Friday, September 10, 2010

பனையோலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகறீங்களா?

பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் + ஈத் முபாரக்!
ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தியின் போது, பிள்ளையார் தான் பெரும்பாடு படுகிறார்! நாம முழுங்குகிறோம்! அவரோ முழுகுகிறார்! :)

நடக்கும் காரியம் விக்கினம் இல்லாமல் நடக்க நாமெல்லாம் விநாயகரை வணங்கினால்...
அவரோட சதுர்த்திக்கு, அவர் விக்கினமில்லாமல் கரைய,
பாவம்...அவர் எந்த முழுமுதற் கடவுளை வேண்டுவார்? :))

மெரீனாவில் பிள்ளையாரின் அல்லோலகல்லோலங்கள்-ன்னு பதிவு போடலாமா? :)

* களிமண் பிள்ளையாரை ஒவ்வொரு ஆண்டும் கரைக்கக் கஷ்டமாக இருக்கா?
* குளம்/கடல்-ன்னு கரைக்கும் நேரத்தில் மண்ணும் சகதியுமாய் ஆகி, பிள்ளையாருக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டமா?

பேசாமல், இந்த ஆண்டு, பனை ஓலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகிப் பாருங்களேன்! இதோ...மங்கலம் கொழிக்கும்...அழகியவாரணப் பிள்ளை!ஹாரித் தாரங் என்பவர் எளிமையாக வடிவமைத்துள்ள இந்தப் பிள்ளையார் சுற்றுச் சூழல் கெடாத பிள்ளையார்!
எளிமையான பிள்ளையார்! அழகானவரும் கூட! பனையோலையால் சுருட்டிச் சுருட்டியே தலைப்பாகையும், காதும், துதிக்கையும், தொந்தியும் அழகாகச் செய்துள்ளார்கள்! = தால விருட்ச கணபதி! திருப்பனந்தாள் பிள்ளையார்!

சென்னையில் வாங்கணும்-ன்னா இதோ தகவல்கள்:
Rajen’s Square,
40, Bazzullah Road,
T.Nagar,
Chennai – 600 017.
Phone: 044 – 65275990,
Mobile: 98412-79881, 98419-37297
(http://chennaionline.com/City360/City-Feature/Get-eco-friendly-this-Chaturthi-with-Palm-leaf-Ganeshas/20101409011403.col)


பனையோலை பிள்ளையார்-ன்னா சாஸ்திரத்துக்கு ஒத்து வருமா-ன்னு எல்லாம் குழம்பாதீங்க! :)
நாம நல்லா இருக்கணும்-ன்னு, பிள்ளையாரை அலைக் கழிப்பதுவா பக்தி??? யோசிச்சிப் பாருங்க!

மஞ்சளில் பிடித்து வைக்கும் பிள்ளையார் தான் மங்களகரமானவர்!
அடுத்து இயற்கையாகச் செடி கொடிகளில் செய்யப்படும் விநாயகர்! - வெள்ளெருக்கு விநாயகர் கேள்விப்பட்டு இருப்பீயளே? அதே போலத் தான் பனையோலையும்!

* தோரணத்துக்கு பனையோலை தானே பயன்படுத்துகிறோம்?
* காதோலை/கருகமணி என்று இன்றும் பனையோலையில் தானே கிராமத்தில் அம்மனுக்குச் சார்த்துகிறோம்?
* ஆண்பனைகளை பெண்பனைகளாக மாற்றிப் பாடி, பனையோலைக்குப் பெருமை சேர்த்தவர் அல்லவா ஞானசம்பந்தர்! இந்தத் தலம் = செய்யாறு (திருவத்திபுரம்), எங்கூரு வாழைப்பந்தலுக்கு அருகில் தான்!

வெள்ளை வெளேர் என்று = சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்று பனையோலையிலும் அப்படியே இருக்கிறார்! கரைக்கவும் எளிது! இலைகள் எளிதாகத் தானே மஃகி விடும் அல்லவா? பிள்ளையாரைக் கரைக்கிறேன் பேர்வழி என்று அவரைக் கலங்கடிக்க வேண்டாம் அல்லவா?

அவளை முருகனிடம் கூட்டி வைத்த முதல்வன்! தேனினும் இனிய திருப்புகழ்! அக்குற மகளொடு அச்சிறு முருகனை அக்கண மணம் அருள் பெருமாளே!

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இளநீர் வண்(டு)
எச்சில் பயறு அப்பவகை பச்சரிசி பிட்டு வெளரிப்
பழம் இடிப் பல் வகைத் தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு
விக்கின சமர்த்தன் எனும் அருளாழி
வெற்ப குடிலச் சடில விற்பரம அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே!


பிள்ளையார்-ன்னாலே எளிமை தானே? எளிமையானவரை எளிமையாகவே வணங்கலாம்!
நாம் குழந்தையாய் இருந்த போது, நம்மை எளிமையாகவே வந்து தொட்ட முதல் தமிழ்ப் பாடலால் போற்றுவோம்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா!


கோலம் செய் கரிமுகனை,
அலங்-கோலம் செய்யாது,
அலங்-காரம் செய்து வணங்குவோம்!!


உங்கள் தெரிவு என்னவோ?

1) ஜெய் ஸ்ரீ கணேஷா

2) பிள்ளையார் பிள்ளையார்! 3ஆம் நாள்...வரிசை வாய்ந்த பிள்ளையார்!

3) அந்தி வானம் அரைத்த மஞ்சள்! அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்!
தங்கத் தோடு ஜொலித்த மஞ்சள்! கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்!
மஞ்சள்! மஞ்சள்! மஞ்சள்!
Read more »

Wednesday, September 08, 2010

மூக்கறுத்த நாயன்மார்! மீனவ நாயன்மார்!!

அடியார்களின் திருக்கதைகளைப் புனைவுகள் அதிகம் இன்றி..
மூல நூல்களில் (திருத்தொண்டர் தொகை/திருவந்தாதி) உள்ளது உள்ளவாறு..
அடுத்த தலைமுறைக்கும் ஏற்றாற் போல..
சென்று சேர்க்க வேணும் என்ற ஆசையில்..
ஒவ்வொரு நாயன்மாரின் நினைவு நாளின் (குருபூசை) போதும், இதோ...பந்தல் பதிவுகள்...

அந்த வரிசையில் இன்று...இவர்களைப் பார்க்கலாமா?

1. செருத்துணை நாயனார் (ஆவணிப் பூசம் - Sep 5, 2010)
அரசியின் மூக்கை, பொது மண்டபத்தில், அதுவும் அரசன் இருக்கும் போதே, அனைவரும் பார்க்க அறுத்தவர்! - ஐயோ! ஏன் இப்படிச் செஞ்சார்?
* அரசன் இவர் தலையை உடனே சீவி இருப்பானோ?
* இல்லை தன்னாலும் அடக்க முடியாத பெண்டாட்டியை அடக்கியவரே-ன்னு பரிசு கொடுத்திருப்பானோ? :)

2. அதிபத்த நாயனார் (ஆவணி ஆயில்யம் - Sep 6,2010)
மீனவ நாயன்மார் - மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்று முதலில் பாடியதே இவரு தான்! :)

3. புகழ்த் துணை நாயனார் (ஆவணி ஆயில்யம் - Sep 6,2010)
உறவுகள், உற்ற நண்பர்கள் கூட உதறி விட்டு நீங்கும் காலத்தில்,
பஞ்சம் வந்த போதும், பரமனை விட்டு நீங்காமல்...!


செருத்துணை நாயனார்:

அது என்ன செருத் துணை? செரு = போர்!
"செருவில் ஒருவன்" என்று முருகனைச் சொல்வது சங்கத் தமிழ்!
போரில் துணை நிற்பவர் = செரு+துணையார்!

வேளாளர் குடியில், தஞ்சையில் தோன்றியவர்! திருவாரூருக்கு இடம் பெயர்ந்து, சிவத் தொண்டிலேயே இருந்து விட்டார்! விளைச்சல் பூமியான தஞ்சையை இவரு எதுக்கு திருவாரூருக்கு இடம் பெயரணும்?

"மேன்மை கொள் சைவ நெறி, விளங்குக உலகமெல்லாம்" என்று சைவம் கொடி கட்டிப் பறந்த போது...சைவத்தின் தலை நகரம் எது?

"தென்னாடுடைய சிவனே" என்னும் தென்னாட்டில், தில்லை என்னும் சிதம்பரம் தானே, அப்போதும் இப்போதும் எப்போதும் சைவத்தின் தலைநகரம்?
எப்படி வைணவத்துக்கு ஒரு திருவரங்கமோ, அது போல் சைவத்துக்குத் தில்லை அல்லவா? இதென்னடா புதுசாத் தலைநகரக் கேள்வி-ன்னு நினைக்கறீங்களா? :)

தில்லை-ஆரூர்

தில்லை என்றுமே பெருமை மிக்க தலம் தான்! மறுப்பில்லை!
பொன்னம்பலத்துக்கு உள்ளே ஒரு சிறு அம்பலம்!
ஆடல் வல்லானின் அழகு அம்பலமாகும் அம்பலம் = சிற்றம்பலம்!
ஆனால் தில்லைக்கும் முன்னால்...
சைவத் தலைநகரமாகத் திகழ்ந்து விளங்கியது = திருவாரூர்!


"திருவாரூர் பிறந்தவர் தம் அடியார்க்கும் அடியேன்" என்றெல்லாம் புகழப் பெற்றது! இன்னிக்கும் திருவாரூரில் மாலை விளக்கு ஏற்றிய பின்னரே, பல சுற்று மாவட்ட சிவாலயங்களில் எல்லாம் விளக்கீடு செய்வது வழக்கம்!
"கோயில் பாதி, குளம் பாதி" என்னும் படிக்கு, மொத்த கோயிலின் நிலப்பரப்பும், குளத்தின் நிலப்பரப்பும் ஒன்றே என்று அமைந்த ஆலயம்!

* உலக நன்மைக்காக விடமுண்ட கண்டன்! அந்தத் தியாகத்தை நினைத்துப் பெருமாள் மனத்தளவில் ரசிக்கும் போது, அவரது மூச்சிலே மேலும் கீழும் இறங்கிய ஈசன்! அதே நடனக் கோலம் காட்டும் "தியாகேசன்" = திருவாரூர்!
* சுந்தரர் முதலான பல அடியார்கள் ஒன்று திரண்டு சைவம் வளர்த்த தலம் = திருவாரூர்! தேவாசிரிய மண்டபம் என்றே இன்றும் உள்ளது!

* "புற்றிடம் கொண்ட பெருமான்" என்று இறைவனுக்குப் திருப்பெயர்! இயற்கைச் சூழலில் புற்றில் தோன்றிய பெம்மானாக ஈசன் விளங்கும் தலம் = திருவாரூர்!
* புற்றிடங் கொண்ட பெருமான்-அல்லியங் கோதை என்று மூலவரும், வீதி விடங்கர்-முருகன்-மனோன்மணி அம்மன் என்று உற்சவரும் (ஊருலா மூர்த்தியும்), செங்கழுநீர் ஓடை முதலான செந்தமிழ்ப் பெயர்களை இந்த ஆலயத்தில் காணலாம்!

"ஆரூர்" என்று தமிழ்ச் சமயமாக, சைவம் தழைத்த காலம்!
பின்னர் தில்லைக்குப் பெயர்ந்து..பலவும் பெயர்ந்து போனது!
:(

ஓதுவார்கள், சைவத் திருமுறைகளை ஓதும் போது, "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லி முடிப்பது தான் வழக்கம்! (சிற்றம்பலம் = தில்லைச் சிற்றம்பலம்)
ஆனால் திருவாரூர் தலம், தில்லைக்கும் தொன்மையானபடியால்...இந்தத் தலத்தில் மட்டும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லி முடிப்பதில்லை! தேவாரம் சொல்லி, அப்படியே நிறுத்தி விடுவார்கள்!

அனைத்து ஆழ்வார்களாலும் அதிகம் பாடல்களைப் பெற்ற தலம் என்று திருவரங்கத்துக்கு எப்படிப் பெருமையோ...
அதே போல், அதிகமான தேவாரப் பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை திருவாரூருக்கே உண்டு! மொத்தம் 353 பாடல்கள்!

பின்னம் அவனுடைய "ஆரூர்" கேட்டேன்!
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்!
திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவடிகளே சரணம்!


சரி, நாம் கதைக்கு வருவோம், வாங்க...

செருத்துணையார் திருவாரூரில் சிவத் தொண்டில் காலங் கழிக்கலானார்!
என்ன, கொஞ்சம் கோவக்காரர்! வன்-தொண்டர்! சிவத் தொண்டுக்கு யாராச்சும் வலியப் போய் இடையூறு செஞ்சா பிரிச்சி மேஞ்சிருவாரு! :)

ஒரு முறை பல்லவ நாட்டு அரசர், கழற்சிங்கர் தம் மனைவியோடு ஆரூர் ஆலயத்துக்கு வந்தார்! ஒரே படோபடம்! அரசன் சும்மா வந்தாலும், கூட இருப்பவர்கள் அடிக்கும் கொட்டம் அப்பவே இருந்தது போல! ஆலயத்தில் "அனைவரும் அடியார்கள் தான்" என்ற நிலை மறந்து போனது! படோபடங்கள் தலை தூக்கியது! அரசரின் குழாம் தேவாசிரிய மண்டபத்துக்குள் நுழைகிறது!

முன்பு சுந்தர மூர்த்தி நாயனாரையே, அவர் சுற்றியுள்ள அடியார்களை ஏறெடுத்தும் பாராமல், செல்வாக்கால் நேரே வணங்கச் சென்ற போது, இதே தேவாசிரிய மண்டபத்தில் அல்லவா ஒருவர் (விறன்மிண்டர்) வெடித்துக் கிளம்பினார்?
"சுந்தரனும் அடியார் குழாத்தில் இல்லை; அவனுக்கு அருளும் ஈசனும் இனி நம் குழாத்தில் இல்லை! சுந்தரனும் புறகு! அவனை ஆளும் ஈசனும் புறகு!" என்று அறச் சீற்றம் கொண்ட இடம் அல்லவா இந்த தேவாசிரிய மண்டபம்?

அரசன் முன்னே வேகமாகச் சென்று விட...அரசி தான் சற்றுத் தாமதம்!
எப்பமே வீட்டில், பெண்கள் தானே கிளம்ப லேட் ஆகிறது? :)) ஒருவர் Fast Passenger என்றால் இன்னொருவர் Goods வண்டி போல் வந்தால் எப்படி? :))
ஏன் அரசியார் தாமதமாகச் செல்கிறார்? அவரை ஏதோ ஒன்னு ஈர்க்கிறது! என்ன அது?

மல்லிகை, முல்லை, இருவாட்சி, கதம்பம், அல்லி, அளரி, செந்தாமரை என்று பூசைக்காக மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன பூங்கோயில் மண்டபத்துள்!
மொத்த வாசனையும் அழகும் திரண்டு வந்து அரசியை நிலை கொள்ளாமல் செய்கிறது! என்ன தான் அரசியாய் இருந்தாலும், இப்படி அனைத்து மலர்களும் ஒரு சேர அவள் இது வரை கண்டதும் இல்லை! சூடிப் பரப்பி அனுபவித்ததும் இல்லை! ஆசை துடிக்கிறது!

அரண் மனையிலே காணாத சுகத்தை,
அரன் மனையிலே காண்கிறாள்!

முறையாக அனுபவிக்கலாமே? பூசைக்குப் பின் பிரசாதமாக அவளுக்கே தரப்படுமே!
ஆனால் ஆசை வெட்கம் அறியுமா?

இப்போதே அனுபவித்தாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டால்??
யார் தன்னைக் கேட்டு விட முடியும் என்ற அலட்சியத்தில், நடந்தாள் ராணி, தடந்தாள் பேணி! பூந்தொடையல் கையில்! பூவாசம் மெய்யில்! முகர்ந்து முகர்ந்து ஆனந்தித்தாள்!

எங்கிருந்து தான் வந்தாரோ செருத்துணை? இத்தனை படோபடங்களையும் ஆலயத்தில் பார்த்து வெறுத்துப் போனவர், அரசியின் அலட்சியம் கண்டு இன்னும் கோபமானார்! அருகில் உள்ள பூ-நார் சீவும் குறுங்கத்தி எடுத்து, அவள் நாசிக்கும் மலருக்கும் இடையே நீட்ட, வெள்ளல்லி எல்லாம் செவ்வல்லியாகிப் போனது! குபுகுபு என்று இரத்தம்!!


அடப் பாவி, அரசியின் மூக்கில் கத்தி பட்டு விட்டதா? இப்படிப் பெண்மயில் போல் துடிக்கிறாளே! பலரும் பாய்ந்து செருத்துணையைப் பிடித்துக் கொண்டனர்!

முன்னே போன பல்லவ அரசர் கழற்சிங்கர், சத்தம் கேட்டு ஓடோடி வருகிறார்! இந்த அடாத செயலைச் செய்தது யார் என்று சீறுகிறார்! அதிகாரம் அதட்டும் போது, பதில் உடனேவா வருகிறது? அனைவரும் தயங்கத் தயங்க...

செருத்துணை, குற்றத்தை ஒப்புக் கொண்டு, தானே இதைச் செய்ததாகக் கூறுகிறார்! நடந்த அத்தனையும் அவர் எடுத்துச் சொல்லச் சொல்ல...
ச்சே, இப்படியும் ஒரு எதிர்வினையா? அரசன் வாளை உருவி...

ஐயோ, செருத்துணை இன்றோடு காலியா?
யாரும் எதிர்பார்க்கும் முன்பே, மன்னன், அரசியின் கைகளை வாளால் வெட்டுகிறான்! வெட்டித் தலை குனிகிறான்! வெட்கித் தலை குனிகிறான்!
மக்கள் அதிர்ச்சியால் அரண்டு போகிறார்கள்!

காதலியிடம் Public Display of Affection கேள்விப்பட்டுள்ளோம்!
இது என்ன Public Display of Punishment-ஆக அல்லவா இருக்கு! :(

"முதல் தவறு கைகள் மீதல்லவா? அப்புறம் தானே மூக்குக்குச் சென்றது?" - இது அரசன் சொன்னது!
"முதல் தவறு மனதின் மீதல்லவா? அப்பறம் தானே கை மீறியது?" - இது நாம் சொல்வது!

மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ எனவே.....
மனத்தை உணர வைக்காமல்......, விழிக்கோ,கைக்கோ,நாசிக்கோ தண்டனை தந்து பயன் என்ன?
சுழற்றியதோ சாட்டை! சாபம் பம்பரத்துக்கா? இதென்ன போலிப் பண்பு??

* பூசைக்குரிய மலர் என்று பாராதது சிவ அபராதம் என்று சொன்னாலும்...
* ஆலயத்தில் அதிகாரம் காட்டியது அரசியின் பிழையே ஆனாலும்...
* அதற்கு, செருத்துணையார், அவசரத்தில் குறுங்கத்தி நீட்டி விட்டாலும்...
* அரசியே ஆனாலும் சிவாபராதம் அபராதமே என்று...இப்படிப் பலர் முன்னிலையில், அரச நீதி காட்டி விட்டார் கழற்சிங்கர்!

இது அரச நீதி வேண்டுமானால் ஆகலாம்! ஆனால் மேன்மை கொள் சைவ நீதி ஆகுமோ? = அன்பே சிவம்!
* இறைவனுக்குரிய மாலையைத் தான் சூடிக் கொண்டவள் = அவள் கைகளை யாரும் அரியவில்லையே! "சூடிக் கொடுத்த சுடர் கொடி" அல்லவோ ஆனாள்!
* இங்கோ, அரசிக்கு வேறு விதமாய் ஆகிப் போனது! ஏன்?

அவளுக்கோ மாலையின் மேல் ஆசையில்லை! அதை அணிந்தால், தான், அவனுக்கு ஏற்றவளாக இருப்போமா என்ற ஆதங்கம்!
இவளுக்கோ இறைவன் பால் உள்ள பற்றினால் அல்ல! தன் ஆசைக்கு, தன் வேட்கையை, பொதுவில் தணிவித்துக் கொள்ள முயன்று...அதுவும் தன் அதிகார பலத்தால்!

= நோக்கமே முக்கியம்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் "தத்தம்
கருமமே" கட்டளைக் கல்!

என்ன தான் அரச நீதியாகத் தண்டனை தந்தாலும், கழற்சிங்கர் சிறந்த சிவ பக்தரே! சைவத் தொண்டிலே சிறந்து, நாயன்மாராக விளங்கி நிற்கிறார்!
செருத்துணை நாயனார் குரு பூசையின் போது, இந்த இருவரையுமே வணங்கி நிற்போம்!


அதிபத்த நாயனார்:

நாகைப்பட்டினம் நுளைப்பாடி என்னும் மீனவச் சேரியில் பிறந்தவர் அதிபத்தர்! இவருக்கு ஈசனின் பால் எப்படியோ, அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு வந்துவிட்டது! யாரிடமும் போய் வேதமோ, திருமுறையோ கேட்கவில்லை! ஈசனின் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்து முடித்து அவரைப் பற்றிக் கொள்ளவில்லை! இயல்பாகவே இயற்கையாகவே அமைந்து விட்ட ஈச-அன்பு!

ஒவ்வொரு நாளும் தான் கடலில் பிடிக்கும் மீன்களுள் சிறந்த மீனை, சிவனுக்கே அர்ப்பணம் என்று சொல்லி, மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்! மீன் பிடித்து மீண்டும், ஆற்றில் விட ஆசை-ன்னு அப்பவே பாடி இருக்கார் போல! :)

அதென்ன ஒத்தை மீனை மட்டும் விடுவது? அதென்ன, பிடித்துத் தானா விட வேண்டும், அப்படியே விடலாமே-ன்னு ஆளாளுக்குப் சில சக மீனவர்கள் கேலி பேசினாலும்...
அதிபத்தர் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை! அவர் சிவ-அன்பு அவர் மனத்தளவில்! அது ஊருக்கே விளம்பரம் செய்து அளித்த "சிவார்ப்பணமஸ்து" அல்ல! நடுக்கடலில் அளித்த சிவக்கொடை!

ஆனால் அன்றோ, அவர் கெட்ட நேரம், வலையில் ஒரு மீனும் சிக்கவில்லை! இன்னும் ஆழம் சென்று பார்த்தார்! ஆகா! ஏதோ பலமாக இழுக்கிறது! கொழுத்த மீன்கள் போல! வலையை மேலே இழுத்துப் பார்த்தால்...கொழுத்த மீன்"கள்" அல்ல!.........வெறும் ஒரு கொழுத்த மீன் மட்டுமே!

இப்பச் செய்வாரா சிவார்ப்பணம்? கொள்கை?? சிவம்???
ஹிஹி! ஞான, கர்ம யோகம் என்று விதம் விதமாய் அறிவுப் பசியெல்லாம், வயிற்றுப் பசிக்கு அப்புறம் தானே?
நமக்கெல்லாம் வாழ்க்கைக்கு, மிஞ்சி ஃப்ரீ டைமில் தானே தெய்வம்! அதுவும் நமக்கு ஒத்து வரும் கதைகள் கொண்டதாய் இருந்தால்! :)
அதிபத்தருக்கோ தெய்வத்தை மிஞ்சித் தான் வாழ்க்கை! என்ன செய்வார் அந்த ஒரே மீனை?

சிவார்ப்பணம் என்று வழக்கம் போல் கடலிலேயே விட்டார்! இவர் அதி-பத்தரா? அதி-பித்தரா?

அடப் பைத்தியமே, புவ்வா-வுக்கு என்ன பண்ணுவ? என்று சக மீனவர்கள் கேட்க...வெறும் புன்னகை மட்டுமே அவரால் அவர்களுக்குத் தர முடிந்தது!

மறு நாள், அந்த ஒரு மீன் கூடப் பிடிபடவில்லை! போச்சுறா...நல்ல சிவார்ப்பணம்! பகர் ஆர்வம் ஈ என்று கேட்காமலே சிலருக்குத் தரவல்ல இறைவன், இவருக்கு மட்டும் இவர் நிலை கண்டும் தரவில்லை போலும்! ஒரு வேளை ஈசனும் ஆராய்ந்து அருளேலோ ஆகி விட்டாரோ? :(

சேலெல்லாம் செவேல் செவேல் என்று மின்ன, இது சிலா மீனோ அல்லது சிலையோ என்னும் படிக்கு, பொற்சிலையாய் ஒரு பொன் மீன்...
வலையில் வந்து விழுந்தது! தகதகதக தகவென்றே ஓடி வா! சிவ சக்தி சக்தி சக்தியோடு ஓடி வா!

அதிசய மீனை விற்றால் வாழ்க்கையே அதிசயமாய் மாறிப் போகுமே! பொன்மீன், பொன்மீன் என்று உடன் இருந்த பரதவர்கள் எல்லாம் மகிழ்ந்து கூச்சல் இட...
அதிபத்தர் சற்றும் தாமதியாமல், அன்றைக்கு கிடைத்த ஒரே மீனை, பொன் மீன் என்றும் பாராமல்....."சிவார்ப்பணம்".....அலையிலேயே இட்டு விட்டார்!

கடல் நஞ்சை உண்டவன், இவர் ஈந்த மீனையும் உண்டானோ என்னவோ?
கீழைக் கடலில் நஞ்சுண்டவன் மேற்குச் சூரியனும் மறைந்து போகும் அளவுக்கு மின்ன...
பொன்னார் மேனியனே....மின்னார் செஞ்சடை மேல்....மன்னே மாமணியே...

அதிபத்தர் சிரம் மேல் கரம் கூப்பி, சிவசிவா என்றும் சொல்லத் தெரியாது, நாத் தழுதழுக்க...
சிவலோகத்தில் சிறப்புற்றிருக்கும் வண்ணம் இந்த அன்பனைத் தலையளித்து ஆண்டு கொண்டார் அம்பலவாணப் பெருமான்!

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
தங்கக் கவசம், வெள்ளிக் கதவு என்றெல்லாம் கொட்டும் கூட்டத்துக்கு இடையில்... அதிபத்த நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Thursday, September 02, 2010

பழமொழி நானூறில் தமிழ்க் கடவுள்!

பழமொழி நானூறு என்பது திருக்குறள், நாலடியார் போல பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று!

மொத்தம் 400 பழமொழிகள்...ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு பழமொழி கோர்க்கப்பட்டு இருக்கு!
அப்பவே தமிழறிஞர்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாக நூல்களைச் செஞ்சிருக்காங்க பாருங்க!

பட்டிமன்றத்தில் கலந்துக்கிட்டு, "குடும்பத்தில் அதிகம் கத்துவது ஆண்களா பெண்களா?"-ன்னு வெத்துப் பேச்சு பேசி, கைத்தட்டல் பெறும் தமிழ் "அறிஞர்கள்" அல்ல சங்க காலக் கவிஞர்கள்! "நீ இருமினால் இயற்தமிழ், தும்மினால் இசைத்தமிழ்"-ன்னு எல்லாம் ஆட்சியாளரை உலா பாடத் தெரியாதவர்கள்!

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க வல்ல நூல்களை எழுதி,
பண்டைத் தமிழ்க் குடிகளின் வாழ்வியலைப் பதிந்து வைத்துப் போன பண்பாளர்கள்!
பழமொழி நானூறு என்னும் இந்த நூலை எழுதியவர்: மூன்றுரை அரையனார்

வழி வழியாக மக்களிடையே வழங்கி வரும் பழமொழிகள், சுருக்கமா, ஆனா நச்-ன்னு இருக்கும்! கேட்ட மாத்திரத்தில் பதிந்து விடும்!
"அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு" என்பது இப்போதைய பழமொழி! இறை ஒருமைப்பாட்டுக்கு, பக்கம் பக்கமா புத்தகம் போட்டாலும் இந்த ஒரு பழமொழிக்கு ஈடாகுமா? பழமொழியின் Power அப்படி! :)

நிறை குடம் நீர் தளும்பல் இல் என்ற பழமொழியைப் பாட்டில் வைக்கிறார் ஆசிரியர்! அதே போல் இன்னொரு கவிதையில்...
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும் - என்று வைத்துப் போகிறார்! இப்படி 400 பழமொழிகளின் தொகுப்பு!

தொல்காப்பியரும் தமிழ்ப் பழமொழிகள் (முதுமொழி) பற்றிச் சொல்கிறார் பாருங்கள்!
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்,
ஏது நுதலிய முதுமொழி என்ப
இப்படியான பழமொழிகளை, சங்க காலத்தில் சில கவிஞர்கள் ஆங்காங்கே எடுத்து ஆண்டாலும்,....
ஒரே இடத்தில் திரட்டி வைக்க, புதுமையான யோசனை இந்தக் கவிஞருக்குத் தான் தோன்றியது! அதுவே 18 கீழ்க்கணக்கில் = பழமொழி 400!


பழமொழிகளில், பண்டைத் தமிழ்க் குடிகளின் தெய்வமான திருமால் எங்கெல்லாம் வருகிறார்-ன்னு சும்மா பார்ப்போமா?

நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,
உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,
மரையா கன்று ஊட்டும் மலை நாட! - மாயா;
நரை ஆன் புறத்து இட்ட சூடு.
(பாடல்: 48)

இதிலுள்ள பழமொழி: நரை ஆன் புறத்து இட்ட சூடு! அதாச்சும் வெள்ளைக் காளைக்குப் போட்ட சூடு போல்!
வெள்ளை மாட்டுக்குச் சூடு போட்டாற் போலே, நல்லவர்கள் செய்யும் தவறுகள் பளிச்-ன்னு தெரியும்!

மரையா கன்று ஊட்டும் மலை நாட = மலையாடு (வரை ஆடு = மரை ஆ);
அது தன் கன்றுக்குப் பாலூட்டும் மலைவளம் கொண்ட மலைநாடனே,
* வெள்ளை மாட்டுக்குப் போட்ட சூட்டை அந்த வெண்மையே எடுத்துக் காட்டுவது போல்...
* சான்றோர்கள் செய்யும் தவறுகளை, அந்தச் சான்றாண்மையே எடுத்துக் காட்டி விடும்!

இதுல எங்க திருமால் வந்தாரா? ஹா ஹா ஹா, முழுப் பாட்டையும் பாருங்க...

நிரை தொடி தாங்கிய, நீள் தோள் மாற்க்கு ஏயும்
= வரிசையாக தோள் வளை சூடிய, நீள் தோள் நெடியோன்
= மாலுக்கேயும் = மாலுக்கே ஆனாலும் = திருமாலுக்கே ஆனாலும்

உரை ஒழியாவாகும், உயர்ந்தோர்கண் குற்றம் = ஒழிக்க இயலாது, உயர்ந்தவர்கள் செய்யும் தவறுகள்!

அதாச்சும், திருமால் போன்று உயர்ந்தவர்களே ஆனாலும்...
உயர்ந்த தன்மையில் இருந்து கொண்டு செய்யும் சிறு குற்றமும், பளிச்-ன்னு தெரியும், வெள்ளைக் காளைக்குச் சூடு போட்டாற் போலே!

உயர்வுக்குத் திருமாலைக் காட்டுகிறார் கவிஞர்!
கடைச் சங்கத் தமிழ்க் குடியிலும், எத்தனை உயர்வு பெற்றிருந்த திருமால்...அந்த முல்லை நில மாயோனை விடவா நீங்கள் உயர்ந்தவர்கள்?
அது மாயோனே ஆனாலும் சரி, உயர்ந்தவர்கள் செய்யும் சிறு தவறும், பெரும் பிழையாய்த் தெரியும்! எனவே, சான்றோர்களே, தவறாது இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்! = Model Code of Conduct, for Models! :)


அடுத்த பாட்டில் "நாரணம்" என்ற தமிழ்ச் சொல்லையே கையாளுகிறார் கவிஞர் மூன்றுரை அரையனார்!
நாரணம் தமிழ்ச் சொல்லா? என்பதை இராம.கி ஐயாவின் பதிவில் பாருங்கள்!

காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்
உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு
நல்ல நாராயம் கொளல்.
(பாடல்: 79)

இதில் உள்ள பழமொழி: நரிக்கு நாராயம் கொள்வார்களா? அதாச்சும் ஒரு குறு நரியைப் பிடிக்க, யாராச்சும் நாராய அம்பினை எய்துவார்களா?

காழ் ஆர மார்ப = முத்து மாலை மார்பனே
கசடு அறக் கை காவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை = கசடில்லா ஒழுக்கத்தைக் காக்க மாட்டாத கீழானவர்கள்...அவர்கள் தன்னளவில் செய்யும் ஈனச் செயலுக்காக...

மேலாயோர் உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல் = மேலான சான்றோர்கள், மனத்தில் எடுத்துக் கொண்டு, பதிலுக்குப் பதில் ஊக்கலாமா?
நரிக்கு நல்ல நாராயம் கொளல் = அது, நரிக்கு நாராய அம்பு எய்தாற் போலே! அது தேவையா?


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)


அன்பர்களே,
18 கீழ்க் கணக்கோடு.....
சங்கத் தமிழிலே தமிழ்க் கடவுள் என்பதற்கான....
இது காறும் வந்த தரவுகள் - பதிவுகள் அனைத்தும் நிறைந்தன!
Read more »

Wednesday, September 01, 2010

பதினெண்கீழ்க் கணக்கில் தமிழ்க் கடவுள்!

18 கீழ்க் கணக்கு நூல்களில், அற நூல்களைத் தவிர்த்து, அகம்/புறம் என்று வாழ்வியல் அழகு நூல்களும் உள்ளன! No Moral Science, Only Life's Beauty! :)

அகத்திணை:
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கைந்நிலை
6. கார் நாற்பது

புறத்திணை:
1. களவழி நாற்பது

இந்த நூல்களிலெல்லாம் தமிழ்க் கடவுள் பற்றி வரும் குறிப்புகளைப் பார்ப்போமா?
மற்ற 18 கீழ்க்கணக்கு நூல்களான - திருக்குறள், திரிகடுகம், நான்மணிக் கடிகை, பழமொழி நானூறு - இவற்றுள் எல்லாம் வரும் குறிப்புகளை முன்னரே பார்த்து விட்டோம்! அவை அற நூல்கள்! இன்று பார்க்க இருப்பவை அக நூல்கள்!



கார் நாற்பது:

கார் காலக் குறிப்புகள் (மழைக் காலம்) ஒவ்வொரு கவிதையிலும் வருவதால், இது கார் நாற்பது! எழுதியவர்: மதுரைக் கண்ணங் கூத்தனார்! சங்கப் புலவர்கள் பல பேரு மதுரைக் காரவுங்களாத் தான் இருப்பாங்களோ? :)
தோழி தலைவிக்குப் பருவம் காட்டி வற்புறுத்தல்: கார்கால வானவில்லில் திருமால் சூடும் மாலை

பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
வருதும் என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?

கடல் போல் கரு வண்ணனாகிய திருமால்! அவன் மார்பில் தவழும் தார் (மாலை)! எப்பமே அது பல வண்ணங்களைக் கொண்டு தானே இருக்கும்! வனமாலையோ, வண்ணமாலையோ?
அதே போல் இந்த வானவில் (திருவில்) இத்தனை நிறங்களோடு தோன்றுகிறதே! மழைக்காலம் துவங்கப் போகிறதோ?

கார்காலத்தில் வந்து விடுவேன்-ன்னு சொன்ன உன் தலைவன் இன்னும் வரவில்லை-ன்னு ஏங்குகிறாயா? சரி சரி பதறாதே!
அங்கே பார், வானம் கருவுற்றுச் சத்தம் போடுகிறது! பூப்பூவாய் தூவப் போகிறது! அதற்குள் அவர் வந்து விடுவார்! ரொம்ப கவலைப்படாதேடீ!


திணைமாலை நூற்றைம்பது:

இந்த நூல்......குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைப் பாடல்களும் கொண்டது! மொத்தம் 150 கவிதைகள்!

எழுதியவர் ஒருவரே - பெயர்: கணிமேதாவியார்!
ஏலாதி என்ற நூலை எழுதியவரும் இவரே! கணித வல்லுநர் (என்னைய போல), ஆனால் கவிதையிலும் என்னமா கலக்குறார் பாருங்க :))

மாயவனும் தம் முனும் போலே, மறிகடலும்
கானலும் சேர் வெண்மணலும் காணாயோ? - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று?
(நெய்தல் திணை: 58)

மாயவனும் தம் முனும் = மாயோனும், அவன் முன்னவனான வாலியோனும்(பலதேவன்) விளையாடும் இயற்கைக் காட்சியைப் பாரேன்!
* ஒன்று கருங்கடல்!
* இன்னொன்று வெள்ளை மணல் கானல் சோலை! (கடலோரக் கானல் சோலை)

கருமையான கடலின் அலை, அந்த வெள்ளை மணலை முட்டி முட்டி விளையாடுவது, கருப்பான கண்ணன், வெளுப்பான வாலியோனுடன் விளையாடுது போலவே இருக்கே!
அந்தக் கானல் சோலையிலே, ஞாழல் மரம் (கோங்க மரம்), தாழை, புன்னை மரம் என்று அடர்த்தியாக இருக்கே! பாராயோ?

இந்தப் பாடல் "நெய்தல்" திணை என்றாலும், "முல்லை" நில இறைவன் மாயோன்.....இங்கும் அழகாகப் பேசப்படுகிறான் பாருங்கள்!

நெய்தல் நில வருணன்/மருத நில வேந்தன் எல்லாம் வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்; ஆலயமோ, கூத்தோ, மக்கள் வாழ்விலோ அவர்கள் இடம் பெறவில்லை!
மாயோனும் சேயோனும் மட்டுமே நிலம் கடந்து, பல மக்களாலும், வாழ்வியலில் கலந்து பேசப்படுவதை, இதே போல் பல சங்கக் கவிதைகளில் காணலாம்!

அதே திணைமாலை-150 இன் தொடர்ச்சியாக....முல்லைத் திணை (96 & 97)
இருள்பரந்து ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையரவு அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு.

பாம்பு போல் வளைந்த அல்குல் (இடுப்பு) கொண்ட தோழீ...
ஆழிப்படை (சக்கரப்படை) ஏந்தும் மாயோனின் நிறம் போல் இருள் பரவும் வேளை!
அவன் முன்னவன் வாலியோன் போல் வெள்ளொளி மதி பரவும் வேளை!
ஆனால் என்னைப் போல்......காதல் துணை அருகிலே இல்லாதவர்க்கோ....,
இந்த வேளை வேல் போல் கொடியதாய் இருக்குதேடீ!


பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்று எறிந்த
ஆழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து.

தோழியே, அதோ கதிரவன் மேற்கு மலை-முகட்டை முட்டுகிறான் பார்! மாயோனாகிய திருமாலின் ஆழி (சக்கரம்).....
பகைவரின் யானையை, தலையில் போய் முட்டுவது போல் முட்டும் இந்தச் சிவந்த காட்சியைப் பாரேன்!

அந்த மாயோனுக்கு முன்னவன் வாலியோனைப் போல், வெள்ளையாய் நிலவும் எழுகிறது! இப்படி மயக்கும் மாலைப் பொழுதில், நான் தான் அவரையே நினைத்து ஆற்றாமல் உள்ளேன் போலும்!


ஐந்திணை ஐம்பது: திருமால்+முருகன் என்று இருவரையும் ஒரு சேரக் காணும் கவிதை

இந்த நூலும் ஐந்திணைக்குப் 10 பாடல்கள் வீதம், 50 கவிதைகள் கொண்ட தொகுப்பு! எழுதியவர்: மாறன் பொறையனார்!

மாறன் = பாண்டியப் பெயர், பொறை = சேரப் பெயர்! இவர் இரண்டு வழி வம்சமான இல்லத்தவர் போலும்! அதான் இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள்!
அதான் போலும் இவரும் மாயோன்-சேயோன்-ன்னு இருவரையுமே ஒரு சேரப் பாடுகிறார்!

மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன் தார்பூப்ப ஈதோ
மயங்கி வலன் ஏருங் கார்.
(முல்லை: 01)

அடி நல்லவளே, என் தோழீ, மேகம் திரளுது பார்! கார் காலம் வந்து விட்டுது!
மல்லரை எல்லாம் அடக்கிய மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் - நம் மாயோனின் உருவம் போல கருமேகங்கள் திரண்டு விட்டன!

அந்த மாயோன் மேகத்தில், முருக வேல் மின்னல்!
கருமேகத் திரளில், கடம்ப மாலை சூடிய முருகனின் வேல் போல், பளிச்சென்று மின்னல் மின்னுதே!
மலையரண்களின் மேல் வேல் எய்த முருகனின் கொன்றைப் பூக்கள் பூக்கத் துவங்கி விட்டன! கார்காலம் வந்து விட்டதே! சொன்னபடி அவரும் வந்து விடுவார்!

இப்படித் திருமாலும் முருகனுமாய் ஒரு சேரக் காணும் காட்சி, முல்லை நிலத்தில்!
குறிஞ்சியின் முருகன் முல்லைத் திணையிலும் வருவது தெரிகிறது அல்லவா?
இரு பெரும் தமிழ்க் கடவுள், மாயோன்-சேயோன் காட்சிகள் பதினெண் கீழ்க் கணக்கில்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP