Thursday, July 31, 2008

புதிரா? புனிதமா?? - குசேலன் கப்பிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

* கப்பி நிலவர்!
* ஜாவா பாவலர்!
* காஞ்சித் தலைவன்!

* குசேலனுக்கு இன்னிக்கி க்ளோபல் டிஸ்ட்ரிப்யூட்டர்!



* சாம் ஆன்டர்சனைச் சினிமா உலகத்துக்கே அறிமுகம் செய்த கப்பி ஆன்டர்சன்!!! - Kappi Anderson & Kappi Honda!


* உலகத் தர சினிமாவின் ஒன் & ஓன்லி சுப்புடு!
* ஓர்க்குட் குமரிகளின் கனவுக் கண்ணன்!
* தேன் கிண்ணத்தில் பால் வார்க்கும் ராக தேவன்!
* இன்னிக்கி டெக்ஸாஸ் மாநிலப் பசுப் பையன்!
* என்னிக்கும் தமிழ் மாநிலத் தலைப் பையன்!


புன்னகைச் சிங்கம், எங்கள் தங்கம்,
கப்பி பயலுக்கு,
...இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Jul-31)


புதிரா? புனிதமா??
1. நம்ம கப்பிக்கு பிறந்த நாள் பரிசா எதைக் கொடுக்கலாம்?
(ஒன்லி ஒன் ஆன்ஸர் இஸ் தி ரைட்டு ஆன்ஸர்!!!)

சரியான விடைகள் நாளை மாலை Dallas நேரப்படி அறிவிக்கப்படும்! தவறான விடைகள் தருபவர்கள் சுவாரஸ்யமான முறையில் தண்டிக்கப்படுவார்கள்! :-)

அதிகப்படியாக ஓட்டு விழும் விடையே கப்பிக்குப் பரிசாகக் கொடுக்கப்படும்!
அதை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-ன்னு, அவரு மறுக்காம வாங்கிக்கிடணும்!:)
அ) Maragathavalli (alias) MAGGI - (Jumba Jumba Jumba Jumba, Jumba Jumba Jum!)

ஆ) குளிர் பானம்(கொளுத்தும் டெக்சாஸ் வெயிலுக்காக மட்டுமே)
இ) பிறந்த நாள் கேக் (கொழுப்பற்ற கேக்)

மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள் கப்பி!:)))
Read more »

Sunday, July 20, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - Final Part!

"இல்லையப்பா! எனக்கு மோட்சம் கிட்டாது! நான் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!" - அதிர்ந்து விட்டான் வில்லி!
எடக்கு மடக்கு பண்ணுவதே, இப்பவெல்லாம் இந்த உடையவருக்கு வழக்கமாகப் போய் விட்டது! இவரே இப்படிச் சொன்னால் இவரை நம்பி வந்த சீடர்கள், பாவம் என்ன செய்வார்கள்? முந்தைய பதிவு இங்கே!

"முன்பு, குருவின் ஆணையை மீறி, எட்டெழுத்தின் பொருளை, ஊரைக் கூட்டிச் சொன்னேனே! மறந்து விட்டாயா?
நன்மையோ, தீமையோ, நான் செய்த காரியம் செய்தது தானே? விதைத்தது முளைத்து தானே ஆகும்! குருவின் ஆணையை மீறியவனுக்கு நரகம் அல்லவா கிட்டும்? சரி தானே வில்லி?"

(மெளனம்)

"ஆனால்.....இங்கே, இப்போதே, அரங்கன் சாட்சியாகச் சொல்கிறேன்!
குருவின் ஆணையை மீறினவன் என்றாலும்.....
எனக்கும் மோட்சம் உண்டு!
என்னைப் பற்றினீர்கள் அல்லவா? உங்கள் எல்லாருக்கும் மோட்சம் உண்டு
!"

(குழப்பத்துடன்...)
"ஆகா! குருவே! உங்கள் வாக்கிலிருந்து இப்படி ஒரு சொல் வர என்ன புண்ணியம் செஞ்சோமோ தெரியலையே! என் கவலை எல்லாம் தீர்ந்தது!"

"அட என்ன சீடனப்பா, நீ? "என்னால்" தான் உங்களுக்கு எல்லாம் மோட்சம் என்று சொல்கிறேன்! திமிர் பிடித்துப் போய், ”தான்” என்னும் ஆணவமாகப் பேசுகிறார் இராமானுசர்? - இப்படியெல்லாம் திருப்பித் தாக்க மாட்டாயா?
அடியேன் அடியேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நீ எப்போது அடுத்த குரு ஆவது?"

(குரு தன்னிடம் மட்டும் ஏன் இப்படி விளையாடுகிறார் என்று குழம்புகிறான் வில்லி! தப்பாக எதுவும் விவாதத்தை ஆரம்பித்து வைத்து விட்டோமோ? அதான் உடையவர் இந்த வாங்கு வாங்குகிறாரோ?)


"என்ன வில்லி? குழப்பமா இருக்கா?....எனக்கு மோட்சம் கிடைத்தால், உங்களுக்கும் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும்-னு சொன்னேன் அல்லவா!
எனக்கு யாரால் கிடைக்கும்-னு நினைக்கிறாய்? என் சுய பிரதாபத்தாலா கிடைக்கும்? இல்லை! என் குருவான பெரிய நம்பியால் கிடைக்கும்! அவருக்கு மோட்சம் உண்டு என்றால் எனக்கும் கண்டிப்பாக உண்டு!
ஆனால்...பெரிய நம்பிக்கு நிச்சயமாக் கிடைக்குமா? கிடைத்து விட்டதா??"

(வில்லி மயக்கம் போட்டு விழாத குறை! "இவரு ஊர்-ல ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டாரா?
மொதல்ல நம்ம மேல கையை வச்சாரு!
அடுத்து அவர் மேலேயே கை வச்சிக்கிட்டாரு!
இப்போ என்னடான்னா, அவர் குருநாதர் மேலேயே கையை வைக்கிறாரே?")

குரு பரம்பரை - இறைவி-இறைவனே முதல் குரு! அது சேனை முதலியார் என்று அப்படியே விரிந்து, ஒரு ஆபரணம் போல் ஒளிர்கிறது!


"என்ன வில்லி இவ்வளவு தீவிரமாக யோசிக்கிறாய்?
* உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் -> உங்கள் குரு இராமானுசனால்!
* இராமானுசனுக்கு மோட்சம் கிடைக்கும் -> அவர் குரு பெரிய நம்பியால்! - இது வரை சரி!

* பெரிய நம்பிக்கு கிடைக்கும் -> அவர் குரு, ஆளவந்தாரால்!
* ஆளவந்தாருக்கு கிடைக்கும் -> மணக்கால் நம்பியால்!

* மணக்கால் நம்பிக்கு கிடைக்கும் -> உய்யக் கொண்டாரால்!
* உய்யக் கொண்டாருக்கு கிடைக்கும் -> நாதமுனியால்!

* நாதமுனிக்கு கிடைக்கும் -> நம்மாழ்வாரால்!
சரி......நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைக்குமா? கிடைச்சுச்சா??"


(வில்லி அரண்டு நடுநடுங்கிப் போய் விட்டான்! சீடர்கள் பேந்த பேந்த விழிக்கிறார்கள்! உபன்னியாசம் கேட்க வந்த ஊரே வாயைப் பிளக்கிறது! "என்னாது? நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைச்சுச்சா-வாஆஆஆ?.....
அடேயப்பா! இவரு இந்தக் கட்சியில் இருந்து கொண்டு, இந்தக் கட்சிக்கே வேட்டு வைக்கிறாரே! இராமானுசர் பிறப்பால் சைவர்! ஒரு வேளை வைணவத்தில் விவகாரம் பண்ணவே இவரு இங்கிட்டு வந்தாப் போலத் தெரியுதே!" :-)

"நான் இன்னும் முடிக்கவில்லை வில்லி!
* நம்மாழ்வாருக்கு கிடைக்கும் -> சேனை முதலியாருக்கு கிடைத்தால்!
* சேனை முதலியாருக்கு கிடைக்கும் -> அன்னை மகாலட்சுமிக்கு கிடைத்தால்!
* அன்னை, மகாலட்சுமிக்கு ஒருவேளை மோட்சம் கிடைக்குமாஆஆ?...."

"அய்யோ.....குருவே....."

"பதறாதீர்கள்!....கேளுங்கள்!
* மகாலட்சுமிக்கு கிடைக்கும் -> இறைவனுக்கு கிடைத்தால்.......
* இறைவன், பரப்பிரம்மமான, நாராயணனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆஆஆஆஆஆஆல்......"

(அத்தனை மக்களும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார்கள்.....கோவிந்தா கோவிந்தா என்கிற கோஷம்!.....அப்போதும் அவர் விடவில்லை.....)
* இறைவனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆல்....அப்போ மகாலட்சுமிக்கும் கிடைக்கும்!
* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? சொல்லுங்க பார்ப்போம்"
(காவிரியாறு கூட வாயைப் பொளந்து விட்டது! ஒரு துளிச் சத்தம் கூட எழவில்லை! மனிதன், மிருகம், புல், பூண்டு என்று அவ்வளவு உயிர்களும் கப்..சிப்..
"இவருடன் வாதாட முடியாது போலிருக்கே! இவர் வாதங்களை முன் வைக்கும் போது எம்பெருமானார் வாதாடுகிறாரா? இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா??....தெரியவில்லையே!")

"இறைவனின் வீட்டில் இறைவனுக்கு இல்லாத இடமா? இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா என்று எந்தப் பைத்தியக்காரனாவது கேட்பானா?
இறைவனுக்கு உண்டு என்றால், நான் சொன்ன வரிசையில் அப்படியே ஒவ்வொருவராய் பின்னோக்கி வாருங்கள்.....

அவனுக்கு உண்டு என்றால், அவளுக்கு உண்டு!
அவளுக்கு உண்டு என்றால் சேனை முதலியாருக்கு உண்டு.....
சேனை முதலியாருக்கு உண்டு என்றால், நம்மாழ்வாருக்கு உண்டு.....

இப்படியே பின்னோக்கி வந்து....உங்கள் வரை வந்து.....
பெரிய நம்பிக்கு உண்டு என்றால், இராமானுசனுக்கும் உண்டு!
இராமானுசனுக்கு உண்டு என்றால், உங்களுக்கும் உண்டு!

உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!"


(அத்தனை பேர் முகத்தி்லும் அப்படி ஒரு சிரிப்பூபூபூபூபூ)

"இறைவனின் குழந்தைகள் தானே எல்லாரும்! அவைகளை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அவனும் அவளும் சொல்லத் தான் முடியுமா?
அப்படி ஒரு குடும்பக் கோட்பாட்டை எந்த தாய்-தந்தையாவது உருவாக்குவார்களா???

* குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கின்றன! ஆட்டம் முடிந்தால் அவை வீட்டுக்குத் தானே போக வேண்டும்?
** என்ன...சில குழந்தைகள் வீட்டுக்கு அருகிலேயே ஆடுவதால், பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுகின்றன! சில குழந்தைகள் ஊர் சுற்றிகள்! வீடு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகிறது! அவ்வளவு தான்!

மண்ணில் பிறந்தவர் அனைவர்க்கும் மோட்சம் உண்டு! வானவரும், தேவர்களும் கூட, மோட்சம் அடைய வேண்டும் என்றால், மானிடனாய்ப் பிறந்து தான் மோட்ச நிலைக்குச் செல்ல முடியும்!
வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர், எமது இடம் புகுக என்று
வைகுந்தத்து அமரரும், முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது ***மண்ணவர்*** விதியே!!!


புண்ணியமோ-பாபமோ, சொர்க்கமோ-நரகமோ,
கர்ம வினைகளை அறுக்க மானிடனாய்ப் பிறந்தே ஆக வேண்டும்!
அதனால் தான் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!
அப்படி மானிடராகப் பிறந்து,
அற்றது பற்றெனில், உற்றது வீடு! = ஆனால் அந்தப் பற்று எப்படி அறும்
???"


மாறனோடு இப்போது ஐயன் வள்ளுவனைத் துணைக்கு அழைப்போமா?

பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!
பற்றற்றான் பற்றிலே பரிபூர்ண சரணாகதி செய்தக்கால்=அற்றது பற்று!

அப்புறம் என்ன?
அற்றது பற்றெனில், உற்றது வீடு!

= மாறன் + வள்ளுவன் வாக்கு மாறுமோ? மாலவன் வாக்கு அல்லவா!

எனவே மோட்ச நிலை குறித்து அதீதமாகக் கவலைப்பட்டு, போலி குருக்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு வீண் குழப்பங்கள் எதற்கு?
அவன் பத்துடை அடியவர்க்கு மிகவும் எளியவன், பிறர்களுக்குத் தான் அரிய வித்தகன்!

உங்கள் அறிவினால் மட்டுமே, அரியவனை, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே முயன்று நம் அறிவினால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், உங்கள் ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்!
ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!

எனவே, காருண்யம் வற்றாத நீர் நிலை - எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! இதோ...
அகல கில்லேன் இறையும்! என்று
அலர் மேல் மங்கை உறை மார்பா!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!!


அப்படிப் புகுந்தவர், வைகுந்தமும் புகுவர்!
இறைவனுக்கு மோட்சம் உண்டென்றால், நம் அனைவருக்கும் உண்டு!
வைகுந்தம் புகுவது *மண்ணவர்* விதியே!!!



இந்தத் தொடர் பதிவு - மூன்று பாகமாய் வந்தது.
இதில் சரணாகதி தத்துவத்தை வீடணன், பாஞ்சாலி, கஜேந்திரன் என்று ஒரு கதை போலத் தான் பார்த்தோம்!
This series was only a primer! Kinda Eye Opener! ஆனால் இன்னும் சில ஆழ்ந்த n-dimension பரிமாணங்கள் இதில் உள்ளன!

அதைப் பார்ப்பதற்கு முன்னால், அடிப்படையை கொஞ்சம் ஆழ வாங்கிக் கொள்ள வேண்டும்! அடிப் படையை வாங்காமால், ஆனைப் படைகள் ஆயிரம் வாங்கினாலும், வெற்றி என்பது சந்தேகமே! கொஞ்ச நாளில் காற்றில் கரைந்து விடும்!

எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
இறைவன் "அடி" சேரா தார்!


திக்கெட்டும் தத்துவங்கள் ஆயிரம் பேசலாம்!
அவை எல்லாம் பளிச்செனத் தோன்றி மறையும் மின்னல் தான்!
திருவடி சரணங்கள் என்பதே நிலைத்த தீபம்!
நிலைத்த தீபிகை=அதுவே சரணாகதி தீபிகை!
ஹரி ஓம்!

(நிறைந்தது)


இன்னும் சிலருக்குச் சில-பல கேள்விகள்:

* பரிபூர்ண சரணாகதி செய்த பின் ஒருவனின் வாழ்க்கை நிலை என்ன?
* தாய்க் குரங்கைக் குட்டியானது கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டுமா? இல்லை, தாய்ப்பூனையே சேய்ப்பூனையைக் கவ்விச் சென்று காப்பாற்றுமா?

* மற்ற சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம், சமணம், பெளத்தம், சாக்தம், சைவம், வைணவம் போன்றவற்றில் சரணாகதியின் நிலை என்ன?
* சங்கத் தமிழ் இலக்கியத்தில் சரணாகதி பேசப்படுகிறதா?

* அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் = போன்ற தத்துவங்களின் சாராம்சம் என்ன? அவற்றில் சரணாகதி சொல்லப்படுகிறதா?
* மூன்று ஆச்சார்யர்களும் முரண்பட்டார்களா? இராமானுசர் சங்கரைப் புகழ்கிறார்! ஏன்? எதற்கு? எங்கே?

* பிறவி-சரணாகதி-மோட்சம் என்பது ஒரு சுழற்சியா? ஆதியில் என்னவாக இருந்தது? - இது அத்தனையும் ஏன்? எந்துக்கு? எந்து? யாகே? க்யோ? WHY? WHY? WHY?
* அறிவியல் இதற்கு வெளிச்சம் போட உதவுமா?

இவற்றை ஒவ்வொன்றாக மாதவிப் பந்தலில் பார்க்கப் போகிறோம்!
இரு வாரத்துக்கு ஒரு முறை (fortnightly) என்று முயல்கிறேன்;

நண்பர்கள் மற்றும் சக பதிவர்கள் கண்ணன் சார், குமரன், SK, மெளலி அண்ணா, கீதாம்மா, திவா சார், ஜீவா, கோவி கண்ணன் போன்றவர்கள் உதவியுடன்...!
உங்கள் விவாத விளக்குகளுடன்; அதற்கு முன் இவ்விரு பதிவுகளையும் படித்துப் பார்க்கவும்!


* தம்பி CVR இன் Destination Unknown சிறுகதை!
** நண்பர் குமரனின், இல்லாமையிலிருந்து பிறவி தோன்றுமா?

பெரும் தத்துவங்கள் என்பதால், எப்போதும் போல் விளையாட்டான நடையில் அடியேனால் எழுத முடியுமா தெரியவில்லை! அதனால் இந்தப் பொருளில் பேசப் போகும் பதிவுகளை எல்லாம் "$$$" என்று தலைப்பில் குறிப்பேன்!
இதையே அவரவர் எச்சரிக்கை மணி/ஆராய்ச்சி மணியாக எடுத்துக் கொண்டு வருவதும் வராமலும் போகலாம்! :)

அதே சமயம், மற்ற விளையாட்டான பதிவுகள் வழக்கம் போல் தொடரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :))
Read more »

Tuesday, July 15, 2008

புதிரா? புனிதமா?? - கோலிவுட் - முருகனருள்-100!

முடிவுகள் ரிலீஸ் பண்ணியாச்சே!
விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!

வெற்றிப் பட்டியல்!
முதல் வெற்றியாளர்
Gnana Raja

அடுத்து
நம் ஜிரா

அடுத்து
முகிலரசி தமிழரசன்!

வெற்றியாளருக்கு இனிய வாழ்த்துக்கள்!

முருகப் பெருமான் திருவருள் துணைக்கொண்டு,
வெற்றியாளருக்கு மட்டும் அன்றி,
நம் அனைவருக்குமே
முருக வாழ்த்துக்கள்! நன்மை
பெருக வாழ்த்துக்கள்! இன்பம்
வருக வாழ்த்துக்கள்!!!


மக்கள்ஸ்! இன்று முருகனருள் வலைப்பூவின் நூறாவது பதிவை முன்னிட்டு ஒரு "சிறப்புப்" புதிரா? புனிதமா?? முருகப்பெருமான், நம்ம கோலிவுட்டில் எடுத்த அவதாரங்கள் தான் இன்னிக்கி தலைப்பு! கமல், ரஜினி, சிவாஜி, எம்.ஜி.ஆர்-னு யாரெல்லாம் முருகன் வேசம் கட்டுனாங்க? யோஜிங்க மக்கா யோஜிங்க!

அப்படியே முருகனருள்-100 பதிவுக்குப் போய் ஒரு எட்டு எட்டிப் பாருங்க!
நம்ம பதிவர்கள் கும்மி அடிப்பாய்ங்க, தெரியும்! - காவடி எடுப்பாய்ங்களா?

எடுக்கறாங்களே!
KRS, ஜிரா, குமரன், VSK, திராச, ஜீவா-ன்னு அத்தினி பேரும் காவடி எடுக்கறாய்ங்க!
அத்தினி பேரும் காவடிச் சிந்து பாடறாய்ங்க!

அப்பிடீடீடீடீ எடுத்து வுடற பாட்டைக் கேட்டுக்கிட்டே குவிஜ் ஆடுங்க மக்கா! புதிரா புனிதமா ஆடுவமா? விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!


1

தேவரின் "தெய்வம்" படம் பற்றிச் சொல்லத் தேவையில்லை! படமும் பாடல்களும் சூப்பர் ஹிட்! மருதமலை மாமணியே முருகய்யா, தேவரின் குலம் காக்கும் வேலய்யா-ஐயா! - இந்தப் பாடல் ஒலிக்காத வாயில்லை!

தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தோம் தோம் என்று இசையமைப்பாளர் சொல்ல, on the spot, சத்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் என்று சொல் வந்து விழுந்தது கவியரசர் கண்ணதாசனுக்கு!

பாட்டின் இசையமைப்பாளர் யார்?-பாடகர் யார்? (நோ சாய்ஸ் :-)

1

குன்னக்குடி வைத்தியநாதன்-மதுரை சோமு

2

காதலா, காதலா படத்துல உலக நாயகன் கமல், ஒரு காமெடி சீன்-ல, முருகன் வேசம் கட்டுவாரு! - "தெ..தெ...தெய்வயானை, எனக்கு உன்னைத் தவிர வேற ஒரு செ..செ...செட்டப் இருக்குது"-ன்னு சொல்லுவாரு!

"வாட், செட்டப்ப்பா? யூ மீன் சக்களத்தி?.."-அப்படின்னு தெய்வயானை கேட்பாங்க! யார் இந்த தெய்வயானையா நடிச்சது?

2

அ) சவுந்தர்யா

ஆ) ரம்பா

இ) மீனா

ஈ) பிரபுதேவா

3

ஒளவையார் படத்துல கேபி சுந்தராம்பாள் பாட்டு பாடி யானைகளை வரவழைப்பாங்க! அதுங்க எல்லாம் போய் மூவேந்தர் கோட்டையை முட்டும். (ஒரு குட்டி யானை உட்பட)

பாரியின் மகளிர் அங்கவை-சங்கவையின் காதலனான திருக்கோவிலூர் மன்னனைச் சிறைப்பிடித்து கோட்டையில் வைத்ததால் இந்த வினை!

யார் அந்தக் கதைக் காதலன்? பட நடிகர்??

3

அ) ஓரி-சிவாஜி

ஆ) தெய்வீகன்-கிட்டப்பா

இ) ஓரி-தியாகராஜ பாகவதர்

ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்

4

உபதேசம் செய்வதோடு மட்டுமில்லாமல், அதன்படியே வாழ்ந்து காட்டிய வெகு சில ஆன்மீகப் பெருமக்களில் முக்கியமானவர், முருகத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள். (அடியேனைத் தொட்டுத் தூக்கிப் பரிசளித்ததை இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது).

சிறு குழந்தைகளுக்கான இராமகிருஷ்ண குடிலுக்கு, சுவாமிகள் அள்ளி அள்ளிக் கொடுத்த மகான்! எம்.எஸ். அம்மாவைப் போலவே மேடையிலேயே பணம் பட்டுவாடா ஆகி விடும்! வீட்டுக்கு ஒரு பொன்னாடை கூடப் போகாது!

சுவாமிகள் பல தமிழ்த் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். ஆனால் வாரியார் தானே முழுத் திரைக்கதையும் எழுதிய படம் எது?

4

அ) தெய்வம்

ஆ) சிவகவி

இ) கந்தர் அலங்காரம்

ஈ) மிருதங்கச் சக்ரவர்த்தி

5

கொஞ்சும் சலங்கை படத்துல, சிங்கார வேலனே தேவா-ன்னு சாவித்திரி பாடுவாங்க! அதுக்கு ஜெமினி, சிவாஜி மாதிரி நாதஸ் வாசிக்க ரொம்பவே ட்ரை பண்ணுவாரு!:-)

உண்மையாகவே படத்துல அந்தப் பாட்டுக்கு நாதசுரம் வாசிச்சது யாரு?-எந்த ஊர் முருகன் கோயில்?

5

அ) நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்னம் பிள்ளை-திருச்செந்தூர்

ஆ) ஷேக் சின்ன மெளலானா-சிக்கல்

இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்

ஈ) தில்லானா மோகனாம்பாள் புகழ் MP பொன்னுசாமி-திருச்செந்தூர்

6

(சினிமா அல்லாத ஒரு முருகன் கேள்வி)

முருகன் இல்லாத தமிழ் ஈழமா? முருகனுக்குத் தான் எத்தனை எத்தனை கோயில்கள் ஈழத்தில்!

பெளத்தம், முகம்மதியம், இந்து சமயம் என்று மும்மதமும் வழிபடும் ஒரு முருகன் கோயில் இருக்கு ஈழத்தில்! அவரவர் தங்கள் தங்கள் தெய்வம்/குரு என்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளும் அந்த முருகன் கோயில் எது?

6

அ) நல்லூர் கந்தசாமி ஆலயம்

ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம்

இ) மன்னார்-திருக்கேதீஸ்வரம்

ஈ) மட்டக்களப்பு-கல்லடித் திருச்செந்தூர்

7

முருகன் பெயரைப் புனைப்பெயராக வைத்துப் பாடல்கள் புனைந்த இசை மேதை யார்?

7

அ) லால்குடி ஜெயராமன்

ஆ) முத்துசாமி தீட்சிதர் (குரு"குஹ" என்ற முத்திரை ஒவ்வொரு பாட்டிலும் வரும்)

இ) அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர்

ஈ) MM தண்டபாணி தேசிகர்

8

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு பாட்டுக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முருகனாக நடிக்க, ஜெயலலிதா வள்ளியாக நடித்தார்! இதை தேர்தல் போஸ்டர்களில் கூடச் சிலர் பார்த்திருக்கலாம்!

ஏற்கனவே சிவாஜி திருப்பதி போய் வந்ததைப் பெரிய சர்ச்சை ஆக்கிய தி.மு.கழகத் தலைவர்கள், எம்.ஜி.ஆர் முருகனாகத் தோன்றியதையும் சர்ச்சையாக்க முயன்று, முடியாமல் போனார்கள்!

என்ன படம்?

8

தனிப்பிறவி

9

கம்பீர கான மணி என்று மறைந்த காஞ்சிப் பெரியவரால் போற்றப் பெற்றவர் சீர்காழி கோவிந்தராஜன்! அவர் பல தமிழ்ப் படங்களில் தோன்றி நடித்துள்ளார்! குள்ள உருவத்துக்கு ஏற்ற ரோல் என்றால் உடனே சீர்காழி தான் என்று இருந்த கால கட்டம், தமிழ்ச் சினிமாவில்!

சீர்காழி முதல் முதலாக திரைப்படத்தில் தோன்றிய வேடம் எது?

9

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) அகத்தியர்

இ) ஒரு பக்திப் பாடகர்

ஈ) நக்கீரர்

10

முருகன் என்றாலே இளமை! தமிழ்ச் சினிமாவில் இளமை என்றாலே சிவகுமார்! கோடம்பாக்க மார்க்கண்டேயன்! ஆக கந்தன் கருணை படத்தில் முருகனாகச் சிவகுமார் நடித்தது சாலவும் பொருத்தம்!

ஆனால் குழந்தை முருகனாக நடித்து, //ஜெமினிக்கு - தந்தைக்கு உபதேசம் சொன்ன// குழந்தை நடிகர் யார்? (நோ சாய்ஸ் :-)

10

மாஸ்டர் ஸ்ரீதர்



இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1

2 அ) சவுந்தர்யா ஆ) ரம்பா இ) மீனா ஈ) பிரபுதேவா

3 அ) ஓரி-சிவாஜி ஆ) தெய்வீகன்-கிட்டப்பா இ) ஓரி-தியாகராஜ பாகவதர் ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்
4 அ) தெய்வம் ஆ) சிவகவி இ) கந்தர் அலங்காரம் ஈ) மிருதங்கச் சக்ரவர்த்தி
5 அ) நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்னம் பிள்ளை - திருச்செந்தூர் ஆ) ஷேக் சின்ன மெளலானா-சிக்கல் இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல் ஈ) தில்லானா மோகனாம்பாள் புகழ் MP பொன்னுசாமி-திருச்செந்தூர்
6 அ) நல்லூர் கந்தசாமி ஆலயம் ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம் இ) மன்னார்-திருக்கேதீஸ்வரம் ஈ) மட்டக்களப்பு-கல்லடித் திருச்செந்தூர்
7 அ) லால்குடி ஜெயராமன் ஆ) முத்துசாமி தீட்சிதர் இ) அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர் ஈ) MM தண்டபாணி தேசிகர்
8
9 அ) நம்பியாண்டார் நம்பி ஆ) அகத்தியர் இ) ஒரு பக்திப் பாடகர் ஈ) நக்கீரர்
10
Read more »

Thursday, July 10, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - 2

"நான் சரணாகதி செய்தால், யார் யாரை எல்லாம் கூட்டி, என்னென்ன விசாரணை எல்லாம் நடக்குமோ, தெரியலையே? அட இராமா! ச்சே...இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?" - முந்தைய பதிவு இங்கே!

"ஓ! இது தான் உன் கவலையா சீடனே? உன் பெயருக்கு ஏற்றாற் போலவே நீயும் உறங்கா வில்லி தான்! உபன்யாசம் கேட்டுக் கொண்டே உறங்காத வில்லியாகத் தான் இருக்கிறாய்!" :-)

"குருவே! மறைக்காமல் சொல்லுங்க! என்னைக் கூண்டில் ஏற்றி நிறுத்தி, கேள்வியால் துளைத்து, அடியேன் சரணாகதியை அளந்து அளந்து தானே பார்க்கப் போறாங்க? விபீஷணனைக் கூட இப்படி எல்லாம் அளந்து பார்த்து தானே முடிவெடுத்தாங்க?"

"ஹா ஹா ஹா....கதையில் இப்படி ஒன்றி விட்டாயே வில்லி! வீண் கவலை வேண்டாம்! ஒன்றை நினைவில் வைத்துக் கொள்!
நீ என்னுடைய சீடன், என்னைப் பற்றியவன்!
அது இராமன் கோஷ்டி! இது இராமானுசன் கோஷ்டி!
அங்கு விசாரணை இருக்கலாம்! இங்கு விசாரணை கிடையாது!
"
முதலில் உட்கார்!

"உடையவரே! மனம் உடைந்து போய் கேட்கிறேன்! சொல்லுங்களேன்! சரணாகதி செய்தால் எனக்கு மோட்சம் கிட்டி விடுமா?"

"ஹூம்...ஆக....ஏதோ ஒன்றை வேண்டித் தான் நீ சரணாகதி செய்வாய்? அப்படித் தானே? இல்லையென்றால் சரணாகதி செய்ய மாட்டாய்! சரியா?"

(மெளனம்)

"அப்புறம் எதுக்கு சர்வ தர்மங்களையும் விட்டு விட்டு, உன் ஒருவனையே சரணம் அடைகிறேன் என்று உதட்டளவில் சொல்லித் திரிகிறாய்?
சர்வ தர்மங்களையும் விட்டேன் என்று சொல்லும் நீ, மோட்ச தர்மத்தை விட்டா மாதிரி தெரியலையே? உன் கண் அங்கே அல்லவா இருக்கிறது?"

(மெளனம்)

"ஏன் வில்லி?...பல பிறவிகள் எடுத்தால் மிகவும் கஷ்டப்படுவோம் என்று பயமா உனக்கு?
கடைத்தேற இன்னும் பல கோடி மக்கள் இருக்கிறார்களே! பல சாதிகளில் பிறந்து, உழன்று, மறை பொருளை அறியாமல் இருக்கிறார்களே! அவர்கள் கதியெல்லாம் என்ன?
அவர்களுக்கு மறையை மறைத்து வைக்காது, எடுத்துச் செல்லும் பெரும்பணி இருக்கிறதே! அதில் எனக்கு ஒத்தாசையாக வர மாட்டாயா?"

(வில்லி தலை கவிழ்கிறான்)

"இதற்காக இன்னொரு பிறவி எடுத்து, இராமானுசனுக்கு உதவி செய்ய வா என்று கூப்பிட்டால், நீ மறுத்து விடுவாய் தானே?
அப்பாடா, நான் சரணாகதி செய்தாகி விட்டது! மோட்சம் உறுதியாகி விட்டது!
இனி அவரவர் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க என்று சொல்லி விடுவாய் தானே?"

(மீண்டும் மெளனம்)

"தனக்கு வேலை ஆனால் போதும்! தனக்கு மோட்சம் கிட்டினால் போதும்! நான் ஒரு காரியமாக உன்னைச் சரணாகதி அடைகிறேன்! அதைக் கொடுத்து விடு! = இது தானே உன் எண்ணம்?

சற்றுமுன் கருணை வள்ளலான இராமபிரானை ஏதேதோ கேள்வி கேட்டாயே!
ச்சே...இதுவா சரணாகதி?
இதுவா உன் பரங்கருணை?
இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?

......அதே போல் நான் உன்னைக் கேட்கட்டுமா?
ச்சே...இதுவா உன் சரணாகதி?
இதுவா உன் இறையன்பு?
இதுவா உன் நிபந்தனையற்ற சரணம்?
"


(வில்லி தேம்பித் தேம்பி அழுகிறான்...)

"உடையவரே! அடியேனை மன்னித்து விடுங்கள்! இறைவனிடத்தில் சுயநலத்தைக் காட்டிப் பொதுநலத்தை மறந்தேன்! எனக்கு வேண்டியதை மட்டும் எதிர்பார்த்து அதற்கு மட்டும் சரணாகதி என்று துணிந்தேன்! என் தவறைத் திருத்தி ஆட்கொள்ளுங்கள்!"

"தவறல்ல வில்லி! முதலில் அப்படித் தான் இருக்கும்! ஆனால் மனதால் உணர்ந்த பின் சரியாகி விடும்!
அதற்காக அருளாளன் அருள் உனக்கு இல்லை என்றாகி விடாது! கவலைப்படாதே!

ஒன்றை வேண்டிச் செய்த சரணாகதி - பாஞ்சாலி - இது காம்யார்த்த சரணாகதி!
அவனையே வேண்டிச் செய்த சரணாகதி - கஜேந்திரன் - இது பரிபூர்ண சரணாகதி!

ஆனைக்கும் அருள் உண்டு! ஆயிழைக்கும் அருள் உண்டு! ஆனால் யார் செய்த சரணாகதிக்கு, இறைவன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்? தெரியுமல்லவா?..."

"தெரியும் குருவே! ஆனைக்குத் தான் அலறி அடித்துக்கொண்டு, ஓடி வந்தான்"

"உம்...ஐந்தறிவுச் சரணாகதி உசத்தியாகி விட்டது! ஆறறிவுச் சரணாகதி சற்று தாமதமாகி விட்டது, பார்த்தாயா? ஹா ஹா ஹா!"

"ஆமாம் குருவே! இத்தனைக்கும் யானைக்குத் தான் செய்வது சரணாகதி என்பது கூடத் தெரியாது தானே?"



"அருமையாகப் பிடித்துக் கொண்டாய்! சரணாகதி செய்கிறோம் என்று கூடத் தெரியாமல், செய்த சரணாகதி தான் கஜேந்திர சரணாகதி!

யானை எவ்வளவோ போராடிப் பார்த்தது! ஒன்றும் முடியவில்லை! இறக்கும் தறுவாயில் ஒருவருக்கு இப்படியா சிந்தனை போகும்? ஆனைக்கு இப்படிப் போனது...”அச்சோ...நம்மால் இயலாமற் போனதே! இந்தத் தாமரை மலரை எம்பெருமானுக்குச் சூட்டினால் எவ்வளவு மங்களகரமாக இருக்கும்?”

மேலே...அலைமகள், அப்பனுடன் தத்துவ சாரத்தைப் பேசிக் கொண்டு இருக்கிறாள்!
அவன் மேல்துண்டில், தன் சேலையை முடித்துக் கொண்டு, ”என்னை விட்டு ஓடிப் போக முடியுமா” என்று ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கிறாள்!

ஆதிமூலமே......!

அலறி அடித்துக் கொண்டு எழுந்தான்! அன்னை முடிச்சு போட்டதையும் மறந்தான்!
விறுவிறு என்று ஓடுகிறான் அப்பன்! குறுகுறு என்று கீழே விழுகிறாள் அன்னை!
அவன் மிரண்டான்! இவள் புரண்டாள்! - ஹூஹூம்! சட்டை செய்யவில்லை!
கருடன் குறிப்பறிந்து ஓடோடி வருகிறான்!
அன்னையின் நிலை கண்டு கருடன் கண்ணில் நீர்! ஆனால் அப்பனுக்கோ எதுவும் பொருட்டில்லை! கஜேந்திரா...இதோ வந்தேன்!

அவன் நமக்கு அது கொடுப்பான், இது கொடுப்பான், மோட்சம் கொடுப்பான் என்றெல்லாம் கணக்குப் போடாத நிலை!
நாம் அவனுக்கு அது கொடுப்போம், இது கொடுப்போம், அவன் உள்ளத்துக்கு உகப்பைக் கொடுப்போம் என்று நாம் அவனுக்குத் தரும் நிலை!

தன் விருப்பம் என்னவென்று ஆனைக்குத் தெரியவில்லை! எம்பெருமானின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தாம் இருப்போம் என்றே அது இருந்தது!
- இதுவே கஜேந்திர சரணாகதி!
- இதுவே பிரகலாத சரணாகதி!
- இதுவே ஆஞ்சநேய சரணாகதி!
- இதுவே பரிபூர்ண சரணாகதி!

வாழைப்பந்தல் கிராமத்து, ஆலயக் கருவறையில் அதே காட்சி! ஆனையும் இருக்க, அதனுடன் அப்பனும் இருக்க......ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள் (வடமொழியில்: கஜேந்திர வரதராஜப் பெருமாள்) திருவடிகளே சரணம்!



"பாஞ்சாலிக்கு வருவோம்!
அவள் ஒன்றை வேண்டிச் செய்தாள் - அது தவறில்லை - தன்னால் இயன்ற மட்டும் போராடிப் பார்த்தாள்! ஒன்றும் முடியாது என்று தெரிந்து போகவே, இறுதியில் வேண்டிக் கொண்டாள்!
என்னவென்று வேண்டிக் கொண்டாள்? அது அவளுக்கே தெரியாது! அது தான் வேடிக்கை!:-)

”கடவுளே, என்னை வீமன் காப்பாற்றுவானா? விசயன் வில்லெடுப்பானா? பீஷ்மர் எழுந்து ஆணையிடுவாரா? விதுரர் விடாமல் போராடுவாரா? அது நடக்குமா? இது நடக்குமா??” என்றெல்லாம் நினைத்தாளே தவிர "இறைவா, என் மானம் காப்பாற்று" என்று மட்டும் நினைக்கத் தோன்றவே இல்லை!

இன்னின்ன இப்படியிப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கும் மனித மனம்,
கடினமான நேரத்திலும் காரியத்தைத் தான் கவனிக்கறது! காரணத்தை மறந்து போகிறது!

இறைவனுக்கும் அவள் கேட்டதை உடனே கொடுத்து விட ஆசை தான்!
ஆனால் அவரா? இவரா? அதுவா? இதுவா? என்று வினாடிக்கு வினாடி அவள் விருப்பம் மாறிக் கொண்டே இருக்கிறதே! எதை விரும்புகிறாள்? எதைக் கொடுப்பது???

இறுதியில் தன் விருப்பம் எதுவும் சரி வரவில்லை என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! எல்லாம் முடிந்தது! ”ஏழு தலைமுறைக்கும் என் குலத்தைக் காப்பாற்று!” என்று தன்னையும் அறியாமல் அவள் நா முணுமுணுக்கிறது! அதற்கு மேல் எதுவும் கேட்கக் கூடத் தோன்றவில்லை!
உட்சோ தியிற் கலந்தாள்; - அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமை யுற்றாள்!
ஹரி, ஹரி, ஹரி என்றாள்; - கண்ணா,
அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள்


கோவிந்தா........!
சரணாகதி முடிந்தது! அருள் மழை பொழிந்தது!
நாயகன் செய்யாததை, அவன் நாமம் செய்தது!
தன் விருப்பம் எதுவென்று தெரியாது, இறைவனிடமே ஒப்புவித்தாள்! அவள் எதை விரும்பியதாக நினைத்தாளோ, அதுவே அவளுக்குக் கிட்டியது!

சரணாகதி செய்ததை பின்னர் அவளே மறந்து போய் விட்டாள்! ஆனால் அவன் மறக்கவில்லை!
ஏழு குலத்துக்கும் கர்ப்பத்தில் உள்ள குழந்தையையும் சேர்த்தே காப்பாற்றினான்!
= இது காம்யார்த்த சரணாகதி! நொடிப்பொழுது சரணாகதி!
இதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்!
ஒரு பொருள் மேல் பற்று போய், இன்னொரு பொருள் மேல் பற்று வரும் போதெல்லாம், அதை வேண்டிச் செய்ய வேண்டும்!

பரிபூர்ண சரணாகதியில், அப்படி இல்லை!
ஒரு முறை ஒப்புவித்தது ஒப்புவித்தது தான்!
இனி எல்லாம் அவன் திருவுள்ள உகப்பே! இனி எல்லாம் சுகமே!
உனது ஆளாக என்றென்றும் பார்த்திருப்பேன் அடியேனே!
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!



"சரி வில்லி........ரொம்ப தத்துவம் எல்லாம் வேண்டாம்!
உன் மனதை அரித்தெடுக்கும் கேள்வி! அதை நீயும் கேட்டு விட்டாய்...
அதற்கு விளக்கேற்றி வைக்கிறேன். விடை தெரிகிறதா பார்!

என்ன கேட்டாய்? சரணாகதி செய்தால் உனக்கு மோட்சம் கிடைக்குமா என்று தானே கேட்டாய்?
எங்கே சொல் பார்ப்போம்...இராமானுசன் என்னும் எனக்கு மோட்சம் கிடைக்குமா?"

"குருவே என்ன கேள்வி இது? அய்யகோ! அய்யகோ!"

"பதறாதே! பயப்படாமல் சொல்!"

"அரங்கத்து ஆலயத்தைத் திருத்தி வைத்தீர்! "நம்மை உடையவர்" என்று அந்த அரங்கனே சொன்ன உடையவர் நீங்கள்! திருமலை அப்பனுக்கே சங்காழி அளித்த அண்ணல்!
மாறனின் தமிழ் வேதத்தை மாநிலம் முழுதும் தழைக்கச் செய்தவர்!
குலத்தால் தள்ளாது அனைவரையும் நலத்தால் நல்கும் கருணை கொண்டவர்!
- உங்களுக்கு மோட்சம் கிட்டாது என்றால் வேறு யாருக்குத் தான் கிட்டும்?"

"இல்லையப்பா! எனக்குக் கிட்டாது!
இராமானுசன் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!"

(தொடரும்...)
Read more »

Wednesday, July 09, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - 1

"என்ன இது லூசுத்தனமான கேள்வி? இறைவன் தானே எல்லாருக்கும் மோட்சம் அருளுவதாக சொல்லுவாங்க! அவருக்கே மோட்சம் கிடைக்குமா-ன்னு கேட்டா என்ன அர்த்தம்? வர வர உங்க விளையாட்டுக்கு அளவே இல்லாமப் போச்சு கேஆரெஸ்!" - அப்படி-ன்னு என்னைத் திட்ட வரீங்க தானே? :-)

என்னங்க பண்ணறது! நம்ம ஸ்ரீதர் நாராயணன் அண்ணாச்சியோட Dragon Fly Effect-ல மாட்டிக்கிட்டேன்-ல! அதான் இப்படி எல்லாம் எடக்கு மடக்கா யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!:-)
போதாக்குறைக்குப் பொன்னப்பா-ன்னு எங்க பாலாஜி வேற "அவர் என்ன லூசா?"-ன்னு சங்கிலிக் கேள்வித் தொடர்-ல கேட்டிருந்தாரா? அதான் இப்படி ஒரு லூசான யோசனை.....
அட, பேசாம மேற்கொண்டு பதிவைப் படிங்கப்பு :-)

அன்று காவிரிக் கரையில் இராமாயண உபன்னியாசம்...விபீஷண சரணாகதி கட்டம்...
அப்போ தான் இந்தக் கேள்வி எழுகிறது! லூசுத்தனமான இந்தக் கேள்வியைக் கேட்கிறது கேஆரெஸ் இல்லீங்கப்பா!
சாட்சாத் ஒரு விற்பன்னர்! அறிவும் அன்புமாய் கலந்து தன் மாணாக்கருக்குச் சொல்லிக் கொடுப்பவர்! அவர் போய் இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? சிலர் நெளிகிறார்கள்! சிலர் முகம் சுளிக்கிறார்கள்!

அம்மா மண்டபத்து ஆலமரத்தின் கீழே ஒரே சலசலப்பு!
ஆல இலைகள் சலசலக்க, ஆற்று நீர் சலசலக்க, ஆசார்யன் கேட்ட கேள்வியால் ஆட்கள் எல்லாம் சலசலக்க, அடியார்கள் சலசலக்க...
"அந்த வீடணன் துரோகி தானே?" - இதுவல்ல கேள்வி! இதை மெள்ள இன்னொரு பதிவில் பார்த்துக்கலாம்! :-)
"சொல்லுங்க பார்ப்போம், இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா?" - இது தான் அந்த மகாகுரு கேட்ட கேள்வி! இதை மட்டும் இந்தப் பதிவுத் தொடரில் பார்ப்போம்! :-)



அண்ணன் இராவணன் மிகவும் இழிவாகப் பேசி வெளியேறச் சொல்லி விட்டான்! இந்திர சித்தோ சீற்றப்பன் ஆகி, சிற்றப்பனைச் சிறுமைப்படுத்தி விட்டான்!
இலங்கையை விட்டு, மனைவியை விட்டு, மக்களை விட்டு ஓடோடி வருகிறான் வீடணன். கண்ணீர் மல்க கும்பகருணனின் நிலையையும் எண்ணிக் கொண்டே வருகிறான்! நண்பர்கள் நால்வர் அவனுடன் பறந்து வருகிறார்கள்!

இராமன் இருக்கும் இடம் வந்து சேர்கிறான் வீடணன்...பார்த்தாலே தெரிகிறது அவர்கள் அசுரர்கள் என்று! உடனே குரங்கினப் படைகள் சூழ்ந்து அவர்களை விரட்டப் பார்க்கின்றன!
இன்னும் வீடணன் வானத்தை விட்டுக் கீழே இறங்கவில்லை! இறங்கினால் அதோகதி தான்!

அதோகதியில், யார் கதி? அதோ கதி! அதோ கதி! என்று அடியவர்க்கு அதோ...கதியாக கண்ணுக்குத் தெரிகிறானே! இராமன்! அதோ நம் கதி! - இதுவே வீடணனின் அப்போதைய மனநிலை!

கார் தான் எனும் மெய்நீர் உரையும் என்ன
கண்ணன் கழல் அடைந்து உய்ய வந்தேன்!
ரக்ஷமாம் சரணாகதம்! ராகவாய மகாத்மனே!
சர்வ லோக சரண்யாய, விபீஷணம் உபாஸ்திதம்!

"அன்பர்களே! என் பேர் வீடணன்; இலங்கைப் பேரரசன் இராவணனின் தம்பி! அண்ணனை நல்வழிப்படுத்த முடியவில்லை! துரத்தி விட்டனர்! புகல் ஒன்று இல்லா அடியேன், அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்! போய் இராமனிடம் சொல்லுங்கள்;

சர்வ தர்மங்களையும் விட்டு விட்டேன், அவன் ஒருவனே சரணம் என்று வந்துள்ளேன்!
குடும்பத்தை விட்டேன், சுற்றத்தை விட்டேன்,
செல்வத்தை விட்டேன், பதவியை விட்டேன்,
நாட்டை விட்டேன், மானத்தை விட்டேன்,
ஊர் தூற்றி ஏசுமோ என்னும் சுய கெளரவம் விட்டேன்!
அண்ணனை விட்டேன், ஆயின் அண்ணலை விடேன்!!

இலங்கையில் இருந்து வந்த முதல் அகதி அடியேன் தான்!
அண்ணலிடம் போய் என் சரணாகதியைச் சொல்லி ஆற்றுப்படுத்துங்கள்!"



சுக்ரீவனுக்குச் சந்தேகம், அங்கதனுக்குச் சந்தேகம், ஜாம்பவானுக்குச் சந்தேகம், இன்னும் எத்தனை பேரோ, அத்தனை பேருக்கும் சந்தேகம்!

"இதுவா சரணாகதி? இவன் மேலே இருக்கான்! அண்ணல் கீழே இருக்கார்! ஒரு பணிவு வேணாம்? ஆணவம் பிடித்த அசுரன், சரணாகதி செய்யும் லட்சணத்தைப் பாருங்கள்!

இவன் எதிரியின் ஒற்றனே தான்!
இல்லையென்றால், ஏதாவது தவறு செய்தபடியால் இவனை இராவணன் அடித்து விரட்டி இருப்பான்!
இல்லையென்றால், மண்ணாசை பிடித்துப் போய் மானம் இல்லாமல் உதவி கேட்டு வந்திருப்பான்!
இவனைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது!" - சொல்வது சுக்ரீவன்! புன்னகை பூப்பது இராமன்!

இதில் நகைச்சுவை என்னவென்றால் "மண்ணாசை பிடித்துப் போய் மானம் இல்லாமல் உதவி கேட்டு வந்திருப்பான்!" என்பதைச் சுக்ரீவன் சொன்னது தான்!
சில மனிதர்களுக்கு ஒரு வேடிக்கையான குணம்: தனக்கொரு நியாயம்; பிறர்க்கொரு நியாயம்! தன் கருத்துக்கு ஒரு நியாயம்! மற்றவரின் அதே கருத்துக்கு வேறொரு நியாயம்! ஐயன் வள்ளுவனே சிரிக்கிறான்!
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற் பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு?

நாத்திகனுக்கு,
சீதை எனும் பெண்ணை இழிவாகப் பேசினால் - அது நியாயம்!
ஆனால் பெண்ணை மற்றவர்கள் இழிவாய்ப் பேசி, பெண்ணுரிமை மறுத்தால் அது அநியாயம்!
ஆத்திகனுக்கு,
நந்தனார் பாஷை தெரியாமல் செய்யும் பூசை - அது நியாயம்! புராணமாகும்!
ஆனால் அடுத்த வீட்டுக் குப்பன், ஏதோ அவன் அறிந்ததை ஓதி வழிபட்டால், அது மட்டும் தீட்டாகும்! :-)

ஆனால் இப்படி இரட்டை இரட்டை நிலை எடுக்கத் தெரியாதவன் தானே உண்மையான அடியவன்!
வீடணனின் நிலைமை அங்கே ஒரே ஒரு அடியவனுக்குத் தான் தெரிந்திருந்தது!
இப்போது சரணாகதி செய்பவனின் நிலை, அப்போது சரணாகதி செய்தவனுக்குத் தெரிந்திருந்தது!
யார் அந்த அடியவன்? சிறிய திரு அடியவன்?
சரணம் கேட்டு வந்திருப்பவன் கொடியவனா? இல்லை கொடி-அடியவனா?
இராமன் கூட்டிய சபையில், பக்தனுக்காக ஒரே ஒரு குரல்!
- அது அன்றும், இன்றும், என்றும், எம் அன்பன் ஆஞ்சநேயனின் குரல்! சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!


உபன்னியாசம் மிக அழகாக போய்க் கொண்டு இருக்கும் வேளையில்...
"அச்சோ! நான் தேறுவேனா?" - இப்படி ஒரு குரல் முன் வரிசையில் இருந்து!
அரற்றும் கூக்குரல் அது!....
பாதியில் எழுந்து அரற்றுகிறார் ஒரு சீடர்!

"இத்தனை பேர் இருக்கும் சபையில், இப்படியா ஒரு சீடன் நடந்து கொள்வது? ச்சே! இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சீடனாகச் சேர்த்துக் கொண்டால், இப்படித் தான் ஆகும்! ஒரு இங்கிதமும் தெரியாது! அழகானதொரு உபன்னியாசம் இப்படிப் பாதியில் நின்று போனதே!" - சீடர்கள் சில பேரின் பொருமல்!

"என் சீடனே! என்ன புதுப் பழக்கம்? ஏன் திடீர் என்று இப்படிப் பாதியில் அரற்றுகிறாய்? என்ன ஆனது உனக்கு?"

"சாமீ...விசயம் தெரியாமல் போயும் போயும் இந்தப் பெருமாளுக்கு நான் ஒரு அன்பன் ஆனேனே!
பெண்டாட்டி, புள்ளை, சொத்துபத்து, பதவி-ன்னு எல்லாம் விட்டுட்டு வந்தான் ஒருவன்! அவனை நடுவானத்தில் நிறுத்தி வைத்து விட்டு, இப்படியா விசாரித்துக் கொண்டு இருப்பார்கள்? இது தானா அந்த இராமனின் குணம்?
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ன்னு நேற்று சொன்னீங்களே! ஆனா இப்படி ஆயிடிச்சே சாமீ...

"ஓ...இதனால் உனக்கு என்ன கஷ்டம்? அச்சோ, நான் தேறுவேனா என்று ஏன் கத்தினாய்?"

"இப்படி அனைத்தையும் விட்டுட்டு், அவன் ஒருவனே கதி-ன்னு வந்தான்! அவனுக்கே இந்தக் கதி-ன்னா.....
ஒன்னுத்தையும் விடாம, சும்மா ஒப்புக்கு இருக்கும் அடியேனுக்கு என்ன கதியோ?
அவனாச்சும் ரெண்டு மந்திரம், ரெண்டு பாட்டு சொன்னான்! எனக்கு அது கூடத் தெரியாதே!

குருவே, எங்களை எல்லாம் உபன்னியாசத்தின் முடிவில் சரணாகதி செய்யுமாறு சொன்னீங்களே?...
நான் சரணாகதி செய்தால், யார் யாரை எல்லாம் கூட்டி, என்னென்ன விசாரணை எல்லாம் நடக்குமோ, தெரியலையே?

அட இராமா! இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?"

(தொடரும்....)

Read more »

Tuesday, July 01, 2008

வெட்டிப்பயல் ரீமேக்! சணல் கயிறு=Pointer to Pointer!

வெட்டிப்பயலின் மணல் கயிறு பதிவை ரீமேக் பண்ணா என்ன? எப்பவும் தெலுங்குப் படத்தையே தான் ரீமேக் பண்ணனுமா? ஃபார் ஏ சேஞ்ச், ஒரு தெலுங்குப் பதிவை ரீமேக் பண்ணா என்ன? :-) கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட் இதோ!

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணுங்க போடாத கண்டிஷனே இல்ல! இதுக்கு "வெட்டி"யோட அந்த வித்யாவே சாட்சி!
ஏன்.....நம்ம பசங்க கண்டிஷன் போட மாட்டானுங்களா? இல்ல கண்டிஷன் போடத் தான் தெரியாதா? பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?

போட்ட கண்டிஷன்ல, அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கிப் போயி நம்ம நாரதர் நாயுடுவோட வொய்ஃப், சரோஜினி நாயுடு கிட்ட வராங்க.
அந்த பையனுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே? சரி, வித்யாவுக்கு ரைமிங்கா விக்ரம்-னு வெச்சிடுவோம்.


சரோஜினி நாயுடு: வாப்பா விக்ரம். நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா பிரியாணியே இறங்கலயாமே? எங்கே...அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லு! நானே உனக்கு நல்ல பொண்ணா பாக்கறேன்.

விக்ரம்: ஓ...அப்படியா நாயுடு ஆன்ட்டி! நான் BE Mechanical படிச்சிருக்கேன்.

ச.நா: அதுக்கென்னப்பா! அதுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்துடலாம்.

விக்ரம்: BE Mechanical படிச்சாலும், நான் கம்ப்யூட்டர் கம்பெனி-ல தான் வேலை பாக்குறேன்!

ச.நா: அடடா! கம்ப்யூட்டர் கம்பெனி-ல கியர் பாக்ஸ் ஏதாச்சும் மாத்துற வேலையா தம்பி?

விக்ரம்: அட! அது இல்லீங்க! எலெக்டிரிக்கல் படிச்சவன் கூடத் தான் கம்ப்யூட்டர்-ல இருக்கான்! அவன் என்ன கலர் கலரா ஒயரையா புடுங்கிக்கிட்டு இருக்கான்?
எம்.எஸ்சி கணக்கு படிச்சவன் கூடத் தான் கம்ப்யூட்டர்-ல இருக்கான்! அவன் என்ன கலர் கலரா ஃபிகரையா கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கான்?
கம்ப்யூட்டர்-க்குள்ள யாரு வேணா வரலாம் ஆன்ட்டி! ஆனா இங்கிருந்து தான் வேற எங்கேயும் போக முடியாது!

ச.நா: ஏம்பா?

விக்ரம்: ஆடுன காலும், பாடுன வாயும், தட்டுன பொட்டியும் என்னைக்காச்சும் சும்மா இருக்குமா?
வொர்க் பிரம் ஃபாக்டரில, எப்படி வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணறதாம்? டயத்துக்கு வேலை பாத்தாவணும்! வேலை பாத்தே வெளங்காமப் போயிருவானுங்க ப்சங்க!

ச.நா: ஓ, அதானா சங்கதி?
அன்டர்வேர் கம்பெனிக்காரன் கூட, சாஃப்ட்வேர் கம்பெனி மாப்பிள்ளையா ஏன் கேக்குறான்-ன்னு இப்பல்ல புரியுது!
சரி, மேட்டருக்கா வா! உனக்கு எந்த வேலை செய்யற பொண்ணைப் பாக்கட்டும்? அதைச் சொல்லு ராசா!

விக்ரம்: எனக்கும் சாப்ட்வேர்-ல வேலை பாக்குற பொண்ணு தான் வேணும்!

ச.நா: ஏன்பா, ஒரே உறையில எப்படிப்பா ரெண்டு கத்தி இருக்கும்? நல்லா யோசிச்சிச் சொல்லு! இது வாழ்க்கைப்பா வாழ்க்கை!
அப்பறம் நீ பொட்டி தட்ட மாட்ட!
வாழ்க்கை ஃபுல்லா ரொட்டி தான் தட்டுவ!

விக்ரம்: அட...இதெல்லாம் நாங்க யோசிக்காம பேசுவமா? ஏதோ பதிவு எழுதறோம், பின்னூட்டம் போடறோம்-ங்கிறதுக்காக, யோசனையே பண்ண மாட்டோம்-னு நெனச்சிக்காதீங்க! நான் ஒரு டெவலப்பர்...அதனால...

ச.நா: அதனால என்னா இப்போ?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 1: பொண்ணு சாப்ட்வேர்ல இருக்கணும்! ஆனா டெஸ்ட்டரா இருக்கக் கூடாது! டெவலப்பராத் தான் இருக்கணும்!

ச.நா: என்னாடா பொழைப்பு இது? ஏதோ ரியல் எஸ்டேட் டெவலப்பர் ரேஞ்சுக்குப் பேசறியே!

விக்ரம்: நல்லாக் கேட்டுக்கோங்க ஆன்ட்டி.
டெஸ்ட்டருங்களுக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
யூசருக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
அனலிஸ்ட்டுக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
மேனேஜருக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!

ச.நா: அப்ப, யாருக்குத் தான் ஆகும்?

விக்ரம்: டெவலப்பருக்குத் தான் ஆகும்!
ஒரு டெவலப்பரோட மனசு ஒரு டெவலப்பருக்குத் தான் தெரியும்!
அதுனால எனக்கு வரப் போற பொண்ணு ஒரு டெவலப்பராத் தான் இருக்கணும்!

ச.நா: என்னமா அலசி, ஆராய்ஞ்சி, முடிவு எடுத்திருக்குற? மொதல் கண்டிஷனே சூப்பர்! மேல சொல்லு!


விக்ரம்: கண்டிஷன் நம்பர் 2. எனக்கு என் கெரியர் தான் முக்கியம்!

ச.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னபா நல்லதா பார்த்து வாங்கி தரச் சொல்றேன். ஆனா மத்தியானச் சாப்பாட்டுக்கு, டிபன் கெரியர்-ல தான் சாப்பாடு கொண்டாறணும்-னு எல்லாம் கண்டிஷன் போட்டுறாத ராசா! கண்ணகியோட கசின் பிரதர் கூட, இப்பல்லாம் இப்படிக் கேக்கறது கிடையாது!

விக்ரம்: ஆன்ட்டி. நான் சொல்றது என்னோட ப்ரஃபொஷன். எந்தக் காரணத்துக்காகவும் என் வேலையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்! வொர்க் இஸ் வொர்சிப்! மத்ததெல்லாம் கர்ச்சீப்!

டெட்-லைன் போது, டேமேஜர் போட்டு நெருக்குனார்-னா வைங்க, வேலைய வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வருவேன்! அதைக் கூடமாட இருந்து அந்தப் பொண்ணு தான் முடிச்சிக் கொடுக்கணும்! என்னா சரியா?

ச.நா: அடடா! உன் ஆபீஸ் வேலையில கூட அவளுக்குச் சம உரிமை கொடுக்குறியேப்பா!

விக்ரம்: எக்ஜாக்ட்ல்லி! அப்பறம் இதுலயே ஒரு முக்கியமான சப் கண்டிசன்! 2b. நான் அப்பாவான பிறகு, குழந்தையை அந்தப் பொண்ணு தான் பாத்துக்கணும்! எனக்கு என் கெரியர் தான் முக்கியம்! வேணும்னா வாரத்துல அஞ்சு நாள் மட்டும், நான் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணிக்கிட்டே, டயாபர் மாத்த ரெடியா இருக்கேன்!

ச.நா: அடடா! ஆம்பளைப் புள்ளன்னா இப்பிடியில்ல இருக்கணும்! அந்த மாதிரி பொண்ணையே பாத்துடறேன் ராசா! அடுத்து?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 3. அவ பாக்கறதுக்கு....ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு ஹீரோயின் மாதிரி இருந்தா தேவலாம்!
மண்டேன்னா மாளவிகா,
செவ்வாய்-னா செரீன்,
புதன்-னா பூமிகா,
வியாழன்-னா வேதிகா,
வெள்ளி-ன்னா, அந்தக் கள்ளி பாவனா மாதிரி இருக்கணும்!

ச.நா: ஹூம்! சனி, ஞாயிறு? அதை மட்டும் ஏன் வுட்டுட்ட?

விக்ரம்: அய்யய்யோ! வீக் என்ட் நாங்க அவுட்டிங் போவோம்-ல! என்னைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, அவனவன் அவளைச் சைட் அடிச்சிக்கிட்டு இருந்தானா? சேச்சே அதெல்லாம் வேலைக்காவாது! சனிக்கெழமை குஷ்பூ, சண்டே-ன்னா ராதிகா மாதிரி மேக்-அப் பண்ணிக்கிட்டாப் போதும்! நான் ரொம்பல்லாம் எதிர்பார்க்கல!

ச.நா: ரொம்ப நல்ல பையனா இருக்கியேப்பா! பொண்டாட்டியை யாருக்கும் தெரியாம, கைக்குள்ள வச்சித் தாங்கற பையன்-னா அது நீ தான்!


விக்ரம்: கண்டிஷன் நம்பர் 4. அவளுக்கு நல்லாச் சமைக்கத் தெரியணும்! அது வாய்க்கு ருசியா இருக்கணும்-னு எல்லாம் கேக்குற கொடுமைக்கார பையன் நான் இல்லீங்க!
பொண்ணுங்க என்ன பசங்களுக்கு சமைச்சிப் போடவா பொறந்து இருக்காங்க?

ச.நா: அடா! அடா! அடா! சாப்ட்வேர் தொறைல இப்படி ஒரு பாரதியார் இருக்காரா?......சரி, அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ ராசா?

விக்ரம்: வாரம் ஃபுல்லா மைக்ரோவேவ்-ல போட்டுக் கொடுத்தாப் போதும்! நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்! ஆனா என்னைப் பாத்திரம் மட்டும் கழுவச் சொல்லக் கூடாது! எனக்குத் தண்ணில கண்டம் இருக்கு-ன்னு ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க!

ச.நா: வெரி குட்! இதுல சப்-கண்டிசன், சப்பைக்-கண்டிசன் ஏதாச்சும் இருக்கா?

விக்ரம்: 4b. வீக் என்ட் ஆனா, அத்தையும் மாமாவும், எங்க வீட்டுக்கு வந்தே ஆகணும்!

ச.நா: அடடா! என்னா ஒரு மனசு! யாரு, அந்தப் பொண்ணோட அம்மா, அப்பா! அவங்க தானே?

விக்ரம்: அட, அவங்க எனக்கும் அம்மா அப்பா மாதிரி தானே!
அவங்க வரும் போது பெரிய டிபன் கேரியர்-ல சிக்கன் பிரியாணி, மட்டன் குருமா, வறுத்த எறா, பொரிச்ச மீனு-ன்னு ஏதாச்சும் லைட்டாப் பண்ணிக் கொண்டு வந்தாப் போதும். அப்படியே சாயங்காலம் டிபனுக்கு கொத்து பரோட்டா இருந்தாக் கூட ஓக்கே தான்!

ச.நா: சூப்பர் கண்டிசனா இருக்கே! அப்போ உங்க அம்மா, அப்பா?

விக்ரம்: எங்க அம்மா-அப்பா, என் பிரெண்ட்ஸ்...இவங்கெல்லாம் யாரும் வீட்டுக்கு வரவே மாட்டாங்க! நான் கியாரண்ட்டி! கவலைப்பட வேணாம்-னு பொண்ணு வீட்ல சொல்லுங்க!
அப்படியே பசங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னாக் கூட, "டேய் ஓட்டலுக்கு வாடா நாயே"-ன்னு சொன்னா, பிரெண்ட்ஸ் வராமயா போயிடுவானுங்க?

ச.நா: அடடா! என்னா ஒரு ஷிப்பு!
டைட்டானிக் ஷிப்பு கவுந்தாக் கூட உங்க ஃப்ரெண்ட்ஷிப்பு மட்டும் கவுறவே கவுறாதுடா! இவ்ளோ தானா? வேற எதாச்சும் இருக்கா?

விக்ரம்: கண்டிஷன் நம்பர் 5. எந்த காரணத்தை கொண்டும் எனக்கு ஆன்-சைட் கெடைச்சா கூடவே வருவேன்-ன்னு அடம் புடிக்கக் கூடாது!
நான் அங்க, யாரைப் பாக்கணுமோ பாத்து, நல்லாப் பேசிப் பழகி, "எல்லாத்தையும்" செட்டப் பண்ணனும்-ல? ஒரு வருசம் கூட ஆகலாம்!...அது வரைக்கும், அவ அவங்க அம்மா வீட்டிலயே கூட இருந்துக்கலாம்!
வேணும்னா ஒரு IP Phone வாங்கித் தாரேன்! அதுல டெய்லி எல்லாம் என்னைக் கூப்டாம, வாரா வாரம் என்னைக் கூப்டுறணும்!

ச.நா: என்னா பாசம்! என்னா பாசம்! போதும் ராசா!
அஞ்சு கண்டிசன் மேல போட்டீன்னா, பஞ்சாப் பறந்து, பஞ்ச்சராயிடுவ நைனா!

விக்ரம்: இருங்க! இருங்க! ரொம்ப முக்கியமான கண்டிஷன் ஒன்னு இருக்கு! எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆயிடுச்சின்னு வைங்க....

ச.நா: அட...ஏம்பா இப்படி அபசகுணமா பேசற? மொதல்ல வாயை கிங்-பிஷ்ஷர் ஊத்திக் கழுவுப்பா!

விக்ரம்: இருங்க ஆன்ட்டி.....சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனைன்னு வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவ கண்டிப்பா, ரெண்டே மாசத்துல வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

ச.நா: இது! இது! இங்க தாம்பா நீ ஒரு பெண்ணீயம் பேசும் பெருமகன்-னு நிரூபிக்குற.

விக்ரம்: அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. அதுக்கப்பறம் அவளுக்கு நான் மாசா மாசம், கப்பம் கட்ட வேணாம் பாருங்க! அதுக்குத் தான்!

சரோஜினி நாயுடு மயக்கம் போட்டு கீழே விழுகிறார்...
நாரதர் நாயுடு என்னும் வெட்டிப்பயல் ஆசை ஆசையா ஓடியாந்து சரோவுக்குக் கொஞ்சம் தண்ணி தெளிச்சி விடுகிறார்....
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP