Friday, April 23, 2010

பித்துக்குளி ஹிட்ஸ் கேட்போமா? பால் வடியும் முகம்!

பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :)
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" வெண்ணெய் தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?
சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப்பையன்!
அடிபட்ட பெரியவரோ....பரம பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார்! நெற்றியில் இரத்தம் வடிய...
"அடேய்...நீ என்ன பித்துக்குளியா (பைத்தியமா)?".....


மேலும் வாசிக்க...பாட்டைக் கேட்க.... இங்கிட்டு போங்க! இனியது கேளுங்க!

பின்னே? பந்தல் வாசகர்கள், பந்தலை மட்டும் எட்டிப் பார்த்தா எப்படி?
கண்ணன் பாட்டிலும், My Honey - முருகனருள் வலைப்பூவிலும் தானே என் மூச்சு இருக்கு! Thatz why this Intro & Redirect from Panthal! :)
Read more »

Tuesday, April 20, 2010

பிறந்தநாள்: இராமானுசர் தவறு? சுட்டிக் காட்டியது யார்?

ஆகா! இராமானுசர் தவறு செய்வாரா? அடப்பாவி! அங்க வச்சி, இங்க வச்சி, கடேசீல இவர் மேலேயே கைய வச்சிட்டியா?-ன்னு ஒரு சிலர் பொங்கி எழுவது எனக்குத் தெரிகிறது!
அவர்களுக்கு இராமானுசர் மேல அன்பு இருக்கோ இல்லீயோ...அடியேன் மேல் "பாஆஆசம்"...இருப்பதென்னவோ உண்மை! :)

வணக்கம் மக்களே! இன்று சித்திரைத் திருவாதிரை (Apr 20, 2010)!
உடையவர், எம்பெருமானார் என்று போற்றப்படும்.....காரேய்க் கருணை, இராமானுசரின் பிறந்த நாள்!
Happy Birthday Ramanuja! இன்னும் பல நூற்றாண்டு இரும்! :)

* தமிழ் வேதமான மாறன் மொழியை, ஆலயம் தோறும், "கருவறைக்குள்ளே-யும்" ஒலிக்கச் செய்து...
* தமிழை இறைவனுக்கு முன்னே ஓதி வர, இறைவன் பின் தொடர, வடமொழி வேதங்களை அதற்கும் பின்னால் ஊரறிய ஓதி வரச் செய்து...

* வேதங்களின் விளக்க நூலும், விசிட்டாத்வைத (விதப்பொருமை) நூலுமான ஸ்ரீபாஷ்யத்துக்கு, பிரம்ம சூத்திரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல், திருவாய் மொழியையும் ஆதாரமாகச் சேர்த்து...

* திருவாய் மொழிக்கு, பல ஈடு வியாக்யானங்களை எழுதப் பண்ணி...
* வைணவத் தலைநகரமான திருவரங்கத்தில், மார்கழி ஏகாதசியின் போது, தமிழுக்கென்றே தனித்த திருநாள் - திருவாய்மொழித் திருநாள் - 21 நாட்கள் இன்றளவும் நடக்க வைத்து...

இப்படி, பெற்ற தாயான நம்மாழ்வாரைக் காட்டிலும், வளர்த்த தாயாய், வளர்த்து விட்ட உடையவருக்கு.....இந்தப் பாடல் ஒரு பிரார்த்தனை!
வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன்! மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் நம் இராமானுசன்!




சரி, இராமானுசர் பிறந்த நாள் பதிவுக்கு வருவோம்! அது என்ன இராமானுசர் செய்த தவறுகள்? இராமானுசர் தவறெல்லாம் செய்வாரா என்ன? :)

மனுசனாப் பொறந்த எல்லாருமே தவறுவது இயல்பு தான்!
நமக்குப் பாடம் காட்ட வந்த அவதாரங்களும், ஆசார்ய புருஷர்களும், நல்லது மட்டும் தான் செய்து காட்டுவாங்களா என்ன?
தவறும் செய்து காட்டுவார்கள்! அப்படித் தவறிய பின், அதை எப்படி எதிர்கொள்ள வேணும் என்றும் நடந்தும் காட்டுவார்கள்!

இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான்! அதை அவனே தவறு என்று ஏற்றுக் கொண்டு, அடுத்த அவதாரத்தில், அதே போல் மறைந்திருந்து, கண்ணன் கொல்லப்பட்டு, கழுவாய் தீர்த்துக் கொண்டான்!

ஆனால் நம் பண்டித சிகாமணிகள் தான், ஓவர் புனிதப் பூச்சுகளைப் பூசி, வாலி வதம் சரியே! சீதையின் அக்னிப் பிரவேசம் சரியே! என்று ராமாயண இண்டு இடுக்குகளில் புகுந்து, இன்றும் பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருப்பார்கள்! :)
இதனால் இராமன் மேல் மதிப்பு வருவதற்குப் பதிலா, ஓவர் புனிதப் பூச்சு பூசி, வெறுப்பு வரவே இவர்கள் துணை போய்க் கொண்டு இருப்பார்கள்!

இராமன் காட்டிய வழியில் தானே இராம-அனுஜனும்? இராமானுச வைபவத்தில் அவர் "தவறிய" இடங்களும், மறைக்காது குறிப்பிடப் பட்டிருக்கும்! அவற்றில் சிலதை இன்று காணலாமா? :)
பயப்படாதீங்க! ஆசார்ய அபச்சாரம் எல்லாம் இல்லை! இதனால் அவர் பால் புரிதலும் மதிப்பும் இன்னும் கூடவே செய்யும்!


திருவரங்கம் - இராமானுசர் பள்ளிப்படுத்தப்பட்ட இடம்


ஸ்ரீபாஷ்யம் எழுதத் துவங்கிய காலம்! மூல நூலான போதாயன விருத்தியை, இராமானுசர் நடையாய் நடந்து வாங்கிய பின்னால், சிறிது நாளிலேயே களவாடிக் கொண்டார்கள்!
அட, இதுவும் வேதம் தானே! விரிவுரை சொல்லிவிட்டுப் போகட்டுமே-ன்னு கூட அந்த வைதீகோத்தமர்களுக்குத் தோனவில்லை!
வேதமா முக்கியம்? தங்கள் உள்ள உகப்பு தானே இவிங்களுக்கு எப்பவும் முக்கியம்! தமக்கும், தம் நம்பிக்கை/பழக்க வழக்கங்களுக்கும் சரிப்பட்டு வரும் வரை தான் வேதம்! :(

இப்போ என்ன செய்வது? முழுசாப் படிப்பதற்குள் மூல நூல் திருடு போய் விட்டதே! எப்படி குருவான ஆளவந்தார் ஆசையை நிறைவேற்றி வைப்பது?
சமய சஞ்சீவியாக, எப்போதும் உடன் இருக்கும் நண்பரும்-முதன்மைச் சீடருமான கூரத்தாழ்வான் முன்னுக்கு வந்தார்!

"உடையவரே, தாங்கள் இரவில் படிக்கத் துவங்கிய போது, அசதியில் உறங்கி விடுவீர்கள்! அப்போது நான் பின் வரிசையாக, ஒவ்வொரு பாகமாகப் படித்து, உருவேற்றி விட்டேன்! ஒப்பிக்கிறேன்! கேட்கிறீர்களா? பிறகு நீங்களே முடிவுக்கு வாருங்கள்!"

இராமானுசருக்குப் போன உயிர் திரும்பி வந்தது!
குருவால் புகழ் பெற்ற சீடர்கள் பலர்! ஆனால் குருவுக்கே புகழ் சேர்த்த சீடர்கள் உண்டென்றால் அது உடையவரும்-அவர் சீடர்களும் தான்!
அந்த அளவுக்கு அங்கே அதிகாரம் காட்டாது, கொடுக்கல்-வாங்கல் இருந்தது! இனி பாஷ்யம் எழுத வேண்டியது தான் பாக்கி!

"கூரேசா, நான் ஸ்ரீபாஷ்யம் சொல்லிக் கொண்டே வருகிறேன்! வேதங்களில் இருந்தும், திருவாய் மொழியில் இருந்தும் என் விளக்கங்கள் அமையும்!
நீர் மூல நூலையும் வாசித்து உள்ளதால், நான் எங்கேனும் தவறான விளக்கம் சொல்லும் பட்சத்தில், என்னைத் தடுத்து நிறுத்தும்! சரியா?"

"ஐயோ! சுவாமி! உலகாசான்-ஜகத்குரு என்று ஊரே உங்களைக் கொண்டாடுகிறது! உங்கள் விளக்கத்துக்கு நான் மறுப்பு சொல்வதா? இதெல்லாம் சரிப்பட்டு வருமா? வேண்டாம் இராமானுசரே!"

"சரி! இப்படிச் செய்வோம்! நான் சொல்லும் விளக்கம், மூல நூலின் கருத்தோடு மாறுபட்டு இருந்தால், நீர் எழுதுவதை நிறுத்தி விடும்!
உடனே அது எந்த இடம் என்று நானும் புரிந்து கொள்வேன்! சரியா? இதனால் யாருக்கும் எந்தச் சங்கடமும் இல்லை!"



இதோ, விசிட்டாத்வைத கலங்கரை விளக்கமாக, ஸ்ரீபாஷ்யம் நிறைவுறும் நிலைக்கு வந்து விட்டது! உடையவர் பொழியும் பொழிவை, கூரேசன் வயற்காட்டுக்குப் பாய்ச்சி விடுவது போல், எழுதி விடுகிறார்! ஆனால்...ஆனால்...இன்று.....

கூரேசன் எழுதுவதை நிறுத்தி விட்டார்! பாஷ்யம் நிறையப் போகும் சந்தோஷத்தில் பொழிவைத் தொடர்ந்து கொண்டே இருந்த உடையவருக்கு அதிர்ச்சி!
தான் போட்டுக் கொடுத்த திட்டப்படி தானே கூரேசன் செய்கிறார் என்பது கூட மறந்து போனது! பாஷ்யம் முடிய வேணுமே என்ற பேராவல் மட்டுமே ததும்பும் நிலையில்...

"கூரேசா, தொடர்ந்து எழுதும்!"

மெளனம்...

"கூரேசா..."

"சுவாமி, ஜீவாத்மாவை ஞானம் மிக்கவன், ஞானம் மிக்கவன் என்று தான் சொல்லிக் கொண்டே இருக்கிறீரே அன்றி...
பரமாத்மனைச் சரணம் அடைந்து இருப்பதே அந்த ஞானத்தின் பயன் என்று விரிக்கவே இல்லையே! அதான்....."

"ஓ...அதான் உம்ம கை மறுக்கிறதா? பலே! அப்போ நான் எதற்கு? பாஷ்யத்தை சுயமாக நீரே எழுதிக் கொள்ளும்!"

எங்கிருந்து தான் அப்படியொரு கோவம் வந்ததோ இராமானுசருக்கு!
கோவமே வராதவர்களுக்கு கோவம் வந்தால்?
அதுவும் தப்பு செய்யாதவன் மேல் தப்பு செய்தான் என்று கோவம் வந்தால்???

உடையவர் விறுவிறு என்று எழுந்து, கூரேசன் கையில் இருந்த ஓலையெல்லாம் வீசி எறிந்து விட்டு, ச்சீ, நன்கு முடியப் போகும் தக்க சமயத்தில் இப்படி ஒரு தடையா என்று கடுப்புடன் வெளியேறி விட்டார்!

கூரேசனுக்கு மூச்சே நின்று போனது!
அய்யோ! நீங்க ஆரம்பிக்கும் போது சொன்னீர்களே! அதைத் தானே நானும் செஞ்சேன்?-என்று தன் பக்க நியாயங்களைச் சொல்லக் கூட, அவருக்கு வாய் வரவில்லை!
பரிபூர்ண சரணாகதர்களின் லட்சணம் இது தான்! தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை! "தன்னை அவன் கதிக்கே" விட்டு விடும் நிலை!

"என்ன ஓய் கூரேசரே, இராமானுஜர் இப்படிக் கோவப்பட்டு நாங்க பார்த்ததே இல்லைங்காணும்! இனி நீர் என்ன செய்யப் போகிறீர்?
ரொம்ப பணிவானவர் போல வளைய வந்தீரே! இராமானுஜரையே எதிர்க்கும் அளவுக்கு அடடா என்னவொரு பணிவய்யா உமக்கு! குட்டு வெளிப்பட்டுருச்சி-ங்காணும்! பேசாம மடத்தைக் காலி பண்ணிட்டு போம்!"

எள்ளல்கள்!!! கருடன், சரணாகதியில் ஒடுங்கி இருந்தால்...மண்புழு கூட "கருடா செளக்கியமா"-ன்னு கேட்கும் அல்லவா? :)

"என்னது?....அவரே கோபித்தாலும்....அவரை விட்டுப் போவதா?.....ஹைய்யோ!
எத்தனையும் வான் மறந்த காலத்தும், பசும் பயிர்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்.....வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!
என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்றல்லால் பற்றில்லேன்!

என் வாழ்வோ தாழ்வோ,
உன் கையால் நடப்பது என்னவோ,
அதுவே எனக்கு இனியது, இனி எது, இனி அது...கேட்கின்...?"


அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால், எவ்வளவு தான் நெருக்கமானவராக இருந்தாலும், சச்சரவு உண்டாகி விடுகிறதே...அதுவும் இந்த அறிவியல் காலத்திலேயே!
கருத்தைக் கருத்தாக மட்டுமே பார்க்காது...
மாற்றுக் கருத்து சொன்னாலே, மாற்றான் ஆக்கி விடும் நிலைமை! ஒரு வேளை இராமானுசரும் அப்படிப் பட்டவர் தானோ?

இராமானுசர் எழுந்து அவர் அறைக்குச் சென்று விட்டாரே தவிர, அவருக்கு எதுவுமே நிலை கொள்ளவில்லை! மறுபடியும் மறுபடியும் அதே யோசனை!

"கூரத்தாழ்வான் அப்படிப்பட்டவன் இல்லையே! தன் சொத்தையெல்லாம் விட்டுவிட்டு என் பின்னால் வந்தவன், இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேணும்? அப்படி என்ன நான் தப்பாகச் சொல்லி விட்டேன்? ஞானத்தை முதலில் சொல்லி, இன்னும் சிறிது நேரத்தில் சரணத்தைப் பற்றிச் சொல்லத் தானே போகிறேன்! அதற்குள் என்ன அவசரம்?"

ஆலயத்தில், சாற்றுமுறையில், கோயில் திருவாய்மொழி ஓதும் சத்தம் கேட்கிறது!
ஒண்சங்கு கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே!!
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கல்லாம்
படியன் அல்லன் பரம் பரன்!!!

"ஆகா...ஆகா...இதைத் தானே கூரேசனும் சொன்னார்?
"என்"னுள்ளும் இறைவன் உள்ளான்-ன்னு சொல்லாது,
"அடியேன்" உள்ளான் என்று வருகிறதே மாறன் மொழி! அப்படீன்னா...அப்படீன்னா...

"என்" ஞானம் என்று ஒன்றும் கிடையாது!
"என்" கர்மம் என்ற ஒன்றும் கிடையாது!
அதான், இறைவன், "என்"-உள்ளான் என்று சொல்லாது
"அடியேன்"-உள்ளான் என்கிறாரோ நம்மாழ்வார்?

ஆகா! ஒரே சொல்லில், ஒத்தைச் சொல்லில்...
அவன் "அடிக்"கீழ் நாம் இருப்பதைக் காட்டி...
அப்படி "அடிக்"கீழ் இருக்கும் நமக்காகவே, அவனும் இருப்பதைக் காட்டி...
"அடி"யேன் உள்ளான்! "அடி"யேன் உள்ளான்!!

ஓ! ஞாபகம் வருது! வேதத்திலும் பகவத் சேஷ பூத: ஜீவ: என்று தான் வருகிறது அல்லவா! அடா, அடா, அடா! வேதத்தில் கூட நாலு சொற்கள்!
நம்மாழ்வார் எப்படி இவ்வளவு அழகா, நறுவிசா, திராவிட வேதத்தில், ஒரே சொல்லால்? - அடியேனுள்ளான்! அடியேனுள்ளான்!

கூரேசன் சொன்னது சரியே! கூரேசன் சொன்னது சரியே!
நாம் தான் அவசரப்பட்டு விட்டோம்! ஐயோ! கூரேசன் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ? கூகூகூரேசா....."



இராமானுசர் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்! அங்கே கூரேசன், கண்களில்.....வழிய....
பசியிலும், தனிமையிலும், "அவரே" என்று ஒடுங்கிய நிலையில்.....

"கூரேசா! என்னை மன்னித்து விடும்! என்னை மன்னித்து விடும்!"

"ஐயோ! சுவாமி, என்ன இது? உம்ம கண்ணில் இருந்து எதுக்கு இப்படி தண்ணி கொட்டுது? என்ன ஆயிற்று?"

"உம் கண்ணில் இருந்து கூடத் தான் தண்ணீர் கொட்டுது? என்னை மட்டும் கேட்கிறீரே?"

"சுவாமி..."

"ஒன்னும் பேச வேணாம்! நான் தான் அப்பவே சொன்னேன்-ல்ல? மூல நூலில் இருந்து நான் விலகிச் சென்றால், எழுதுவதை நிறுத்தி விடும், புரிந்து கொள்கிறேன்-ன்னு! அதை எனக்கு எடுத்துச் சொன்னால் என்னவாம்? எதுக்கு நான் திட்டிய போதும் மெளனம் காத்தீர்?"

"உங்கள் முக வாட்டமும், கோபமும் கண்டு, எனக்கு தற்காத்து கொள்ளக் கூட, பேச வரவில்லை! கண்ணீர் தான் வந்தது! அதான்....."

"ஐயோ! கூரேசா! இப்படியா இருப்பார்கள்?
உம்மைத் திட்டிவிட்டு, நான் மட்டும் உம்ம யோசனை இல்லாமல் இருப்பேனா? அரங்கன் சன்னிதி ஓதல் காட்டிக் கொடுத்து விட்டது! - அடியேனுள்ளான், அடியேனுள்ளான்! திருவாய்மொழி சொல்வது அதுவே! நீர் சொன்னதும் அதுவே!

இதோ, என் கருத்தை நான் மாற்றிக் கொள்கிறேன்! ஸ்ரீபாஷ்ய உரையை மாற்றிச் சொல்கிறேன்! தொடர்ந்து எழுதும் கூரேசா! எனக்காக, இந்த இராமானுசனுக்காக...தொடர்ந்து எழுதும்!"


* அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால்? = "நெருக்கமா"னவர் "வெறுக்க"மானவர் ஆவாரா?
* மாற்றுக் கருத்து வந்தால்? = மனத்துக்கு இனியான், மாற்றான் ஆகி விடுவானா?
* மாற்றுக் கருத்து....சரியானது என்னும் பட்சத்தில்...மாற்றிக் கொள்ள மனம் இடங் கொடுக்குமா? எப்போது இடங் கொடுக்கும்?

காரேய்க் கருணை மனத்தில் இருந்தால்...இடம் கொடுக்கும்! "அடம்" கொடுக்காது! "இடம்" கொடுக்கும்!

காரேய்க் கருணை இராமானுசா இக் கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
இராமானுசர் திருவடிகளே சரணம்!
Read more »

Sunday, April 18, 2010

பிறந்தநாள்: ஆதி சங்கரர்! ஹே சண்டாள, விலகு விலகு!

பந்தல் வாசகர்களுக்கு இனிய வணக்கம்!
இப்போ தான், ரங்கன் அண்ணா, ஆண்டாளின் வைதீக திருமண வைபவத்தையும், ஆளரிப் பெருமாளான நரசிம்ம வைபவத்தையும் எடுத்துக் காட்டி நிறுத்தியுள்ளார்!
அவர் அடுத்த பனுவலான, இரண்டாம் ஆயிரத்துக்குச் செல்லும் முன், இதோ இடையில் சிக்கெனப் புகுந்து, சில இதர பதிவுகள்! :)

* நாளை சங்கரர் பிறந்த நாள்! = சித்திரைத் திருவாதிரை! (Apr, 20, 2010)
ஆதி சங்கரர் தோன்றிய நாள்! வேத தர்மம் அழியாது காக்கப்பட்ட நாள்!

* நாளை இராமானுச ஜெயந்தியும் கூட! = அதே சித்திரைத் திருவாதிரை!
இராமானுசர் தோன்றிய நாள்! தமிழும் சமயமும் தலை தூக்கிய நாள்!
சாதியைத் தாண்டிய நாள்! சரணாகதி ஈண்டிய நாள்!

இன்னிக்கி ஒரு பதிவுக்குப் பதிலா, இரு பதிவா பார்ப்போமா?
முதலில் முதல்வரிடம் இருந்து துவங்குவோம்! ஆதி சங்கரர் காலத்தால் முதல்வர்! 788-820 CE!
* பிளவு பட்டுக் கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து தந்தவர் = மக்களுக்கு!
* கூடவே, வேத நெறிகளை ஆராய்ந்து, திரட்டியும் தந்தவர் = ஞானிகளுக்கு!

ஆதி சங்கரர் இல்லாமல், இந்தியச் சமய வரலாற்றை எழுதவே முடியாது! அப்படி நீக்கமற நிறைபவர்! இளம் விஞ்ஞானி, இளம் மெய்ஞானி!
பொதுவாகவே, பிரபலங்களைச் சுற்றிப் பல கதைகள் பின்னர் எழும்பினாலும்...
அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகள், அவர்களுக்கே ஒரு திருப்பு முனையாக அமையும்!
அப்படி ஒரு திருப்பு முனை ஆதி சங்கரருக்கு நடந்தது! அது என்ன?


என்ன தான் ஆன்மீகச் சிம்மமாக, தத்துவப் புலியாக இருந்தாலும், ஆதி சங்கரன் சிறு பிள்ளை தானே! 32 வயதிலேயே அனைத்தும் முடித்துக் கொண்டவன்!
அவனுக்கு இள வயது "வீறு" என்ற ஒன்றும் இருக்கும் அல்லவா! எவ்வளவு தத்துவம் பேசினாலும், நடைமுறை என்று வரும் போது???

குரு கோவிந்தபாதர் கருணையால், அ-த்வைதம் (அல்-இருமை) என்ற கோட்பாட்டை வேதங்களில் இருந்து விரித்துக் காட்டியாகி விட்டது!
ஆன்மீக உலகெங்கும் சங்கரா சங்கரா என்று பரவி விட்டது! கூட்டம் அலை மோதுகிறது! சீடர்கள் அலை மோதுகிறார்கள்!

சங்கரன் கல்விக் கடல்! ஞானக் கடல்!
ஆனால் அவனைச் சுற்றி ஒரு வளையம்...அறிந்தோ அறியாமலோ...
சீடர்களும் கடலில் கலந்த ஞான ஆறுகள்!
அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் - ஞானிகள், யோகிகள், அரசர்கள், பண்டிதர்கள் என்று இவர்கள் தான்...

* புத்திக்குத் தீனியான "தத்துவம்" பேசப்பட்டதே அன்றி,
* பத்திக்குத் தீனியான "அன்பு" அதிகம் பேசப்படாத காலம்!
=> ஆன்மீகம் = ஆண்டவனுக்கா? அடியவருக்கா??

உலகத்தைப் பற்றி உலக நாதனும், உலக நாயகியும் தானே கவலைப்பட வேணும்? காசி விஸ்வநாதனும், விசாலாட்சியும்....சங்கரனுக்குத் திருப்பு முனை காட்ட முனைந்து விட்டார்கள் போலும்!
சங்கரா, உன் வெறும் வாய்ச் சொல், இன்று வாய்மைச் சொல்லாகும் நேரம் வந்து விட்டதடா!


காசி நகரத்துப் பண்டிதர்களின் கல்வி கேள்வியில் திளைத்திருந்த சங்கரரும் சீடர்களும், அன்று ஆலய தரிசனம் செய்து வரப் புறப்பட்டார்கள்!
காசி நகரத்தின் மணிகர்ணிகா காட்! பொங்கு நீர் புரந்து பாயும் தூய்மையே உருவான கங்கை!

ஆ! காசியின் கங்கை "தூய்மையே உருவானதா"? என்னப்பா சொல்லுற நீய? அதில் தான் என்னென்னமோ மிதக்குதாமே?

உண்மை தான்! மிதக்குது தான்! ஆனால் அப்படியே தங்குகிறதா? இல்லையே! அடித்துச் செல்லும் ஆற்றல் கங்கைக்கு உண்டு! அதை யோசித்தீர்களா?
கூவத்திலோ, ஹட்சனிலோ குளிக்கத் தான் முடியுமா? ஆனால் கங்கையில் குளிக்கிறார்களே! உடல் கருமை அடைந்து விடுகிறதா என்ன? இல்லையே!
காசியின் கங்கை, அதன் கரைகள் மட்டுமே அல்ல! தயவு பண்ணி, கரையைத் தாண்டிக் கொஞ்சம் எட்டித் தான் பாருங்களேன்! அதன் விரிவு விரியும்!

காசியின் கங்கையைப் பற்றி ஒரு மாயத் தோற்றம் ஊடகங்களில் அண்மைக் காலமாக எழும்பி விட்டன!
கங்கையைத் தூய்மைப் படுத்தும் நீர் மேலாண்மை (Water Management) பணிகள் நிச்சயம் தேவை தான்! ஆனால் கண்டிப்பாக கங்கை என்பவள் கூவம் ஆகி விடவில்லை! நினைவில் வையுங்கள்: கங்கை செத்த நதி இல்லை! இன்றளவும் "ஜீவ" நதியே!

கதைக்கு வருவோம்!
இளம் சங்கரன் காவி உடையில் சிவ சிவ என்று சிவக்க ஜொலிக்க நடந்து வருகிறார்! பெனாரஸ் பட்டில் காவியும், தங்க ருத்திராட்சமும், கட் அவுட்டுகளும் அண்மையில் ஜொலித்ததே! அது போல் அல்ல! :)
சிவந்த தேகத்தில் சிவந்த காவி! தங்கத்தால் ஒளிராது ஞானத்தால் மட்டுமே ஒளிரும் தேகம்!
மெலிந்த உடல்! மெல்லிய பாதம்! படீரென குறுக்கே.....ஒரு பைராகி! so called சண்டாளன்!


சண்டாளன்! ஞானப் பெண்டாளன்!
அழுக்கு உடைகள்! கலைந்த கேசம்! கையில் கோல்! போதாக்குறைக்கு நாலு நாய்கள்!

ஏதோ காசி நகரத்து அகோரி போல-ல்ல இருக்கான்! தான் உண்ணாது, நாய்களுக்குப் பிய்த்து போட்ட படி வருகிறான்! ச்சே...என்ன இது...?
இப்படி ஒருவர், பேருந்தில், நம் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தால்? நம் மனசு முதலில் என்ன சொல்லும்?? ஆனால் ஆன்மீகம்-ன்னா மட்டும் எப்பமே வேறு கோலால் அளப்போம் அல்லவா? :)

சங்கரனும் நாம் செய்வதையே தான் செய்கிறார்! முகம் சுளிக்கிறார்! ஒதுங்கி ஓரமாக நடக்கப் பார்க்கிறார்!
ஆனால் பைராகியோ, ஒட்டினாற் போலத் தான் எதிர் திசையில் நடந்து வருகிறார்! கூடவே இந்த நாய்கள் வேறு, வீதி முழுக்க வட்டமடிப்பது போல் வருகின்றன! ஆச்சார சீலர்கள் போற்றிப் புகழும் சங்கரனுக்கோ தர்ம சங்கடம்! பிரைவேட் செக்யூரிட்டி வைத்து விரட்டும் அளவுக்கெல்லாம் அவர் படோபடானந்தா இல்லை! என்ன செய்வது?

ஆசார்யர் உம்மென்றால், உம் உம் உம் என்னும் சீடர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள் போல! "ஏய்..விலகு விலகு" என்கிறார்கள்!
ஆனால் அச்சச்சோ...பைராகி...இதோ வெகு அருகில் வந்து விட்டான்!

இவர் உடலில் வரும் விபூதி வாசனையை மிஞ்சும் அளவுக்கு, அவன் உடலில் சுடுகாட்டுச் சாம்பல் வாசனை! ஹா ஹா ஹா! ஈசன் பூசுவது என்னவோ சாம்பல் தான்! ஆனால் நாம் பூசுவோமா? இல்லை, பேசுவோம்! :)

கல்விக் கடலான சீடர்கள் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்! சங்கரன் கை அமர்த்துகிறார்! "ஹே...கச்ச...கச்ச..." என்று வெறுப்பான குரலில், வேகமாகச் சொல்கிறார்! "ஏய்...விலகு...விலகு..."!

அதென்னமோ தெரியலை, மூத்தவராக இருந்தாலும், தன் நிலைக்கு கீழானவர்களையோ, வேலைக்காரர்களையோ, "ர்" போடாமல், "ன்/ள்" போடுகிறோம் பல பேர்!
நம் ஆதி சங்கரன், "விலகுங்கள்" என்றாவது சொல்லி இருக்கலாம்! ஆனால் "விலகு" என்று தான் அவர் வாயிலும் வந்தது!

எத்தனை ஆன்மீகம் பேசினாலும், வாசிப்பு, சு-வாசிப்பு ஆகா விட்டால் வரும் பிரச்சனை இது தான்! :)



வாயைத் திறந்தார் பைராகி! உலகத்துக்கே படியளப்பவர் எப்படி பேசத் துவங்குவார்? "அன்னம்" என்றே துவங்குகிறார்!
"அன்ன மயாத் அன்ன மயம், அதவா,
சைதன்யம் ஏவ சைதன்யாத்!"
"அன்னம் தின்கிறேன், அன்னம் தின்கிறாய்! உனக்கும் உயிர், எனக்கும் உயிர்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் நீரும் நானும் வேறு வேறா?"

சங்கரன் ஒரு கணம் திகைத்து விட்டார்! என்னாது....பார்க்கறதுக்கு இப்படி இருக்காரு! ஆனா "சைதன்யம்"-ன்னு எல்லாம் பேசறாரே!
நாம் ஒருமையில் விளித்தாலும், அவர் நம்மை, "யதி வர-முனிவரே" என்றல்லவா அழைக்கிறார்! வெட்கம் பிடுங்கித் தின்றது சங்கரனுக்கு!

"ஹே ஆதி சங்கர, எதை விலகு விலகு என்று வெறுப்பு காட்டுகிறீர்! எதை விலக்க வேணும்? என் உடம்பையா? என் ஆத்மாவையா?
எதை விலக்கினால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்? சொல்லுங்கள்! சொல்லுங்கள்!"

"ஹா...."

"மூச்சுக்கு மூச்சு, அ-த்வைதம் என்கிறீரே! அ-த்வைதம் என்றால் இரண்டு இல்லை என்பது தானே?
இப்போ மட்டும், ஆச்சார சீல ஒன்று, சண்டாளன் ஒன்று - என்று இரண்டாகி விட்டதா உங்கள் தத்துவம்
? எங்கே நீர் பேசிய அ-த்வைதம்??"

அவ்ளோ தான்! இடியே இறங்கி விட்டது நம்ம சங்கரனுக்கு! இப்படியொரு எடக்கு மடக்கு கேள்வியை, இது வரை, அவர் எந்த வாத சபையிலும் கேட்டதே இல்லை!
எல்லா வாதங்களுமே தத்துவம், புஸ்தகம் என்ற அளவில் மட்டுமே பார்த்தவருக்கு, முதல் முறையாக, உண்மை உறுத்து வந்து ஊட்டுகிறது!

கையெடுத்து கும்பிடுகிறார் சங்கரன் - சண்டாளனை(ரை)!

வாயில் கிடுகிடு-வென்று, படித்த உண்மையெல்லாம், அருவியாய்க் கொட்டுகிறது! மொத்தம் ஐந்து பாடல்கள் - மனீஷா பஞ்சகம்!

அது என்ன மனீஷா? மனீஷா கொய்ராலா மேலே பாடிய பஞ்சப் பாட்டு-ன்னு நினைச்சிக்காதீக! :)
மனீஷம் = புரிதல், உணர்தல், உறுதி கொள்ளல்! மனீஷா பஞ்சகம் = உறுதிப்பாடு ஐம்பதிகம்!
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

இப்படி ஞான யோகத்திலும், கர்ம அனுஷ்டானங்களிலும் மட்டுமே தோய்ந்திருந்த சங்கரருக்கு அன்று உலகநாதன் சுட்டிய உண்மை சுட்டது!
அ-த்வைதம் என்பது பேச்சு அளவில் நில்லாது, வாழ்வு முறை ஆகிப் போனது!
* இறை-"தத்துவம்" என்னும் தீனியில் மட்டும் திளைக்காது,
* இறை-"அன்பு" என்னும் அமுதம் கண்டு கொண்டான் சங்கரன்!

அகம் பிரம்மாஸ்மி, நேதி நேதி, தத்-த்வம்-அசி என்று பலவாறாகச் சங்கர பாஷ்யம் எழுதிய அதே சங்கரன்......
முதல் முதலாக.....பக்திப் பாடலாக....அதே காசியில்....பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் என்று ஈர மழை பொழியத் தலைப்பட்டான், இந்தச் சங்கரத் தலைவன்!



இந்த மனீஷா பஞ்சகம், இணையத்தில் அவ்வளவாக இல்லை! kamakoti.org (அ) sringeri.net போன்ற சங்கரத் தளங்களிலேயே அதிகம் காணோம்!
அதனால் இதையே ஆதி சங்கரப் பிறந்த நாள் பரிசிலாய்த், தமிழாக்கித் தருகின்றேன்!

வாசித்துப் பாருங்கள்! பாடலும் பொருளும் பொருந்தி வருகிறதா என்றும் சொல்லுங்கள்! வடமொழிப் பொருளைச் சரி பார்த்துக் கொடுத்த டாக்டர். சர்மா சாருக்கு, அடியேன் நன்றி!


சண்டாளனின் "தைக்கும்" கேள்விகள்:

அன்னமயாத் அன்னமயம், அதவா, சைதன்யம் ஏவ சைதன்யாத்!
யதி வர, தூரீ கர்த்தும் வாஞ்சஸி, கிம் ப்ரூஹி, கச்ச கச்சேதி?


அத்தைத் தின்று அங்கே கிடக்கும்
சிறியதின் வயிற்றில் நீயும் நானும்!
ஆதி சங்கரா, தூரம் தேவையோ?
எதனைச் சொன்னாய் "விலகு விலகே"?

ப்ரத்யக வஸ்துனி நிஸ்தரங்க, சகஜானந்தா அவபோத அம்புதௌ
விப்ரோ அயம், ச்வபசோ அயம், இதி அபி மகான், கோ அயம் விபேத பி்ரம்ம?


அனைவர் அகத்திலும் அமைதி என்றொரு
அலைகள் ஆடா அலைகடல் அன்றோ!
உன்குலம் ஏது? என்குலம் ஏது?
அ-த்வைதம் வெறும் வாய்மொழி தானோ?

கிம் கங்கா அம்புதி, பிம்பத அம்பர, மனெள சண்டாள வீதி பயா:
பூரே வா அந்தரம் அஸ்தி, காஞ்சன கடே, மி்ருத் கும்ப யோர்வா அம்பரே?


கங்கையில் ஒளிரும் கதிரவன் கதிர்கள்
சேரியின் நீரில் கறுத்தும் விடுமோ?
மண்குடம் ஒன்று, பொன்குடம் ஒன்றென
வானின் நீழலும் வீழ்ந்திடப் போமோ?


ஆதி சங்கரர் அருளிச் செய்த மனீஷா பஞ்சகம் - உறுதிப்பாடு ஐம்பதிகம்!


1
ஜாக்ரத ஸ்வப்ன சுஷூப்திஷூ, ஸ்புட தரா, யா ஸம் விது ஜ்ரும்பதே
யா பிரம்மம் ஆதி, பிபீலிக அந்த, தனு ஷூ ப்ரோதா, ஜகத் சாட்சிணீ
ச ஏவ அகம் ந, ச த்ருச்ய, வஸ்த்து இதி, த்ருட பிரக்ஞாபி யஸ்யஸ்தி சேத்
சாண்டாளோ அஸ்து, சது த்விஜோஸ்து, குருர் இதி, யேஷா மனீஷா மம!


விழிப்பில் கனவில், ஆழ்துயில் நிலையில்
பளபள வென்றே, பலதில் ஒளிர்வது!
பிரம்மம் முதலாய், எறும்பும் ஈறாய்
பரந்தும் கரந்தும், சாட்சி மிளிர்வது!
அறிந்தேன் அல்லேன், இவ்விரு நிலையில்
இருந்தேன் இருப்பை, இன்றே புரிந்தேன்!
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

2
பரம்மைவ அகம் இதம் ஜகச்ச! சகலம் சின்மாத்ர விஸ்தாரிதம்!
சர்வம் சைதத் அவித்ய யா! திரிகுண யா சேஷம் மயா கல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: சுக தரே, நித்யே, பரே நிர்மலே!
சாண்டாளோ அஸ்து, சது த்விஜோஸ்து, குருர் இதி, யேஷா மனீஷா மம!


கடவுள் நானே! உலகில் நானே!
அணுவுள் அணுவாய், விரிவில் விரிவாய்!
எல்லா உயிர்ப்பும், அறியா மாயை!
முக்குண யுத்தம், என்-மீதம் பேதம்!
கறைகள் இல்லாக் குறைகள் இல்லாச்
சுகமே உணர்வான், எனக்கு அவனே
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

3
சச்வ நச்வரம் ஏவ விச்வம், அகிலம் நிச்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரம்ம, நிரந்தரம் விம்ருசதா, நிர் வியாஜ சாந்த ஆத்மனா!
பூதம் பாவி ச, துஷ் க்ருதாம், ப்ரதஹதா சம் வின்மயே பாவகே
ப்ராரப்த ஆய சமர்ப்பிதம், ஸ்வ வபுர் இத்யேஷா, மனீஷா மம!


இன்றோ உண்டு, நாளை இல்லை
உலகம் இதுவே! குருவின் விதியே!
இன்றும் உண்டு, என்றும் உண்டு
அதுதான் மாறா அமைதிப் பிரம்மம்!
போயின பிழையும், புகுதரு பிழையும்
தோற்றம் காட்டி மாற்றம் செய்யும்!
ஞானத் தீயில், தூசாக் கிடுவான்
சத்தியன்! சங்கரன் உறுதிப் பாடே!

4
யா திர்யங், நர தேவதாபிர் அகமிதி அந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாசா ஹ்ருதய அக்ஷ தேக, விஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:
தாம் பாஸ்யை: பிஹிதா அர்க்க மண்டல நிபாம், ஸ்பூர்த்திம் சதா பாவயந்
யோகீ நிர் விருத மானசோ, ஹி குருர் இத்யேஷா மனீஷா மம!


விலங்கு மனிதன், தேவருள் எல்லாம்
விளங்கி நிற்கும், நானே கடவுள்!
இதயம் விழிகள், உடலால் உணர்ந்து
உணர்வது எல்லாம் உண்மை ஆகா!
மேகம் போலே, கதிரைச் சூழும்
விளக்க அல்ல! மறைக்கத் தானே!
இதனை அறிவோன் ஞான யோகி
சத்தியன்! சங்கரன் உறுதிப் பாடே!

5
யத் செளக்ய அம்புதி லேசலேசத, இமே சகர ஆத்யோ நிவ்ருதா
யச் சித்தே ந இதராம் பிரசாந்த கலன, லப்த்வா முனிர் நிர்வ்ருத
யச் மிந் நித்ய சுக ஆம்புதௌ, கலித தீர் ப்ரம்மைவ, ந பிரம்மவித்
ய: கஸ் சித்ச, சுரேந்த்ர வந்தித, பதோ நூனம் மனீஷா மம!


இன்பக் கடலாம், பிரம்மம் அதிலே
ஒருதுளி பிரம்மமும் இன்பக் கடலே!
வானோர் வாசவன், முனிவரும் மூழ்கும்
வேறொன் றில்லாச் சித்தம் இதுவே!
இதனுள் மூழ்கி, அறிவார் எல்லாம்
அறிவார் அல்லார், அதுவே ஆவார்!
இந்திரன் துதிப்பான் இவர்தம் பாதம்
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

இதி ஸ்ரீமத் சங்கராச்சார்ய விரசித மனீஷா பஞ்சகம் சம்பூர்ணம்!

இத்துடன் சீர்வளர்சீர் சங்கராச்சார்யர் அருளிய உறுதிப்பாடு ஐம்பதிகம் நிறைந்தேலோ!

ஜகத்குரு ஆதி சங்கரர் திருவடிகளே சரணம்!
Read more »

Sunday, April 11, 2010

ஆண்டாள் கல்யாண வைபோகம் - விருந்து சாப்புடலாம் வாங்க!!


(பாவை தன் கல்யாண வைபவத்தைத் தொடர்கிறாள் ...)

பாவை:
என்ன! இப்போதாவது, நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு என்னன்னு புரிஞ்சதா, இல்லே, இப்பவும் தூங்கிட்டயா?

தோழி: ம்ம்! மேலே சொல்லு!

பாவை: புரோகிதர்கள், கோவிந்தனை, என் வலது கால் கட்டை விரலைப் பிடிக்கச் சொல்லினர். உடனே கோவிந்தனின் உறவினர்கள், 'பெண்ணின் காலைப் பிடிக்காதே' என்றனர்! என் உறவினர்களோ, 'காரியம் நிறைவேற வேண்டுமென்றால், அவள் காலைப் பிடித்தே தீரவேண்டும்' என்றனர்!

இப்படி இரு தரப்பினரும் (விளையாட்டோ, நிஜமோ, தெரியாது) விவாதம் செய்து கொண்டிருந்த போது, கோவிந்தன், சடக்கென்று குனிந்து, தன் சிவந்த (செம்மை உடைய) வலது கையால் (திருக்கையால்), என் வலது கால் கட்டை விரலைப் பற்றி (தாள் பற்றி), அம்மியின் மேல் வைத்து (அம்மி மிதிக்க), இன்னொரு வேத மந்திரம் சொன்னான்!


தோழி: எதுக்குடீ அவன், உன் காலைப் பிடிக்கணும்?

பாவை: உறவினர்களின் மனதில், 'யார் உசத்தி?' என்ற எண்ணமே இருந்தது! ஆனால், கோவிந்தனோ, அவனிடம் சரணாகதி செய்த அடியார்க்கு அடியவன்! எனவே, உறவினர்களின் முடிவு பற்றிக் கவலைப் படாமல், அடியாரின் காலைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டதனால், என் காலைப் பிடித்தான்!

கோபப்பட்டு ஸ்ரீதேவி வசிக்கும் நாராயணன் மார்பை உதைத்த துர்வாசரின் கால்களையே பிடித்து வருடியவனாயிற்றே இவன்? எத்தனை பேருக்கு இந்தக் குணம் இருக்கும்?


இப்படி, கௌரவம் பாராது, சரணடைந்தவர்களின் காலையே பிடிக்கும் அந்தக் கைகள் மட்டுமே 'செம்மை உடைய திருக்கை'! மற்ற கை எல்லாம் 'வெறும் கை' தான்!

தோழி: சரி, உன் காலைப் பிடித்தால் மட்டும் போதாதா? அம்மியில் ஏன் வைக்க வேண்டும்?

பாவை: நீ, கனவிலே, வருங்கால 'TV'-யிலே 'எங்கே பிராம்மணன் I' பார்த்திருந்தால் உனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்திருக்கும்! இருந்தாலும் சொல்றேன், கேட்டுக்கோ! இதன் அர்த்தம் இது தான்!

  • 'நீ இந்த நிலையான அம்மியின் மேல் நில்!
  • நீ, இந்தக் கல்லைப் போல, எப்போதும் நிதானமாக, நிலையாக நில்!
  • நீ, எந்தப் பிரச்சனை வந்தாலும், இந்தக் கல்லைப் போல், நிதானமாக, எதிர் கொள்!
  • நீ, எத்தனை பேர் மிதித்தாலும், தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கும் இந்தக் கல்லைப் போல் இருந்து, என் குடும்பத்தை நடத்திச் செல்!
  • நீ மட்டும், இந்தக் கல்லில் மற்றவர் இடறித் தடம் புரண்டாலும், இந்தக் கல் போல, தடம் புரளாது நிதானமாக இரு!'

என்று விஷ்ணுவை வேண்டியும், எனக்கு அறிவுரை சொல்லியும் தான்!

தோழி:
டீ! எனக்கு ஒரு சந்தேகம்!

பாவை: என்ன?

தோழி: முதல் இரண்டு வரிகளில், சரணாகதியைப் பற்றிச் சொல்லி, பின் ஏன் அம்மியைப் பற்றிச் சொல்கிறாய்?

பாவை: நல்ல கேள்வி! வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் அம்மியைப் போல், நிதானமாக இரு என்று ஒரு பொருள்! இது, கல்யாணத்தில் மணப்பெண்ணுக்குச் சொல்வது!

ஆனால், எல்லோருக்கும் பொதுவாக,

'ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், எப்போதும் (திருமணத்திற்கு முன்னும்), எந்தப் பிரச்சனை வந்தாலும், நாராயண பக்தியில் இருந்து, தடம் புரளாது, அந்த அம்மியைப் போல இரு'

என்று எல்லோருக்கும் சொல்லத்தான், இந்தப் பாசுரத்தில் சரணாகதியைப் பற்றிச் சொல்லி, பின் அம்மியைப் பற்றிச் சொன்னேன்!

தோழி: நீ 'அருந்ததி பார்க்க'வில்லையா?

பாவை: எங்கடீ, கேக்கலையேன்னு நினைச்சேன்!

மண நாளின் இரவில், சாந்தி முகூர்த்தத்தின் முன் தான், நாங்கள் இருவரும் வானத்தில் இருக்கும் நட்சத்திரமான துருவனைப் பார்த்து, 'அவனைப் போல் சக்தியுடனும் வைராக்கியத்துடனும்', இன்னொரு நட்சத்திரமான அருந்ததியைப் பார்த்து, 'நான் அவளைப் போல் கற்புக்கரசியாக இருக்க வேண்டும்' என்று வேண்டுவோம்! துருவனும், அருந்ததியும் நம் கண்ணுக்குத் தெரிவது, இரவில் தான்!

அம்மி மிதித்து, ’பகலிலேயே அருந்ததி பார்க்கும்' வழக்கம், பின்னாடி, ஒரே நாளில் கல்யாணம் முடிக்கும் வழக்கம் வந்தவுடன் தான் வந்தது! எனவே தான் இதைப் பற்றி இப்போது நான் பாடவில்லை!

***

நேகமாக, ஒவ்வொரு திவ்வியப் பிரபந்தத்திலும் ஒரு சரணாகதித் தத்துவப் பாசுரம் இருக்கும் - திருப்பாவையில், 'சிற்றஞ்சிறுகாலே' போல! ஒரு சிலர், 'நாச்சியார் திருமொழியில், ஆண்டாளின் சரணாகதிப் பாசுரம் இது' என்று கூறுவர்!

'நம்மை உடையவன் நாராயணன் நம்பி' என்று ஆண்டாள், அவனை மங்களாசாசனம் செய்கின்றாள்!!

அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், 8-வது பாசுரத்தில் ஆண்டாள் சொல்வது, இன்னொரு தனிச் சிறப்பு!

அவனன்றி நமக்கு வேறு வழி இல்லையாதலால், நாமும், குலசேகரனைப் போல, ஆண்டாளைப் போல, நரசிம்மனிடம் சரணாகதி அடைவோம்!

***

பாவை: அடுத்து, லாஜ ஹோமம் நடைபெற்றது!

தோழி: ஏய்! எனக்கு வடமொழி புரியாது! தமிழில் சொல்லுடீ!

(நம் பாவை, ஒரு தமிழ்ப் பாட்டு பாடுகிறாள்)

வரிசிலை வாள் முகத்து* என்னைமார் தாம் வந்திட்டு*
எரிமுகம் பாரித்து* என்னை முன்னே நிறுத்தி*
அரிமுகன் அச்சுதன்* கைம்மேல் என் கை வைத்து*
பொரிமுகந் தட்ட* கனாக் கண்டேன்!தோழீ நான்.
நாச்சியார் திருமொழி 6-9

தோழி: ஒண்ணு வடமொழி, இல்லேன்னா பழம் பாட்டு! தமிழ்ல சொல்லறயா?

பாவை: அழகிய வில் போன்ற புருவத்தையும் (வரி சிலை), ஒளி பொருந்திய முகத்தையும் உடைய (வாள் முகம்) என் அண்ணன் இராமாநுஜன் (என்னைமார்) ஹோம குண்டத்தின் அருகில் வந்து அமர்ந்து (தாம் வந்திட்டு), ....


தோழி: நிறுத்து, நிறுத்து! ஆரம்பமே குழப்புதே? பாசுரத்தில் அண்ணன் எங்கு வருகிறான்?

பாவை: 'என்னைமார்' என்று சொன்னேனே? 'என்னைமார் = என் + ஐ + மார்'! '' என்றால், 9-வது உயிரெழுத்து மட்டுமல்ல (9-ம் பாசுரத்தில் 9-வது உயிரெழுத்து சம்பந்தமான கருத்து, இன்னொரு சிறப்பு!)!

'' எனும் 'வார்த்தைக்கு', மென்மை, நுண்மை, கப வியாதி (Bronchitis), அரசன், தலைவன், ஆசான், தந்தை, தமையன், இரண்டாம் வேற்றுமை உருபு என்ற 9 (!!!) பொருள்/உபயோகம் உண்டு!

தோழி: போதுமடி தமிழ் இலக்கணம்! ஆனால் உனக்கு சொந்தத்தில் சித்தப்பா, பெரியப்பா முறையில் அண்ணன், தம்பி யாருமே கிடையாதே? திடீரென்று ஏதோ பேரைச் சொல்லி, அண்ணன் என்கிறாயே?

பாவை: எல்லாமே உனக்குச் சொல்லிக் கொடுக்கணுமா? முதலில், தமையன் என்றால், 'சும்மா அப்பாவின் சொத்தை வாரிசு என்ற பெயரில் அள்ளிக் கொண்டு போகலாம்' என்ற உரிமை உள்ளவன் மட்டும் இல்லை!

அப்பாவின் பின், அப்பா தன் பெண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது, தொடர்ந்து, அப்பாவின் இடத்தில் இருந்து செய்பவனே தமையன் ('தம் அய்யன்' என்று பிரித்தும் சொல்வதுண்டு)! உண்மையில் அப்படிச் செய்பவன், வயதில் சிறியவனாயாக இருந்தாலும், அவன் அண்ணனே!

(எனவே, தம்பியாக இருந்தாலும், பொரியிடலாம் - ஆனால், பின்னால் கடமை அழைக்கும்!)

வயதில் இளையவனாக இருந்தாலும், இராமாநுஜன் என் தந்தை செய்ய வேண்டிய கடமையைச் செய்ததால், அவனை 'அண்ணன்' () என்றேன்! அவன் என் கல்யாணத்தில், ஹோம குண்டத்தின் அருகே வந்து உட்கார்ந்து, பொரியிட்டதாகவே கனவு கண்டேன்!

தோழி: 'உனக்கு அண்ணன்' என்று சொல்லுமளவுக்கு இந்த இராமாநுஜன் உனக்கு அப்படி என்ன செய்தான்?

***

(பாவை, மிகவும் உற்சாகமாகச் சொல்கிறாள்)

பாவை: இவனைப் பற்றிச் சொல்லி முடியாது! இவன், அஷ்டாக்ஷர மந்திரத்தை சாமானியருக்கும் உபதேசிக்கப் போகிறவன்; கலியுக தெய்வமான வேங்கடவனை நாராயணனாக நம் எல்லோருக்கும் காட்டிக் கொடுக்கப் போகிறவன்! கலியுகத்தில் வைணவம் தழைக்க ஆணிவேராக நிற்கப் போகிறவன்!

(ஆண்டாள் சொல்லாவிட்டாலும், என் போன்ற சாப்பாட்டு ராமன்கள் சொல்வது இது ... வைணவக் கோயில்களில் புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் நன்கு விளங்கச் செய்தவன் இவனே .. ஹி .. ஹி ..)

பின்னால் ஒரு பாசுரத்தில் நான், திருமாலிருஞ்சோலை அழகருக்கு (நாறு நறும்பொழில் மாலிரும் சோலை நம்பிக்கு), 'மந்த்ர புஷ்பம்' போல், நூறு தடாக்கள் நிறைந்த வெண்ணெயும் (நூறு தடாவில் வெண்ணெய்), இன்னும் நூறு தடாக்களில் (நூறு தடா நிறைந்த) அக்கார அடிசிலையும் (அக்கார அடிசில்), வாயாலே சொல்லிச் (வாய் நேர்ந்து) சமர்ப்பித்தேன் (சொன்னேன்)!

பாவை (மீண்டும், வருத்ததுடன்): ஆனால், உண்மையில் அங்கு போய் இதைச் செய்ய முடியவில்லை! என் அப்பாவாலும் செய்ய முடியவில்லை!

தோழி: அப்புறம்?


பாவை: இந்தப் பாசுரத்தைப் பின்னாளில் படித்த இராமாநுஜன், என்னால் இதைச் செய்ய முடியாததைக் கேள்விப் பட்டு, என் மணாளனான அழகருக்குச் செய்து வைத்தான், இந்த ராமாநுஜன்!

ஒரு கிலோ வெண்ணெய் 250/- ரூபாய் விற்கிற காலத்திலே, நூறு தடாவில் வெண்ணெயையும், நூறு தடாவில் அக்கார அடிசிலும், சொந்த அண்ணன் கூடக் கொடுக்க மாட்டான்! எனவே, இப்படி எனக்குச் சீர் செய்தவன், என் உடன் பிறவாவிட்டாலும், எனக்கு அண்ணன் தானே?

அதனாலேயே, பின்னர் ஒரு நாள் இராமாநுஜன் வில்லிபுத்தூர் வந்திருந்த போது, அவனை (விக்கிரகமாக இருந்தாலும்) ஒரு அடி முன்னே வந்து வரவேற்றேன்!

(ஆண்டாளுக்கு, தமையன்கள் இருந்ததாக, எந்தச் சான்றும் இல்லை. பாசுரத்தில் தமையன்கள் வந்தாலும், அது கனவில் தான்! இங்கு, இராமநுஜன் உட்கார்ந்ததாகச் சொன்னது அடியேன் சுவாரஸ்யத்திற்காகச் செய்த கற்பனையே!

ஆனால், திருமாலிருஞ்சோலை அழகருக்கு, இந்தப் பாசுரத்தைப் படித்து விட்டு, சீர் செய்ததன் காரணமாகவே குரு பரம்பரையும், திவ்விய சூரி சரிதமும், இராமாநுஜரை, ஆண்டாளுக்கு 'அண்ணன்' என்று குறிப்பிடுவது உண்டு!

'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!' என்று ஆண்டாளைப் பற்றிய வாழித் திருமொழியின் உள்ளர்த்தமும் இதுதான்!

சர்க்கரைப் பொங்கல் எம்பெருமானுக்கு அமுது செய்யும் போது, இந்தப் பாசுரத்தை 2 முறை சொல்வது, இன்றும் பல வைணவ இல்லங்களில் நடைபெறுகின்றது - நீங்களும் சொல்லலாமே!)

***

(பாவை, தொடர்கிறாள்)

பாவை: இராமாநுஜன், நன்கு தீயை வளர்த்து (எரி முகம் பாரித்து), அக்னியின் முன் என்னை அமர வைத்தான் (முன்னே என்னை நிறுத்தி). இராமாநுஜன் என் கையில் பொரியை அள்ளி இட (பொரி முகந்து), நரசிம்மன் அதில் நெய் விட, நரசிம்மன் (அரிமுகன்) கைகளின் மேல் நான் என் கைகளை வைக்க (கைம்மேல் என் கை வைத்து), நான் பொரியை ஹோமத்தில் இட்டேன் (அட்ட)!


தோழி: ஏன் கோவிந்தன் திடீரென்று நரசிம்மனான்?

பாவை: 'அச்சுதன்' என்றால், கைவிடாதவன் என்று அர்த்தம்! இராமானுஜன் பொரியிட்டவுடன், என்னை கோவிந்தன் கையில் பிடித்துக் கொடுத்து, தன் கையை விட்டு விட்டான்! இவ்வாறு, மற்றவர்கள் எல்லோருமே கை விட்டாலும், கைவிடாதவன் இவன் ஒருவனே! நரசிம்மன் ஒருவனே, அடியவனைக் கைவிடாது, தூணிலே தோன்றியவன்!


இப்படி, அடியவர்களின் கைகளின் கீழே தன் கையை வைத்து (கைம்மேல் என் கை வைத்து), அடியவர்களைத் தாங்குபவனும் அவனே!

(அடியவர்களுக்கு அபயம் அளிப்பதில், எம்பெருமானை விட, தாயாருக்குத் தான் அதிக ஆர்வம் உண்டு என்பதையே, 'அவன் கைகளின் மேல் தன் கை உள்ளது' ’கைம்மேல் என் கை வைத்து’ என்று ஆண்டாள் சொல்வதாகப் பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்!)

எனவே தான், என்னைக் கைவிடாத இவனை, 'அரிமுகன்' என்று அழைத்தேன்! அச்சுதன்' என்றும் அழைத்தேன்!

தோழி: ஏன் பொரியை இட வேண்டும்? வேறு ஏதாவது தானியத்தை இட்டிருக்கலாமே?

பாவை: பரவாயில்லையே! உனக்குக் கூட நல்ல கேள்வி கேட்க வருகிறதே!

'இதுவரை, எங்கள் வீட்டுப் பெண்ணை, நாங்கள் நெல்லில் உள்ள அரிசியைப் போன்று, பொத்திப் பொத்தி வளர்த்தோம்! இன்று முதல், இவள் பொரிந்த நெல்லைப் போன்று, முதிர்ந்து, திருமணமாகி, உங்கள் வீட்டுப் பெண் ஆகி விட்டாள்!'

என்று, பொரியிடுவதன் மூலம் மறைமுகமாக என் அண்ணன்களும் இந்தக் கல்யாணத்தை ஒப்புக் கொள்கின்றனர்!

தோழி: பொரியிடும்போது மந்திரம் சொன்னார்களா?

பாவை: நீண்ட திருமண வாழ்க்கைக்காகவும், நல்ல குழந்தைகளுக்காகவும், பொறுமைக்காகவும், அக்னியை வேண்டியும், மந்திரம் சொன்னோம். கடைசியில், நான் அக்னியிடம், 'இனிமேல் பிறந்த விட்டுப் பந்தங்களை விட்டு, புகுந்த வீட்டுப் பந்தகளை ஏற்க, என்னை ஆசீர்வாதம் செய்!' என்று வேண்டினேன்!

இத்துடன், என் 'திருமணம்' முடிந்தது. என் இடுப்பில் கட்டியிருந்த தர்ப்பையை - 'வருண பாசத்தை' - எடுத்து விட்டேன். இப்போது நான், 'தர்ம பத்தினி' ஆனேன்!

***

தோழி: இருடீ! பந்தி போட்டுவிட்டார்கள்! சாப்பிட்டு வருகிறேன்!

பாவை: கனவிலும் இந்தப் புத்தி போகாதே உனக்கு? அடுத்த பாசுரத்தில் உனக்கு ஒரு Role உண்டு!

தோழி: நான் சாப்பிடுவதைத் தடுக்க இப்படி ஒரு வழியா?

பாவை: இவ்வளவு நேரம் பெரிய அலங்காரங்களுடன் அக்னியின் அருகே உட்கார்ந்திருந்ததால் வாடியிருந்த மென்மையான என் மேனியைக் குளிர்ச்சி அடையச் செய்ய, குங்குமமும், சந்தனமும் நீ தடவினாய் (குங்குகம் அப்பி, குளிர் சாந்தம் மட்டித்து)!

பின்னர், உறவினர்களும், மற்ற விருந்தினர்களும் புடை சூழ, நாராயணன் வந்திருந்த யானையின் மேல் (அங்கு, ஆனை மேல்), நானும் அவனும் ஏறி அமர்ந்து (அங்கு, அவனோடும் உடன் சென்று), ஊர்வலமாக அலங்கரித்த வீதிகளைச் சுற்றி (மங்கல வீதி வலம் செய்து), வசுதேவர் திருமாளிகைக்குச் சென்றோம்! இப்படியாக, கோலாகலத்துடன் எங்கள் க்ருஹப்ரவேசம் நடைபெற்றது!


அங்கு, எங்கள் இருவரையும், நல்ல வாஸனைத் திரவியங்கள் கலந்த நீரினால் (மண நீர்) என் புடவை நுனியையும், அவன் வஸ்த்திர நுனியையும் முடித்து வைத்து, எங்களை மண நீராட்டம் செய்தனர் (மஞ்சனம் ஆட்ட).

(யானையில் செல்லும்போதே ‘மண நீராட்டம்’ நடைபெற்றதாகவும் கேள்விப் பட்டதுண்டு! படமும் அதையே சொல்கின்றது!)

எங்கள் ஊர்வலத்தின் பின்னே, புரோகிதர்கள், புது வீட்டில் நான் நன்றாக வழ வேண்டும் என்று, ரிக் வேதத்தில் இருந்து பல மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு வந்தனர்.

தோழி: போதுமடி உன் புராணம்! சீக்கிறம் முடிடி! பசிக்கிறது!

பாவை: சரிடி! இதற்கப்புறம், ப்ரவஸ்ய ஹோமம் (13 மந்திரங்கள் கொண்டது), ஜயாதி ஹோமம், சேஷ ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இந்த ஹோமங்கள் மூலம், நாங்கள் தம்பதியராக 100 வருடங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அக்னியையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்தோம்!

இதன் பிறகே, நான் அவன் இடப் பாகமானேன் (அதுவரை, அவன் வலது புறமே அமர்ந்திருந்தேன்)!

பின்னர், ஒரு குழந்தையை மடியில் வைத்து, அதற்குப் பாலும் பழமும் நான் கொடுத்தேன்.

அதன் பின்னர், பிராயச்சித்த ஹோமம் நடைபெற்றது.

***

தோழி (திடீரென்று): ஏய்! பாருடீ! எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள்! திருமண வாத்தியார்கள் கூட சாப்பிடப் போய்விட்டனர்! நாமும் போலாமடி?

பாவை: நீ போ! நான், கோவிந்தனுடன் வரேன்!

தோழி: பாத்தியா! தமிழ் சினிமா மாதிரி, கனவுல காதலன் வந்தவுடன் என்னைக் கழட்டி விடறயே!

பாவை: ஸாரிடி! ...

பாவை (மீண்டும்): என் கனவை இவ்வளவு பொறுமையாகக் கேட்ட உனக்கு, நல்ல குழந்தைகள் பிறக்கும்!


தோழி: ஏய்! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை! அதுக்குள்ள எப்படிடீ குழந்தை பிறக்கும்? இது என்ன மேல் நாடா - Your Children and My Children Are Playing With Our Children - என்று சொல்வதற்கு?

பாவை: இந்த நக்கல் தானே வேணாம்கிறது! நான் சொன்னதற்கு அர்த்தம், 'உனக்கு நல்ல வரன் கிடைக்கும்! திருமணத்தின் பின், பிறகு நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பாய்! (வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே)' என்பதே!

உனக்கு மட்டுமல்ல! வில்லிபுத்தூரில் வாழும் பெரியாழ்வரின் (வில்லிபுத்தூர் விட்டுசித்தன்) புதல்வியாகிய நான் (கோதை) கண்ட கனவினை (தான் கண்ட கனாவினை) வர்ணிக்கும் இந்தத் திருமொழியை (தூய தமிழ் மாலை) யார் சொல்லி வந்தாலும் (ஈரைந்தும் வல்லவர்) அவர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும்!

(திருமணம் நடைபெற வேண்டுமென்றாலும், நல்ல குழந்தைகள் வேண்டுமென்றாலும், இந்தத் திருமொழியை ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் பலன் உண்டு என்று கூறப்படுகிறது!)


(இதை, மிகவும் பொறுமையாகப் படித்த அனைவருக்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமைய, நரசிம்மனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்)

- நரசிம்மன் வருவான்!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP