Saturday, November 28, 2009

சிங்கம் ஊதிய புல்லாங்குழல்


ண்ணன் குழலூதும் இனிமையை, அவனுடன் கானகம் செல்லும் நண்பர்கள் (நண்பிகளும் தான்) சொல்லக் கேட்கிறாள் யசோதை. தானும் கேட்டு மகிழ்ந்ததைப் போல், 'நாவலம் (3-6)' என்ற திருமொழியை இயற்றியுள்ளாள்!

5-ம் பாசுரத்தில், நரசிம்மரைக் குழலூதச் செய்கின்றாள்!

***
முன் நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தை முடிப்பான்* மூவுலகில்

மன்னரஞ்ச(சும்)* மதுசூதனன் வாயில்

குழலின் ஓசை* செவியைப் பற்றி வாங்க*
நன் நரம்புடைய தும்புருவோடு*
நாரதனும் தம் தம் வீணை மறந்து*

கின்னர மிதுனங்களும் தம் தம்
கின்னரம்* தொடுகிலோம் என்றனரே
.
நாவலம் 3-6-5

முன்பு நரசிங்க வடிவமாகி, இரணியனது பெருமையை அழித்தான்; மூவுலகிலும் உள்ள மன்னர்கள் அஞ்சும்படி; மதுசூதனன் தனது வாயிலே வைத்து ஊதிய குழலின் ஓசை காதுகளைப் பற்றி இழுக்க, நல்ல வீணைகளை உடைய தும்புருவும், நாரதரும், வைத்திருக்கும் வீணையை மறந்தனர். கின்னரர்களும், 'எங்கள் கின்னரங்களை இனிமேல் தொடமாட்டோம்' என்கின்றனர்.

(முக்கியம் - பெருமை; நரம்பு - வீணை; கின்னர மிதுனம் - கின்னரத் தம்பதியர்)

யசோதை, 'முன்' என்கின்றாளே! வேறு வழியின்றி, விளக்கம் எழுதும் அடியேனும் கொஞ்சம் ’முன்பு’ செல்கின்றேன் .. ஹி... ஹி...

***
(சாபத்தினால், சென்ற பாசுரத்தில் விழ ஆரம்பித்த ஜய விஜயர்கள், அடுத்த நரசிம்மர் பாசுரம் வரை காத்திருந்தனர்; அது வந்தவுடன், எங்கு விழலாம் என்று இடம் தேட ...)


இடம்: ஜம்பூத்வீபம் (அட ... பூமி தாம்ப்பா)
காலம்: படைப்புக் காலம்

ஜயன்: விஜயா! பார்த்தா நல்ல இடமாகத் தெரியுது! நேரே பெரிய மனிதர்களாக விழுந்து விடலாம்!

விஜயன்: வேண்டாம்! இந்த இடம் ரொம்பப் பொல்லாததாம்! அப்படியே விழுந்தால் 'தாய், தந்தை பெயர் தெரியாதவர்கள்' என்ற பட்டம் வருமாம்!

ஜயன்: சரி! மற்றவர்களைப் போலவே குழந்தைகளாகப் பிறந்து விடலாம்!

ஜயன் (திடீரென்று ...):
கீழே பார்! திருமணம் நடைபெறுகிறது! பெரிய மண்டபம் வேறு! சாப்பாடும் நடக்கின்றது!

(கீழே, தக்ஷப் பிரஜாபதியின் 13 பெண்களுக்கும், கச்யபப் பிரஜாபதிக்கும் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது!)

விஜயன்: வந்தவுடனே சாப்பாடா! வந்த வேலையைப் பார்!

ஜயன் (யோசித்து ...): இந்தத் தம்பதியரின் குழந்தைகளாகப் பிறந்தால் என்ன?

விஜயன்: நல்ல Idea!

ஜயன் (காலரைத் தூக்கி விட்டு): இதெல்லாம் நமக்குச் சகஜமப்பா!

(கீழே விழ ஆரம்பிக்கிறான்)

விஜயன்: கொஞ்சம் இரு!

ஜயன் (கடுப்புடன்): இப்போ என்ன?

விஜயன்: பார்த்து விழு! நாம் திதிக்குப் பிறந்ததாக விஷ்ணு புராணத்துல போட்டிருக்கு! தப்பா விழுந்தா பின்னால் பிரச்சனை வரும்! வரத்தையும் மறந்து விடாதே! பிறவியில் இருந்தே தேவர்களுக்கும், நாராயணனுக்கும் விரோதிகள் நாம்! அப்பதான் வந்த வேலை சீக்கிரம் முடியும்!

(பூமியில் 'Entry' ஆகின்றனர் இருவரும் - கச்யபருக்கும், தக்ஷனின் இரண்டாம் புதல்வியான திதிக்கும், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் இரு அசுரர்களாக!)

***

'ரசிங்கமதாகி' என்கிறாள். 'நரசிங்கமாகி' என்று சொல்லியிருக்கலாமே? மீண்டும் 'அது'வா?

நரசிம்மம், மனிதனா, மிருகமா என்று தெரியவில்லை! அதனால் தான் 'அது'வோ?


நரசிம்மம், அவுணனின் 'முக்கியத்தை' முடிக்கின்றதாம் (முக்கியம் - 'பெருமை' என்ற பொருளில் இருந்து, தற்பொழுது மாறியுள்ளதைக் கவனிக்கவும்)!

'மூவுலகில் மன்னர் அஞ்சும்' என்கின்றாள்! வார்த்தைகளைச் சற்று 'Jumble' செய்யலாமா?

'மூவுலகில் மன்னர் அஞ்சும் அவுணன் முக்கியத்தை, முன் நரசிங்கம் அது ஆகி முடிப்பான்' - மூன்று உலகங்களில் உள்ள எல்லா மன்னர்களும் (தேவர்களும் தான்) பயப்படும் இரணியனின் பெருமையை முன்பு நரசிம்மமாக வந்து முடிக்கிறான்!

வேறு விதமாக 'Jumble' செய்யலாமா?

***

'முன் நரசிம்மன் ஆகி, அவுணன் முக்கியத்தை முடிப்பான்; மூவுலகின் மன்னர் அஞ்சும் மது (அது ஆகி), சூதனன்'!

மது எனும் அரக்கனைக் கொல்ல ஹயக்ரீவனாய் (மனித உடல், குதிரை முகம்) உருவம் எடுத்தவனே மது-சூதனன்!


நரசிம்மனை அழைத்தவுடன், உடனே ஹயக்ரீவரும் நினைவுக்கு வருகிறது யசோதைக்கு (இருவருமே மனித உடல், மிருக முகம் கொண்டவர்கள்)! 'அது', இங்கு ஹயக்ரீவரைக் குறிக்கும்!

'மன்னர் அஞ்சும்' - மன்னர்கள் (இரணியன், மது, கம்சன்), தம்முடைய சக்தியின் அளவைக் கடந்த செயல்களைச் செய்யும் நரசிம்மரையும், மதுசூதனனையும் (கண்ணனையும்) கண்டு அஞ்சினார்களாம்!

இங்கு கண்ணனையும் சேர்த்துக் கொள்வதற்கு, அவன் சிறு பிராயத்திலேயே செய்த மாயச் செயல்களே காரணமாம் (பூதனை, சகடம், தேனுகன், காளியன், பிலம்பன், அகாசுரன், சீமாலிகன், கோவர்த்தனோத்தரணம், ...)!

நரசிம்மனே (மதுசூதனனே) குழலூதுகின்றானாம்! எப்படி?

***

இடம்: தேவலோகம்
காலம்: மயங்கும் காலம்
இசை: All தேவலோக Radio
வாசிப்பது: தும்புரு, கின்னரர்

தேவேந்திரன் (கொட்டாவியுடன்): தும்புரு! கின்னரர்களே! ஏதாவது வாசியுங்களேன்!

தும்புரு (இவர் தூங்க, என் வீணை தான் கிடைத்ததா ...): சரி தேவேந்திரா!

(களாவதி எனும் தன் வீணையை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கிறார்; எங்கிருந்தோ ஒரு குழல் கானம் கேட்கிறது)

தேவேந்திரன்: தும்புரு! உன் வீணையில் இருந்து புல்லாங்குழல் சத்தமா! அதிசயமாக இருக்கிறதே!

தும்புரு: பிரபோ! நான் இன்னும் ஸ்ருதியே சேர்க்கவில்லை! அதற்குள் எப்படி வாசிக்க முடியும்?

(தேவேந்திரன், ’இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என்ற முணுமுணுக்கிறான்)

தேவேந்திரன்: சரி! வேகமா ஆரம்பி!

தேவேந்திரன் (திடீரென்று): ஆ!! காதை இழுக்காதே! வலிக்கிறது! விடு!

(சுற்றும் முற்றும் பார்க்கிறான்; அருகில் யாரும் இல்லை; நாரதர் வந்து கொண்டிருக்கிறார்)

தேவேந்திரன் (ஐயோ! இப்ப என்ன பிரச்சனையோ!): நாரதரே! நீர் தானே என் காதைப் பிடித்து இழுத்தீர்!

நாரதர்: தேவேந்திரா! விளையாடாதே! இப்போது தானே நான் உள்ளே வருகிறேன்!

(குழல் கானம் இன்னும் சத்தமாகக் கேட்கிறது; நாரதர் சுற்றும் முற்றும் பார்க்கிறார்; பிறகு கீழே பார்க்க, விஷயம் விளங்குகிறது)

நாரதர் (தன் காதையும் தடவிக் கொண்டே):
தேவேந்திரா! யாரும் உன் காதைப் பிடித்து இழுக்கவில்லை! பூவுலகில், கண்ணன் பிருந்தாவனத்தில் குழலூதுகிறான். அவன் இசை, இங்கும் வந்து நம் காதை இழுக்கிறது!

தேவேந்திரன்:
வரும்போதே ஆரம்பித்து விட்டீரா உம் கலகத்தை! இசை எங்காவது காதை இழுக்குமா?

நாரதர்: தேவேந்திரா! நான் கலகம் செய்ததே இல்லை! சாதாரண இசை என்றால், நாம் தான் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க வேண்டும். சில சமயம் காதைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும்! ஆனால், கண்ணனின் குழலிசை என்றால், அது, காதுடன் சேர்த்து, நம்மையும் இழுக்கும்!

தேவேந்திரன்: சரி! தும்புரு! கின்னரர்களே! நாரதரே! நீங்கள் இப்படி ஏன் வாசிப்பதில்லை!

(’நீங்கள் கொடுக்கும் 5 காசு சன்மானத்திற்கு, தேவ கானமா கிடைக்கும்! காக்காய் கானம் தான் கிடைக்கும்!’ என்று ஒரு கின்னரன் முணுமுணுக்கிறான்)

தேவேந்திரன்: என்னது!

அதே கின்னரன்: ஒன்றுமில்லை தேவேந்திரா! கண்ணனைப் போல் எங்களால் உங்கள் காதைப் பிடித்து இழுக்க இயலாது என்றேன்!

தேவேந்திரன்: இதெல்லாம் நல்லா பேசு! வாசிக்கும்போது மட்டும் ராகம், தாளத்தை கோட்டை விட்டுரு!

நாரதரும், தும்புருவும் (சேர்ந்து): இனிமேல் நாங்கள் வீணை வாசிப்பதை மறந்து விடுகிறோம்!

கின்னரர்கள் (சேர்ந்து): நாங்களும் இனிமேல் எங்கள் கின்னரங்களைத் தொட மாட்டோம்!

(’உங்களை எல்லாம் 'Recession' என்று சொல்லி வேலையை விட்டுத் தூக்கிடணும் ... வந்து பேசிக்கறேன்’ என்று தேவேந்திரன் முணுமுணுக்கிறான்)

தும்புரு: கூப்பிட்டீர்களா பிரபோ!

தேவேந்திரன்: இதெல்லாம் நல்லா கேக்குமே! எல்லோரும் வாருங்கள்! நாமும் பூலோகத்திற்கே சென்று குழலிசையை நன்கு அனுபவிக்கலாம்!

('நாரதர் வந்தாலே கலகம் தான் ... இப்போது நம் வேலைக்கு வேட்டு!' என்று ஒரு கின்னரன் புலம்ப, அனைவரும் பூமிக்கு வர ஆயத்தமாகின்றனர்)

***

மேலே வருணித்த காட்சியைக் கூறியது அடியேன் அல்ல! யசோதையாழ்வார்!

'மதுசூதனன் வாயில் குழலின் ஓசை, செவியைப் பற்றி வாங்க' என்கின்றாள்! தேவேந்திரன் காதையும் அது இழுத்தால் அதிசயமா என்ன?

'நன்னரம்புடைய தும்புருவோடு, நாரதரும் தம் தம் வீணை மறந்து' விடுகிறார்களாம்!

'கின்னர மிதுனங்களும், தம் தம் கின்னரம் தொடுகிலோம்' (தொட மாட்டோம்) என்கின்றனராம்!

கண்ணனின் குழல் இசை கேட்ட பிறகு, தேவேந்திரன் மனது வேறு எந்த இசையிலும் லயிக்காது! தினமும் தூங்குவதற்கு, 'அந்தக் குழலோசை போல் நீங்களும் வாசிக்க வேண்டும்' என்று கட்டளை இடுவான்! அது போல், இவர்களால் வாசிக்க இயலாதே!

இதிலிருந்து தப்பிக்க வழி? ’இனிமேல் வீணை, கின்னரங்களைத் தொட மாட்டோம்’ என்றது சரியான Strategy' தானே!

***

ல்லாப் பாசுரங்களையும் முடிந்தால் படியுங்கள்! படிக்க முடியவில்லை என்றால், கேளுங்கள்! நமக்கும் அவன் குழலிசை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்!

கடைசிப் பாசுரத்தில், திருமொழியைப் படிப்பதன் பலனாக பெரியாழ்வார் கூறுவது:

'குழலை வென்ற குளிர் வாயினராகி, சாது கோட்டியுள் கொள்ளப் பாடுவாரே'

குழல் இசையையும் வென்ற, இனிய வாக்குள்ளவர்கள் ஆவார்கள்; அவர்களுக்குப் பேச்சுத் திறமை உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு!

ஏதாவது அதி முக்கியமான 'Meeting' இருந்தால், திருமொழியை 3 முறை சொல்லி விட்டுச் செல்லுங்கள்! உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும் (இதை அடியேன் அனுபவத்தில் கண்டுள்ளேன்)!

படிப்பவர்கள், சாதுக்களின் குழுவில் சேர்வர்!

இறைவன் அருள் பெறுவதற்கு, அவன் அருள் பெற்ற சாதுக்களை அடைவதே முதல் படி!

- நரசிம்மர் மீண்டும் வருவார்!

Read more »

Monday, November 23, 2009

குடமாடும் கூத்தன்


கண்ணனை மிகவும் கெஞ்சிக் கூத்தாடி நீராட்டி, குழல் வாரி விடுகிறாள் யசோதை! அவன் மீண்டும் விளையாட ஓடிவிட, அவனை, 'உனக்குப் பூச்சூட வேண்டும்! வா!' என்று அழைக்கிறாள், 'ஆநிரை மேய்க்க' எனும் இந்தத் திருமொழியில்.

இதில் 7-ம் பாசுரத்தில், யசோதை நரசிம்மனைக் கொண்டாடுகிறாள்.

***

குடங்கள் எடுத்தேற விட்டு* கூத்தாடவல்ல எம் கோவே!*

மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
ஆநிரை 2-7-7

குடங்களை எறிந்து கொண்டு கூத்தாடும் திறமை உள்ள எம் தலைவனே! சந்தரன் போன்ற முகமுள்ள பெண்களை மயக்க வல்ல என் மைந்தனே! மடியில் இருத்தி, இரணியனின் மார்பை இரு கூறுகளாக முன்பு பிளந்தவனே! திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருக்கும் என் தலைவனே! குருக்கத்திப் பூவை
உனக்குச் சூட வேண்டும்! வா!


எம்பெருமான் கூத்தாடுவானா? இது என்ன கூத்து?

***
ண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான்! அவன் பின்னே அஷ்ட லக்ஷ்மிகளும் அங்கு வந்து சேர்கின்றனர். மற்ற தேவர்களும் இவர்கள் பின்னே வந்துவிட்டனர்! ஆயர்களுக்கு அங்கு, உணவு, உடை, செல்வம் எல்லாம் வருகின்றது! பின்னாலேயே கர்வமும்!

இப்படி வருகின்ற செல்வச் செருக்கு நீங்குவதற்காக, ஆயர்கள் ஆடுவதுவே குடக்
கூத்து!

தலையில் அடுக்குக் குடங்கள்! இரு தோள்களிலும், இரு கைகளிலும் இரண்டு குடங்கள்! வானத்தில் தொடர்ந்து ஒரு குடத்தை எறிந்து, அது கீழே விழாதபடி பிடித்து ஆடுகின்றனராம்! குடத்தில் கவனம் இருக்கும்போது, குடம் போல் உள்ள செருக்கு பறந்துவிடுமாம்!

ஆயர்களுக்குச் செருக்கு ஏற்படலாம். எம்பெருமானுக்கு ஏது?

இங்கு, 'எம் தலைவனே' என்றதனால், ஆயர்கள் எல்லோரும் குடமாடுவர் என்றும், அவர்கள் தலைவன் கண்ணன் என்றும் யசோதை கூறுகிறாளோ?

ஒரு வேளை எம்பெருமானும் அவர்களுடன் சேர்ந்து குடமாடினானோ?

***

திருநாங்கூர். 11 திவ்ய தேசங்கள் இருக்குமிடம்! இதில், (திரு) அரிமேய விண்ணகரமும் (#29) ஒன்று. 'அரிமேய விண்ணகரத்திற்கு' வழி கேட்டால் அநேகமாகக் கிடைக்காது. 'குடமாடு கூத்தர் கோயில்' என்று கேட்க வேண்டும்!

எம்பெருமானின் திருநாமமே 'குடமாடு கூத்தர்'. எனவே, எம்பெருமான் குடமாடியிருக்க வேண்டும்!

சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள்,

'வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணிலம் அளந்தான் ஆடிய குடமும்'
என்கின்றார் (கடலாடு காதை 54-55)

மங்கையார் மங்களாசாசனம் செய்யும்போது, 'குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் ... ' என்கின்றார் (பெரிய திருமொழி 3-10-8).


குன்றைக் குடையாக எடுத்தவனாயிற்றே கண்ணன்! 'குடையாடு கூத்தன்' என்றல்லவோ எழுத வேண்டும்?

இதைத் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'குன்று குடையாய் எடுத்தாய் ...' என்று அருளிச் செய்தாள்?

கண்ணன் குடமாடினானா? குடையாடினானா?
***
ம்மாழ்வார், அர்ச்சாவதாரப் பாசுரங்களில், 'பரஞ்சோதியை, குரவை கோத்த குழகனை, மணிவண்ணனை, குடக் கூத்தனை ...' என்றே குறிப்பிடுகிறார்.

மலையாள திவ்ய தேசங்களில், திருக்கடித்தானமும் (#70) ஒன்று. இங்கு, எம்பெருமானுக்கு நடை பெற்ற விழாக்களில், பெண்கள் குடை பிடித்து நடனமாடும் நிகழ்ச்சியும் இருந்ததாம்! காலப் போக்கில் இந்த நடனம் கைவிடப் பட்டது என்றும் கோயில் கர்ண பரம்பரைச் செய்தி.

நம்மாழ்வாரும் இச் செய்தியை,

கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை*
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்*
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ* வைகுந்தம்

கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.

என்கின்றார். மேலும் சில ஆழ்வார் பாசுரங்களில், எம்பெருமான் குன்று குடையாக எடுத்த நிகழ்ச்சியே ’குடக் கூத்தன்’ என்பதற்குப் பொருளாக விவரிக்கப் பட்டுள்ளது.

உங்கள் ஓட்டு எதற்கு - குடைக்கா? குடத்துக்கா? இல்லை செல்லாத ஓட்டா (இரண்டிற்கும் போட்டால் செல்லாத ஓட்டு ... ஹி ... ஹி ... )

***
பாசுரத்தின் முதல் வரியில், ஆயர்களுக்குத் தலைவன் என்ற யசோதை, பெருமையுடன், இவன் தன் மகன் என்கின்றாள்! தன் மகன் எந்தப் பெண்ணையும் மயக்க வல்லவன் என்ற பெருமை! பெண்கள் எல்லோரும், 'உங்கள் மகன் எங்களை மயக்கிவிட்டான்' என்று மாளிகைக்கு வந்து இவளைக் குறை கூறுவதால், பாதிப் பெருமை, பாதிக் கவலை (நமக்கு இவ்வளவு மருமகள்கள் தேவைதானா என்றோ?)!

இரணியனை மார்பு பிளந்த களைப்பினால், திருக்குடந்தையில் படுத்துக் கிடப்பதாகச் சொல்வது இனிய கற்பனை!

இரணியனை, 'முன் கீண்டாய்' என்கின்றாள் யசோதை. 'முன்' நடந்தது என்ன?

***

இடம்: வைகுந்த வாசல்

காலம்: சபிக்கும் காலம்

(சிலர் சண்டை போடுவது போல் இரைச்சல் கேட்கிறது)

பரந்தாமன் (பாம்புப் படுக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்து): என்ன இது சத்தம்! இது என்ன வைகுந்தமா, சந்தைக் கடையா?

(அங்கு, நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள், இடையிலே உடையின்றி, ஏழாவது வாயில் காவலர்களான ஜய, விஜயர்களைப் பார்த்துக் கத்திக் கொண்டு இருக்கின்றனர்)

பரந்தாமன் (குழந்தைகளைப் பர்த்து): அடேடே! சனகரே! சனந்தனரே! சனாதனரே! சனத் குமாரரே! வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்கு என்ன கஷ்டம்! தங்கள் கோபத்திற்குக் காரணம் என்ன?

சனகர்: தங்களை தரிசனம் செய்ய வந்த எங்களை தங்கள் வாயிற்காவலர்கள் உள்ளே விடவில்லை! அவமானப் படுத்திவிட்டனர்!

விஜயன்: நாராயணா! வழி தவறி வந்துவிட்டனர் என்று நினைத்துவிட்டோம்!

ஜயன்: அச்சுதா! சிறுவர்கள் என்று நினைத்து விட்டோம்!

சனந்தனர்: எம்பெருமானே! எல்லோரையும் சமமாக நினைக்கும் வைகுந்தத்தில், இவர்கள் 'பெரியவர், சிறியவர்' என வித்தியாசப் படுத்திப் பார்த்ததால், வித்தியாசம் நிறைந்த பூலோகத்திற்கே செல்லும்படி சபித்தோம்! அப்போது தான் நீங்கள் வந்தீர்கள்!

நாராயணன்: ஜய விஜயரே! நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்!

(இந்தக் காலத்து 'Official' ஆக இருந்தால், வாயிற் காவலருக்கே 'Support' செய்து இருப்பார்)

ஜயன்: பிரபோ! மன்னித்து விடுங்கள்!

நாராயணன்: சரி! ஏழா? மூன்றா?

விஜயன்: என்ன?

நாராயணன்: பிறவியைச் சொன்னேன்! ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா?

ஜயன்: ஒன்றாக மாற்ற முடியுமா?

சனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே? மீண்டும் சபிக்கட்டுமா?

விஜயன்: ஐயோ! மூன்று பிறவியே போதும்! நாராயணா! உங்களையே நிந்தித்து, வைகுந்தத்திற்கு மீண்டும் விரைவில் வருவோம்!

(தொபுகடீர்! டமால்! என்ற சத்தம் உலகம் முழுவதும் கேட்கின்றது)
***

விழுந்த அந்த இருவர்!

க்ருத யுகத்தில் இரணியாட்சன், இரணியகசிபு (இரணியன்)!

த்ரேதா யுகத்தில் பின்னர், கும்பகர்ணன், ராவணன்!

துவாபர யுகத்தில் தந்தவக்ரன், சிசுபாலன்!

எம்பெருமானையே விரோதியாகக் கருதி, அவனையே நிந்தித்து, அவன் கையாலே மாண்டு, மீண்டும் அவனிடமே வந்தவர்கள்!

இருவரில் ஒருவனுக்கு மட்டும் அதீத வெறுப்பு (இரணியன், ராவணன், சிசுபாலன்)! இவனே முனிவரைச் சிறுவன் என்று எண்ணியவன் போலும்!

இதனாலேயே, எம்பெருமானைத் தீவிரமாக நிந்தை செய்வதையும் தியானம் என்கின்றனரோ!

சகோதரர்களில், இன்னொருவன் எம்பெருமானின் விரோதியாக இருந்தாலும் (இரணியாட்சன், கும்பகர்ணன், தந்தவக்ரன்), அதீத வெறுப்புக் கொண்டதாகக் கதை இல்லை!

சென்ற பாசுரத்தில், 'உளம் தொட்டு' என்றாரே ஆழ்வார்! அதற்கு இன்னொரு அர்த்தம்!

தான் தொட்ட உள்ளத்தில், பாசம் இருக்கிறதா என்று சோதித்தார்! தப்பித் தவறி இருந்து விட்டால், பின்னர் ஏழு பிறவி வந்து விடுமே! இரணியனே ஆனாலும், வைகுந்தத்தில் இருந்தவனாயிற்றே! எனவே, உடனே உள்ளத்தைச் சோதிப்பதை விட்டு, மார்பைப் பிளந்து, பிறவியில் இருந்து முக்தி அளிக்கிறார்!

***

’Back to the Future':

ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு பூவைச் சொல்லி, 'உனக்கு இதைச் சூட்டுகிறேன், வா!' என்கின்றாள் யசோதை.

பலஸ்ருதி இல்லாத மிகச் சில திருமொழிகளில் இதுவும் ஒன்று!

யசோதையாழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை! ஏன் அவர் துளசியைச் சேர்க்கவில்லை என்பது யாருக்காவது தெரியுமா?

இந்தத் திருமொழி, தினமும் வைணவர்களால் பாராயணம் செய்யப் படவேண்டும் (நித்யாநுசந்தானத்தில் இந்தத் திருமொழி சேர்க்கப் பட்டுள்ளது)!


வீட்டில் மலர்கள் இல்லை என்றாலும், இந்தத் திருமொழியைச் சொன்னால், எம்பெருமானை மலர்களால் அர்ச்சனை செய்வதற்குச் சமம்!

வைணவக் கோயில்களில், திருமஞ்சன காலத்தில், இந்தத் திருமொழி சேவிக்கப் படுகிறது.

இந்தப் பாசுரத்தில், எம்பெருமானைப் பற்றி மேலும் விவரித்திருக்கிறார் ஆழ்வார். கண்டுபிடிக்கிறீர்களா?

- நரசிம்மர் மீண்டும் வருவார்

Read more »

Friday, November 13, 2009

வளர்ந்த சிங்கம்


கு
ழந்தை, சுவரைப் பிடித்து எழுந்து நிற்க ஆரம்பித்தவுடன், மகிழ்ச்சியுடன் கைகொட்டிச் சிரிக்கும். இதைப் பார்க்கும் தாயும் சேர்ந்து, கை கொட்டி மகிழ்வாள். இந்தப் பருவத்தை, பிள்ளைத் தமிழில், சப்பாணிப் பருவம் என்பர்.


பெரியாழ்வார், கண்ணன் கைகொட்டிச் சிரிப்பதை அனுபவித்து, மாணிக்கக் கிண்கிணி எனும் (1-7) இயற்றியுள்ளார்.

இதில் 9-ம் பாசுரத்தில் நரசிம்மனை அழைக்கிறார்.

***
அளந்திட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே
வளர்ந்திட்டு* வாளுகிர்ச் சிங்க உருவாய்*

உளந்தொட்டு இரணியன்* ஒண் மார்வகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*

பேய்முலை உண்டானே! சப்பாணி.
மாணிக்கக் கிண்கிணி 1-7-9

தானே அளந்து கட்டிய தூணை இரணியன் தட்ட, அவன் தட்டிய இடத்திலேயே வளர்ந்து தோன்றி, ஒளி பொருந்திய நகங்களை உடைய சிங்க உருவாய், இரணியன் மார்பைத் தொட்டு, மார்பு முழுவதும் பிளந்த கைகளால், கை கொட்டிச் சிரி! பேய் முலை உண்டவனே! கை கொட்டிச் சிரி!'

என்று 'யசோதை'யாழ்வார் பாடுகின்றாள்.

***

ரசிம்ம புராணத்தில் இருந்து ஒரு காட்சி ...

இடம்: இரணியன் அரண்மனை
நேரம்: அவன் விதி முடியும் நேரம்

இரணியன் (கோபத்துடன்): மூடனே! எங்கே இருக்கின்றான் விஷ்ணு?

பிரகலாதன்: எல்லா இடத்திலும்!

இரணியன் (சிரித்து): இந்தத் தூணிலுமா?

(பிரகலாதன் கண்ணுக்கு எம்பெருமான் காட்சியளிக்கிறார்)


பிரகலாதன் (தூணைப் பார்த்து):
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா! உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா!

(எல்லாமே எம்பெருமான் தான் என்று
நினைக்கும் மனப் பக்குவம் வந்து விட்டால், கூப்பிடும்போது தான் நரசிம்மர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே!)


இரணியன் (சந்த்ரஹாசம் எனும் தன் கத்தியை எடுத்து):
பைத்தியமே! நான் சொல்வதை நன்றாகக் கேள்! உன்னை என் கையாலேயே வெட்டிக் கொல்வேன்!

(பிரகலாதனை, 'மூட:' என்று இரண்டு
முறை குறிப்பிடுகின்றான் இரணியன் இங்கு! பிரகலாதன் பைத்தியமா? யாராவது பதில் அளிக்கிறீர்களா?)

இரணியன் (ஒரு தூணைக் காட்டி): முடிந்தால் இந்தத் தூணில் இருந்து விஷ்ணு வந்து உன்னைக் காப்பாற்றட்டும்!

ஓஹோ! 'அளந்திட்ட தூண்' இது தானோ?

***

ந்தத் தூண், சாதாரணத் தூண் அல்ல!

நாம் ஒரு வீடு கட்ட ஆரம்பிக்கிறோம்! பூஜை செய்து, அதில் முதல் கல்லை மட்டும், நாம் எடுத்து வைக்கிறோம்! மற்றதெல்லாம் கொத்தனார் வேலை. ஆனாலும், நம் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் 'நான் கட்டிய வீடு' என்று சொல்லிப் பெருமை கொள்கிறோம்!


('ராமர் பொறியியல் கல்லூரியில், B.E Degree வாங்காமல், சேது பந்தனம்' கட்டியதும் இப்படித் தானே?)


இப்படி, இரணியன், முதலில் 'அளந்து இட்ட' தூணாம் இது! அதுவும், தன் உருவத்திற்கு ஏற்பக் கட்டிய, மிகப் பெரிய, உயரமான, அழகான தூண்!

ஆனால், ஆழ்வார் கூறும் காரணம் இதுவல்ல!

தானே நட்டு வைத்த, பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்தத் தூணில், 'நாராயணன் முன்னமேயே வந்து ஒளிந்து கொண்டு இருக்க முடியாது' என்ற நம்பிக்கையிலேயே!

ஒரு வேளை, 'தன் விதி இது தான்' என்று முன்னமேயே இரணியன் (வரங்களின் மூலம்) அளந்து வைத்த தூண் என்கின்றாரோ ஆழ்வார்?

இன்னொரு தனிச் சிறப்பு - தசாவதாரக் கதைகளில் இன்னமும் சான்றாக இருப்பவை, அநேகமாக இந்தத் தூணும், சேது பந்தனமும் தான்! அதிலும், திவ்ய தேசம், இந்தத் தூண் ஒன்று தான்!


அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்:
கப்பல்களும், மற்றவையும் வந்து, அவை இரண்டும் அழிவதற்கு முன்னர், முடிந்தால் நீங்கள் நேரில் சென்று தரிசனம் செய்து விடுங்கள் - இதுவரை தரிசனம் செய்யாமல் இருந்தால்!

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தூணைத் தட்டுகிறான் இரணியன்!

***

ரசிம்மம் தோன்றுகிறது! தட்டிய இடத்தில் இருந்து!


'நாளைக்கு வருகிறேன்!' என்று எம்பெருமான் பாற்கடலில் தூங்கிக் கொண்டு இருக்க முடியுமா? அதற்குள் இருக்கிற ஒரே பக்தனையும் இரணியன் கொன்று விடுவானே!

அப்பொழுதே தோன்றியது!

'ஆங்கே' என்பதற்கு, 'அந்த இடத்திலேயே, அப்போழுதே' என்ற இரு பொருளும் உண்டு!

இதனாலேயே பெரியோர்கள் 'நாளை என்பதே நரசிம்மத்துக்குக் கிடையாது!' என்பர். அவனுடைய நாமத்தைச் சொல்லுங்கள்! கேட்டவுடன், உடனேயே கிடைக்கும் நரசிம்மனிடம் இருந்து!

'வளர்ந்திட்டு' என்கிறாரே? சிங்கம் வளர்ந்ததா?

***

ல்லா நரசிம்மாவதாரக் காவியங்களும், 'நரசிம்மர் தூணைப் பிளந்து வந்து இரணியனை வதம் செய்தார்' என்று கூறினாலும், உண்மையில் அவதாரம் முழுவதும் பல நிலைகளில் (Stages) வர்ணிக்கப் படுகின்றன:

- தூண் பிளந்ததும், வந்த சிங்க உரு!
- உடனே எடுத்த விசுவ ரூபம்!
- இரணியனுடன் இருந்த அசுரர்கள் வதம்!


- இரணியனுடன் போர்!
- அந்திப் போதில், இரணியனின் மார்பு பிளந்தது!
- எம்பெருமானின் கோபம்!
- கோபம் தணிந்ததும் நடந்தவை!


படைப்பாளியின் கற்பனைக்கு ஏற்ப, வர்ணனைகளில் சில நிலைகள் குறைவாகவும், சில நிலைகள் அதிகமாகவும் உள்ளன.

தூணில் இருந்து வெளிவந்தவுடன், நரசிம்மம் விசுவரூபம் எடுத்ததாகவும் கூறுவர். இதனாலேயே ஆழ்வார் 'வளர்ந்திட்டு' என்கின்றாரோ?

கம்பரின் விசுவரூப வர்ணனையையும், மற்ற காவியத்தில் உள்ள வர்ணனைகளையும், முழுவதும் நாம் பின்னால் ரசிக்கலாம்.

('பின்னால், பின்னால்' என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் என்ன அர்த்தம் என்கிறீர்களா? அடியேன் கிட்ட இருக்கிற மொத்தச் சரக்கையும் 90+ பாசுரங்களுக்கு ஏற்கனவே கூறு போட்டுட்டேன் சாமி ... ஹி... ஹி...)

எம்பெருமான், சங்கு சக்கரங்களுடன் தோன்றியதாகக் கூறுவர். இருந்தும், அவதாரக் காரணம் கருதி, அவற்றின் ஒளியை விட அவருடைய நகங்கள் மிகவும் ஒளி பொருந்தியதாக இருந்ததால், சங்கு சக்கரங்களைப் பற்றி விவரிக்காமல், 'வாள் உகிர்ச் சிங்க உரு' என்கிறார்.

நரசிம்மம் மார்பைத் தானே தொட்டது? 'உளம் தொட்டு' என்கின்றாரே, ஏன்?

***

ட்டிய இடத்தில் இருந்து, அப்பொழுதே தோன்றும் எம்பெருமானைப் பார்த்தாவது, இரணியன் திருந்துவானா என்று எம்பெருமான் நினைத்தாராம் (திருந்தினால், இன்னும் ஒரு பக்தன் கிடைப்பானே என்ற நப்பாசை தான்)! எனவே, அவன் உள்ளத்தைத் தொடுகின்றார் ('உளம் தொட்டு')!

நன்கு தேடியும், எம்பெருமான் மேல் பாசம் சிறிதும் இல்லையாம் இரணியனுக்கு! அவன் திருந்துவதாகத் தெரியவில்லை. உடனே, உள்ளத்தை விட்டு விட்டு, பிளக்கிறார் மார்பை!

ஒண் மார்வகலம் பிளந்திட்ட’ - மார்பை, அகலமாகப் (முழுவதுமாக) பிளக்கின்றார் எனவும், அகலமான மார்பைப் பிளக்கின்றார் எனவும் பொருள் கொள்ளலாம்.

அன்று ஆயுதமாக இருந்த அதே கைகள், இன்று, கை கொட்டிச் சிரிக்கின்றதாம்! சிரிக்க வைக்கின்றதாம்!

ஐயோ! மீண்டும் பூதனையா? ஆழ்வாருக்கு பூதனையை ரொம்பப் பிடிக்குமோ?

***

பூதனையும், இரணியனும் ஒரே குலமாம் - அசுரர்கள் என்பதற்கும் மேலாக!

இருவரும் - ’தொடை’க்குலமாம்
(!?!)

ஒருத்தியை, அவள் தொடைகளில் படுத்து, உயிரை எடுக்கின்றான்! ஒருவனை, தன் இரு தொடைகளில் கிடத்தி, அவன் உயிரை எடுக்கின்றான்!


ஒரு தொடையில் நிலமகளைப் பிரளயத்தி லமர்த்தினை*
இரு தொடையில் இருத்திநீ அவுண னுடல் பிளந்தனை*

ஒரு தொடையில் பத்தனை வதத் தின்பின் அமர்த்தினை*

இரு தொடையில் கிடந்துநீ யரக்கி உயிர் குடித்தனை*

ஒரு தொடை தட்டிநீ பாரதப் போர் முடித்தனை*

ஒரு தொடையில் திருமகளை இடந்தையி லமர்த்தினை*

ஒரு தொடைத் துளவம் தந்த அடிப்பொடிக் கருளினை*

ஒரு தொடை யலங்கார மெழுது மடியேனுக் கிரங்காயோ?


பாரதத்தில், தன் தொடையைத் தட்டி, பீமனுக்கு சமிக்ஞை செய்கிறான்! துரியோதனன் மரணத்துடன் போர் முடிகின்றது!

திருமகளையும், நிலமகளையும், பிரகலாதனையும் தன் இடப்பாகத்தில் அமர்த்துகின்றான்!

என்ன? ’தொடை’க்குலம் என்பது சரி தானே?

- நரசிம்மனே போற்றி!

Read more »

Thursday, November 05, 2009

ஆளரிநாதன்


செங்கீரைப் பாசுரங்களைச் சொன்னால், நமக்கு என்ன கிடைக்கும்?

***

*'ன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்*
ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!*

என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*

ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுக' என்று*
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு
*
ஆன புகழ் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*

இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்* உலகில்

எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.

உய்ய உலகு - 1-6-11

'அன்னமாகவும், மீன் உருவாகவும், நரசிங்கமாகவும், வாமனனாகவும், ஆமையாகவும் அவதரித்தவனே! இடையர்களுக்குத் தலைவனே! என் துன்பத்தை நீக்கு! செங்கீரை ஆடுக! ஏழு உலகங்களையும் உடையவனே (வயிற்றில் வைத்துக் காத்தவனே)! மீண்டும் மீண்டும் ஆடுக!'

என்று, அன்ன நடை கொண்ட யசோதை விரும்பிச் சொன்னவாறு, புதுவைப் பட்டர் சொன்ன இனிய ராகத்தோடு கூடிய பத்துப் பாசுரங்களையும் கற்ற வல்லவர்கள், இந்த உலகில் எட்டுத் திசைகளிலும் புகழ் பெற்று, இன்பம் எய்துவர்'.

'அன்னமும்' என்றவர், 'மீனும்' என்று கூறாது, 'மீன் உருவும்' என்று கூறுவானேன்?

***

த்ஸ்ய (மீன்) அவதாரக் கதை, இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது.

(1)
சோமுகாசுரன் (சிலர் மதுகைடபர்கள் என்ற இருவர் என்றும் கூறுவர்) வேதங்களைத் திருடினான். கடலுள் மறைந்தான்.


திருமால் மீன் வடிவம் எடுத்தார்; கொன்றார்; மீட்டார்; அன்ன உருவுடன் பிரமனுக்கு உபதேசித்தார்!


இதனாலேயே 'அன்னமும், மீனுருவும்' என்று இரண்டையும் சேர்த்து ஆழ்வார் கூறுகிறாரோ?


(2)
ஹயக்ரீவன் என்ற அசுரன் வேதங்களைத் திருடினான். இதைக் கண்ட திருமால், ஒரு சிறிய மீன் வடிவு கொண்டார்.

சத்யவிரதன்
என்ற முனிவர் (சிலர், ச்ராத்த தேவர் எனும் மநு என்பர்) நீர் அருந்தும்போது, அவர் கைகளில் இந்த மீன்! தன்னைக் காப்பாற்றுமாறு கேட்ட மீனைத் தன் கமண்டலத்தில் விட்டார்.

ஓரிரவில் கமண்டலம் முழுதும் வளர்ந்தது! வேறு ஒரு பாத்திரத்தில் மீனை விட, அதிலும் இடமில்லை! இப்படியே குளம், ஆறு, ஏரி, கடல், பெருங்கடல் என வளர்ந்தது மீன்! முனிவருக்கு மீன் யார் என்று தெரிந்தது.


அடுத்த மூன்று நாட்களில் ஏற்பட்ட பிரளயத்தின் போது, திருமால் உலகைக் காத்தார். மறைந்த வேதங்களையும் மீட்டார்.

ஒரே மீனாக இருந்தாலும், 'Container'-ன் அளவாக இருந்தவை பல - 'மீன் உரு'க்கள்! எனவே, 'மீனும்' என்னாது, 'மீனுருவும்' என்கின்றார்!

திருமால், குதிரையாக வருவதற்கு (ஹயக்ரீவ அவதாரம்) அற்புதமான காரணம் உள்ளது. ஆனால், ஏன் அன்னமாக வந்து உபதேசிக்க வேண்டும்? இதற்கு என்ன காரணம்? இது பற்றித் தெரிந்தால் கூறுங்கள். அடியேனும் தெரிந்து கொள்கிறேன்)


முதல் முறையாக 'ஆளரியும்' என்கின்றார். ஏன் அவர் நரசிங்கமாக வரவேண்டும்?

***

ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஒரு காட்சி ...

இடம்: மந்தர மலை அடிவாரம்
காலம்: இரணியகசிபுவின் தவம் முடியும் காலம்


பிரமன் (கையில் கமண்டலத்துடன், தனக்குள்): எங்கே இரணியன்! தேவர்கள் இங்கு தான் எங்கேயோ என்று சொன்னார்களே!

அருகில், ஒரு சிறு மலை போன்ற புற்று! அதில், எறும்புகள், ஈசல்கள் சாரை சாரையாக!


(விஷயம் புரிந்த பிரமன், தன் கமண்டல நீரை எடுத்து, மலையில் தெளிக்கிறார். புற்று கரைகிறது. மீண்டும் நீர் தெளிக்க, எறும்புகள் கடித்து, எலும்பாக இருந்த இரணியன், பொன் நிறம் பெற்று, பூரண ஆரோக்கியத்துடன் எழுகின்றான்)

பிரமன்: இரணியா! யாரும் 100 தேவ வருடங்கள் உயிருடன் இருந்து தவம் செய்ததில்லை! உன் தவத்தால் நான் ஜயிக்கப் பட்டேன். உனக்கு என்ன வேண்டும்?

இரணியன்: வணக்கம்! கேட்டதைக் கொடுப்பதாக வாக்களித்தால் கேட்கிறேன்.

பிரமன்: சரி, வேண்டியதைக் கேள்!


(ஏற்கனவே ‘Room' போட்டு யோசித்து’ வைத்ததை, இப்பொழுது ஒப்பிக்கிறான் இரணியன்!)

இரணியன்: உம்மால் படைக்கப்பட்ட பிராணிகளிடம் இருந்து எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. உள்ளேயும், வெளியேயும், மரணம் கூடாது. பகலிலும், இரவிலும் கூடாது. நீர் (நேரடியாகப்) படைக்காத (தக்கன் மூலம் படைத்தது) பிராணிகளிடமிருந்தும், ஆயுதங்களாலும் மரணம் கூடாது.

பிரமன் (தனக்குள் ... ஆஹா! இப்பவே கண்ணைக் கட்டுதே!): இவ்வளவு தானே!

இரணியன்: இன்னும் இருக்கிறது! தரையிலும் ஆகாசத்திலும் மரணம் கூடாது. மனிதர்களாலும் மிருகங்களாலும் மரணம் கூடாது. உயிரில்லாதவை, உயிருள்ளவை, தேவர்கள், அசுரர்கள், நாகர்கள் யாராலும் மரணம் கூடாது.

பிரமன் (தனக்குள் ... ரொம்பக் கண்ணைக் கட்டுதே!): போதும், நிறுத்து!

இரணியன்: பிரபோ! இன்னும் ஒன்றே ஒன்று! சண்டையில் எதிரி இல்லாத தன்மையும், எல்லாப் பிராணிகளுக்கும் ஒரே தலைவனாயும் இருக்க வேண்டும். உமக்கு இருப்பது போல் திக்பாலகர்களுடைய மகிமையும், தவமும், யோகசக்தி உடைய சித்தர்களிடம் எப்பொழுதும் இருக்கும் அணிமாதி சித்திகளும் என்னிடம் இருக்க வேண்டும்'.

பிரமன்: பிடி வரம்! விடு ஆளை! எடு ஓட்டம்!

(அடுத்த வரம் கேட்பதற்குள் ’Escape'!)

இந்த வரங்களைப் பற்றி கம்பர் என்ன சொல்கிறார்?

***

ம்பர், 5 கவிகளால் (144-148), இரணியன் பெற்ற வரங்களைக் கூறுகிறார். இந்த வரங்கள் பாகவதத்தில் கூறியவை போல இருந்தாலும், 2 கவிகள் மட்டும், குறிப்பிட்டுக் கூறக் கூடியவை:

தேவர் ஆயினர் ஏவரும், சேணிடைத் திரியும்
யாவரேயும், மற்று எண்ணுதற்கு அரியராய இயன்ற

கோவை மால் அயன் மானிடன் யாவரும் கொல்ல,

ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன்; அனையான். (145)


(மானிடன் = மான் + இடன்; தாருகா வனத்து முனிவர் ஏவிய மானை இடது கையில் கொண்டதால், சிவன், ’மானிடன்’ எனப்படுவார்)

மூன்றாவது வரியில், (திரு)மால், அயன், சிவன், மூவரும் அவனைக் கொல்ல இயலாது என்று வரம் வாங்கியதாகக் கூறுகின்றார்!

’திருமால் அவனைக் கொல்ல முடியாது’ என்ற வரத்தை இரணியன் பெற்றதாக, வேறு எந்த நரசிம்மர் அவதாரக் காவியத்திலும், புராணத்திலும் கூறப்படவில்லை.

இதற்கு விளக்கமாக, 'திருமால் நாராயணனாக வந்து இரணியனைக் கொல்ல முடியாது' என்று வரம் பெற்றதாக கம்பராமாயண விளக்கப் புத்தகங்கள் கூறுகின்றன. (இதே விளக்கம் சிவனுக்கும், பிரமனுக்கும் பொருந்துமே?)

வரங்கள் கொடுக்கும்போது, பிரமனும், மற்ற தேவர்களும், தங்கள் சக்திக்கேற்ற வரத்தையே கொடுக்க இயலும்! அடுத்தவர்கள் சார்பில், சக்திக்கு மீறிய வரத்தைக் கொடுக்க இயலாது என்று வேதங்கள் கூறுகின்றன. (உதாரணம் - மார்க்கண்டேயர் வரலாறு - திருவாய்மொழிப் பாசுரம் 4-10-8)!

எனவே கம்பர் கூறியது போல் பிரமன், 'திருமால் இரணியனைக் கொல்ல முடியாது’ என்ற வரத்தை அளித்திருக்க இயலாது என்று பெரியோர்கள் கூறுவர்.

இன்னொரு பாடல்:

பூதம் ஐந்தொடும் பொருந்திய புருவினால் புரளான்;
வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்;

தாதை வந்து தான் தனிக் கொலை சூழினும் சாகான்;

ஈது அவன் நிலை; எவ்வுலங்கட்கும் இறைவன். (148)


இரண்டாவது வரியில், 'வேதம் விளம்பிய பொருள்களால்' மரணம் இல்லை என்ற வரம் பெற்றதாகக் கூறுகிறார்.

வேதம் கூறும் பொருட்கள் என்பது இங்கு, மந்திரங்கள், தந்திரங்கள். இவைகளையும் ஆயுதமாகக் கருதுவதால், இதையும் வரமாகப் பெற்றதாகக் கம்பர் கூறுவது அழகு!

தனது தந்தையே வந்து கொல்ல முயன்றாலும் சாக மாட்டான் ('தாதை ... சாகான்') என்ற வரம் வாங்கியதாகக் கூறுகின்றார். இந்த வரமும், வேறு எந்தப் புராணத்திலும் காணப்படவில்லை!

இரணியனின் தந்தை, காச்யப முனிவர். அவருக்கும் படைக்கும் சக்தி இருந்ததால், இதையும் கம்பர் குறிப்பிட்டதாகக் கூறுவர்.

(பிரமன் படைத்தவரே இரணியனின் தந்தையான காசியபர்; பிரமன் படைத்த எதனாலும் மரணம் இல்லை என்பதால், இந்த வரம், அடியேனுக்கு 'Superfluous' என்றே தோன்றுகிறது!)

நேரமிருந்தால் கவிச் சக்கரவர்த்தியின் மீதிப் பாடல்களையும் படித்துப் பாருங்கள்!

'என் கேள்விக்கென்ன பதில்'?


***

ரணியனுக்குக் கிடைத்த வரங்கள் பல என்றாலும், அவற்றுள் மிக முக்கியமானவை இரண்டு:

(1) 'பிரமன் படைத்த எதனாலும் மரணம் இல்லை' என்பதால், திருமால் ஒருவனே இவனைக் கொல்ல முடிந்தது.

(2) பிரமன் ஏற்கனவே படைத்த பிராணி எதுவும் (எந்த உருவமும் - மனிதன் அல்லது மிருகம்) இரணியனைக் கொல்ல முடியாததால், திருமாலும், அதுவரை எவரும் படைத்திராத, பார்த்திராத உருவமாக வந்து அவனைக் கொல்ல வேண்டி இருந்தது!

நரசிம்ma உருவத்தை அதுவரை யாரும் பார்த்திருக்க வில்லை என்பதற்குச் சிறந்த சான்று, இரணிய வதத்தின் பின்னே வருகின்றது. இதைப் பற்றி யாருக்காவது தெரிந்தால் பதில் அளியுங்களேன்?

இனி, பாசுரத்தின் பலன்களைப் பார்க்கலாம்.

***

திருமொழியைக் கற்று அறிந்தவர்கள் ('வல்லார்') எட்டுத் திசைகளிலும் புகழ் பெறுவராம்! இன்பமும் கிடைக்குமாம்!

'வல்லார்' என்ற வார்த்தைக்குப் பொருளாக, 'கற்று ஸமர்த்தரானவர்' என்று வியாக்கியானம் கூறுவார்கள்! கற்றால் மட்டும் போதாது, அதன் படி நிற்க வேண்டுமாம் ('கற்க ...' என்ற திருக்குறள் ஞாபகம் வரணுமே?)!

'இன்பம் எய்துவரே' என்று கூறினால் போதாதா? ஏன் 'இன்பம் அது எய்துவர்' என்கின்றார்'?

கிடைக்கும் புகழுக்கு ஏற்ற இன்பத்தை, 'அது' என்கின்றார்.

சரி, கற்ற படி நிற்பதற்கு எவ்வளவு வருடங்கள் ஆகுமோ? நமக்கு எல்லாம் உடனே வேண்டுமே? என்ன செய்வது?

... நரசிம்மர் உடனே வழி சொல்வார்

Read more »

Monday, November 02, 2009

கோவிந்த கோளரி - நரசிம்ம அவதாரமா அல்லது ”சிம்ம” அவதாரமா ?


பெரியாழ்வாருக்கு யசோதை நினைவுகள் தொடர்கின்றன ...

தவழ ஆரம்பித்த கண்ணன், தனது இரண்டு கைகளையும், முழந்தாள்களையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்திக் கொண்டு ஆடுகின்றான்.

கண்ணனின் இந்த விளையாட்டை, கற்பனை யசோதை ரசிக்கின்றாள்!

(பிள்ளைத் தமிழில், குழந்தையின் இந்த விளையாட்டுக்கு, 'கீரை' எனும் பதம் உண்டு. பெரியவர்கள் தாலாட்டுப் பாட, குழந்தை இவ்வாறு ஆடுவதற்கு, 'செங்கீரை ஆடுதல்' என்ற பெயரும் உண்டு. சிலர் இதை, 'கீரைக்குத் தண்ணீர் இறைத்தல்' என்பர்).

கண்ணனை, 'மீண்டும் ஒரு முறை ஆடு!' என்று கெஞ்சுகின்றாள், 'உய்ய உலகு' என்ற திருமொழி மூலம்.

இதில் 2-ம் பாசுரத்திலும், 11-ம் பாசுரத்திலும் நரசிம்மனைப் பற்றிப் பேசுகிறாள்.

***

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்*
குருதி குழம்பி எழக் கூருகிரால் குடைவாய்!*

மீள, அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி*

மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வர*

காள நன்மேகம் அவை கல்லொடு கால் பொழிய*

கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*

ஆள எனக்கொருகால் ஆடுக செங்கீரை*

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
உய்ய உலகு - 1-6-2

'வலிமையுடைய சிங்க உருவம் கொண்டு, இரணியன் உடலில் இருந்து ரத்தம் பொங்கி எழும்படி, கூர்மையான நகங்களால் அவனை நீ குடைந்தாய்! மீண்டும், அவன் மகன் கூறியது உண்மை என்று நினைக்கும்படி.

தேவர்கள் தலைவனான இந்திரன் மிகவும் கோபம் கொண்டு, நன்கு கறுத்த மேகங்களைக் கொண்டு கல் (ஆலங்கட்டி) மழை, பலத்த காற்றுடன் பொழியச் செய்தான். அப்பொழுது கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு, பசுக் கூட்டங்களைக் காத்தவனே! தலைவனே! எனக்காக மீண்டும் ஒருமுறை செங்கீரை ஆடுக! வலிமை வாய்ந்த ரிஷபம் போன்றவனே! நீ மீண்டும் ஒருமுறை செங்கீரை ஆடுக!'

(கோள் - வலிமை; அரி - சிம்மம்; கூருகிர் = கூர் + உகிர் - கூர்மையான நகம்; மீள - மீண்டும்; காளம் - கருத்த; கால் - காற்று; வரை - மலை; காலிகள் - பசுக்கள்; ஆள - தலைவனே)

ஆழ்வார், வலிமை மிக்க 'நர-சிங்கம்' என்று குறிப்பிடாமல், வலிமை மிக்க சிங்கம் (அரி) என்று குறிப்பிட்டுள்ளது ஏன்?

***
தூணில் இருந்து வந்த எம்பெருமான் மனிதனாக வெளியே வந்தால், இரணியன் பெற்ற வரங்களின் படி, அவனை அழிக்க முடியாது. ஆக, இந்த அவதாரத்தின் முக்கிய அம்சமே, மனிதன் இல்லை - சிம்மம் தான்!


(அதே போல், முழுவதும் சிங்கமாக வந்தாலும் இரணியனை அழிக்க முடியாதே. இதற்கு விளக்கம் அளியுங்களேன்!)

எனவே, ஆழ்வார்கள் நரனை விட்டு அரியையே (சிங்கம்) அவதாரமாகப் பாசுரங்களில் குறிப்பிடுவர்.

'குடைவாய்!' என்கின்றார் - அது என்ன 'மீள'?

***

பிரகலாதன், இரண்டாவது முறையாக சத்தியம் செய்கின்றான் - இம்முறை, 'அரி எங்கும் உள்ளான்' என்று. இரணியன் 'இந்தத் தூணில் அரி இல்லை என்றால் உன்னை என் கையால் கொன்று விடுவேன்' என்று சொல்லி, தூணில் அடிக்க, சிம்மம் வெளி வந்து இரணியன் மார்பைப் பிளக்கிறது.

இதனை விவரிக்க ஆழ்வார், பாசுரத்தின் மூன்றாவது வரியில் 'மீள' எனும் வார்த்தையைப் பல விதமாக (மீண்டும், மறு பிறவி எடுத்தல், ஆபத்தில் இருந்து தப்பித்தல்) உபயோகப் படுத்தியுள்ளார்:

எம்பெருமான் இரணியன் மார்பைப் பிளக்கின்றார். இரணியன் உயிர் தரிக்கின்றான். இருந்தாலும் சந்தேகம்! எனவே, குடைகின்றார், மீள!

முனி குமாரர்களின் சாபத்தால் பூமிக்கு வந்து அசுரனாகப் பிறந்தவனே இரணியகசிபு. இறந்தால் தான் அவன் அந்தச் சாபத்தில் இருந்து மீள்வான்! எனவே, குடைந்தார், அவன் சாபத்தில் இருந்து மீள!



பக்தனான பிரகலாதன், பிறந்தது முதல் துன்பப் படுகின்றான்; இரணியனின் வதத்தால், பக்தன் இந்தத் துன்பத்தில் இருந்து மீள, குடைந்தார்!

நரசிம்மம் வெளி வரவில்லை என்றால் இரணியன் பிரகலாதனைக் கொன்று விடுவான். எனவே, பிரகலாதன் ஆபத்தில் இருந்து மீள, குடைந்தார்!

பிரகலாதன் இரணியனிடம், மீள (மீண்டும்) செய்த சத்தியத்தை உண்மையாக்கக் கருதி ('மெய்ம்மை கொளக் கருதி''), சிம்மம் வெளி வந்தது!

முதல் முறை மார்பைப் பிளந்ததும், ரத்தம் உறைந்து இருக்கின்றது. அதனால், இரணியனின் உள்ளத்தில் (மார்பில்) இருந்த வெறுப்பு மறையவில்லையாம்! அது மறையாவிட்டால் எப்படி அவனுக்கு மீள (மீண்டும்) வைகுந்தம் அளிப்பது?

இரணியனுடைய வெறுப்பு மறைய, அவன் மார்பைக் குடைந்தார், மீள!

'குருதி குழம்பி எழ''!

'மீள' என்ற ஒரே வார்த்தையினால், கிட்டத் தட்ட கதையையே சொல்லி முடித்து விட்டார் ஆழ்வார்!

(பக்தியைத் தவிர, இத்தகைய தமிழ் அழகாலும், பிரபந்தப் பாசுரங்கள் மற்ற கவிதைகளை விட மிக உயர்ந்து இருக்கின்றன)

பாசுரத்தின் அடுத்த நான்கு வரிகளையும் ஆராய்ந்து விடலாமா?

***

டையர்கள் இந்திரனுக்குப் பூஜை செய்ய பொருட்கள் சேர்க்கின்றனர்.


கண்ணன் அவர்களிடம், 'கோவர்த்தன மலையே புல்லும், தண்ணீரும், காற்றும், நிழலும், பழங்களும், காய்கறிகளும் நமக்குக் கொடுக்கின்றது. இந்திரனால் நமக்குப் பயன் ஒன்றும் இல்லை' என்கிறான்.

கோவர்த்தன கிரிக்கு அதிர்ஷ்டம்! இந்திரனுக்குக் கோபம்!

மேகங்களை, ஆய்ப்பாடியை வெள்ளத்தில் மூழ்கடிக்கச் சொல்கிறான்! காற்று, மின்னலுடன், கற்கள் ('கல்') போல் விழுந்தது, பலத்த மழை! (ஓஹோ! இது தான் 'அந்த 7 நாட்களோ'?).

'கல்லொடு கால் பொழிய' என்கின்றார் ஆழ்வார். காற்று எப்படிப் பொழியும்? உண்மையில், 'காலொடு கல் பொழிய' என்றல்லவோ இருக்க வேண்டும்?

மழையுடன், பலத்த காற்றும் வீசுகிறது! ஒரு வேளை, சாதாரண மழையை விட, பலத்த காற்றுடன் கூடிய மழை அதிகச் சேதம் விளைவிக்குமோ? இந்தச் சூழ்நிலைக்கு, 'கல்லொடு கால் பொழிய' என்ற சொற்றொடர் அழகு சேர்க்கின்றது! மீண்டும் தமிழ் அழகு!

பசுக்களும், மற்றப் பிராணிகளும், விருந்தாவன வாசிகளும் கண்ணனைச் சரணடைந்தனர்.


ஆனால் 'காலிகள் (பசுக்கள்) காத்தவனே!' என்கின்றார் ஆழ்வார்!

பசுக்கள் மனிதர்களை விட மிகவும் உயர்ந்தவையோ? மனிதர்களைப் பற்றி எம்பெருமானுக்கு அக்கறை இல்லையா?

***

கோபியர்கள், சில நேரங்களில் கண்ணனிடம் கோபிக்கின்றனர் - பெரும்பாலும் பொறாமை!

கோபியரின் தாய்மார்களோ, எப்போதும் யசோதையிடம் கோள் சொல்கின்றனர்.

தாய் தந்தையரோ, ரொம்பக் கண்டிப்பு!

கோகுலத்து வயதான ஆண்களோ, எப்பொழுதும் ஆய்ப்பாடியின் எல்லையில் உள்ள மரத்தின் கீழ், வேலை எதுவும் செய்யாமல், அமர்ந்து அரட்டை அடிக்கின்றனர். பக்கத்தில் ஒரு சொம்பும், குடையும் வேறு!

உடனிருக்கும் நண்பர்களோ, ஒரு நேரம் போல் இருப்பதில்லை.

அண்ணனோ, சில சமயங்களில் ஒத்து வருவதில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், பதில் பேசாமல், எப்பொழுதும் கூடவே இருந்து, தலையை நன்றாக ஆட்டி (குழல் இனிமைக்குத் தான்), கண்ணனிடம் முழுச் சரணாகதி அடைந்தவை இந்தப் பசுக்கள் தான்! இவனுக்குப் பெயரே ’கோ’பாலன் தானே?

மழை வந்ததும், முதலில் பசுக்கள், தலைகளைத் தாழ்த்திக் கொண்டு, கன்றுகளைத் தன் கால்களின் இடையே வைத்துக் கொண்டு கண்ணனிடம் வந்து நின்றதாம்! அதன் பிறகே மனிதர்கள் வந்து நின்றனராம்!

கோகுலத்தில், பசுக்கள் இல்லையேல், உணவும், மனிதர்களும், மற்றப் பிராணிகளும் இல்லை. பணமும், ஜீவனமும் இல்லை. ஆய்ப்பாடியைக் காப்பாற்ற வேண்டும் என்றால், முதலில் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, பசுக்களுக்குத் தான் அங்கு ஏற்றம்!

ஆழ்வார் 'காலிகள் காத்தவனே' என்றது சரிதானே?

கண்ணன் தன் ஒரு கைச் சுண்டு விரலால் கோவர்த்தன மலையைக் குடையாக்க, அனைவரும் அதன் கீழ் ஒரு வாரம் நிம்மதியாக இருந்தனர்.

இந்த அற்புதத்தைக் கண்டு இந்திரன் திகைத்தான். கண்ணன் யார் என்று புரிந்தது. மேகங்களை விலக்கி, கண்ணனைச் சரணடைந்து, 'கோவிந்தன்' என்று பெயர் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தான்.

(பெரியாழ்வார், கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கிய அழகை, 'அட்டுக்குவி' எனும் திருமொழியில் [பெரியாழ்வார் திருமொழி 3-5] அழகாக வர்ணித்துள்ளார். நேரமிருந்தால், படித்துப் பாருங்கள்)

மலை எடுத்ததையும், நரசிம்மாவதாரத்தையும், ஆழ்வார் ஒரே பாசுரத்தில் சேர்த்து, பெரியாழ்வாரும், மங்கையாரும் சில பாசுரங்களில் எழுதியுள்ளனர். ஏன்?

ஒரு வேளை இரணியன் மனதும் கோவர்த்தனகிரியும் கல் என்பதாலோ?
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்?

இந்த 'கோவிந்த' கோளரிக்கும், ஆழ்வார்களின் தமிழுக்கும் நம் வணக்கங்கள்.

- நரசிம்மரே, மீண்டும் வாரும்!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP