Monday, November 24, 2008

கேஆரெஸ் சிவம்! துளசி சிவம்! பதிவர் சிவம்! பரமம் சிவம்!

கேஆரெஸ் சிவம்! ஜிரா சிவம்! துளசி டீச்சர் சிவம்! நம்ம ஜீவா சிவம்!
குமரன் சிவம்! கோவி கண்ணன் சிவம்! எஸ்.கே. சிவம்! மெளலி அண்ணன் சிவம்!
தேவும் சிவம்! வெட்டிப் பயலும் சிவம்! ஆயில்ஸ் சிவம்! அந்த அதிஷா சிவம்!
கானா சிவம்! கொத்த னாரும் சிவம்! துர்கா சிவம்! மை ஃபிரெண்டும் சிவம்!
பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்! பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்!!

அடப்பாவி கேஆரெஸ்! நல்லாத் தானே இருந்தே? என்ன ஆச்சுறா உனக்கு?
சுப்ரபாதம் போட்ட கையோடு, இப்படிச் சூடா வெண்பொங்கல் கணக்கா கொழ கொழ-ன்னு ஆயிட்டே? - அப்படின்னு பாக்கறீங்களா மக்களே? ஹா ஹா ஹா!

ஆல் பிகாஸ் ஆஃப் திஸ் குமரன்! இருங்க, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு சிவத்தை விட்டுபுட்டேன்! அவிங்களையும் சொல்லிடறேன்!
கீதா சிவம்! ஓ! அது அவங்க பேர்-ல ஏற்கனவே இருக்கா! சரி சரி!
கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! :)

மேட்டர் என்னான்னா, நம்ம கூடலார்-குமரனார் ஒரு பதிவு போட்டிருக்காரு! நானே சிவன்! நானே சிவம்-ன்னு!
அதைப் படிச்சதிலிருந்து, எனக்கு வேற வேலையே ஓடலை! அப்படியே ஒட்டிக்கிச்சி! ஏன்னா, நான் ரொம்ப நாளாய், அதுவும் நாத்திகனில் இருந்து ஆத்திகனாய் மாறிய காலம் தொட்டு, மிகவும் விரும்பிப் படிக்கும் பாட்டு அது!

இல்லை, இல்லை-ன்னு தான் அந்தப் பாட்டில் வரும்!
இல்லை-ன்னு சொல்லும் நாத்திகத்தை விட்டு வர, எனக்கு இந்த "இல்லை-இல்லை" பாட்டு தேவைப்பட்டுதோ என்னமோ? :)

ஆத்ம ஷட்கம் (நிர்வாண ஷட்கம்) என்பது அதற்குப் பெயர்! விடுதல் ஆற்றுப்படை-ன்னு, தமிழில் மொழி பெயர்த்து இருக்கேன்! :)
நிர்வாணம் = விடுபடுதல்! விடுபட்ட நிலை
ஷட்கம் = ஆறு பாடல்கள்
அதான் நிர்வாண ஷட்கம் = விடுதல் ஆறு! விடுதல் ஆற்றுப்படை!
ஆறு செய்யுளும் இருக்கு! நமக்கு ஆற்றுப் படையாகவும் இருக்கு!

இது ஜகத்குரு ஆதி சங்கரரின் அருளிச் செயல்!
பல தத்துவங்களை உள்ளடக்கிய பாட்டு! அத்வைதம் என்றால் என்ன என்று படிக்கத் துவங்குபவர்கள், இதைப் படிச்சிட்டுத் துவங்கினா, அத்வைதத்தின் நுண்ணிய கருத்துகள் பலவும் மிக எளிதாகப் புலப்படும்! ஏன் தெரியுமா?

ஆதி சங்கரரே, இதைப் பாடி விட்டுத் தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சாராம்!
அடியேன் சங்கரனும், இதைப் படிச்சிட்டு தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சேன்!
வாங்க, எப்பமே கதையைச் சொல்லிட்டுக் கருத்தைச் சொல்லுறது தானே என் கெட்ட பழக்கம் :)


ஆதி சங்கரர், என்ன தான் கருவிலே திரு உடையவர் என்றாலும், ஒரு நல்ல குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்! அப்போது தான் முதலை வாயில் இருந்து தப்பித்து, தாயின் இசைவோடு ஆபத் சன்னியாசம் பெற்று இருந்தார்! அது தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட சன்னியாசம்! முறையான ஒன்று அல்ல!

அப்படியே நடந்து நடந்து, இமயமலையில் உள்ள பத்ரிநாத் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார் சங்கரர்! கோவிந்தன் துணைகொண்டு ஞானம் பெற வேண்டும்! பரந்து விரிந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும்!

திருவதரீ என்றும் பத்ரிகாச்ரமம் என்றும் சொல்லப்படுவது பத்ரிநாத்! 108 திவ்யதேசங்களிலே ஒன்றாக வைத்துப் போற்றப்படுவது! அதரி என்றால் இலந்தைப் பழ மரம்!
அதனடியில் பத்ரி நாராயணனாக, ஞான குருவாக இறைவன் வீற்றிருக்கிறான்! யோக முத்திரை காட்டியபடி! அவனுடன் மகாலக்ஷ்மி, சேனை முதலியார் என்று ஆசார்ய பரம்பரை!
கூடவே கருடன், வியாழன், நாரதர், குபேரன், உத்தவர், நர-நாராயணர்கள்!
பத்ரிநாதப் பெருமாள் ஞான குருவாக அமர்ந்து உபதேசிப்பதை, அர்த்த பஞ்சக ஞானம் என்று குறிப்பிடுவார்கள்!
1. ஜீவாத்மா எது?
2. பரமாத்மா எது?
3. ஜீவாத்மா எதை அடையணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?

சங்கரர் தப்த குண்டம் என்று சொல்லப்படும் சுடு நீர் ஊற்றிலே குளித்து விட்டு, பத்ரீநாதனை மனதால் சேவித்துக் கொண்டார்! பின்னாளில் அந்த ஆலயத்தின் இறைவனை ஆற்றில் இருந்து தாம் தான் எடுத்து மீட்கப் போகிறோம் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை! தன் அடி மன வேட்கையான ஒரு நல்ல குருவை அடையணுமே என்று வேண்டிக் கொண்டு, இமயமலையின் மேல் நடக்க ஆரம்பித்தது தான் தாமதம்...

கண் முன்னே அந்த ஞான குரு! பெயர் கோவிந்த பாதர்!
அடியேனைத் தங்கள் சீடனாய் வரிக்க வேண்டும் என்று இந்தப் பிள்ளை வேண்ட,
யாரப்பா நீ? என்று வந்தது ஒரே ஒரு கேள்வி!

சங்கரர் அதுகாறும் மனத்தில் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் மள மளவென்று மழை போல் பொழியத் துவங்கி விட்டார்!
* நான் மனம் இல்லை! நான் புத்தி இல்லை!
* நான் சினம் இல்லை! நான் சித்தம் இல்லை!
* நான் வான் இல்லை! மண் இல்லை! வளி இல்லை! ஒளி இல்லை!
* நான் அதுவும் இல்லை! நான் இதுவும் இல்லை! நேதி! நேதி!

எதுவுமாக இல்லாத நான், "நான் யார்?" என்பதை அறியவே தங்களை நாடி வந்துள்ளேன் குருவே என்று மொழிந்தார்!
தன் காலடிக் கதையைச் சொல்லிக் காலடியில் வீழ்ந்தார் அண்ணல்!
"நான் இல்லை! நான் இல்லை!" என்று சங்கரர், குருவிடம் சொன்ன முதல் சுலோகம் இதுவே! ஆத்ம ஷட்கம்! நிர்வாண ஷட்கம் என்றும் பெயர்!

கோவிந்தபாதருக்கு இந்தப் பிள்ளையின் ஞானத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு உண்டாகிவிட்டது! உடனே சன்னியாசத்தை முறையாக அளித்து, தன் சீடனாகச் சேர்த்துக் கொண்டார்!
அத்வைத நான்கு மகா வாக்கியங்களையும், அபேத சுருதிகளையும் சொல்லித் தர ஆரம்பித்தார்! அத்வைத விசாரணையும் படிப்பும் படிப்படியாகத் துவங்கியது!

பின்னாளில் ஞானம்-கர்மம்-பக்தி என்று மூன்று மார்க்கத்துக்குமே ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கப் போகும் சங்கரனின் பாடம் துவங்கியது இப்படித் தான்!
(* கோவிந்த பாதரை பத்ரிநாத்தில் சந்திக்காமல், நர்மதை நதிக் கரையில் சந்தித்தார் என்று சொல்வாரும் உண்டு)



குமரன் பதிவு இதோ! சொல்-ஒரு-சொல்லாய், பொருளும் கொடுத்திருக்காரு!
ஆறே ஆறு பாட்டு தான்! வாய் விட்டுப் படிக்கும் போது, சந்தம் தானா வந்துரும்!
இதைச் சந்தம் மாறாமல் தமிழ்ச் செய்துள்ளேன் அடியேன்!
சொல்லும் பொருளும் இசையும் சேர்ந்து வருதா என்று நீங்களே பார்த்துச் சொல்லுங்களேன்!

மந்திர ஒலி வடிவில் - வேகமாக! (கேட்டுக்கிட்டே படிங்க)


விடுதல் ஆற்றுப்படை

* அதுவும் இல்லை! இதுவும் இல்லை! நேதி! நேதி!

மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்


மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(சிதானந்தம் = சித்தம்(ஞானம்) + ஆனந்தம்; சச்சிதானந்தம்/திருச்சிற்றம்பலம் என்பது போல் சித்+ஆனந்தத்தை மட்டும் தூய தமிழில் ஆக்காது, சிதானந்தம் என்றே வைத்து விட்டேன்! சிவோஹம் = சிவ + அஹம்)

ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

உயிர் மூச்சு மில்லை! ஐங் காற்றும் இல்லை!
எழு தாதும் இல்லை! ஐம் போர்வை இல்லை!
கை கால்கள் இல்லை! சினை வினையும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(ஐங்காற்று: ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று

எழு தாது: ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை

ஐம் போர்வை: அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


விரு வெறுப்பில்லை! மையல் பற்றும் இல்லை!
கரு கருவம் இல்லை! அழுக் காறும் இல்லை!
அறம் பொருள் நல்லின்ப வீடும் நானில்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


வினை வேட்கை இன்பங்கள் துன்பங்கள் இல்லை!
மறை வேத தீர்த்தங்கள் வேள்விகள் இல்லை!
துப்பில்லை துப்பாக்கித் துப்பாரும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(துப்பில்லை=உணவில்லை; துப்பாக்கித் துப்பாரும் இல்லை=உணவை உருவாக்கலும் இல்லை! உண்டு துய்ப்பவனும் இல்லை!)

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

மரணங்கள் கரணங்கள் சாதிகள் இல்லை!
தாய் தந்தை இல்லை! தரும் பிறப்பில்லை!
உற்றார்கள் சுற்றார்கள் குரு சீடர் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

அஹம் நிர்விகல்போ நிராகார ரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மாற்றங்கள் இல்லை! பல தோற்றங்கள் இல்லை!
எங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே!
தளையில்லை! தடையில்லை! தரும் முத்தி இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


இதி ஸ்ரீ மத் சங்கராச்சார்ய விரசித, நிர்வாண ஷட்கம் சம்பூர்ணம்!
சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்! சிவோஹம்!
(***கார்த்திகைச் சோமவாரம் சிறப்புப் பதிவு***)


இசை வடிவில்:
Read more »

Tuesday, November 18, 2008

தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?
நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!

மூன்று பெண் நாயன்மார்களில்...
* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அம்மா!
* மங்கையர்கரசியார் = பாண்டியன் மனைவி!
ஆனால் இவர்கள் இருவரும் பாட்டாக எதுவும் எழுதவில்லை! சுந்தரர் அம்மா என்பதற்காகவும், மதுரைக்கு வாதம் செய்ய சம்பந்தரை அழைத்து வந்தமைக்காகவும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்! அவ்வளவு தான்!

ஆனால் இது போன்ற செல்வாக்குப் பின்புலம் ஏதும் இல்லாமல்...
ஒரு பேதைப் பெண் நாயன்மார் ஆனார்!


கணவன், "இன்னொரு மாம்பழம் எங்கே என்று கேட்டால்", "அதாங்க இது" என்று நகைச்சுவையாகவோ,
இல்லை "ருசியா இருந்தது; அதான் நானே தின்று விட்டேன்" என்றோ பொய் சொல்லக் கூடத் தெரியாத பேதை!

"சிவனடியார்க்கு கொடுத்து விட்டோமே, இப்போது கணவன் இன்னொன்றும் கேட்கிறாரே, என்ன செய்வது?" என்று சற்று நேரம் கலங்கி நின்ற சாதாரணப் பெண் இவள்! "ஈசனே, மந்திர மாங்கனி தா"-என்று மேஜிக் எல்லாம் செய்து காட்டவில்லை! தானாக வந்தது! ஈசனின் எண்ணமோ ஏதோ, கனி வந்தது! வாழ்க்கை போனது!

கணவன் முகக் குறிப்புக்கு நடப்பவள்! ஆனால் கணவன் இவளின் அகக் குறிப்புக்கு நடந்தானா? வெட்கக்கேடு! :(



மனைவி புனிதள் என்றால், கணவன் தள்ளிக் கொள்வானா?
கணவன் புனிதன் என்றால், மனைவி தள்ளிக் கொள்வதில்லையே!


யோகம், வேள்வி, சரியை, கிரியை என்று எல்லாம் அவன் செய்து முடித்த பின்னர், அவளுடன் "அதுவும்" செய்கிறானே! அவளும் குடும்பம் நடாத்திக் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாளே?

இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! போதாக்குறைக்கு இளம்பெண் பேரிலேயே "புனித"வதி! கேட்கணுமா?
இவனோ இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு, குழந்தையுடன் வந்து நிற்கிறான்! கேட்டால், அந்தக் குழந்தைக்கும் புனிதவதி என்றே "பய-பக்தியுடன்" பெயரும் இட்டானாம்! அடா அடா அடா!

உற்றார், உறவினர், சமூகம் யாரும் எதுவும் கேட்க முடியாது!
கேட்கப் போனாலும், இளம்பெண் புனிதா தான் "புனிதள்" ஆயிற்றே! குடும்பம் நடத்த முடியுமா? கும்பிடத் தானே முடியும்? எல்லாரும் காலில் வீழ்ந்து கும்பிடுங்கள்! :(((

தில்லை இறைவனின் மனைவியும் ஒரு புனிதள் தான்! அந்தப் புனிதள் தான் சிவ-"காமி" ஆகவும் இருக்கிறாள்! குடும்பமும் நடத்துகிறாளே!
அதைப் பாடிப்பாடிக் கும்பிடும் ஒரு சமூகத்துக்கு, புனிதவதியின் நியாயம் மட்டும் தெரியாமல் போனது ஏனோ?

ஆனால் இன்னிக்கும் காரைக்காலில் "மாங்கனி உற்சவம்" மட்டும் வெகு ஜோராக நடத்துகிறார்கள்! அதில் பரமதத்தன் என்னும் கணவனுக்கு மாலை மரியாதைகள் செய்து, பல்லாக்கில் ஏற்றி, அவனை ஆற்றங்கரை விடு விழா வேறு நடத்துகிறார்கள்! :(( - இது இந்தக் காலத்திலும் தேவையா?


புனிதளக்குத் தான் மண வாழ்வு ஒவ்வாதே! அவளும் வேண்டிக் கொண்டாள்! ஈசனும் உடன்பட்டு விட்டான்! பேயாய் மாறி விட்டாள்!
ஒரு இளம்பெண், இன்னும் அம்மா கூட ஆகவில்லை...அவள் பேயாக மாறித் திரிகிறாள் என்றால்?....சுடுகாட்டு வாய்க்கரிசியை உண்டு பசியாறுகிறாள் என்றால்? அங்கேயே வாழ்கிறாள் என்றால்?...இருவது வயசு தான்! :((
பதிகத்தைப் படிச்சிப் பாருங்க! அந்தக் காலப் பேய் மகளிர் பற்றி அம்மையார் பாட்டில் சொல்லுவாங்க! கண்ணுல தண்ணி தான் வரும்!

* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
* ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?
ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?

* ஆணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!
* பெண்ணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?
* இளம் சம்பந்தருக்கு கல்யாண ஏற்பாடு பேசத் துணிந்த சமூகம், இளம் புனிதாவுக்கு மட்டும் சுடுகாட்டு வாச ஏற்பாட்டுக்குத் தான் துணியுமா?

தோழி கோதையின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன்,
தோழி புனிதாவின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்! - புனிதா...உன்னை நினைக்கும் போதெல்லாம் எனக்கு......:(

வைணவ இலக்கியத்தின் - தமிழ் மொழி, சாதி, பெண்மை, சமூகம் - என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!



நாம் அம்மையாரிடம் வருவோம்! யம்மா புனிதா, இனிக் காரைக்கால் "அம்மையார்" என்றே உன்னை அழைக்கிறோம்! ஈசனே உன்னை "அம்மா" என்று அழைத்து விட்டானே! நாங்கள் எம்மாத்திரம்?

காரைக்கால் அம்மையார் = சிறந்த கவிதை, மாறுபட்ட சிந்தனை! தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதன் முதலில் பிரபலப்படுத்தியவர் அம்மையார் தான்! அனைத்து நாயன்மார்களையும் விடக் காலத்தால் முந்தியவர்! முதலாழ்வார்களின் கால கட்டம்! இலக்கியத்தில் வெண்பா மாறி அந்தாதி துவங்கிய கட்டம்!

Iconographic Poetry என்று பின்னாளில் ஆங்கிலக் கவிஞர்கள்/ சிந்தனையாளர்கள் D.H. Lawrence, Sigmund Freud முதலானோர் பிரபலப்படுத்தினர்.

ஆனால் அந்தக் குறியீட்டுக் கவிதைகளை எல்லாம் அம்மையார் எப்போதோ தமிழில் செய்து விட்டார்!
என்ன..... அது தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்துக்குள் ஒளிந்து கொண்டது! அதனால் வெளியில் அதிகமாகத் தெரியவில்லை! அட, ஆன்மீகம் தானே, அதுல பெருசா என்ன இலக்கியம் இருக்கப் போவுது என்ற நம்மவர்களின் "பார்வை"! இன்னிக்கி அதில் ஒன்றைத் தான் நாம் தேவாரப் பதிவில் பார்க்கப் போகிறோம்!

அம்மையார் அத்தனை நாயன்மார்களிலும் காலத்தால் மிகவும் மூத்தவர் என்று சொன்னேன் அல்லவா? சொல்லப் போனால், முதல் தேவாரமே அம்மையாருடையது தான் எனலாம்!
ஆனாலும் முதலில் சிவக்கவி செய்த புனிதாவின் நூல்கள், 11ஆம் திருமுறையில் தான் வைக்கப்பட்டுள்ளது!
* அற்புதத் திருவந்தாதி
* திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை

அம்மையார் பாடல்களில் தில்லை பற்றிய குறிப்புகள் எல்லாம் இல்லை! அப்போது ஆரூர் தான் தில்லையினும் சிறப்பு!
பிள்ளையார், முருகன் என்ற மற்ற தெய்வங்களைப் பற்றியும் அவர் எங்கும் குறிக்கவில்லை!

திருவாலங்காட்டைப் பற்றி மட்டுமே சில குறிப்புகள் வருகின்றன! அதுவும் கோயில் போன்ற அமைப்பு எல்லாம் அப்போது இல்லை போலும்! உள்ளே போய் தான் கும்பிட வேண்டும் என்று இல்லாத நிலை! சுடுகாடு, ஆல மரக் காடான ஆலங்காட்டிலேயே ஈசனைத் தரிசித்து மகிழ்கிறார் அம்மையார்!

மாதொரு பாகன் வடிவத்தைத் தான் அம்மையார் மிகவும் போற்றுகிறார்! பெண்மைக்குச் சிவனார் தந்த சமத்துவத்தை, சைவச் சமூகமும் வாயளவில் இல்லாமல், வாழ்க்கையிலும் தர வேண்டும் என்ற அவரின் ஆழ்-மன ஏக்கமோ? என்னவோ?
* இராவணன் செருக்கு அழித்தது,
* முப்புரம் எரித்தல்,
* ஆலகால விடம் உண்ணல்,
* ஈசனின் அடி முடிகளைத் திருமாலும் அயனும் தேடியது என்று ஆங்காங்கு பாடினாலும், அம்மையார் பெரிதும் பாடுவது, ஈசனின் மயான நடனமே!

சாம்பல் பூசுதல், பேய் வாழ் காட்டகத்தே ஆடுதல் என்று ஈசனைக் கேலி பேசுவது போல், அம்மையாரையும் கேலி பேசி இருக்கக் கூடும்! அதான் அம்மையார் பேயாகவே, சிவ கணமாகவே மாறி விட்டார் போலும்!
உளவியல் அறிஞர்களுக்கு அம்மையார் வாழ்க்கை ஒரு பெரும் ஆய்வுப் பொக்கிஷம்!

வாங்க, அம்மையார் நகைச்சுவையிலும் எப்படிக் கலக்குகிறார்-ன்னு இன்னிக்கி பார்க்கலாம்!
* ஆன்மீகத்தில் நகைச்சுவையும் வைத்து,
* அதற்குள்ளே பெரும் உளவியல் கருத்தும் வைத்து,
* குறியீட்டுக் கவிதை ஆக்குகிறார் தேவாரப் பதிகத்தை!



சிவனார் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு என்ன பேருங்க? யாரேனும் சொல்லுங்கள்! அந்தச் சிவப் பாம்புக்குச் சுத்தமா அறிவே இல்லை!

ஹிஹி! இது என்ன தடாலடி? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? என்று கண்ணதாசன் தான் பின்னாளில் பாடினார்!
அதற்கு கருடனும் தக்க பதில் கொடுத்துருச்சாம்! ஆனால் அம்மையார் சொல்வதைப் பாருங்கள்!

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)
அது மதி ஒன்று இல்லா அரா!

ஏனம்=பன்றி; மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து=பிறைச் சந்திரன்;
மதி=நிலவு/அறிவு; அரா=அரவு (பாம்பு)

* திருமார்பில் பன்றியின் கொம்பை மாலையாக அணிந்து இருக்கான்!
* திருமுடியில் வெண் திங்களைப் பிறை சூடி இருக்கிறான் பெம்மான்!
* நடுவில், கழுத்தில் இருக்கும் பாம்பு என்ன செய்யுது? மேலும் கீழும் பார்க்குது!

மேலே பார்த்தால் - தலையில் வெண் பிறைச் சந்திரன்!
கீழே பார்த்தால் - மார்பில் வெண் பன்றிக் கொம்பு!
இப்படி மாறி மாறிப் பார்த்து, ஒரு நாளும் எது உண்மையான மதி என்று தேறவே தேறாது! மதி இல்லாத பாம்பே! மதி பெறாத வரை, நீ தேறவே மாட்டாய்!

இவ்ளோ தான் தேவாரக் கவிதை! இதில் குறியீடு என்னன்னு கேக்கறீங்களா?.....
பாம்பு எதற்குக் குறியீடு? உடல்-உள்ளத்துக்கு!
மனித வேட்கைகளுக்கு! மனித சூட்சுமத்துக்கு!
இன்னும் வெளிப்படையாகச் சொல்லட்டுமா? பாம்பு = மனிதனின் "காமம்"!

இன்றும் பல மருத்துவக் கல்லூரிகளின் இலச்சினையைப் பாருங்கள்!
ஒரு தண்டத்தைச் (கொம்பை) சுற்றிப் பாம்பு இருக்கும்! அட, இந்தியாவில் மட்டும் தானா இது? இல்லை, பல வெளிநாடுகளிலும் கூட இது தான் சின்னம்!
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி என்கிறது ஒளவையின் விநாயகர் அகவல்!

இந்தக் காமப் பாம்பு என்ன செய்கிறது? பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

* கீழே இருப்பது சூடான பன்றிக் கொம்பு என்றும் தெரியும்!
* மேலே இருப்பது குளிர்ந்த சந்திரன் என்றும் தெரியும்!
* இரண்டுமே ஒரே தோற்றம்/வளைவு கொண்டவை, ஆனால் பன்றிக் கொம்பு போலி-ன்னு தெரியும்! இருந்தாலும், பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

பன்றிக் கொம்பு = கீழான இச்சை என்றாலும், அதுவும் இந்த மனத்துக்கு வேண்டி இருக்கு!
பிறைச் சந்திரன் = மேலான பொருள் என்று தெரிந்தாலும், மேலே செல்ல எண்ணாது, கீழேயும் பார்த்துப் பார்த்து "மயங்கிக்" கொண்டே இருக்கு!
ஒரு நாளும், இது தான் மதி (சந்திரன்) என்று தேறாது! மதி ஒன்று இல்லாத மனது!

சிவனாரின் அழகான திருக்கோல வர்ணனையில், "முட்டாள் பாம்பே" என்று யாரேனும் சொல்லுவாங்களா? அதான் Icon Poetry! குறியீட்டுக் கவிதை!
* திருக்கோல அழகை வர்ணிப்பது போல் வர்ணிக்கிறார்! ஆனால் முழுமையாக வர்ணிக்காமல், "முட்டாள் பாம்பே" என்று ஒரே அறையாக அறைந்து விடுகிறார்!
* அதே சமயம் கீழான இச்சை, மேலான நெறி-ன்னு ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை! "முட்டாள் பாம்பே" என்ற ஒரே சொல்லில், அத்தனை உள்ளுறையும் வைத்து விடுகிறார்!

இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது: இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்! என் தோழி புனிதா!

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
எங்கள் புனிதவதிக்காக, ஆலங்காட்டில் நடம் இட்டனையோ சிவமே!

காரைக்கால் அம்மா திருவடிகளே சரணம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


(*** கார்த்திகைச் சோமவாரச் சிறப்புப் பதிவு *** சிவன் பாட்டில் இட்டது! ஆனால் திரட்டிக்கு அனுப்ப முடியவில்லை! அதனால் பந்தலில் பதிக்கிறேன்!)
Read more »

Thursday, November 13, 2008

புதிரா? புனிதமா? இந்தக் குழந்தைப் பதிவர்கள் யார்? யார்?

விடைகளைச் சொல்லிறலாமா? அதான் சந்திராயன் சந்தோஷத்துல இருக்கேன்! ஸோ, என்ன பரிசு வேணும்னாலும் கேளுங்க! என் தங்கச்சி துர்காவைக் கொடுக்கச் சொல்லுறேன்! :)

விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!
மிக அதிகமான சரியான வடைகளைச் சுட்டவர் என்ற பெருமையைச் சின்ன அம்மிணி அக்கா, மற்றும் ரிஷான் அங்க்கிள் தட்டிச் செல்கின்றார்கள்! வாழ்த்துக்கள்-க்கா! வாழ்த்துக்கள் ரிஷான்! :)

போட்டியின் ஹைலட்டான ஐந்தாம் கேள்வி - சந்திரிகா சோப் - நம்ம தங்கத் தாரகை துளசி டீச்சர்! அவங்களின் அந்தப் படத்துக்காகவே, அவங்களுக்கு பதிவுலக நாட்டியப் பேரொளி-ன்னு பட்டம் கொடுத்துறலாம்! ஏற்கனவே அந்த ரெட்டை வால் குருவியோ ஏதோ சொன்னாங்களே - அந்த மை வைக்கும் இஷ்டைல்! அதுக்கு நிறைய பேரு ஃபேன்ஸ் வேற ஆயிட்டாங்க! வாழ்த்துக்கள் டீச்சர்! :)

ஷைலஜா அக்கா...இந்த மை பத்தி, எனி கமெண்ட்ஸ்? :)
இது மை.பா இல்லை! இது வெறும் மை! :)


மக்கா, இன்னிக்கி (நவ-14) குழந்தைகள் தினமாம்! சரி கொண்டாடிறலாம்-னு எங்க பேபி கிளப் தலைவி சிங்கையில் இருந்து ஒரு தீர்மானம் போட்டுட்டாங்க!
இப்போதைக்கு இந்த பேபி கிளப்பில் மூனே பேரு தான் உறுப்பினர்கள் - சிங்கை, நியூயார்க், ஆம்ஸ்டர்டாம்! மூனே மூனு குழந்தைப் பதிவர்களை மட்டும் வச்சிக்கிட்டு என்ன குழந்தைகள் தினம் கொண்டாடுறது? அதான் இப்படி ஒரு புதிரா புனிதமா!

இவிங்க எல்லாம் பிர-"பலமான" பதிவர்கள்!
விளையும் பயிர் முளையிலேயே பின்னூட்டுதா-ன்னு பாத்து சொல்லுங்க பார்ப்போம்

இதுல மொத்தம் ஐந்து பதிவர்கள்! ஐந்து பெரும்புள்ளிகள்!
இப்படியெல்லாம் கலந்தாத் தான் கரும்புள்ளி எல்லாம் பெரும்புள்ளி ஆகும்! :)

யார் யார் யார் இவர் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ??

(க்ளூ தனியாக் கொடுக்கப்பட்டிருக்கு; விடைகள் நாலை மாலை, நியூயார்க் நேரப்படி)

இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்! :)
குழந்தை போல சிரிக்கப் பழகுவோம்! சிரிக்கச் சிரிக்கவும் பழகுவோம்!


1 ஆடி வரும் நாயகி! பம்பை உடுக்கைத் தலைவி! பதிவுலக ஏஞ்செல் (அப்படிச் சொல்லலீன்னா, என் கதி அதோ கதி தான் :)

1

அ) மைஃபிரெண்ட்

ஆ) G3

இ) இம்சை அரசி

ஈ) துர்கா தேவி

2அப்பாவி லுக்கு! அடிப்பதோ பெக்கு!

2

அ) E-Tamil - பாஸ்டன் பாலா

ஆ) இனியது கேட்கின் - ஜி.ராகவன்

இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்

ஈ) றேடியோஸ்பதி - கானா பிரபா

3
அப்பவே என்னா ஒரு மொறைப்பு? என்னா ஒரு வில்லத்தனம்? :)

3

அ) கப்பி பய - கப்பி பய

ஆ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்

இ) மகரந்தம் - ஜி.ராகவன்

ஈ) வெயிலில் மழை - ஜி

4கொழு கொழு மொழு மொழு பொம்மை - ஆனா நமீதாவுக்கு உறவு அல்ல! (நமீதாவைச் சொல்லிவிட்டதால் கோவி கண்ணனையும் சொன்னதாகவே அர்த்தம்! :)))

4

அ) மைஃபிரெண்ட்

ஆ) மனசுக்குள் மத்தாப்பு - திவ்யா

இ) ஷைலஜா (எப்படிக்கா இப்பிடி ஒரு அப்பாவி லுக்கு? அதான் பின்னலே இல்லைல? வெறும் கிரப்பு! அதுல எம்புட்டு பெரிய பூ! :))

ஈ) ஜோதிகா

5

சந்திரிகா சோப்பின் குளுமை வெளம்பரம் பாத்து இருக்கீங்களா? :) அதுல கலக்கும் ஒரு ஐட்டம் தான் இவிங்க தனி முத்திரை! ஜகன் மோகினி மாதிரி ஜகத்துக்கே பதிவி!

5

அ) கீதா சாம்பசிவம்

ஆ) வல்லியம்மா

இ) புதுகைத் தென்றல்

ஈ) தங்கத் தாரகை, துளசி கோபால்

6பறவை மருத்துவ நிபுணர்!

6

குருவி புகழ் - டாக்டர் விஜய்

7கண்ணனும் இவரே! வடி-வேலனும் இவரே! ஆனால் உலக நாயகி அல்ல!

7

கனவுக் கன்னி ஸ்ரீதேவி

8 அசைக்க முடியாத நாற்காலிக்குச் சொந்தக்காரர்8

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்

9 பார்ட்டி நடத்தும் காசைக் கையில் கொடுக்கச் சொன்னார்!

9

அன்னை தெரேசா

(நோபெல் பரிசு வாங்கிய பின், கொண்டாட்டப் பார்ட்டிக்கான காசைக் கையில் கொடுத்தால், ஒராண்டுக்கு 150 தொழு நோயாளிகளுக்கு, நிர்மல் ஹருதய் காப்பகத்தில், சிகிச்சை செய்ய முடியும், என்று கேட்டு வாங்கினார்!)

10அப்பவே அகில இந்திய "முதல்"வர் கலைஞருக்கு முன்னோடி!

10

குழந்தைகள் தினச் சொந்தக்காரர், ஜவஹர்லால் நேரு!




இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மைஃபிரெண்ட் ஆ) G3 இ) இம்சை அரசி ஈ) ________

2 அ) E-Tamil - பாஸ்டன் பாலா ஆ) இனியது கேட்கின் - ஜி.ராகவன் இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ் ஈ) றேடியோஸ்பதி - கானா பிரபா

3 அ) கப்பி பய - கப்பி பய ஆ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ் இ) மகரந்தம் - ஜி.ராகவன் ஈ) வெயிலில் மழை - ஜி
4 அ) மைஃபிரெண்ட் ஆ) மனசுக்குள் மத்தாப்பு - திவ்யா இ) ஷைலஜா ஈ) ஜோதிகா
5 அ) கீதா சாம்பசிவம் ஆ) வல்லியம்மா இ) புதுகைத் தென்றல் ஈ) ________________
6
7
8
9
10
Read more »

Wednesday, November 05, 2008

திருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் பெண்மணி!

Michelle Obama - மிஷேல் ஓபாமா! இவர் தான் இனி அமெரிக்காவின் முதல் பெண்மணி! வெள்ளை மாளிகையின் தலைவி! கருப்பினப் பெண்மணி வெள்ளை மாளிகையை ஏற்று நடத்தப் போகிறார்!


அவர் எப்படி? தேறுவாரா? ஓபாமாவுக்கு ஈடு கொடுப்பாரா? அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற மரியாதையைத் தகுந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியுமா? - இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது, தேர்தலின் போது!

60% மக்கள் - மிஷேல் ஓபாமாவை ஆதரித்து வாக்களித்தனர்!
35% மக்கள் - அவரால் முடியுமா என்று ஐயப்பட்டனர்.

ஆக, இதிலும் ஓபாமா தம்பதியருக்கு வெற்றி தான்! மக்கள் நிற வேற்றுமையைப் பாராட்டவில்லை என்பதையே இதுவும் உறுதிப்படுத்துகிறது!
குடியரசுக் கட்சியின் டென்னிசி மாகாணக் கிளை, திருமதி ஓபாமா-வை தேர்தல் பிரசாரத்தின் போது பலமுறை வம்புக்கு இழுத்தது! Primary என்னும் முதல் சுற்றில், அவர் பேசிய போது,
First time in my adult life, I am proud of my country because it feels like hope is finally making a comeback.
எனது வாலிப வயதில் முதன் முறையாக, நான் நாட்டை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நம்பிக்கை மீண்டும் வருவது போல உணர்கிறேன்
- என்று குறிப்பிட்டார்.

இதைத் திரித்து, கறுப்பினக் கணவர் அதிபர் பதவிக்கு நிற்பதால் மட்டுமே, அவர் முதன் முறையாக நாட்டை நினைத்துப் பெருமைப்படுகிறாரா? இல்லையென்றால் படமாட்டாரா? - என்று சிக்கலான கேள்விகளை எழுப்பினார்கள்! இதோ சுட்டி

சில பத்திரிகைகளும், அவரை வெறும் வீட்டுத் தலைவி என்றும், Mrs. Grievance (திருமதி. வருத்தம்) என்றும் எழுதின!

ஆனால் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து, கணவரின் வெற்றிக்கு, பின்னணியில் வெகுவாக உழைத்தார்! அதிகம் வாய் திறக்காது, பல பிரச்சாரங்களில், செயல்முறைகளில் மட்டுமே ஈடுபட்டார்.
ஓபாமாவும், தன் மனைவியைத் தாக்குவோரைக் கடிந்து கொண்டார். "குடும்பம் சிவிலியன்கள் போல! அவர்களைப் போருக்குள் இழுப்பது அமெரிக்க அரசியல் பண்பாட்டுக்கு இழுக்கு" என்று சொன்னவுடன் எல்லாம் அடங்கியது!


வெள்ளை மாளிகைத் தலைவிக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

திருமதி ஓபாமா அவர்களே!
உலகத் தலைவர்களை உங்கள் மாளிகைக்கு வரவேற்கத் தயாராகும் அதே சமயத்தில்,
* உலகில் நிறவெறி குறையவும்,
* அதே சமயம் ஒடுக்கப்பட்ட நிறத்தினர் தாழ்வு மனப்பான்மை கொள்வதைக் குறைக்கவும்,
* ஆப்பிரிக்காவில் ஒடுக்கப்பட்ட குழந்தைகள் நலம் காணவும், உங்களால் முடிந்த முயற்சிகளை எல்லாம் எடுங்கள்! இனி ஆப்பிரிக்கக் குழந்தைகளின் அவலங்களைப் படங்களில் தேடினாலும் கிடைக்காது என்று உத்வேகம் உங்களைச் சூழட்டும்!

வெள்ளை மாளிகை,
உங்களால் மேலும் வெண்மை பெறட்டும்!
வாழ்த்துக்கள் மிஷேல் ஓபாமா! :)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP