Wednesday, April 29, 2009

சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்!

இன்று இரு மகத்தான மனிதர்களின் பிறந்தநாள்! ஆன்மீக ஆற்றின் ஓரமாகப் பல காலம் தேங்கி விட்டன சனாதனக் குப்பைகள்! திடீர்-ன்னு ஒரு பெரு வெள்ளம் வந்து, அந்தக் குப்பையை இருந்த இடம் தெரியாமல் அடிச்சிக்கிட்டு போனது! அந்த வெள்ளம் தான் உலகாசான் - ஜகத்குரு என்று போற்றப்படும் ஆதி சங்கரர், இராமானுசர்!

இருவர் பிறந்த நாளும் ஒன்று தான் - இன்று தான்! சித்திரைத் திருவாதிரை (Apr 29th 2009)!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கரா! பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராமானுசா! :)

* சங்கரர் காலத்தால் முந்தியவர் - 788 AD! மதங்களால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்!
* இராமானுசர் அவருக்குப் பிந்தியவர் - 1017 AD! சாதியால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்!

சைவமும் வைணவமும் கொண்டாட வந்த இரு ஜகத்குருக்களும்,
ஆதி குருவான சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரையில் பிறந்து, அறம் வளர்த்தது வியப்பிலும் வியப்பே!


கோடைக் காலம்! அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது! மணல் வெள்ளம் தான்! :)

விடுமுறைக் காலத்தில் சின்னப் பசங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்! ஒன்னாச் சேர்ந்து கில்லி அடித்து விளையாடலாம்! உயரம் தாண்டலாம்!
களைப்பெடுத்தா அதே மணலில் ஊற்று நீரைக் கீறிக் குடிக்கலாம்! கம்பை நட்டு, பாலத்தில் இருந்து கரைக்கும், கரையில் இருந்து பாலத்துக்குமாய் ஒரு எம்பு எம்பலாம் (Pole Vault)! மணற் புதையல் விளையாட்டு கூட விளையாடலாம்!

அன்னைக்கு அப்படித் தான், சின்னப் பசங்க பத்து பேரு, ஒன்னாச் செட்டு சேர்ந்துடுச்சுங்க! ஒரு வேளை நானும் அந்தச் செட்டில் இருந்திருப்பேன் போல! பதினோராம் நூற்றாண்டு! :))

ஆளாளுக்கு ஒவ்வொரு வேஷம்! ஒருத்தன் கோயில் அர்ச்சகர்! இன்னொருத்தன் வாகன புறப்பாட்டு ஆள்! இன்னொருத்தன் மடப்பள்ளி! இன்னொருத்தன் கோஷ்டியில் தமிழ் வேதம் சொல்பவன்! எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து மணலைக் குவிச்சி குவிச்சி, ஒரு சின்ன விமானத்தையே கட்டிட்டாங்க பசங்க!

ஒரு மினி திருவரங்கம் காவிரிக் கரையில்! அந்த ரங்கனுக்கு பிரணவாகார விமானம்-ன்னா இந்த ரங்கனுக்கு மணலாகார விமானம்! :)

வீட்டில் இருந்து பல மரச் சாமான்களைக் கொண்டாந்தாச்சு! சாப்பாட்டுத் தட்டும், தயிர் கடையும் மத்தும் தான் மேள தாளம்! அடுப்புல ஊதும் ஊதாங்குழல் தான் நாதசுரம்! கொட்டாங்குச்சி தான் கங்காலம் என்னும் பாத்திரம்! கடைத்தெருவில் கடை கடையாப் போகுதுங்க பசங்க!

"உங்க கடையில் புது அரிசி எப்படி இருக்கு-ன்னு பார்க்க, அம்மா ஒரு கைப்பிடி வாங்கியாரச் சொன்னாங்க நாடாரே"-ன்னு சொல்லுதுங்க! இப்படிக் கைப்பிடி கைப்பிடியாவே அரிசியைத் தேத்தியாச்சு! அரிசி வசூல் :)

ஆற்றங்கரையில் சின்னதா தீ மூட்டி, பழைய ஈயப் பாத்திரத்தை ஏத்தி, அரிசி பொங்குதுங்க! கைக்கு சல்லீசாக் கிடைச்ச கறிவேப்பிலை, கொத்துமல்லி-ன்னு எதை எதையோ அதில் கொண்டாந்து போடுதுங்க! வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் பிரசாதம் ரெடி! :)

பிரசாதம் ரெடியானாப் போதுமா? பகவான் வேணாமா?
தொழில் தர்மம்-ன்னு ஒன்னு இருக்குல்ல? எப்பமே அவனுக்குக் கண்ணால காட்டிட்டு தானே நாம ஒரு வெட்டு வெட்டுவோம்!
அவன் "கண்டு" அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு" அருளப் பண்ணுதல்! :)



குட்டீஸ் யானை வாகனம் :)
படங்களுக்கு நன்றி: இராமானுச தாசர்கள் Pbase குழு!



பிரசாதம் ரெடியானாப் போதுமா? பகவானுக்கு எங்கே போறது?
வீட்டுல இருந்து பெருமாள் படத்தை எடுத்துக்கிட்டு வந்தா பெருசுங்க பொலி போட்டுருவாங்க!

மரக்குச்சிகளை விதம் விதமாக் கட்டி, ஒரு மனுசன் போல உருவத்தை உருவாக்குதுங்க!
அதுக்குப் பொட்டு இட்டு, உதிரிப் பூவை மாலையாகப் போட்டு, நூல் கண்டை மஞ்சள் பட்டாடையாகக் கட்டி....அட...சங்கு சக்கரம் இல்லாமல் பெருமாளா?
கோலியே சக்கரம்!
சோழியே வெண்சங்கு!
இதோ மரக்குச்சி ரங்கன் ரெடி!

- பத்மநாபோ "மரப்" பிரபு! பத்மநாபோ "மரப்" பிரபு!

பத்மநாபோ "அமரப்" பிரபு என்ற சகஸ்ரநாமம், இங்கே மரக்குச்சியால், பத்மநாபோ "மரப்" பிரபு என்று ஆகி விட்டதே!
ஒரு பையன் கருடன் போல் குத்திட்டு உட்கார்ந்து கொள்கிறான்! அந்தப் பையன் மேல் குச்சி ரங்கனை வைத்தாகி விட்டது! ஆகா! கருட சேவை காணீரே!

* அந்த ரங்கனுக்கு இணையான எங்கள் அந்தரங்கன் கருட சேவை காணீரே!

வீட்டில் உள்ள தாழங் குடைகள்/கருப்புக் குடைகள் திருக் குடைகளாய்ப் பிடிக்கப் படுகின்றன!
பனை விசிறிகளே வெண்சாமரமாய் வீசப்படுகின்றன!
வடமொழி மந்திரங்களுக்கு இணையாக, உபய வேதாந்தம் என்று பெயர் கொடுத்து,
தமிழ்ப் பாசுரங்களைக் கருவறையில் ஓத ஏற்பாடு செஞ்சாலும் செஞ்சார்!
வேற வூட்டுப் பொடிசுங்க கூட, எளிமையாப் புரிஞ்சிக்கிட்டு, ஓதுறாப் போலவே பாடுதுங்களே! ஆகா! இது என்ன அழகான காட்சி!

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ! சாதி மாணிக்கத்து ஐயே!
அச்சுவைக் கட்டி என்கோ! அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேனும் என்கோ! கனி என்-கோ-பாலன் என் கோ!


தட்டில் சும்மனாங் காட்டியும் தீபம்!
கொட்டாங்குச்சியில் சடாரி!
ஒரு பழைய பாத்திரத்தில் காவேரி தீர்த்தம்!
- முதல் தீர்த்தம் யாருக்கு?

கோயிலில் "ஜீயோம்"-ன்னு கூப்பிடுவாங்களே! அப்போது இராமானுசர் அல்லவா வந்து தீர்த்தம் வாங்கிக் கொள்வார்! இப்போ யாருக்குடா கொடுக்கலாம்?
ஆங், அது தான் சரி! போன வாரம் அவங்க வீட்டில் சுட்ட மெதுவடையை எடுத்தாந்து எனக்குப் பாசமாய்க் கொடுத்தானே கோபால்!

"எலே, கோபால்! வாடா! நீ தான் இன்னிக்கி இராமானுஜர் வேஷம் கட்டுற! உனக்குத் தான் மொதல் தீர்த்தம்!" - அர்ச்சக வேஷம் கட்டியிருக்கும் அந்தப் பையன், மெதுவடைக்கு "மெது"வாக நன்றிக் கடன் தீர்க்கிறான்! :)


காவிரிக்கரையில் மக்கள் எல்லாரும் இந்த "லோக்கல்" கருட சேவையை, குச்சி ரங்கனை ஒரு செல்லமான கேலியுடன் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள்!
சரி, ஏதோ பசங்க வித்தியாசமா வெளையாடுது! வெளையாடிக்கிட்டு போவட்டும்! என்று வேடிக்கை பார்த்தவாறு அவரவர் நடையைக் கட்டுகிறார்கள்! கருப்புக் குடையும், சாப்பாட்டுத் தட்டில் மேளமும் அடிச்சி ஒரே டமாஷா-ல்ல இருக்கு? :)

அந்த வழியாக வருகிறார் உடையவர், எம்பெருமானார் என்று பலவாறாக அழைக்கப்படும் இராமானுச முனிகள்!
சீடர்கள் புடை சூழ அவரும் இந்தக் குச்சி ரங்கன் கருட சேவையைப் பார்க்கிறார்! சீடர்களின் முகத்திலும் பிள்ளைத்தனமான ஒரு நமுட்டுச் சிரிப்பு! :)

ஆகா! இது என்ன பதட்டம்? நிஜ இராமானுசர் ஓடுகிறாரே? அதுவும் நாலு கால் பாய்ச்சலில்? சீடர்கள் விவரம் புரியாமல் பின்னாடியே ஓட....

சிறுவர்கள்......."ஜீயோம்" என்று சொன்ன போழ்திலே....
இராமானுசர்......."அடியேன் நாயிந்தே, ஜீயேன்!" - என்று நெடுஞ்சாண் கிடையாக ஆற்று மணலில் வீழ்கிறார்! மரக்குச்சி ரங்கன் முன்பாக வீழ்ந்து சேவிக்கிறார்!

குட்டிப் பசங்களுக்கு இன்ப அதிர்ச்சி! பின்னால் வந்த சிஷ்யர்களுக்கோ இன்னும் அதிர்ச்சி!
ஒரு சிலருக்கு எங்கே தங்களையும் விழச் சொல்லி விடுவாரோ-ன்னு பயம்! :)
அந்தப் பழைய டப்பாவில் இருந்து சிறுவர்கள் அவருக்குத் தீர்த்தம் தருகிறார்கள்! மூன்று முறை கேட்டு வாங்கித் தீர்த்தம் பருகுகிறார் உடையவர்!

* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம் = வினைத் திட்பம்! செயலில் வெற்றி பெற!
* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம் = அறன் வலியுறுத்தல்! தர்மம் செய்ய!
* மூன்றாம் தீர்த்தம் = த்ரீதீயம் மோக்ஷப் ப்ரோக்தம் குணார்னவம்! = மெய் உணர்தல்! மோட்ச உபாயம்!

இராமனுசருக்குச் சிறுவர்கள் சடாரி சார்த்துகிறார்கள்! கொட்டாங்குச்சி சடாரி! :)
உகப்புடன் ஏற்றுக் கொள்கிறார்!
ஒரு சின்ன இலையில் அதுகள் வடித்த சோறு வைத்து கொடுக்கப்படுகிறது! கொத்தமல்லிச் சோறு அரவணைப் பிரசாதம் ஆகிறது! :)

நெய்யிடை நல்லதோர் சோறும், நியதமும், அத்தாணிச் சேவகமும்,
கையடைக் காயும், கழுத்துக்குப் பூணொடு, காதுக்குக் குண்டலமும்,
மெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்து, "என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல"
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே!

- என்று கருட சேவைப் பல்லாண்டை உடையவர் பாடுகிறார்! சிறுவர்கள் அத்தனை பேரின் பெயரையும் கேட்டறிந்து, தட்டிக் கொடுத்து விடை பெறுகிறார்! அதுகளுக்கோ ஒரே பூரிப்பு! :)


மடத்தில்.....

வயதில் மூத்த சீடர்: "தேவரீர் இப்படிச் செய்யலாமா? சின்னப் பொடியன்கள் ஏதோ விளையாட்டாய் விளையாடியதற்கு, அனைவரும் பார்த்துப் பரிகசிக்குமாறு, ஒரு மரப்பாச்சி பொம்மையைப் போய், விழுந்து சேவித்தீரே! என்ன ஜீயரே இது?"

உடையவர்: "ஆகா! அபசாரம்! பகவானைப் பொம்மை என்று நீங்களே சொல்லலாமா? அடியேன் தவறாக ஒன்றும் செய்து விடவில்லையே!
ஏன் இந்த மனக் கிலேசம்? அந்த மரக்குச்சி ரங்கனில் அரங்கன் இல்லை என்று நினைக்கீறீரோ?"

சீடர்: "அப்படியில்லை சுவாமி! அரங்கன் எங்கும் இருக்கிறான் என்பது பாமர வழக்கு! அது எங்களுக்கும் தெரியும்! ஆனால் சான்னித்யம்-ன்னு ஒன்னு இருக்கில்லையோ? என்ன இருந்தாலும் சிறுவர்கள் விளையாடிய ஒரு மரப்பாச்சிப் பொம்மைக்கு எப்படிச் சான்னித்யம் வரும்?"

உடையவர்: "ஓ...சான்னித்யம் இருக்கா இல்லையா என்று பகவானையே சோதித்துப் பார்த்துவிட்டு ஏற்றுக் கொள்வது தான் உம்ம வழக்கமோ நம்பிகளே?"

சீடர்: "இப்படி வார்த்தை ஜாலமாய் பேசினால் எப்படி? நீர் வர வர கண்ட பயல்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே இடம் கொடுக்கிறீர் ஜீயரே! :("

உடையவர்: "உம்ம்ம், எதனால் அந்த மரக்குச்சி ரங்கனில் சான்னித்யம் இல்லை என்று கருதுகிறீர்கள்?"

சீடர்: "என்ன கேள்வி இது? சம்ப்ரோக்ஷணம்/கும்பாபிஷேகம் எல்லாம் செய்து, அஷ்ட பந்தனம் இட்டு, ஜீவாதார மந்திரங்கள் ஜபித்து, பிரதிஷ்டை-ன்னு செய்யும் போதல்லவா ஒரு சான்னித்யம் உண்டாகுது? ஒரு கருங்கல்லும் கடவுளாகிறது!
அதற்குச் சதா மந்திரம் ஜபித்து, சிரத்தையாக உருவேற்றி உருவேற்றி, சாஸ்திரத்தில் சொன்னபடி, நாங்களே பூஜிப்பதால் அல்லவோ சான்னித்யம் உண்டாகிறது?"

உடையவர்: "ஓ...அப்போது நீங்கள் சிரத்தையாகப் பூஜித்தால் சான்னித்யம்! அடுத்தவர் சிரத்தையாகப் பூஜித்தால் அதெல்லாம் ஒன்றுமில்லை! அப்படித் தானே?"

சீடர்: "ஸ்வாமி! எடக்கு மடக்காகப் பேசினால் எப்படி? ஆகமம் தாங்கள் அறியாதது அல்ல! இருந்தாலும் வேண்டுமென்றே இப்படியெல்லாம் பேசுகிறீர்களே! இது நியாயமா?"



உடையவர்: "அன்பர்களே! உங்கள் சிரத்தையை அடியேன் தாழ்த்தவில்லை! அடுத்தவர் சிரத்தையை நீங்களும் தாழ்த்தக் கூடாது என்பதே நான் சொல்லுவது!
ஆலய மந்திரப் பிரதிஷ்டையை, அடியேனோ, இல்லை அந்தச் சிறுவர்களோ மறுத்துப் பேசினோமா? இல்லையே! ஆலயத்திலும் வந்து பணிவாகச் சேவிக்கிறோம் அல்லவா?
அங்கு பணியில் இருக்கும் உம்மையும் மதிக்கிறோம் அல்லவா?
நீங்கள் மட்டும் ஏன், அதே மரியாதையை அவர்களுக்கும் தர மறுக்கிறீர்கள்?"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "நீங்கள் அறிந்த முறையில், உளமாரப் பூஜிக்கும் போது, சான்னித்யம் கிடைக்கிறது என்றால்...
அவர்கள் அறிந்த முறையில், உளமாரப் பூஜிக்கும் போது, சான்னித்யம் வராது என்று எப்படி நினைக்கிறீர்கள்?"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "பிரகலாதன், ஜீவாதார மந்திரங்கள் எல்லாம் ஜபித்து, பிரதிஷ்டை செய்த பின்னரா, தூணில் எம்பெருமான் சான்னித்யம் ஆனான்?"

சீடர்கள்: (பலத்த மெளனம்...)
ஆனால் ஒரு குரல் மட்டும்..."எல்லாரும் பிரகலாதன் ஆகி விட முடியாது இராமானுசரே!"

உடையவர்: "யாரது??? முன்னே வாருங்கள்! ஓ...நீங்களா? அதை அவர்கள் சொல்லட்டும் பெரியவரே!
உங்களால் பிரகலாதன் ஆக முடியாது என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம்!
அவர்களால் பிரகலாதன் ஆக முடியாது என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்!
நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "எப்படி உம் வழிபாட்டு முறைகளில் அவர்களும் ஆனந்தமாகத் திளைக்கிறார்களோ, அதே போல், அவர்கள் வழிபாட்டு முறையிலும் நீங்கள் மதிப்பளிக்கக் கடவீர்களாக!
குழந்தைத்தனமாக வணங்கினாலும், ஆகமப் ப்ரீதியாக வணங்கினாலும், வணக்கம் வணக்கமே!"



சீடர்கள்: "ஸ்வாமி! கூடக்கூட வாதாடும் எங்களை மன்னித்து விடுங்கள்! இருந்தாலும் சாஸ்திரமானது நாங்கள் செய்வது போலத் தானே செய்யச் சொல்கிறது? சாஸ்திரம் முக்கியம் அல்லவா? அது தானே நமக்குப் பிரமாணம்?"

உடையவர்: "இந்த மரக்குச்சி ரங்கன் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கான்! மரக்குச்சி ரங்கனுக்கென்று ஒரு திவ்யதேசமே இருக்கு! அதைக் காட்டினால் ஒப்புக் கொள்வீர்களா?"

சீடர்கள்: "ஆகா....சாஸ்திரம் எதைச் சொன்னாலும் ஒப்புக் கொள்கிறோம் ஸ்வாமி! பாமரத்தனமான விளக்கத்தைத் தான் மனம் ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறது!"

உடையவர்: "ஹா ஹா ஹா...கண்ணெதிரே உள்ள உண்மையை ஒப்புக் கொள்ளப் பாமரம் என்ன? சாத்திரமென்ன?
சரி, ஆழ்வார்கள் அருளிச் செயல் கூட சாஸ்திரம் தானே! அதையாச்சும் ஒப்புக் கொள்கிறீரா?"

சீடர்கள்: "ஐயோ! என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள்? நமாமி திராவிட வேத சாகரம்! ஆழ்வார்கள் சொன்னால் அதுவும் சாஸ்திரம் தான்!
ஆனால் மரக்குச்சி ரங்கனை எல்லாம் அவர்கள் பாடியதாக நாங்கள் அறிந்த வரையில் இல்லை!"

உடையவர்: "ஓ! அப்படியா சேதி! இதோ கேளுங்கள்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே!
தமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர்! - தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் அழியான் ஆம்!

முதல்-முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் (சரஸ் முனிம்) பாடிய சாஸ்திரம் ஆயிற்றே இது!"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "தமர் எதில் உகக்கிறார்களோ, அதில் பகவான் வந்து அழியாது இருந்து விடுவதாக சாஸ்திரம் சொல்லி இருக்கே!
ஆழ்வார்கள் சொன்னது தமிழில் இருப்பதால் ஏற்றுக் கொள்ளக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறதா? சம்ஸ்கிருதத்தில் வேணும்-ன்னா சொல்லட்டுமா?"

சீடர்கள்: (மெளனம்...)

உடையவர்: "யத் யத் தியாய த, உருகாய விபவ யந்தீ
தத் தத் வபு, ப்ரண யசே, சத் அனுக்ரஹ யா!
- இது பாகவதம்! என்ன சொல்கிறீர், ஸ்ரீமத் பாகவதம் என்பது சாஸ்திரம் தானே?

சீடர்கள்: (கப் சிப்...)

அன்புள்ள மடத்துச் சிஷ்யர்களே! நீங்களே ஒரு முறை "மனசாட்சியுடன்" எண்ணிப் பாருங்கள்!
அந்தச் சிறுவர்கள் அவர்கள் அளவில் பகவானை உகந்தார்கள் அல்லவா?
தமர் உகந்த அவ்வுருவம், அவன் உருவம் தானே!


அதனால் அல்லவோ அந்த மரக்குச்சி ரங்கனைச் சேவித்தேன்! அது தவறா?
உங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இருந்து கொண்டு,
என்னைத் "தமர் உகந்த" என்னும் சாஸ்திர வாக்கியத்தை மீறச் சொல்கிறீர்களா?"

சீடர்கள் வாயடைத்துப் போகிறார்கள்! இவருடன் வாதம் செய்ய முடியாது போலிருக்கே! இவர் கருத்துக்களை எடுத்து வைக்கும் போது,
எம்பெருமானார் வாதாடுகிறாரா?
இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா?


பிரம்ம சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதிய இவர் மகா வேதாந்தியா?
இல்லை, மரப்பாச்சி பொம்மையைக் கூட விழுந்து வணங்கும் இவர் ஈரப் பாசுர உள்ளமா?

* சாஸ்திரம் என்பதை எழுத்தில் மட்டுமே பார்த்த தாங்கள் எங்கே?
* சாஸ்திரத்தை அதன் ஆத்மாவில் பார்த்த இராமானுசர் எங்கே?

அவர் பிறந்த நாள் அதுவுமாய், எம்பெருமானார் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!


பட்டர்கள் பெரிய கருட சேவை! பிள்ளைகள் மினி கருட சேவை! :)

குறிப்பு:

இன்றும் சென்னைத் திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி பெருமாள் கோயிலில்,
சிறுவர்கள் சொப்பு விளையாட்டு போலவே நடத்தும் சின்னஞ்சிறு உற்சவம், பெரிய உற்சவத்துடன் சேர்த்தே கொண்டாடப்படுகிறது!

கோயில் பிரம்மோற்சவத்தின் போது, அக்கம் பக்கத்துச் சிறுவர்கள், அவர்களின் சின்னப் பெருமாளை வீதியுலா கொண்டு வருகிறார்கள்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குட்டி வாகனத்தில் அலங்காரம்!
* பெரிய பெருமாள், பெரிய யானை வாகனத்தில் வந்தால்,
* குட்டிப் பெருமாள், குட்டி யானை வாகனத்தில் வருவது வாடிக்கை!
அண்மைக் காலங்களில் இந்தக் குட்டி உற்சவம் இன்னும் பிரபலம் ஆகியுள்ளது!

அதனால்.....
தமர் உகந்த பகவத் அனுபவத்தை, ஏதோ விளையாட்டுத்தனமானது என்றோ, லோக்கல் பாஷையில் எழுதப் படுகிறது என்றோ, அசூயை கொள்ளாதீர்கள்!
ஏன் அப்படி செய்யப்படுகிறது என்ற ஆத்மாவைப் பார்த்தால் ஆன்மிகத்தைப் பார்க்கலாம்!

தமர் உகந்த எவ்வுருவம், அவ்வுருவம் தானே!
சொப்பு விளையாட்டுப் பெருமாள் திருவடிகளே சரணம்! :)
Read more »

Friday, April 24, 2009

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்- தமிழ் ஈழம்- கடைசி நேர முயற்சிகள் என்ன?

அலுவல் வேலையா லண்டன் சென்று, நேற்று இரவு தான் ஊர் திரும்பினேன்! லண்டனில் சக அலுவலகத் தோழி ஒருத்தி (ஈழத்துப் பெண்)! அவளிடம் பேசும் போது சில ஈழ விஷயங்கள் பார்வைக்கு வந்தன! அவள் சொன்னது: "90% வரை ஒளித்தல் மறைத்தல் இல்லாது, அனைத்து தரப்பு நியாயங்களோடே, பி.பி.சி-யின் ஈழச் செய்தி வழங்கல் நல்லதொரு விஷயம்!" - இதோ மொத்த ஈழ விவகாரங்களுக்கான பி.பி.சி சுட்டி!

ஆனால் இந்தப் பதிவை, வழியில் எழுதிக்கிட்டு வரும் போதே, அந்தக் "கடைசி நேரம்" ஈழத்தில் வந்து விட்டு இருக்குமோ? வந்து விட்டு இருக்குமோ?-ன்னு பயந்து பயந்து எழுத வேண்டிய ஒரு அவல நிலை! :(


ஈழத் தமிழர்களுக்கு கீழ்க்கண்ட பேச்சுகள் எவ்வளவு உதவிகரமா இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

* எம்.ஜி.ஆர், பிரபாகரனுக்கு தம் வீட்டில் விருந்து அளித்து, மஜ்ஜை எலும்பு கடிக்கக் கொடுத்தார்!
* கருணாநிதி சபாரத்தினத்துக்கு மட்டுமே நண்பர்! பிரபாகரனுக்கு அல்ல!
* ஜெயலலிதாவின் திடீர் ஈழ அக்கறைக்குக் காரணம் என்ன?
* வைகோ ஒரு தனி மனிதருக்காக ரத்த ஆறு ஓடும்-ன்னு சொன்னது சரியா?
* காவி வருண் காந்திக்கு ஒரு நியாயம், கருப்பு வைகோவுக்கு இன்னொரு நியாயமா?

* திருமா இப்படிச் சோடை போய் விட்டாரே!
* மருத்துவர் ராமதாஸ் செய்யும் சித்து மருத்துவ ஈழ லேகியம்!
* விஜய்காந்துக்கு உண்மையான ஈழ அக்கறை உண்டா?
* பத்ம ஸ்ரீ பட்டத்தைப் பாரதிராஜா திருப்பிக் கொடுக்கட்டும்!
* சீமான், அமீர் செய்வது அடாவடியா? அக்கறையா?

* இந்த நேரத்தில், 20-Twenty கிரிக்கெட் போட்டிகள் தேவையா?
* இங்கு ஸ்டிரைக் நடத்தினா, அங்கு சீஸ் ஃபையர் வருமா? ஃபாரஸ்ட் ஃபையர் வருமா?
* உண்ணாவிரதம் இருக்கும் மகளிரைப் பார்த்து கனிமொழி கலங்கியது நீலிக் கண்ணீரா? போலிக் கண்ணீரா?
* இத்தாலியின் பெண் எத்தாலியும் அறுக்கிறாளே!
***
***
***
இப்படி அவரவர் வசதிக்கேற்ப, எதுகை மோனையாப் போட்டு, வருஷக் கணக்கா "பேசிக்கிட்டே" இருக்கலாம்! ஏன் தலைமுறை தலைமுறையாவும் கூடப் பேசலாம்!

ஈழம் என்னும் இழவு வீட்டில் கூட "நான் அப்பவே தீர்மானம் போட்டேனே"-ன்னு சுயம் பேசுவது = மூவேந்தர் காலத்தில் இருந்து, இன்று வரை, தமிழ் இனம் மட்டுமே தவம் இருந்து வாங்கி வந்திருக்கும் ஒரு பிரத்யேக சாபம்!

அதனால் இது போன்று "பயன் தரும்" பேச்சுக்களை வேணாம்-ன்னு சொல்லலை! ஆனால் அதையெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிச்சி வச்சிக்கிட்டா என்ன? அப்போ அக்கு வேறு ஆணி வேறு அலசி ஆராய்ந்து வரலாற்றுப் புத்தகத்தில் இதெயெல்லாம் ஒவ்வொன்னா ஏற்றுவோம்! ஆனால் இப்போது???

இந்தப் பதிவின் நோக்கம்:
யார் யார், ஈழத் தமிழர்களை, எப்போது எல்லாம், எப்படி எல்லாம் கைவிட்டார்கள் என்பது பற்றிய அலசல் அல்ல! அந்த அலசல் செய்ய எண்ணுபவர்கள் தயவு செய்து இந்தப் பதிவிற்குள் வர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

இந்தப் பதிவின் நோக்கம்:
இப்போதைய உருப்படாத நேரத்திலும், உருப்படியா ஒன்னு ரெண்டாவது தேறுமா-ன்னு பார்க்கத் தான் இந்தப் பதிவு!
கடைசிக் கட்டத்தில் என்னென்ன சிறு முயற்சிகள் சாத்தியம் என்பதைப் பற்றிய ஆலோசனைகளை வாங்கி, "தகுந்தவர்களிடம்" சேர்ப்பிப்பதே!

யார் இந்தத் "தகுந்தவர்கள்"?
* நார்வே ஏற்கனவே கையைச் சுட்டுக் கொண்டு ஒதுங்கிருச்சி!
* ஐ. நா. சபை சொல்லியே கேக்க மாட்டேங்குறானுங்க!
* அமெரிக்கா பேச்சு கூட எடுபடாது போல இருக்கே!

அம்புட்டு விடாப்பிடித்தனம் இருக்கும் சூழலில்....பெருசா என்ன தான் செய்ய முடியும்-ன்னு கேக்கறீங்களா?



செய்ய முடியும்!

மக்களுக்காக கொள்கையா? கொள்கைகளுக்காக மக்களா?

வாழும் கலை அமைப்பின் ஆன்மீகத் தலைவர் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்பவர் - இவரை நம்மில் பல பேருக்கும் தெரியும்-ன்னே நினைக்கிறேன்! எனக்கும் இவர் பற்றிய விபரங்கள் கேள்வி ஞானம் தான்!
இவர் சென்ற வாரம் இலங்கை சென்று வந்திருக்கிறார்! மூனு நாள் பயணம்! (Apr 20,21,22)

பெருசா எல்லாம் ஒன்னும் சாதிச்சிடலை அவரு! ஆனா ஈழ அரசியல், ஈழ வரலாறு, ஈழ இயக்கம்-ன்னு சாகும் நேரத்திலும் "பேசிக்" கொண்டு இருக்காமல்...
கொஞ்சம் தைரியமாகவே இலங்கைக்குள் காலடி எடுத்து வச்சிருக்காரு மனுசன்!

அவர் பயணத்தின் காணொளிப் (வீடியோ) படங்களைப் பார்த்தேன்!
* கொழும்பில் புத்த மதத் துறவிகள் கிட்ட பேச்சு!
* மகா "கனம்" பொருந்திய ராஜபக்சே "ஐயா" கிட்ட போயி சந்திப்பு!
* எல்லாத்த விட முக்கியமா, வவுனியா ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நம்ம தமிழர்களை நேரில் போயி பார்த்து, ஆறுதல்!

அவர்களுக்கு Trauma/மனச்சிதைவுக்கு சில மாற்று முயற்சிகள்-ன்னு ஏதோ தம்மால முடிஞ்சதை ஏற்பாடு பண்ணிட்டு வந்திருக்காரு!
பெருசா எல்லாம் ஒன்னும் பண்ணிடலை! ஆனா இந்த ஸ்ரீ ஸ்ரீ சொன்ன ஒரே ஒரு வாசகம் மட்டும், இன்னும் என் மனசுக்குள்ளாற ஓடிக்கிட்டு இருக்கு:

"துன்பத்தில் இருக்கும் போது உதவிக்கு வராத ஆன்மீகம்-ன்னா, எதுக்கு அந்த ஆன்மீகம்?"

நீங்களும் அசைபடங்களைப் பாருங்கள்!






சரி, இவரை வச்சிக்கிட்டு கடைசி நேர முயற்சியா, ஏதாச்சும் குறைஞ்ச பட்சமாவது செய்ய முடியுமா?
இந்த நேரத்திலும் ராஜபக்சேவைப் போயி நேராப் பாக்க முடியும்-ன்னு இருக்கும் இவர் போன்றோரை வச்சிக்கிட்டு என்ன செய்யலாம்?

1. தப்பி வந்து இராணுவ முகாம்களில் இருக்கும் தமிழர்களை இலங்கை அரசு பட்டியல் எடுத்து அடையாள அட்டை கொடுக்கிறது!
அந்தப் பட்டியலை ஐ.நா-விடமோ, செஞ்சிலுவைச் சங்கத்திடமோ, இல்லை பொதுவான நிறுவனத்திடமோ பகிரச் சொல்ல வேண்டும்!

நாளை இந்த அகதிகளுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சுனா? யார் யாருக்கு என்னென்ன ஆச்சு என்பதை அவர்கள் குடும்பங்கள் அறிய இது உதவிகரமா இருக்கும்! உலகமே அறிய உதவியா இருக்கும்!

இத்தனை பேர் தப்பிச்சி வந்தாங்க! இத்தனை பேர் இன்னும் உயிரோடு தான் இருக்காங்க! - என்ற தகவலால், இலங்கை அரசாங்கம் மீது குறைந்தபட்ச நம்பிக்கை வர வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இதைப் பெற்றுக் கொடுக்க வேணும்! அரசாங்கத்திடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடர்ந்து வலியுறுத்த எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும்!

இராணுவ ரகசியம் தானே வெளியே சொல்லக் கூடாது! தப்பி வந்து மக்களின் பேரைக் கூடவாச் சொல்லக் கூடாது?
அவர்களில் யாரேனும் புலிகள்-ன்னு சந்தேகப்பட்டால், அதையும் தனிக் கலரில் அடையாளம் இட்டே கொடுக்கட்டுமே? கொடுங்கய்யா! அது போதும்!

2. இரண்டு லட்சம் தமிழர்கள் சாவதற்குப் பதில் ரெண்டாயிரம் தமிழர்கள் செத்தால் போதுமானது! அதுக்கு ஏதாச்சும் பண்ண முடியுமா? இப்படி எழுத எனக்கே வெட்கமா இருக்கு! :((

மண் அணை உடைக்கப்பட்ட பின் வெளியேறிய தமிழர்கள் ஐம்பாதாயிரம்-ன்னு ஒரு பேச்சுக்கு வச்சிப்போம்! இன்னும் வன்னிப் பகுதியில் மாட்டிக் கொண்டிருக்கும் மற்ற மக்களின் உயிர்களை முடிந்த மட்டும் எப்படிக் காப்பாற்றலாம்?

பெளத்த மற்றும் இதர சமயத் துறவிகளையோ, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இயக்கத்தினரையோ வன்னிக் காட்டுக்குள் அனுப்பினால், தமிழர்களை மீட்டுக் கொண்டு வர முடியுமா? சாத்தியமா? வர நினைப்பவர்கள் வந்து விடட்டும்! அப்பறம் உங்க "ஒண்டிக்கு ஒண்டிகளை" வைத்துக் கொள்ளுங்களேன்!


3. முகாம் மாறி, இப்போது "அதி"காரத்தில் இருக்கும் கருணா போன்ற தமிழர்களின் ஆலோசனையைப் பெற்று, அவர்கள் அறிந்து வைத்திருக்கும் ரகசிய வழி, காட்டின் வேறு வழிகளைத் திறந்து விட முடியுமா? மேலும் மக்கள் வெளியேற ஏதாச்சும் செய்ய முடியுமா?

4. உணவுப் பொட்டலம் மற்றும் மருந்துகளை முகாம்களுக்கு மட்டும் கொடுக்காமல், வன்னிக் காட்டில் அடைபட்டிருக்கும் மற்றவர்களுக்கும் ஓரிரு முறையாச்சும் "வீசச்" செய்ய முடியுமா? குறிப்பாக குழந்தைகள் பசியால் சாகாமல் இருக்க இது உதவியா இருக்கும்!

5. பன்னாட்டுப் பத்திரிகையாளர்களைக் கூட அனுமதிக்க வேணாம்! அவர்கள் எடுக்கும் படத்தை எல்லாம் பாத்துத் தான் பாவப்பட்ட ஜீவன்களின் நிலைமையை அறியணும்-ன்னு அவசியமில்லை! மருத்துவர்களையாவது அனுமதிக்க வழி வகை செய்து தர முடியுமா? அட் லீஸ்ட் பெண் மருத்துவர்கள்?

இது போன்ற சின்ன சின்ன முயற்சிகள்! இப்படி எதை எதையெல்லாம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேட்டுப் பெற முடியும்-ன்னு நினைக்கறீங்க? யோசிச்சிச் சொல்லுங்களேன்!
அவர்களுக்கே தோனாதது, ஸ்ரீ ஸ்ரீ-க்கே தோனாதது கூட உங்களுக்கு ஒரு வேளை தோனலாம்! அதை ஒன்னாத் திரட்டி அவருக்கு அனுப்பி வைச்சா.....

அவரால் முடிந்த வரை, அவரும் கடைசி நேர முயற்சியாய் முயற்சிக்கட்டும்!
சில சமயம், பெரிய உலக்கைகளை விட,
இவரைப் போன்ற சிறிய துரும்பு தான் பல் குத்தவும் உதவுகிறது!

அதற்கப்புறம் தமிழனின் தலை விதி! :(((

அது புத்தரோ, பெருமாளோ, இல்லை வேறு எதுவோ...
ஈழத்து மக்களுக்கு இறுதி நேரச் சிறு உதவிகள் எது கிடைச்சாலும்...
புத்தம் சரணம் கச்சாமி-ன்னு சொல்ல அடியேனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை!
மக்களுக்காகத் தான் கொள்கை! கொள்கைக்காக மக்களைக் காவு கொடுத்தல் கூடவே கூடாது!

புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
Read more »

Wednesday, April 08, 2009

மாயவரத்தைக் கலாய்த்த ஆழ்வார்! - திருஇந்தளூர்!

மயிலாடுதுறை! வடமொழியில் மயூரம், மாயூரம்-ன்னு தேய்ஞ்சி தேய்ஞ்சி, கடைசீல மாயவரம்-ன்னு ஆகிப் போச்சு! மாய-வரம் = மாய்ஞ்சி போக, யாராச்சும் வரம் கொடுப்பாய்ங்களா என்ன? :)

மக்களே, நேற்று மதுரை மீனாட்சிக்குக் குடமுழுக்கு-ன்னா, இன்னிக்கி மாயவரத்துல குடமுழுக்கு! மாயவரத்துல முடவன் முழுக்கு தானே?
இது என்னா புதுசா குடமுழுக்கு-ன்னு பாக்கறீங்களா? மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட அண்மையில் உள்ள ஒரு சூப்பர் ஆலயம் = திரு இந்தளூர்!

மயிலாடுதுறை பேருந்து நிலையம், காவிரியாற்றைக் கடந்தாக்கா, இரண்டு கிலோ மீட்டர் தொலைவு கூட இருக்காது...திரு இந்தளூர் கோயில்!
108 திவ்ய தேசங்களில் (திருத்தலங்களில்) ஒன்று! ஆழ்வார் மங்களாசாசனம் பெற்றது! திருமங்கையாழ்வார் மிகவும் வம்பு பண்ணி கலாட்டா செய்த கோயில்! அட, மாயவரத்தானுக்கே ஆப்பா? :)

வாசனை மிக்க ரங்கன் = பரிமள ரங்கன்! அவன் ஆலயத்துக் குட முழுக்கு தான் இன்னிக்கி! (Apr-9-2009)! போவோமா? மாயூரம்ம்ம்ம்ம்? :)

எல்லாருக்கும் நம்ம மாயவரம் மைனர், மயிலாடுதுறை மாணிக்கம், அபி அப்பா டிக்கெட் எடுத்துருவாரு! நீங்க வண்டியில் ஏறி குந்துங்க! :)
மொத்தம் 10,599 பேருப்பா! அபி அப்பா, தலைக்கு 15/-ரூ மேனிக்கு மொத்தம் 1,58,985/-ரூ - கவுன்ட்டர்ல கட்டுங்க! :)


* பொதுவா, சிவாலயங்களில் = கும்பாபிஷேகம் (குடமுழுக்கு)! குடத்து நீரை அப்படியே கொட்டி முழுக்காட்டுவாங்க!
* பெருமாள் கோயில்களில் செய்யப்படுவது = சம்ப்ரோக்ஷணம்! (நன்னீர் தெளித்தல்)! இதைக் கும்பாபிஷேகம்-ன்னு சொல்ல மாட்டாங்க! குட முழுக்காக இல்லாமல், நீர்த் தெளிப்பு மட்டுமே இருக்கும்!

திரு இந்தளூர் எம்பெருமானுக்கு சுகந்தன்-ன்னு பேரு! அதாச்சும் பரிமளம் வீசுபவன்! அழகிய தமிழில் மரு இனிய மைந்தன்!
அவன் மேனியில் எப்போதும் ஒரு சுகந்தம், வாசனை வீசும்! அதான் பரிமள ரங்க நாதன்! மது-கைடப அசுரர்கள் அபகரிப்பால் பொலிவிழந்த வேதங்களுக்கு மீண்டும் நறுமணம் வீசச் செய்தவனும் கூட!

கருவறையில், அரங்கன் தலை மாட்டில் காவிரி அன்னையும், கால் மாட்டில் கங்கை அன்னையும் பணிந்து உள்ளார்கள்!
கங்கையிற் புனிதமாய காவிரி என்ற பட்டமும் கொடுத்து, தென்னகத்துக் காவிரிக்கும் சிறப்பு செய்தமையால் இந்தக் கோலம்!

* திருவரங்கத்தில் காவிரி மாலவனுக்கு மாலையாய்ப் பாய்கிறாள்!
* திருச்சேறையில் அரங்கனுக்கே காவிரி அன்னை ஆகிறாள்!
* திரு இந்தளூரில் அவன் திருமுடியைத் தாண்டியே காவிரி ஓடுகிறாள்!

எம்பெருமான் திருவடிவம் கொள்ளை அழகு! திருவரங்கத்தைக் காட்டிலும் பெரிது! 12 அடி X 6 அடியாய், முழுதும் பச்சைக் கல்லில் ஆனது!
பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகளும், கை விரல் நகங்களும் தெரியும் அளவுக்கு நுணுக்கமாகச் செய்யப்பட்டிருப்பதை, ஆரத்தியின் போது காணலாம்!

பஞ்ச ரங்க தலங்களுள் என்று சொல்வார்கள்!
1. திருவரங்கம் = கஸ்தூரி ரங்கன் = பெரிய பெருமாள்
2. குடந்தை = ஹேம ரங்கன் = ஆராவமுதன்
3. திரு இந்தளூர் = பரிமள ரங்கன் = மருவினிய மைந்தன்
4. கோவிலடி = அப்பால ரங்கன் = அப்பக் குடத்தான்
5. மைசூர்-ஸ்ரீ ரங்கப் பட்டினம் = ஆதி ரங்கன் = ரங்கநாத சுவாமி

* ஆதி ரங்கம் = திருவரங்கம் / * மத்ய ரங்கம் = திருக் குடந்தை / * அந்த ரங்கம் = மயிலாடு துறை (திரு இந்தளூர்) - என்பதும் இன்னொரு வழக்கு!

சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி, அவனுடைய பிராயச்சித்தம் என்னும் கழுவாயை ஏற்று, சாபம் தீர்த்ததால், இந்து+ஊர் = இந்தளூர்!

இதெல்லாம் அப்பால பாத்துக்கலாம்! மொதல்ல மாயவரத்தான் ஆப்பு வாங்கின கதையைப் பார்ப்போம் வாங்க! :)



அன்று செம வெயில்! ராபின்ஹூட் ஆழ்வாரான நம்ம திருமங்கை மன்னன், ஆடல்-மா என்னும் குதிரையின் மேலேறி பறந்து வருகிறார்! மாயவரம் ரங்கனைப் பார்க்க அம்புட்டு ஆசை! பரிமள ரங்கன்-ன்னு சொல்றாங்களே! அவ்ளோ வாசனையா அந்த அரங்கன் மேல?

உச்சி கால நேரம் துவங்க இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு! ஆனால் மாயவரம் சுகவாசி பரிமள ரங்கனோ கோயில் கதவை அடைத்து விட்டான்!
முகத்தில் அடித்தாற் போல கதவு சாத்தியதால், ஆழ்வாருக்குப் பெருத்த ஏமாற்றம்! :( குதிரையின் மேல் அறக்க-பறக்க வந்தது இதற்குத் தானா?

"ரங்கா! இது தகுமா? இன்னும் நேரம் இருக்கே உச்சிக் காலத்துக்கு! அதற்குள் கதவடைப்பா? அதுவும் இப்படி முகத்தில் அடித்தாற் போலவா கதவை மூடுவது?"

"ஆழ்வீர்! இது மாயூரம்! இங்கு எல்லாம் சட்ட திட்டப்படி தான் நடக்கும்! உமக்கு கொஞ்சம் பொறுமை தேவை!"

"இது என்ன நியாயம் ரங்கா? சட்ட திட்டப்படி நடக்கணும்-ன்னா, இன்னும் ஒரு நாழிகை கழித்தல்லவோ, ஆலய நடையை அடைக்கணும்?"

"ஓ......நீர் அப்படி வருகிறீரோ? நான் சொன்ன சட்ட திட்டம் என்னவென்றால், இங்கு நாங்கள் சொன்னதே சட்ட திட்டம்! அதைத் தான் சொன்னேன்! நீர் போய் பிறகு வாரும்! மாயூர மைந்தர்கள் யாருக்காகவும் எதையும் தளர்த்திக் கொள்ள மாட்டார்கள்! அறிவீரோ?"

"ஆகா! நீங்கள் எப்போதுமே அறிவு ஈறாகத் தான் அறிவீர் என்று அடியேனும் அறிவேன்!
அறிவோம்! அறிவோம் என்று வந்த அடியேனை, அரி-ஓம் என்று சொல்ல வைத்தாயே!
அறியோம்! அறியோம் என்றாலும் அரி-ஓம் என்றே வரும்! முதலில் அதை நீர் அறிவீரோ?"

"தமிழ்க் கடவுளிடமே தமிழை வைத்து விளையாட்டா? போதும் இந்த அழகுத் தமிழ்ப் பேச்சு! போம்! போய், பிறகு வாரும்!"

"ஆம்! எம் தமிழ் அழகு தான்! அது உம்மை விட அழகு தான்! அதனால் தானே பச்சைத் தமிழ் பின் சென்ற பசுங் கொண்டலே என்று ஒவ்வொரு புறப்பாட்டிலும், தமிழ் ஓதுபவர்கள் பின்னே ஓடுகிறாய் ரங்கா? அப்புறம் எதற்கு இந்த வீண் அலட்டல்? இதுவும் மாயூரம் சட்ட திட்டமோ?"

(மெளனம்)



"மணம் கமழும் அழகன் என்ற ஆணவத்தில் பேசுகிறாய் பரிமள ரங்கா! அடியாரைப் பழித்தான் அரங்கன் என்று நாளை உன்னைத் தான் எல்லாரும் தூற்றப் போகிறார்கள்! ஞாபகம் வைத்துக் கொள்!"

"அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை! அத்தனை பேருக்கும் என் நடையழகும் குடையழகும் காட்டி விடுவேன்! இப்போது தூற்றும் கூட்டம், அப்போது தூபம் காட்டும்! ஹா ஹா ஹா!"

"என்ன??? அடியவர் என்றால் இளக்காரமா? என்ன ஆணவம் உனக்கு?"

"ஆ! நவம் நவமாகப் பாடும் உமக்கும் ஆ-நவம் தான்! எமக்கும் ஆ-நவம் தான்! இவ்வளவு எதிர் வாதம் செய்கிறீரே! அதற்குப் பதில் ஒரு பாசுரம் பாடி என்னைக் குளிர்விக்கலாமே?"

"உன்னைப் பார்க்கக் கூட இல்லையே! கதவடைத்து விட்டாயே! பார்க்காமல் எப்படிப் பாடுவதாம்?"

"ஏன்? நம்மாழ்வார் என்னும் நம் ஆழ்வார்! அவர் இருந்த இடத்தில் இருந்தே நம்மைப் பார்க்காமலேயே பாடவில்லை? அது போல் பாட முடியாதா?
பார்த்தாலே பரவசம்! பார்க்கா விட்டாலும் பரவசம்! முதலில் அதை நினைவிற் கொள்ளும் நீர்!"

நம்மாழ்வார் என்ற பேரைக் கேட்டதுமே திருமங்கை மனம் கரைகிறது! மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வார் அடியவர்கள் குல முதல்வன் ஆயிற்றே! சங்கரர் எப்படியோ, அதே போல் தமிழுக்கும் வைணவத்துக்கும் இந்த மாறன் அல்லவா?
அதே போல் முப்பத்தி இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, தத்துவக் கரை கட்டிய குழந்தைப் பையன் அல்லவா? மாறன் மொழி திரு-வாய்-மொழி ஆயிற்றே! திருவாய்மொழிக்கு உருகாதார் ஒரு வாய்மொழிக்கும் உருகார்!

சரி, போனால் போகட்டும்! நம்மாழ்வாருக்காக, நாதனைப் பாடத் துவங்குகிறார் ஆழ்வார்! பத்துப் பாசுரங்கள்! இந்தளூர் பரிமள ரங்கன் மீது!
ஆனால் ஒவ்வொரு வரியிலும் உள் குத்து வைத்துப் பாடுகிறார்! மாயவரத்தானுக்கு உன் குத்து, என் குத்து இல்லை! உள் குத்து! தமிழ்க் குத்து! :)


சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில்! நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை!
நல்லார் அறிவீர், தீயார் அறிவீர், நமக்கு இவ்வுலகத்தில்,
எல்லாம் அறிவீர்! ஈதே அறியீர் இந்த ளூரீரே!


இப்ப என்ன? உம்மைப் பாடணும்! அவ்ளோ தானே? நானும் பாடாம போவப் போறதில்லைங்காணும்!
மற்ற அடியார்களைப் போலவே என்னையும் ஏமாத்திடலாம்-ன்னு நினைச்சிட்டீங்க போல!
நல்லவங்க யாரு-ன்னு அறிவீரு! தீயவங்க யாரு-ன்னு அறிவீரு! எல்லாமே அறிவீரு!
எல்லாம் அறிஞ்ச அறிவீரு! திருவாளர். இந்தளூர்! ஆனா, நாஞ் சொல்லுறதை மட்டும் தான் அறிய மாட்டீரு இல்லையா? :))

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு, இங்கு இழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின் றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர்! இந்த ளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!


உம்ம கிட்ட போயி ஆசை வச்சேனே! அடியார்க்கு ஆதரவா திரிகிற எனக்கு நல்ல மரியாதை கொடுத்தப்பா மாயவரத்தானே!
உம்மை என்னா-ன்னு சொல்லி பாடுறது மிஸ்டர். இந்தளூர்? ஆங்! அதான் சரியான வழி! சில பேரு ரொம்ப நல்லா "வாழ்த்துவாங்க"! எப்படித் தெரியுமா? ="நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க டே!" - அதே போல ரங்கா, உம்மை அடியேனும் வாழ்த்தறேன்!

மிஸ்டர் இந்தளூர்! மிஸ்டர் மாயவரம்! மிஸ்டர் பரிமள ரங்கா!
வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ந்தே போம் நீரே! நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க டே! :)))

திருஇந்தளூர் ரங்க நாயகி - பரிமள ரங்கன்
மரு-இனிய-மகள், மரு-இனிய-மைந்தன் திருவடிகளே சரணம்!
ஆலயக் குடமுழுக்கு (நன்னீராட்டுக்கு) வாழ்த்துக்கள்! இதோ அழைப்பிதழ்!
Read more »

Tuesday, April 07, 2009

புதிரா? புனிதமா?? - மதுரை மீனாட்சி!

முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன! விடைகளுக்கான விளக்கங்களைக் கெபி அக்கா, ஸ்ரீதர், குமரன் முதலான வெற்றியாளர்கள் பின்னூட்டத்தில் சொல்லுவார்கள்!

அன்னையின் குடமுழுக்கு அமைதியாக, அதே சமயம், எளிமையாக நடந்தேறியது குறித்து மகிழ்ச்சி! பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கு என்பது வீண் ஆடம்பரச் செலவு அன்று! வாழும் வீட்டின் மராமத்துப் பணி போலத் தான் இதுவும்!

கலைச் செல்வங்களைத் தொல்பொருள் நோக்கில் மட்டுமல்லாது, ஆன்மீக உயிர்ப்பு என்னும் நோக்கத்திலும் சேர்த்தே காப்பதற்கு குடமுழுக்கு மிகவும் உதவும்! 22 ஆண்டுகளாக இல்லாமல் இருக்கும் சைவத் தலைநகராம் தில்லையிலும் இதே போல் விரைவில் நடந்தேற வேண்டுவோம்!

கும்பாபிஷேகப் படங்கள் தான் இணையம்/பத்திரிகைத் தளங்களில் கூடச் சரியாகக் கிடைக்கவில்லை!
பேசாமல் பெரும் ஆலயங்கள் தாமே ஒரு வலைப்பூ துவங்கினால் என்ன?

உத்திரப்பிரதேச தேர்தல் அலுவலர் ஒருத்தரு இப்படித் துவங்கி, பெரும் வெற்றி கண்டுள்ளார். உடனுக்குடன் தன் பணியாளர்களையும் பொதுமக்களையும் கலந்து பேச முடிகிறது!
இதுக்கு மணி கட்டும் முகமாக, அடியேன் திருக்கோவிலூர் ஜீயர் மற்றும் குன்றக்குடி அடிகளாரிடம் தொடர்பு கொள்ள முயல்கிறேன்!

வெற்றியாளர்கள்:
1. குமரன்
2. முகிலரசி தமிழரசன்
3. ஸ்ரீதர் நாராயணன்

வென்றவர்கள், உடன் நின்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பரிசு = எந்த மருதைக்காரரு-ப்பா ஸ்பான்சர்? உபயதாரர் யார்? :)))
கீதாம்மா, தாங்கள் அறிவித்தபடி, ஆயிரம் பொற்காசுகளை கேஆரெஸ்-க்கே வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் - நக்கீரர்! :)

வெற்றியாளர்களே! இந்தாரும்! பிடியும்! பரிசு! அடியவர் குழாங்களின் தலைவர், வெள்ளி நந்திகேஸ்வரர்!
கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்குமான பொதுப் பரிசு! - காணக் கிடைக்காத படம் - மதுரை மீனாட்சியம்மை-சொக்கநாதப் பெருமான் இரவுப் பள்ளியறை சேவைப் பல்லக்கு காட்சி!

(Added this actual picture of today's kumbabishekam. Thanks: Dinamalar)



மக்கள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? புதிரா புனிதமா போட்டு ரொம்ப நாள் ஆச்சுது! மார்கழி மாசம் திருப்பாவை Crossword போட்டதோட சரி! ஆபீஸ்-ல ரெம்ப பொறுப்பு கூடிப் போச்சுங்க! பேசாம பந்தலை அவுட் சோர்ஸ் பண்ணீறலாமா-ன்னு பாக்குறேன்! Any Takers? :)

இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! = மதுரை மீனாட்சி!
பங்குனி உத்திரம், Apr-08, 2009, காலை 09:00-10:30 மணிக்கு, எங்க வீட்டுப் பொண்ணுக்கு திருக்குட முழுக்கு நடக்குதுல்ல? அதான் ஒரு ஜாலி! :-)

"எங்க வீட்டுப் பொண்ணா"? - யூ மீன் ஆண்டாள்?
ஹா ஹா ஹா! மீனாட்சியும் எங்கூட்டுப் பொண்ணு தாங்க!

என்ன...கோதை என்பவள் தோழி! அதுனால என்னாடீ-ன்னு செல்லமா "டீ" போட்டு கூப்புடுவேன்! ஆனா மீனாட்சியை அப்படியெல்லாம் மரியாதை இல்லாமக் கூப்பிட மனசு கேக்காதுங்க! நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்! :)
என்ன இருந்தாலும், கோதைக்கே அக்கா மாதிரி (நாத்தனார்) மீனாட்சி! அதுனால நமக்கும் மீனாச்சி "அக்கா" தாங்கோ! :)


ரெண்டு பாண்டி நாட்டுப் பொண்ணுங்களும் பார்க்க அதே போலத் தான் இருப்பாங்க!
அதே கொண்டை! அதே தொங்கல் மாலை! அதே கிளி! அதே ஸ்டைலு! அதே கள்ளச் சிரிப்பு! :)

அப்போ, எப்படித் தான் வித்தியாசம் கண்டுபுடிக்கறதாம்?
* மீனாட்சி கையில் கிளி = வலக் கரத்தில் இருக்கும்! கோதை கையில் கிளி = இடக் கரத்தில் இருக்கும்!
ஏன்? காரணம் இருக்கு! மருதைக் காரவுக வந்து செப்பட்டும்! :)
* மீனாட்சி கரும் பச்சை! ஆண்டாள் பொன் சிகப்பி!
பச்சை மா மலை போல் மேனி! குடும்பக் கலரு அண்ணனுக்கும் தங்கச்சிக்கும்! :)

வாங்க ஆடுவோம், புதிரா புனிதமா!
மதுரை மீனாட்சி பத்தி, மதுரைக் காரவுகளுக்கே எம்புட்டு தெரியுது-ன்னு பாத்துருவோமா? :)))
தருமி சார் வேற வந்து "ம்ம்ம்ம், ம்ம்ம்ம்ம்" ன்னு உறுமிட்டுப் போயிருக்காரு, போன மீனாட்சி-Simple Pendulum பதிவுல! காப்பாத்துங்க மக்கா, காப்பாத்துங்க! :) விடைகள்: நாளை இரவு....நியூயார்க் நேரப் படி!


1

அன்னை மீனாட்சி-க்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன?

1
அ) மீனாட்சி

ஆ) அங்கயற்கண்ணி

இ) தடாதகை

ஈ) மாதங்கி

2

மீனாட்சியைச் சொக்கநாதருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அண்ணன் யாரு?

2
அ) கள்ளழகர்

ஆ) கூடலழகர்

இ) தல்லாக்குளம் பெருமாள்

ஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள்

3

மதுரை ஆயிரங்கால் மண்டபத்துக்கு எத்தனை கால்? :)

3
அ) 985

ஆ) 1000

இ) 1004

ஈ) 996

4

மதுரா விஜயம் = மதுரை மீனாட்சி ஆலயம் அன்னியர் கைகளுக்குள் சிக்கிச் சீரழிந்தது! ஏற்கனவே அகதி போலத் திரிந்து கொண்டிருந்த அரங்கன்-நம்பெருமாள் சிலையை முன்னே நிறுத்தி, போர் புரிந்து மதுரையை மீட்டதை இந்த நூல் சொல்லும்!

அரங்கன் தலைமையில் இப்படி மதுரையை மீட்டவர் யார்? உடன் இருந்து பார்த்து இந்த நூலை எழுதியவர் யார்?

4
அ) கோபண்ண உடையார்/ கம்பண்ண உடையார்

ஆ) கோபண்ண உடையார்/ கங்கா தேவி

இ) ஹரிஹரா/ புக்கா

ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி

5மீனாட்சியம்மன் கோயிலின் "உண்மையான" குளம் (தெப்பம் கண்டருளும் குளம்) எது?



5
அ) பொற்றாமரைக் குளம்

ஆ) சொக்கிக் குளம்

இ) வண்டியூர் மாரியம்மன் குளம்

ஈ) வைகை ஆறு

6

மீனாட்சியம்மனைக் கல்வெட்டுகள் எந்தப் பெயரால் குறிக்கின்றன?

6
அ) தடாதகைப் பிராட்டியார்

ஆ) திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சி

இ) கோமகள் குமரித் துறையவள்

ஈ) வழுதிமகள் மும்முலைப் பிராட்டி

7

மீனாட்சியின் தந்தையார் பெயர் மலையத்துவச பாண்டியன்-ன்னு பலருக்கும் தெரிஞ்சிருக்கும்! அன்னையின் அன்னை பெயர் என்ன?

7
அ) பிரசுதி

ஆ) மேனா இமவான்

இ) மாதங்கி

ஈ) காஞ்சனமாலை

8

காந்தியடிகளின் அரிஜன-ஆலய நுழைவுப் போராட்டம்! அது தமிழ்நாட்டில் பின்னாளில் சட்டமாக்கப்பட்டது! சட்டமாக்கினாலும் உள்ளே நுழையும் போது எதிர் விளைவுகள் இருக்குமோ என்று பலரும் அஞ்சினர்!

அப்போது, மீனாட்சியம்மன் கோயிலில் இந்த நுழைவுப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னின்று நடத்தியது யார்? அதைச் சட்டமாக்கியது யார்?

8

அ) தந்தை பெரியார்/ காமராசர்

ஆ) பி.டி. ராஜன்/ அறிஞர் அண்ணா

இ) தந்தை பெரியார்/ இராஜாஜி

ஈ) கக்கன்/இராஜாஜி

9

திருஞான சம்பந்தருக்குப் பெரும் புகழும், வெற்றியும் ஏற்படுத்திக் கொடுத்தது-ன்னா அது மதுரை தான்! சிவன் கோயில் கொடிமரத்தில் பொதுவா விநாயகர்/முருகன் தான் இருப்பாங்க!
ஆனா, இன்னிக்கும், சுந்தரேஸ்வரர் சன்னிதி கொடி மரத்தில் விநாயகர்/முருகனுக்குப் பதிலா, சம்பந்தரைத் தான் வச்சிருக்காங்க!

அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் வென்று, சைவத்தைப் பரவலாக மதுரை மண்ணில் தழைக்க விட்டவர் சம்பந்தப் பிள்ளை!

புனல் வாதம் செய்த போது, வைகை ஆற்றில் அவர் பனையோலை ஒன்றை எழுதி விட்டார்! அது மதுரைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில், ஆற்றுக்கு எதிராகக் கரை சேர்ந்தது! எந்த ஊர்?

9
அ) மேலூர்

ஆ) திருவேடகம்

இ) சமய நல்லூர்

ஈ) அழகர் கோயில்

10

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் மதுரையில் மட்டுமே நடந்தன! அதில் பிட்டுக்கு மண் சுமந்த கதை நம் எல்லாருக்கும் தெரியும்!

வந்திக் கிழவியிடம் பிட்டு வாங்கிச் சாப்பிட்டு விட்டு, கரையை அடைக்காமல் தூங்கிய ஈசனைப் பிரம்பால் அடித்தான் பாண்டியன்! அந்த அடி, கருவில் உள்ள குழந்தை முதற்கொண்டு, எல்லார் மீதும் பட்டது!

ஈசனை அடித்த அந்தப் பாண்டியன் யார்? (திருவிளையாடற் புராணத்தில் வரும் பெயர்)

10
அ) வரகுண பாண்டியன்

ஆ) செண்பகப் பாண்டியன்

இ) சுந்தர பாண்டியன்

ஈ) அரிமர்த்தன பாண்டியன்



கடைசியா ஒரு கேஆரெஸ் திருவிளையாடல்! பத்துக்கும் சரியான பதில் சொன்னாக் கூட, இந்த போனஸ் கேள்விக்கு மட்டும் நீங்க சரியான பதில் சொல்லலீன்னா, ஆள் மொத்தமாவே அவுட்டு! நோ சாய்ஸ்! பரமபத விளையாட்டு பாம்பு போல! என்ன ஓக்கேவா? :))

விறகு வெட்டியாக வந்து பாடும் சிவபெருமான், ஒரு வடநாட்டுப் பாடகனை, ராவோடு ராவாக மதுரையை விட்டே துரத்திய கதை பலருக்கும் தெரியும்!
* அந்த வடநாட்டுப் பாடகன் பெயர் என்ன? (பாலையா-ன்னு சொல்லக் கூடாது, சொல்லிப்பிட்டேன்) = ஹேமநாத பாகவதர்
* எந்த மதுரைக்கார பாடகருக்காக, அந்தப் பாடகரைத் துரத்தினார்? = பாணபத்திரர்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மீனாட்சி ஆ) அங்கயற்கண்ணி இ) தடாதகை ஈ) மாதங்கி

2 அ) கள்ளழகர் ஆ) கூடலழகர் இ) தல்லாக்குளம் பெருமாள் ஈ) பவளக்கனி வாய்ப் பெருமாள்

3 அ) 985 ஆ) 1000 இ) 1004 ஈ) 996
4 அ) கோபண்ண உடையார்/ கம்பண்ண உடையார் ஆ) கோபண்ண உடையார்/ கங்கா தேவி இ) ஹரிஹரா/ புக்கா ஈ) கம்பண்ண உடையார்/ கங்கா தேவி
5 அ) பொற்றாமரைக் குளம் ஆ) சொக்கிக் குளம் இ) வண்டியூர் மாரியம்மன் குளம் ஈ) வைகை ஆறு
6 அ) தடாதகைப் பிராட்டியார் ஆ) திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சி இ) கோமகள் குமரித் துறையவள் ஈ) வழுதிமகள் மும்முலைப் பிராட்டி
7 அ) பிரசுதி ஆ) மேனா இமவான் இ) மாதங்கி ஈ) காஞ்சனமாலை
8 அ) தந்தை பெரியார்/ காமராசர் ஆ) பி.டி.ஆர்/ அறிஞர் அண்ணா இ) தந்தை பெரியார்/ இராஜாஜி ஈ) கக்கன்/இராஜாஜி
9 அ) மேலூர் ஆ) திருவேடகம் இ) சமய நல்லூர் ஈ) அழகர் கோயில்
10 அ) வரகுண பாண்டியன் ஆ) செண்பகப் பாண்டியன் இ) சுந்தர பாண்டியன் ஈ) அரிமர்த்தன பாண்டியன்

11. வடநாட்டுப் பாடகர் = _____ மதுரைப் பாடகர் = _____
Read more »

Thursday, April 02, 2009

படகோட்டியா? தம்பியா?? - இராமன் மனம் யாருக்கு?

நாம் எல்லாம் விமானத்தில் சொந்த ஊர் போய் இறங்கியவுடன் என்ன செய்வோம்?
விமான நிலையத்திலிருந்து நேரே வீட்டுக்கு தானே ஓட்டம்? பின்பு அவரவர் வசதிற்கு ஏற்ப, குளித்து விட்டோ குளிக்காமலோ, இட்லி-வடை-தோசை-சாம்பார், காரச்சட்னி, புதினாச் சட்னி,தேங்காய்ச் சட்னி,வெங்காய்ச் சட்னி என்று விதம் விதமா வெட்டி விட்டு தானே மறு வேலை? அப்புறம் தானே நண்பர்களைப் பார்க்கப் போவதோ, இல்லை பதிவர் சந்திப்போ, மற்றது எல்லாம்?

ஆனால் ராமன் என்ன செய்தான்?
அவனும் புஷ்பக விமானத்தில் வந்து இறங்குகிறான். பதினாலு ஆண்டுகள் கழித்துச் சொந்த ஊருக்கு வருகிறான். நேரே எங்கு போகிறான்?


இராமாயணம் போல் புகழ் அடைந்த காவியமும் இல்லை! இராமாயணம் போல் சர்ச்சைக்குள்ளான காவியமும் இல்லை! - அப்படி ஒரு ராசி, குணசீலனான இராமனுக்கு!
எந்த இந்திய மொழியாகிலும் சரி, அதில் மகாபாரதம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் இராமாயணம் இருக்கும்! - ஏன்?

காவியமாக இல்லையா? சரி, இலக்கியத்திலோ இசையிலோ இருக்கும். அதுவும் இல்லையா? சரி, கிராமத்து எசப்பாட்டாக இருக்கும்.
இப்படி எல்லார் மனத்துக்கும் இனியவன் தான் நம் இராமன்!
இன்று அவன் பிறந்த நாள்; இராம நவமி! (Apr 03, 2009)! So, Happy Birthday - ராமா!
அட, அவனுக்கு மட்டும் தான் பிறந்த நாளா? நாளைக்கு, அதுக்கு மறு நாள்-ன்னு அடுத்தடுத்து.....Happy Birthday - பரதா, இலக்குவா, சத்ருக்கனா! :)

எனக்கு என்னவோ, இராமனைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும், இன்று அவன் அன்பர்களைப் பற்றிப் பேசவே மனம் விழைகிறது.
அனுமனைப் பற்றி பேசலாம் தான்; ஆனால், அனுமனுக்கோ இராமனைப் பற்றிப் பேசுவது தான் பிடிக்கும்! இராமனுக்கோ அனுமனைப் பற்றிப் பேசினால் தான் மனம் களிக்கும்! ஹூம் என்ன செய்யலாம்?


இராம காதையில், இராமனுக்குக் கூடப் "பெருமாள்" என்ற பட்டம் வெளிப்படையாகக் கிடையாது! இராமப் பெருமாள் என்று யாராச்சும் சொல்கிறார்களா? ஆனால், எண்ணி இரண்டே இரண்டு பேருக்குத் தான் பெருமாள் என்ற சிறப்பு.
* இளைய பெருமாள் - இலக்குவன்
* குகப் பெருமாள் - குகன்


குலசேகரர், பெரியாழ்வார், திருமங்கை முதலான ஆழ்வார்களும், இராமானுசர், தேசிகன் முதலான ஆச்சாரியர்களும் குகனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
என்று இராமனின் அடையாளங்களுள் ஒன்றாக, குகனையே குறிக்கிறார் பெரியாழ்வார்.

0171

குகனைப் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் கதையில் ஒரே ஒரு அத்தியாயம் வருகிறானா இந்தக் குகன்? அவனுக்குப் போய் இவ்வளவு சிறப்பு ஏன்?

முருகப் பெருமானுக்கும் குகன் என்ற பெயருண்டு.
பெரிய மலைகள் இருந்தும் அங்கு வாழாது, ஆன்மா என்னும் குகையில் வாழ்பவன் தான் குகன்! நிடத நாட்டுக் காட்டுத் தலைவன்; கங்கைக் கரைப் படகோட்டி. இராமனைப் பார்க்காமலேயே பேரன்பு கொண்டு இருந்தவன்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.
என்பது வள்ளுவ மறை அல்லவா?

இலங்கையில் வெற்றி பெற்ற பின், எல்லாரும் ஊர் திரும்புகிறார்கள் புஷ்பக விமானத்தில்! பெரும் களைப்பு; வழியில் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் சற்றே ஓய்வு! ஆனால் ஓய்வெடுக்க எல்லாம் நேரமே இல்லை. உடனே விரைந்தாக வேண்டும். பதினாலு ஆண்டு காலம் முடிய, இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளன.

அயோத்திக்கு வெளியே, நந்திக் கிராமத்தில் பரதன் காத்துக் கொண்டு இருக்கிறான். சமயத்துக்குள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவான்!
அப்புறம் என்ன வாழ்ந்து என்ன பயன்? விமானத்தில் சென்றாலும் நேரம் ஆகிறதே; அதை விட விரைந்து சென்று, செய்தி சொல்ல வல்லவர் யார்? நம்ம சொல்லின் செல்வர் தானே!


"ஆஞ்சநேயா, எனக்குத் தயை கூர்ந்து ஒரு உதவி செய்வாயா?"

"சுவாமி, என்ன இது பெரிய வார்த்தை? அடியேனுக்கு ஆணையிடுங்கள்!"

"அப்படி இல்லை ஆஞ்சநேயா! நீ இது வரை செய்த உதவிகளுக்கே, நான் எத்தனை பிறவி எடுத்து உனக்குக் கைம்மாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை? மேலும் அதென்னமோ, உயிர் காக்கும் பொறுப்பெல்லாம் உன்னிடமே வருகிறது.
நீ பறந்து சென்று...’பின்னால் அனைவரும் வந்து கொண்டே இருக்கிறோம். அப்படியே தாமதம் ஆனாலும் அவசரப்பட்டு விட வேண்டாம்’என்று பரதனுக்கு அறிவிப்பாயாக! இந்தா முத்திரை மோதிரம்! செல்! சென்று சொல், ஒரு சொல்!"

ஆனால் இராமன் இன்னும் முழுக்க முடிக்கவில்லை; ....இழுத்தான்.
"ஆங்...மாருதீ, மறந்து போனேனே! போகும் வழியில் கங்கையை ஒட்டிச் சிருங்கிபேரம் என்ற ஊர் வரும். அங்கு என் அன்பன், அடியவன், குகன் எனபவன் இருக்கிறான். அன்று என்னையே கரையேற்றியவன் தான் இந்தக் குகன். அவனுக்கும் "வந்து கொண்டே இருக்கிறோம்", என்று அறிவித்துவிட்டே நீ செல்வாயாக!"

அனுமன், இந்த அவசரத்தில் இது தேவையா? என்பது போல் ஒரு கணம் தயங்குகிறான்!

"ஆஞ்சநேயா...தம்பி பரதனின் உயிர் முக்கியம் தான். கால அவகாசமும் குறைவாகத் தான் உள்ளது! ஆனால் அதற்காகக் குகனைப் பார்த்தும் பார்க்காது போல் செல்ல முடியுமா?
எனவே, விஷயத்தைக் குகனிடம் ஓடிக் கொண்டே சொல்லி விடு. சொல்லிக் கொண்டே ஓடி விடு!"

இராமன் கூற்றாக: (யுத்த காண்டம் - மீட்சிப் படலம்)
"இன்று நாம் பதி போகலம், மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்" என்று ஏயினன்..."
--------------------------------------------------------------------------
பின்னர், அனுமன் செயலாக:
"சிந்தை பின் வரச் செல்பவன்,
குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம் கூறி
, மேல் வான்வழிப் போனான்"



0169

யாருக்கு வரும் இந்த கருணை? இன்று அவனவன் எல்லாவற்றிலும் "தானே" இருக்க வேண்டும்;
அடுத்தது "தன் குடும்பம்" தான் இருக்க வேண்டும் என்று அலைகிறான். முதலில் தன் முனைப்பு, பின்பு தமர் முனைப்பு!
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவை உண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
, என்கிறார் பாரதிதாசன்.

இராமனுக்கு, இழந்தது எல்லாம் இப்போது கிட்டி விட்டது. வேலையும் முடிந்து விட்டது. இனி யார் தயவும் தேவை இல்லை.
அண்ட பகிரண்டமும் அஞ்சும் இலங்கேஸ்வரனையே வென்றாகி விட்டது!
அயோத்திக்குக் கீழே உள்ள நாடுகள் எல்லாம் இனி நட்பு நாடுகள் தான்! கூட்டணி பலமாக அமைந்து விட்டது! :) இனி யார் என்ன செய்ய முடியும்?

எங்கோ ஒரு படகோட்டி, எப்போதோ படகு வலித்தான் - இது என்ன பெரிய விஷயமா? இதை விடப் பல பேர், பெரிய உதவி எல்லாம் செய்துள்ளார்கள்.
அப்படி இருக்கும் போது, ஏன் இந்தக் குகன் மேல் மட்டும் அவ்வளவு கரிசனம்? - அதுவும் தம்பியின் உயிரைக் காக்கும் தருணத்திலும்?


அங்கு தான் மறைபொருள் உள்ளது. பொதுவாக இராமாவதாரத்தில், தன்னை இறைவனாக வெளிக்காட்டாமல், மனிதனாக வாழ்ந்து காட்டியதாகச் சொல்லுவார்கள். ஆனால் குகன் போன்றோரின் விடயங்களில் தான், இந்த தெய்வத்தன்மை தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது!

1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.
2. அதே சமயம், தன்னை எளிதில் வந்து அடையும்படி,
தன் நிலையையும் வைத்துக் கொள்வது.
இறைவனின் திருக் கல்யாண குணங்களில் இவ்விரண்டும் தலையாய குணங்கள். (வடமொழியில், இந்தக் குணங்களுக்குச் சிறப்புப் பெயர் சொல்லுவார்கள், சட்டென்று நினைவுக்கு வரவில்லை; அறிந்தவர் சொல்லுங்களேன்)
தன்னையே தன் அன்பர்களுக்குக் கொடுத்து விடும் குணம்!
தம்மையே தம்மவர்க்கு நல்கும் தனிப் பெரும் பதம்! - எது அது?

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத், தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை,
'ராமா' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக், கண்களின் தெரியக் கண்டான்!


காட்டு வாசி; கறியும் மீனும் உண்பவன்; குளித்தானோ இல்லையோ; தாழ்ந்த சாதி; தொட்டால் தீட்டு! - இப்படி எல்லாம் பார்க்க முடிந்ததா இராமனால்? தொட்டால் தீட்டு! - ஆனால் தழுவினால் கூட்டு!! :))

ஏன் இப்படி?... ஏன் என்றால், இறை அன்புக்கு வரை இல்லை, முறை இல்லை!
சாதி இல்லை, சுத்தம் இல்லை!
மனிதன் இல்லை, மிருகம் இல்லை!
உயர்வு இல்லை, தாழ்வும் இல்லை!
இதுவே இராம காதையின் சூட்சுமம்.

அன்பு திரும்பக் கிடைக்குமா என்று கூடத் தெரியாமல், அன்பு செய்வதே - குகன்!

"நின் அருளே புரிந்திருந்தேன், இனி என்ன திருக் குறிப்பே?"
- இது பெரியாழ்வார் திருமொழி
- இது குகப் பெருமாளின் இதய மொழி
- இது மாதவிப் பந்தலின் முகப்பு மொழி!

அன்பே சிவம். அன்பே இராமம்!
குகப் பெருமாள் திருவடிகளே சரணம்!


2007! பதிவெழுத வந்து புதுசு! அப்போ (இப்போவும் தான்) விளிம்பு நிலைப் பதிவரா இருந்தேன்! :) அப்போ இராம நவமிக்கு எழுதிய பதிவின் மீள்பதிவு தான் இது!
காலம் இஸ் ஃபளையிங்-ல? இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராமா! :)
Happy Birthday! Enjoy your day! :)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP