Wednesday, April 11, 2012

"தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!:)

Crux of this Post:
1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!
2. சித்திரை / ருத்ரோத்காரி வரு'ஷ'ம் etc = மதம் மூலமாகவே, "தமிழ்ப்" புத்தாண்டு எனப் பரவியது!
3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் = தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்!

Tamizh aRignars devised a Notation for Tamizh, in this context...

* Year = Use 'வள்ளுவர் ஆண்டு' as Tamizh Numbering Sequence!
* Month = Use 'தை', which is the most famous month in tamizh literature!

This is NOT claimed as vaLLuvar's exact day of birth etc etc; 
Itz only a "notation" for tamizh related standards; 
For General life = Common Era (2012 CE) applies for all, world over!

You can still celebrate ருத்ரோத்காரி வரு'ஷ'ம் & do poojas at home!

But pl DONT brand it as a "Tamizh" Year!
You are free to call it Hindu New Year, Sanskrit New Year, Nandana Year or whatever! Dot!

.....Now, the full post, with literary evidences & some logical reasoning



பந்தல் வாசகர்களுக்கு இனிய (Sanskrit/ பிராமணப்) புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

இன்னிக்கி, தமிழின் அடிப்படைக்கே சென்று பாக்கப் போறோம் = எது புத்தாண்டு-ன்னு? போய்ப் பார்த்தா.....
"தமிழ்ப் புத்தாண்டு"-ங்கிற ஒன்னே கிடையாது போல இருக்கே?:) அடி ஆத்தீ....மேல வாசிங்க:)

எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?
ன்னு பல விவாதங்கள்/ சண்டைகள் எழுந்து.....ஓரளவு ஓய்ந்தும் விட்டன! தமிழக அரசியலில் ஜெ.அரசாணைகளும் மாறி விட்டன! ஜெ.வே மாறீட்டார்!

இப்போது மீண்டும் ஜெ - கலைஞர் போர்:)
"சித்திரையில் முத்திரை" -ன்னு ஒரு கட்சி!
"சித்திரையில் நித்திரை"   -ன்னு இன்னொரு கட்சி!
முத்திரையோ, நித்திரையோ....அளப்பறை மட்டும் இருக்கு:)
2007 இல் கலைஞரே..."பரவாயில்லை, தமிழனுக்கு 2 புத்தாண்டுகள் இருந்துட்டுப் போகட்டுமே " ன்னு சொன்னவரு தான்!:) கழகத் தொலைக்காட்சி - நிகழ்ச்சி வரும்படி - அதை நிறுத்திடுவாங்களா என்ன?:)

இது ஏதோ கருணாநிதி ஆரம்பித்து வைத்தது -ன்னு சிலர் நினைத்துக் கொண்டு, அதற்காகவே எதிர்க்கிறார்கள், விவரம் புரியாமல்:(

ஆனா,  கருணாநிதிக்கும் முன்னமேயே...
* மென்மையே உருவான திரு.வி.க போன்ற அப்பழுக்கில்லாத் தமிழறிஞர்கள் துவக்கி வைத்தது;
* ஈழத்தில்.....அப்போது புலிகள் கோலோச்சிய யாழ்ப்பாணத்திலே, இது வே.பிரபாகரனால் நடைமுறைக்கு வந்தது தான்!

ஒரு வேளை, அறிஞர் அண்ணா முதலமைச்சராய் இருந்த போதே, மதறாஸ்->தமிழ்நாடு பெயர் மாற்றம் போல், இந்தப் புத்தாண்டு மாற்றமும் வந்திருந்தால், இன்னிக்கி இம்புட்டு பேச்சு இருந்திருக்காதோ என்னமோ?:)

எது எப்படியோ.....இது karunanidhi formula அல்ல! இது tamizh aRignar formula!

1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் "கொண்டாட" வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:)
2. மக்களிடம் - விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! - இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.

பின்பு எதற்கு இந்தக் கட்டுரை? ன்னு கேக்குறீங்களா?
= அதே விழிப்புணர்வுக்குத் தான்!
அரசியலை ஒதுக்கிட்டு, "உண்மை" ஆவல்! பதிவின் நீளம் அதனால் தான்!

சற்று, உன்னிப்பா நோக்குங்க:
* தை என்பவர்கள் = தனித் தமிழ்க் கொள்கை உடையவர்கள் (அ) பகுத்தறிவு இயக்க வழி வந்தவர்கள்!
* சித்திரை என்பவர்கள் = பெரும்பாலும் ஹிந்து மதப் பற்று கொண்டவர்கள் (அ) வடமொழியோடு ’அனுசரித்து’ போகிறவர்கள் (அ) மடாதிபதிகள்

ஆக, 2 கட்சிகள்!
எந்தக் கட்சி சரி? ன்னு புகுந்தால், புலி வாலைப் பிடித்த கதை தான்! முடிவே இல்லை!:)
தங்களுக்குச் சாதகம் இல்லாதவற்றை மறைத்தும்,
தங்களுக்குச் சாதகமானதை "ஆதாரம் போல்" காட்டியும்...
அவர் சொன்னார்/ இவர் சொன்னார் என்று வெட்டிப் பேச்சுக்கள்!

ஆனால்...
தமிழ் இலக்கியம் = அது என்ன சொல்கிறது?
"அடிப்படைக்கே" சென்று பார்த்தால்??? = அதுவே இந்தக் கட்டுரை!




குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

*நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு!
*"உண்மையான உண்மைகள்" என்பது வேறு!
சில நேரம் இரண்டும் ஒன்றுபடலாம்! சில நேரம் மாறுபடலாம்!

ஆனா.....நம் "விருப்பத்துக்கு" மாறாகவே அமைந்தாலும்....
* தமிழ் = தொன்மம்!
* தொன்மத்தில், நம் சுய விருப்பு-வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது!
(முன்பு - "யார் தமிழ்க் கடவுள்?" என்று வந்த பதிவும், இந்த எண்ணத்தில் தான்!)

* இன்று இன்றாக இருக்கட்டும்! 
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

அதுக்காக...விருப்பு வெறுப்பே கூடாது-ன்னு சொல்லலை! விருப்பு-வெறுப்பு உள்ளவன் தான் மனிதன்!
அதை நம் சொந்த வாழ்வில் வச்சிக்கணும்! அனைவருக்கும் பொதுவான தமிழில் அல்ல!
(*** இலக்கியத்தில் மட்டுமே கொள்கை, என் சொந்த வாழ்வில் bye bye-ங்கிற "koLgai kundrus" பற்றிப் பேச்சில்லை:))

தமிழைத் தமிழாக அணுகும் முயற்சி
எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?



முன் குறிப்பு:

1) தமிழறிஞர்கள் பலர் 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அதன் பின்பு திருச்சியிலும்) ஒருங்கே கூடினார்கள்...
வள்ளுவரின் காலம் பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!

யார் யார் இந்த முயற்சியில்?
*மறைமலை அடிகள்,
*உ.வே. சாமிநாத (ஐயர்),
*திரு.வி. க,
*நாவலர். ந.மு. வேங்கடசாமி நாட்டார்,
*நாவலர். சோம. சுந்தர பாரதியார்,
*தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
*பாவேந்தர் பாரதிதாசன்
*பெரியார் ஈ.வெ.ரா
*கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர், உமா மகேசுவரனார்
*முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் 
*மற்றும் பலர்!

ஆனா, அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? = இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?

* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே "தமிழ் ஆண்டு" என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் ~ கி.மு. 31 = எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

நல்லாக் கவனிங்க:
வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா? -ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!
தரவு: (Scanned Copy) பச்சையப்பன் கல்லூரி அறிக்கை: 1935 செந்தமிழ்ச் செல்வி இதழ் https://goo.gl/ebjTBV
------------
  

ஆனால், பின்னாளில்... மறைமலை அடிகளின் மாணவரான நாவலர் சோமசுந்தர பாரதியார்,
வள்ளுவர் ஆண்டை உறுதி செய்ததோடு, தை-02 ஆம் நாளை = வள்ளுவர் திருநாள் - எனவும் வகுத்து அளித்தார்!

அதற்குத் தமிழறிஞர்களும் இசைவு தந்தனர்; அதுவே 1971இல் அரசு விழாவாகவும் ஆனது!
தரவு: (Scanned Copies) : நாவலர் சோமசுந்தர பாரதியார் : தை-02 குறிப்பு https://goo.gl/SSy5fV
------------

திருக்குறளுக்கு, இன்று பலரும் பின்பற்றும் உரை எழுதிய தமிழறிஞர். டாக்டர். மு.வ.. என்ன நவில்கிறார் பாருங்கள்: இதோ, 1971 பொங்கல் விழா மலர்;

“இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? 
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால் தான், நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால் அவர்களும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். 
இன்னொரு காரணமும் உண்டு. முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை! தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்!
அந்த நாள் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை; புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். இப்படிப் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்”

(இதற்கான தரவு: 1988 கோலாலம்பூர் பொங்கல் மலரில், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு)

முது பெரும் தமிழ் அறிஞர்கள், ஏன் இப்படிச் செஞ்சாங்க? அதைத் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்!
------------

2) பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும் சம்ஸ்கிருதப் பெயர்கள்!
வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை = 60 சம்வத்ஸரங்கள். பிருஹஸ்பதி சம்வத்ஸரச் சுழற்சி முறை.

அவற்றுக்கு நாரத-கிருஷ்ண ஆபாசக் கதைகளை, ’புராணம்’ என்ற பெயரில் கோத்துச் சொல்வாரும் உண்டு!
அபிதான சிந்தாமணி (எ) பின்னாள் ’கலைக் களஞ்சியமும்’ இந்தப்பொய்க் கதைகளை உறுதி செய்கிறது!

இந்த Sanskrit/ ஆபாசக் கதைகளால், எல்லாரும் கேக்கறாங்களே?-ன்னு கூச்சப்பட்டாங்களோ என்னவோ
60 சம்ஸ்கிருத வருஷங்களையும்.. "வலிந்து" தமிழில் மொழிபெயர்த்து, முழிபெயர்த்து, திருட்டுத்தனமாப் பரப்பி விட்டிருக்காங்க, அண்மைக் காலங்களில்:) இது சத்தியவேல் முருகனார் என்பவர், அண்மைக் காலத்தில் வலிந்து செய்த தமிழாக்கம் மட்டுமே! இவை, தமிழ் மரபிலே இல்லை!

விகாரி ஆண்டு (விகாரமான) என்ற சம்ஸ்கிருதப் பதத்தை, ’எழில் மாறல்’ என்று கொஞ்சும் ழகரத் தமிழில் பேர் மாற்றி விட்டால் மட்டும், அசிங்கம் -> அழகு ஆகி விடுமா என்ன? மதச் சடங்குகளுக்காக, இப்படியெல்லாம் வலிந்து மொழியாக்கம் செய்வது, நற்பலன் தராது; கெடுதியே செய்யும்:( மதப் பாசம் விட முடியாத தமிழ்ப் பண்டிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

*புள்ளை= Sanskrit Parasiteக்குப் பொறந்தது
*Initial= தமிழில் போட்டா, தமிழுக்குப் பிறந்ததா ஆயீருமா?
வெட்கமாய் இல்லை?:(
எந்தவொரு தமிழ் இலக்கியத்திலும், இப்பிடி "முழிபெயர்த்த" பெயர்கள் இருக்காது:) இது திருட்டு வேலை!

ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி ன்னுல்லாம் பேரு வரும்! = டேய், இதெல்லாம் தமிழா?:))
(ஆமாம்....தமிழே! தோஷம், கோஷம்லாம் = "பரிசுத்தமான" தமிழே-ன்னு பேசும் இணையக் கொத்தனார்-நாத்தனார்கள் நம்மிடையே உண்டு! அவர்கள் பற்றி இங்கு பேச்சில்லை!:)

Please Note:  ஜ-ஷ புகுந்து பரவலாகி விட்டாலும், 
அவை உயிர்-மெய் எழுத்துக்கள் அல்ல! They are just "add-ons"

=>அவற்றைத் "தமிழ் எழுத்துக்கள்" ன்னு யாரும் சொல்வதில்லை! அவை "கிரந்த எழுத்துக்கள்"
=> போலவே: ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி = தமிழ் ஆண்டுகள் அல்ல! அவை ஹிந்து/ சம்ஸ்கிருத ஆண்டுகள்!

இதே 60 பெயர்கள் தான்.. தெலுங்கு/ கன்னடத்திலும்! ஏன்னா, அங்கும் சம்ஸ்கிருதக் கலப்பு! 
இந்தச் சம்ஸ்கிருதத் "திணிப்பு" செய்தது யார்? குஜராத்திகளா? பீகாரிகளா? அல்ல! நம்மோடு வாழும் தென்னாட்டுப் பிராமணர்களே!

மதத்தின் துணைகொண்டு, அந்தந்த ஊர்களில், அந்தந்த மொழிகளில் Sanskrit Parasite புகுத்தினார்கள்! குஜராத்தி/ வங்காளி எளிய மக்களைக் கேளுங்கள்; எவனும் இந்த 60 ஆண்டுப் பெயர்களைச் சொல்ல மாட்டான்:)

Hindu Calendar! or Sanskrit Calendar or Brahmin Calendar!
http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
https://en.wikipedia.org/wiki/Samvatsara
Salivahana Sagam or Vikarama Sagam...whatever!
= But Dont call them "Tamil Years" | Tamizh is not only Hindu; It is Much More!

மதம் மதமாக இருக்கட்டும்! 
அதை மொழி அமைப்பில் புகுத்தி, திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!



3) சரிப்பா, பிரபவ/விபவ-ன்னு 60 ஆண்டுப் பெயர்கள் வேணாம்; ஆனா "சித்திரை" தானே புத்தாண்டுப் பிறப்பு?
அதை எதுக்கு தை மாசத்தில் மாத்தி வைக்கணும்? -ன்னு சிலர் "வேறு ரூபத்தில்" கேட்கத் தலைப்படுகிறார்கள்!:)

இவர்களின் வாதம் = சோதிட அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் (Aries) தான் முதல் ராசி!
சூரியன், மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது = சித்திரை! எனவே அது தான் புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

Okay, Agreed! சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்! ஆனால் மேஷம் புகுந்தாத் தான் = "ஆண்டின் துவக்கம்" என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா....பதில் இல்லை!:)

ஒரு இனத்தின்/ பண்பாட்டின் ஆண்டுப் பிறப்பு
= ஜோதிட அடிப்படையில் தான் இருக்கணுமா?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)
"வசந்த காலத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு நம்பப்படுகிறது, கருதப்படுகிறது, கூறப்படுகிறது..
படுகிறது, படுகிறது-ன்னு இவங்களா அடிச்சி விட ஆரம்பிச்சிருவாங்க!:) ஆனா தரவு? ஆதாரம்??:))

Aries/ மேஷத்தில் தான், உலகெங்கும் புத்தாண்டு துவங்குதா? 

Aries = கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் -ன்னு பல பண்பாடுகளில் இருக்கே! அங்கெல்லாம் Aries/ Mar-Apr தான் புத்தாண்டா? இல்லையே?
Zodiac / ராசிச் சக்கரத்தில் தான் ஒரு புத்தாண்டு துவங்கணும் என்பதற்கு, உலகெங்கும் எந்த ஆதாரமும் இல்லை! அறுவடை ஒட்டியோ, அவரவர் பண்பாடு ஒட்டியோ தான், புத்தாண்டு நிறுவிக் கொண்டுள்ளார்கள்!


சொல்லப் போனால், Old New Year என்ற ஒன்று கூட உலகெங்கும் உண்டு! அது Jan-14 ஒட்டி வரும்/ தை-01 கூடப் பொருந்திப் போகும்:)
*Greece
*Rome
*Macedonia
*Russia
*Scotland
*Georgia
*Bulgaria/ Serbia/ Ukraine
இன்னும் பல Orthodox பண்பாடுகளில்= தை-01 தான் என்று சொல்வோமா?:)))

Orthodox New Year பற்றி மேலும் அறிய= https://en.wikipedia.org/wiki/Old_New_Year
விக்கிப்பீடியா தரவு ஆகாது; அது மேலோட்டமான அறிதலே!
அதனால், இங்கு சென்று காண்க= https://goo.gl/OBmUE0 | உலகில் இன்றும் கொண்டாடப்படும் Orthodox/ Old New Year; Julian Calendar:)

சம்ஸ்கிருத பாசம் மிக உடைய பிராமணீயர்காள்,
உங்கள் சாலிவாஹன/ விக்ரம சகம் உங்களோடு; வாழ்த்துக்கள்:)
ஆனா, அதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலையிலும் திணிக்காதீர்கள்!


சரி, சம்ஸ்கிருதம்/ ஜோஸ்யம் = இதெல்லாம் வேணாம்!
நாம, அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க! :))
"புத்தாண்டு நாள்" ங்கிற ஒன்னு..
தமிழ் இலக்கியத்தில் இருக்குதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் - அதானே முதல் நூல் - அங்கிருந்தே துவங்குவோம்!
** புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய, காடு உறை உலகமும்,
சேயோன் மேய, மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை   
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

கார் காலம் (மழைக் காலம்) தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!

பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே"
= முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே!
ஆனா, இதான் புத்தாண்டு நாள்-ன்னு வெளிப்படையாக் குறிக்கலை!
ஆனா, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்...
கார்காலமே ஆண்டின் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!

(நச்சினார்க்கினியர் உரை:
ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக..
வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்)




உரையாசிரியர், நச்சினார்க்கினியர் சொல்வது போலவே, இன்றும் மலையாளப் புத்தாண்டு அமைந்துள்ளது, அறிவீர்களா?
சிங்க மாதமே (ஆவணி) = மலையாள முதல் மாதம்!
மலையாளப் புத்தாண்டு/ கொல்லம் ஆண்டு= சித்திரை மாத விஷூக் கணி (கனி) அல்ல! ஆவணிச் சிங்க மாதத்தில் வரும் ஓணமே! அறுவடை நாள்!

*சித்திரை விஷூக் கணி= மற்றுமொரு விழாவே
*ஆவணிச் சிங்க மாதமே= புத்தாண்டு;
*அம் மாதத்தில் வரும் ஓணமே= பெருவிழா; விஷூ அல்ல

முன்பே சொன்னது போல், கார் காலம்= மழை வரும் காலமே, மங்கலம் கருதி.. முதற் காலமாக அமைந்தது! மலையாளத்தில் மட்டுமல்ல! நம் ஆதித் தமிழ்த் தொல்காப்பியத்திலேயே!
------------

2. சங்க காலம்: எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுக்கு வருவோம்!

பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன! அதையே பல தமிழ் அன்பர்களும், "தைஇத் திங்கள், தைஇத் திங்கள்" -ன்னு இணையத்தில் ரொம்ப எழுதுறாங்க;

ஆனா அதான் "ஆண்டின் துவக்கம்" -ன்னு சங்கத் தமிழ் சொல்லுதா?
= இல்லை!
= தமிழ் என்பதற்காக, நான் Raw Data-வை மறைக்க/ மாற்ற மாட்டேன்:)

*நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

*குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

*புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

*ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

*கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இம்புட்டு அதிகமா இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனா, தை = "ஆண்டின் துவக்கம்" -ன்னு எங்கும் நேரடியாச் சொல்லலை!

*தையொரு திங்களும் தரை விளக்கி
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து 
-ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னாளில் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாசம்! அவ்வளவே!
------------

3. அடுத்து... ஜெயலலிதா-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் அடிமை "அறிஞர்" முதற்கொண்டு வேறு சிலரும் காட்டுவது:

"ஆடு தலை" = நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை!

ஆடு தலை = ஏதோ ஆட்டுத் தலைக்கறி/ தட்டி உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக:)) | தலை = தலையாய/ முதன்மையான!
திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
.....
ஆடு தலை = மேஷம் தான் முதல்!
நக்கீரரே சொல்லிப்புட்டாரு!
எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!:)) Wait Wait Wait.....

மேஷம் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு "முதல்"?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = "வீங்கு செலல் மண்டிலத்து"

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகை/ ராசி பலன்-லயும் ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!:) இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு... அடேய்களா!

அடேய், பாட்டு குடுத்தாலே ஆதாரம் ஆயிடாதுடா! மொதல்ல, பாட்டின் பொருள் பொருந்துதா? -ன்னு பாத்துட்டு, அப்பறம் பொய் சொல்லுங்க:)
பாவம் நக்கீரர்! திருவிளையாடல் பொய்ப் புராணம் போல், ஒரு மானமிகு சங்கப் புலவன் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது? விவ'ஸ்'தையே இல்லீயா? :)

சித்திரை = இதர "ஆதார"ங்களாக ஜோடிக்கப்படுபவை:

1) சிலப்பதிகாரம் - இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஆனா, சித்திரையில், காமவேள் விழா/ காதல் விழா -ன்னு தான் சொல்லுதே தவிர....
"புத்தாண்டு"-ன்னு சொல்லலையே! ஆண்டின் முதல் மாசம்-ன்னும் சொல்லலையே!

ஏதோ, சித்திரை-ன்னு வரும் ரெண்டு வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்களா?அப்படியெல்லாம் பயப்பட, சிலம்பின் வரிகள் ஒன்னும் "சகஸ்ரநாம" வரிகள் அல்ல:)

2) பிரபவ-விபவ = 60 ஆண்டுகளின் sanskrit names, சோழர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்குப்பா!

இப்பல்லாம் கல்வெட்டை வச்சி நடக்கும் Comedyக்குப் பஞ்சமே இல்ல:) 23ஆம் புலிகேசி தனக்குத் தானே வெட்டிக்கொண்ட கல்வெட்டு ஞாபகம் வருதா? - வரலாறு முக்கியம் அமைச்சரே!:)

நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும், விவாதத்துக்கு உட்பட்டே! சோழர் கல்வெட்டில் இருந்தாலும், அவை = மிகவும் "பிற்காலம்" தான்! சங்க காலம் அல்ல!

சோழர் கல்வெட்டு பலவும், கிரந்த எழுத்தில் தான் வெட்டப்பட்டு இருக்கு!
ஒடனே, "பாத்தீங்களா? பாத்தீங்களா? அப்பவே எல்லாப் பொது மக்களும் Grantha Alphabet தான் எழுதினாங்க; அம்மா வை= "சம்மா" -ன்னு எழுதினாங்களா?:) | அ = சd in grantham notation!

பிற்காலச் சோழர் காலத்தில், கலப்புகள் பல நிகழ்ந்து விட்டன! சோழ அரசாங்கத்தில் வேலை பார்த்த "உயர்சாதிப் பண்டிதாள்", வருஷ - சம்வத்ஸரங்களின் பேரை, அவா Style-இல், "ஸ்வஸ்திஸ்ரீ" -ன்னு பொறிக்கச் செய்தார்கள்! அவ்வளவே!

3) புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது!
பேருலயே தெரியலையா? = பு"ஷ்"ப விதி! :) இதெல்லாம் தரவாகாது!

இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடி தான்!
பலருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு!

இவர் சமயம் சார்ந்து சொல்வதே, ஒட்டுமொத்த தமிழினத்தின் "ஆண்டு" ஆகி விடாது!
ஆழ்வார்கள் = கலியுகத்துக்கும் முன்னால்- ன்னு கூடத் தான் சில வைணவ மடங்கள் புராணம் எழுதி வச்சிருக்காய்ங்க?:)

அப்பிடிப் பாத்தா ஆண்டாளுக்கு அப்பறம் தான் வள்ளுவரே வருவாரு:)
நான் ஆண்டாளின் ரசிகன் என்பதற்காக... அது உண்மையாகி விடுமா என்ன?:))
வள்ளுவரே = தலைமகன்; பின்பே = ஆண்டாள்!

அறிவியல்:

இன்னொன்றும் சொல்கிறேன், குறிச்சிக்கோங்க; 
இது ஜோதிடம் (Astrology) அல்ல! விண்-வெளி அறிவியல் (Astronomy); 

சித்திரையே = "மேஷம் புகும் மாதம், மேஷம் புகும் மாதம்".. என்று குதிக்கும் பல பேர், அறிந்து கொள்க! முதற்கண், உங்கள் சித்திரை = மேஷம் புகும் மாதமே அல்ல! மீனம் புகும் மாதம் :)   



பூமியின் Precessional Wobbling (உருட்டு) என்ற ஒன்றுண்டு; 73 ஆண்டுகளுக்கு 1 degree மாறும் சூரியப் பாதை; 120 BCEஇல், சித்திரை = 'மேஷம்' புகும் மாதமாக (Aries) இருந்தது; அது எப்பவோ மாறிப் போய், இன்று சித்திரை = 'மீனம்' புகும் மாதமாக (Pisces) மாறியாச்! Apr 14 = மீனம் தான்; மேஷம் அல்ல!

இன்னும் 600 ஆண்டு கழிச்சி, 2597 CEஇல், இதே சித்திரை = 'கும்பம்' புகும் மாதமாக (Aquarius) மாறி விடும்; அப்போ என்ன செய்வீங்க? எந்த மேஷத்தில் புகுவீங்க? :)


12 ராசிக் கட்டங்கள், உலகெங்கும் உண்டு; ஆதி மனிதன், இரவில் வானத்தின் தோற்றம் கண்டு, அதில் மாதாமாதம் நட்சத்திரக் கூட்டங்களின் கும்பலான தொகுப்பைக் கொண்டு, ஆடு / மாடு / நண்டு என்று.. பல கற்பனை வடிவங்கள் செய்து கொண்டான்; அதான் மேஷம் / Aries, ரிஷபம் / Taurus எனும் Constellation (ராசி).
 
ஆண்டின் Calendar (நாட்காட்டி) அறியும் பொருட்டு அவன் செய்து கொண்ட Approximationஐ, இன்றும் 'ஜோதிடம்' என்ற பேரில் புனைவுகள் பல பேசித் தொங்கிக்கிட்டு இருக்கீங்க :) ஆனால் அதெல்லாம் எப்பவோ மாறிப் போய், பூமி வேறு ராசி மண்டலத்துக்குள் வந்தாச்! 

ஒவ்வொரு 2,665 ஆண்டுக்கும், உங்கள் சித்திரை = மேஷம், மீனம், கும்பம், மகரம், துலாம்-ன்னு Reverse-இல் மாறிக்கிட்டே இருக்கப் போவுது; நவகிரஹ மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணாலும், உங்களால் அதை மாற்ற முடியாது :) பேசாம, அறிவியலுக்கு மாறிடுங்க! அதான் உங்களுக்கு நல்லது! தலைமுறைக்கே நல்லது!



முடிப்புரை - Final Inference:

1. தமிழ் இலக்கியங்களில் = இது தான் "புத்தாண்டு"-ன்னு நேரடியாக இல்லை!

* சித்திரை = "மதம்" சார்ந்த படியால்... பய+பக்தியோடு, பரப்பப்பட்டு ஊன்றுகிறது!
* ஆனா, மழை துவங்கும் "கார் காலம்" எனும் ஆவணி (அல்லது) "பனி முடங்கல்" எனும் தை
= முதன்மைக் காலம்/ சிறப்பு மாதமாகக் கொள்ளும் திணை மரபு, தொல் தமிழில் உள்ளது!

2. பண்டைத் தமிழர்கள் - ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ/ எண்ணோ வைக்கலை! 
= கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி ன்னு வைக்கல:)

ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியா, எண்ணைக் குறிக்கும் வழக்கம் இருந்ததாத் தெரியலை!
ஒரு பெரிய தலைவரின் பிறப்பை ஒட்டி/ மன்னன் ஆட்சிக் கட்டில் ஏறிய ஆண்டையொட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்பு எழுந்ததே!

அதுக்காக, தமிழர்களுக்குக் கால அளவே தெரியாது-ன்னு முடிவு கட்டிறாதீங்கோ...
உலகெங்கும், பல பண்பாடுகளில்.. ஆண்டுகளுக்குப் பெயர்கள் இல்லை; எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்னாள் பழக்கம்!

* Tamil Season Measurements/ பெரும்பொழுது
= கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months each*6 = 12 months!
* Tamil Daily Measurements/ சிறுபொழுது
= மாலை, யாமம், வைகறை, காலை, பகல், எற்பாடு = 4 hrs each*6 = 24 hours!

*ஆண்டுப் பெயர் தான் தமிழில் இல்லை!
(கிரேக்கம் / வேறு பல பண்பாடுகளிலும் இப்படியே ஆண்டுப் பெயரில்லை)


3. தமிழ் மரபில் & இலக்கியங்களில், மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் = தை!
"தைஇத் திங்கள்" பாடல்களைப் பார்த்தோம்; புத்தாண்டு -ன்னு அல்ல! சிறப்பான மாதமாய்!

4. ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்/ மேஷம் புகும் போதே துவங்கணும் = இதுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தரவுகள் இல்லை!
------------


5. சரி, பிரபவ-விபவ ன்னு சம்ஸ்கிருதப் பேரு மட்டும் வேணாம்பா; 
ஆனா சித்திரையிலேயே இருந்துட்டுப் போகட்டுமே, என்பவர்களுக்கு...

சித்திரை-ன்னாலே....இந்த 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன!
*This is Hindu Calendar! = நந்தன, ரக்தாக்ஷி, ருத்ரோத்காரி
*இதே போல் Islamic Calendar கூட உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
*சமண சமய Calendar உம் உண்டு = சமண சம்வத்சரி!

ஆனா, தமிழ்-இஸ்லாமிய சமூகத்தினர் யாரும்,
* தமிழ் ஆண்டின் முதல் நாளா, ஹிஜ்ரி நாளை வைங்கோ, நாங்களும் தமிழர்கள் தானே? -ன்னு கேக்குறாங்களா?:) இல்லையே?

நாம மட்டும் ஏன், மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :)

இது இன்று நேற்றல்ல! பல காலங்களாய்!
இல்லீன்னா, சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு பின்னாளில் எழுதிச் சொருகி வைப்போமா?:)
டேய் செல்லம்...முருகா, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டீயாடா?:))

* மொழியில், சமய இலக்கியங்கள் வரட்டும்! ஆனா சமய இலக்கியமே = மொழி -ன்னு "வகுத்து" விடக் கூடாது!
* அதே போல் தான் புத்தாண்டும்! சமய ஆண்டே = மொழி ஆண்டு ன்னு "வகுத்து" விடக் கூடாது!

மதம், மதமாக இருக்கட்டும்!
மொழி அமைப்பில் திணிக்க வேண்டாம்!

= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது -ன்னே கருதுகிறேன்!
------------

6. தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்னது 
= Tamil Year Standardization மட்டுமே; 
= புத்தாண்டு துவங்கும் மாதத்தை அல்ல!

இதில் தையா? சித்திரையா? என்பது பற்றிய முடிவுகள் இல்லை! ஆனால்,
* இந்த 60 ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும்
* தொடர்ச்சியான எண் முறைக்கும் (Continuous Numbering Scheme) வித்திட்டது;

நிச்சயமா.....இது "புதிய" முறை தான்!
ஆனால் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து....ஒரு புதிய கணக்கிடும் முறை!

This is only a "notation" for Tamizh related Standards;
But Common Era (2012 CE) applies for all of us!


கிமு/ கிபி அல்ல; அதிலும் மதம் கடந்தாகி விட்டது!
BCE= Before Common Era | CE= Common Era
BC/ AD என்று எழுதாதீர்கள்; BCE/ CE என்றே புழங்கவும்!

7. ஒரே கேள்வி தான் மிச்சம் இருக்கு!
= வெட்டு 1, துண்டு 2 -ன்னு சொல்லு = தையா? சித்திரையா?:)

தை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை;
சித்திரை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை! ஆனா...

* சித்திரை = வேண்டாம்!
* சித்திரை-ன்னாலே, மதம் வந்து ஒட்டிக் கொள்ளும்! 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்!

* தை = தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் சிறப்பு மாதம்!
* தை -ன்னாலே.... மதம் கலவாமல்.... தமிழ் மட்டும் தனித்துத் தெரியும்!

தமிழ் குறித்த ஒன்றில், தமிழ் தானே அடையாளம் தெரிய வேண்டும்?
When it comes to "defining a notation" for Tamizh = Let Tamizh be the focal point; NOT religion!
For that......Thai would be the best choice!
* Starting Year = based on Valluvar (Great Tamizh Person) &
* Starting Month = based on Thai (Great Tamizh Month) - gotcha?:)

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு = இதுவே தமிழுக்கு நலம்!!
இத்துணை நாள், மத மாயை..

இனியாச்சும், மானம் கொள்வோம்!

உங்க ஆத்துல.... பஞ்சாங்கம் வச்சி, வர்ஷ ஆரம்ப பூஜை பண்ணனும்-ன்னா, சித்திரையில் தாராளமாப் பண்ணிக்கோங்கோ!
ஆனா உங்க தனிப்பட்ட அக்ரஹார பூஜையை = "தமிழ்ப்" புத்தாண்டு -ன்னு, தமிழக மக்களுக்கே ஒட்டுமொத்தம் ஆக்காதீக! Please...
------------

8. இல்லவே இல்லை! ஆதாரம் இருக்கோ/ இல்லீயோ....
சித்திரையே = தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு பிடிவாதம் பிடிச்சா?.....

Okay, நானே இறங்கி வரட்டுமா?
சித்திரை-க்கே ஒத்துக்கட்டுமா? .... but two small conditions!

a) "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; ஆண்டுப் பிறப்பு ன்னு சொல்லுங்கோ:))
b) ருத்ரோத்காரி -ன்னு அசிங்கம் புடிச்ச புராணக் கதை |  60 சம்ஸ்கிருதப் பெயர்களை, அறவே நீக்கி விடுங்கள்; 
தினத்தாள், Calendar, Marriage Invitations.. எல்லாக் குறிப்பில் இருந்தும் Sanskrit Parasite நீக்குவீங்களா?

அதெல்லாம் நீக்க மாட்டேன்; 
அதான் "தமிழ்" வருஷப் பிறப்பு!
சம்ஸ்கிருதம் தான் டா, தமிழ்! -ன்னு நீங்க சொன்னா..
இதுக்குப் பேரு தான் போங்கு! போங்கடா டோய்:))))

9. வரும் Apr-13, 2012 = நந்தன வருஷம்.....

அனைவருக்கும் "ஹிந்துப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அ) பிராமணப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
(அ) Sanskrit Parasite ஆண்டு வாழ்த்துக்கள்
(அ) இனிய நந்தன "வருஷ" வாழ்த்துக்கள்!


உசாத் துணை: (References)


1. தமிழறிஞர், இராம. கி. ஐயா - தமிழர் திருநாள் = http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
2. சமூக ஆய்வாளர், திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயா - சித்திரையே புத்தாண்டு = http://www.sishri.org/puthandufull.html

3. சங்க இலக்கிய வரலாறு & தமிழர் மதம் = மொழிஞாயிறு, ஞா. தேவநேயப் பாவாணர்
4. பாட்டும் தொகையும் (பத்துப் பாட்டு - எட்டுத் தொகை உரை) = டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்
5. தெய்வங்களும் சமூக மரபுகளும் = பேரா. தொ. பரமசிவன்

6. Jayashree Saranathan (writer at tamilhindu.com) -  (She is a known person to me by way of blogs, but I was "SHOCKED" to see her line //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//) 
http://jayasreesaranathan.blogspot.com/2011/08/big-thanks-to-ms-jayalalithaa-for.html





Read more »

Sunday, April 08, 2012

இயேசுநாதர் & நம்மாழ்வார் - ஏலி ஏலி லாமா சபக்தானி?

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! - Happy Easter! Happy Sunday!

* "ஏலி ஏலி லாமா சபக்தானி "? (என் தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) = இயேசுநாதப் பெருமான் சொன்ன கடைசி வார்த்தை இது!
* "என்னைப் போர விட்டிட்டாயே "? = நம்மாழ்வார் சொன்ன கடைசி வார்த்தை இது!

என்ன ஆச்சரியம்! ரெண்டு வாய்மொழியும் ஒன்னு போலவே இருக்கு-ல்ல?
இயேசு பிரானின் இனிய நாளான இன்று.....
நசரேயன்-மாறன், இருவரின் அகவியலையும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா?

(பிரேசில் சென்ற போது கண்ட Jesus Christ - Redemeer on the Mount)
(அவர் அழகே அழகு!)


பள்ளிக் காலத்திலே.....என் நண்பராய், என்னுடன் பலவும் கதைத்த, Fr. Rosario Krishnaraj அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன்!

என்னை முதல்வெள்ளிப் பூசையில் (First Friday Mass), முதன்முதலில் பாட வைத்ததும் அவரே! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எனக்குத் தான் வந்து சேரும்!
சங்கத் தமிழ் பற்றியும், தமிழ்க் கடவுளர் யார்? என்றும் அவரிடம் அப்பவே விவாதம்:) ஆனாலும் தபால்தலை தருவது மட்டும் நிற்கவே இல்லை:)

சரி...பதிவின் மையத்துக்குப் போகும் முன்னர்...
கதை போல் இருக்கும் சில நல்ல சுவிசேஷங்களை வாசித்துப் பாருங்களேன், வாயளவில் அல்ல! உங்கள் மனத்தளவில்!


மத்தேயு:27 (ஏலி ஏலி லாமா சபக்தானி)
28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,

29. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி,

30. அவர் மேல் துப்பி...

40. "தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைத் தூஷித்தார்கள்.

46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.


மாற்கு:16 (முதல் தரிசனம் மரியா மகதலேனாவுக்கு)


9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்.

கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனார்கள்.
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

14. அதன் பின்பு பதினொரு சீஷருக்கும் போஜன பந்தி இருக்கையில் தரிசனமாகி.....நம்பாமற் போனதின் நிமித்தம், அவர்களுடைய இருதய கடினத்தைக் குறித்தும், கடிந்துகொண்டார்.

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்றார்.

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். ஆமென்!!!


என்ன மக்களே, விவிலியம் என்னும் பைபிள் வசனத்தை வாசித்தீர்களா?
இப்போ நாம் பேசு பொருளுக்கு வருவோம்!

* இயேசுநாதப் பெருமான் = நசரேயன் (Son of Nazareth, a town in Israel)
* மாறன் நம்மாழ்வார் = குருகேயன் (Kurugoor, a town in Nellai)

இருவருமே இளைஞர்கள்! இருவருக்குமே 32 வயது தான்! அத்துடன் முடித்துக் கொண்டார்கள்!
முன்னவர் 02 BC - 30 CE; பின்னவர் 5th-7th நூற்றாண்டு!

இயேசு பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறன் படவில்லை! ஏன்-ன்னா இயேசுவின் பிரச்சாரம், நேரடிப் பிரச்சாரம்! = மக்களிடையே கலந்து போதித்தார்!
அதனால் "மேலாதிக்க" மனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்! "நாலாம் வருணத்து" நம்மாழ்வார் அப்படி நேரடியாக இறங்காததால் தப்பித்தார் போலும்:)

* இருவருமே குல முதல்வர்கள்! - இயேசு இல்லாமல் கிறித்தவம் இல்லை! மாறன் இல்லாமல் தமிழ்-வைணவம் இல்லை!
* எல்லாத் தேவாலயத்திலும் சிலுவை உண்டு! எல்லாக் கோயில்களிலும் சடாரி உண்டு! (நம்மாழ்வாரே சடாரி - இறைவனின் திருவடி)


இருவருமே அடித்தட்டு மக்களிடம் சேர்பிக்க வந்தார்கள்!
* இயேசு, இறைவனின் வசனங்களை அனைவருக்கும் பொதுவில் பொழிந்தார்! மாறனோ, ஒரு சிலரின் கட்டுக்குள் மட்டுமே இருந்த வேதங்களை, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம், தமிழாக்கி வைத்து விட்டார்! - "வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்"

* முன்னவர், வேசிப் பெண்ணுக்கும் மீட்சிப் பாதையைக் காட்டினார்! பின்னவர், பெண்களும் "திராவிட வேதம்" ஓத வழி வகுத்தார்!
எய்தற்கு அரிய மறைகளை, ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபன்!

* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!
* மாறனும் தம் கையால் எதுவும் எழுதவில்லை! அவர் சீடரான மதுரகவியே, அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்தார்! பின்னாளில் மதுரைச் சங்கப் புலவர்களைச் சந்தித்து அரங்கேற்றி, பின்பு ஊர் ஊராகப் பரப்பியும் வைத்தார்!

ஒற்றுமை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? வேற்றுமை என்னான்னு பார்க்கலாமா?

* முன்பே சொன்னபடி, முக்கியமான வேற்றுமை என்னன்னா, நம்மாழ்வார் கொடுமைக்கு உள்ளாகவில்லை!
இயேசுபிரானுக்கு நடந்த கொடுமைகளோ, கற்பனை செய்து பார்க்கவும் மனம் வலிக்கும்!

* இன்னொரு முக்கிய பரிமாணம் இருக்கு! அதான் இயேசுநாதர் / நம்மாழ்வாரின் "சாதி"!

** மாறன் (எ) நம்மாழ்வார் = பிறப்பால், நான்காம் வருணம்! "கீழ்ச் சாதி"!
ஆனாலும் அவருடைய திருவாய்மொழியை எல்லாப் பெருமாள் கோயில்களிலும்...அதுவும் கருவறைக்குள்ளேயே...அதுவும் அர்ச்சகர்களே...ஓதித் தான் ஆக வேண்டும்!
"நாங்க கருவறையில் வடமொழி சொல்லிக்கறோம்; நீங்க வேணும்-ன்னா, ஓதுவாரை வைச்சி, வெளியில் ஒரு ஓரமா இருந்து தமிழ் ஓதிக்கோங்க-ன்னுல்லாம் சொல்ல முடியாது! அடி பின்னிருவாங்க! :))

** இயேசுபிரான் = பிறப்பால் யூதர்!
ஆனால், இன்று வரை எந்த யூதரும், இயேசுவின் வசனங்களை ஏற்பதில்லை!
வேறு பல இனத்தவர்/நாட்டவர் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒருவரை......சொந்த இனம் மட்டும் இன்றும் மறுதலித்துக் கொண்டு தான் இருக்கிறது!
பொதுவான வசனங்களைக் கூட ஏற்காமல் மறுதலிக்கிறார்கள்! ஏனோ? :(((


சரி, வெளி ஒப்பீடுகள் ரொம்ப வேண்டாம்! அக ஒப்பீடுகள் தான் முக்கியம்! இயேசுபிரானின் வசனம்-மாறனின் பாசுரத்துக்கு வருவோமா?



* இயேசுபிரானின் வசனங்கள்-ன்னு பார்த்தால், அனைத்திலும் மகுடமாய், மனமாடத்திலே தீபமாய் ஒளிர்வது = Sermon on the Mount (மலைப் பொழிவு)!
* நம்மாழ்வாரின் நான்கு தமிழ் நூல்களில், ஈரம் பொலிந்து நிற்பது = திருவாய்மொழி!.........திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!

மலைப்பொழிவிலும், திருவாய்மொழியிலும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இன்னிக்கி பார்ப்போம்!

பாசுர விளக்கமெல்லாம் சொல்லாம,
புரியும் படி பத்தி பிரித்து,
அதே வண்ணத்தில் கொடுத்திருக்கேன்!
பொருள் புரியலீன்னா பின்னூட்டத்தில் கேளுங்க! மற்ற அன்பர்கள் பதில் சொல்லுவாய்ங்க:)

மத்தேயு 5:16 - பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் "வெளிச்சம்" அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.
திருவாய்மொழி 3:3:1 - எழில்கொள் "சோதி", எந்தை தந்தை தந்தைக்கே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்!

மத்தேயு 11:25 - பிதாவே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
திருவாய்மொழி 3:3:4 - ஈசன் வானவர்க்கு அன்பன் என்றால், அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே!
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:7 - நீயோ ஜெபம் பண்ணும் போது, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

திருவாய்மொழி 1:2:7 - அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று--"அடங்குக உள்ளே"
திருவாய்மொழி 1:2:8 - உள்ளம் உரை செயல்--உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--"உள்ளில் ஒடுங்கே"
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:25 - ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;
திருவாய்மொழி 6:7:1 - உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றே....

மத்தேயு 23:9 - பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாது இருங்கள்; பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாய் இருக்கிறார்.
திருவாய்மொழி 3:9:1 - என் நாவில் இன்கவி, யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன், என் அப்பன், எம்பெருமான் உளன் ஆகவே.
-----------------------------------------------------------------------------

மத்தேயு 4:17 - அதுமுதல் இயேசு: மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
திருவாய்மொழி: - பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், கலியும் கெடும், கண்டு கொண்மின்!

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக......இரு பெரும் தத்துவங்களும் சங்கமிப்பது இந்த ஒரு புள்ளியில்......
* நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! = * ஆறும் நீ, பேறும் நீ!
சாதனமும் நற்பயனும் நானே ஆவன்! என் ஒருவனையே சரணம் எனப் பற்று!



பதிவின் துவக்கத்தில் சொன்னேன் அல்லவா? "ஏலி ஏலி லாமா சபக்தானி? தேவனே தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?" - இது தான் இயேசுநாதரின் இறுதி வார்த்தைகள்!

கிட்டத்தட்ட அதே போல் தான் நம்மாழ்வாரும், உலக வாழ்வை நிறைவு செய்து கொள்கிறார்! வைகுந்தம் புகும் தருவாயில், கடைசிப் பொழிவாக, "என்னைப் போர விட்டிட்டாயே" என்று பாடுகிறார்!
இயேசுபிரானும், நம்மாழ்வாரும், இறுதிக் கட்டத்திலே இறைவனைச் சந்தேகப்பட்டு விட்டார்களா என்ன?

ஹா ஹா ஹா! அப்படியில்லை! அன்பு அதீதமாக மிகுந்துவிடும் போது, அவன் தன்னைக் கைவிடவில்லை-ன்னாலும், அவள், என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே-ன்னு கேட்பது போலத் தான் இதுவும்!

இயேசுபிரான், தான் உயிர்த்தெழப் போவதை, முன்னமே சீடருக்குச் சொல்லி விட்டார்! ஆக, அவருக்குத் தெரிந்தே தான் இருக்கு, தான் எழுவோம் என்று! அப்பறம் ஏன் "என்னைக் கைவிட்டீரே" என்று சோகம்?
தான் உள்ளான அவமானங்கள் உள்ளத்தை வாட்டியெடுக்க, இவர்கள் என்று தான் புரிந்து கொண்டு நடப்பார்களோ? என்ற பாவனையில், அப்படி இறைவனைக் கேட்கின்றார்! - "நீரே என்னைக் கைவிடலாமா?"


நம்மாழ்வாரும் அப்படியே!
"முனியே. நான்முகனே, முக்கண்ணப்பா" என்ற கடைசித் திருவாய்மொழியை வைகுந்தம் புகும் தருணத்தில் பாடுகிறார்!
அப்போது மறக்காமல்...சிவபெருமானையும், நான்முகனையும் நினைத்துக் கொள்கிறார்! ஆனால் பெருமாளைப் பார்த்து, ஐயனே என்னை நீயே போர விட்டு விட்டாயோ? என்று கேட்கிறார்!

உம்பர் அந்தண் பாழேயோ? அதனுள் மிசை நீயேயோ?
எம்பரம் சாதிக்கல் உற்று, என்னைப் போர விட்டிட்டாயே??
தீர இரும்பு உண்ட நீர் - அது போல எந்தன் ஆருயிரை
ஆரப் பருக, எனக்கு என்றும் ஆரா அமுது ஆனாயே!!!

நல்லாச் சுடச் சுடக் காய்ச்சிய இரும்பு; தகதக-ன்னு மின்னுது! அந்த இரும்பு தண்ணி குடிச்சா எப்படி இருக்கும்?:) = இரும்பு உண்ட நீர்!
உஸ் உஸ்-ன்னு சத்தம் பொங்க, தண்ணி இருந்த இடமே தெரியாது ஆவி ஆயிரும்-ல்ல? அது போல என் உயிரைக் குடித்த இரும்பா, என் கரும்பா, அடே "இரும்பு மண்டையா"-ன்னு எம்பெருமானைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்!

என்ன மக்களே, நசரேயன்-மாறனின் வசன ஒப்பீடுகள் எப்படி இருந்துச்சி? :)


எல்லாத்தையும் விட சுவாரஸ்யமான ஒப்பீடு ஒன்னும் பாக்கி இருக்கு! அதான் "நாயகி பாவம்" (Bridal Mysticism)!"

எதுக்கு ஒரு சிலர் தன்னை இறைவனிடத்திலே பெண்ணாய் பாவித்துக் கொள்ள வேணும்? தான் தானாய் இருப்பது தானே Natural?
இதுல என்னமோ இருக்கு டோய்!
Bridal Mysticism (அ) நாயகி பாவம் என்பது Homosexuality என்னும் ஓரினச் சேர்க்கை பாவனையோ?" என்று கூட ஒரு சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள் - நண்பர்கள் உட்பட :))

ஆழ்வாரின் "நாயகி பாவம்" (எம்பெருமானிடத்திலே தன்னைப் பெண்ணாய் ஏறிட்டுக் கொள்வது) என்பது கிறிஸ்துவத்திலும் உண்டு!
ஆகா.....! "கிறிஸ்தவத்தில் நாயகி பாவனையா"? அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாமா?.......

இயேசுநாதப் பெருமான் திருவடிகளே சரணம்!
மாறன்-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP