ஈ) ஆம்பல்

5

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான்....

மனுதர்மம் என்று சொல்லப்படுவதற்கு, நேர் எதிர்க் கருத்து வைக்கும் முதல் தமிழ் இலக்கிய வரி இது! இந்தக் குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது?

5

அ) கொடுங்கோன்மை

ஆ) பெருமை

இ) வினைத் தூய்மை

ஈ) சான்றாண்மை

6இக்காலத்தில் நாம் குறிப்பிடும் "பாலியல் தொழிலாளர்கள்" என்னும் சொல்லை வள்ளுவர் எந்தச் சொல் கொண்டு "அதிகாரத்தில்" குறிப்பிடுகிறார்?

6

அ) மாய மகளிர்

ஆ) பொருட் பெண்டிர்

இ) இருமனப் பெண்டிர்

ஈ) வரைவின் மகளிர்

7

திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட, எத்தனை ஆண்டுகளை, ஒரு ஆங்கில ஆண்டுடன் கூட்ட வேண்டும்?

7

அ) 31 ஆ) 30 இ) 38 ஈ) 39
8

திருக்குறளில் சொல்லப்படாத விலங்கு எது?

8

அ) முதலை

ஆ) யானை

இ) நாய்

ஈ) நரி

உ)கவரிமா

9காதலில் எக்காரணம் கொண்டும் பெண்கள் செய்ய மாட்டாத செயல் என்று வள்ளுவர் எதைக் கூறுகிறார்?

9

அ) தகை அணங்கு உறுத்தல்

ஆ) அலர் அறிவுறுத்தல்

இ) பசப்புறுபருவரல்

ஈ) மடலூர்தல்

10கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் - என்று திருவள்ளுவ மாலையில் சிறப்பித்துப் பாடியவர் யார்?

10

அ) ஒளவையார்

ஆ) அரிசில் கிழார்

இ) இடைக்காட்டுச் சித்தர்

ஈ) மதுரைத் தமிழ் நாகனார்


கொஞ்சம் கடினமாக் கேள்வி கேட்கலையோ-ன்னு ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கு! :-) அதுனால, இதுக்குத் தெரிஞ்சவங்க மட்டும் விடை சொல்லுங்க! போதும்! ஆட்டத்துக்கு இதைச் சேர்த்துக்கலை!

திருக்குறளில் இசைக்கருவிகள் - குழல், யாழ் - இவை இரண்டு பற்றியும் குறிப்புகள் வருகின்றன! குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள், மழலை சொல் கேளாதவர் - இது தெரிஞ்சது தான்!

அதே மாதிரி இன்னொரு குறளில், குழலூதி அந்த அழகன் என்னைக் கொல்லுறானே என்பது போல் ஒரு குறிப்பு வருகிறது! என்ன குறள்-னு சொல்லுங்க பார்ப்போம்? (உடனே, அவன் கண்ணன் தான்! வள்ளுவர் கண்ணனைப் பற்றித் தான் சொல்லி இருக்காரு-ன்னு கண்ணன் பாட்டு நண்பர்கள் எல்லாம் வம்புக்கு கெளம்பிறாதீங்கப்பா! :-))

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) பத்துப்பாட்டு ஆ) எட்டுத்தொகை இ) பதினெண்கீழ்க்கணக்கு ஈ) கலித்தொகை

2.

3 அ) 13 ஆ) 7 இ) 4 ஈ) 2
4 அ) தாமரை ஆ) காந்தள் இ) அனிச்சம் ஈ) ஆம்பல்
5 அ) கொடுங்கோன்மை ஆ) பெருமை இ) வினைத் தூய்மை ஈ) சான்றாண்மை
6 அ) மாய மகளிர் ஆ) பொருட் பெண்டிர் இ) இருமனப் பெண்டிர் ஈ) வரைவின் மகளிர்
7 அ) 31 ஆ) 30 இ) 38 ஈ) 39
8 அ) முதலை ஆ) யானை இ) நாய் ஈ) நரி உ)கவரிமா
9 அ) தகை அணங்கு உறுத்தல் ஆ) அலர் அறிவுறுத்தல் இ) பசப்புறுபருவரல் ஈ) மடலூர்தல்
10 அ) ஒளவையார் ஆ) அரிசில் கிழார் இ) இடைக்காட்டுச் சித்தர் ஈ) மதுரைத் தமிழ் நாகனார்
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP